செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 43_1
பம்பாய்:
“கௌஷி.. அது அவளே தான்.” – சாந்தினி
“இருக்கட்டுமே… அவள தூக்கிட்டு வந்து என்ன பண்ண? வயசாகி இருக்கும்”
“பாரு.. இத பார்த்துட்டு பேசு”
கௌஷியிடம் நீட்டப்பட்ட புகைப்படத்தைப் பார்த்தாள். மார்பு வரை எடுக்கப்பட்ட வண்ண படத்தில் துளசியும் , நந்தினியும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏனோ தானோ என்று பேசிக் கொண்டிருந்த கௌஷியின் கண்ணோடு காதும் கூர்மையானது. ‘இவளா?’
அன்று போலவே இன்றும் துளசியின் வசீகர அழகில் கௌசிக்கிற்குப் பரம திருப்தி.
“ம்ம்.. சொல்லு” – கௌஷி
“என் கௌரவ என் கிட்ட இருந்து பிரிச்சவ அவ தான்.”- சாந்தினி.
“பச்.. அவன் என்ன நல்லது மட்டுமே செஞ்ச புண்ணியவானா? அவன் எத்தன பொண்ணுங்கள அவங்க குடும்பத்தில இருந்து பிரிச்சான்? அவன பத்தி பேசாத! இவள பத்தி பேசு! இவளால எனக்கு வர லாபத்தை மட்டும் பேசு.”
“பேரு கோமல். பெரிய விலைக்கு நீ பேசி வச்சிருந்த! கௌரவ போலீஸ்ட்ட மாட்டி விட்டுட்டு காணாம போனவ. இப்போ கன்னியாகுமரில இருக்கா. பாரு அவள.. கண்ண பறிக்கிறா. அப்ப விட இப்போ உனக்கு நல்லா சம்பாரிச்சு கொடுப்பா”
“இருபதுக்கு மேல.. ரொம்ப ரிஸ்க். என்ன சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வருவ? டிமேண்ட் கம்மி!” – கௌஷி
“இருபதுகுள்ள தான் நமக்கு வசதி ஒத்துக்குறேன். ஆனா அது மத்த பொண்ணுங்களுக்கு. இவள நீ இறக்கினா.. நீ கேக்கிறதுக்கு மேல குடுத்து அள்ளிட்டு போயிடுவாங்க. என் கிட்டயே கத சொல்லாத!”
“உன்ன நேபாளம் தானே போக சொன்னேன்… தமிழ் நாட்டில உனக்கு என்ன வேல?”
தலை சொறிந்தாள்.
“அங்க எல்லாம் சில்லறையா மாட்டுது. இந்த மாசி மட்டும் எப்படி பெரிய பெரிய பார்ட்டியா பிடிக்கறான்னு… அவன் கேரளா போகவும், அவனுக்கு தெரியாம அவன் பின்னாலேயே போனேன். போன வாரம் கன்னியாகுமரில மிஸ் பண்ணிட்டேன்.”
“ஒருத்திக்காக அவ்வளவு தூரமா? அனாவசிய செலவு”
“இல்ல.. கூடவே ஒருத்தி இருக்காளே.. பாரு அவளையும். அவளும் நல்ல தரமான ஐட்டம். ரெண்டும், தனியா ஒரு குடிசையில இருக்குங்க. தூக்கினா தேட ஆளில்ல! ஏன்னு கேக்க.. சுத்தி ஜனக் கூட்டம் இல்லாத இடம். இது மாதிரி எல்லாம் மாட்டுறது ரொம்ப கஷ்டம் கௌஷி.. யோசி!” ஆசை வார்த்தை மொழிந்தாள்.
“ம்ம்..” யோசித்தாள். “கன்னியாகுமரி! அந்த ஏரியா எல்லாம் ரொம்ப ரிஸ்க். மாட்டினா.. உயிர மட்டும் விட்டுட்டு, கை கால எடுத்திடுவாங்க.”
