செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 24_1
துளசியைப் பார்க்க அம்புஜம் மாமி வந்தார். கவலை இல்லா சிறு குழந்தையின் நிம்மதி முகத்தில் தவழ, உறங்கிக் கொண்டிருந்தாள், மூர்த்தியின் அழகோவியம்.
மாமியிடம் ஒரு நம்பாத பார்வை. “டேய் படவா.. மாமிட்ட பொய் சொன்னியாடா?”
“என்ன பொய் மாமி?” புரியாத பார்வை பார்த்தான்.
“நிஜத்த சொல்லு டா அம்பி? இவ நோக்கு உறவா? பச்ச கிளியாட்டாம் இருக்காளேடா…” கேள்வியோடு அவனைப் பார்க்க
வாய் விட்டுச் சிரித்தவன், “என்ன மாமி கடைசியில இப்படி சொல்லிட்டீங்க… என்ன அழகா இருக்கா… ஒழுங்கா பருங்க மாமி.”
சத்தம் கேட்டு அவள் கண்விழித்தவளுக்கு ஒன்றும் மூளையில் உரைக்கவில்லை.
அவள் விழிக்க.. “அத தான் டா சொன்னேன்.. மூக்கும் முழியுமா அழகா இருக்கான்னு சொன்னேடா அம்பி..”
பார்த்ததும் அவரை தெரிந்துவிட்டது. “மாமி?” கண்விரிய புன்னகை தவழக் கேட்டவளை அசையாய் பார்த்தவர், “பரவாலியே… இந்த படவா என்னை பத்தி சொல்லி இருக்கான் போல..”
எழுந்திருக்க முயன்றவளை, “ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாத..” என்று சாய்வாய் கட்டிலிலேயே அமர வைத்தான்.
“நிறைய… நிறைய உங்கள பத்தி சொல்லி இருக்கார் மாமி.” துள்ளலோடு வார்த்தைகள் வந்து விழுந்தது.
“சொல்லியிருப்பான் சொல்லியிருப்பான். நீ நன்னா இருக்கியாடி கோந்தே. பாரு நீ வந்து படுத்த நேரம் மாமி ஊர்ல இல்லாம போயிட்டேன். என் பொண்ணு காயத்திரி ஆத்து விசேஷம்.. போன இடத்துல தங்க வேண்டியதா போயிடுத்துடிமா…”
“பரவால மாமி… நான் தான் தப்பான நேரத்துல கீழ விழுந்து சில்லரை வாரிட்டேன்..” சில்லரை சிதறியது போல் சிரித்தாள்.
“அழகு கோந்தே டி நீ… இப்போன்னா தெரியுது இந்த புள்ளையாண்டான் ஏன் உன்ன நினைச்சு உருகறான்னு!”
முகம் புன்னகையைப் பூசிக்கொள்ள.. “உங்களுக்குத் தெரியுமா என்னை..”
“சொல்லி இருக்காண்டி கோந்தே. நீ தான் கோலம் போடனும்ன்னு கோலம் போட விட மாட்டேன்றான் படவா”
“எனக்கு கூட உங்கள தெரியுமே…”
“ரொம்ப அழகா பாடுவீங்களாம், வீணை வாசிப்பீங்களாம். உங்க தோச அழகா வட்டமா முறுமுறுன்னு இருக்குமாம். உங்க தோச சாப்பிட்டா வேற தோசையே பிடிக்காதாம். ஒழுங்கா சாப்பிடாட்டா உங்கட்ட இவர் நல்லா திட்டு வாங்குவாராமே.. சொன்னார்.
உங்க புளியோதரை எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அவ்வளவு பிடிக்கும் மாமி. அப்புறம் போன வாரம் குடுத்து அனுப்பினீங்களே அந்த மாவடு ஊறுகா.. தயிர் சாதத்துக்கு செம சூப்பர் மாமி… என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் கிட்ட இருந்தும் காப்பாத்ததுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சுன்னா பாத்துக்கோங்களேன்..” ஏதோ நன்றாய் தெரிந்தவரிடம் பேசுவது போல் கண்விரித்து அவள் பேச.. மாமிக்கு அவளை இன்னும் அதிகமாய் பிடித்துப் போனது. என்ன மாயமோ.. மூர்த்தி பயந்தது போல், ‘வயது பெண் மூர்த்தியோடு இருக்கிறாள்’ என்ற எண்ணம் அவரிடம் எட்டிப்பார்க்கவே இல்லை.
