காதல் 11:
ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பியவர்கள், நேராக பாண்டியனின் வீட்டிற்கே சென்றனர். அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த மருந்து தற்சமயத்துக்கு அவளை அமைதியாக வைத்திருந்தது.
‘எங்க கூட்டிட்டு போவார்..? அவங்க வீட்டுக்கா..? இல்லை எங்க வீட்டுக்கா..?’ என்று வரும் வழியெல்லாம் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவளுக்கு, கார் அவர்கள் வீட்டின் முன்பு நிற்கும் போது தான் உண்மை உரைத்தது.
‘நீ என்ன எதிர்பார்க்குற மகா..? அதுக்குள்ள எப்படி, அவன் மேல உனக்கிருந்த கோபம் போகும்..?’ என்றது மனம்.
“அதான், எனக்கு ஒன்னுன்னதும் ரொம்ப துடிச்சாராமே..? எங்கம்மா சொன்னாங்க..” என்று மனதிற்குள் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“இறங்கு மகா..!” என்று ஈஸ்வரன் சொல்லும் வரை அவள் யோசனையில் தான் இருந்தாள். தயங்கித் தயங்கி அவனைப் பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல, அவளுடைய மருந்துகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டே அவன் பின்னே சென்றான்.
“வசுந்தரா அத்தைக்கு விஷயம் தெரியுமா ஈஸ்வரா..?” என்றான் சபரி.
“அவசரத்துல நான் ஒன்னும் சொல்லிட்டு வரலை மாமா. போய் சொல்லிக்கிறேன்..” என்றான்.
“என்ன மாப்ள நீ..? அவங்க என்னமோ ஏதோன்னு நினைக்க மாட்டங்க. நீ உள்ள போ. நான் அவங்களுக்கு தகவல் சொல்லிட்டு வரேன்..” என்றான் சபரி.
“உள்ள போய் படுத்துக்க மகா..” என்று கமலா சொல்ல, அவளின் அறைக்குள் சென்று விட்டாள். ஏனோ ஈஸ்வரனை இரண்டு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல, அவள் பார்ப்பதும் தெரிந்தும் அமைதியாகவே இருந்தான் ஈஸ்வரன். அவள் உள்ளே சென்றதும்,
“இதுக்கு முன்னாடி மகாவுக்கு இப்படி ஏதாவது பிரச்சனை நடந்திருக்கா மாமா..” என்றான் பாண்டியனிடம்.
“முன்னாடி எப்பவாவது மயக்கம் வரும் மாப்ள. ஆனா சாதாரண மயக்கம் தான். உடனே தெளிஞ்சுடும். நிவேதா இறந்ததுல இருந்து தான் இப்ப அடிக்கடி வருது..” என்றார் பாண்டியன்.
“இதுக்கு முன்னாடி எப்ப வந்தது..?” என்றான்.
“உங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி..” என்றார்.
“டாக்டர் கிட்ட காட்டுனிங்களா..?” என்றான்.
“கல்யாணத்தை வச்சுகிட்டு வெளிய கூட்டிட்டு போக முடியலை மாப்ள. இங்க பக்கத்துல இருக்குற கிளினிக்ல காட்டினோம். டென்ஷன் தான் வேற ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்க..” என்றார்.
“ஹோ..!சரி..” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டான். ஆனால் பாண்டியனுக்கு இன்னமும் ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஏதோ ஒன்று அவரை சொல்ல விடாமல் தடுத்தது.
கமலா குடுத்த காபியை குடித்துக் கொண்டிருக்கும் போதே, சபரியும் உள்ளே வந்துவிட்டான்.
“அத்தைகிட்ட சொல்லிட்டேன் மாப்ள. மஞ்சரியும் அத்தையும் கிளம்பி வர்றதா சொன்னாங்க..” என்றான் சபரி.
“சரி மாமா.. நீங்க பேசிட்டு இருங்க..” என்றவன் ஒரு முடிவுடன் எழுந்து மகாவின் அறைக்குள் சென்றான்.
