காதல் 10:
கிளம்பிப் போன சில மணி நேரத்திலேயே, மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கும் மகா பத்ராவைப் பார்த்து கமலாவின் மனதிற்குள் அபாய மணி அடித்தது. அதுவும் தனியாக வந்திருக்கும் மகளைப் பார்த்து, கொஞ்சம் அதிர்ந்து தான் விட்டார்.
“என்ன மகா..? இந்த நேரத்துல? அதுவும் தனியா..?” என்றார் பதட்டத்துடன்.
“முதல்ல வழியை விடும்மா..!” என்று அவரைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“உன்னைத் தாண்டி கேட்டுட்டு இருக்கேன். நீ பேசாம போனா என்ன அர்த்தம்..?” என்றார் கமலா.
“இனி நான் அங்க போக மாட்டேன்னு அர்த்தம்..” என்றாள் மகா.
“என்னடி ஆச்சு? நல்லாத்தான போன..? போன கையோட திரும்பி வந்திருக்கன்னா, அங்க என்ன பிரச்சனை? நீ என்ன பண்ணின..?” என்றார்.
“ஒவ்வொரு கேள்வியாய் கேளுமா! நீ கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதில், என்னால அந்த வீட்ல வாழ முடியாது…” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, அவளை ஓங்கி அறைந்தார் கமலா.
“அம்மா..!!” என்று அவள் அதிர்ந்து போய் நிற்க,
“இந்த அறையை முதல்ல இருந்தே குடுத்து வளர்த்திருந்தா, இன்னைக்கு இப்படி பேசிகிட்டு வந்து நிற்க மாட்ட. எல்லாம் உங்கப்பா கொடுத்த செல்லம். நாலு எழுத்து படிச்சுட்டோம்ன்ற திமிரு..அதான..” என்றார் கமலா கோபமாக.
“ஏன்? அவன் அடிச்சது பத்தாதுன்னு இப்ப நீயும் அடிக்கிற..? அப்படியே அடிச்சே கொல்லுங்க..!” என்று சோபாவில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
“மாப்பிள்ளை அடிச்சாரா..?” என்றார் கமலா.
“ஆமா..!” என்றாள் கோபமாக.
“அவர் அடிக்கிற அளவுக்கு நீ என்ன பண்ண..? நீயும் சும்மா இருந்திருக்க மாட்டியே..?” என்றார் கமலா, மகளை பற்றி அறிந்தவராய்.
“நீங்க என்னைக்கு என்னை நம்பியிருக்கிங்க..?பெத்த மக என்னைய விட நேத்து வந்தவன் உங்களுக்குப் பெருசா போய்ட்டானா..?” என்று அதற்கும் கத்தினாள்.
அவள் சத்தம் கேட்டு பாண்டியனும் எழுந்து வந்து விட்டார்.
“என்ன மகா? இந்த நேரத்துல..?” என்றார் அவரும் அதிர்ச்சியுடன்.
“எல்லாம் உங்களால தான். ஓவரா செல்லம் குடுக்காதிங்கன்னு சொன்னா எங்க கேட்டிங்க..? இப்ப பாருங்க எங்க வந்து நிக்குதுன்னு..?” என்றார்.
“என்னம்மா மகா இதெல்லாம்..?” என்றார் பொறுமையாய்.
“என்னால அந்த காட்டுமிராண்டி கூட எல்லாம் வாழ முடியாது. நான் அங்க போக மாட்டேன்..” என்றாள் பாண்டியனிடமும்.
“சரி போக வேண்டாம்..!” என்ற பாண்டியன், மேற்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.
அவர் ஏதாவது பேசியிருந்தால் கூட அவளுக்கு மனம் ஆறியிருக்கும். அவர் எதுவும் பேசாமல் அப்படி சென்றது தான் மகாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அங்கே அவன் விட்டத்தைப் பார்த்து படுத்திருக்க, இங்கே இவள் கவுந்தடித்து படுத்துக் கொண்டிருந்தாள். மறுநாள் விடியல் அவளுக்கு தரமான சம்பவத்தை நடத்தப் போவதைப் பற்றி அறியாமல்.
