செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 39_1
துளசியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு இரண்டு வாண்டுகளும் முத்தமழை பொழிந்து கிளம்பிவிட, செல்லும் ரயிலிருந்து தெரிந்த பிஞ்சு கைகளுக்குக் கையசைத்துக் கொண்டிருந்தாள்.
“வா போலாம்… நீ காட்டுற டாடா எல்லாம் ஆவங்களுக்குத் தெரியாது.” அழைத்தது மூர்த்தி.
“தெரியாதுன்னு தெரியும்.. ஆனாலும் நானும் டாடா காட்டுவேன்னு ஒரு நம்பிக்கையில தானே ரெண்டு பேரும் டாடா காட்டறாங்க. இது அந்த நம்பிக்கைக்காக”
பைக்கில் ஏறி அமர்ந்தவள், “மூர்த்தி சார்.. ரத்னா கஃபே போலாமா?” என்றாள். இனிப்பு கலந்த கசப்பு தேவைப் பட்டது.
கடந்து சென்ற மூன்று வாரம், பெண்ணை ஒரு வழி ஆக்கியிருந்தது. கல்லூரி, விடுபட்ட பாடம், குழந்தைகள், வீட்டில் அதிகப் படியான வேலை, பாம்பே சென்று வந்த அலைச்சல், பள்ளி பற்றிய சிந்தனை, புதிதாகப் புகுந்து கொண்ட நலவாழ்வு மையம்.. எல்லாம் சேர்ந்து மனதிற்குள் ஒரு அழுத்தம். அயர்வு.
எல்லாவற்றையும் களைந்து மூர்த்திக்கு மட்டும் மனைவியாய் இருக்க ஆசை. அதற்கும், முதலில் மனச் சோர்வை களைய வேண்டுமே..
சூடான காபி தொண்டையைத் தழுவிச் சென்றது. மெட்ராசில் கால் பதித்த அன்று நாவை மகிழ்வித்த அதே சுவை. அன்றிலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் மனம் அசைபோட்டது.
காபியை வாய் அருந்த, கண் எதிரில் இருந்தவனை அருந்தியது. இரண்டுக்குமே ருசி அதிகம். ஒன்றில் கசப்பு அதிகம் ஒன்றில் இனிப்பு அதிகம்.
காபியோடு, டிபனும் உள்ளே சென்றுவிட, நிறைந்த வயிறோடு கடற்கரையில் அமர்ந்து கொண்டனர். மௌனம் அரசாண்டது. அதனால் குடிமக்கள் பேசிக் கொள்ளவில்லை. அலை மட்டும் கட்டுப்படாமல் ஓசை எழுப்பிக்கொண்டே இருந்தது. அந்த ஓசையில் அத்தனை இதம். தாயின் தாலாட்டு போல். தலைவன் தோளும்.. தாயின் தாலாட்டும்… உப்பு காற்றின் வருடலும் அனுபவிக்க வேண்டிய சுகம். ரசித்தாள். கண் மூடி ஆழ்ந்து ரசித்தாள்.
“துளசி மா… எழுந்திரு. வீட்டுக்குப் போய் தூங்கலாம்.”
பேந்த பேந்த விழித்த பின் தான் தெரிந்தது.. மூர்த்தியின் தோளில் சாய்ந்து உறங்கிப் போனது.
அவன் குளித்து அறைக்கு வரும் முன் அவள் குறட்டை விட்டிருந்தாள். பெருமூச்சைத் துணைக்கு அழைத்து, படுத்துக் கொண்டான். அவன் தவிப்பு புரியவில்லையா? அவளுக்கு ஆசை இல்லையா? சின்ன குழப்பம் அவனுள்.
இரவு முடிந்து, பகல் ஆரம்பிக்க… மீண்டும் அவர்கள் வழமையும் ஆரம்பமானது. வழமைக்கு மாறாக அவன் மட்டும் காபியோடும் காக்காவோடும்!
