செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 37
கணவன் மனைவி இருவரும் அவர்கள் அறையில். அவன் காதலாய். அவள் கோபமாய்!
“துளசி..” என்றான் காதலாய்.
எதிரில் நின்றிருந்தவள், குனிந்த தலை நிமிராமல், “ம்ம்ம்…” என்றாள்,
சத்தம் மூர்த்தியை எட்டியதா?
எட்டியது. அதனால், “பாரேன்..” என்றான் வாஞ்சையாய்.
சுடு தண்ணீரில் விழுந்த வெண்ணையாய் குரல் அவளையும் கரைத்தது. இருந்தும் “ம்ஹூம்..” என்றாள், மெல்லத் தலை அசைந்தது.
“பாக்க மாட்டியா..?” என்றான் ஏக்கமாய்.
“ம்ம்ஹூம்…” பலமாய் தலை அசைபட.. ஜிமிக்கி கூடவே ஆடியது.
‘நீ பார்க்காவிட்டால் என்ன… நான் பார்ப்பேன்’ என்று நினைத்திருப்பான் போலும், நாடி பிடித்து மனைவியில் முகம் நிமிர்த்தி.. ஆசையாய் பார்த்து நின்றான்.
நாடியைத் தூக்கிப் பிடித்தால்.. அவள் பார்க்க வேண்டுமா? அது எப்படிப் பார்ப்பாள்? அவளுக்குத் தான் கோபமாயிற்றே!
கண்கள், மூடி இருக்க… மூக்கு விடைத்து.
நுனி மூக்கில், மென்மையான.. சத்தமான முத்தம். பெண் முகம் சட்டென்று மலர்ந்தது. இதழ் விடைபெற்றதும் ஏக்கம் ஒட்டிக் கொண்டது.
அவ்வளவு தானா உன் கோபமெல்லாம் துளசி? இல்லை இல்லை.. கோபம் அப்படியே தான் உள்ளது! அதனால் கண்களைத் திறக்கவே இல்லை.
வலது கை மனைவியின் இடையைச் சுற்றி இருக்க, இடது கையின் ஆட்காட்டி விரலால் புருவத்தைச் சுற்றி கோலம் வரைந்துகொண்டே.. “ஸ்கூல் வேலையா போன இடத்தில மாட்டிகிட்டேன் துளசி.. பாதிலேயே வேலைய விட்டுட்டு வர முடியல. அதுனால தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு துளசி மா..” என்றான்.
அதற்கு தானே கோபம்? அதை எதற்கு நினைவுபடுத்திக் கொண்டு? கண்களை மூடியே நின்றாள், “ம்ம்ம்..” என்ற பதிலோடு!
இடையோடு தூக்கி, காலின் மேல் நிறுத்திக் கொண்டான். பிடிப்பு வேண்டி இருக்க, எந்த யோசனையுமின்றி, கைகள் இரண்டும் கணவன் இடையைச் சுற்றி வளைத்தது.
“முறைச்சு பாரு.. இல்ல திட்டு.. இல்ல அடி.. ஏதாவது பண்ணு. ஊருக்கு கிளம்பற நேரத்துல இது என்ன வேலை? கண்ண மூடிகிட்டு? பேசு துளசி மா…”
“ம்ம்ஹூம்”
வளைத்திருந்த ஒற்றை கை இடையில் அழுத்தம் தர, பெண் நெளிந்தாள்.
“கண்ண திற. இல்லேனா.. விட மாட்டேன்” கை இடையை இறுக்க..
அம்மாடியோ.. என்ன ஒரு மிரட்டல்? பயங்கரமான மிரட்டலுக்குப் பெண் பயந்து நடுங்கி அவன் மேல் சுகமாய் ஒட்டிக்கொண்டாள். தண்டனை கொடுத்தவனுக்குத் தான் தவிப்பாய் போனது.