மறுநாள் விடிந்ததில் இருந்து கமலாவும் அவளுடன் பேசவில்லை. எல்லோரும் தன்னை ஒதுக்குவதைப் போல் தோன்றியது அவளுக்கு.
அந்த வீட்டின் அமைதியெல்லாம் நிவேதாவின் கணவன் வரும் வரைதான். கதவைக் கூட தட்டாமல் உள்ளே நுழைந்த அஷோக்கையும், அவனுடைய அம்மாவையும் பார்த்தவளின் விழிகளில் அப்படி ஒரு அதிர்ச்சி.
ஆங்காரமாய் எழுந்தவள், எட்டி அவன் சட்டையை காலரோடு பிடித்தாள்.
“நீ எப்படிடா வெளிய வந்தா..? எங்க அக்காவை கொன்னது மட்டுமில்லாம, இப்ப ஜெயில்ல இருந்தும் வெளிய வந்துட்டியா..? இதெப்படி நடந்திருக்கும்? நான் கேஸை வாபஸ் வாங்கவே இல்லையே..?” என்று ஆங்காரமாய் கத்த,
அவளின் சத்தம் கேட்டு கமலாவும், பாண்டியனும் வெளியே வந்தனர். வெளியே வந்த பாண்டியனுக்கு அங்கிருந்த மூத்த மருமகன் அஷோக்கைப் பார்த்து அதிர்ச்சி தான்.
“மகா விடு, மகா..!” என்று அவளைப் பிடித்து இழுத்த கமலா, தன்னருகே கொண்டு வந்து நிறுத்த,
“நீ விடும்மா..! அக்காவையும் கொன்னுட்டு, எப்படி தைரியமா வந்து நம்ம முன்னாடியே நிக்கிறான். இவனை இங்கயே கொன்னா தான் என் ஆத்திரம் தீரும்..!” என்றாள் கோபமாய்.
“என்ன சம்பந்தி..? உங்க சின்ன பொண்ணு அவளுக்குத் தான் வாயிருக்குன்னு அவ இஷ்ட்டத்துக்கு பேசிட்டு இருக்கா..?” என்று அசோக்கின் தாய் கோபப்பட,
“நீங்க எதுக்கு இங்க வந்திங்க..? உங்களுக்கு என்ன வேணும்..?” என்றார் பாண்டியன்.
“என்ன மாமா? தெரியாத மாதிரி கேட்குறிங்க..? பெரிய பொண்ணு தான் என்கூட வாழாம போய்ட்டா. அதான் மகா இருக்காளே, அவளை எனக்கு கட்டி வச்சுடுங்க. இதைப் பத்தி ஏற்கனவே நான் தான் உங்ககிட்ட சொன்னேனே..?” என்றான் சாவகாசமாய்.
“அடி செருப்பால..உனக்கு நான் கேட்குதா..?” என்று அவள் திமிறிக் கொண்டு போக,
“அதுக்கு மகா புருஷன் சம்மதிக்கணும்..!” என்றார் பாண்டியன்.
“மகா புருஷனா..?” என்று அதிர்ந்த அசோக் எழுந்து நின்று விட்டான்.
“என்ன உளறிங்க.?” என்றான் கோபமாய்.
“உளறல் எல்லாம் இல்லை. உண்மை தான். மகாவுக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் ஆச்சு..! அதனால இனி நீங்க உங்க வழியைப் பார்த்துட்டு போகலாம்..!” என்றார் பாண்டியன்.
“என்ன மாமா..? என்மேல இருந்த பயம் விட்டுப் போச்சா..? அதைப்பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்கு மகா வேணும். இது நடக்கணும், நடந்தே ஆகணும்..” என்றான் அசோக்.
“என்ன சம்பந்தி நீங்க..? என் பையன் அவ்வளவு சொல்லியும் உங்க பொண்ணுக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சிருக்கிங்க. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, தீர்த்து விட்ருங்க. உங்க முதல் பொண்ணால போன எங்க மானத்தை, உங்க ரெண்டாவது பொண்ணு தான் காப்பாத்தணும்..” என்றார் அசோக்கின் தாய்.
