செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 22_2
சந்தம் யாருடையது என்று தெரியவும் நின்றாள். முன் வந்து நின்றான் ரிஷி. முன்னே வந்தவன் பேசாமல், ஆசை தீர முறைத்தான். அவள் என்ன கண்டாளா அவன் தொழில் ரீதியாக இங்கு வந்திருப்பதை? தெரிந்திருந்தால் இந்த பக்கம் தலை வைத்துக் கூட படுத்திருக்க மாட்டாளே.
“யாரு டி இவன் ஹிந்தி பட ஹீரோ மாதிரி?” இது நிலாவே தான்.. துளசி காதை கடித்தாள்.
“மூடு வாய… இந்த இத்துப்போன மூஞ்சு.. உனக்கு ஹீரோவா?” வேறு யார் துளசி தான்.
“ஏன் கோமல் சொல்றான்?”
“அது.. அது வீட்டு பேர்..”
“யாருடி இவன்?”
“என் அத்தான்”
“அடிபாவி ஊர்ல நச்சினு இருக்க எல்லாவனும் உனக்கு அத்தானா?”
“சும்மா இரேண்டி… முறைச்சு தள்றான்”
“ஹப்பா… இவனுக்கு உன்ன பிடிக்கல டி. இவனையாவது சைட் அடிக்கட்டா?”
“வாய மூடு மாடே..” கிசுகிசுத்தாள்.
“அது என்னமோடி… நீ பாக்க அம்சமா இருக்கனாலையானு தெரியல… உன்னை சுத்தி வரவனுங்க எல்லாம் ஹீரோ கணக்கா தான் இருக்கானுங்க.. கேட்டா அத்தான் பொத்தான்னு வேற சொல்ற! வாழ்வு தான் டி உனக்கு. இவனையாது நான் சைட் அடிச்சுக்கிறேனே..”
“வாய மூடுறியா. அவன் முறைச்சே.. எரிச்சு கொல்றான்… நீ ஜொல்லு விட்டே மூழ்கடிச்சு என்னை கொல்லு!”
இருவரும் வாய்க்குள்ளே தெரியாத மொழியில் பேசிக்கொள்ள அவன் கோபம் இன்னும் அதிகம் தான் ஆனது. “வீட்ட விட்டு ஓடி வந்தாலும்.. ரொம்ப நல்லா தான் இருக்க போல..?” மேலிருந்து கீழ் வரை நோக்கியவனின் முதல் கூற்றே இது தான். ஹிந்தியில்.
[the_ad id=”6605″]
அவள் பதில் பேசவில்லை.
“எங்க ஊர் சுத்திட்டு இருக்க?”
விழித்தாள். இவனுக்கு எதற்கு இந்த வேண்டாத கேள்வி என்பது அவள் எண்ணம்.
“பேசு.. கொழுக்கட்டை வாயில இல்லையே… பேசு. உன் அப்பா எப்படி இருக்கார்ன்னு கேளு. உன்னால குடும்ப மானம் என்ன ஆச்சின்னு கேளு… ஏதாவது கேட்டுத் தொலை” என்று கத்தினான்.
“நடந்த எல்லாத்துக்கும் காரணம் நீ தான்.. நீ என் உயிரை எடுக்காம இருந்திருந்தா நான் ஏன் வீட்டை விட்டுப் போக போறேன். எல்லாம் உன்னால தான் நாசமா போச்சு. வந்துட்டான் பெரிய இவனாட்டம் கேள்வி கேட்டுகிட்டு. தெரிஞ்சுக்க.. என்ன ஆகி இருந்தாலும் அது உன்னால தான். சும்மா என்னை வந்து கத்தாத! என்னைக் கேள்வி கேக்கற உரிமை உனக்கு இல்ல.” பதில் தந்துவிட்டு அவள் நகர.. நின்று பார்த்தான்.
அருகில் சென்றாலே சுவரோடு சுவராய் புதைந்து போவாளே.. அவள் தானா? அறை விட்டால் கூட சத்தமாக அழ நடுங்குவாளே.. அவளா இது? எங்கிருந்து வந்த தைரியம் என்று மலைத்து நின்றுவிட்டான்.
