அ35-2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
Post Views:233
கொல்லை துளசி எல்லை கடந்தால் 35
நீண்ட இரவில், காதலோடு காமம் கலந்து, முற்றிலுமாக ஒருவரை மற்றவருக்குள் தொலைத்துக் கொண்டிருக்க, மெத்தை ஓரத்தில் கிடந்த கைப்பேசியும் ஓயாமல் அடிக்க… அதன் சத்தம், விழியை உலகிற்குள் தள்ளியது.
“மனோ…”
“ம்ம்”
“ஃபோன் சத்தம் இரிடேட் பண்ணுதுப்பா”
“ம்ம்ம்…” தன்னை முற்றிலும் அலர்விழிக்குள் தொலைத்திருக்க, அவள் பேசியதும் கேட்கவில்லை.. கைப்பேசியின் ஒலியும் மனோவை நிறுத்தவில்லை.
கைநீட்டி கட்டில் ஓரம் கிடந்த கைப்பேசியை எடுத்தவள் அதை அணைத்து ஓரம் போடத்தான் எண்ணினாள். மனோ செய்த சில்மிஷத்தில் பெண் நெளிய, கை எக்குத்தப்பாகக் கைப்பேசி திரையில் பட்டுவிட, அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது. ‘இவர் ஏன் இந்த நேரம்?’
எல்லைகளை எல்லாம் கடக்கும் வேளை நந்தியாய் அழைப்பவரிடம் பேசும் நோக்கம் பெண்ணிற்கு இல்லை. இருந்தாலும் ஏதேனும் கூறி தானே தொடர்பைத் துண்டிக்க வேண்டும்!
‘மனோ 2மினிட்ஸ்’ என்ற வாயசைவை பார்த்தாலும் அதற்கு மதிப்பு தரும் தருணத்தை கணவனாய் மனோ தாண்டியிருந்தான்.
அவஸ்தையோடு கைப்பேசியும், இன்ப அவஸ்தையோடு மனோவும் போட்டிப்போட… “.அத்த…” என்றாள். ‘ஒரு பத்து நிமிஷத்தில் கூப்பிடுறேன்’ என்று வைக்கத் தான் நினைத்தாள். ஆனால்… அழைத்தவர் பேசினார். இவள் கேட்டாள். கேட்டவளுக்குள் நெருப்பான வார்த்தைகள் இறங்கி அவளை பொசுக்கிக் கொண்டிருந்தது.
மறுபக்கம் நிறுத்தாமல் பேசிகொண்டே போக, இவள் கைப்பேசியை அணைத்து ஓரம் வைத்தாள். இரண்டு நீள நிமிடங்கள் அமைதி காத்தாள்.
செவ்வாய் அன்று காலை கண்விழித்த நேரத்திற்கு மனம் சென்றது. அவள் இருந்த கோலமும் மனோ இருந்த நிலையும் இன்று புரிந்தது. பிரவீன் அனுப்பிய செய்தியின் அர்த்தம் நெருப்பாய் உள்ளுக்குள் எரிந்து பெண்ணை ஒட்டு மொத்தமாகப் பொசுக்கியது.
மனோவை பார்த்தாள். நேற்று வரை, வலியை முற்றிலும் தனதாக்கி, பைத்தியம் போல் சுற்றினானே! இதற்குத்தான் இந்த அவசர திருமணமா?
கண்களில் நீர் துளிர்த்தது. துளிர்த்த வேகத்தில் அது பெருகி காது மடலைத் தொட்டது.
மூக்கு விடைக்க, “மனோ..” என்றாள். வாழ்க்கையில் இப்படி ஒரு ஏகாந்த நிமிடத்தில், இப்படி உயிரைக் குடிக்கும் செய்தி அவள் காதில் விழுந்திருக்க வேண்டாம். விழுந்த செய்தி அவளை உயிரோடே கொல்ல, “மனோ” என்றாள்.
“வலிக்குதா டி..” குரலிலிருந்த மாற்றம் அப்படிக் கேட்கத் தூண்டியது.
இதழ் துடிக்க, “ம்ம்… ரொம்ப” என்றவள் குரலில் விசும்பல் எட்டிப் பார்த்தது.
“பட்டு… என்னடி?” அருகில் சரிந்தவன் மனைவி தலை வருட, உடைந்து அழுதாள். காமம்.. கற்பழிப்பு என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டதாய் இருந்தால் அவளும் ‘போங்கடா’ என்று துடைத்துப் போட்டு சென்றிருப்பாள்.