“அந்த காக்கா கூட என்னைத் தனியா விட்டுட்டு.. இவ்வளவு காலையில இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”
அடுக்களையில் நின்றிருந்தவளை பின்னோடு அணைக்கவும்.. பெண் நெளிந்தாள். அணைப்பு என்பது அவர்களுக்குள் புதிதல்ல.. இருந்தும் நெளிந்தாள். யாருமில்லா தனிமை.. இந்த அணைப்பு எங்குப் போய் நிற்கும் என்று தெரியாதவளா? லேசாக நெஞ்சடைத்தது.
“இன்னைக்கு காலேஜ் இருக்கே.. சமைக்க வேண்டாமா?” நெளிந்து கொண்டே திக்கித் திணறி பதில் வந்தது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை.. இன்று சில காரணங்களினால் பாதி நாள் மட்டுமே விடுப்பு.
“ரெண்டு பேருக்கும் பாதி நாள் தானே..?”
“வந்து சமைச்சு சாப்பிட முடியாது. வரும் போதே பசிக்கும்.”
“ம்ம்.. சாப்பாடு முக்கியம்! இத எல்லாம் யோசிச்சு, கரக்ட்டா ப்ளான் போடு..” அவளை தன் பக்கம் திருப்ப.. அவன் நோக்கத்திற்குத் தடை போட்டாள்.
“மூர்த்தி சார்.. நேரம் ஆகுது. முடிச்சிட்டு கிளம்பணும். கொஞ்சம் சீக்கிரம் போகணும்.. நிரைய இன்கம்ளீட் வொர்க் இருக்கு” முகம் பார்க்காமல் பனியனிடம் சொல்லி முடித்தாள்.
சின்ன சலிப்பு மூர்த்தியிடம். “ம்ம்..” சென்றுவிட்டான். நிராகரித்தாளா? அப்படி தான் தோன்றியது. இருக்காது என்றது மனது.
சென்றவன் முதுகு மறைந்த பின்னும் எச்சில் விழுங்கி பார்த்து நின்றாள். கணவன் அணைப்பு வேண்டாம் என்றில்லை. வேண்டும் தான்.. இருந்தும் சின்ன தயக்கம்.. ஒதுக்கம்.
ஏரி குளமெல்லாம் காஞ்சு போச்சு
தாகம் தீர – வான் பார்த்து
வறண்டப் பூமி வாய் பிளந்தாச்சு;
அவஸ்தை புரிஞ்சும் – கர்ப்பிணி மேகம்
பாரத்த இறக்க முடியாம
நாள் பார்த்து தவிச்சு நிக்குது..
வீட்டை பூட்டி அவன் சாவி எடுத்துக் கொள்ள, வண்டி புறப்பட்டது. இறங்கும் வரை மௌனம் தான். ஏன் இந்த மௌனம்? தெரியவில்லை. அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
பேருந்து நிலையத்தில் நிலாவைப் பார்த்ததுமே.. “நான் நிலா கூட போறேனே..?” என்று வாய் திறந்தாள்.
அவளும் குழம்பி அவனையும் குழப்ப ஆரம்பித்துவிட்டாள். ஏன் அவளிடம் ஒதுக்கம்? புரியவில்லை. இறக்கி விட்டவன் முகத்தில் பிரகாசம் இல்லை. ‘என்ன ஆயிற்று இவளுக்கு?’ கேட்டும் விட்டான்.
“என்ன ஆச்சு துளசி? உடம்பு முடியலையா?”
“இல்ல… ஒன்னும் இல்ல. சும்மா நிலா கூட..”
“சரி போ. மதியம் ஸ்டாஃப் ரூம் வா. ஒன்னா போகலாம்”
மீண்டும் முதுகைத் தான் வெறித்தாள்.
“என்ன டி.. வீட்டுல சைட் அடிக்க நேரம் இல்லியா? ஓரே பிசியா?” நிலா தோள் இடிக்கவும், துளசியிடம் பதில் இல்லை.