பின்னோடு வந்தவனிடம்.. “நடு ரோட்டில நின்னு கத்தாத.. உன் கிட்டப் பேச எனக்கு ஒண்ணுமே இல்ல… இடத்தை காலி பண்ணு.” என்று சரளமான ஹிந்தியில் அவள் பொரிய, நிலா தான் இருவரின் வாய் பார்த்து நின்றாள்.
அவனை ஒரு புல் என்று கூட மதிக்காமல் துளசி நடையைக் கட்ட.. அவனுக்கு அவள் இருப்பிடம் தெரிய வேண்டும்!
அவள் ஆட்டோ தேடி நிற்கும் நேரம் நிலாவிடம் ஆங்கிலத்தில் பேசி இருப்பிடம், கல்லூரி என்ற தகவல்களை வாங்கிக்கொண்டான்.
“அவ ஹாஸ்டல்லயா இருக்கா? அவ புருஷன்?” என்று அவன் வாய் விட…
‘அட லூசே’ என்று பாத்த நிலா… “அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகல..” என்று அவன் வயிற்றில் பாலை வார்த்தாள்.
“என்ன சொல்ற? கல்யாணம் ஆகலியா?”
“அந்த காட்டெருமை கூடவே பேசிட்டு இருக்க போறியா… இல்ல வரியா?” ஆட்டோவில் ஏறியவள் கேட்க.. நிலா, ரிஷியை அந்தரத்தில் தொங்கவிட்டு சென்றுவிட்டாள்.
ரிஷி என்ற பூதத்தால் இன்னும் என்ன என்ன பூதாகரமான விஷயம் நடக்கவிருக்கிறதோ? மூர்த்திக்கான ஷாப்பிங் என்று களிப்போடு ஆரம்பித்த நாள்.. ரிஷியின் தரிசனத்தால் களைப்பில் முடிந்தது.
அடுத்த நாள் சனிக்கிழமை.. ஆனால் அன்றைய தினம் தான் வாங்கிய சங்கிலியைக் கொடுக்கவில்லை, புளி கரச்சல் தந்தவனிடம். ரிஷியின் தரிசனத்தை மட்டும் மறக்காமல் கூறிவிட்டிருந்தாள்.
“அடுத்த தரம் பார்த்து பேசினா சண்டை போடாம பேசு. அப்பா எப்படி இருக்காங்கன்னு கேக்க மாட்டியா? அது நீ கேட்டு தான் ஆகணும். நீ காணம போனதும் அவர் மனசு என்ன பாடுபட்டுதோ..? நாமளா போய் பேசல. அட்லீஸ்ட் வந்து பேசறவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே”
“அத பத்தி பேச வேண்டாமே மூர்த்தி சார். எனக்கு பிடிக்கல”
[the_ad id=”6605″]
“சரி பேசல. நீ சொல்லு வேற என்ன விஷயம்?”
“ராட்னி கடைசி பர்த்டே இங்க.. அதனால இன்னைக்கு நைட்.. உட்லாண்ட்ஸ் வராங்க எல்லாரும்.. உங்களையும் கூப்பிட்டிருக்கிறான் தானே… போறோமா?” நினைவு படுத்தினாள்.
ராட்னி, சுருட்டையின் கடைசி வருடம் இது. இன்னும் அரையாண்டே இந்த நட்பு நீடிக்கும். பேராசிரியர் என்று இல்லாமல் துளசியின் உறவு என்ற முறையில் அவர்கள் நட்பு வட்டத்தில் அவ்வப்போது மூர்த்தியும் இணைவது உண்டு. அதன் பலனாய் மூர்த்தியோடு நல்ல நட்பு ஏற்பட்டிருக்க.. மூர்த்தி-துளசியின் பல சனிக்கிழமை இரவு உணவில் இவர்களின் குட்டி கேங்கும் இணைந்து கொள்ளும்.