“பச்.. தப்புதான். வெளியில போயிருந்தாலும் சாப்பிட வந்திருக்கணும். இப்படி ஊருக்கு கிளம்பற நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்க கூடாது. ஒரு தரம் மன்னிச்சு விட்டுடேன். உன் புருஷன் பாவம் இல்லியா?”
‘இல்லை’ என்ற அசைப்போடு, தலை குனிந்துகொண்டது. இடது கையால் நாடியை தூக்கி பிடித்தான்.
“அட்லீஸ்ட், என்னை பாக்கவாது செய்யேன்..”
மூர்த்தி சாருக்கு கெஞ்ச தெரியவில்லையா? திறமை போதவில்லையா? “ம்ம்ஹூம்..” என்றாள் பிடிவாதமாய்.
மூடியிருந்த விழிக்குள் கோலிக்குண்டு நிலை இல்லாமல் உருண்டது.
கண் இமை மேல் கணவன் உதடு, அழுத்தமாகப் பதிந்து மீண்டது. முத்தம் பெற்ற ஒற்றை கண் திறந்து மூடியது. மூர்த்தி சார் திறமைசாலி தான் என்பதை நிரூபித்தார்.
அவனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. புன்னகை மாறாமல் அடுத்த விழியில் இதழ் பதித்தான், அழுத்தம் கூட்டி.
கண் திறந்தாள். கோபத்தைக் கக்கவேண்டிய விழி தாபத்தை மொழிந்தது.
“பேச மாட்டியா?” அவனிடமும் ஏக்கம் எட்டிப் பார்த்தது.
பதிலில்லை. பார்வை மட்டும் தான். ஏக்கப் பார்வை.
“ஓ.. முத்தம் கொடுத்தா தான் வாய் திறந்து பேசுவ இல்ல…” குறும்போடு அவள் இதழ் நோக்கிக் குனிய…
“எல்லாம் பேசுவேன் பேசுவேன்..” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு.
நீண்ட மூச்சு! “கிளம்பட்டுமா?” இது என்ன கேள்வி? கிளம்பித் தானே ஆகவேண்டும்!
“ம்ம்ம்..” என்றாள், மனமே இல்லாமல்.
“கொஞ்சம் சிரிச்ச முகமா தான் அனுப்பேன்..” சின்ன சிணுங்கல் அவனிடம்.
“அப்படி எல்லாம் சிரிச்சுட்டே அனுப்ப முடியாது. உங்களையே நினைச்சு காலைல கைய சுட்டுகிட்டேன்.. நீங்க கண்டுக்காம போறீங்க. இதுக்கு முதல்ல நியாயம் சொல்லிட்டு போங்க”
முகம் முன் நீண்டது கை.. கண்ணுக்குத் தெரியாத தீ காயத்தில் மூர்த்தியின் இதழ் மருந்திட்டது. குறுகுறுப்பில், பெண் உதடு விரிந்தது.
“நியாயம் கிடைச்சுடுச்சா?” குறும்பு குறையாத பார்வை பெண்ணை இன்ப கடலில் ஆழ்த்தியது.
“ம்ம்..ம்ம்ம்” அவளுக்கே கேட்காத சத்தம்.. அவனுக்குக் கேட்டது.
“அப்போ.. கிளம்பட்டா?” கிளம்பட்டுமா என்கிறானா… இருக்கவா என்கிறானா? மூர்த்தி சார்?
“உங்களையே நினைச்சுகிட்டு புளி குத்தும் போது.. இந்த ரெண்டு விரல்லையும் குத்திக்கிட்டேன். எல்லாம் உங்களால..” கை, முகம் முன் நீண்டது. நீண்ட கையை பிடித்து ஒவ்வொரு விரலாய் உதட்டில் ஒற்றி எடுத்தான். தேகத்தில் ஏற்பட்ட சிலிர்ப்பு இருவருக்கும் பொது!
பெண் மயங்கி நின்றாள்! அவன் முறுவலிலா? இல்லை முறுவலித்துக் கொண்டிருந்த உதட்டின் வருடலிலா?
