செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 18_2
மதிய உணவு நேரம் ஆரம்பிக்கவும், “மூர்த்தி” என்று அவன் அமர்ந்திருந்த மேசை முன் வந்து நின்றாள் ரதி. “துளசி வரலியா? க்ளாஸ்ல இல்ல பா..” அவள் கூற்றில் ஒரு நொடி குழம்பிப் போனாலும், “பஸ்-ல ஏறினாளே ரதி ரெண்டாவது ஸ்டாப் தான். மிஸ் பண்ண வாய்ப்பே இல்ல.. ஒழுங்கா பார்த்தியா?”
முதல் நாள் பள்ளிக்கூட வாசலில் பிள்ளைக்குக் காத்திருக்க.. அதைக் காணாத தாயின் பரபரப்பு, வந்து ஒட்டிக்கொண்டது. “இப்போ வந்து சொல்ற? அவ மேல ஒரு கண்ணு இருக்கட்டும்னு சொன்னேனா? பச்… இதுக்கு தான் அவங்க அவங்க வேலையை அவங்க அவங்களே பார்த்துக்கணும்…”
“என்ன மூர்த்தி… ரொம்ப அலுத்துக்கிறீங்க? சின்ன குழந்தையா அவ?”
ரதிக்கு புரிய வாய்ப்பில்லை. ஆம் அவள் மூர்த்தியின் செல்ல சின்ன குழந்தை தான். அவன், அவள் தாய் தான்… அதற்கு என்ன? கணவனுக்குள் தாயன்பு இருக்கக் கூடாதா?
படபடக்கும் இதயத்தோடே வகுப்பறைகளிலும் புழக்கத்திலிருக்கும் பொது அறைகளிலும் பார்த்தாயிற்கு துளசி எங்குமில்லை. மதிய வகுப்பும் ஆரம்பமாகிவிட அவன் ஒரு நிலையில்லை. அவனுடைய 350கிராம் இதயமும் நிமிடத்திற்கு 72 முறை அவள் நாமத்தை ஜெபிக்க… அவளைக் காண வேண்டி கண்களும் மூளையும் தவம் கிடக்க…
[the_ad id=”6605″]
“மூர்த்தி சார்… காலைல ஸ்டாஃப் ரூம்-ல ஒரு ஸ்டூடென்ட் உங்கள தேடி வந்தா.. என்ன உறவு உங்களுக்கு?” கணித பேராசிரியர் ஒருவர் ஆர அமர தகவலோடு மூக்கையும் நுழைத்தார். எரிச்சலாக வந்தது. எப்பொழுது தகவலைக் கூறுகிறான். “ஏதோ பிரச்சினை போல… பொண்ணு பயந்து போயிருந்துது. இந்த செக்கென்ட் இயர் பசங்க சும்மாவே இருக்க மாட்டானுங்க போல.. ஏதோ உங்கட்ட மட்டும் தான் சொல்லுவேன்னு நின்னா..”
கிடைத்த தகவலோடு காலை சம்பாஷனையை இணைத்துப் பார்த்தான். ராட்னி முன் நின்றான் அடுத்த நிமிடம்.
“காலைல என்ன நடந்துது எட்வர்ட்? ஒரு விஷயமும் மறைக்க கூடாது” இவன் கட்டளையிட.. விஷயத்தோடு நோட்டு புத்தகமும் உள்ளே ஒரு குட்டி பர்ஸ்சும்.. மதிய உணவு டப்பாவும் கைமாறியது எட்வர்ட் ராட்னியிடமிருந்து. அவன் துளசியின் உடைமைகள்.
விடுதிக்கு அழைத்துக் கேட்க… அவள் அங்குமில்லை. ஓய்ந்து போனான். என்ன ஆனாள்? எத்தனை முறை கூறினாள் ‘ஆண்களும் படிக்கும் கல்லூரி வேண்டாம்’ என்று!! எங்கு போய் இவளைத் தேட?
நீண்ட நேரத் தேடல் ஒரு முடிவுக்கு வந்தது. யாருமில்லா இடத்தில்.. ஒரு மூலையில்.. ஒரு மரூண் துணி மரத்தின் பின் தெரிந்தது. கால்களைக் கட்டிக் கொண்டு.. முட்டிக்குள் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள். பம்பாயில் பார்த்த அதே கோலம்!