எல்லா குஷியும் கும்மாளமும் இன்னும் ஆறே மாதம் தான். ராட்னி இந்தியாவை விட்டுச் சென்றுவிடுவான். சுருட்டை வேலை தேட போவதாக கூறிக்கொண்டிருக்கிறான். அதனால், கிடைக்கும் தருணத்தை அவர்கள் வீணாக்குவதில்லை.
“இந்த இயர் முடிஞ்சடும்.. ஐ ஆம் லீவிங்… ஐ வில் மிஸ் யூ ஆல்..” என்று ஆரம்பித்தவன்.. பிரிந்து போவதற்கு முன், சாந்தோமிலிருந்த ராட்னியின் தாத்தா வீட்டில் ஒரு நாள் அனைவரையும் வருமாறு அழைத்தான்.
மூர்த்தியைக் கேட்க அவன் வர மறுத்துவிட்டான். “நீங்க ஃப்ரெண்ட்ஸ் என்ஜாய் பண்ற இடத்தில நான் எதுக்கு. சம்மதர் டைம்.. டின்னர்-ல மீட் பண்ணலாம்” என்று கழண்டு கொண்டான்.
மூர்த்தி வர மறுக்கவே.. அவனுக்கு ஏதாவது கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம். ஆனால் என்ன?
“பார்டிங்க் கிஃப்ட் என்ன குடுத்தா எம்.பி-க்கு பிடிக்கும் டுல்சி?” இது ராட்னி
“என் ஆளைப் பத்தி.. ஏன், என் கிட்ட கேட்டா சொல்ல மாட்டேனா?” -நிலா
“ஓகே.. மூன்.. சொல்”
“என்னையே கொடுக்க..”
இருவர் காரி துப்ப… ஒருத்தி பார்வையாய் அவளைப் பஸ்மமாக்க…
“கொடுக்க வேண்டாம்ன்னு சொல்ல வந்தேன்.. அதுக்கு எதுக்கு இத்தன போர் கொடி?”
ஒருவாறு பேசி முடிவானது.. “நாம எல்லாரும் போன பிறகும்.. அவருக்கு தோணும் போதெல்லாம் நம்ம சத்தம் அவர் காதில கேட்டுட்டே இருக்க மாதிரி ஏதாவது ரெக்கார்ட் பண்ணிக் கொடுப்போம். அவர் ரொம்ப விரும்பி கேப்பார்”.
‘எனக்காக பாடி குடேன்’ என்று மூர்த்தி கேட்டபின் கொடுக்காமல் இருப்பாளா? அந்த கேசட்டோடு, தான் வாங்கிய சங்கிலியையும் கொடுக்க தீர்மானித்தாள்.
விடுமுறை நாள், சாந்தோமில்:
ராட்னியின் இருப்பிடமே அவர்களின் செல்வ செழிப்பை காட்டியது. மிக பெரிய பங்களா. சுற்றிப் பராமரிக்கப் பெற்ற பூந்தோட்டம். இருப்பிடத்தின் அமைப்பே.. பிரிட்டிஷ் துரையின் வனமாளிகை போல் காட்சியளித்தது.
கேட்டிற்குள் கால் எடுத்து வைக்கவுமே ராஜ மரியாதை. நிலா, பிளந்த வாயை முட்டினாளில்லை.
இளம் மஞ்சள் மாலை வெயில்.. இளம் மஞ்சள் புடவையில்.. மஞ்சள் ரோஜாகள் நடுவே.. பன்னீர் ரோஜா ஒன்று சிரிக்க.. சிலையாய் நின்றுவிட்டான் ஒருவன்.
மஞ்சள் ரோஜா துளசியின் இதயத்தை கொள்ளை கொள்ள… அதிலிருந்து கண் எடுக்க முடியாமல் பாரத்து.. தொட்டு.. நுகர்ந்து.. ரசித்து.. சிரித்துக் கொண்டிருந்த துளசி தான் எட்வார்ட் ராட்னி கண்ணுக்கு பன்னீர் ரோஜாவாக காட்சியளித்தாள்.