‘அடுத்து?’ என்பது போல் அவன் எதிர்பார்க்க..
“இந்த கை என்ன பாவம் பண்ணிச்சு..?” உதடு துருத்தி.. அடுத்த கையை அவன் முன் நீட்ட.. அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. துளசியின் கண்ணை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு விரலாய் முத்தமிட.. பெண்ணின் பற்களுக்கிடையில் மாட்டிக் கடிபட்டுக் கொண்டிருந்த இதழ் துடித்தது.
தாமரை தண்ணீரில் மட்டும் தான் மலருமா? தலைவன் கையிலும்.. அவன் தரும் முத்தத்திலும் மலரும். தண்ணீர் இல்லாமலே தாமரை மலர்ந்தது.
‘அடுத்து எங்கு?’ இருவருக்குள்ளும் ஒரு ஏக்கம்.
அண்ணாந்து பார்த்து நின்ற முகத்தை விழுங்க விரும்பி கண் மனைவியின் முகத்தை கபளீகரம் செய்த ஆரம்பிக்க..
“துளசி..” என்றான், உள்ளங்கையின் கதகதப்பைப் பெண்ணின் கன்னத்தில் இறக்கிக் கொண்டே! தேக்கி வைத்த ஏக்கம் எல்லாம் எப்படித் தணிக்க? துளசி என்ற புயலிடம் மாட்டி வேரோடு சாய்ந்து கொண்டிருந்தது, மூர்த்தி என்ற அசைக்க முடியாத ஆலமரம். அவன் ஏக்கமும் அவன் வடிகாலும் அவள் தான் என்பது போல்.. ‘துளசி’ என்றான்.
ஏக்கம் இருவருக்கும் பொதுவாகிப் போனது.
“அம்மியில அரைக்கும் போது கை எப்படி எரிஞ்சிது தெரியுமா? கை, தோள், கழுத்து எல்லாம் வலிச்சுது. ஆனா நீங்க சாப்பிட வரவே இல்ல.” மீண்டும் உதடு பிதுங்கியது.
வண்டிற்கு பூ அழைப்பு விடுத்தது. உள்ளங்கையில் ஆரம்பித்த காதல் கவிதை எப்பொழுது இடம் பெயர்ந்தது? இருவரும் அறியவில்லை.
இதழ் தடம் பதிக்க.. வலி தடமில்லாமல் மறைந்தது. என்றோ ஏற்பட்ட வலி எல்லாம் இன்று தடமில்லாமல் ஒற்றி, துடைத்து எடுக்கப்பட்டது. அணைப்பில் இருப்பவளை மென்மையாய் மென்று விழுங்கிக்கொண்டிருந்தான்.
“என்ன வாசம் துளசி” என்றான். புதைந்து போயிருந்தான், அவள் தொண்டைக் குழியில். துளசியின் தொண்டைக் குழியில் என்ன தான் இருக்குமோ அவனுக்கு மட்டும் தான் தெரியும். பார்த்ததும் கிறங்கி போவான். இன்று, அந்த பளிங்கு கழுத்தின், குட்டி குழியில் புதைந்து போனான். அவள் வாசத்தில் கிறங்கி “என்ன வாசம் துளசி” என்றான்.
‘மூர்த்தி சார்’ என்று முணுமுணுத்த இதழ் “பன்னீர் ரோஜா எண்ணை வாசம் மூர்த்தி சார்” என்றது, கிறக்கம் சற்றும் குறையாமல். அதன் பின் அந்த இதழால் பேச முடியவில்லை. வெகு நேரம் பேச முற்படவும் இல்லை.
இதழோரம் வரைந்து கொண்டிருந்த காதல் கவிதை முடிவில்லா மோகக் கவிதையாக மாறிக்கொண்டே போக.. காரின் ‘ஹாங்க்’ சத்தம் இருவரையும் உலுக்கியது.
