தான் சொன்னதை கேட்டு அதிர்ந்துப்போவான் என எதிர்ப்பார்த்தாள் தான்!!! ஆனால், ‘எழுந்து வெளில போங்க’ என பல்லைகடித்துக்கொண்டு அவன் விரட்ட, திருதிருவென முழித்தாள் அஷ்டா.
“என்னங்க பார்க்குறீங்க? எழுந்துரிங்கன்னு சொல்றேன்’ல!!!” என்றான் அடிக்குரலில்.
சட்டென எழுந்தவள், அவனை மிரண்டப்பார்வை பார்க்க, விறுவிறுவென கோவிலை விட்டு வெளியே சென்றான் வீரா. அஷ்டாவும் அவன் பின்னாலேயே ஓடினாள்.
கோவிலின் வெளிப்புறத்தில் பைக் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தவன், “உங்க ஸ்கூட்டி எங்க?” என்றான்.
இருபதடி தொலையில் அவள் கையை காட்ட, அவர்கள் இருந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தான். பெரிதாக ஆள் நடமாட்டம் இருப்பது போல தெரியவில்லை. கூப்பிடும் தூரத்தில் சைக்கிளில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த வியாபாரி மட்டுமே நின்றிருந்தார்.
அவரும் அங்கிருந்து கிளம்புவதை போல தெரிய, அஷ்டாவை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு அவரிடம் சென்றவன், இரண்டு செவ்வெளநீர் வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் ஒன்றை நீட்டினான்.
தான் பேசியதற்கு எந்த பதிலும் சொல்லாது அவன் போக்கில் ஏதேதோ செய்ய, “நான் பேசிட்டு இருந்தேன்” என்றாள் அதை வாங்காமல்!
“முதல்ல குடிங்க! அப்புறம் பேசுவோம்” என்றவனின் பேச்சை மீற முடியாமல் ஒரு அலுப்புடன் அதை வாங்கிக்கொண்டாள் அஷ்டா.
பொறுமையாய் மிடறு மிடறாய் குடித்து முடித்தவன், காத்திருந்து அவள் குடித்ததும் கூட்டை வாங்கிக்கொண்டு பொறுப்பாய் சற்று தள்ளி இருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வர,
‘ஐயோ!!! ரொம்ப பண்றான்டா’ என்றிருந்தது அவளுக்கு.
முறைத்துக்கொண்டு அவள் நிற்க, தன் பைக்கில் ஒயிலாய் சாய்ந்தபடி, “இப்போ சொல்லுங்க! ஏன் உங்களுக்கு அந்த ‘அது’ல விருப்பம் இல்ல” என்றான் வீரா.
‘இதை அங்கேயே பேசுவதற்க்கென்ன?’ என்ற கடுப்புடன், “பேசிட்டு இருக்கும்போது எதுக்கு இப்படி தரதரன்னு இழுத்துட்டு வந்தீங்க?” என்றாள்.
“நானா? இழுத்துட்டு வந்தேனா?” என அதிர்ச்சியாய் அவன் கேட்க, அவள் மேலும் முறைப்பதைக்கண்டு, விளையாட்டை விட்டவனாய்,
“அது கோவிலுங்க! எதை பேசணும்! எதை பேசக்கூடாதுன்னு இருக்குல்ல?” என்று கேட்க, முகத்தை சுளித்தவள், “எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? பேசவே அருவெறுப்பு படுற அளவுக்கு இது ஒன்னும் மோசமான விஷயம் இல்ல” என்றாள்.
“அருவெறுப்பு படுறேன்னு நான் எப்போ சொன்னேன்? கோவில்ல வேண்டாம்ன்னு நினைச்சேன், அவ்ளோதான்”
“ஓ! கோவில்ல பேசுற அளவு புனிதமான விஷயம் இது இல்லன்னு சொல்ல வரீங்க! அதானே?” என்றாள்.
“ப்ச்!” என்ற பெருமூச்சோடு, “அங்க நம்ம மட்டும் தான் உட்காந்து பேசிட்டு இருந்தோம்ன்னு நினைச்சீங்களா? நமக்கு கொஞ்சம் தள்ளி தள்ளி எத்தனை பேரு இருந்தாங்க? ஒரு குழந்தை கூட நம்ம பக்கமா நின்னு விளையாடிட்டு இருந்துச்சு! பார்க்கலையா?” என்றான்.
“அவங்க இருந்தா நமக்கென்ன?”
