Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ22_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 22_2

 

அம்மா, அப்பா, பாட்டி, மாதவன், எஸ்தர்.. ஏன் நகு கூட அதையே கேட்க, பெண் நொந்துபோனாள். அவன் ஒற்றை வார்த்தையில் வேண்டாம் என்றுவிட்டான். யார் இவர்களிடமெல்லாம் பதில் கூறுவது? இயலாமை கோபமாக உருமாறியது.

 



Advertisement

‘நீ சொல்லி நான் என்ன கேக்கறது’ என்று கிடைத்த வேலையில் அமர்ந்து கொள்ளலாம் தான்! ஆனால் மனது அதற்கும் இடம் கொடுக்கவில்லை.

 

“உங்க பேச்ச கேக்கறேங்கறதுக்காக உங்க இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கலாம்ன்னு நினைக்காறீங்க. நீங்க செய்யறது எனக்கு சுத்தமா பிடிக்கல. உங்க ஆண் ஆதிக்கத்தை என்ட்ட காட்ட நினைக்காதீங்க.”, என்று சண்டை வரை சென்றது.

Advertisement

 

Advertisement

“எப்பவும் பிடிச்சதையே அம்மா சமைக்கிறாங்களா? இல்ல தான? அது மாதிரி தான்.. உனக்கு பிடிச்ச மாதிரியே என்னால எப்பவும் இருக்க முடியாது. நல்லது செஞ்சா பாராட்ட வேண்டாம் முகம் காட்டாம ஏத்துக்க பார். ஒரு நகைய நாலு கட ஏறி.. பார்த்து தான வாங்குற. அப்பிடி தான் இதுவும்! கிடைச்ச முதல் வேலையிலயே உக்காரணும்ன்னு என்ன அவசியம் வந்துது உனக்கு?”, என்ற பதில்தான் எபியிடமிருந்து வந்தது.

 

“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுன்னு சொல்லுவாங்க! இருக்கத எல்லாம் விட்டுட்டு இருந்தா, கூகுள்ள இருந்து ‘இந்தா வச்சுக்கோ வேலை’ன்னு கொண்டு கையில கொடுப்பானா?”

Advertisement

 

குடும்பத்தில் இருவருமே அறிவாளியாகிப் போனால் இது ஒரு கஷ்டம் போலும். அவன் பேச.. அவள் பதில் பேச எனச் சின்னதாக ஈகோ முளைத்தது.

 

நேர்காணலுக்கு அவன் உதவுவதால் தானே அவன் முடிவெடுக்கிறான் என்று தோன்றவும், “போதும் மனோ.. என் கரியர(career) நான் பாத்துக்கிறேன். உங்க படிப்ப பாருங்க.”, என்றுவிட்டாள்.

 

அவன் கண்டு கொண்டதாகத் தோன்றவில்லை. “இது ரொம்ப நல்ல கம்பனி.”, என்று அடுத்த நேர்காணலுக்கு அவன் சிரத்தை எடுத்து அவள் தற்குறிப்பை அவனே நிறுவனத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அனுப்பித் தர, அவள் கோபம் இன்னும் அதிகமேயானது. ‘அது என்ன சொன்னால் புரியாதா?’ என்ற கோபம்!

 

இரண்டு மூன்று பக்கத்திற்கு வினா தாள் அனுப்பி, கேள்விகளுக்கு கோடிங்(coding) செய்யச் சொல்லவும், கோபம் உச்சத்தைத் தொட்டது. அதே கோபத்தோடு நேர்காணலில் அமர, முதல் சுற்றிலேயே அவள் தேர்ச்சி பெறவில்லை என்றனர். ஏனோ உள்ளுக்குள் ஒரு நிம்மதி!

 

ஆனால் அப்படி ஒரு கோபத்தை எபியிடமிருந்த அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் அவனிடம் கூறும் முன்னமே அழைத்தவன், “ஏன் என்ன ஆச்சு?”, என்று ஆரம்பித்து, என்ன மாதிரி கேள்வி, எங்கு தவறு நடந்தது என்று எல்லாவற்றையும் பொறுமையோடே கேட்டவன் பொறுமை பறந்திருந்தது அவள் பதிலைக் கேட்டு!