“எனக்கு இதுல பங்கே வேண்டாம்.. அவளால கௌரவ் இல்லாம நான் பட்ட வலிய அவ படணும். அவ்வளவு தான் வேணும். பழிக்கு பழி!
மாசிய அனுப்பு கௌஷி. அவன் உள்ள இறங்கினா, அவனும் அவன் ஆளும் கச்சிதமா முடிச்சிடுவானுங்க.”
“மாசிட்ட எல்லாம்.. சொல்லி வேல வாங்க முடியாது. அவன் நினைச்சத தான் செய்வான்.
விஷயத்தை சொல்லிட்ட இல்ல… நீ அவ விபரம் எல்லாம் குடுத்துட்டு கிளம்பு. யோசிச்சு செய்வோம்”
“மாசி எப்போ வரான்? அவன்ட்ட நானே விபரம் சொல்லவா?” – சாந்தினி
ஏதோ யோசித்தாள். பின் என்ன நினைத்தாளோ..
“முதல்ல புரிஞ்சுக்கோ.. அவன் எனக்கு வேலை செய்யலை. வெறும் பார்ட்டிய சப்ளை பண்றான். அவன் கூட்டிட்டி வர பொண்ணு எல்லாம் ரதி மாதிரி இருக்குங்க.. எனக்கு அவனால நல்ல லாபம் அவ்வளவு தான்.. எப்பவாது லேசுல மடியாத பார்டிய அவன்ட்ட கைகாட்டினா.. தூக்கிட்டு வருவான். அதுக்காக நான் சொல்றத எல்லாம் அவன் கேப்பான்னு கிடையாது. அத நான் எதிர்பார்க்கவும் இல்ல. எனக்கு வேணுங்கறத அவன் குடுக்கறான்… பணம் வாங்கிட்டு போறான். அவ்வளவு தான்.. நமக்கும் அவனுக்கும். அவன டீல்ல விடு! மேட்டருக்கு வா.. உன்னால முடியும்னா சொல்லு! இல்லியா… ஆள விடு!”
“நானா?”
“ஏன் முடியாதா?”
“முடியும். நீ, ரெண்டு பேர என் கூட அனுப்பு கௌஷி… ரெண்டையும் நான் அள்ளி போட்டு கொண்டு வரேன்.”
“ரெண்டு பொண்ணுங்களுக்கு.. மூணு பேரா? ப்ச்! வேலைக்கு ஆகாது!”
“வெறும் போய் வர செலவு தான். பொண்ணுங்கள பாரு கௌஷி. அந்த கோமல் மாதிரி ஒருத்திய பார்த்து இருகியா நீ? எனக்கு காசே வேணாம் கௌஷி. அப்புறம் உன் ஆளு ரெண்டு பேர். என்ன சொல்ற? ஒரே வீடு… ஒரே ட்ரிப்.. பக்கத்துல ஏதாவது பொடுசு மாட்டினா அதையும் தள்ளிட்டு வந்திடுறேன்.. நல்ல லாபம் பாக்கலாம்..”
என்ன சொல்லுவாள்? பணம் என்றதும் பிணமும் வாயை திறந்தது.
“சொதப்பினா?”
“சத்தியமா மாட்டேன்.”
மீண்டும் யோசித்தாள். லாபம் மட்டுமே கணக்கில் எடுத்து யோசித்தாள்.
“ஆள் மட்டும் தான் அனுப்புவேன். மத்த செலவு எல்லாம் உன்னுது. பொண்ணுங்கள எப்பவும் போல கைல குடுத்திட்டு.. பணம் வாங்கிக்கோ… அவ்வளவு தான். இதுக்கு மேல பேச்சில. ஆழம் பாத்து கால விடு. யோசிச்சு முடிவு பண்ணு.”
