செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 40_2
பேசிவிட்டு அறைக்குள் நுழைந்த மூர்த்தி அருகில் சென்ற துளசி, “ஏன் இவ்வளவு கோபம்?” சட்டையின் பொத்தானைக் கழட்டிக் கொண்டே கேட்க..
“சட்டை கழட்ட வேண்டாம் துளசி. சந்தைக்கு போகணும்.”
கழட்டிய பொத்தானை மீண்டும் போட்டுக்கொண்டே, “கோபம் எல்லாம் இல்ல துளசி. வருத்தம் தான். என்ன பண்றான்னே தெரியல. எங்கேயாவது வம்புல மாட்டினா கூட நமக்கு தெரியாது. இவ்வளவு பேர் இருக்க.. ஏன் தனியா அவஸ்தை படறான்? அப்படி என்ன அவனுக்கு இங்க குறை? அவன நினைச்சாலே நிம்மதி இல்ல.”
“ம்ம்.. ஆமா.. என்னை கூப்பிட்டீங்களா?”
“ஆமா.. நாலு நாள்ல கிளம்பணுமே. அக்காட்ட சொல்லி ஊருக்கு கொண்டு போக புளி, மசலா பொடி எல்லாம் ரெடி பண்ணும் போது, மாமி கேட்ட உப்பு மாங்காய் மறந்திடாத. அப்படியே ரதிக்கு கருப்பட்டியும்..”
“எடுத்து வைக்கிறேன்.. எல்லாருக்கும் பிடிச்சத செய்யுங்க. என்ன மட்டும் மறந்து போய்டுங்க..” நொடித்துக் கொண்டாள்.
தலை வாரிக் கொண்டே “நான் எப்போ துளசி உன்ன மறந்தேன்..” என்றவனிடம்
“இந்த தரம் தோட்டத்து வீட்டுல தங்கவே இல்ல. ரெண்டு நாள் முழுசா அங்க இருப்போமே..” எனவும், அவனுக்குப் புரியவில்லை அங்கு போய் தங்க என்ன இருக்கிறது என்று!
“அங்க என்ன இருக்கு? அந்த மணி பய வந்தாலும் அங்க தான் கிடக்கிறான். நீ வந்தாலும் அங்க தான் வேணும்ன்னு கேக்கற! இங்க தானே எல்லார் முகத்தையும் பாக்க முடியுது.. வீடும் பெருசா வசதியா இருக்கு?”
“இங்க பிடிக்கும். அங்க ரொம்ப பிடிக்கும். மனசுக்கு ஒரு இதம் அங்க இருந்தா. ஆள் நடமாட்டம் இல்லாம, அமைதியான இயற்கைக்கு நடுவில… அது ஒரு ஃபீலிங். சொல்லி புரிய வைக்க முடியாது.”
“யாரும் இல்லாத இடத்துல அது என்ன ஃபீலிங்கோ? சரி போ.. எனக்கு வசதி தான்!” சில்மிஷமாய் அவன் சிரிக்க..
“மூர்த்தி சார்..” பொய்யாய் கண் உருட்ட..
“சரி சரி.. உனக்கு அங்க தான் பிடிச்சிருக்குன்னா இனி மேல் அங்கேயே இருப்போம். ஆனா.. தினமும் இங்கயும் வந்து போகணும். என்ன…? அங்க போனா உனக்கு தான் வேலை அதிகம்!”
கண் விரித்தாள். “நிஜமாவா? இங்க மாறி வந்த பிறகு அது தான் நம்ம தங்க போற வீடா?”
“ம்ம். உனக்கு அலுத்து போற வரைக்கும். உன்ன எனக்கு தெரியாதா? நாலே நாள் தான் தாக்கு பிடிப்ப. ”
“ஹ ஹ ஹா.. போங்க மூர்த்தி சார். சட்டுன்னு அப்படி எல்லாம் போட்டு உடைக்க கூடாது. அது நமக்கே நமக்குன்னா.. அந்த வீட்டைக் கொஞ்சம் வசதி பண்ணிக்கணும்.. பண்ணி தரிங்களா?”
“என்ன வேணும்ன்னு சொல்லு. செஞ்சுடுவோம். உனக்கு இல்லாததா துளசி?”
“மணி?”
“அவனுக்கு என்ன?”
“அவர் வந்தா?”