 

“வேணும்ன்னே தப்பு தப்பா ப்ரோக்ராம் பண்ணுனியா..”, என்று அவன் கேட்க… அவளும் ஏதோ கோவத்தில், “ஆமா.. ட்ரெயினிங் தானே… தோத்தா என்ன.. ஜெயிச்சா என்ன? தோல்வி தானே வெற்றிக்கு முதல் படி! அதுதான் முதல் படில ஏறிட்டேன்!”

 

“என்ன டி? பேச்சு ஒரு மாதிரி போகுது?”

 

“கிடைச்சிருந்தா மட்டும்..? எப்பிடியும் இது வேண்டாம்ன்னு தானே சொல்ல போறீங்க?”, என்றுவிட, பிடி பிடி எனப் பிடித்துவிட்டான்.

 

“எனக்கு இருக்க வேலை எல்லாம் விட்டுட்டு உன் பின்னாடி தொங்கிட்டு இருக்கவே வேலை இல்லாத வெட்டி ஆஃபீஸர்ன்னு நினைச்சியா.. அந்த கம்பனியோட பேஸ்(base) கலிஃபோர்னியா! உனக்கு ஆன்சைட் வர ச்சான்ஸ் அதிகம் இருந்துது. நல்ல கம்பனி கவனமா பண்ணுன்னு சொன்னேனா? பாத்து பாத்து செய்யவே உனக்கு மதிப்பு தெரியல!”, என்று ஆரம்பித்தவன்,  

 

“இவன் சொல்லி நான் ஏன் கேக்கணும்ன்னு நினைச்சா சொல்லிடு.. உன் வழிக்கே நான் வரல”, என்று அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

அவன் கூறியதில் உண்மையிருக்கத் தான் செய்தது. சிரத்தையோடு கலந்து கொண்டிருந்தால் கிடைத்திருக்கும். ஒத்துக் கொள்ள மனமில்லை. நிம்மதி தொலைந்தது. யார் மேல் கோபம்? எதற்கு இந்த கோபம்?

 

அடுத்து ஒரு மாதமாகியது இவளுக்குத் தகுந்த ஒரு நிறுவனத்தைக் கணினி மையத்தின் ‘வேலை வாய்ப்பு துரை’ கை காட்ட. அந்த ஒரு மாதமும் அதிக பேச்சில்லை இருவரிடமும், ஹாய் ஹலோ-வோடு நாட்கள் சென்றது. நான்கைந்து முறை அவன் பேச முயலவும், “கொஞ்சம் பிஸி மனோ..”, என்று தள்ளி நிறுத்தினாள்.

 

“என்ன விழி.. காதலிச்சா எப்பவும் கொஞ்சிட்டே இருக்கணுமா? உன் மேல் நான் காட்டுற அக்கறையும் காதல் தான் டி… கோபப் படாத விழி” அவன் கொஞ்சலும் கெஞ்சலும் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.  ஹாய் ஹலோ நிரந்தரமானது. பித்தம் தெளிந்து வரட்டும் என்று அவனும் விட்டுவிட்டான்.

 

“ஒரு வாரத்துல இன்டர்வியூ”, என்ற தகவல் அலர்விழியை எட்டியது. எபிக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவனிடமிருந்து மூச்சு பேச்சில்லை. எங்கோ ஒரு ஓரத்தில் வலித்தது. எபி திரும்பிப் பார்க்க மாட்டானோ? தொண்டை குழி கசந்தது.