“என்னப்பா நீங்க..? இந்த பொம்பளை பேசுறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..? இவன் முதல்ல எப்படி வெளிய வந்தான்..?” என்றாள் மகா.
“இப்ப போறோம். ஆனா, சீக்கிரம் வருவோம். நல்ல முடிவா சொல்லுங்க..” என்ற அசோக், மகாவை பார்த்த பார்வையில் அவளுக்கு அருவருப்பாய் இருந்தது.
“என்னப்பா நடக்குது இங்க..? நீங்களா கேஸை வாபஸ் வாங்குனிங்க..?” என்றாள் கோபமாய்.
“ஆமாம்மா..!” என்றார்.
“நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லப்பா..! அவனைப் பார்த்திங்கல்ல..? அவனும் அவன் பார்வையும்..? அவனுக்கு அக்காவை கட்டி வச்சதே முதல் தப்பு. அவளை அவன் சித்திரவதை பண்ணி கொன்னிருக்கான், அவனைப் போய் எப்படி உங்களால மன்னிக்க முடிஞ்சது..? நீங்க எப்படி இதை செய்யலாம்..? ஏன் இப்படி செஞ்சிங்க..?” என்று ஆங்காரமாய் கத்தியவள், ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி சரிந்தாள்.
“மகா..அம்மாடி மகா..!” என்று பாண்டியன் கதறிக் கொண்டு அவளைத் தாங்கிப் பிடிக்க, கமாலவிற்கு ஒருநிமிடம் என்ன நடந்ததென்றே தெரியாத அளவிற்கு அப்படியே நின்றிருந்தார்.
“கமலா..தண்ணியை எடு..” என்று பாண்டியன் இரண்டு மூன்று முறை சொன்ன பிறகு தான், அவர் சுயத்திற்கு வந்தார்.
தண்ணீர் தெளித்தும் அவள் மயக்கம் தெளியாமல் இருக்க, இருவருக்கும் பயம் அப்பிக் கொண்டது.
பாண்டியன் வேகமாய் ஈஸ்வரனுக்கு போன் போட,
“சொல்லுங்க மாமா..!” என்றான். குரலில் அப்படி ஒரு வெறுமை.
“ஈஸ்வரா..மாப்பிள்ளை..தம்பி..” என்று அவர் வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் சொல்லித் திக்கிக் கொண்டிருக்க, அவர் குரலில் இருந்த பரிதவிப்பில் இருந்தே எதையோ கண்டு கொண்டான் ஈஸ்வரன்.
“என்னாச்சு..? சொல்லுங்க யாருக்கு என்னாச்சு..?” என்றான் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு.
“மகா..! மயங்கி..” என்று அவர் சொல்ல வர,
“மகாவுக்கு என்ன ஆச்சு..? சொல்லுங்க..?” என்று அவன் கத்த, அவன் கத்திய கத்தலில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்தனர்.
“மகா மயக்கம் போட்டு விழுந்துட்டா தம்பி… கண்ணு முழிக்கவே இல்லை. எங்களுக்கு பயமா இருக்கு,நீங்க வாங்க..” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை, வேகமாய் பைக் சாவியை எடுத்தவன், பின்பு அதை வைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்றான்.
“யாருக்கு என்னாச்சு..?” என்று ருக்கு கேட்க,
“தெரியலை அத்தை..! மகாவோட அப்பா தான் போன் பண்ணாருன்னு நினைக்கிறேன்..என்ன பிரச்சனைன்னு தெரியலையே..?” என்ற வசுந்தராவின் முகத்தில் அப்படி ஒரு கவலை.
என்ன வேகத்தில் வந்தானோ தெரியாது, அடுத்த பத்தாவது நிமிடம், அவர்கள் வீட்டில் இருந்தான் ஈஸ்வரன். வேகமாய் இறங்கி உள்ளே சென்றவன் கண்டது என்னவோ, கொடியாய் துவண்டு போயிருந்த மகாவைத் தான்.
