மண்வாசம் : 10
மாரியம்மா கோவிலுக்கு..
மாவிளக்கு ஏற்றி வர்றோம்..
மைக்டைசென் மைக்செட் மூலம் எட்டு திக்கிலும் பக்தி மணம் பறந்து கொண்டிருந்தது.
எட்டாம் நாள் கொடியேற்றம் துவங்கியதில் இருந்து எல்லை காவல் தெய்வங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, சக்தி கும்ப ஸ்தாபனம் ஆரம்பித்து, பதினைந்தாம் நாள் காப்புக் கட்டுடன் கோலாகலமாய்த் தொடங்கியது செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா.
மண்தரைகள் எல்லாம் மாட்டு சாணத்தால் பூசி மெழுகப்பட்டு, அதில் வண்ணக் கோலமிட்டு, சுவர்களுக்கு சுண்ணாம்பும் காவியும் கலந்து அடித்து, மாவிலை தோரணங்கள் நிலவுக் கதவுகளை அலங்கரிக்க, இனிப்பு வகைகளில் இருக்கும் பண்டங்கள் அனைத்தும் சமைக்கப்பட்டு, அனைவரது வீடுகளும் மாமன், மச்சான், மச்சினிச்சி, அத்தை என உறவுகளால் நிரம்பி வழிந்தது.
வயதுவந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதும், அவர்களைக் காண ஆடவர் கூட்டம் அணிவகுத்து நிற்பதுமாய் இருக்க, ரகசிய காதல்கள் துளிர்விடும் இடமும் ஊர்த் திருவிழா தான். வெவ்வேறு ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் திருவிழா காணக் கூடும் வேளையில்,
“வெளியூர்க்காரன் நம்மூரு புள்ளைய மடக்க பார்க்குறான் டோய்” என முறுக்கிக்கொண்டு திரியும் வயதுப் பசங்கள்,
“ரங்க ராட்டினத்துல இன்னொரு ரவுண்ட் போலாம் புள்ள” என தோழிகளோடு களித்துக் கொண்டாடும் வயதுப் பெண்கள்,
“கண்ணு நீ யாரு மவன்?” என திருவிழா காண வரும் இளசுகளை நோக்கி கேள்விக் கணைகளை தொடுக்கும் பெருசுகள்,
“இப்போவே பலூன் வாங்கித்தா ம்மா. பஞ்சுமிட்டாய் வேணும்ப்பா. பொம்ம கார் வேணும் மாமா. குச்சி ஐஸ் வாங்கித்தா அத்தை” என்று விழுந்து புரண்டு உறவுகளிடம் அடம்பிடிக்கும் சிறார்கள்,
சைட் அடிக்க வந்த சிலர், சாமியை தரிசிக்க மட்டுமே வந்த சிலர், பயபக்தியோடு நேர்த்திக்கடன் செலுத்தும் சிலர், பலவிதமான கடைகளைப் போட்டு கல்லா கட்டும் சிலர், பால்குடம் எடுக்கும் சிலர், பர்ஸ் அடிக்க வந்த சிலர்.
அப்பப்பா.. எத்தனை எத்தனை பேர் திருவிழாவில்!
[the_ad id=”6605″]
பச்சரிசியை உரலில் கொட்டி இடித்து, அதை மிருதுவாக சலித்து அதில் வெல்லப் பாகைக் கலந்து உருண்டை பிடித்து, மாவிளக்கு எடுத்து வந்துகொண்டிருந்தனர் நாயகியும் அவரது பேத்திகளும்.
“அப்பத்தா, எனக்கு இந்த சீலை எப்படி இருக்கு?” என்று வீட்டிலிருந்து கிளம்பியபின் நூறாவது முறையாக கேட்டுவிட்டாள் அரசி. பொறுமை இழந்த நாயகியோ,
“குச்சிக்கு துணிய சுத்துனதோட்டம் இருக்குது. இனி பொட்டோட்ட வரோணும் சொல்லிப்புட்டேன்” என்றுவிட்டு முன்னால் நடக்க, அவரை முறைத்து அருந்தமிழோடு சேர்ந்து வந்தாள் அரசி.