 

‘அடுத்த வாரம் இன்டர்வியூ மனோ’, என்று இவள் கூறும் முன்னமே, “ஆல் தெ பெஸ்ட். நல்லா பண்ணு!”, என்ற தகவலை அனுப்பி இருந்தான்.  அவ்வளவு தானா? அவன் பேச மாட்டானோ? அவன் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் மனம் மெல்ல ஏங்கியது. அன்று இரவு அழைத்தவள், “ஒரு வாரத்துல இன்டர்வியூ மனோ..”, என்றாள் தயங்கி தயங்கி. அவனைக் காயப்படுத்தியது, இன்று அவன் தள்ளி செல்லவும், வலித்தது.

 

“ம்ம் கேள்விப்பட்டேன்.. பார்த்துப் பண்ணு. இந்த கம்பனிக்கு தான் வெயிட்டிங். அவங்க ஹெட் ஆஃபீஸ் இங்க தான் ஜெர்ஸி சிட்டில இருக்கு. கண்டிப்பா ஆன்சைட் அனுப்புவாங்க. என் மேல இருக்க கோவத்த அதுல காட்டாத.

அவங்க ரெக்வயர்மென்ட்(requirement) என்ன.. எதுக்கு ஆள் எடுக்குறாங்க.. என்ன ஸ்கில் செட்(skill set) கேக்கறாங்க எல்லாம் பார்த்து அதுக்கு ஏத்த மாதிரி ரெஸ்யூமே-வ மாத்து. உன்ன இன்டர்வியூ பண்றதுல அவங்களுக்கு யூஸ் இருக்கான்னு உன் சிவி(CV) தான் சொல்லும். ஃபர்ஸ்ட் ரௌண்டே டீப்பா தான் இருக்கும். அடுத்து கோடிங் பண்ண சொல்லுவாங்க. அடுத்து டெக் லீட் கிட்ட இருக்கும்.. அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிடுவானுங்க. கடைசி ரௌண்ட் ஹெச்.ஆர். அதுல சம்பளம் போனஸ் பத்தி பேசுவாங்க. ஒரு நாள் பூரா அங்க தான் இருக்க மாதிரி வரும்! பாத்து செய்.. நீ அட்டென்ட் பண்ணின மத்த மூண விட இது கஷ்டம்.”, அவன் பேசிக் கொண்டே போக.. அவன் தனக்காக மெனக்கெடுவது புரிந்தது. தன்னை விட படிப்பதற்கும், முடிப்பதற்கும் அவனுக்கு வேலை குவிந்து கிடக்க.. இது, இந்த ‘மெனக்கெடல்’ அவள் மீது கொண்ட காதலால் தானே! மனம் குறுகுறுத்தது.

 

கல்லூரியின் கடைசி வருடக் கடைசி தேர்வு ஒரு புறம், கணினி மையத்தில் வேலை ஒரு புறம் என்று நேரம் இழுத்துக் கொண்டது. வேலை கிடைத்தபின் மதிப்பெண் குறைந்தால் கிடைத்த வேலை கையை விட்டுப் போய்விடும். இதில் இந்த நிறுவனம் அதன் தேவையாக ‘மோமைல் கேமிங் ஆப்’(mobile gaming app) முன்வைத்திருக்க, அதற்குத் தனியே தயார் ஆக வேண்டும்! அனைத்தையும் தானே, ஒருவர் உதவியுமின்றி செய்ய, தலை வலித்தது. கணினி மையத்தில் கேட்டால் உதவுவார்கள் ஆனால் கேட்கப் பிடிக்கவில்லை. இன்று வரை எபி இருந்தான் எல்லாவற்றிலும்!

 

“மனோ..”, என்று அவனிடம் தான் போய் நின்றாள்.

 

“இது தானே நீ கண்ட கனவு? நல்ல கம்பனில நல்ல பொசிஷன்ல.. ஆன்சைட் போகணும்ன்னு? உன்ன நான் டாமினேட் பண்ண நினைக்கல. நான் சொல்றத நீ கேக்கணும்ன்னு நான் நினைக்கல. உன் கனவ கலையவிடாம அத நீ பிடிக்க ஒரு ஏணியா இருக்க நினைச்சேன் அவ்வளவு தான்! நான் ரொம்ப மோசமான மேல் சோவ்வனிஸ்ட்(male chauvinist) எல்லாம் இல்ல விழி”

 

“என்ட்ட சொல்லி இருந்திருக்கலாமே மனோ. எல்லாரும் கேக்கும் போது என்ட்ட பதில் இல்ல மனோ. அது தான் கோபம்..”