“சரி. ஆள் மட்டும் அனுப்பு.” – சாந்தினி
“யாரு வேணும்?”
“யோகேந்தரனும்.. சந்திராசூரும்”
சந்திராசூர், சாந்தினியின் இப்போதைய தோழன்.
‘சந்திராசூர்!’ யோசித்தாள் கௌஷி. அவன் தலைமையில் ஒரு காரியத்தைச் செயல் படுத்துவது கொஞ்சம் கடினம் தான்! கட்டுப்பாடு இல்லாதவன்.
இன்னும் மூன்று வருடத்தில் நாற்பதைத் தொட்டுவிடுவான். இரண்டு முறை சிறையைப் பார்த்தவன். போதை, பெண், கடத்தல், கற்பழிப்பு என்ற எதையும் மிச்சம் வைக்கவில்லை. சிறை கம்பிக்குள் இருக்க வேண்டியவன் வெளியே சுற்றித் திரிவது கௌஷி என்ற ஒருத்தியால்.
இன்றைய நிலையில் அவன் தான் கௌஷியின் வலது கையாக இருந்திருக்க வேண்டும். பெண்கள் அவன் பலவீனம். கடத்திக் கொண்டு வரும் முன்னமே தொட்டு பார்த்துவிட வேண்டும் அவனுக்கு.. அது தான் அவன் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக உள்ளது. அதுவும், மாசியும்! இதில் ஒன்று அவனை அழித்துவிடக் கூடியது. மற்றொன்றை நேரம் கிடைக்கும் வேளை அழித்துவிட காத்திருக்கிறான்.
அந்த மற்றொன்று – மாசி!
கௌஷியின் பார்வையில் மாசி உயர்ந்து நின்றான். அதனாலேயே அவனை முதுகில் குத்த நாள் பார்த்து நின்கிறனர் சந்திரா-வும், சாந்தினியும்.
மாசி! யார் இந்த மாசி? அவனைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? கையில் காசோடும்… இரத்தத்தில் போதையோடும் சுற்றித் திரிந்த வாட்ட சாட்டமான பணக்கார வீட்டுப் பையன் என்று தெரியும். ஐந்து வருடம் முன், ஒரு பெண்ணை தேடி கௌஷியிடம் வந்தான்.. அடுத்த இரண்டு வருடங்களும் பெண்களில் திளைத்தான் என்று தெரியும். முதல் தரமான பெண்கள் மட்டுமே அவன் பார்வையில் விழும். அவன் ஆடம்பர வாழ்விற்கு பணத்தேவை வர.. அவன் கடைக்கண் பார்வைக்கு விழுந்த விட்டில் பூச்சிகளை கௌஷியடம் கொடுத்தான் என்பது வரை தெரியும்.
சுமார் மூன்று வருடங்கள் முன் மாறிப் போனான். துளசியை கோமல் என்று நினைத்த அன்று.. அவன் மனம் ஒரு குடும்ப வாழ்விற்காக ஏங்கவும்.. அதற்கு தன்னை தயாராக்க.. மாறி போனான். குடி இல்லை. பெண் இல்லை. பெண்களைக் கூட்டி வருவதோடு சரி. ஒரு ரம்பையாலும் அவன் தவத்தைக் கலைக்க முடியவில்லை.
இன்று அங்கு இருக்கவும் பிடிக்கவில்லை. மூச்சுக்கு முந்நூறு முறை வீட்டுக்கு வர கோரும் குடும்பம் இருக்க.. பிடித்தமில்லாமல் போன தனிமையோடு வாழப் பிடிக்கவில்லை. கோமலை கண்டுவிட்டால்.. பம்பாய்க்கு முழுக்கு போட்டுவிடுவான். ஆனால் அவள் எங்கே?