“சும்மா வாய மூடிட்டு வா..”
நிலா தானே வாய் மூடுவது? பேசி பேசியே துளசியை ஒருவழி ஆக்கியிருந்தாள்.
மதியம் கல்லூரி முடிந்து அரை மணி நேரம் சென்று பின், மூர்த்தியை தேடி சென்றாள்.
மூர்த்தி புத்தகத்தோடு அமர்ந்திருந்தான். கவனம் கண்டிப்பாக புத்தகத்தில் இல்லை. துளசியை சுற்றியது என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏதேதோ கற்பனை.. எதிர்பார்ப்பு. கூடவே, இன்னும் துளசியைக் காணாத தவிப்பு. முகத்தில் எதையும் காட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் கடைசி நிமிஷ அவஸ்தை அவனிடம்.
“மூர்த்தி.. சார்…” மேசை மேல் அவள் புத்தகங்களை வைத்தாள்.
அவள் அழைப்பே சரி இல்லை. வீட்டிற்கு அழைக்கும் ஆசை அழைப்பில்லை! கண்டிப்பாக ஏதோ மனுத் தாக்கலுக்கு வந்திருப்பது போல் தோன்றியது.
‘இப்போ என்னவாம்?’ அமர்ந்த வாக்கிலேயே கொஞ்சம் தலையைத் தூக்கி, கண்ணை உயர்த்தி, “ம்ம்?” என்றான்.
“வந்து… நிலா பர்த்டே நாளைக்கு. அதனால இன்னைக்கு வெளியில போலாமான்னு கேட்டா?” பேச்சில் தயக்கம் எட்டிப் பார்த்தது.
மூர்த்திக்கு, குழப்பம் உச்சத்தை எட்டியது.. ‘போயே ஆகவேண்டுமா?’ கூடவே சலிப்பு தட்டியது
“ம்ம்ஹூம்..”
“போகட்டா? நிலாவும் விஜியும் நானும்.” தவிப்பும்.. ஏகப்பட்ட தயக்கமும் எட்டிப் பார்த்தது.
“நீயே சொல்லு. உனக்கு போகணும்ன்னு தோணுதா?” பல் இன்னும் அரைபடவில்லை.
“இன்னைக்கு இல்லேனா… நாளைக்கு போலாமான்னு கேட்டா. சண்டே வீட்டு வேலையே சரியா இருக்கும் முடியாதில்ல.. அதுனால இன்னைக்கே போலாம்ன்னு..”
“ம்ம்ஹூம்..” எரிச்சல் உச்சத்தை எட்டி.. சலிப்பும் உச்சத்தை எட்டியிருந்தது. இருந்தும் முகத்தில் ஒன்றும் காட்டவில்லை.
“லன்சுக்கு வெளில போயிட்டு.. ஈவ்னிங் மூவி போலாம்ன்னு..”
“..” நெற்றி சுருங்க.. சலிப்பு கண்ணை எட்டியது.
“நைட் ஒம்பதுக்குள்ள வந்திடலாம்ன்னு சொன்னா..”
“எதுக்கு அவ்வளவு சீக்கிரம் துளசி?
பச். சரி, கூப்பிட எங்க வரணும்?” கடுகடுத்தான்.
“இல்ல மூவி முடிஞ்சதும்.. அருண் அண்ணா வந்து கூப்பிட்டுப்பாங்க. என்னை முதல்ல வீட்டில ட்ராப் பண்ணிட்டு.. அவங்க ரெண்டு பேரையும் ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணுவாங்கன்னு..”
“யார் சொன்னா?” கோபம். அப்படி ஒரு கோபம் அவனுக்கு. அனைவரோடும் பேசி முடிவெடுத்து கடைசியாக தன்னிடம் தகவல் சொல்ல வந்து நிற்பவள் மேல் கோபம். கோபத்தை வெளிப்படுத்த முடியாத இயலாமை. இருக்கும் இடம் அப்படி. ‘எங்க வேணுமோ போ’ என்று கத்தும் அளவிற்குக் கோபம். இருந்தும் அமைதி காத்தான்.