மனித இதயத்தில் நான்கு இதயவறை உள்ளதாம்… இதில், மூர்த்தியின் நாளங்கள் இரண்டும் ஒரே உருவத்தை உள்ளே கொண்டுவர எந்த வித மாற்றமும் இன்றி அதே உருவம் நாடிகள் வழியாய் உடல் முழுவதும் சென்றடைந்து கொண்டிருந்தது.
அவள் அருகே சென்று அமர்ந்துகொண்டான். அவள் முகத்தைத் தூக்கவோ.. அசையவோ இல்லை. ‘துளசி..’ மனதோடு மூளையும் பதறியது. இந்த கோலத்தைக் காணவா பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டான்.
“மூர்த்தி சார்” என்றாள்.. அசைவில்லை. அவன் வருவான் என்று எதிர்பார்த்து அமர்ந்திருப்பாள் போலும்!
“என்ன மா.. இங்க..? பச்!! என்னை வேண்டாம்னு ஒதுக்கீட்டியா?” என்ன முயன்றும் அவனால் ஆதங்கத்தைக் கொட்டாமலிருக்க முடியவில்லை. பயத்தின் விளைவாய் இருக்கலாம்.
‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாலும் தலையைத் தூக்கவில்லை.
“என்ன ஆச்சு துளசி?” தன்னை நிதானப் படுத்திக்கொண்டிருந்தான்.
முகம் உயத்தி அவனைப் பார்த்த நொடி கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. அவளின் பலம்.. பலவீனம் அவன்!
“நான் தனியாகிட்டேன் மூர்த்தி சார்.” என்றாள் தொலைந்து போன குழந்தையாக.
[the_ad id=”6605″]
“நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் துளசி… என் கிட்ட வரதுக்கு என்ன? நான் இருக்க வரைக்கும் நான் உனக்காக இருப்பேன்னு தெரியாதா? பார்த்திட்டு இல்லேனதும் போயிடுவியா?”
“காலைல வருவீங்கன்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன்.. நீங்க வரவே இல்ல என்னை க்ளாஸ்ல விட!” நான் தள்ளிப்போக நினைத்தாலும் உன்னைத் தள்ளி வைக்கமுடியவில்லை என்பதைத் தன்னையறியாமலே அறிவித்து விட்டிருந்தாள்.
“காலையில ஹெச்.ஓ.டி.. வழியில பிடிச்சுகிட்டார் துளசி. அவர் கூடவே போகவேண்டியதா போச்சு. நான் கீழ வந்து பாக்கும் போது நீ இல்ல. க்ளாஸ் போய்ட்டன்னு நினைச்சேன். தனியா எல்லாம் விடல துளசி… நீ கேட்ட ஸ்பேஸ் உனக்கு குடுத்து கொஞ்சம் தள்ளி நிக்கறேன் அவ்வளவு தான். அதனால என் மேல நம்பிக்கை போயிடுச்சா உனக்கு? ஒரு பிரச்சனைனா என் கிட்ட தானே நீ வந்திருக்கணும்?”
“ஸ்பேஸ் எல்லாம் வேண்டாம்! வேண்டாம் சொன்னா விட்டா போதும்னு ஓடிடுவீங்களா?”
“எப்போ பார் நீ என்னை கழட்டி விடுறது. ஒவ்வொரு முறையும் பழி என் மேல… சரி சொல்லு!” அவன் மெலிதாய் சிரிக்க.. “உங்களைத் தான் தேடி வந்தேன் மூர்த்தி சார்… க்ளாஸ் ஆரம்பிக்க போகுது, இங்க எல்லாம் நிக்க கூடாதுன்னு சொல்லி அந்த சோடா புட்டி என்னை அனுப்பிடுச்சு! உங்களுக்கு ஃபர்ஸ்ட் டூ அவர்ஸ்சும் க்ளாஸ் இருக்கு.. வர மாட்டீங்கன்னு சொல்லி அனுப்பிடுச்சு!”
“அவர் வயசில பெரியவர் துளசி மா.. அப்படி எல்லாம் பேசக்கூடாது புரியுதா? ஒருதர் பிசிக்கல் அப்பியரன்ஸ் வச்சு கிண்டல் பண்ணக் கூடாது.. சரியா?”
“ம்ம்.. சரி சொல்ல மாட்டேன்.”
“இங்க என்ன பண்ற?”
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு மூர்த்தி சார். என் பழச பத்தி தெரிஞ்சிருக்குமோ..? எல்லார் முன்னாடியும் புடவை எல்லாம்…” அதன் பின் வார்த்தை வரவில்லை. ஒடுங்கிவிட்டாள். சின்ன விஷயம் தான்.. மற்றவர் பார்வைக்கு. ஆனால் காயப்பட்ட அவளுக்கு அது ஆறிக் கொண்டிருந்த புண்ணைக் கீறிவிட்ட விளைவைக் கொடுத்தது.