“மகா..!!” என்று அவன் கத்திய கத்தல் அந்த வீடே எதிரொலிக்க,
“என்னாச்சு மாமா..?” என்றான்.
“பேசிட்டு இருந்த பொண்ணு அப்படியே மயங்கி விழுந்துட்டா மாப்பிள்ளை..” என்றார் கமலா அழுகையுடன்.
அடுத்த நிமிடம் அவளைத் தூக்கியிருந்தான் ஈஸ்வரன். கார் கதவைத் திறந்து விடுங்க.. என்றவன்,அவளை பின்சீட்டில் படுக்க வைத்து விட்டு, அவர்கள் யாரையும் அழைக்கத் தோன்றாமல், வேகமாய் சென்று விட்டான்.
போகும் போதே சபரிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட, அவனும் பதறியடித்துக் கொண்டு சென்றான்.
இதோ.. மகா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள். வெளியே ஈஸ்வரனோ தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தான். வேகமாய் வந்த சபரி..
“ஈஸ்வரா..என்னாச்சு..? மயக்கம்ன்னு தான சொன்ன..? அதுக்கு ஏன் ஐ.சி.யு.ல வச்சிருக்காங்க..?” என்றான்.
“தெரியலையே மாமா..” என்ற ஈஸ்வரன் கொஞ்சம் துவண்டு போயிருந்தான்.
“எல்லாம் என்னால தான்..நேத்து அவ பேசும் போது, நானாவது கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்..” என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். அதற்குள் கமலாவும், பாண்டியனும் வந்து விட, அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டு, உள்ளே படுத்திருந்தாள் மகா பத்ரா.
கிட்ட தட்ட ஒருமணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த டாக்டரின் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.
“என்னாச்சு டாக்டர்..? சாதாரண மயக்கம் தான..?” என்றான் ஈஸ்வரன்.
“அவங்களுக்கு பிரஷர் அளவுக்கு அதிகமா இருக்கு. கொஞ்சம் கூட அது குறையவேயில்லை. பார்ப்போம்..!” என்ற டாக்டர்,
“என்கூட கொஞ்சம் வாங்க..!” என்று ஈஸ்வரனை அழைத்தார்.
அவர் பின்னால் சென்ற அந்த இரண்டு நிமிடத்தில் அவன் இதயம் எக்குத் தப்பாய் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது.
“சொல்லுங்க டாக்டர்..! எதுவா இருந்தாலும் சொல்லிடுங்க..” என்றான்.
“உங்க மனைவிக்கு ‘சைக்கோசிஸ்..’ பிராப்ளம் இருக்கு. .” என்றார்.
“என்ன சொல்றிங்க டாக்டர்..? அப்படின்னா..?” என்றான்.
“அப்படின்னா இது ஒரு வியாதி கிடையாது. மனநோயோட அறிகுறின்னு சொல்லுவாங்க..!” என்றார் டாக்டர்.
“இதுனால பெருசா எதுவும் இல்லையில்ல டாக்டர்..?” என்றான் ஈஸ்வரன்.
“அப்படி சொல்ல முடியாது. ஆரம்பத்துலையே பார்த்திருந்தா இது ஒரு பெரிய விஷயம் இல்லை தான். ஆனா, உங்க வொய்ப் ஆரம்ப கட்டத்தையெல்லாம் தாண்டிட்டாங்க..” என்றார்.
“என்ன சொல்றிங்க..?” என்று அதிர்ந்து போனான் ஈஸ்வரன்.
“எஸ்..! ஹாலுசினேஷன்,டெலுசியன், யாரையும் நம்பாம இருக்கிறது, எப்பவுமே ஒரு குழப்பத்துலையே இருக்குறது, பார்க்குறது எல்லாமே தப்பாத்தான் இருக்கும் அப்படின்ற எண்ணத்துல ஸ்டாராங்கா இருக்குறது, கடைசியா இப்படி ஒரு பிரச்சனை தனக்கு இருக்குன்னு தெரியாம இருக்குறது.. இதெல்லாம் தான் சைக்கோசிஸ் அப்படின்னு சொல்லுவாங்க..இவங்களால துர்வாசனையை உணர முடியும். கெட்ட சுவையை உணர முடியும். உடம்புல பூச்சி ஊறுவது மாதிரி, யாரோ தன்னை தொடுற மாதிரி இப்படியெல்லாம் இவங்க நடந்துப்பாங்க..” என்றார் டாக்டர்.