கோவிலுக்குள் அலைகடலென மக்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. ஆறுச்சாமிக்கும் கந்தசாமிக்கும் முதல் மரியாதைக்கான பரிவட்டம் கட்டப்பட, அதற்கான பூஜைகள் ஒருபுறம் சென்று கொண்டிருந்தன.
தன்னானே நனேனன்னே
தானேனன்னே நானேனன்னே!!
கும்மியடி கும்மியடி
குலவையிட்டு கும்மியடி
விதைச்ச விதையெல்லாம்
விளைஞ்சிவர கும்மியடி
சீரான கலையத்தில
சித்திரச்சம்பா நெல்லெடுத்து
வேண்டியதை கேட்டு இங்கே
பொங்கலிட்டு கும்மியடி
முளைப்பாரி இட்டு அதனைச் சுற்றி வட்டமாக நின்று பாடலுடன் கும்மி கொட்டினர் ஊர்ப் பெண்கள். மறுபுறமோ ஆண்கள் பாரம்பரிய சலங்கை ஆட்டத்தைத் துவங்கி இருந்தனர்.
வெண்ணிற சட்டை, மடித்துக் கட்டப்பட்ட வெண்ணிற வேட்டியில் கால்களில் பெரிய சலங்கைகளைக் கட்டிக்கொண்டு கம்பீரமாய் அணிவகுத்து நின்றிருந்தனர். அந்த அணிவகுப்பில் சேதுராமன், லோகநாதன், மைக் மாரிமுத்து ஏன் விக்ரம பாண்டியனும், குலசேகர பாண்டியனுமே அடக்கம்.
கோவில் மண்டபத்தை எட்டியதுமே சலங்கை ஆட்டம் நடைபெறுமிடத்தில் அரும்பைக் கண்டுகொண்ட அரசி, மறுநொடியே தன் அப்பத்தாவிடம் இருந்து மெல்லக் கழன்று கொண்டாள்.
“அரசி வந்துட்டா போல” என சேதுராமன் சொல்ல, அரும்போடு பேசிக்கொண்டிருந்தவளை அப்போதுதான் கவனித்தான் லோகநாதன்.
“இனி இங்கதானே இருக்கப் போறா. ஒருநாள் சிக்காமையா போய்டுவா” என, இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக்கொண்டனர்.
சில நொடிகளில் அங்கு ஒலித்த உருமியின் மேளத்தில் அரசியன் கண்கள் தானாய் சலங்கை ஆட்டத்தை கவனித்தது.
“உன்ர மாமன் சும்மாவே தைய தக்கான்னு ஆடும். பத்தாததுக்கு கால்ல சலங்கையை வேற கட்டி விட்டுட்டாங்களா இனி ஒன்னும் சொல்லிக்க வேண்டாம்” என்று குலசேகரனை பார்த்தவாறு அரும்பிடம் சொல்ல, அவள் எங்கு அரசி கூறியதை கவனித்தாள்? கைபேசியை எடுத்து அவளது மாமனின் சலங்கை ஆட்டத்தை பதிவு செய்ய ஆரம்பித்திருந்தாள்.
உருமி மேளத்திற்கேற்ப அனைவரும் தங்களது கை கால்களை அசைத்து கால்களில் சலங்கை இசைக்க அற்புதமாய் ஆடிக் கொண்டிருந்தனர்.
“எப்படி அரசி என்ர மாமா ஆட்டம்? பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு” என்று அரும்பு இப்போது சிலாகித்து கூற, அரசி எங்கு குலசேகரனைப் பார்த்தாள்! அவள் பார்வை விக்ரமனின் சலங்கைகளில் அல்லவா பதிந்திருந்தது. ஆட்டம் முடியும் வரை அவள் தனது பார்வையை அவனைவிட்டு சிறிதும் விலக்கவில்லை.