இடையை இறுக்கியிருந்த தலைவன் கை தளர, கன்னத்தைத் தாங்கியிருந்த மறு கையும் விலக.
தலைவியின் மூடிய கண் ஓரம் நீர் கசிந்தது. “மூர்த்தி சார்” என்றாள்.. விலக மனமில்லை. அதனால் அவளின் கரம் அவனைச் சுற்றியே இருந்தது.
“கண்ண திற துளசி..” விழியின் ஈரம் அனுமதி இல்லாமலே அவன் இதழுக்கு இடம் பெயர்ந்தது.
கண்ணை திறந்தாள். அடங்கி நின்ற நீர், மடை திறந்து கொட்டியது.
“கிளம்பறேன் துளசி. ரெண்டு வாரம் தான். பத்திரமா இருந்துக்கோ. செல்வனோட வந்திடு.” மனம் இல்லாமல் மனைவியிடம் இருந்து விடுவித்துக் கொண்டான்.
தலை அசைத்தாள். அதே பனித்த விழி… பிதுங்கித் துடித்த கீழ் உதடு. மனமே இல்லாமல், பெட்டியை எடுத்துக் கொண்டு அறை வாசல் வரை சென்று திரும்பிப் பார்க்க.. நின்ற இடத்தில் சிலை போல் நின்றிருந்தாள்.
“பச்!” பெட்டியை கீழே வைத்தவன்.. ‘வா’ என்பது போல் கையை விரிக்க… சூறாவளி வேகத்தில் நெஞ்சுக்குள் புதைந்து போனாள்.
“நாள் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன் மூர்த்தி சார்..” அவள் நா தழுதழுக்க, அவன் உடைந்து போனான்.
“இங்க இருந்தா உனக்கு நல்லா இருக்கும்ன்னு தான் விட்டுட்டு போறேன். மைனிக்கும் உதவியா இருக்கும்ன்னு நினைச்சேன். ரெண்டு நாள் பாரு.. இதுக்கும் மேல இருக்க முடியாதுன்னு நினைச்சா.. செல்வன் கூட கிளம்பி வா. ரொம்ப வருத்திக்காத. கிளம்பறேன்.. நாளைக்கு காலேஜ் கண்டிப்பா போகணும். என்னால இருக்க முடியாது.”
மனமில்லாமல் மனைவியை விலக்கி.. அவன் நடக்க முற்பட “மூர்த்தி சார்” என்றாள்.
நின்றான். அவள் பார்வையால் அவனைத் தின்றாள்.
“என்ன துளசி மா?”
“துளசிக்கு மூர்த்தி சார எவ்வளவு பிடிக்கும்ன்னு காட்டட்டுமா?”
மூர்த்தி கண்ணில் மெலிதான நீர்ப் படலம். “ம்ம்..” என்றான். பேச்சு வரவில்லை.
முதுகு வரை கையை விரித்து.. “இவ்வளவு பிடிக்கும் மூர்த்தி சார்..” என்றவள், நின்றிருந்தவன் கால் மேல் ஏறி கழுத்தைக் கட்டி அவன் இதழோடு இதழ் பொருத்தி ஆழ் கடலுக்குள் முத்தையும், கார்மேகத்துக்குள் மின்னலையும் தேடினாள். அவள் முத்தும், மின்னலும் அவன் தான் என்று தெரிந்தே தேடினாள். இரண்டு வாரம் தான் இந்த பிரிவு என்பதும் தெரியும். இருந்தும்.. ஏனோ அழுகை பொங்கி பீராய்ந்து கொண்டு வந்தது.
“ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள” கண்ணில் நீர் வழிய, இதழில் அழியாத காவியம் படைத்தாள். காதலுக்கு புது சுவை இருப்பதை தெரிந்துக் கொண்டான். கரித்தது.
