செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 40
வாழ்க்கை சுகமானதா?
“ஒழுங்கா ஆடாம உக்காருங்க மூர்த்தி சார்.. இப்படி ஆடிட்டே இருந்தா நான் எப்படி பூ கட்ட?” இது துளசியே தான். மூர்த்தியிடம் வம்பு செய்து கொண்டு.
பொன்னிற கதிர்கள் சிந்தும் கதிரவன் மறைந்து கொண்டிருக்கும் மாலை வேளையில்.. மந்தமான தென்றல் தீண்ட.. உயிராய் நேசிக்கும், கணவன் முதுகில் சாய்ந்து அமர்ந்து கதை பேசும் பாக்கியம் கிடைத்தால், வாழ்க்கை சுகமானது தான்.
வாழ்வு சுவையானதா?
“மூர்த்தி சார்! என்னத்த ஊட்டுறீங்க நீங்க? வாய் காலியா இருக்கு.. ஆஆஆ..” தலை சாய்த்துக் கேட்பவள் அழகில் மயங்கி வாயில் திரளி கொழுக்கட்டைக்குப் பதிலாக.. மென்று தின்ன உதட்டைக் கொடுக்க, கணவன் இருந்தால்.. வாழ்வு சுவையானது தான்.
நல்ல ஒரு மழை நாளில் ஆரம்பித்த மூர்த்தி-துளசியின் வாழ்க்கை, தங்கு தடையின்றி இனிமையாகச் சென்றது. மனைவியாய், தாயாய், மகளாய்.. எல்லாமாய் தலைவன் வாழ்வை நிறைக்க தலைவி இருந்தால் வேரென்ன வேண்டும்? துளசி முற்றிலுமாக மூர்த்தியை ஆட்கொண்டிருந்தாள்.
அன்றைய கூடலுக்குப் பின், மழையைப் பார்த்தாலே துளசிக்கு ஜோராய் போகும். அன்றைய இரவை போலவே.. மழைச் சாரல் மேனி தீண்ட, கணவன் மடியில் அமர்ந்து மார்பில் சாய்ந்துகொண்டே சூடான பச்சியோடு சுடச்சுட ஏலக்காயும் இஞ்சியும் தட்டி போட்ட தேநீர் அருந்துவதில் அலாதி பிரியம்.
மூர்த்தி, அவள் கொஞ்சல்களுக்கும் விட்டுக் கொடுக்க.. அதன் பலன் நன்றாயிருக்கவே அவன் மிஞ்சல்களுக்கும் அளவில்லை. சின்ன சின்ன தீண்டல்களும், பெரிய பெரிய அத்து மீறல்களும் அவர்கள் வாழ்வை இனிமையாகவே நகரச் செய்தது.
பதின்ம வயது வாலிபனுக்கு மட்டும் தான் காதலியைக் கண்டால் மனம் துள்ளுமா என்ன? துடிப்பான மனைவி இருந்தால் முப்பது வயது ஆண்மகனுக்கும் அதே நிலை தான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது மூர்த்தி துளசி விஷயத்தில் பொய்த்துப் போனது. சிறு சிறு விஷயத்திலும் முழு இன்பம் கண்டனர்.
இருவர் மட்டுமே வீட்டில் இருப்பதாலோ என்னவோ.. வருடத்திற்கு இருமுறை கன்னியாகுமரி சென்று வீட்டினரோடு இருந்து வரும் நாட்களை இருவருமே எதிர்நோக்க ஆரம்பித்தனர். இதோ இன்றும்.. அதற்குத் தான் ரயில் நிலையத்தில் இருவரும் நின்று கொண்டு!
மூர்த்தியின் பி.ஹெ.டி-யும் முடிந்திருக்க.. இன்னும் ஆறு மாதத்தில் துளசியின் முதுகலை பட்டப்படிப்பும் முடிந்துவிடும் என்ற நிலையில் மெட்ராசை விட்டு, குடும்பத்தினரோடு இருந்துவிடலாம் என்ற யோசனையில் இருவரும்.
மார்த்தாணடம் கல்லூரியில் மூர்த்திக்கு எளிதில் வேலை கிடைத்துவிடும். அவர்கள் ஆரம்பித்த பள்ளி எட்டாவது வரை இருக்க.. இந்த வருடம் பத்தாவது வரை அங்கீகாரம் கிடைத்துவிடும். அடுத்து வரும் வருடங்களில் பன்னிரண்டாவது வரை நடத்த அனுமதி கிடைத்துவிட்டால், அவர்கள் ஊர் பிள்ளைகள் எந்த சிரமும் இல்லாமல் உள்ளூரிலேயே கல்வி பயிலலாம். நாளடைவில் துளசியே அதை எடுத்து நடத்தவும் ஆரம்பித்துவிடலாம். துளசியிடம், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை நல்ல முறையில் கொண்டு வர பல திட்டங்களும் பல யோசனைகளும் இருக்க.. அவள் அங்கிருக்க வேண்டும் அதைச் செயல் படுத்த.