“பிடிக்கலியா… ஏன் டீ? திடீர்ன்னு என்ன ஆச்சு?” தவித்துப் போனான்.
“ஏன் மனோ? ஏன் மனோ நான்…? என்னை ஏன் மனோ? இப்பிடி உயிரோட நான் சாகிறதுக்கு, என்னை கொன்னுடுங்க மனோ” அழுகை கூரையைத் தொட… அவன் இதயம் நின்றது. கைப்பேசியில் யார் எதைக் கூறினார்கள்?
“பட்டு… யார் டீ ஃபோன்ல? ஏன் அழற?” கண்களைத் துடைத்துவிட, அது அருவியாய் மாறியிருந்தது.
முகம் உயர்த்தி, “ஃபோன்ல அவங்க சொன்னது… நான் புரிஞ்சுகிட்டது எல்லாம் பொய்ன்னு சொல்லுங்க மனோ!”
அவனிடம் பதிலில்லை. ‘ஐயோ பட்டே…’ அவன் மனம் உடைந்தே போனது. பாவி சொல்லியே விட்டானா? யாரிடமெல்லாம்? அவனைக் கொன்று போடாமல் போனேனே… மனம் குமுற, அருகில் கிடந்தவளுக்காக அணுவும் வலித்தது.
தன்னை ஒருமுறை பார்த்தவள், அந்த நிமிடமே செத்தேப் போனாள். இதே நிலையில் தானே மூன்று நாள் முன் தன்னை பார்த்தாள். அன்றைவிட இன்று அதன் தாக்கம் அதிகம்.
வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் முதல் இந்த நொடி வரை மனோவோடு நிகழ்ந்த யாவும் கண்முன் வந்தது. இன்ப தீண்டல்கள்… தேனாய் இவள், வண்டாய் அவன் தேடல்… வெட்கம் துரந்த கூடல்… தன்னை மறந்த ஏகாந்தம் இவை அனைத்தும்…? இவை அனைத்தும் இதே மெத்தையில் மூன்றே நாள் முன் வேறொருவனோடா?
அவமானம், அசிங்கம், அருவருப்பு அனைத்து ஒன்றாய் சேர்ந்து அடிவயிற்றைப் புரட்டிப்போட, போர்வையோடே குளியலறைக்குள் ஓடினாள்.
குடல், வாய் வழி வரும் சத்தம் வெளியே கேட்க, துடித்துப் போனான்.
அற்ப சுகம் காண, பார்க்கும் ஏதோ ஒரு பெண்ணின் தேகம் தீண்டிச் செல்பவனுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை… ஆனால் அவன் விட்டுச் செல்லும் தடம் உயிர் உள்ளவரைப் பெண்ணின் இயல்பைப் பாதிக்கும் என்பது அவனுக்கான செய்தி. எங்கோ… ஏதோ ஒரு பெண்ணை கண்டு வெறி தீர்த்த காலம் எல்லாம் எங்குச் சென்றதோ…? இன்றெல்லாம் சொந்த வீட்டினரிடமிருந்து பிள்ளைகளைக் காப்பதே பெரும் பாடுதான் சிலருக்கு!
“விழி.. ப்ளீஸ் கதவ திற” அவன் கெஞ்சல் எதுவும் அவள் காதில் விழும் நிலையில் பெண் இல்லை.
யார் அவளோடு பேசியது? என்ன பேசினார்கள்? எதுவும் தெரியவில்லை. அழைத்தது அம்பிகாவே தான்! அழைத்ததும் அவர் கைப்பேசி திரையில் வெண்பட்டில் மிளிர்ந்த அலர்வழியும் அவளோடு கோவில் முன் நின்றிருந்த நண்பர்கள் கூட்டமும் தெரிய, பற்களைக் கடித்தார். அவள் புடவையும், அலங்காரமும், அவள் முகப் பொலிவும்… ஏனோ அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படி வசிய சிரிப்பு சிரித்துத் தானே தன் மகனைப் படுக்கையில் போட்டாள், என்ற வெறுப்பு அவர் இயல்பை மாற்றியது.