[the_ad id=”6605″]
கைக்கட்டி ஓரமாய் நின்றிருந்தவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. ‘சாப்பாட்டு ராமி! எவ்வளவு சொல்லி இருக்கேன்… புளியோதரையும் தயிர்ச் சாதமும் தான் அவளுக்குப் பேச கிடைச்ச டாப்பிக்’. ஆனால் அந்த ‘டாபிக்’ மாமிக்கு மிகவும் பிடித்துப் போனது.
அவனை பார்த்தவள், “பாருங்க மாமி என்னை பார்த்து சிரிக்கிறார்..” புகார் வாசித்தாள்.
“அவன் கிடக்குறாண்டி கோந்தே.. நன்னா பாத்துக்குறானா? இல்லேனா நீ மாடிக்கு வந்துடு… மாமி உன்ன என் பொண்ணாட்டம் பார்த்துக்குறேன்டிமா..”
“இப்போ கூட உங்க பொண்ணா நினைச்சுக்கோங்க மாமி. சுமாரா தான் பார்த்துக்கிறார் மாமி. இருந்தாலும் அவ்வளவு மோசம் எல்லாம் இல்ல! ஒரு ரெண்டு நாள் டைம் கொடுத்து பார்ப்போம் மாமி.. சரிபடாட்டி ஓடி வந்துடுறேன். தினமும் கஞ்சியா குடுத்து கொல்றார். வாய் கசக்குதுன்னு சொன்னா கூட ஒரு ஊருகா கூட கண்ணுல காட்ட மாட்டேன்றார்.”
மாமி அவனைப் பார்க்க.. அவன் வாய் விட்டுச் சிரித்தான். ‘கும்பகர்ணீ… ஒண்ணு உறக்கம் இல்ல தீனி…’
அவருக்கும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வர.. வெகுவாய் பாடு பட்டு அடக்கி கொள்ளவேண்டியதாய் போயிற்று.
“இன்னைக்கும் நீ வாந்தி பண்ணியா டி கோந்தே..? சத்தம் நேக்கு மேல மாடி வரைக்கும் கேக்குதுடிமா. அவன் எப்பிடி ஊருகா குடுப்பான்? வாந்தி பண்ணும் போது மூக்கெல்லாம் எரியாதோ?”
“போங்க மாமி.. நீங்களும் அவர் கூட செர்ந்துகிட்டு.” அலுத்துக் கொண்டாள். “உப்பு சப்பில்லாத அந்த சீரக கஞ்சினால தான் வாந்தியே.. வாய்க்கு ருசியா செஞ்சு குடுக்க சொல்லுங்க மாமி… வாந்தி பண்ண மாட்டேன்.” மாமியிடம் குறை படித்தாலும் பார்வை முழுவதும் மூர்த்தியின் மேல் தான்.
அவனை பார்க்க அவன் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே சுவரோடு சாய்ந்து நின்றிருந்தான். ஒரு ஏகாந்த நிலை. அவன் துளசி.. அவன் படுக்கையில்.. அவனைப் பற்றி அவனிடமே குறை கூறிக்கொண்டு..
மாமிக்கு அவன் வளமான எதிர்காலம் கண்முன் வர, “உனக்கு பொழுது போகலன்ற குறையே இருக்காது டா அம்பி” என்றார் சிரித்துக்கொண்டே.
“ஜுரம் விடட்டும்.. வாந்தி பண்ணாம ஒரு நாள் இரு.. தொவையல் அரைச்சு தரேன்” என்றான்.
“அப்பவும் துவையல் தானா..?”
பெண் முகத்தில் உண்மையிலுமே சோக சாயல்.