[the_ad id=”6605″]
அம்மன் சந்நிதி வந்த பின்னரே அரசி தங்களோடு வராததை கவனித்தார் ரங்கநாயகி. பெரிய பேத்தியிடம் விசாரிக்க, அவள் மணி மண்டபத்தில் இருந்த அரும்பைக் காணச் சென்றதாகக் கூறினாள். விளக்கு போட்டுவிட்டு அரசியை அழைத்துக் கொள்ளலாம் என்று இருவரும் விளக்கேற்றும் வேலையில் இறங்கினர்.
“டேய் மாறா! இதுல யாருடா என்ர மருமக?” என கோவிலில் நுழைந்ததில் இருந்து தன் மகனிடம் இதே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தார் சாரதா.
“இருங்க மா. நானும் அவங்களை தான் தேடிட்டு இருக்கேன்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவனுக்கு தரிசனமளித்தாள் அவன் தேவி.
“ம்மா! அங்க பாருங்க. அவங்க தான்” என,
“எங்க டா?” என ஆர்வமாய் கண்களை சுழலவிட்டார் சாரதா.
“தீபம் ஏத்துறாங்க பாருங்க. அவங்க தான் அருந்தமிழ். சிங்காநல்லூர் ஊர் தலைவர் பொண்ணு” என்றிட, சாரதாவின் விழிகள் அத்திசையை நோக்கி அவசரமாகப் பாய்ந்தன.
வெளிச்சம் சிந்தும் விளக்குகளின் மத்தியில் சித்திரமாய் மிளிர்ந்தாள் அந்தப் பொன் மகள்!
“ரொம்ப அமைதியான பொண்ணுங் ம்மா. வீட்டை விட்டு எங்கயும் வரமாட்டாங்க. நான் அவங்களை இதே போல ஒரு திருவிழாவுல வெச்சு தான் மொதோ மொறையா பாத்தேன். ஒரு மஞ்சள் கலர் தாவணில, தல நெறைய மல்லிகப்பூ வெச்சுட்டு, இப்படி தான் விளக்கேத்திட்டு இருந்தாங்க. அந்த விளக்கு ஒளியில தெரிஞ்ச இந்த தேவதையோட முகம் மட்டும் இன்னிவரைக்கும் என்ர மனச விட்டு போகல. எப்போ தமிழை பாத்தேனோ அந்தநொடியே முடிவு பண்ணிட்டேன்ங் ம்மா, அவங்க தான் உங்க மருமகன்னு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, அன்னையிடம் இருந்து பதில் வராதது கண்டு வலப்புறம் திரும்பிப் பார்க்க, சாரதா அவ்விடத்தில் இல்லை.
அருந்தமிழின் அருகில் நின்றிருந்தார்.
சாரதாவை அடையாளம் கண்டு கொண்ட ரங்கநாயகி, இவர் கந்தசாமியின் துணைவி என்று தன் பேத்தியிடம் சொல்ல, அவளும் புன்னகைத்து வணக்கம் சொல்ல, சாரதாவிற்கு தன் கண்களை அவளைவிட்டு விலக்க முடியவில்லை.
“வள்ளியம்மா மகளா இது? மகாலட்சுமி மாதிரி இருக்கா. என்ர கண்ணே பட்டிடும் போல” என,
“ஆமா சாராதா. இவ என்ர பெரிய பேத்தி தமிழு. என்ர சின்ன பேத்தி அரசி அங்க சலைங்கை ஆட்டம் பாத்துக்கிட்டு இருக்கா. அதுக்குள்ள விளக்கு ஏத்திட்டு போய் அவளை கூட்டியாறலாம்னு வந்தோம்” என்ற நாயகி,
“இங்கயே இரு தமிழு. நான் போய் இந்த சின்னக் குட்டியை புடிச்சாறேன். கூட்டத்துல எங்காவது மாறி போயிற போறா” என்றுவிட்டு,
“இரு சாரதா இப்போ வந்தர்றேன்” என்று சரதாவிடமும் கூறிவிட்டு நகர்ந்தார். அதற்குள் மாறனும் அவர்கள் அருகில் வந்து நின்றான்.