ராட்னிக்கு துளசி மேல் ஈர்ப்பு உண்டு. பார்த்த அன்றிலிருந்தே இருக்கும் ஒன்று தான். ஆனால் நட்பைத் தாண்டி ஒரு வார்த்தை பேசியதோ பார்த்ததோ இல்லை. இங்கிலாந்தில் மாட்டுமே வாழப் பிடித்த ராட்னியும்… தமிழகத்தை விட்டு எங்குமே வாழப் பிடிக்காத துளசியும்.. புத்தக காதலுக்குச் சரி வரலாம்.. நிஜ வாழ்விற்குத் துளசியும் அவனும் சேர்வது சவாலான விஷயம் என்று உணர்ந்ததால் இன்று வரை வாய் திறந்தானில்லை. அவர்கள் சேர்ந்துவாழ ஒரே ஒரு பிடிப்பு கிடைத்தால் கூட உரைத்துவிடுவான். ஆனால் அப்படி ஒன்று அவன் புத்திக்கு எட்டவில்லை. அதனால் அவன் காதல் சொல்லப்படவும் இல்லை.. உணர்த்தப்படவும் இல்லை.. உணரப்படவும் இல்லை. கை சேர முடியாத காதல்… நட்பாகத் தொடரட்டுமே என்று விட்டுவிட்டான்.
இன்று வரை கட்டுக்குள் இருந்த ராட்னியின் மனம், மெல்ல தன் கட்டுகளை அவிழ்க்க ஆரம்பித்தது. கொள்ளை கொள்ளும் குணத்தோடும்.. கண்ணைப் பறிக்கும் அழகோடும்.. அவன் வீட்டைச் சுற்றித் திரிந்த மஞ்சள் தேவதை.. அவன் இதயத்தில் குளிர் சாரலை மோதவிட்டாள்.
“வாங்க வாங்க” என்று அழகான தமிழில் அழைப்பு. அழைத்தவர் லாரென்ஸ் ராட்னி, எட்வர்ட் ராட்னியின் தாத்தா. பேரனிடம் தாத்தாவின் சாயல் தெரிந்தது.
[the_ad id=”6605″]
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற அன்று 25 வயதே ஆனா ராட்னியின் தாத்தா அவரின் மனம் கவர்ந்தவளையும் தன்னோடு வருமாறு அழைக்க.. ‘மனம் கவர்ந்தவளோ’ தங்களை துன்புறுத்திய ஆங்கிலேயர் தேசத்துக்கு போக மறுத்துவிட்டார்.
காதலியை விடப் பெரிதாய் அவருக்கு வேரொன்று இல்லை என்று தோன்றியிருக்கவேண்டும்… அவர் இந்தியாவில் தங்கிவிட்டார். மனைவி இறந்த பின்னும் இந்திய தேசத்தை விட்டு பிள்ளைகள் வசிக்கும் இங்கிலாந்திற்குச் செல்ல மாட்டேன் என்று இங்கேயே பிடிவாதமாக இருந்துவிட்டார்.
அப்படி இந்த தேசத்தில் என்ன தான் இருக்கிறது என்று பார்க்கவந்தவன் தான் ராட்னி. தேசம் பிடித்தது. அதில் வாழ்ந்த மக்களையும் பிடித்தது. அதிமுக்கியமாகத் துளசியைப் பிடித்தது.
அவர் பிறந்த மண்ணின் கதையும்.. இந்தியா வந்த நோக்கமும்.. அவர் காதல் கதையும் கேட்கக் கேட்க திகட்டவில்லை துளசிக்கு.
“ரோசா… அவ பேரு. ஆனா ரோஜா பூக்கும் அவளுக்கும் சம்பந்தமே இருக்காது. கிட்டப் போன முள்ளா குத்துவா. அவ கிட்ட ஏன் எதுக்குனே தெரியாம மயங்கிப்போனேன். அவளா என் சொந்த மண்ணான்னு வந்தபோ… எனக்கு என் ரோசா தான் வேணும்னு இங்கேயே இருந்துட்டேன். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தந்தா. வாழ்க்கையில இருக்க எல்லா சுகத்தை விட அவ மடி தர சுகம் மட்டும் போதும்னு தோணிச்சு. இங்கேயே இருந்துட்டேன்.. இன்னைக்கு அவ உயிரோட இல்ல. ஆனா இங்க தான் அவ இருக்கா… என்னால இங்க இருந்து போக முடியாது.”