மூன்று ஆண்களும் ஐந்து பெண்களும் புகைப்படத்தில் இருக்க, பிரவீன் கூறிய மனோவை கண்டுகொள்ள நேரம் எடுக்கவில்லை அம்பிகாவிற்கு. அழகிற்கும் ஆடம்பரத்திற்கும் தன்னை விற்று போட்ட ஒழுக்கம் கெட்ட பெண் மேல் பிரவீனுக்கு ஏன் இன்னும் ஆசை என்பதுதான் அவருக்குப் புரியவில்லை. கோபம் எல்லாம் தணலாய் பெண் தலையில் அவர் இறக்கியிருக்க, அதன் வெம்மையில் பொசுங்கிக் கொண்டிருந்தாள் கொட்டும் நீரின் கீழ் நின்றிருந்த அலர்விழி.
“ஃபோட்டோல உன் கூட நிக்கிறானே.. அவன் அழகில மயங்கினியா இல்ல அவன் உன் மேல வாரி இரைச்சிருக்க பணத்தில மயங்கினியான்னு தெரியல…! ஆனா அது எப்பிடி உன்ன மாதிரி பொண்ணுங்களால ஊர் பூரா ஜோடி போட்டு சுத்தினவன நாலே நாள்ல கழட்டி விட முடியுது? அதுவும் அவன் கூட… கல்யாணம் முன்ன வெக்கமே இல்லாம கூட படுத்த பிறகு? உன் கூட படுக்கையை ஷேர் பண்ணினவன் உன்னையே நினைச்சு உருக, நீ வேற ஒருத்தனை உரசிகிட்டு நிக்கிற! ச்ச… என்ன பொண்ணு நீ? உன் மேல எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தேன்! நீ இவ்வளவு தானா? ச்சி! இவனாது நிரந்தரமா இல்ல…இவனை விட பெட்டரா ஒருத்தனைப் பார்த்ததும் அவனையும் மயக்க கிளம்பிடுவியா?”
குத்தி கிழித்த வார்த்தைகள் உள்ளுக்குள், உறைந்த கூர் பனிகத்தியாய் இறங்கிக் கொண்டிருக்க, காயத்தின் ஆழம் அதிகமாகிக் கொண்டே போனது பெண்ணிற்கு. அழுகையும் நின்றபாடில்லை. வாந்தியும் நின்றபாடில்லை.
அவன் உயிரிலும் மேலான அவன் விழி படும் பாடு தெரிந்தும், கையாலாகதவனாய் இயலாமையோடு வெளியே நின்றிருந்தான் எபி.
அரை மணி நேரம்… சென்றது. வாந்தியும் கதறலும் நின்றிருந்தது. நீர் கொட்டிக் கொண்டே இருக்க, எபியை பயம் கவ்விக்கொள்ள ஆரம்பித்தது. ஏதேனும் செய்துகொள்வாளோ?
“விழி கதவ திற” கதவை அறைந்தான்.
“நீ திறக்கிறியா? இல்லா நானே திறக்கட்டுமா?”
“வேண்டாம்… வேண்டாம் போங்க! என்னை இப்பிடி நீங்கப் பாக்க வேண்டாம்… பாக்கவே வேண்டாம். என்னை விட்டுட்டு நீங்க போங்க மனோ” கத்தலாய் ஆரம்பித்து அழுகையாய் வெடித்தாள்.
“அப்பிடி எல்லாம் போக முடியாது. வாழ்க்கை முழுசும் கூடவே இருபேன். திற டி கதவ”
ஒற்றை சுவர் இருவரையும் பிரித்தது. நான்கடி தூரம் மிக நீளமாய் போனது. காத்திருந்தான்… பதிலில்லை. இறங்கிச் சென்று தூக்கி நிறுத்தவேண்டும் எனப் புரிந்தது. ஆனால் நிறுத்த வேண்டியது அவளை மட்டுமா இல்லை அவர்கள் உறவையுமா என்று தான் அவனுக்குத் தெரியவில்லை.
“சரி பாக்கல. நான் போறேன். நீ வா வெளியில” அதட்டல் கெஞ்சலாய் மாறியும் பயனில்லை.
நேரம் கடந்தது. குளியலறையில் அரவமில்லை, நீர் வழியும் சத்தம் மட்டுமே. படபடக்கும் இதயத்தோடே வெளியே காத்து கிடந்தவனுக்குத் தைரியம் வடிந்தது. எகிறிக் குதிக்கும் இதயத்தோடே கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன் கண்ட காட்சியில் உயிர் உறைந்து போக வினாடி எடுக்கவில்லை.