ஒழுக்கமான மாணவனை உருவாக்கினால் பல கோமல்கள் உருவாவதைத் தடுக்கலாம் என்பது அவள் எண்ணம். பெண்களுக்கும் தைரியமும், தற்காப்பு திறனும், உலகறிவும் வேண்டும், இந்த உலகில் வாழ! இது எல்லாம் சிறு வயதிலேயே பிள்ளைகள் மனதிலும் வாழ்க்கை முறையிலும் பதிக்க வேண்டும். நாளை சமுதாயம் ஒழுக்கமான சமுதாயமாக வரட்டுமே… என்ற ஆசை தான்.
இவை எல்லாவற்றையும் யோசித்த பின்னரே இந்த இடமாற்றம் பற்றிய தீவிர யோசனை.
மாமிக்கு மட்டும் தான் இந்த யோசனையில் வருத்தம். “எங்க இருந்தாலும் நன்னா இருடி கோந்தே. நேரம் கிடைக்கும்போது மாமிக்கு கடுதாசி போடு. வசதி பட்டா ஒரு ஃபோன் போடு. குடும்பமா சந்தோஷமா இருடிமா” என்றவரின் கண் பனிக்கத்தான் செய்தது.
“இன்னும் இருக்கு மாமி ஆறு மாசம்.. இப்போவே கண்ணுல நீர் விட்டுட்டு நிக்காதீங்க. என் சார்பா என் காக்காவ விட்டுட்டு போறேன். பாத்துக்கோங்க..” ஏதோ தனக்குத் தெரிந்த ஆறுதல்.
காலை வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்க இன்முகங்கள் காத்திருந்தது. அதே கோழி கூடு.. அதே ஆடு.. அதே மாடு.. அதே கருப்பன்.. எல்லாம் அதே தான் அங்கும். ஆனாலும் குடும்பமாய் கூட்டத்தோடு இருப்பதில் அலாதி இன்பம்.
“மைனி” என்று அவளைச் சுற்றித் திரிய செல்வன் மட்டும் இல்லை. மாதங்கள் முன் அவர்கள் ஆரம்பித்திருந்த மறுவாழ்வு மையம் அவனை இழுத்துக் கொள்ள, ஆறு மாத காலமாகவே செல்வன் பாம்பே புறநகர பகுதியில் வாசம்.
அனுபாமாவும் செல்வனுமாக அதை நடத்திவருகின்றனர். அதில் நந்தினிக்கு மனவருத்தமும், விருப்பமின்மையும் அதிகம்.
‘ஏதோ பெண்களுக்குக் கஷ்டம்… வேண்டுமென்றால் பண உதவி செய்யலாமே இது என்ன வேலை’ என்று கேட்டுப் பார்த்துவிட்டாள். ஆனால் செல்வனால் விட முடியவில்லை. சிறு சிறு பிள்ளைகளுக்கு வழிகாட்டி தேவை இருக்க.. அவர்களுக்கு ஒரு தகப்பனாய்… தோழனாய் இருப்பதில் ஒரு ஆத்ம திருப்தி. நந்தினிக்கே புரியாத விடயம் முத்துவிற்கோ செல்வமணிக்கோ புரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. அவன் எடுத்த முடிவால் இன்று அவன் காதலும்.. கல்யாணமும் இழுவையில்.
பள்ளிக்கு மூர்த்தியோடு சென்று வந்தாள் துளசி. கட்டடம் பெரிதாக இல்லை என்றாலும், பிள்ளைகள் படிக்கக் காற்றோட்டமாய் இயற்கை சூழலோடு நல்ல வசதியாக இருந்தது. சில வகுப்புகள் காற்றோட்டமாக மரத்தடியிலும் நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறை வரும் பொழுதும் ஏதேனும் புதிதாக முளைத்திருக்கும். எல்லாவற்றையும் பார்வை இட்டவளுக்கு பரம திருப்தி.
வீடும், பள்ளியும் என்று வாரங்கள் சென்றிருக்க.. வார விடுமுறையில் தங்கத்தோடும், பாரதியோடு புளியங்கொட்டையை கனலில் இட்டு வறுத்து, மென்று கொண்டே வரவும் சுவாமியின் மூத்த மகள், அப்பொழுது தான் வந்திருப்பாள் போல… உள்ளே நுழைந்தாள்.
சுவாமி நாதன் இரு பெண்களுக்கும் திருமணம் முடித்திருக்க.. மூத்தவள் முழுகாமல் இருக்க.. எதிரில் வந்த துளசியிடம் பரஸ்பர நலன் விசாரிப்பு நடந்துகொண்டிருந்தது.