மாறிப்போனான் என்று கௌஷிக்கு தெரியும். ஏன் என்று தெரியாது. இது மட்டும் தான் தெரியாதா? அவன் பின்புலம் தெரியாது. அவர்கள் வேட்டையாட நினைப்பது அவன் வீட்டுப் பெண்கள் என்பதும் தெரியாது. அந்த பெண்களில் ஒருத்தி மேல் இவர்கள் கைப்பட்டாலும், கூண்டோடு அனைவரையும் ஒருவன் அழித்துவிடுவான் என்பதும் தெரியாது.மாசியின் முழு பெயர் மாசிலாமணி என்பது கூட தெரியாது. கோமல் என்ற ஒரு ஜீவனைக் காணத் தான் அவர்களோடு சுற்றித் திரிகிறான் என்பதும் தெரியாது!
இவ்வளவு தெரியாதென்றாலும் அவன் கொண்டு வரும் பெண்களின் தரத்திற்காகவே அவனிடம் கேள்வி கேட்பதில்லை. அவனும் பெண்களைக் கொடுத்து பணம் வாங்கி சென்றுவிடுவான். மற்ற பிணைப்பு இல்லை கௌஷியிடம்.
அவன் எங்குச் செல்கிறான்? எப்படி பெண்களை கவர்கிறான்.. தெரியாது. அவர்கள் தேடிச் செல்லவிருக்கும் பெண்களிடம் தான் இன்று அவன் சென்று கொண்டிருக்கிறான் என்பது நமக்கான செய்தி.
தங்கையின் திருமண நிச்சயத்திற்காக ஊர் போய் சேர்ந்துவிட்டானா? சேர்ந்துவிட்டான். இதோ..
கார் வாசலில் நின்றதும், வீட்டு முற்றம் நோக்கி நடந்தவனை முதலில் பார்த்தது நந்தினி.
“அண்ணா…” கத்திக் கொண்டே ஓடி சென்றவள்.. அண்ணனின் புஜத்தை இருகரம் கொண்டு சுற்றிக்கொண்டாள்.
“ண்ணா.. நல்லா இருக்கியா..? மெலிஞ்சிட்ட ண்ணா..” பெண்ணின் கண்ணில் நீர் படலம். திருமணமாகி செல்ல போகிறாள். ஒரு குறையும் இல்லாமல் அவள் திருமணத்தை முடிக்க வீடு முழுவதும் ஆட்கள் இருந்தாலும்.. அப்பா என்ற ஒற்றை தூண் இல்லையே. தங்கத்திற்கு மூர்த்தி மாமா இருக்க.. தனக்கு?
நந்தினிக்குள் விழுந்த ஓட்டை அது. அப்பா இடத்தை நிரப்ப ஒருவராலும் முடியவில்லை. அப்பாவாக இருப்பேன் என்று கூறிய செல்வன் காதலனாக கூட இருக்க முடியவில்லை. அப்பா இல்லை என்ற ஏக்கம், இந்த திருமண பேச்சோடு அதிகரித்தது. யார் உருவிலாவது அப்பாவைப் பார்த்துவிட மாட்டோமா என்ற எண்ணம்.
‘என் பொண்ணு’ என்று தலை மேல் வைத்துத் தாங்கிய ஜீவன்! பேசும் பொழுதெல்லாம் அவர் இரு உள்ளங்கைக்குள் மகளின் பிஞ்சு கை இருக்கும். தூங்க வைக்க… அவர் தலை வருடிவிட்டால் போதும்.. அப்பாவின் நினைவோடே தூங்கிப் போவாள்.
இன்று அப்பா இல்லை. அவர் போல், ‘என் பொண்ணு’ என்று யாருமே அவளைப் பாசமாக அழைத்ததே இல்லை. தலை வருடித் தூங்க வைத்ததெல்லாம் அப்பாவோடு சென்றுவிட்டது. அந்த இரு உள்ளங்கையின் கதகதப்பு கொடுத்த வலிமையும், ஆதரவும்.. இன்று வரை ஒருவரிடமும் உணரவில்லையே.. அப்பா வேண்டும் என்ற தேடல் இன்றும் நின்றபாடில்லை.