“என்ன டாக்டர்..என்னென்னமோ சொல்றிங்க..?” என்ற ஈஸ்வரின் முகத்தில் அப்படி ஒரு வேதனை.
“டோபமின் அப்படின்ற புரதம் மூளையில் அதிகமா சுரக்கும் போது தான் இந்த சைக்கோசிஸ் பிராப்ளம் வரும். ரொம்ப மன அழுத்தம், மனசோர்வு கூட இந்த புரதம் அதிகமா சுரக்குறதுக்கு காரணமா இருக்கலாம். இல்லன்னா, மரபு வழியாவும் இந்த பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு..” என்றார் டாக்டர்.
“இதுக்கு தீர்வு தான் என்ன டாக்டர்..? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அவளை எப்படியாவது நார்மலாக்கிடுங்க..” என்றான் ஈஸ்வரன்.
“உங்க பரிதவிப்பு எனக்கு புரியுது மிஸ்டர். ஈஸ்வர். அந்த டோபமின் சுரப்பை வேணும்ன்னா, மருந்து மாத்திரையால நிறுத்த முடியும். ஆனா, அவங்க மன அழுத்தத்தை வீட்ல இருக்க நீங்க தான் பார்த்துக்கணும். அதே நேரம் மருந்து மாத்திரையை நாங்க சொல்லாம நிறுத்த கூடாது. அப்படி இடையிலேயே நிறுத்திட்டா, அவங்க இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, அதிக நாள் எடுத்துக்கும்..” என்றார் டாக்டர்.
“வேற எந்த பிரச்சனையும் இல்லையே டாக்டர்..?” என்றான்.
“வேற எந்த பிரச்சனையும் இப்போதைக்கு இல்லை. ஆனா, அவங்க எப்படி எப்படி வேணும்ன்னாலும் மாறலாம். வீட்ல இருக்க நீங்க தான் கவனமா பார்த்துக்கணும். இந்த பிரச்சனை கூடிட்டே போனா, அடுத்து எங்க கையில எதுவும் இல்லை..” என்றார் டாக்டர்.
“ஓகே டாக்டர்..!”
“அவங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே இந்த பிரச்சனை இருந்திருக்கு. ஆனா, இப்போ அதிகமாயிருக்குன்னா, அவங்க மனசை பாதிக்கிற விஷயம் தொடர்ந்து நடந்திருக்குன்னு தெரியுது. அது என்னன்னு கண்டு பிடிச்சு அதை சரி செய்ய பாருங்க..” என்றார் டாக்டர்.
“ஷயர் டாக்டர்..!” என்று வெளியே வந்தவனின் முகத்தில் மருந்துக்கு கூட நிம்மதியில்லை.
“என்ன சொன்னாங்க தம்பி..” என்றார் கமலா.
“பெரிய பிரச்சனை எதுவும் இல்லத்தை..! கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுடுவா..” என்ற ஈஸ்வரன்,
“வீட்ல உங்க கூட எதுவும் சண்டையா மாமா..?” என்றான்.
“இவர் கூட எங்க சண்டை போட்டா. எல்லாம் நிவேதா புருஷனால வந்தது. அவன் வந்துட்டு போகவும் தான், கத்திட்டே மயங்கிட்டா தம்பி..” என்ற கமலா மீண்டும் அழ ஆரம்பிக்க,
“அவனுக்கு இங்க என்ன வேலை..?” என்றான் யோசனையாக.
“மகாவை அவனுக்கு கட்டி வைக்கணுமாம்..! கல்யாணம் ஆயிருந்தாலும் பரவாயில்லை, தீர்த்து விட்டுட்டு எனக்கு கட்டி வைங்கன்னு சொல்லிட்டு போறான்..” என்றார் கமலா.