“போன தரம் வந்த போது அவன் இங்க தான் தங்கினான் போல. அவன் முதல்ல வரட்டும். இங்கேயே ஊரோட இருக்க சம்மதிக்கட்டும்.. அப்போ அத பத்தி யோசிப்போம். அவனுக்கு வேணும்னா.. கொஞ்சம் தள்ளி அதே மாதிரி ஒண்ண கட்டிடுவோம். இல்ல உன் மரத்தடியிலேயே நமக்கு கட்டிப்போம். நீ ஏன் அத பத்தி கவல படுற? நீ ஆசை பட்ட படி இரு.. மீதிய நான் பாத்துக்கிறேன்.”
“எனக்கு உங்க மேல ஆசை ஆசையா வருது மூர்த்தி சார்” இறுகக் கட்டிக் கொண்டாள்.
“ஆசைய அடக்காத துளசி.. உடம்புக்கு நல்லது இல்ல. ஏதாவது எனக்குக் கொடுத்து ஆசைய தணிச்சுக்கோ..” குரலில் விஷமம் புதிதாய் எட்டிப் பார்த்தது.
“போ..ங்க மூர்த்தி சார்..” வாக்கியம் முடிக்கும் முன் நெஞ்சில் செல்லமாய் குத்திவிட்டு ஓடியிருந்தாள்.
துளசிக்கு குஷியாகிப் போனது. வாழ்வின் இன்பமெல்லாம் கிடைத்த சுகம். அடுத்த இரண்டு நாட்கள் ஆசை தீரத் தோட்ட வீட்டையே சுற்றி திரிவாள். அடுத்த முறை வந்ததும் மகிழம் மரத்தருகில் தோட்டம் போட வேண்டும். வெறும் பன்னீர் ரோஜா மட்டும்! இரண்டு மலர்களோடு மூன்றாவதாகப் பன்னீர் ரோஜாவும்! தங்கம் பதியம் போடுவதாகக் கூறியிருக்கிறாள். பத்து செடியாவது வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறாள் துளசி.
அன்றைய மாலை:
“என்ன துளசி மா.. ஒரே ஹேப்பி போல?” பூ காட்டிக் கொண்டிருந்தவள் அருகில் அமர்ந்தவன் முதுகில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
“இருக்காதா பின்ன.. என் மேல ஆசையா, உயிரா.. என் கனவெல்லாம் நினைவாக்குற புருஷன். அன்பான குடும்பம். எந்த குறையும் இல்லாத, கஷ்டம் இல்லாத வாழ்க்கை. ஆசைக்கு, குட்டியா தோட்ட வீடு, பூத்து கொட்டற மரம். என் தாத்தா வீட்டு இருவாட்ச்சி.. சந்தோஷமா இருக்கேன் மூர்த்தி சார். எந்த குறையும் இல்லாம ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்.”
“ரொம்ப ஹாப்பியோ?” திரும்பி அமர்ந்து தோளில் சாய்த்துக் கொண்டான்.
கவனம் முழுவதும் பூ தொடுப்பதில் இருக்க.. “ஆமா மூர்த்தி சார்” கொழுக்கட்டையை வாயில் வாங்கிக்கொண்டே கூறினாள்.
“ஹாப்பியா வச்சிருக்க புருஷனுக்கு ஒண்ணும் இல்லியா?” குரலில் ஏகத்திற்கும் குறும்பு.
மலரிலும் நாரிலும் கவனம் இருக்கவே, பெண் விஷமத்தைக் கவனித்தாளில்லை. அவனைப் பார்க்காமலே.. “திரளி கொழுக்கட்டை நல்ல டேஸ்ட் மூர்த்தி சார். எனக்கே எல்லாத்தையும் ஊட்டி விடாம.. நீங்களும் ஒண்ண வாயில் போட்டுக்கோங்க.. டேஸ்ட் பாருங்க.. விடமாட்டீங்க”
“ம்ம்.. நல்ல ஐடியா.. டேஸ்ட் தானே பார்த்துட்டா போச்சு” விஷம பேச்சே தான். பெண் அறியவில்லை.
“மூர்த்தி சார்! என்னத்த ஊட்டுறீங்க நீங்க? வாய் காலியா இருக்கு.. ஆஆஆ..” பூ கட்டிக்கொண்டே தலை சாய்த்துக் கேட்பவள் வாயில் திரளி கொழுக்கட்டைக்குப் பதிலாக.. அவன் உதட்டைக் கொடுக்க, பெண் பன்னீர் ரோஜா நாணிப் போகும் நிறம் கொண்டாள்.
துள்ளிக் குதித்தவள், “அச்சோ.. மூர்த்தி சார்..?!
நீங்க வர வர ஓவர் சேட்டை செய்யறீங்க மூர்த்தி சார்..” இன்ப சிணுங்கல் துளசியிடம்.