“உன்ன பத்தி தெரிய என்ன இருக்கு? நாலு பேர் வாழ்க்கையை கெடுத்தியா? உன்னால யாராவது பாதிக்க பட்டாங்களா? என்ன தப்பு செஞ்ச? நீ அழகான குட்டி பொண்ணு! அவ்வளவு தான். தேவை இல்லாம இறக்கி வச்ச பாரத்தைத் திரும்பவும் தூக்கிச் சுமக்க நினைக்காத!”
“வேர யார் புடவையையும் பிடிச்சு இழுக்கலையே மூர்த்தி சார்! நாங்கரனால தான் என் கிட்ட அப்டி நடந்துகிறாங்களா? எனக்கு ஆம்பளைங்கள பார்த்தாலே எப்படியோ இருக்கு மூர்த்தி சார். பிடிக்கல.. எரிஞ்சு விழ தான் வருது!”
“அவன் நல்ல பையன் தான் துளசி! எனக்கு அவனை நல்லா தெரியும். அவன் கிட்டப் பேசினேன். தெரியாம நடந்த விபத்து… மன்னிப்பு கேக்கறேன்னு சொன்னான். மனசைப் போட்டுக் குழப்பாத துளசி மா.. கொஞ்ச நாள் பிடிக்கும்.. உன் எரிச்சல் அடங்க! மூனு வருஷம் இருக்கு பொறுமையா பழகிக்கலாம்.”
‘முதல் நாளே இப்படி…! இன்னும் என்ன என்ன பார்க்கவேண்டி வருமோ? பேராசிரியரும் மாணவியும் மரத்தின் அடியில்… யாரேனும் பார்த்தால்? முழு கல்லூரிக்கே அவலாய் மாறிவிடுவோமா? ஒழுங்கா இவ சொன்ன மாதிரி விமன்ஸ் காலேஜ்-ல சேர்த்து இருக்கணுமோ!’ கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தென்ன பிரயோஜனம் மூர்த்தி?
மணி நேரம் பிடித்தது.. பேசி புரியவைத்து அவளை எழுப்பி நிற்கவைக்க!
“பயமா இருந்துது மூர்த்தி சார்!”
[the_ad id=”6605″]
“நீ பயப்படுற ஆள் எல்லாம் இல்ல. உனக்கு சின்ன அசௌகரியம் வரும் போது ஒளிஞ்சுக்க யூஸ் பண்ற போர்வை தான் பயம்! நீ பயப்படுற ஆள்னா.. அவன் உன் புடவையில கை வச்சதும் அழுது ஊர கூட்டிருப்ப. ஆனா நீ அவனைத் தானே அழ விட்ட.. அப்படி தான் இருக்கணும்! தைரியமா! அவ்வளவு தைரியமான பொண்ணு இங்க என்ன பண்ற… வா.
ஆமா உனக்கு பசிக்கலியா? நம்ம ரத்னா கபே போய் காபியும் போண்டாவும் சாப்பிடலாமா?” தட்டி தேற்றி எழுப்பினான்.
“இல்ல.. ரொம்ப பசிக்குது! இட்டிலியும் சாம்பாரும் வாங்கி தாங்க.. அது செம டேஸ்ட் அங்க.. அப்புறம் உங்க மனசு நோகாம இருக்க ஒரு காபியும் ரெண்டு மைசூர் போண்டாவும்.. சரியா?”
“போதுமா? உன் லெவலுக்கு ரொம்ப கம்மியா இல்ல…” பெண் அவனோடு சிரித்தாள்.
“போங்க மூர்த்தி சார்..” அதிசயமாய் வெட்கமும் பட்டாள். காலையில் இருந்த படபடப்பும்.. தனிமை உணர்வும் எங்கு போனதோ தெரியவில்லை!
ஒரு கல்லூரிக்கே வகுப்பு எடுக்க வேண்டிவந்தால் கூட, மூர்த்திக்கு இப்படி சவாலாக இருக்காது போலும்! கணித்த மேதை பி.ஹெச்.டி முடிப்பதற்குள் ‘அவளைத் தட்டி தேற்றி நிற்க வைப்பது எப்படி’ என்பதில் முனைவர் பட்டம் வாங்கிவிடுவான் போலும்!