“மாமி வீட்டு ரசம் சாப்பிடுடி கோந்தே… சீக்கிரம் சரி ஆகி.. ஓடவே ஆரம்பிச்சுடுவ” கூறியதோடு நிறுத்தாமல்.. மூர்த்தியைக் கூப்பிட்டு ரசம் கொடுத்து அனுப்பினார்.
இரண்டு நாள் சில முன்னேற்றங்களோடு சென்றது. உடல் வலியோடு முட்டி வலியும் குறைந்திருக்க.. முட்டி மடக்க ஆரம்பித்திருந்தாள். கையை கூட கொஞ்சம் அசைக்க முடிந்தது. ஆனால் கால் ஊன்றி நிற்கவும் முடியவில்லை.. நடக்கவும் முடியவில்லை.
அருகிலிருந்த எலும்பு சார்ந்த மருத்துவமனை கூட்டிச் சென்றான். காலை ஆராய்ந்த டாக்டருக்கே அதில் தெரிந்த பழைய தழுப்பு நெஞ்சை அடைத்தது. மாத்திரையோடு களிம்பையும் கொடுத்திருந்தார்.
“கை காயம் பிரச்சினை இல்லை. வார்ம் வாட்டர்ல க்ளீன் பண்ணிட்டு மருந்த போடுங்க. கால் தான்.. கொஞ்சம் பத்திரமா இருங்க.. ரெஸ்ட் கொடுங்க. அதுல வெயிட் போடாதீங்க.” என இன்னும் சில பல அறிவுரைகளோடு அனுப்பிவைத்தார்.
ஊன்று கோலோடு நடக்க சிரமாக இருக்க மூர்த்தியைப் பார்த்தாள். வீல் சேரில் ஆட்டோ வரை அழைத்து வந்தான். வீட்டு வாசல் வரை ஆட்டொ வர.. வீட்டிற்குள் தூக்கிச் சென்றான். அவன் கையில் தவழுவது பிடித்துப் போனது. நடக்க நினைப்பது கூட இல்லை.. அடுத்து வந்த நாட்களில் எதற்கும் “மூர்த்தி சார்.. தூக்குங்க..” தான்.
முட்டி வலியும் இல்லை.. ஜுரமும் இல்லை என்றதும் பெண்ணை கையில் பிடிக்க முடியவில்லை.
“ஒரே இடத்துல எத்தன மணி நேரம் இருக்கது? ஊஞ்சலுக்கு போகணும்” என்பாள்.
“வீட்ட சுத்தி காட்டுங்க.. நம்ம செடிய பாக்கணும்” என்பாள்…
“கடப்பா கல்லு மேல உக்கார வைங்க.. நான் சொல்றதா சமைக்சு தாங்க” என்று அராஜகம் செய்தாள்.
கால் ஒழுங்காக இருக்கும் வேளை செய்யும் சேட்டையில் பாதியை அவள் கையில் தவழ்ந்துகொண்டே செய்ய ஆரம்பித்தாள்.
“ஏன் மூர்த்தி சார் உங்களுக்கு என் மேல கோபமே வர மாட்டேங்குது?”
தங்கம் பற்றி கூறினான். “அவ உனக்கும் மேல வம்பு பண்ணுவா.. அவள் தூக்கிட்டே சுத்தி பழகிட்டேன்.. சின்ன தங்கம் பழக்கி விடவே பெரிய தங்கம் கிட்ட ஈசியா இருக்கு..”
[the_ad id=”6605″]
அன்று மாலை வேளை விஜி, நிலா, ராட்னி, அருண், ஜக் என அவர்கள் படையே வந்தது துளசியைப் பார்க்க. பேக்கரி தின்பண்டங்களும், பழமும் என்று ஆளாளுக்கு ஏதேதோ கொண்டு வந்திருக்க ராட்னி கையில் டசன் சூரியகாந்தி மலர்க் கொத்து.
கை வைத்த பனியனும், மடித்துக் கட்டிய வேட்டியுமாகப் பூக்க மறுக்கும் ரோஜாச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவனுக்கு ஆச்சரியமே.