“நம்ம பேசுனதை அங்கிருந்தவங்களோ, இல்ல வேற யாரோ கேட்டா என்ன ஆகும்? கோவில்ல உட்காந்து அதோட புனிதத்தை கெடுக்குறோம்ன்னு சொல்லுவாங்க! அந்த குழந்தையே கூட அதை கேட்டுட்டு போய் அவங்க அம்மாக்கிட்ட ‘அப்படின்னா என்னம்மா?’ன்னு கேட்டு வச்சா? தேவையாங்க இதெல்லாம்?!”
“நான் என்னவோ பெரிய கெட்ட வார்த்தை பேசுனமாதிரி சொல்றீங்க நீங்க!”
“இது கெட்ட வார்த்தை இல்லங்க! ஆனா இதை கேட்டுட்டு சகஜமா கடந்து போற அளவுக்கு நம்ம சமூகம் முன்னேறல இன்னும்!” என்றான்.
பேச வேண்டியது அப்படியே நிற்க, தேவையில்லாத ஆணிகளை புடுங்கிக்கொண்டிருப்பது போல தோன்றியது அவளுக்கு.
“சரி! இங்க நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம்! ப்ரீ’யா பேசலாம்! சொல்லுங்க, உங்களுக்கு ஏன் ‘அது’ல விருப்பம் இல்ல” வீராவே ஆரம்பித்தான்.
ஒத்திகை பார்த்து, மனப்பாடம் செய்து வைத்த வசனம் எல்லாம் மறந்தது போல ஆனது அஷ்டாவுக்கு.
“அது விருப்பம் இல்ல!” என்றாள் மொட்டையாய்.
“அதான் ஏன்னு கேட்குறேன்”
என்ன சொல்வதென முழித்தவள், “அது…. சின்ன வயசுல இருந்தே புடிக்காது!” என சொல்லிவிட, “என்னது?” என மிரண்டான் அவன்.
நாக்கை கடித்தவள், “சின்ன வயசுன்னா, விவரம் தெரிஞ்ச பிறகு” என வாக்கியத்தை திருத்த, “ஓ” என கேட்டுக்கொண்டான் வீரா.
‘விஷயத்தை சொல்லியாகிவிட்டது’ என்று எண்ணி பதிலுக்காய் அவன் முகம் பார்த்து நின்றாள்.
“இப்போ நான் என்ன சொல்லனும்ன்னு எதிர்ப்பார்க்குறீங்க?”
இப்படி ஒரு பேச்சு தங்களுக்குள் நடக்கும் என கிஞ்சித்தும் எதிர்ப்பார்த்திராதலால் ‘அவள் எதை எதிர்ப்பார்கிறாள்’ என்றறிய அவளிடமே கேட்டான் வீரா.
“எனக்கு……. கொஞ்சம் டைம் வேணும்” தரையை பார்த்தபடி சொன்னாள்.
“எவ்ளோ நாள்?”
“ஹான்? நாள் இல்ல! அட்லீஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்!”
‘ஆறு மாசமா?’ புருவங்கள் உயர்ந்தன அவனுக்கு.
அமைதியாய் நின்றான்.
அவளும் அவனை பார்த்துக்கொண்டே நிற்க,
“கல்யாணம்’ன்னா இதெல்லாம் அதோட அடக்கம் தானே? அப்ப அதுக்கும் நீங்க தயாரா தானே இருந்துருக்கணும்!? அப்படி இல்லன்னா எதுக்கு வீட்டுல கல்யாண பேச்சுக்கு ஓகே சொல்றீங்க?”
கொஞ்சம் கூட கோவம் இன்றி தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளும் பாவத்தில் மட்டுமே கேட்டான் வீரா.
“நீங்க யாருன்னே தெரியாது! உங்களை தெரிஞ்சுக்க நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கக்கூடாதா? தப்பா?” நியாயமாய் கேட்டாள் அஷ்டா.
“தப்பு இல்லங்க! டைம் எடுத்துக்கோங்க” என்றான் அவனும்.
“அப்போ உங்களுக்கு ஓகே வா?” என்றாள் பளிசென்ற கண்களுடன்.
“ம்ம்ம்…ம்ம்ம்” என எல்லா பக்கமும் உருட்டினான் தலையை.
“இப்போ இப்படி சொல்லிட்டு, அப்புறம் நான் கல்யாணம் முடிஞ்சு வந்தா…….?”
“மேல பாய்ஞ்சுடுவேனான்னு கேட்குறீங்களா?”
அவளை இங்கே சந்திக்க வந்தபோது இருந்த படபடப்பு, பரபரப்பு, தயக்கம், கூச்சம் எல்லாம் அவனை விட்டுப்போய் பேச்சு இயல்பாய் வந்தது.