“படுத்தற துளசி.. ரொம்ப படுத்தற. ஏழு மாசம் கிட்டேயே இருந்தேன்.. நீ தள்ளியே நின்ன. இப்போ நான் ஊருக்கு போறேன்னு நிக்கும் போது என் உயிரை குடிக்கிற நீ. ரெண்டு வாரம்… எப்படி இருக்க போறேன்னே தெரியல. இதுல இப்படி அழுத முகமா அனுப்புவியா? போகும் போது சிரிச்ச முகமா அனுப்பு. அடுத்து உன்ன பாக்கிற வரைக்கும் இது தான், இந்த அழுந்த முகம்.. என் மனசில அப்படியே நிக்கும்.” கண்ணைத் துடைத்து நெற்றியில் இதழ் பதிக்க..
அழகாய் நீர் வழிய சிரித்தாள். “சந்தோஷம் அதிகம் ஆகும் போது கூட கண்ணுல தண்ணி வரும் மூர்த்தி சார். உங்க துளசி மனசெல்லாம் நீங்க தான். அதனால அவ ரொம்ப சந்தோஷமா இருக்கா. ரெண்டு வாரம் இங்க ஜாலியா இருந்துட்டு வந்திடுவேன். கவல படாம தெம்பா கிளம்புங்க மீச கார வாத்தியாரே..” இதழ் விரிய, அவன் மீசையை முறுக்கிவிட்டு பதில் கூறினாள்.
பட்டு உதட்டில் பட்டும் படாமலும் இதழ் ஒற்றி, கன்னம் வருடிச் சென்றான்.
ஆசை நெஞ்சம் ரெண்டும் கள்ளுண்ட வண்டாய் நின்றது. காத்திருப்பும் சுகமானது தானே..
புழுதி பறக்க கார் பார்வையிலிருந்து மறைந்தது. அது மறைந்த அடுத்த நொடி, அவள் முன் வந்து நின்றான் செல்வன்.
“தனியா என்ன பண்ணிட்டு இருக்க? வா மைனி..” என்று கையோடு அழைத்துச் சென்றான்.
“உங்க அண்ணா அவர் பொண்டாட்டிய தனியா விட கூடாதுன்னு சொல்லிட்டு போனாராக்கும்?”
சிரித்தான். “அண்ணா சொல்லாட்டா கூட என் மைனிய தனியா விட மாட்டேன். வா..” என்றான்.
மூர்த்தி கூறியது போல் அடுத்து வந்த வாரம் மூர்த்தி இல்லை என்ற குறை மட்டும் தான். அவ்வளவு பெரிய குடும்பத்தில் நேரம் போவது ஒன்றும் கடினமாயிருக்கவில்லை. முல்லையின் தேவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து கவனித்தாள். பகலில் குழந்தையும் வேலையும் இழுத்துக்கொள்ள, இரவில் பாரதியின் அணைப்பில் தனிமை தெரியவில்லை.
ஒரு வாரம் முடியவும் பள்ளி படிக்கும் குட்டிகளுக்கு அரையாண்டு விடுப்பு ஆரம்பிக்கவும் நேரம் ரக்கை கட்டி பறந்தது. முல்லை, குழந்தையோடு இருக்கவும் பாரதி, துளசி மடிக்கு மாறி போனாள். எங்குச் சென்றாலும் வால் பிடித்து நடந்தாள்.
அன்று மாலை துளசியும் செல்வனுமாக தங்கத்தையும் பாரதியையும் அழைத்துக் கொண்டு மலைக்குச் செல்ல, நந்தினி எதிரில் வரவும் செல்வனிடம் பெருமூச்சு. என்ற முயன்றும் நந்தினி செல்வனிடம் பிடிகொடுக்கவில்லை. உடல் மொழி பிடித்தத்தைக் காட்டினாலும், அவனோடு நின்று ஒரு வார்த்தை பேச மாட்டாள். இரண்டு நாட்களாக அவன் முகமும் சரி இல்லை.
