செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 29_1
தில்லி, விடியற்காலை நான்கு மணி, துளசி அறை:
“கோமல்.. கதவ திற!” கூடவே கதவு தட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
கதவு தட்டப்படும் ஓசை, எங்கோ.. யாரோ.. கிணற்றிலிருந்து ஒலி எழுப்புவது போல் இருக்க.. கண் திறந்தாளில்லை. ஒரு நாள் மனப்போராட்டம்.. துளசியைச் சாய்த்துவிட்டிருக்க அவளையும் அறியாமல் இரண்டு மணியளவில் கண்ணயர்ந்துவிட்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
நொடிகள் கழியும்முன்.. கண் பட்டென்று திறந்தது. அனைத்தும் வரிசை கட்டி நினைவில் வந்தது. இன்று தானே..? ஆம் இன்றே தான் என்றது அறிவு!!
“கோமல்.. கதவ திற!” என்ற விளிப்போடு.. படபடவென கைகள் கதவில் இடிக்க.. அது எல்லாம் தலையில் இடிப்பது போன்ற தலைப்பாரம்! இந்த உடலுக்குப் புரியவே புரியாதா மனிதனின் அவஸ்தை? ‘இருக்க வலி பத்தாதுன்னு இது வேற நேரங்காலம் இல்லாமா?’. தலையைத் தாங்கி பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தவள் நிலை புரியாமல் வெளியே மாதுரி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்.
குளித்து புது உடையின் நின்றிருந்த மாதுரி, அறைக்குள் நுழைந்து கொண்டே, “நீ இன்னும் குளிக்கலியா? சீக்கிரம் குளி.. இந்தா இது தான் நீ உடுத்த வேண்டியது. நகை எல்லாம் உன் கிட்டத் தானே இருக்கு…?”
ஓடி ஒளிய பிணைக்கு (பெண் மான்) இடமில்லை இந்த கானகத்தில். ஏனோ பெண் மானுக்கு, கொம்பும் சிறியது போதும் என்று இறைவன் நினைத்துவிட்டான். மானாய், கண்ணுக்கு விருந்தாய் துள்ளிக் குதிக்கத் தோன்றவில்லை பெண்ணிற்கு. சிங்கமாய்.. பெண்சிங்கமாய் போராட துணிந்தாள்.
“பச்… ஆறு மணிக்கு தானே கல்யாண படலம் ஆரம்பிக்குது? அதுவும் மதுவுக்கு? என்னை எதுக்கு நாலு மணிக்கு எழுப்பணும்? எனக்கு இது எல்லாம் வேண்டாம். நான் வேணும்னா.. நல்லதா ஒரு புடவ கட்டிக்கிறேன். தாலி கட்டுக்கு, அட்சதை தூவ கீழ வரேன்.. அதுக்கு முன்ன யாரும் என்னைப் பாடா படுத்தாதீங்க. எனக்கு தலை வலிக்குது.. தூங்கணும்.”
இவள் பேசியது அவள் காதில் விழவில்லையா? விழுந்ததற்கான அறிகுறி இல்லை.
“ஒரு மணி நேரம் முன்னாடியே வந்து கதவ தட்டினேன். நீ எழும்பல! இதுவே லேட். இன்னும் அரை மணி நேரத்துல ஒரு பொண்ணு வருவா. அவ வந்து உனக்கு ட்ரெஸ் பண்ணி விடுவா. அதுக்குள்ள குளிச்சு, தலையை காயபோடு. தங்க கல்யாணத்துக்கு அழகா வரவேண்டாமா? நமக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கு. அத காப்பாத்த வேண்டாமா? சீக்கிரம் ரெடி ஆகு.” கூறியவள் சென்றுவிட.. துளசிக்கு அப்படி ஒரு கோபம்.
கட்டிலிலிருந்த சிகப்பு துப்பட்டாவும், பாவாடையும், ரவிக்கையும் கண்ணைப் பறித்தாலும் அவள் கண்ணுக்கு மிகவும் அருவருப்பாக தோன்ற.. கிலோ கணக்கில் கனத்த துணியைக் கையில் எடுத்துத் தூர எறிய.. மூன்று பக்கமாக விழ.. அதிலிருந்த மணியும் கற்களும் அறை முழுவதும் சிதறியது.