“ரொம்ப சந்தோஷம்… உடம்ப பார்த்துக்கோ..” துளசி கூறிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்த முத்து இம்முறை கேட்டே விட்டார்.
“இப்பிடி நீ அடுக்கடுக்கா படிச்சுட்டே இருந்தா எப்போ பேரனையோ பேத்தியையோ பெத்துக் கொடுக்க போற துளசி?” என்று.
துளசிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வேண்டாம் என்று அவள் ஒதுக்கவில்லை. தீரா ஆசை… தணியா வாஞ்சை.. போதவில்லை! கிட்டா கனியாய் ஆனது குழந்தை செல்வம்!
“பாட்டி இப்போ அக்காக்கு என்ன வயசாச்சுன்னு பெத்துக்க சொல்ற? இன்னும் நிறைய இருக்கு வாழ்கையில சாதிக்க.. அதுக்குள்ள பெத்துட்டு, அதையும் இடுப்பில ஏந்திக்கிட்டு அடுப்ப ஊதிட்டு நிக்கணுமா? அவங்களுக்கு எப்போ வசதி படுதோ அப்போ பெத்துப்பாங்க. உன் மாமியார் கொடுமைய எல்லாம் எங்கட்ட காட்டாத” மல்லுக்கு நின்றது நந்தினி தான்.
“நான் ஒரு ஆசையில தானே கேட்டேன்.. அதுக்கு எதுக்கு டி இந்த குதி குதிக்கிற நீ?”
“வரிசையா கணக்கே இல்லாம பெத்து போட்டியே.. அப்போ கூட ஆச தீரலையா உனக்கு? நீ பெத்து போட்டதுங்களும் அதையே செய்யுதுங்க! நாட்டு மக்கள் தொகை பத்தி யோசிச்சியா? நாட விடு. நம்ம வீட்டைப் பாரு. முன் வாசல்ல இருந்து பின்னால முற்றம் வரதுக்கு பத்து நிமிஷம் வேணும் போல… நடுவில வர குட்டி பிசாசுங்க கிட்ட இருந்து தப்பிச்சு முழுசா வந்து சேர. உனக்கு ரொம்ப ஆசையா இருந்தா இதுகள்ல ஒண்ண கொஞ்சேன். சும்மா.. கழுத்துல தாலி ஏறினதும் டசன் கணக்கா பெத்து போட்டுடே இருக்கணுமா.. பண்ணி குட்டிங்கள மாதிரி.. போ கிழவி”
‘நந்தினியா பேசியது?’ என்று துளசி வாய் பிளக்க…
“போங்க போங்க… மாமா கூப்பிட்டாங்க” என்று அந்த சூழலிருந்து காப்பாற்றி விட்டாள்.
காப்பாற்றி விட்டவள் மாட்டிக்கொண்டாள்.
பானுவும் அங்கு வர, முத்து பிடித்துக் கொண்டார்.
“ஏண்டி.. உன் பொண்ணு எனக்கு மருமகளா வரணும்னா.. வாய அடக்க சொல்லு. என் மகன கட்டிகிட்டு பிள்ள பெத்து போட மாட்டேன்னு சொல்லணும்னு நினைச்சா இப்போவே சொல்லிட சொல்லு! என் மகனுக்கு ராசாத்தி மாதிரி ஒருத்திய பாத்துக்கிறேன்.”
“ஆமா உன் மகன் பாக்கிற வேலைக்கு இப்போ ராசாத்தி தான் வரிசைல முதல் ஆளா நிக்கிறா?” இதுவும் நந்தினியே தான்.
“காலா காலத்துக்கு அவன கட்டி ஒரு பிள்ளையை பெத்திருந்தா இந்நேரம் என் புள்ள இங்க அவன் பிள்ளைங்கள மேச்சுட்டு இருந்திருப்பான். இப்போ கூட, குறைஞ்சு போகல.. கல்யாணம் பண்ணு எல்லாம் சரியா போகும்”
“அவர் இங்க எப்போ வராரோ அப்போ தான் கல்யாணம். நான் இங்க இருந்து போகவும் மாட்டேன். என்னை இங்க விட்டுட்டு அவர் அங்க இருக்கதையும் ஒத்துக்க மாட்டேன். சேவை செஞ்சு கிழிச்சது போதும்! உன் மகன வர சொல்லு. பாவம் பார்த்து வாழ்க்கைத் தரேன்”
“தலைய கோட்ட விட்டுட்டு இப்போ வால பிடிச்ச கதையால இருக்கு. இருக்கும் போது பிடிச்சு வச்சுக்க தெரியல. வந்துட்டா பேச.. போடி போ.. பாவம் பாத்து கல்யாணம் பண்ண அவன் என்ன வக்கத்தவனா? ராசா டி என்மவன். ஒரு ராசாத்திய நான் கூட்டிட்டு வரேன் என் மவனுக்கு”
“நீ ராசாத்திய தேடி கூட்டிட்டு வா… உன் மவன் எப்படி தாலி கட்டறான்னு நானும் தான் பாக்கறேன்..”