அவன் கேள்வியில் முகத்தை திருப்பியவள், “நீங்க யாருன்னே தெரியாது, உங்க பேச்சை எப்படி நம்புவேன்?” என்றாள்.
‘காலக்கொடும வீரா!’ முனகினான் அவன்.
“எதாவது சொன்னீங்களா?”
“ச்ச!! ச்ச!!! ஒன்னும் இல்லையே!?” என்றான்.
“உங்களை நம்பலாம்’ல?” திரும்பவும் அவள் கேட்க, “நம்புங்க! அப்படி ஒன்னும் கடிச்சு கொதரிட மாட்டேன்” என்றான் சங்கடமாய்.
“அப்ப சரி! குடுத்த வாக்கை மீறிடாதீங்க”
“நீங்களும் ஆறு மாசம்ன்னு அப்படியே பிக்ஸ் ஆகிடாதீங்க! பத்து பதினைஞ்சு நாள்’ல என்னை பத்தி தெரிஞ்சுட்டா கூட சொல்லிடுங்க… சரியா?” என்றான் நல்லபிள்ளையாய்!!!
பூம்பூம் மாடு தோற்கும் அளவு தலையாட்டினாள் அஷ்டா.
“ஆக மொத்தம் டிவி சீரியல்ல வர மாறி கல்யாணம் மட்டும் தான் நடக்கும்! பர்ஸ்ட் நைட் நடக்காதுன்னு சொல்றீங்க?” என பெருமூச்சுவிட்டான் வீரா.
துப்பாட்டா நுனியை திருகிக்கொண்டே, “நான் இந்தமாதிரி விஷயம் எல்லாம் இதுவரை யார்டயுமே பேசுனதே இல்ல… நீங்க இப்படி பேசுறது எனக்கு எம்பேரசிங்’கா இருக்கு” என்றாள் பாவமே பாவமாய்.
‘அடிப்பாவி!!!’
ஆரம்பித்ததே அவள் தானே?!
‘இப்போ ஒன்னும் தெரியாத பாப்பா மாறி பேசுறதை பாரேன்!?’ என மோவாயில் கைவைத்து வியந்த பார்வை பார்த்த வீரா,
அவளை மேலும் கீழும் அளந்தபடி, “ஒரு சந்தேகம்… கேட்கவா?” என்றான்.
அவள் அனுமதித்ததும், “உங்களோட இந்த ஆறு மாச கண்டிஷன், யாரு மாப்பிள்ளையா வந்தாலுமே உண்டா? இல்ல என்கிட்ட மட்டும் தானா?” என்றான் சுருங்கிய புருங்கள் வினாக்குறி எழுப்ப!!!
திக்கென விழித்தாள்!!!
“ஏன் இப்படி கேட்குறீங்க?”
“என்னை பார்த்தா இழுச்சவாயன் மாதிரி தெரியுதோ உங்களுக்கு’ன்னு ஒரு சந்தேகம்! கிழிஞ்ச நோட்டை குடுத்து ஈசியா ஏமாத்திட்டோமேன்னு என்னை டம்மி பீஸா நினைச்சுட்டீங்களோ?”
உண்மையிலுமே அவள் அப்படியெல்லாம் யோசிக்கவே இல்லையே!!!
“என்னங்க இப்படியெல்லாம் கேட்குறீங்க?” அவள் முகமே சொன்னது தான் அப்படி நினைக்கவில்லை என்று!!!
அவள் முகம் சுருங்குவது தாங்காது, உடனே… “சும்மா சும்மா!!!” என்றான்.
ஆயினும் மனம் கேளாது, “யார் மாப்பிள்ளையா இருந்தாலும் இதை பேசிருப்பீங்க இல்லையா?” என்றான்.
அவன் திரும்ப திரும்ப கேட்க அவளுக்கே தோன்றியது!
யாராக இருந்தாலும் ‘இதை’ இவனிடம் பேசியது போல எளிதாய் தனக்கு பேச வருமா? என்று!!!
பதில் சொல்லாது அவள் நிற்க, மேலும் குடைய வேண்டாம் என்று எண்ணியவன்,
“இது மட்டும் தானேங்க உங்க பிரச்சனை? இது தவிர வேற இல்லன்னா கல்யாணத்துக்கு ஓகே தானே?!!!” வேறு எதையும் ஆரம்பித்துவிடுவாளோ என்ற தவிப்புடனே கேட்டான் அவன்.
“ஓகே தான்!!!” என்று அவள் சொன்னதும் தான் பிடித்திருந்த மூச்சை நிம்மதியாய் விட்டான்.