விடுதிக்குச் செல்லும் முன் சாந்தோம் தேவாலயத்தில் கண்மூடி அமர்ந்திருந்தவள், “எங்களுக்கு ஒரு நல்ல வழிய காட்டுங்க ஏசப்பா..” என்று மனமார வேண்டுதல் வைத்துவிட்டு வந்தவள் காதுக்குள் மீண்டும் மீண்டும் வயதான ராட்னியின் சத்தம் தான். “காதலிக்கறவங்களுக்கு அவங்க சந்தோஷத்தை விட.. அவங்க நேசிக்கிறவங்க நிம்மதி தான் பெருசா இருக்கும். எனக்காக என் ரோசா இங்லாண்ட் வந்திருந்தா.. கொஞ்ச நாளுக்கு அவளுக்கு நல்லா இருந்திருக்கும்… ஆனா எனக்காக அவ தன்மைய இழந்திருப்பா… அவ நிம்மதி போயிருக்கும். அவளுக்காக, அவ நிம்மதிக்காக.. என் காதலுக்காக எனக்கு பிடிச்சத நான் விட்டு கொடுத்தேன். காதல் சுயநலம் இல்லாதது..”
‘கொஞ்ச நாள் எல்லாம் நல்லா தான் இருக்கும் மூர்த்தி சார். அப்புறம்? நான் வேண்டாம் மூர்த்தி சார்’ அவள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மூர்த்தியை நினைத்து துளசி பெருமூச்சு விட… ராட்னி மனதிலோ புது அலை. அவன் தாத்தாவுக்கு மட்டும் தான் காதலுக்காக தேசத்தையும் சொந்த பந்தத்தையும் துறக்க முடியுமா என்ன? துளசி வர மறுத்தால் அவன் சாந்தோமில் இருந்துவிட்டு போகிறான்.
மனம் திறந்து துளசியிடம் தன் விருப்பத்தைக் கூற ஆசை. கையோடு கூட்டிச் செல்ல ஆசை. வெறும் ஆசையை உள்ளுக்குள் வைத்து என்ன செய்ய? கேட்டுவிட்டான்.. “டுல்சி நெக்ஸ்ட் இயர் உன் டிகிரி முடிஞ்சதும் என் கூட இங்லாண்ட் வரியா?”
“அங்க வந்து நான் என்ன பண்ணுவேன்?” ஏதோ கிண்டல் பேச்சு என்று அவளும் சிரித்துக்கொண்டே கேட்க..
“ஐ ஆம் சிரியஸ். நீ வாரியா? அங்க நீ வேலை செய்யலாம்..” குரலில் வரச் சம்மதம் தெரிவிக்க வேண்டுமே என்ற வேண்டுதல்.
“படிப்பு முடிய எனக்கு இன்னும் ஒன்னரை வருஷம் இருக்கே ராட்?”
“உன்காக… நீ வரேனா.. ஐ வில் வெயிட் டுல்சி.. வரியா? டோண்ட் ஆன்ஸர் நௌ. யோசிச்சு சொல்.. உன்காக நான் எதுனாலும் செய்யும். புரியுடா? எனிதிங் பார் யூ டுல்சி..”
ரிஷியைப் பார்த்தபின் மனம் புது எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே தான் இருக்கிறது. கண்டிப்பாக அவன் மூலமாக ஏதாவது பிரச்சினை வெடிக்கும் என்று எதிர்பார்த்தாள். மெட்ராசில் இருக்க முடியாது. எங்குச் செல்வது என்று எண்ணிக் கொண்டிருந்தவள் மூளையில் சின்ன மின்னல் வந்து போனது.
‘மூர்த்தி சார்…’ அவளின் ஆரம்பப் புள்ளியும் அவனே.. முடிவு புள்ளியும் அவனே. அவள் உலகமும் அந்த வட்டத்துக்குள். அவனுக்காகவே, அவனை விட்டு விலகிச் செல்ல நினைப்பவளுக்கு, இதோ.. தானாய் திறந்தது ஒரு கதவு.