“நீ தானே டேஸ்ட் பாக்க சொன்ன? அது வேற இல்லாம, நீ வர வர ஓவரா அழகாயிட்டே போறியே துளசி.. நான் என்ன பண்ணுவேன். பிஞ்சு மனம் உன்ன பார்த்தாலே பஞ்சாயிடுது. நீ கிட்ட இருந்தா.. ஐஸ் கட்டியா உருகிடுது. ஊருக்கு வந்ததுல இருந்து என்னை திரும்பி கூட பாக்கல நீ. இப்பிடி நீ பிஸி ஆகிட்டா நான் என்ன பண்றதாம்? சொல்லு..” கால் மேல் நிறுத்தி, இடையோடு கட்டிக் கொண்டான்.
கோட்டைச் சுவர் போல் சுற்றி எழுப்பி இருந்த பனை ஓலை சுவருக்கு நடுவே நடுநாயகமாய் நின்றிருந்த மகிழம் பூ மரத்தடியில் நடக்கும் லீலைகள் இவை.
காலிலிருந்து கீழே இறங்கி, “என்னமோ நேத்து தான் கல்யாணம் ஆன ஃபீல் குடுக்காதீங்க. இத வச்சு விடுங்க..” வாழை நாரால் கட்டியிருந்த இருவாட்சி சரத்தையும், தென்னங்கீற்று நாரால் கோர்த்திருந்த மகிழம் பூ சரத்தையும் கணவனிடம் நீட்டினாள்.
அவள் தொடுப்பதும் அவன் அதை அவளுக்குச் சூட்டுவதும், அவர்கள் சொந்த ஊருக்கு வந்தால் நடக்கும் வழக்கம் தான் என்பதால் வாங்கி சூட்டி விட்டான்.
“ஏன் மூர்த்தி சார்.. மோந்தே பாக்க மாட்டேன்றீங்க… என்னமா மணக்குது” என்றாள் கண்கள் மூடி.. மூச்சை உள்ளிழுத்து.
இருமலர்களின் மணத்தில் தன்னை மறந்து, மயங்கி அவள் நிற்க… அவன், அவனை மயக்கும், துளசியின் தொண்டைக் குழியின் இதழ் பதித்து.. அவள் மணத்தில் மயங்கி நின்றான். அதே பன்னீர் ரோஜாவின் மணம்.
பல ஆயிர மலர்கள் இருந்தாலும் அவள் மணம் அவனுக்குத் தனி மயக்கம் தான்.
மயங்கி நின்றாள்.
கிறங்கி போனான்.
“அப்படியே என்னை உள்ள இழுத்துக்கோ துளசி மா. உனக்குள்ள… உன் கூடவே இருந்திடுறேன்.” பிதற்றினான். ஏனோ துளசி மேல் பித்தாய் போனான்.
“மூர்த்தி சார். வெட்ட வெளி..” என்று நினைவு படுத்தினாள். விலகவும் இல்லை.. சத்தமும் வெளி வரவில்லை.
“ஏற்கனவே ஈ காக்கா இல்ல. போதாதுக்கு சுத்தி அடைச்சுட்டேனே துளசி… நீயும் நானும் மட்டும் தான்” என்றான், பிடி தளர்த்தாமல்.
சின்ன தொண்டை அடைப்பு.. அவன் மார்புக்குள் முகம் புதைத்தாள்.
“ரெண்டு வருஷம் ஆகிடுச்சு மூர்த்தி சார் நம்ம வீட்டுல பூ பூத்து.. இன்னும் நாமா ரெண்டு பேர் மட்டுமா தான் இருக்கோம்.. நாம கொஞ்சிக்கும் போது நடுவில வர ஆளே இல்ல. எப்போ வரும் மூர்த்தி சார்?” கணவனை கட்டிக் கொள்ளும் போது ‘இது என் அப்பா’ என்று உரிமை கொண்டாட பிள்ளை வேண்டும் என்ற ஏக்கம்.
மூர்த்தியை இறுக்கிக் கொண்டாள். இறுக அணைக்க முடியாமல் தொந்தரவு செய்யும் மேடிட்ட வயிறு வேண்டும் என்ற தவிப்பு.
இன்று முத்துவும் கேட்டுவிட்டாரே. மனம் கனத்தது. மூன்று மாதமாக விதம் விதமாகக் கேட்டு கொண்டிருக்கிறாள். மூர்த்தியிடம் பதில் இல்லை.
விஜயா பிரசவித்திருக்க.. அவளைக் காண மருத்துவமனை சென்று வந்த அன்றிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
நிலாவின் திருமணம் முடிந்து, அவளும் மாசமாக இருக்க.. விஜிக்கு மூன்று மாத கைக்குழந்தை இருக்க.. துளசிக்கு ஆசை தாள முடியவில்லை.