“அப்போ கல்யாண வேலையை ஆரம்பிச்சுடலாம் தானே?” மறுபடியும் கேட்டுக்கொண்டான்.
அவள் சம்மதமாய் தலையசைக்க, “அப்பறம்?” என்றான் படபடவென அங்கும் இங்கும் அலையும் அவள் நயனங்களை சுவாரஸ்யமாய் பார்த்தபடி!!!
“வீட்டுக்கு போனும்! அம்மா தேடுவாங்க!!!”
‘காரியம் ஆனதும் கழண்டுக்க பார்க்குது பாரு!’ என மனம் செல்லமாய் அவளை திட்ட, வெளியே, “சரிங்க” என்றுவிட்டான்.
அவள் ஸ்கூட்டி நிறுத்திருந்த இடம் நோக்கி அவள் திரும்பி செல்ல, பைக்கில் ஏறி அமர்ந்த வீரா,
“ஏங்க?” என்றான்.
திரும்பினாள்…!
“கல்யாணத்துக்கு முன்னாடி லைசன்ஸ் எடுத்துடுங்க! இல்லன்னா நானே ட்ராபிக் போலிஸ்’கிட்ட உங்களை புடிச்சு குடுத்துடுவேன்!” என்றான் சிரித்துக்கொண்டே மிரட்டல் தொனியில்.
முகம் சுருக்கி முறைத்தவள், உதட்டை சுளித்து கழுத்தை வெட்ட, அவளின் சிறுபிள்ளைத்தனமான செய்கையில் பல்வரிசை தெரிய சிரித்தான் வீரகேசரி!!!
இன்றைய சந்திப்பு நடந்திராவிட்டால் எப்படி என்று தெரியவில்லை!!! ஆனாலும், அவள் பேச்சை இன்று கேட்டபின், முடிந்தவரை திருமணத்தை சீக்கிரமே நடத்தி முடிக்க வேண்டும் என நினைத்தான்.
நாட்களை தள்ளி வைத்தால், இந்த ‘ஆறுமாச’ பிரச்சனை போல, புதியதாய் எதையும் கொண்டு வந்து விடுவாளோ என்ற பயம் வேறு!!!
‘சீக்கிரம் முடிக்க வேண்டும்’ என்று நினைத்தானே தவிர, ‘இவ நமக்கு தேவையா? சரிப்படுமா?’ என நொடிக்கூட சிந்திக்கவில்லை.
அஷ்டா கூட அவன் தனது கோரிக்கையை எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்வான் என நினைக்கவில்லை.
‘என்கிட்ட இருக்க எதுடா உன்னை ஹெவியா லைக் பண்ண வச்சுது?’ என மனசுக்குள் கேட்டு கேட்டு சிரித்துக்கொள்வாள்.
அவனிடம் பேசிவிட்டு வந்த அஷ்டா, திருமணத்திற்கு ‘சம்மதம்’ என சொன்னது தான் தாமதம், இருவீட்டாருக்குமே திருமணத்தை தள்ளிப்போடும் எண்ணம் இல்லை போலும்! அடுத்த முகூர்த்தத்திலேயே வைக்க முடிவு செய்தனர்.
தன் திருமணத்திற்க்கு தானே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்ததால் அஷ்டாவிடம் தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை அவன்!!!
பேசினால் எந்த குண்டையும் தூக்கி வீசிவிடுவாளோ என்று பயந்துக்கொண்டு அவன் பேசாதிருந்தது அவன் மனம் மட்டுமே அறிந்தது.
அஷ்டா’வாகவும் இவனிடம் பேச இயம்பவில்லை!
இருகுடும்பமாய் சந்திக்கும் நிகழ்வுகளில் கூட அவளை ரகசியமாய் ரசிப்பானே தவிர, தனித்து பேச முயலவே இல்லை!
பெரியவர்கள் இதை ‘கூச்சம், வெட்கம்’ என ஆளுக்கு ஒன்றாய் நினைத்து, கண்டுக்கொள்ளவில்லை.
அப்படி இப்படியென நாட்கள் நகர்ந்து… நின்று… பின் ஓடி… திருமண நாளும் வர… எந்த குறையுமின்றி நிறைவாய் நடந்தேறியது வீரகேசரி, அஷ்டலட்சுமியின் திருமணம்!!!
மனம் நிறைய கரம் பிடித்தவனை, மனம் கோண செய்வாளா அவன் மனையாள்?!
(சொல்லாம கொள்ளாம கல்யாணம் வச்சுட்டேன்னு கோச்சுக்காம எல்லாரும் கல்யாணத்துக்கு வந்து சிறப்பிச்சு குடுங்க மக்களே!!!)