முதல் நாள் அவனுடன் சரிக்கு சரி வாயடியவள் என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு அமைதியுடன் படுத்திருந்தாள். ஈஸ்வரன் உள்ளே வந்ததும் அவள் எழுந்து உட்காரப் போக,
“பரவாயில்லை படுத்துக்க..” என்றான்.
“இல்ல, நான் உட்கார்றேன்..” என்றாள்.
“எனக்கு கொஞ்சம் பேசணும்..” என்றான்.
“என்ன பேசணும்?” என்றாள் வேகமாய்.
“அமைதியா கேட்குறதா இருந்தா பேசுறேன். இல்லைன்னா நான் கிளம்புறேன்..” என்றவன் திரும்பப் போக, அவனின் கையைப் பிடித்தாள்.
கையையும், அவளின் முகத்தையும் மாறி மாறி பார்த்தவன்,
“என்ன?” என்றான்.
“நீங்க பேசுங்க..! நான் அமைதியா இருக்க முயற்சி பண்றேன்..” என்றாள்.
கட்டிலில் அவள் அருகிலேயே அமர்ந்தவன், சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை.
“எதோ பேசனும்ன்னு சொன்னிங்க..?” என்றாள்.
“என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..?” என்றான் அமைதியாக.
“என்ன தெரியாது..? உங்களைப் பத்தி எல்லாமே தெரியும்..” என்றாள்.
“அது தான் என்ன தெரியும். அதை கொஞ்சம் சொல்லேன்..” என்றான்.
“நீங்க ஒரு காட்டு மிராண்டி. ரொம்ப கோபக்காரர். எங்க அக்காவை அவ புருஷனே கொன்ன மாதிரி தான் நீங்களும் உங்க பொண்டாட்டியை கொன்றுப்பிங்க..உங்க அக்காவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது.. நீங்க அதிகம் படிக்கவுமில்லை…” என்றாள்.
“இது தான் என்னைப் பத்தி உனக்குத் தெரிஞ்சதா..?” என்றான்.
“ஆமா..!” என்றாள்.
“எப்படி இதெல்லாம் உனக்குத் தெரியும்..?” என்றான்.
“உங்களைப் பார்த்தாலே தெரியுதே..?” என்றாள் படக்கென்று.
“நீயும் நாலு பேரை லவ் பண்ணி கழட்டி விட்டுட்டியாமே..?” என்றான் அவனும் பட்டென்று.
“என்ன சொல்றிங்க..? நீங்க எப்படி அப்படி சொல்லலாம்..? நீங்க பார்த்திங்களா..?” என்று அவள் கோபத்துடன் சொல்ல,
“உன்னைப் பார்த்தாலே தெரியுதே..” என்றான் அவனும் அவளைப் போலவே.
அவள் வாய் அப்படியே மூடிக் கொண்டது.
“இங்க பார்.. பார்க்குறதை வச்சு யாரையுமே எடை போட முடியாது. உன்னோட அனுமானத்துல நான் கெட்டவனா இருந்தா நான் என்ன பண்ண முடியும்..?” என்றவன்,
“நான் என்ன படிச்சிருக்கேன்னு நினைக்கிற..?” என்றான்.
“தெரியலை..” என்றாள். அவளுக்குத்தான் உண்மையாகவே தெரியாதே.
“நல்லது.. சரி அதை தெரிஞ்சுக்கவாவது முயற்சி பண்ணியிருக்கியா..?” என்றான்.
“இல்லை..!” என்றவளின் தலை குனிந்து கொண்டது.
“சரி உன்னோட பேச்சுக்கே வரேன். உங்க அக்கா சூசைட் பண்ண உடனே, நீ கோபப்பட்டு போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்த இல்லையா..?” என்றான்.
“ஆமா..!” என்றாள்.