அண்ணா இருந்திருந்தால் இவ்வளவு ஏங்கிப் போயிருக்க மாட்டாளோ? அப்படி தான் அவளுக்குத் தோன்றியது.
அப்பா ஸ்தானத்தில் அண்ணனால் மட்டுமே உயரமுடியும் என்று தோன்ற… அவள் அண்ணனுக்குத் தங்கையாக இருக்கவில்லையே என்று குற்ற உணர்வு. என்ன செய்கிறான் அண்ணன்? ஏன் யாருமே அண்ணனை கவனிக்கவில்லை. அனைவரும் குடும்பமாக இருக்க, ஏன் அண்ணன் மட்டும் தனித்து நிற்கிறான்?
இன்று அண்ணனைக் கண்டதும் ஏனோ உள்ளம் கரைந்தது. கண் பனித்தது. பிடித்திருந்த கரத்தின் அழுத்தம் உரைத்தது தங்கையின் அன்பை. இது தான் முதல் முறை இப்படி ஒருத்தி அவனைத் தொட்டு அன்பு பாராட்டுவது. நெகிழ்ந்து போனான். அப்பா தான் இப்படி கடைசியாக அவனிடம், அவரின் அன்பை உணர்த்தியது. அவர் சென்றதும்..ஏதோ கோபம்.. வீம்பு.. வழி தவறிச் சென்றுவிட்டான். மீள வழி தெரியவில்லை. இருளில் வெளிச்சம் தேடுகிறது கண்கள். அவன் தேடும் வெளிச்சம் அவனுக்கானது அல்ல என்று யார் அவனிடம் கூறுவது?
பெண்ணின் முதுகை வருடவுமே.. மார்பில் சாய்ந்தவள் வெடித்தாள்.
“ஏன் ண்ணா… ஏன் ண்ணா… எங்க கூட இருக்க மாட்டேன்ற? எனக்கு நீ வேணும் ண்ணா. அண்ணன்னா.. அப்பாவா, நீ எனக்கு வேணும் ண்ணா. உனக்கு நான் தங்கையா மகளா இருக்க ஒரு வாய்ப்புமே குடுக்க மாட்டேன்றியே… என்னை விட்டு போகதண்ணா. என் கூடவே இரு ண்ணா..” எங்கே விட்டால் மீண்டும் போய் விடுவானோ என்று இறுக்கிக் கொண்டாள்.
“வந்துட்டேனே.. அழாத நந்து” அதற்கு மேல் பேச வார்த்தை இல்லை. பழக்கமில்லை என்றதால் இருக்கலாம். நெகிழ்ந்து போனதாலும் இருக்கலாம்.
“அண்ணா..” அடுத்த சிட்டு ஓடி வந்தது. அண்ணனோடு நந்தினியின் நெருக்கம் பார்த்ததாலோ என்னவோ.. தங்கமும் ஒண்டிக் கொண்டாள். மணிக்கு எப்படியோ போல் ஆனது. ‘இந்த குடும்பம் போதவில்லையா? என்ன செய்கிறாய் உன் வாழ்க்கையை?’
தங்கத்தோடு வந்த குட்டி பாரதிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பாவாடையை ஆட்டிக்கொண்டே.. “அத்தான்..” அசட்டுத் தனமாய் சிரித்து வைத்தாள்.
தலையை மெல்லக் கலைத்துவிட்டவன், “என்ன குட்டி பாரு.. நல்லா இருக்கியா?” என்றதும்.. குட்டி பெண்ணிற்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. பல் தெரியச் சிரித்தாள்.
ஆட்டிக்கொண்டிருந்த பாவாடையோடு அவளும் ஆடிக்கொண்டே.. “ம்ம்…” என்றாள், சின்னஞ்சிட்டு.