போவதற்கு முன் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்த துளசி, நந்தினியிடம், “வாயேன் நந்து.. எனக்கும் போர் அடிக்காம இருக்கும்.” என்று ஏதேதோ கூறி அவர்களோடு அழைத்துச் சென்றாலும் செல்வனுக்காகப் பேசவில்லை.
அவரவர் வாழ்வின் முடிவை அவரவர் தான் எடுக்க வேண்டும் என்பது அவள் கருத்து. செல்வனும், துளசியோடும் பிள்ளைகளோடும் அவன் பேச்சையும் விளையாட்டையும் நிறுத்திக் கொண்டான்.
நந்தினியின் கவனம் முழுவதும் செல்வன் மேல் தான். இருந்தும் அவன் அருகில் செல்லவில்லை. மலையின் ஊற்றில் பிள்ளைகளோடு துளசி கால் நனைத்திருக்க.. செல்வனின் பொறுமையும் அதன் எல்லையை தொட்டது.
பாறை ஓரம் நின்று இவர்கள் மூவரையும் வேடிக்கை பார்த்து நின்றவளிடம் சென்றவன், “உன் விருப்பம் தெரிஞ்சுகிட்டு, உன்ன கல்யாணம் பண்ண அக்காட்ட கேக்கலாம்ன்னு இருக்கேன் நந்து. கேக்கட்டுமா?” என்று அதிரடியாகத் தான் ஆரம்பித்தான்.
தெரியுமே அவளுக்கு… செல்வன் அவளை ஜாடை மாடையாகப் பார்ப்பது எல்லாம் அவளுக்கும் தெரியும். ஆனால் இதை.. இப்படி வந்து கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
யார் காதிலாவது விழுந்திருக்குமோ என்று பார்க்க.. துளசியும் பிள்ளைகளும் அவர்கள் உலகில் சிரித்து விளையாடிக் கொண்டு.
“எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. உனக்கு அக்கா மாப்பிள்ளை பாக்க பெரியண்ணா கிட்ட பேசிட்டு இருக்காங்க. அண்ணா என் கிட்ட எவன பத்தியோ சொல்லி விசாரிக்க சொன்னாங்க. என்ன நந்து விசாரிக்கவா?”
‘மாப்பிள்ளையா? திருமணமா? அவளுக்குத் தெரியாதே. அவள் மூர்த்திக்காக வீட்டில் செய்த ஆர்பாட்டம் நடந்து ஒன்பது மாதம் இருக்குமா? அதற்குள் மீண்டுமா?’
அவன் முகம் பார்க்கவில்லை. தரையைப் பார்த்தே நின்றாள்.
“படிப்பு மண்டையில ஏறல. அதுல பெருசா எனக்கு விருப்பமும் இல்ல. நானும் பெரிய அண்ணனுங்க மாதிரி நம்ம வயல பாத்துக் போறேன். என் விருப்பம் இது தானான்னு கேட்டா, இல்லன்னு தான் சொல்லுவேன். என் தேடல் என்னன்னு இன்னுமே எனக்கு தெரியல. அதுக்காக எதுவும் செய்யாம சுத்த முடியாது. சோ.. வயல் தான்.
உன்ன எனக்கு பிடிச்சிருக்கு. ஒரு ஏழு மாசமா தான் உன் பக்கம் என் பார்வை போக ஆரம்பிச்சுது. உன் டிகிரி முடியறவரைக்கும் பார்த்துட்டே தான் இருந்திருப்பேன். எனக்குத் தான் படிப்பு ஏறல, படிக்கிற பொண்ண தொந்தரவு பண்ணகூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா அக்கா உன் கல்யாணத்துக்கு அவசர படுறாங்க. ஊர்ல இல்லதா பொல்லாத மாப்பிள்ளை கைய விட்டு போயிட கூடாதாம்.. அதுக்கு தான் அவசரம்.