[the_ad id=”6605″]
“யாருக்கு யார் கல்யாணம் பண்ணி வைக்கிறது?” கதவைப் பூட்டியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள். விட்ட துக்கம்.. மறுபடியும் ஒட்ட மறுத்தது. குளித்து வந்தவள் பெட்டியிலிருந்து எடுத்தது, மூர்த்தி அவளுக்கு விரும்பி வாங்கி வந்த பிங் நிற கரை வைத்த புடவையை. “இன்னைக்கு மாத்திர வாங்க போன போது.. பக்கத்து கடையில் ஒரு பொம்மை பொட்டிருந்துது. பார்த்ததும் ரொம்ப பிடிச்சுது துளசி மா. பன்னீர் ரோஜா உனக்குத் தான் ரொம்ப பிடிக்குமே.. அதே கலர். பிடிச்சிருக்கா? உனக்கு பிடிச்ச கலரா காலேஜுக்கு போட்டுக்கோ துளசி… எதுக்கு எப்பவும் மஞ்சள் உடுத்தற?” மூர்த்தி கூறியது நினைவை வருட.. புடவையை வருடினாள்.. பட்டு போன்ற துணியில் கை வழுக்கிக்கொண்டு போனது.
அவளுக்குப் பிடிக்காத எதையுமே மூர்த்தி திணித்தது இல்லை. தலையில் வைக்கும் பூவிலிருந்து காலில் போட்டுகொள்ளும் கொலுசு வரை எல்லாம் அவள் விருப்பம் தான். ‘எல்லாத்துக்கும் பிடிக்குதா துளசிமா.. பிடிக்குதா துளசிமா-ன்னு கேட்டு கேட்டு செய்துட்டு… என் பேச்ச கேக்க வேண்டிய விஷயத்துல கோட்ட விட்டுடீங்களே மூர்த்தி சார். பச்!’ மனம் அலுத்துக்கொண்டது.
புடவையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ‘வாழ்ந்தா உங்க கூட மட்டும் தான் மூர்த்தி சார். பயமா இருக்கு மூர்த்தி சார். உங்க கூடவே வாழணும்ன்னு இந்த வீட்டுல வச்சு தான் ஆசை வந்துது. இப்போ இங்கேயே என் ஆச எல்லாமே சமாதியா ஆகிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு மூர்த்தி சார்.’
சிறிது நேரத்தில் மாதுரி வருவாள். மறுக்கும் பட்சத்தில்? மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு ஜன்னல் வழியே புலர்ந்துகொண்டிருக்கும் காலைப் பொழுதை வேடிக்கை பார்த்தாள். இரண்டு வருடம் எத்தனை அழகான வாழ்க்கை வாழ்ந்தாள்? நடுவே வந்த ஐந்து மாதம் கூட மறக்க வைத்துவிட்டானே.. இன்று?
மாதுரி மீண்டும் வந்தாள்.. கசிந்த கண்களோடு.. “மது வீட்டை விட்டு போய்டா… குடும்ப மானம் உன் கைல தான். உன் அப்பா உங்கிட்ட பேசணுமாம்.. கூப்பிட்டார். அவர நீ தான் படுக்க வச்ச. இப்போ அதுக்கு பரிகாரமா அவர் உயிர விட்டுவை” என்றாள்.
புரட்டிக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து சாவகாசமாகக் கண்ணை எடுத்தவள், “எனக்கு தெரியும்னு உங்களுக்கு தெரியும்னு எனக்குத் தெரியும். சும்மா வேஷம் போட வேண்டாம். மானம் போகாம இருக்கணும்னா.. ஊருக்கு எல்லாம் சொன்ன மாதிரி மதுவ கூட்டிட்டு வந்து மணமேடைல உக்கார வைங்க! உங்க பேராசைக்கு நான் ஆளில்ல.” என்ற துளசியிடம் அப்பொழுதும் நல்லவள் வேஷம் தான் மாதுரி போட நினைத்தாள்.. ஆனால் கீழே கிடந்த ஆடையைப் பார்த்தவள் கண்களில் அப்படி ஒரு கோபம்.