“மணி…! வா வா.. எப்படி இருக்க? மெலிஞ்சுட்ட. உள்ள போ. நான் ஒரு பத்து நிமிஷத்தில வரேன்..” மூர்த்தி தோளைத் தட்டி சென்றான்.
மூர்த்தியைப் பார்த்த பின்னும் தங்கம் இன்னும் அவன் கரத்தை தான் பிடித்திருந்தாள். மாமனிடம் ஓடவில்லையே.. உள்ளுக்குள் பூரித்தது.
மூர்த்தி அவன் தங்கத்தைப் பறித்துக் கொள்ளவில்லையா? மணிக்கு ஏதோ சில்லிட்ட உணர்வு.. இன்னும் முற்றத்தில் தான் இருந்தான்.
“மோன் வா… என் மகன வாசல்ல நிக்க வச்சு என்ன டி பண்றீங்க…? வா மணி..!” மகன் தலையைப் பானு வருடவுமே.. மணி திக்குமுக்காடிப் போனான்.
ஒரே நேரத்தில் அவனும் எத்தனை தாக்குதலை தான் தாங்குவான்? எதோ செய்தது. எல்லாம் நந்தினி ஆரம்பித்து வைத்தது.
குளித்து, காலை உணவை முடித்ததும், மாடியில் தன் அறையில் ஒளிந்துகொண்டான், “களைப்பாயிருக்கு.. கொஞ்ச நேரம் படுக்கிறேன்” என்ற பேரில். அதற்குக் காரணம் நந்தினி தான். அவளுக்கு தெரியவேண்டியிருந்தது அண்ணனை பற்றி. மீண்டும் அண்ணனை தனித்துவிட கூடாது.. மற்றவர்களைப் போல் அவனும் குடும்பமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு அண்ணனோடு அளவளாவினாள்.
“எங்க தங்கி இருக்க..?” என்று ஆரம்பித்தாள்.
“பாம்பே”
“அண்ணா.. அவர பார்ப்பியா அங்க?”
“யார?” கண்ணை இடுக்கினான். சத்யன் தானே பம்பாயில் இருப்பது!
“அவர் தான்… சின்ன மாமா. செல்வன் ண்ணா..” பெண்ணின் முகத்தில் நாணச் சாயல்.
“செல்வன பிடிச்சிருக்கா? கல்யாணத்தில உனக்கு இஷ்டம் தான?” அண்ணனாய் மாறிக்கொண்டிருந்தான்.
“ம்ம்.. பிடிக்குது ண்ணா.. ஆனா..”
“சொல்லு… என்ன ஆனா?”
“அவர் பாம்பேல இருக்கார் ண்ணா.. அது தான் பிடிக்கல”
“ஓ.. அங்க என்ன பண்றார்? செல்வனுக்கு படிப்பு ஏறாதே.. அங்க என்ன வேலை?”
“வேல இல்ல. சேவையாம்!”
“..?” இது என்ன புது கதை என்று பார்த்தான்.
“அங்க வாழ்க்கையை தொலைச்ச பொண்ணுங்களுக்கு ஒரு இடம் இருக்காம். துளசி அக்காவும், அனு அக்காவும் சேர்ந்து ஆரம்பிச்சது. அத பாத்துக்கிறார்”
“புரியல? விதவைகள் மறுவாழ்வு மையமா? அதுக்கெதுக்கு அங்க வரைக்கும் போகணும்? ஏன் இங்க எதுவும் அப்படி இல்லியா?”
“இல்ல… இது வேற! இந்த.. இந்த..” எப்படி விளக்க என்று தெரியவில்லை.
“ம்ம்?”
“இந்த பொல்லாத.. நாசமான போன சில ஆம்பளைங்க , கெடுத்து தூர போடற பொண்ணுங்கள கூட்டிட்டி போய் பாத்துப்பாங்க போல..”