“இது என்ர பையன் நன்மாறன் ம்மா” என்று அவளுக்குத் தெரியாததுபோல் அறிமுகம் செய்துவைத்தார் சாரதா.
அருந்தமிழ் மாறனை நிமிர்ந்து பார்க்க,
‘என்ன டீச்சரம்மா புதுசா பாக்குற மாதிரியே பாக்குறாங்க’ என மாறனும் அவளையே தான் பார்த்தான். அதற்குள் சாரதாவோ,
“தங்கமான பையன் மா. என்ர பையன்ங்கறதுக்காக சொல்லல, நிஜமாவே ரொம்ப நல்ல பையன் ம்மா. எனக்கு உடம்புக்கு முடியலைன்னா பாத்திரம் கூட கழுவித் தருவான்னா பார்த்துக்கோயேன்” என்று சொல்ல, அருந்தமிழ் தன் கீழிதழ் கடித்து சிரிப்பை அடக்குவதைப் பார்த்த மாறன் அன்னையிடம் திரும்பி,
‘தாயே! வேண்டாமே’ என்பதாய் பார்க்க,
‘கொஞ்சம் அதிகமா போயிடுச்சோ’ என அவரும் புன்னகைத்து அமைதியாய் நின்றிருக்க,
“இவரை தெரியும்ங்க. எங்க வீட்டுக்கு வந்திருந்தார்” என்றாள் தமிழ்.
‘வீட்டுக்கு எல்லாம் போனயாடா நீ?’ என்று சாரதா மகனை பார்த்து வைக்க,
“திருவிழா நடத்துறது பத்தி பேசறதுக்காக அப்பாவோட போயிருந்தேன்ங் ம்மா” என்று விளக்கவும் தான் சாரதா தன் பார்வையை மாற்றிக் கொண்டார்.
“அடிக்கடி கோவிலுக்கு வருவியா தமிழ்? எப்போ எந்த கோவிலுக்கு வருவ?” என அவளை எங்கு எப்படி சந்திக்க முடியும் என்று தெரிந்துகொள்ள சாரதா அருந்தமிழோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
விளக்கேற்ற வெள்ளிக் கிழமைகளில் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு வருவதாய் சொல்லவும்,
[the_ad id=”6605″]
“விளக்கேத்துறதுனா உனக்கு ரொம்ப புடிக்குமா? அப்போ எங்க வீட்டு விளக்கையும் நீயே ஏத்திடுறையா?” என்று சாரதா கேட்க, அவரை திடுக்கிட்டுப் பார்த்தாள் தமிழ். அவள் மட்டுமல்ல மாறனும் தான்.
“இதோ இதைய சொன்னேன்” என அவர் வைத்திருந்த மண்விளக்கையும் அவளிடமே அளித்து புன்னகையுடன் அவளையே ஏற்றச் சொல்ல, மறுக்க முடியாது மறுக்கத் தோன்றாது போக, அதில் நெய் விட்டு ஏற்றினாள்.
அதற்குள் நாயகி அரசியோடு அவ்விடம் வர, அனைவரும் சாமியை தரிசிக்கச் சென்றனர். கூட்டம் அதிகமாய் இருக்க, நாயகியும் அவர் பேத்திகளும் வலப்புறம் செல்ல, சாரதாவும் மாறனும் இடப்புறம் சென்று நின்றுகொண்டனர்.