“அப்போ, நான் அனிதாவை அப்படி பண்ணியிருந்தா, அவங்க அப்பா,அம்மா கம்ப்ளைன்ட் குடுத்திருப்பாங்கல்ல. ஏன் குடுக்கலை..?” என்றான்.
“நீங்க மிரட்டியிருப்பிங்க..?” என்றாள்.
“இங்க பார்..நாங்க எதிர்பார்த்ததை விடவும் அவங்க நல்லா தான் செஞ்சாங்க. ரொம்ப வசதியான குடும்பமும் கூட. அனிதா வீட்டுக்கு ஒரே பொண்ணும் கூட. எனக்கு பணம், சொத்து தான் பெருசுன்னா, நான் அவளை வச்சு அவங்க சொத்தையெல்லாம் அனுபவிச்சிருக்கலாம் இல்லையா..?” என்றான்.
“ஆமா..” என்றாள்.
“அதையெல்லாம் விட்டுட்டு, நான் ஏன் கொலை பண்ணனும்..?” என்றான்.
“அதான ஏன் கொலை பண்ணனும்..?” என்றாள் அவளும்.
“இனி நான் இதைப் பத்தி பேச மாட்டேன். அனிதாவோட சாவு, அவளே தேடிகிட்டது. அது ஒரு தற்கொலை. எனக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது. அன்னைக்கு நேரம் நல்லா இல்லைன்னு பர்ஸ்ட் நைட் கூட நடக்கலை. நான் சபரி மாமா கூடத்தான் அன்னைக்குத் தூங்குனேன். உனக்கு சந்தேகம்ன்னா நீ அவரையே கேட்டுப் பாரு.. அனிதா தற்கொலை பண்ணது எனக்கே அதிர்ச்சி தான். தேவையில்லாம இதைப் பத்தி யோசிச்சு, உன்னோட டென்சனை கூட்டிக்காத..” என்றான்.
“நிஜமாவாங்க..!” என்றவள், அவனின் கையை வேகமாகப் பிடித்துக்கொள்ள,
“நம்பு மகா. நான் சொல்றது எல்லாமே உண்மைதான். நான் இவ்வளவு பொறுமையா உட்கார்ந்து பேசுற ஆளெல்லாம் கிடையாது. நீ டென்சன் ஆகுறது உன்னோட ஹெல்த்க்கு நல்லது இல்லை. நீ பெருசா, நான் பெருசான்னு சண்டை போடுறதுல எனக்கு பெருசா நம்பிக்கை கிடையாது. என்னோட பக்கத்தை உனக்கு தெளிவா புரிய வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. நானும் எல்லாத்தையும் சொல்லிட்டேன். இனி இதுக்கு மேல உன்னோட விருப்பம்..” என்றவன், அங்கிருந்து கிளம்ப முயல, அவளோ கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள்.
“இன்னும் என்னடி..?” என்றான்.
“நானும் வரேன்..” என்றாள்.
“இல்லை வேண்டாம். நீ இங்கயே இரு. நல்லா யோசி. எது தப்பு எது சரின்னு நிதானமா யோசி. ஒன்னும் அவசரம் இல்லை. இனி நீ அங்க வர்றதா இருந்தா என்னோட பொண்டாட்டியா தான் வரணும்..” என்றான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கும் அவளை விட்டு வருவது கஷ்ட்டமாகத் தான் இருந்தது. அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை. அதற்குள் வசுந்தராவும், மஞ்சரியும் வந்துவிட்டிருந்தனர்.
“என்ன ஈஸ்வரா..? எதையுமே சொல்ல மாட்டியா நீ..? எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நாங்களும் வந்திருப்போம்ல..” என்று வசுந்தரா கேட்க,
“சொல்லக் கூடாதுன்னு இல்லம்மா. பதட்டத்துல அப்படியே வந்துட்டேன்..” என்றான்.
“இப்போ மகா எங்க..?” என்றனர்.