“ஓ..” மணிக்குள் மணி அடித்தது. எச்சில் விழுங்கினான்.
“ண்ணா.. நீ அங்க தனியாவா தங்கியிருக்க?”
“ம்ம்..” என்றதோடு நிறுத்திக் கொண்டான்.
“எனக்கு முதல்ல அங்க போக பிடிக்கல. ஆனா நீ அங்க இருக்கவும், நானும் அங்க வரதா அவர்ட்ட சொல்லிட்டேன். அதுனால நீ தனியா இருக்க வேண்டாம். நானும் மாமாவும் உன் கூடவே இருப்போம். வசதி பத்தலனா.. பெரிய வீடா பார்த்து மூணு பேரும் அங்க போயிடுவோம். அப்புறம் எனக்கு மைனிய ரெடி பண்ணுவோம்.”
சிரித்தான். “மைனி..?”.. ‘கோமல்!’ நீளமான மூச்சை இழுத்துவிட்டான். வருடங்கள் ஐந்து போனது… மஞ்சள் வெயில் நடுவில் தேவதை போல் படுத்துகிடந்த சலவை கல் சிற்பம் அவனை சீண்டி பார்த்தது. அந்த பஞ்சு மேனி.. பட்டு தேகம்.. அவளுக்கே அவளுக்கான தனி வாசம்.. அவனை அவள் வசம் ஈர்த்த அந்த மச்சம்.. எதையுமே அவனால் மறக்க முடியவில்லையே..
எத்தனையோ பெண்களைப் பார்த்து விட்டான். அவர்கள் எல்லாம் பார்வையோடே சென்றுவிட்டனர். இவள் ஏன் உள்ளுக்குள் புதைந்து அவன் உயிரை உறிஞ்சுகிறாள்..? ஒரு முறை… ஒரே ஒரு முறையேனும் பார்க்க மாட்டேனா? மனம் களைத்துப் போனது.
“என்ன வேல பாக்குற?” – நந்தினி
சுளீர் என்று முகத்தில் ஏதோ வலிக்க வலிக்க அறைந்தது. பதில் உரைக்க முடியவில்லை. கொஞ்சக் காலமாகவே அவனைக் கேள்வி கெட்டுக் கொண்டிருந்த மனசாட்சி.. இன்று வாய்விட்டுச் சிரித்தது. ‘சொல்லு மணி.. சொல்லேன் நீ செய்ற உன்னதமான தொழிலை’
“தரமான சிலையை ஏற்றுமதி பண்றோம்..” அவன் அதைத் தானே செய்கிறான்..
“சூப்பர் ண்ணா.. பொண்ணுங்க இருக்கா நீ வேலை செய்யற இடத்துல?”
“ம்ம்.. அவங்க தான் மெயின்..” அவள் அடுத்த கேள்வி தெரிந்திருந்தால்.. இந்த பதிலை கூறி இருக்க மாட்டான்.
“அப்போ என்னையும் அங்க சேர்த்து விடேன். என் பர்ஃபார்மன்ஸ் பார்த்து நீயே ஆச்சரியப் படுவ…” கூனி குறுகிப் போனான். அவனால் சகிக்கவே முடியவில்லை.
“வாய மூடிட்டு போ டி. கல்யாணம் பண்ணி உருப்படியா செல்வன் கூட குடும்பம் நடத்து போதும்!” கத்திவிட்டான்.
பாவம் அவன்! உடன் பிறப்பை அப்படி ஒரு இடத்தில், அவனால் யோசிக்க முடியவில்லை. அவள் மட்டும் தானே பாசமாக வளர்க்கப்பட்ட தேவதை! மற்ற பெண்கள் பூமியைப் பிளந்துகொண்டு இதற்காக தானே உருவாகிறார்கள். அதனால்.. அவன் கோபம் நியாயமானது தான்!