இருவரின் மாமியாய் மருமகள் சண்டையைப் பார்த்து பானு தான் நொந்துபோனார்.
“என்ன மா சத்தம்?” மூர்த்தி வந்ததும், நந்தினி தூணுக்கு பின் மறைய ஒரு வழியாய் கூச்சல் நின்றது.
“நம்ம செல்வனுக்கும் நந்தினிக்கும் காலா காலத்துக்கு ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டாமா அத தான் பேசிட்டு இருந்தோம். அவன வர சொல்லு மூர்த்தி. இங்க இருந்து ஏதாவது செஞ்சு பொழைக்கட்டும்.. நமக்கு என்ன குறைச்சல்? சொந்த மண்ணுல பொழப்ப பாக்காமா அங்க என்ன பண்ணிட்டு இருக்கான்..? ஐஞ்சு காசுக்கு பிரயோஜனம் இல்லாம?”
“நல்ல விஷயம் தான். வர சொல்றேன். அவங்க ரெண்டு பேரும் பேசி முடிவெடுக்கட்டும். அவன் செய்யறது வேலை இல்ல மா சேவை. அதுல லாபம் பார்த்தா அது தொழில் ஆகிடும். நம்மளால முடியல. அவனால முடியுது. தட்டி குடுக்கலனாலும் பரவால. மட்டப்படுத்த வேண்டாம்.
அவன் செய்யற சேவைய விட்டுட்டு வருவான்னு தோணல. இவ அங்க போவாளா? போவானா.. கல்யாணம் முடிஞ்சதும், சத்யன் வீட்டு பக்கம் பார்த்து குடித்தனம் வைக்கலாம். குடும்பம்ன்னு வந்தா யாராவது ஒருத்தராவது விட்டு கொடுக்கணும். யாரு விட்டு கொடுத்து போக போரதுன்னு அவங்க தான் முடிவு பண்ணனும். இல்ல முடியாதுன்னா.. அடுத்து என்ன முடிவெடுக்கன்னு அவங்க தான் சொல்லணும்.
ஆமா.. இவ அண்ணன் எங்க? கல்யாணம் பேசும் போது அவன் வேண்டாமா வீட்டுல?”
பானுவைப் பார்க்க, அவர் விழித்தார். அவர் மகன் என்று அவரிடம் கூறிக்கொண்டு சென்றான்?
“மூணு மாசம் முன்ன தான் வந்து போனான் மூர்த்தி. கல்கத்தாவோ பாம்பேயோ.. கூட்டாளியோட இருக்கதா சொன்னான். இடம் தெரியலடா..”
“அக்கா?”
“என்னை என்ன மூர்த்தி பண்ண சொல்ற? ஒரு ஒரு தரம் கேக்கும் போதும் ஒரு ஒரு இடம் சொல்றான். அந்த ஊரு பேரு எதுவும் மண்டையில நிக்க மாட்டேங்குது. அட்ரெஸ் குடுன்னு கேட்டா.. ஒரே இடத்துல தங்க மாட்டேன்னு சொல்றான்.”
“ம்ச்ச்…. அக்கா! முதல மணிய வர சொல்லுங்க. எங்க இருக்கான்? என்ன பண்றான்? எதுவுமே தெரியல! அது என்ன குடும்பத்துல ஒட்டாம தனியா ஊர் ஊரா சுத்திகிட்டு? வர சொல்லுங்க. இங்கயே குடும்பத்தோட இருந்து அவனுக்கு தெரிஞ்ச வேலையை செய்யட்டும். அவனுக்கு பிடிச்ச பொண்ணு இருந்தா அவளையே கல்யாணம் பண்ணிகட்டும். இல்லியா அவனுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு பார்த்து காலகாலத்துக்கு ஒரு பொறுப்பை குடுங்க.. இப்படி ஒட்டாம ஊர சுத்தறது அவனுக்கும் நல்லது இல்ல.. குடும்பத்துக்கும் நல்லது இல்ல.”
மூர்த்தி கூறியதே சரி என்று பட்டது பானுவிற்கும். இம்முறை வருபவனை மீண்டும் அனுப்பக் கூடாது என்று எண்ணிக் கொண்டார். தங்கை திருமணத்தை அவன் தான் முன்னிருந்து நடத்த வேண்டும். ஆயிரம் விஷயம் பேச இருந்தாலும் அவராக அவனிடம் பேச முடியாதே.. மகன், என்று அழைப்பான்? என்று கடிதம் போடுவான்? என்று காத்திருந்தார்.