“மயிலே மயிலே இறகு போடுனா.. அது இறகு போடாதாம். இது என் வீடு. ஒரு குண்டு மணி கூட என் அனுமதி இல்லாம அசையாது. இங்க உனக்குன்னு தனியா விருப்பமோ எண்ணமோ கூடாது. ஒரு மணி நேரத்தில நீயே மணமேடைல வந்து உக்காருவ பாரு.. இல்ல இங்கேயே முகூர்த்த நேரத்துக்கு முன்னயே உனக்கு நல்ல காரியம் நடக்கும்!” சவல் விட்டு சென்றவள் மீண்டும் வந்தாள் துணையோடு.. சவாலை நிறைவேற்றும் எண்ணத்தோடு! ஆனால் கட்டிலில் படுத்து, படிக்காமலே பதட்டத்தோடு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தவள்.. கதவைத் திறந்தால் தானே?
கீழிருக்கும் கூட்டமும், ஒரு மரக்கதவும் தன்னை காத்துவிடும் என்ற நப்பாசையில் துளசி!
தில்லி, விடியற்காலை நான்கு மணி, நான்கு நட்சத்திர விடுதி:
ராஜன் வீட்டிலிருந்து பத்து நிமிட தொலைவிலிருந்த விடுதி ஒன்றில் தூக்கமில்லாமல் விடியலை எதிர்நோக்கிப் படுத்திருந்தான் மூர்த்தி.
துளசியிடம் பேசி, நாள் நான்கு ஆகியிருக்க… மனதில் ஒரு நெருடல். போதாக் குறைக்கு பானு ஊருக்கு வரக் கூறியதும், ‘துளசி உனக்கு வேண்டாம்’ என்று கூறியதும் மனதை விட்டு நகர்வேனா என்று சட்டமாய் அமர்ந்துகொண்டது.
[the_ad id=”6605″]
அக்காவை ரயில் ஏற்றிவிட்டவன் இரவே முடிவெடுத்துவிட்டான்.. மறு நாளே தில்லி வந்து துளசியைக் கூட்டிச் செல்வது என. நேற்று காலை அலுவலகம் செல்லும் முன் அழைத்தும் பார்த்தான்.. தொலைப்பேசி எப்பொழுதும் பயன் பாட்டிலேயே இருக்க துளசியோடு பேச முடியவில்லை. என்றுமில்லாமல் நேற்று மனம் பிசைவது போன்ற உணர்வு. இதயத்தில் ஒரு வித அழுத்தம். அவனால் எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் போக, ரயில் பயணத்தை ரத்து செய்து நேரே சென்றது விமான நிலையத்திற்குத் தான்.
மாலை கிளம்ப இருந்த விமானம் ஏதோ பழுதின் காரணமாக சில மணி நேர தாமத்தோடு நள்ளிரவு வந்து சேர்ந்தது. நடு ராத்திரி மாமனார் வீட்டுக் கதவைத் தட்டி நிற்க மனமில்லை.. எப்படியும் அங்குத் தங்கும் எண்ணமெல்லாம் இல்லை. விடுதியில் வந்து படுத்தவன்.. காத்திருக்கிறான் விடிவதற்காக. பத்து நிமிட தொலைவில் இருந்தாலும் ஏனோ மனம் சமன் பட மறுத்தது. ஏதோ உள்ளுக்குள் அழுத்திக்கொண்டே இருக்க அந்த உணர்விற்கான அர்த்தம் புரியவில்லை. துளசி வேண்டும்.. அது மட்டும் தான் அவன் எண்ணம். இப்பொழுதே தூக்கி வந்துவிடுவான்.. ஆனால் மரியாதையின் நிமித்தம் விடிலை நோக்கி காத்திருக்கிறான்.
காலை ஏழு மணியளவில் சென்று துளசியைப் பார்க்கும் ஆவலில்.. மனம் முழுவதும் துளசியை தாங்கி.. மெத்தையில் அசைவின்றி மூர்த்தி!