அவர் சொல்வதைக் கேட்ட ஈஸ்வரனுக்கு கோபம் அப்படி வந்தது. பல்லைக் கடித்து, கைகளை இறுக மூடி, இருக்கும் இடம் அறிந்து கோபத்தைக் கட்டுப் படுத்தினான்.
“எதுக்கு ஈஸ்வரா இவ்வளவு கோபம்..?” என்றான் சபரி.
“ஒண்ணுமில்லை மாமா..!” என்று அவன் சொன்ன அந்த ஒண்ணுமில்லை என்ற வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள் அடங்கியிருந்தது.
அந்த மயக்கத்திற்கே மகா துவண்டு போய் படுத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு நினைவு திரும்ப, மெல்ல கண்களைத் திறந்தாள் மகா.
“எனக்கு என்னாச்சு சிஸ்டர்..?” என்றாள் அருகில் இருந்த நர்சிடம்.
“ஒன்னுமில்லைங்க, சாதாரண மயக்கம் தான்..” என்றாள் அந்த நர்ஸ்.
“சாதாரண மயக்கத்திற்கு ஏன் ஹாஸ்ப்பிட்டல் வரைக்கும்..?”என்றாள் புரியாமல்.
“ஒண்ணுமில்லைம்மா, பிரஷர் கொஞ்சம் கூடிடுச்சு..!” என்ற அந்த நர்ஸ்,
“இருங்க உங்க ஹஸ்பண்ட் வெளிய தான் இருக்கார். கூப்பிடுறேன்..” என்ற நர்ஸ், வெளியே வந்து அவளுக்கு நினைவு வந்துவிட்டதை சொல்ல, முதல் ஆளாய் உள்ளே நுழையப் போனான் ஈஸ்வரன். பின் என்ன நினைத்தானோ தெரியவில்லை,
“நீங்க போய் பாருங்கத்தை..” என்றவன், அங்கேயே அமர்ந்துவிட்டான்.
“ஏன் ஈஸ்வரா..? நீயும் வா..” என்று சபரி சொல்ல,
“இப்ப வேண்டாம் மாமா. கொஞ்ச நேரம் ஆகட்டும்..” என்றான்.
“அம்மாடி மகா..!” என்று கமலா அவள் கையைப் பிடித்துக் கொள்ள,
“எதுக்கும்மா சாதாரண மயக்கத்துக்கு இங்க ஹாஸ்பிட்டல் வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்கிங்க..?” என்று குறைபட்டுக் கொண்டாள்.
“உனக்கு இது சாதாரண மயக்கமா..? நீ கண்ணைத் திறக்கவேயில்லைன்னு நாங்க என்ன பாடு பட்டோம் தெரியுமா..? மாப்பிள்ளைதான் உன்னை இங்க தூக்கிட்டு வந்தார். நாங்களாவது பரவாயில்லை மகா, அவர் ரொம்ப பாடு பட்டுட்டார்..” என்றார் கமலா.
“அவரு வந்தாராம்மா..?” என்றாள் மீண்டும்.
“என்னடி நீ..? நாங்க சொல்ற எதையுமே நம்ப மாட்டியா..? மாப்பிள்ளை வெளிய தான் இருக்கார். நீ எதுவும் டென்சன் ஆவேன்னு தான் உள்ள வரலை போல..” என்றார் கமலா.
“பரவாயில்லையே, நான் அந்த பாடு படுத்தியும் எனக்கு ஒன்னுன்னதும் ஓடி வந்துட்டாரா மனுஷன். நாட் பேட், பார்க்கலாம்..” என்றவள், அவன் வருவான் என்று பார்க்க, கடைசி வரை அவன் வரவேயில்லை.