அனைவரையும் வரவேற்று அமரவைத்தவன் கையில், வந்தவர்கள் பண்டங்களைக் கொடுக்க.. ராட்னிக்கு தெரியவில்லை மலர்க் கொத்தை அவள் வந்த பின் அவளிடம் கொடுக்க வேண்டுமா மூர்த்தியிடம் கொடுக்கவேண்டுமா என்று.
“டுள்சிக்கு யெல்லோ ஃப்ளவர்ஸ் பிடிக்கும்ன்னு வாங்கினேன்..” என்று மூர்த்தியிடம் நீட்ட
“அவள கூட்டிட்டு வரேன். அவ கிட்ட கொடுத்திடு” என்றவன்.. “அவளுக்கு லைட் பிங்க் ரோஸ் ரொம்ப பிடிக்கும்..” என்ற கூடுதல் தகவலையும் கொடுத்து உள்ளே சென்றான்.
வாரத்திற்கு மூன்று நாளாவது இளம் மஞ்சள் கலந்த புடவை உடுத்துவாள். ஒரு நாள் முழுவதுமே மஞ்சள் கோலத்தில் சுற்றுவாள். அவள் நிறத்திற்குத் தங்கப் பதுமை போலவே தான் இருப்பாள். இவனுமே கேட்டதுண்டு ‘ நீ யெல்லோ சாரி-ல அழகா இருக்கனால.. அதே கலர்ல தான் சாரி எடுக்கணுமா..” என்று. சிரித்துவிட்டு சென்றுவிடுவாள். அவளோ மஞ்சள் பைத்தியமாய் இருக்க… இவனோ அவளுக்காக மஞ்சள் தோட்டத்தையே உருவாக்கியிருக்க.. மூர்த்தி அவளுக்கு இளம் பிங்க் பிடிக்கும் என்று சொல்லிச் செல்கிறான்.
‘எம்.பி-க்கு அவளுக்கு விருப்பமான நிறம் கூட தெரியவில்லை’- இது ராட்னி மனது. அவள் வாயிலிருந்து அவள் விருப்பம் கேட்கும் வரை ராட், அவன் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.
“துளசி மா…” ஒன்றுமே செய்யாமல் இருந்தவளுக்குக் கணக்கு புத்தகத்தைக் கொடுத்துத் தூங்க வைத்திருந்தான்.
“உன் ஃப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க எழுந்திரு துளசி..” ஒருவழியாய் எழுப்பி.. முகம் துடைத்து.. தலை வாரி… பௌடர் பூசி.. பொட்டு வைத்து.. கண்ணாடி முன் நிறுத்தியவன்… “எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோ.. இல்லாட்டா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று அலமாரியிலிருந்து ஒரு சட்டையை எடுத்துப் போட ஆரம்பித்தான்.
‘ஏன் சித்தி வாத்திக்கு கூட்ட பெருக்க மட்டும் தான் வருமா? பின்ன வராதா?’ காதில் ஒலிக்க உதடு தன்னால் விரிந்தது. ‘வாத்திக்கு நல்லாவே பின்ன வருது சித்தி’
“அழகா பின்னி விடுறீங்க மூர்த்தி சார்.. எப்படி பழக்கம்?” அவனிடமே கேட்க..
“என் குட்டி தங்கம் பத்தி சொன்னேனே.. அவளுக்கு நான் தான் எல்லாம் செய்வேன்னு சொன்னேன் இல்ல.. அதுல இதுவும் ஒண்ணு!”
புன்னகை முகமாக.. “போலாம் மூர்த்தி சார்..” என்றாள். அருகில் வந்தவன் ஒரு முறை அவளைப் பார்த்துவிட்டு… “புடவையை ஒழுங்கா இழுத்து விட்டுக்கோ.. இதோ வரேன்..” என்று வெளியே சென்றுவிட்டான்.