அர்ச்சனைகள் ஆராதனைகள் ஆரம்பமாக,
“டேய் மாறா! என்ர மருமக என்னடா இத்தனை அழகா இருக்குறா. எனக்கே அவ கன்னத்தை கிள்ளோணுமோட்ட இருக்குது” என்று மகனிடம் சாரதா சொல்ல,
“ம்மா! பேசாம சாமி கும்புடுங்க ம்மா” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு கண்மூடி நின்றுகொண்டான்.
“தமிழு! அடுத்த திருவிழாவுக்கு நீயும் உன்ர புருசனும் ஜோடியா வந்து சாமி கும்பிடோனும்னு வேண்டிக்கோ” என்று கண்மூடி நின்றிருந்த அருந்தமிழின் காதில் நாயகி சொல்ல, கண்திறவாது லேசாய் தலையசைத்தாள்.
“என்ன ஆத்தா அக்கா காதை கடிக்குறீங்க” என அரசி நாயகியை நோண்ட,
“அடுத்த திருவிழாவுக்கு அவ புருசனோட வந்து நிக்கோனும்னு வேண்டிக்க சொன்னேன் கண்ணு. நீ அடுத்த வருஷம் வேண்டிக்கலாம்” என,
‘அட ச்சை’ என கண்களை மூடிக்கொண்டாள்.
தனக்கானவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று தன் மனதில் எண்ணிப் பார்த்து, அந்த எண்ணத்திற்கு உயிர் கொடுத்து, உருவம் கொடுத்து, அந்த உருவத்தைக் காண முயன்று கொண்டிருந்தாள் அருந்தமிழ்.
அவ்வுருவத்தை அவள் காண நேர்கையில் ஆலயமணியின் ஓசையில் சிந்தனை கலைந்து கண்திறந்தாள். அவளுக்கு நேர் எதிரில் அவள் மனம் கொண்ட உருவமே அங்கு உயிர்கொண்டு நின்றிருந்தது.
விழிவிரித்துப் பார்த்திருந்தாள். அதே ஆலைய மணியின் ஓசையில் கண்திறந்த மாறனும் அவனுக்கு நேர் எதிரில் இருந்த தமிழைப் பார்க்க, என்றுமில்லாமல் இந்நொடி அவள் பார்வை அவன் மேல் ஆர்வமாய் படிவதுபோல் பட்டது.
“நல்லா வேண்டிகிட்டையா தமிழு. போலாமா?” என்று நாயகி கேட்கவும், மாறனிடம் இருந்து பார்வையை பிரித்தெடுத்தவள் தன் அப்பத்தாவோடு நகர்ந்தாள்.
பூவோடு ஏந்திய பக்தர்கள் ஊர் முழுவதும் வலம் வந்துவிட்டு இறுதியாக கோவிலுக்குள் நுழைந்தனர். அனல் பறக்க பக்தி பரவசத்தோடு வருவோரை கண்டதும் அவர்களுக்கு வழிவிட்டு இருபுறமும் பிரிந்து நின்றனர் அங்கிருந்த மக்கள்.
மறுபுறம் கோவில் மண்டபத்தில் கரகாட்டம், ஒயிலாட்டாம், புலியாட்டம் என்று அனைத்தும் முடிந்திருக்க அடுத்த பெண்களின் வள்ளி கும்மியாட்டம் துவங்கியது.
பெண்கள் எல்லாம் அணிவகுத்து நின்றிருந்தனர். அருந்தமிழையும் பாரம்பரியமான வள்ளி கும்மியில் சென்றாடுமாறு நாயகி அனுப்பிவைத்தார். அரும்புமே அவர்களோடு இணைந்திருக்க, அரசி மட்டும் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
“வெளிநாட்டுல படிச்ச அம்மணி வள்ளி கும்மி ஆட எல்லாம் வருவாங்களா” என்று ஒருவர் சொல்ல, உடனே தன் புடவை முந்தியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு புயலெனக் கிளம்பியது புலி.