“இன்னும் ஆறு மாசம் போகட்டும்.. உன்னோட மாஸ்டர்ஸ் முடியட்டும்.. அப்புறம் அத பத்தி யோசிப்போம்.”
இயலாமையோடே கணவனைப் பார்த்தாள்.
“படிப்புக்கும் பாப்பாக்கும் என்ன தொடர்பு இருக்கு மூர்த்தி சார்?” ஏக்கம் கொட்டி கிடந்தது.
என்ன என்று கூறுவான்? ஒன்றரை வருடம் முன்பே மருத்துவரைப் பார்த்தாயிற்று. எல்லாம் நாளடைவில் நடக்கும் என்று தான் அவரும் கூறினார். சத்தான உணவோடு மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாள் தான்!
முன்பு ஒரு காலத்தில்.. ஏதோ ஒரு இடத்தில்.. யாரோ ஒரு அரக்கன், உள்ளேற்றிய பெயர் தெரியாத மருந்து அன்று கர்ப்பம் அடையாமல் காத்தது, இன்று அதே.. பூதாகரமான பிரச்சினையாய் நின்று கொண்டிருப்பதை என்ன வென்று அவளிடம் கூறுவான்?
“பாப்பா தாங்குற சக்தி உனக்கு வந்ததும்.. பெத்துக்கலாம்.”
“ரெண்டு வருஷமா இதையே சொல்றீங்க.. போங்க மூர்த்தி சார். உங்களுக்கு என் மனசு புரியவே இல்ல..”
“துளசி மா..” அவனுக்குத் தான் அவள் அணுவும் புரியுமே. கேட்டதெல்லாம் கொடுத்தாலும்.. தலை மேல் வைத்துத் தாங்கினாலும்.. இந்த தவிப்பை போக்க வழி தெரியவில்லையே.
“எனக்கு.. உங்க குட்டி பாப்பா வேணும் மூர்த்தி சார்..” அழுகையை அடக்கி, சிணுங்கினாள். அவன் கையில் எதுவும் இல்லை என்று தெரியும் தான்.. இருந்தும்.. வேறு யாரிடம் கேட்க?!
“எனக்கு நீ வேணும் துளசி. ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இவ்வளவு நாள் காத்து இருந்துட்டோம். இன்னும் கொஞ்சம் நாள் தான்… நம்ம குழந்த நமக்கு தான். எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா பிறக்கும். வர போற சந்தோஷத்தை யாராலும் தடுக்க முடியாது. இப்போ இல்ல அவ்வளவு தான். அத நினைச்சு இப்போ எதுக்கு இருக்க நிம்மதிய கெடுக்கணும்..?
கண்ணுக்கு தெரியாத.. நம்ம சக்திக்கு மீறினத தேடி உன்ன தொலைச்சிடாதா. நீ எனக்கு வேணும். புரியுதா?”
அணைப்பிலிருந்து கொண்டே முகம் உயர்த்தி மூர்த்தியின் முகம் பார்த்தாள்.
மூன்று வயது பிள்ளைபோல், கண்ணில் நீர் தேக்கி, உதடு பிதுக்கி அவனைப் பார்க்க… புயலில் தாக்கப்பட்ட மரமாய் அவள் காலடியில் வேரோடு சாய்ந்து போனான். அவள் வலி அவனுக்கும் வலி தான். காட்ட முடியவில்லை அவ்வளவு தான்.
“என் மனசு புரியல உங்களுக்கு. எனக்குப் பாப்பா வேணும்ன்னு இருக்கு. உங்களுக்கு அப்படி ஆசையே இல்லியா?”
அவளை எப்படி சரி செய்வது என்ற வித்தையை கற்றிருந்தான்.
“எனக்கும் வேணும் துளசி. ஆசை இல்லாம இல்ல. கொள்ள ஆச. உன்ன மாதிரியே என் மனச கொள்ளையடிக்க, எனக்கு என் பொண்ணு வேணும் துளசி. என் மகளுக்கு நான் அடிமை ஆகணும்” என்றான்.
சிணுங்கல் போன இடம் தெரியவில்லை. பட்டென்று நெஞ்சில் ஒரு அடி வைத்தாள். “எத்தன தரம் சொல்றது? நான் மட்டும் தான் உங்கள கொள்ளை அடிக்கணும். எனக்கு மட்டும் தான் நீங்க அடிமை. புரியுதா?”