[the_ad id=”6605″]
மெல்ல உதித்தது. இன்று வரை இந்த வேலையை யார் செய்தது? எப்படி உணர வேண்டும் என்றே தெரியவில்லை. அவன் முகத்தில் எந்த வித அசட்டுப் பாவமும் இல்லை. அவளுக்குத் தான் கொஞ்சம் வெட்கமாய் போக.. ‘உனக்கு கூட வெக்கம் எல்லாம் வருது துளசி’ என்று சிலாகித்துக் கொண்டாள்.
வந்தவன் மீண்டும் பார்வையை அவள் மீது ஓட்ட அவள் பார்வை எங்கோ சென்றது. தூக்கிக் கொண்டான்..
“மூர்த்தி சார்… அவங்க எல்லாம் பார்க்க மாட்டாங்களா? வேண்டாம் மூர்த்தி சார்.. வெக்கமா வருது..”
“எங்க உன் முகத்த காட்டு ஒரு தரம் அது எப்படி இருக்குன்னு பார்த்துக்கிறேன்..” வம்பு செய்துகொண்டே அவன் அவளைத் தூக்கி வர.. ஹாலில் ஒருவரும் இல்லை.
“எங்க போயிட்டாங்க?”
“உன் செடிய எல்லாம் நீ பாக்க சொன்னதா வெளில அனுப்பி வச்சிருக்கேன்.. அங்க ஒன்னும் இல்லன்னு அவங்களே இப்போ வந்திடுவாங்க..” இருவரும் சிரிக்கும் பொழுதே அனைவரும் உள்ளே வந்திருக்க… ராட்னி முகத்தில் மட்டும் யோசனை. ஜன்னல் வழியே பார்த்துவிட்டான்.. மூர்த்தி தூக்கிக்கொண்டு வந்ததும்.. அவள் சிணுங்கியதும்… பின் இருவரும் சிரித்ததும். இதற்கு மேல் அவளிடம் எதை வாய்மொழியாகக் கேட்பது?
ஓரமாய் வைத்துச் சென்ற மலர்க் கொத்தை அவன் நீட்ட… “வாவ்… ரொம்ப அழகா இருக்கு ராட். தாங்க்ஸ் ராட்..” என்றாள் கண்விரித்து. இரண்டு நிமிடம் முன் இப்படி ஒரு முக பிரகாசத்திற்குச் சிறகில்லாமல் பறந்திருப்பான்… இப்பொழுது? புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.
பிங்க் நிற புடவை உடுத்தியிருந்தாள். “எல்லோ சாரி கட்டலியா?” ராட்னி கேட்க..
“எனக்கு பிடிச்ச கலர்ன்னு மூர்த்தி சார் வாங்கி தந்தது” என்றாள்..
அவனுக்குத் தான் துளசி பற்றி எதுவும் தெரியவில்லையோ? “உன்கு யெல்லோ தான் பிடிக்கும்ன்னு நினைச்சேன்…”
“எனக்குப் பன்னீர் ரோஜா கலர் தான் ரொம்ப பிடிக்கும்.. மூர்த்தி சாருக்கு தான் மஞ்சள் பிடிக்கும்” என்றாள்.
அதன் பின் அவளைப் பற்றியோ அவள் விருப்பு வெறுப்பு பற்றியோ ராட்னி ஆராயவில்லை.
அன்றைய தினம் அரட்டை கச்சேரியில் முடிந்தது. பேச்சின் இடையே ‘எனக்கு என்னமோ நீ என்கூட இங்லாண்ட் வர மாட்டேன்னு தொணுது டுள்சி’ என்ற தகவலும் வந்து சென்றது. சட்டென்று மூர்த்தி அங்கு இருக்கின்றானா என்று தான் பார்த்தாள். அவள் நல்ல நேரம் அவன் அடுக்களையில் இருந்தான். அவள் பொல்லாத நேரம் அவர்கள் பேச்சு அவன் காதை எட்டியது.
அனைவரும் சென்ற பின்னும் அவளாகவே கூறுவாள் என்று பார்க்க.. தூங்கச் செல்லும் வரையுமே அவள் வாய் திறந்தாளில்லை.