“உள்ள இருக்காம்மா. நீங்க பார்த்துட்டு சபரி மாமா கூட வாங்க. காரை விட்டுட்டு போறேன்.” என்றவன், சபரியின் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
“இப்பவும் இவன் மட்டும் தான் கிளம்பிப் போறான், மகா வரலையா..?” என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டார் வசுந்தரா.
மாமியாரையும், நாத்தனாரையும் பார்த்த மகா தலையை குனிந்து கொண்டாள்.
“இப்போ எப்படி இருக்கு மகா..?” என்றார் வசுந்தரா.
“இப்போ ஓகே தான் அத்தை..” என்றாள் அமைதியாக.
“உடம்பைப் பார்த்துக்கோமா..!நல்லா சத்தானதா சாப்பிடு.” என்று வசுந்தரா சொல்லிக் கொண்டிருக்க, மஞ்சரி எதுவுமே பேசவில்லை.
“ஏன் சித்தி அமைதியா இருக்கீங்க..?” என்றாள் மகா.
“எதுக்கும்மா வம்பு. நான் வாயைத் திறந்தா ஏதாவது சொல்லுவேன். அதுக்கும் ஒரு பிரச்சனையைக் கூட்டுவ நீ. இதெல்லாம் தேவையா எனக்கு. தம்பி பொண்டாட்டிங்கிற முறைக்கு பார்க்க வந்தேன். வராம இருந்தா அதுக்கும் ஒரு பேச்சு வரும்..” என்றாள் மஞ்சரி பட்டென்று.
மஞ்சரி அப்படி பட்டென்று சொன்னது அவளுக்கு ஒரு மாதிரி தான் இருந்தது. ஆனால் அவள் சொல்வதும் உண்மைதானே. அவர் பேசினாலே மகாவுக்குப் பிடிக்காதே. அதாவது அறிவுரை சொன்னாலே.
“நான் அப்படி நடந்துகிட்டது தப்புத்தான் சித்தி. அதுக்காக இப்படி யாரோ மாதிரியெல்லாம் பேசாதிங்க..” என்றாள் மகா.
“வேண்டாம் மகா. நீ எப்ப, எப்படி பேசுவான்னு தெரிஞ்சு புரிஞ்சு பேச நான் ஒன்னும் ஈஸ்வரன் கிடையாது. எனக்கு இப்படி பேசித்தான் பழக்கம்.. உடம்பைப் பார்த்துக்க..” என்றவள் வெளியே வந்துவிட்டாள்.
“காயத்ரி எங்க மஞ்சு..?” என்றார் கமலா.
“காலேஜ் போயிருக்காக்கா..” என்ற மஞ்சு கமலாவிடமும் அதிகம் பேசாமல் இருக்க,
“எங்கமேல எதுவும் கோபமா மஞ்சு..?” என்றார் கமலா.
“இருக்காத பின்ன..? அங்க என் தம்பி, உக்கி உருகிப் போயிருக்கான். இவ பேசாம இங்க வந்துட்டா. அங்க அவனோட நிலைமையைப் பத்தி யோசிச்சுப் பார்த்தாளா இவ..? என்னமோ என் தம்பி, உங்க காடு கரையை எல்லாம், அவன் பேர்ல எழுதி வாங்கிக்கிட்டான்னு பேசிட்டு இருக்கா உங்க மகா. உண்மையை என்னன்னு சொல்லி புரிய வைங்க. அது தான் எல்லாருக்கும் நல்லது. ஒருத்தர் மாதிரி ஒருத்தர் இருக்க மாட்டாங்க. ஈஸ்வரனை தெரிஞ்சவங்களுக்கு அவனைப் பத்தி தெரியும். தெரியாதவங்க என்ன நினைப்பாங்க..? உண்மையாவே என் தம்பியைத் தான தப்பா நினைப்பாங்க. அவன் வேணும்ன்னா அமைதியா இருந்து தியாகிப் பட்டம் வாங்கிக்கலாம். நான் அப்படி கிடையாது.