‘நீ என்ன நினைக்கிற மகா, ஈஸ்வரன் இப்ப உள்ள வரணும்ன்னு நினைக்கிறியா..? இல்லை வேண்டாம்ன்னு நினைக்கிறியா..?’ என்று அவளின் மனம் கேட்க,
“நான் என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா தான் பிரச்சனையே இல்லையே..?” என்று சொல்லி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
அவளை மீண்டும் வந்து பரிசோதித்த டாக்டர்,
“இந்த ட்ரிப்ஸ் முடிஞ்ச உடனே, நீங்க கிளம்பலாம். ஆனா, தேவையில்லாம இப்படி டென்ஷன் ஆகக் கூடாது. உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லியிருக்கேன். அவர் சொல்றபடி கேளுங்க..கொஞ்ச நேரத்துல எல்லாரையும் பயமுறுத்திட்டிங்கம்மா.” என்றார்.
“எனிதிங் சீரியஸ் டாக்டர்..?” என்றாள்.
“நோ..நோ..! நவ் யு பெர்பக்ட்லி ஆல்ரைட்..” என்றவர் அங்கிருந்து சென்று விட,
“ஏதாவது சாப்பிட வேணுமா மகா..?” என்றார் பாண்டியன்.
“இல்லப்பா எதுவும் வேண்டாம்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜூசுடன் உள்ளே வந்தான் சபரி.
“இதை குடி மகா..” என்றான்.
“கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்கிறேன் சித்தப்பா..!” என்றவளின் கண்கள் சபரிக்கு பின்னால் பார்க்க, யாரும் இல்லாமல் ஏமாற்றமாய் உணர்ந்தாள். அதை அவள் உணரவில்லை.
“என்னம்மா பார்க்குற..?” என்றான் சபரி.
“அவங்க வரலையா சித்தப்பா..?” என்றாள்.
“வெளிய தான் இருக்கான்..! இதோ வர சொல்றேன்..” என்றவன், வெளியே சென்று ஈஸ்வரனிடம் விஷயத்தை சொல்ல, முதலில் அவனுக்கு கொஞ்சம் யோசனையாக இருந்தாலும், உள்ளே செல்ல முற்பட்டான். அதே நேரத்தில் கமலாவும், பாண்டியனும் வெளியே வந்து விட, உள்ளே சென்றான்.
அவன் வருவதை பார்த்தும் பார்க்காதவள் போல் தலையை குனிந்து கொண்டாள். அவள் அருகில் வந்தவன், அவளையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இப்போ எப்படி இருக்கு..?” என்றான் மொட்டையாய்.
“ம்ம்..! பரவாயில்லை..” என்றாள் அவளும் மொட்டையாய்.
அவளின் கையை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் அடக்கிக் கொண்டவன், அவளையே பார்க்க, அவளால் தான் அவனைப் பார்க்க முடியவில்லை.
“இந்த உலகத்துல எல்லாருமே கெட்டவங்க கிடையாது. நாம பார்க்குற எதுவுமே சரியும் கிடையாது. எதை வச்சும் எதையும் தீர்மானம் பண்ணக் கூடாது. தேவையில்லாத ஸ்ட்ரெஸ தலையில ஏத்திக்காதமா..” என்றான்.
அவன் வார்த்தைகளை விட, அவன் கைகளுக்கு அடங்கியிருந்த அவளுடைய கை, நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் பாதுகாப்பாய் உணர்ந்தது. ஏனோ, கண்கள் தானாக கலங்கி கண்ணீர் வர, அவன் கையில் பட்டுத் தெறித்த கண்ணீரில் அவளின் அழுத்தம் கொஞ்சம் கரைந்ததோ..?
மெதுவாக அவள் கைகளை விட்டவன்,
“நான் வெளிய இருக்கேன்..” என்றான். அவன் திரும்பிப் போக எத்தனிக்க, அவள் கைகள் தானாக அவனுடைய கைகளைப் பற்றியது.
“என்ன?” என்றான்.
“இங்கயே இருங்களேன்..!” என்றாள் தடுமாறி.
என்ன நினைத்தானோ தெரியவில்லை, அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டு, அவள் அருகிலேயே அமர்ந்து விட்டான். ஆயிரம் வார்த்தைகள் தராத நிம்மதியை அவன் அருகாமை அவளுக்கு தந்து கொண்டிருக்கிறது என்பதை அவள் எப்போது உணர்வாள்? அவனுக்கும் அப்படித்தான் இருந்ததோ என்னவோ?