அடுத்து அனைவரும் வள்ளி கும்மிப் பாடலை பாடியபடி ஆட்டத்தைத் துவக்க, நாயகி தான் தன் சின்னப் பேத்தியின் ஆட்டத்தைப் பார்த்து வாயடைத்துப்போய் நின்றிருந்தார்.
வேங்கையரசி, தான் ஆடும் ஆட்டத்தால் கூட்டத்திலும் தனித்துவ அழகுபெற்று தெரிந்தாள்.
இதுநாள் வரையில் சிறுபிள்ளை போல் தெரிந்தவள் இப்போது முதல் முறை புடவையில் வளர்ந்த பெண்ணாய் தெரிந்தாள். அதுவும் அவள் கைகளை அசைத்து பாடலுக்கேற்ப தாளம் தப்பாது ஆடுகையில் என்னவொரு நெளிவு சுளிவு! அவள் முகத்தில் தோன்றிய மிளிர்வை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவளா இவள்? கொஞ்சமும் செருக்கில்லாத நிமிர்வும் மிளிர்வும் தான் அவளிடம் குடிகொண்டிருக்கிறது. தன்னம்பிக்கையும் தைரியமும் என்றும் குறைய வாய்ப்பில்லை அவளிடம்.
இப்படி அணுஅணுவாய் ஆராய்ந்து அவளை ரசிப்பவர் யாரோ? வேறு யாராக இருக்க முடியும் விக்ரம பாண்டியனைத் தவிர!
எதேர்ச்சையாக கூட்டத்தில் பார்வையை வைத்த அரசியோ, விக்ரமன் தன்னை பார்ப்பதைக் கண்டுகொண்டாள். சில நொடிகளில் மீண்டும் அவன் புறம் பார்க்க, அவன் அப்போதும் அப்படியே பார்த்திருந்தான்.
ஆடியபடியே அவனைக் குறுகுறுவென பார்க்க, உடனே தன்னை இயல்பாய் இருப்பவன் போல் காட்டிக்கொண்டு, அவளை விடுத்து தன் அருகிலுருப்பவரிடம் ஏதோ பேச, அதில் அரும்பிய லேசான புன்னகையுடன் தன் ஆட்டத்தைத் தொடர்ந்தாள் அரசி.
குலசேகரன் தன் அக்கா மகளைத் தான் பார்த்திருந்தான். அதுவரை சரியாய் ஆடிக் கொண்டிருந்த அரும்பு, அவன் தன்னைப் பார்ப்பதை அறிந்து தாளத்தைத் தப்ப விட்டு, ஆட்டத்தைப் பாதியில் விட்டாள். மறுநொடியே சுதாரித்து தாளத்தைப் பிடித்துக்கொண்டு சரியாக ஆடத் துவங்கினாள்.
அருந்தமிழின் வள்ளி கும்மி ஆட்டத்தை மாறனைக் காட்டிலும் ரசித்துப் பார்த்திருந்தார் சாரதா. அவர் மனம் வெகுவாய் நிறைந்திருந்தது. திருவிழா முடிந்ததும் உடனே இருவருக்கும் சம்பந்தம் பேசி முடித்துவிட வேண்டும் என்று எண்ணினார்.
அனைவரும் ஆடல் பாடலில் லயித்திருந்த வேளையில்,
“நிறுத்துங்கடா..!” என்று வந்தது ஒரு பெருங்குரல்.
அக்குரலுக்கு இசைந்து, அதுவரை இசைத்துக் கொண்டிருந்த வாத்தியங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டது. அனைவரும் குரல் வந்த திசையில் நோக்க, தலையை விரித்துப் போட்டு சாமியாடத் துவங்கிருந்தார் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.
அனைவரது பார்வையும் அப்பெண்ணிடத்தில் என்றால் விக்ரமன், குலசேகரன், ரங்கநாயகி, அருந்தமிழ், முத்துலட்சுமி மற்றும் ஆறுச்சாமியின் பார்வை என்னவோ வேங்கையரசியின் மீது தான் பதிந்திருந்தது.