வாழப் போற வீட்ல முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும். எதையுமே அர்ஜஸ் பண்ணித்தான் வாழப் பழகிக்கணும். மகாவுக்கு அப்படியும் கூட இல்லை. எங்கம்மாவும், தம்பியும் அவளைத் தாங்குறாங்க. இதுக்கு மேல என்ன வேணும் அவளுக்கு. நாங்க ஒரு வார்த்தை சொன்னா பொறுக்காத ஈஸ்வரன், உங்க பொண்ணு அவ்வளவு பேசியும் அமைதியா போறான்னா என்ன அர்த்தம்..? பொண்டாட்டி மேல அவனுக்கு பாசமில்லாமையா அப்படி இருப்பான்.
அவன் இந்த அளவுக்கு அமைதியா இருக்குறதைப் பார்த்து எங்களுக்கே ஆச்சர்யம் தான். ஆனா, தெரிய வேண்டியவளுக்கு தெரியலையே..? என்ன குறையைக் கண்டா..? பணம் காசுக்கு குறையில்லை, சொத்து சுகத்துக்கும் குறையில்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. மத்தவங்களை மாதிரி ஊதாரியா சுத்துறவனும் கிடையாது. நாய் மாதிரி உழைக்கிறான், நல்லா சம்பாதிக்கிறான். இதுக்கு மேல என்ன எதிர்பார்க்குறிங்க..? இதுக்கு மேல மாப்பிள்ளை நீங்களே தேடுனாலும் கிடைச்சுடுவானா என்ன..? இனியாவது புரிஞ்சு புத்தியோட நடந்தா அவளுக்கு நல்லது.
இல்லை, மாட்டேன்..இப்படித்தான் இருப்பேன்னா,நான் அவங்களை மாதிரியெல்லாம் அமைதியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். அவனை நான் தூக்கி வளர்த்திருக்கேன். எங்கம்மாவை விட, அதிக நேரம் என்கிட்டே தான் இருந்திருக்கான். உங்க மக வாழ மாட்டேன்னு சொன்னா, இருக்கவே இருக்கா காயத்ரி. என் தம்பிக்கு எப்படி வாழ்க்கையை அமைச்சு குடுக்கணும்ன்னு எனக்குத் தெரியும். அவளை நல்ல முடிவா எடுக்க சொல்லுங்க..” என்று படபடவென்று பேசி முடித்தாள் மஞ்சரி.
உள்ளே இருக்கும் மகாவிற்கும் கேட்க வேண்டும் என்பதற்காகவே சத்தமாகவே பேசினாள் மஞ்சரி. அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மகாவின் காதிலும் விழுந்தது.
“என்ன மஞ்சு இப்படி பேசிட்ட..?” என்றான் சபரி.
“பின்ன என்னங்க..? மயிலே மயிலேன்னா இறகு போடாது. இனி எதுவா இருந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான். இவளைத் தான் கட்டி வைக்கணும்ன்னு சொன்னப்ப, நான் அமைதியா இருந்தேன்ல. இப்போ நான் பேசுறப்போ நீங்க அமைதியா இருங்க..” என்றாள் சபரியிடம்.
“அதாவது நான் அப்படித்தான் பேசுவேன். என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது..” என்ற மறைமுக பதில் அதில் இருந்தது.
மஞ்சரி பேசியதைக் கேட்ட பாண்டியனும் எதுவும் பேசவில்லை. அவளும் தப்பாக ஒன்றும் பேசவில்லை.
“அப்படியெல்லாம் சொல்லாத மஞ்சு.. மகா இனி புரிஞ்சு நடந்துப்பா. யாரையும் எதுவும் பேசமாட்டா..” என்றார் கமலா.
“நான் சொல்றதையே நீங்க புரிஞ்சுக்கலைக்கா. நான் அவளை பேசாம இருக்க சொல்லலை. யார் என்ன சொன்னாலும் அமைதியா போகணும் அப்படின்ற பத்தாம் பசலித் தனமான வேலையையெல்லாம் நான் செய்ய சொல்லலை. தப்புங்குகிற இடத்துல பேசுறது தப்பேயில்லை. ஆனா, அவளோட அனுமானத்தை மட்டும் வச்சுட்டு பேசக் கூடாது. அதைத் தான் சொல்றேன்..” என்றாள்.