“ம்ம்.. ம்ம்ம்… சரி சரி”, சிரித்தான்.
“அப்புறம் பொண்ணு இல்ல. குட்டி பையன்.. உங்கள மாதிரியே..” முறுக்கிக் கொண்டாள்.
“நீ தான் என்னோடைய ஸ்பெஷல். அடுத்து தான் பிள்ளைங்க. போதுமா?”
“ம்ம். சமத்து நீங்க” நெஞ்சில் முத்தம் பதித்தாள்.
“சரி.. எனக்கு ஒண்ணை பெத்து கொடுத்திடு… அப்புறம் உனக்கு ஒண்ணு.”
“மூணு மூர்த்தி சார்.. நான் தானே பத்து மாசம் கஷ்ட பட போறேன். சோ.. ரெண்டு பையன் எனக்கு… உங்க ஆசைக்கு ஒரு பொண்ணு.” மீண்டும் கட்டிக் கொண்டாள்.
அழவேண்டும் போல் இருக்க.. இறுக கட்டிக் கொண்டாள். அசட்டுப் பேச்சு என்று தெரிந்தே இருவரும் பேசினர். நடக்குமா தெரியவில்லை. நடக்கவேண்டும் என்ற ஆசையின் பிரதிபலிப்பு!
“கண்டிப்பா பிறக்கும் இல்ல மூர்த்தி சார்? நான் அழ கூடாதுன்னு பொய் சொல்லலீயே..”
“நீயே போதும் சொல்லற அளவுக்கு பிறக்கும் துளசி..” தொண்டை கரகரத்தது.
பழையதை எல்லாம் கடந்து போனாலும் இப்படி விடாமல் துரத்தினால் இருவரும் என்ன தான் செய்வார்கள். இந்த போராட்டத்திற்கு முடிவே இல்லையா? ஒருவனின் சலனம் ஒருவர் வாழ்வை மட்டுமா அழிக்கிறது? கௌரவ் என்ற ஈனப்பிறவி இன்று மூர்த்தியின் கையில் கிடைத்தால்.. பிறந்ததற்காகக் கண்டிப்பாக துடித்திருப்பான்.
அணைத்துக் கொண்டவன் மனதில் அலைகள் ஓயவில்லை.
வேண்டும். அவன் உயிராய்… அவன் ஊனாய்.. அவன் உருவம் கொண்டு.. அவன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள.. முகம் முழுவதும் எச்சில் படுத்தி ஆசை ததும்ப ‘அப்பா’ என்ற மழலை சத்தம் அவன் கேட்க.. அவர்கள் வாழ்வின் அர்த்தமாய் பிள்ளை வேண்டும். மனம் அடைத்துக் கொண்டு வந்தது. வலியும் உணர்வும் இருவருக்கும் பொது.
எழில் முகம் கண்டு இன்று வரை தன் உணர்வுகளை எல்லாம் கட்டுக்குள் வைத்திருக்கிறான். இன்றும் அதையே செய்வான், துளசியின் மூர்த்தி. அவன் ஆறுதலில் அவளும் ஆறுதல் கொள்வாள். காலம் கனியும்.. என்ற நம்பிக்கை இருவரிடமும்.
மந்தமாருதம் வீச, தென்றலோடு தவழ்ந்து வந்த மலர்களின் மணம் நாசியை நிறைக்க.. பறந்து கொண்டிருந்த கூந்தலைப் படியவைத்து நின்றான். மனம் சமன் படவில்லை.
உச்சந்தலையில் இதழ் பதித்தான். மனம் ஆறவில்லை.
நெற்றியில் இதழ் பதித்தான்.. மன அழுத்தம் குறைவில்லை.
கண் இமையில் இதழ் பதித்தான்.. மனம் சாந்தமடையவில்லை.
இதழோடு இதழ் பதித்தான். அந்த சின்ன இதழ், காயத்தை வருடி இதம் தந்தது. வலி என்ற ஒன்று தடம் இல்லாமல் மறைந்தது.
முத்தம் சத்தமிட்டது. அது இருவருக்கு மட்டும் கேட்டது. அது, இதழால்.. உணர்வால்.. எழுதப்பட்டுக் கொண்டிருந்த காதல் கவிதையின் சத்தம். கவிதையின் முதல் வரி.. “நீ போதும் எனக்கு” என்று ஆரம்பித்திருந்தது.
கண் மூடியிருக்க.. இருவர் மனமும் வேறு எதையுமே யோசிக்கவில்லை. வாழ்க்கை சுகமானதாகவும், சுவையானதாகவும் தோன்றியது துளசிக்கும் மூர்த்திக்கும்.