“நிலா தான் சொன்னா.. போகட்டா?”
பதிலில்லை. பார்வை மட்டும் தான். பார்வையை அவளுக்கு படிக்க தெரியவில்லையா? படிக்க விரும்பவில்லையா?
தெரிந்தே கேட்டாள். “வேண்டாமா மூர்த்தி சார்..? கோபமா?”
பர்ஸ் எடுத்து அவளிடம் நீட்டினான். வாங்கினாள் இல்லை. “என் கிட்ட இருக்கு மூர்த்தி சார்.”
கையிலிருந்த பர்ஸ்சை பட்டென்று மேசையின் மேல் போட்டான்.
“கோபம் தான். ஏன்னு உனக்கு நல்லாவே தெரியும். நீ போக முடிவு பண்ணிட்டு வந்து நிக்கிற.. இனி என் கிட்ட கேக்க என்ன இருக்கு. பத்திரமா போய்ட்டு வா.” என்றுவிட்டு மீண்டும் புத்தகத்தில் புதைந்தான்.
தலையை நிமிர்த்தினான் இல்லை. ‘தான் அவளுக்கு ஒன்றுமே இல்லையா?’ என்ற அடிபட்ட உணர்வு. ‘உன்னை எதற்கும் தேட போவதில்லை’ என்ற வீராப்பு. ‘வேணும்னா நீயே வா’ என்ற வீம்பு. என்ன புத்தகம் என்று தெரியாமலே புத்தகத்தை புரட்டினான்.
“என்னங்க…”
“பிள்ளைங்க வீட்டுக்கு வரேன்னு அடம் பண்ணினாங்களா? இல்லை நீயே ஆச காட்டி கூட்டிட்டு வந்தியா துளசி?” திடீர் சந்தேகம்.
“ஏன் இப்படி பேசறீங்க?”
குழந்தையின் வாயில் வைத்த மிட்டாய் பிடுங்கப்பட்ட தருணம். அவன் எதிர்ப்பாக்காத அடி. தன்னை கண்டு மனைவி ஓடி ஒளிகிறாள். ஏன்? எத்தனை வருட காத்திருப்பு. என்றாவது ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் அவள் விருப்பமின்றி தொட்டிருப்பானா? இன்று ஓட காரணம்? எல்லாம் சரியாகி போன உணர்வை கொடுக்காமல் இருந்திருக்கலாமே.. வாயிலிருந்து உள்ளே இறங்கும் முன் தொண்டையை நெரித்திருக்க வேண்டாமே.. உணர்வு அதிகமாக அடிபட்டது.
“பதில் இது இல்ல துளசி. விடு. அது முடிஞ்சு போன கதை! இது, நான் வேலை செய்யற இடம். எனக்கு வேலை இருக்கு. நீ எங்க போகணுமோ போ. தூங்கிறதுக்கு வீட்டுக்கு வந்து சேரு. நீ எப்போ வேணும்னாலும் வா. பயப்படாம வா. மேல பாயா மாட்டேன்.”
மூர்த்தியும் உணர்வு படைத்த மனிதன் என்பதால் அவன் பதிலில் சற்று காரம்.
அவன் பேச்சின் காரணம் புரியாமலில்லை. தயங்கி நின்றாள்.
“ஹாய் துளசி. பாய் துளசி. நான் கிளம்பறேன் மூர்த்தி” கூறிக்கொண்டே ரதி அவனைக் கடக்கவும்..
“மூணு வரைக்கும் இருக்க போறதா சொன்ன?”
“ஃபோன் வந்துது. அவரோட அக்கா, என் நாத்தனார் வந்திருக்காம். வீட்டுக்கு வர சொன்னார். என்னத்த இழுத்து வச்சிட்டு போக போகுதோ?”