“விடு மஞ்சு..! இனி மகா பார்த்து நடந்துப்பா..” என்று சபரி சொல்ல, கொஞ்சம் அமைதியானாள்.
மஞ்சு பேச பேச, உள்ளே மகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. ஏன் அழுகிறோம், எதற்கு அழுகிறோம் என்று காரணமே இல்லாமல் அழுது கொண்டிருந்தாள். ஈஸ்வரன் இருந்த வரை தோன்றாத எண்ணங்கள் எல்லாம் இப்போது தோன்றி அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
“அவ ஏதோ ஆதங்கத்துல பேசுறா மகா. அதை நினைச்சு உடம்பைப் போட்டு வருத்திக்காத. கொஞ்ச நேரம் தூங்கி எந்திருச்சா எல்லாம் சரியா போய்டும். நான் வரேன்ம்மா..” என்று சொல்லி விட்டு வசுந்தராவும் கிளம்பி விட்டார்.
அவர்களை அழைத்துக் கொண்டு சபரியும் கிளம்பி விட, அந்தே வீடே மறுபடியும் அமைதியானது.
“இவளாவது ஒழுங்கா வாழுவான்னு நினைச்சேன். இவளும் இப்படி வீட்டோட வந்து உட்கார்ந்திருக்கா..இனி கடவுள் விட்ட வழி தான்..” என்று கமலா புலம்பிக் கொண்டிருக்க, மகாவிற்கு அப்போது தான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியே வந்தது.
‘இப்ப வந்து என்ன செய்ய..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..? இன்னொருத்தனா இருந்திருந்தா இந்நேரம் உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பான்.. ஏதோ அவனுங்க போய் அமைதியா இருக்கான்..’ என்றது மனம்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை சந்தோஷமாக சுற்றித் திரிந்தவள் தான் மகா பத்ரா. நிவேதாவிற்கு கல்யாண பேச்சை எடுத்தது முதல் அத்தனை அழுத்தமும் அவள் மேல் ஏறிக் கொண்டது. படித்து முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்தவள், சந்தோஷமாக இருந்தாள். நிவேதாவின் கல்யாணத்திற்கு கூட கையில் பணமாக இல்லை என்று பாண்டியன் சொன்னதை நம்பித்தான் லோன் போட்டு கொடுத்தாள். அப்போதே அவள் யோசித்திருக்க வேண்டும். ஆனால் யோசிக்கும் அளவிற்கு அவளுக்கு பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை.
போனில் பேசும் போது, நிவேதாவும் சந்தோஷமாகத் தான் பேசினாள்.
“என்னக்கா மாப்பிள்ளை ஓகே வா..? போட்டோல பார்க்கும் போது அப்படி ஒன்னும் நல்லா இல்லையே..?” என்றாள் மகா.
“நேர்ல நல்லாத்தான் இருக்கார் மகா. எனக்கும் பிடிச்சிருக்கு. ஒன்னும் பிரச்சனையில்லை..” என்றாள் நிவேதாவும்.
“உனக்குப் பிடிச்சா சரித்தான்..” என்றாள்.
“நீ எப்போ கல்யாணத்துக்கு வருவ..?” என்றாள்.
“ரெண்டு நாள் தான் லீவ் கிடைச்சதுக்கா. கல்யாணத்துக்கு முதல் நாள் வந்துடுவேன்..” என்றாள்.
“ஓகே மகா..!” என்று நிவேதா சொன்னதில் ஏதோ ஒன்று குறைந்தது அவளுக்கு.
‘என்ன ரெண்டு நாள் தான்னு சொல்றோம். அவளும் உடனே சரின்னு சொல்லிட்டா..?’ என்று நினைத்தாள்.