 

“முன்மே வெறும் எக்ஸ்பீரியன்ஸ்க்குன்னு சொன்னா நீ அதுல முழு கவனமும் போட மாட்டன்னு தான் சொல்லல! இதுல வேலை வாங்க ட்ரை பண்ணு!  நல்லா பண்ணு. ஏதாவது வேணும்னா அங்க விஜய்ட்ட கேளு சொல்லுவான். ஆல் தெ பெஸ்ட் விழி.”, என்று வைத்துவிட்டான்.  பேசியவன் குரலும் சரி இல்லை..  அவன் முகமும் சரியில்லை. 

 

கைப்பேசியில் தொடர்பு துண்டித்திருந்தது. இப்படித் தள்ளி நின்றால் கைப்பேசி தொடர்பு மட்டுமல்ல தங்களின் தொடர்புக்கும் அது தான் நிலை என்று தோன்றியது.

 

ஏனோ அவனில்லாமல் தனித்து நிற்கப் பிடிக்கவில்லை. முடியாதென்றில்லை. கண்டிப்பாக அவளால் முடியும்! ஆனால் பிடிக்கவில்லை. இறுமாப்பை யாரிடம் காட்டவேண்டுமோ அவரிடம் காட்டினால் போதும். வாழ்க்கைத் துணையுடன் காட்டி எதை சாதிக்க? இருவர் நிம்மதியும் போவது தான் மிச்சம் என்ற பாடம் கற்றாள்.

 

அழைத்தாள். “லவ் யூ மனோ”, என்றாள். அதற்குள் ‘சாரி மனோ’ என்ற அர்த்தம் உள்ளடக்கம்.

 

“நீ ரொம்ப ஸ்மார்ட் விழி. ஒரு புஷ் குடுத்தா நல்லா வருவன்னு நினைச்சேன். நீ என்னை புரிஞ்சுக்கவே இல்ல போடி”, என்றான், ஆதங்கமாய்.

 

“ஆமா மனோ. புரிஞ்சுக்கல. எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க. புரிஞ்சுப்பேன். நான் கோபப்பட்டா.. எப்பிடியோ போன்னு விட்டுடுவீங்களா?”. இதுவும் சண்டை தான். ஆனால் உரிமை சண்டை. நான் தள்ளிப் போகமாட்டேன் என்ற காதல் சண்டை. 

 

“நீங்க சிவி(CV) ரெடி பண்ணி தாங்க. அப்போ தான் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணுவேன்”, என்று பிடிவாதம் பிடித்து, வேலை வாங்கி வேலையும் வாங்கிவிட்டிருந்தாள்.

 

அதன்பின் ஆயிரம் ஆயிரம் ‘லவ் யூ’க்களும்! கொஞ்சல்களும்! மிஞ்சல்களும்! அனைத்தும் அவர்களுக்கு மட்டுமேயானது.

 

இன்று:

“ம்மா.. இந்தாங்க கேரட் பருப்பு சாதம் உங்க பாப்புக்கு..”, கையை சுத்தம் செய்துவிட்டு வந்திருந்த சௌந்தர்யாவிடம் அலர்விழி உணவை கொடுக்க.. அதைப் பார்த்ததுமே, குட்டி வாண்டு ஓட தயாரானது.

 

“மேடம் தவழற ஸ்பீட பாரு. அவள பிடி பாப்பா..”

 

குட்டியைத் தூக்க.. கையையும் காலையும் ஆட்டி, நெளிந்து அங்கிருந்து தப்பிப்பதில் தான் முழு கவனமும்.