இதற்கு மேல் அங்கு நின்று என்ன செய்ய.. “கிளம்பறேன்” என்று துளசி நகர ஆரம்பித்தாள். திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.. “ம்ம் பத்திரம்” என்றவன் மீண்டும் ரதியின் புறம் திரும்பினான்.
“நல்ல மனுஷன். அவருக்காகக் கொஞ்சம் பொறுத்து போ ரதி..”
“எதுக்கும் ஒரு எல்லை இருக்கு மூர்த்தி. அந்த பொம்பளை வந்து போனாலே வீட்டில ஒரே பிரச்சினை. அவ வர வரைக்கும் அவரும் நல்லவரு தான். அவள பார்த்துட்டா இவருக்கும் கொம்பு முளைக்குதே. இவ வரலன்னு யாரு அழுதா? இம்சை! எல்லாம் என் தலை எழுத்து. சரி பா.. கிளம்பறேன்”
துளசி அறையை விட்டு வெளியில் சென்றிருக்கவில்லை. மூர்த்தியின் பேச்சு துளசியை நிறுத்தியது.
“எனக்குப் போக இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும். காலையும் ஒழுங்கா சாப்பிடல. பசிக்குது ரதி. நீ வீட்டில போய் தானே சாப்பிட போற? உன் டப்பாவ குடுத்திட்டு போ.. மண்டே நீ சாப்பாடு எடுத்திட்டு வராத.”
“தனியா உக்காந்தா சாப்பிட போற? நீ பொறுமையா என் கூட பேசிட்டே சாப்பிடு. நீ முடிச்சதும் போறேன்.. எனக்கு ஒரு அவசரமும் இல்ல பா.”
நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு ரதி கதை பேச அமர்ந்துகொள்ளவும், துளசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கால் நகர மறுத்தது. தவறு செய்வது அப்பட்டமாகத் தெரிந்தது. இருந்தும் அவளால் நிற்க முடியவில்லை. உள்ளுக்குள் ஒரு தவிப்பு. இனம் காண முடியா படபடப்பு. என்ன உணர்வு என்று பகுத்தறிய முடியவில்லை. தனிமை கண்டிப்பாகத் தேவை.
“வா டி.. பசிக்குது. விஜி காத்துக் கிடப்பா..” நிலா உள்ளே நுழைந்து இழுக்க.. துளசியின் பார்வையில் மூர்த்தி மட்டுமே.
நடப்பது தெரிந்தும், வேண்டுமென்றே அவனும் திரும்பினான் இல்லை. ‘எட்டு மாதமில்லை.. எட்டு வருடம் ஆனாலும் எதுவும் மாறப்போவதில்லை’ என்ற சலிப்பு அவனிடம்.
எதிலிருந்தோ தப்பிக்கத் தான் நிலாவோடு, துளசி வெளியே செல்வது. ஆனால் இப்பொழுது எதிலோ மட்டிக் கொண்ட உணர்வு. போக மனமில்லை.
‘ஏன் துளசி?’ மனமோடு பேச ஆரம்பித்தாள். இதை ஒருவரிடமும் பேச முடியாதே. மனமோடு பேசிக்கொண்டே இருக்க.. எதிரில் இருப்பவர்கள் தெரியவில்லை. மூர்த்தியின் பார்வை மட்டுமே தெரிந்தது. அது என்ன பார்வை?
தொண்டைக்கடியில் உணவைக் குத்தி இறக்காத குறை. எங்குச் சென்றாள்? யாருடன் சென்றாள்? என்ன செய்தாள்? எதுவும் பதியவில்லை.
மணி மூன்றை தொடவும்.. பேக்கரிக்குள் நுழைந்தனர்.