முல்லை மைனியோட சொந்தம். தூத்துகுடியில கவர்மென்ட் வேலையா இருக்கானாம். நல்ல சம்பளமாம். பெரிய அந்தஸ்தான குடும்பமாம். அதனால விசாரிக்க சொன்னாங்க. சொல்லு நந்து… விசாரிக்கவா?”
“நான் நல்ல பொண்ணு இல்ல மாமா” என்றாள் தயங்கித் தயங்கி.
“இந்த உலகத்துல யாருமே நல்லவங்க இல்ல நந்து. சந்தபர்வாதியா நல்லவன் போர்வை போத்திக்கிறோம். ஆனா அது என் கேள்விக்கான பதில் இல்லியே..”
“போன வருஷம் தான்.. பாட்டி எனக்கும் சின்ன மாமாக்கும் கல்யாணம்னு சொன்னாங்க.. நான் கூட..”
“அண்ணாக்கு கல்யாணம் ஆகி மைனி கூட சந்தோஷமா இருக்காங்க… அதனால அந்த பேச்சு வேண்டாம்.”
தலை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
“எனக்கும் மூர்த்தி மாமாவுக்கும் கல்யாணம் நடக்காட்டா செத்துடுவேன்னு மிரட்டற அளவுக்குப் போனேன்.. நான் எப்படி உங்கள?”
திரும்பி பார்த்தான். துளசிக்குக் கண்டிப்பாகக் கேட்டிருக்காது.
“நான் பத்தாவது படிக்கும் போது எட்டாவது படிச்ச டெய்சிய லவ் பண்ணினேன். ரெண்டு வருஷ தெய்வீக காதல். அவ பத்தாவது முடிஞ்சதும் வேற ஊருக்கு போயிட்டா. செத்து போய்டலாம்ன்னு நினைச்சேன்… ரெண்டு நாளைக்கு. அதாவது புது இங்கிலிஷ் டீச்சரை பார்க்கிறவரைக்கும்.
பன்னெண்டாவது படிக்கும் போது இங்கிலிஷ் டீச்சர் மேல கொள்ளை பிரியம். எக்ஸாம் முடியறதுக்குள்ள அவங்களுக்கு கல்யாணம் ஆகி போயிட்டாங்க. நம்மள விட வயசு பெரியவங்க… போனா போகுதுன்னு பெரிய மனசு பண்ணி விட்டுடேன்.
போன ஒரு வருஷமா உன் ஃப்ரெண்டு கிரிஜாவ தான் சைட் அடிச்சிட்டு இருந்தேன். பாவி என்னைத் தான் பார்த்து பல்ல காட்டுறான்னு நினைச்சா… என் கூட சுத்துவானே வேலு.. அவன தான் பார்த்து பல்ல காட்டி இருக்கா!! சரி, ஃப்ரெண்டு பையன் தானேன்னு ஒதுங்கிட்டேன். மனசு உடைஞ்சே போச்சுன்னா பார்த்துக்கோயேன். இப்போ வேலுவ பார்த்து சிரிக்கிறது இல்லியாமே.. அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு வேலு சொன்னான்.. உண்மையா?”
முந்தியை வாயில் அடைத்துக் கொண்டு குலுங்க ஆரம்பித்தாள். என்ன முயன்றும் அடக்க முடியவில்லை சிரிப்பை. புன்னகைத்து நின்றான்.
“என்ன நந்து? இந்த கெட்ட மாமா கூட வாழ சம்மதமா?”
“..” விழித்தாள்.
“ரொம்ப பயமுறுத்திட்டேனோ? சரி இனி மேல் உன்னை மட்டும் தான் சைட் அடிப்பேன். ஒக்கேவா?”
“திடீட்ன்னு.. ஏன் மாமா?”
“தெரியலையே! நீ பாக்க அட்டகாசமா இருக்க…” அவள் முறைத்தாள்.