கல்யாணத்தில் அஷோக்கிடம் அவள் அவ்வளவாக பேசவில்லை. நிவேதாவுக்காக இரண்டொரு வார்த்தைகள் பேசினாள் அவ்வளவே.
“அம்மா எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலை. அந்த ஆள் பார்வையே சரியில்லை. அவங்க அம்மா என்னவோ நகையை எல்லாம் அள்ளிப் போட்டு நகைக் கடை பொம்மை மாதிரி இருக்காங்க..” என்றாள் கமலாவிடம்.
“வாயை வச்சுகிட்டு சும்மா இரு மகா. எதையுமே துடுக்குத்தனமா பேசுறதே உனக்கு வேலையா போய்டுச்சு. அந்தம்மா கிட்ட நகை இருக்கு போட்ருக்காங்க. இதையெல்லாமா நாம சொல்ல முடியும்..?” என்று மகாவை அதட்டி விட்டார் கமலா.
“என்னவோ போங்க.. எனக்கு எதுவுவோ சரியில்லைன்னு தோணுது..” என்று அப்போதும் சொன்னாள் மகா.
அப்போது பாண்டியன் அசோக்கின் அம்மாவிடம் எதையோ கெஞ்சிப் பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த மகாவிற்கு கோபம் அப்படி வந்தது.
அந்தம்மா நகர்ந்தவுடன்,
“எதுக்குப்பா அந்தம்மாகிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க..?” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா..! நீ போ..” என்றார் பாண்டியன்.
“பொய் சொல்லாதிங்கப்பா..! நகையைப் பத்தித்தான பேசிட்டு இருக்கீங்க..? எங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்குத் தேவையான எல்லா நகையும் எடுத்தாச்சே. இப்ப எப்படி பத்தாம போகும்..?” என்றாள்.
“அது அவசரத்துக்கு பேங்க்ல வச்சிருக்கேன் மகா. இப்ப திருப்ப முடியலை, அதான். இதெல்லாம் உனக்கு எதுக்கும்மா.. நீ போய் வர்றவங்களை கவனி..” என்று அவளைத் துரத்துவதில் தான் குறியாய் இருந்தார்.
‘நகையைத் திருப்பனும்ன்னு தானே லோன் போட்டு தர சொன்னார்..’ என்று மனதிற்குள் நினைத்தவள், அப்போதும் விடாமல்,
“ஏதாவது பிரச்சனையாப்பா..?” என்றாள்.
“அப்பாவுக்கு என்னடா பிரச்சனை இருக்கப் போகுது. அதெல்லாம் ஒண்ணுமில்லை. இது ஒரு சின்ன விஷயம். நான் பார்த்துக்கிறேன்..” என்று அவர் தெளிவாய் சொல்லவும், அதற்குமேல் அவளால் சந்தேகப்பட முடியவில்லை.
ஒருவழியாக கல்யாணமும் நடந்து முடிந்து விட்டது. அவளுக்கு அதற்கு மேல் லீவ் இல்லாத காரணத்தினால் அன்று இரவே கிளம்பிவிட்டாள். அதற்கடுத்து நடந்த கூத்து எல்லாம் அவளுக்கு பின்னர் தான் தெரிய வந்தது.
அதற்கே போனில் பிடிபிடிவென்று பிடித்து விட்டாள் நிவேதாவின் கணவனை. அதற்கு பிறகு நிவேதா அவளுடன் பேசும் போதெல்லாம் எதையோ பரிகொடுத்ததைப் போலவே பேச, மகா தான் தலையை போட்டு பிய்த்துக் கொண்டாள். அவளுக்கு அங்கு என்ன பிரச்சனை என்று யோசித்து யோசித்தே, இவள் ஒரு வழியாகிக் கொண்டிருந்தாள்.
நிவேதா ஊருக்கு வருகிறாள் என்று தெரிந்தவுடன் மகாவும் இரண்டு நாள் லீவை வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டாள். சில கசப்பான சம்பவங்களை எதிர்நோக்கி.