 

“நேநே பாபி..”, அவள் பிதற்றல் எடுபடவில்லை. சௌந்தரியா இரண்டு கால்களுக்கு நடுவே அணைப்பாய் அமர்த்தி, போராடி  நான்கு வாய் உள்ளே அனுப்பவும் சங்கு பாப்பா தூங்கி விழ ஆரம்பித்தாள்.

 

“தூங்கற குழந்தைய தூங்க விடேன் மா”, தியாகு பரிந்து கொண்டு வர,

 

“ச்சு… உங்களுக்கு இந்த மேடம் பத்தி தெரியாது. அப்பிடி ஓரமா உக்காந்து பாருங்க பத்து நிமிஷம்!”

 

எப்படியோ எழுப்பி எழுப்பி அடுத்த நான்கு வாய் உள்ளே தள்ளி, வாய் துடைத்து, சௌந்தர்யா காலை நகர்த்தவும், ஸ்விச் போட்ட பல்ப்-பாய் குட்டி மேடம் கண்கள் திறந்தது.

 

“பாபி..”, என்று எழுந்து அப்பொழுது தான் பாட்டியை பார்ப்பது போல் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் குட்டி சங்கு.

 

பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு.

 

“என் பட்டுக்குத் தூக்கம் போச்சா.. வெளியில வெயில் இல்ல.. நம்ம பத்து நிமிஷம் வீட்ட சுத்தி நடந்துட்டு வருவோமா”, குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு வாயிலை நோக்கிச் சென்றவரைப் பார்த்து அமர்ந்திருந்தார் சௌந்தர்யாவின் கணவன்.

 

இனம், குலம், கோத்திரம் என்று  மற்ற இனத்தாரிடம் அதிகம் ஒட்ட மாட்டார் சௌந்தர்யா. இன்று அதெல்லாம் எங்குப் போனதோ தெரியவில்லை. பைபிள் வாசிக்கும் அபிகெயிலும் அதே வீட்டில் அவர் பிள்ளைகளோடு சுற்றித் திரிகிறாள். அவளை மணந்த மகன் மேல் மனத்தாங்கல் இல்லை. அவர்கள் குட்டி மகள் அவர் வாழ்வின் அங்கமாய் போனாள்.

 

வாழ்க்கை ஒரு வினோத பயணம். யாருக்கு எப்பொழுது எதை ஏந்தி நிற்கும் என்று சொல்லுவதற்கில்லை. அது தொடங்குவதும் தெரிவதில்லை. அது முடிவதும் நமக்கு தெரிவதில்லை. பயணத்தில் பல திருப்பங்களும் தடைக் கற்களும் தோன்றி மறையும். இவ்வளவு தான் வாழ்க்கை.. இது வெறும் தற்காலிக பயணம் என்ற புரிதல் வந்துவிட்டாலே நம்மைச் சுற்றியிருக்கும் பல வலைகள் அறுந்துவிடும்.  

 

இது பிடிக்கும், இது பிடிக்காது, இது சரி, இது தவறு, இது பாவம், இது புண்ணியம்.. என்று நாமே நமக்கு ஒரு எல்லை ஏற்படுத்திக் கொண்டு ஒரு பெட்டிக்குள் அடங்கிப்போகிறோம்.

 

மகனை விட, மற்றவர் பார்வையில் கிடைக்கும் கௌரவம் பெரிதாகப் போக அந்த எல்லைக்குள் தங்களை அடைத்து கொண்டனர் பாக்கியா-வைத்தியநாதன்.

 

அரை கோப்பை நீர் உள்ளதென்றும் கூறலாம்.. அரை கோப்பை காலியாக உள்ளதென்றும் கூறலாம். எல்லாம் நம் பார்வையில். காலியானதைப் பார்க்காமல் மீதமுள்ளதைப் பார்க்கத் தன்னை சுற்றி இட்டிருந்த எல்லைகளை எல்லாம் விட்டுத் தாண்டி வந்திருந்தார் சௌந்தர்யா!

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!