அவளால் எதிலுமே மனதைப் பதியவைக்க முடியவில்லை. மனம் தான் அவனையே சுற்றி வருகிறதே… உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. காலை மூர்த்தியின் அணைப்பில் ஏற்பட்ட நெஞ்சடைப்பு.. இன்னும் அதிகமே ஆனது. ஏன் என்றே புரியவில்லை. வெளிவர முடியாத சுழல் உள்ளிழுத்தது. இதயம் பேசுவதைக் கேட்க முடியாத ஆற்றலற்ற நிலை. மூளை செயலிழந்துவிட்டதா?
தேர்வு ஆரம்பிக்கும் வரை தான் பீதி எல்லாம். வினாத் தாள் கையில் கிடைத்துவிட்டால், பயம் தெளிந்துவிடும். மூர்த்தியிடமே உணர்வை வெளிபடுத்துவது தான் சரி.. என்றது மனம்.
‘மூர்த்தி சார்’ அவளின் தேடல். அவரிடம் சென்றால் நெஞ்சின் பாரம் குறையும். அவளின் சுமை தாங்கியாயிற்றே.
‘சுமை தாங்கி அவளைக் கையில் ஏந்த..’ ஊரிலிருந்து மூர்த்தி கிளம்பிய அன்று நடந்த ஒவ்வொன்றும் சாரலாய் உள்ளம் தீண்டியது. மூர்த்தியின் கையில் மயங்கி நின்றது நினைவில் இனித்தது.
‘துளசிக்கு மூர்த்தி சார எவ்வளவு பிடிக்கும்னு காட்டட்டுமா?’
ஒவ்வொன்றாய் நினைக்க நினைக்க.. பனிப் படலம் மறைந்தது. மூர்த்தி வேண்டும் என்ற தெளிவான நிலை ஏற்படவும் இதழ் விரிந்தது. வீட்டில் இருப்பார். இப்பொழுதே ‘எவ்வளவு பிடிக்கும்’ என்று காட்டும் ஆசை துளிர்விட்டது. மூர்த்தி சாருக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை உணரவேண்டாமா?
“என்ன துளசி சொல்ற?”
“எதுக்கு டி.. இவ சம்மந்தமே இல்லாம சிரிக்கிறா?”
“ஏய் துளசி உன்னத்தான்?”
“ஏய் லூசு?”
“துளசி?” விஜி உலுக்கவும்.. விழித்தாள்.
“எந்த உலகத்துல இருக்க? உடம்பு எதுவும் முடியலியா? தானா சிரிக்கிற? இவ்வளவு நேரம் அழற மாதிரி இருந்த?” நிலா நெற்றியைத் தொட்டு பார்த்துக்கொண்டே.. “காலைல இருந்தே இப்படி தான் இருக்க. வீட்டுக்கு போறியா?”
அவ்வளவு தான் கேட்டாள். துளசியின் அகமும் புறமும் மலர்ந்தது.
“கிளம்பட்டா நிலா? கோவம் இல்லியே… எப்படியோ போல இருக்கு. இப்போவே போகணும் போல இருக்கு” தவிப்பாய் வார்த்தைகள் வந்து விழுந்தது.
“நீ கிளம்பு தாயே.. நீ இங்க இருந்தாலும் இங்க இல்ல. உன்ன வச்சு மேய்க்க முடியாது. நீ கிளம்பறதுன்னா இப்போவே கிளம்பு. மழை வரும் போல இருக்கு. நல்லா இருட்டிட்டு வருது”
அடுத்த ஐந்தாவது நிமிடம், துளசியைத் தாங்கிக் கொண்டு, ஆட்டோ ரிக்ஷா வீட்டை நோக்கி பயணப்பட்டது. அமர்ந்திருக்க முடியவில்லை. சிறகிருந்திருக்கலாம். ஏதேதோ எண்ணம் எட்டிப் பார்க்க.. மீசை முடி குறுகுறுக்க.. மென் முறுவல் உதட்டை ஆக்கிரமித்தது. என்ன முயன்றும் துடைத்தெறிய முடியவில்லை. மனம் லேசானது.