பல்லைக் காட்டினான். “சாரி.. இப்போ தான் கவனிச்சேன். அது கண்டிப்பா ஒரு ரீசன். மொக்க ஃபிகரை எல்லாம் கண்டிப்பா இந்த செல்வனால சைட் அடிக்க முடியாது நந்து.
அப்புறம்.. சும்மா இருந்த உன்ன, அம்மா தான் உசுபேத்தி விட்டு கல்யாண ஆசை காட்டி.. அதை அடைய தற்கொலை பண்ண போறதா ஆக்ட் விட ஐடியா எல்லாம் கொடுத்தது. எப்படி தெரியும்னு கேக்காத. என் அம்மாவ எனக்கு நல்லாவே தெரியும்.
நீயும் சின்ன பொண்ணு… ஏதோ ஒரு ஆசை உள்ளுக்குள்ள! பாட்டிய நம்பி ஏமாந்துட்ட! இருந்தும் அண்ணாக்கு மைனிய தான் பிடிக்கும்ன்னு கூட்டிட்டு வந்த பிறகு நீ அவங்கள எந்த விதத்துலேயுமே தொந்தரவு பண்ணல. இந்த கல்யாணம் நடக்க எந்த தடங்கலுமே ஏற்படுத்தல… அவங்க கூட பாசமா பழகற! நீ ரொம்ப நல்ல பொண்ணு நந்து. அதுக்கப்புறம் தான் உன்ன கவனிக்கவே ஆரம்பிச்சேன். பாக்க பாக்க பத்திகிச்சு.. என்ன பண்ண?
உனக்கு அப்பா இல்லன்னு ஒரு ஏக்கம். உன் ஏக்கம் தீர நான் உனக்கு எல்லாமா இருக்கணும்னு ஒரு ஆசை. அதுக்கு.. நீ எனக்கே எனக்கா இருக்கணும். இருப்பியா நந்து?”
“சின்னையா..” பாரதி ஓடி வந்தாள்.
“என்ன மா?”
“இருட்ட ஆரம்பிக்குது. வீட்டுக்கு போலாமான்னு சித்தி கேட்டாங்க”
“ம்ம்.. கிளம்பு கிளம்பு.. போலாம்ன்னு சொல்லு..”
நடக்க ஆரம்பித்ததும், “என்ன நந்து.. என் வாழ்கையிலும் கூடவே வரியா? நாலாவது காதல் தோல்வி எல்லாம் இந்த பாடி தாங்காது நந்து. சின்ன ஹார்ட்.. பலவீனமான இதயம். பார்த்து பதில் சொல்லு.” என்றான் பாவனையாய்.
சிரித்தாள். பதில் கூறாமலே அவள் பதில் தெரிந்தது. வீட்டிற்குள் நுழையும் வரை கூடவே நடந்தாள். நண்பர்களோடு சுற்றித் திரிந்து, படிப்பை எக்கச்சக்கமாக கோட்டை விட்ட விளையாட்டு செல்வனைத் தெரியும். மூர்த்தியிடம் அடி வாங்கியும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசாத, பக்தியுள்ள சகோதரனாய் செல்வனைத் தெரியும். வீட்டிற்கு வந்த புது பெண்ணிற்குத் தோழனாய் கூடவே நின்ற அன்பான செல்வனைத் தெரியும்.
இன்று அவன் வேறாகத் தெரிந்தான். அவன் கூறிய கிரிஜா விடயம் அப்படியே பொய் என்று தெரியும். எத்தனை முறை கிரிஜா இவளிடமே தூது அனுப்ப முற்பட்டாள். இவன் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்றானாமே..
செல்வனைப் பிடித்தது. அப்பா போல் இருப்பேன் என்றதுமே வேறு காரணம் தேவை இல்லாது போனது.
“எனக்கு தமிழ் டீச்சர் ஆகணும் மாமா. எம்.ஏ முடிச்சதும் கல்யாணம் வச்சுக்கலாம்னு அம்மாட்ட சொல்லிடுங்க மாமா” என்றாள் கண்கள் பளிச்சிட.