“ஏன் ண்ணா.. என்ன தப்பா கேட்டுட்டேன். மத்த பொண்ணுங்க மாதிரி என்னையும் அங்க சேத்துவிட தானே கேட்டேன். தப்பா பேசலியே. அதுக்கு போய் கோவிச்சுக்கிற?” நந்தினி கண் பனிக்கவும்..
“ஸாரி நந்துமா..” என்றான். இனி பாம்பே பக்கமே போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டான்.
“உன் படிப்புக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல வேலைக்கு போ. நான் இங்க தான் இருக்க போறேன். அந்த வேலைய விட்டுடேன். அப்புறம் பேசுவோமா? களைப்பாயிருக்கு.. கொஞ்ச நேரம் ரூமல படுக்கிறேன்” நந்தினியிடமிருந்து பதில் வரும் முன்.. எழுந்து நடக்க ஆரம்பித்தவனை நிறுத்தியது, நடுகூடத்திடல் எழுந்த சிரிப்பொலி.
துளசி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவள் இருகால்களுக்கும் நடுவே நின்று, அவள் கழுத்தை கட்டிக் கொண்டு பாரதி. அருகில் மூக்கை உரிஞ்சுகொண்டே பாரதியின் தம்பி, ஹரி. எதிரே தங்கமும் பானுவும். ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
துளசி மாசமாக இருப்பது தெரியாது. வயிறும் மறைக்கப் பட்டிருக்க.. அந்த சிரித்த முகம் மட்டும் தான் தெரிந்தது. இதயம் நின்று துடித்தது. தொண்டையில் மூச்சு மாட்டி நின்றது. ‘கோமல்’ மனம் உச்சரித்தது.
“துளசி… மூர்த்தி எங்க மா?” செல்வமணி கேட்டுக் கொண்டே வர..
‘கோமலில்லை. இது துளசி!’ மணியின் இலகுதன்மை எல்லாம் மாறிப் போனது. மாடி அறையில் சென்று படுத்தவன்.. மதிய உணவு வரை கீழே வரவில்லை.
இன்னும் எத்தனை நாள் காத்திருப்பது? கீழே இருப்பவள் துளசி என்று மனம் நம்ப மறுத்தது. ஆனால் அது தானே உண்மை. உண்மை காதல், காதலர்களை சேர்த்து வைக்குமாமே? அவன் காதலில் உண்மை இல்லையா? போதையில், கண்ட பெண்களோடு உறவு கொண்டது, அவன் காதலுக்கு.. அவன் காதலிக்கு.. செய்யும் துரோகம் என்று தோன்றியதாலேயே போதையும் விட்டான்… பெண்களையும் விட்டான். இன்று வரை அந்த பாழாய்ப் போன இடத்திலிருந்ததிற்கும், அவன் கோமல் தானே காரணம். என்றாவது ஒரு நாள் கண்ணில் படமாட்டாளா என்று அந்த சிகப்பு விளக்கு எரியும் இடத்தை தானே சுற்றி வந்தான். கோமலைக் காணாமல் இருந்திருந்தால் இன்று அவன் வாழ்க்கை இப்படி சீர் கெட்டுப் போயிருக்காதே.
பாம்பே பக்கம் போகாம் போனால்.. அவள் கிடைப்பாளா? வாழ்வு பாரமாய் போனது. கோமல் வேண்டும்… மனம் கூப்பாடு போட்டது. ‘ஒரு முறை.. ஒரே ஒரு முறை பார்த்தால்.. எல்லா தடைகளையும் உடைத்து, பிடித்து வைத்துக் கொள்வேன். வந்துவிடேன்!’ சத்தமில்லாமல் வலிக்க வலிக்கக் கதறினான்.
என்ன கருமம் பிடித்த காதல் இது? ஒரு மனிதனை முழுமையாகக் கொன்று கொண்டு?
கண் மூடி கிடந்தான். அந்த பாவிக்கும் மனம் இருந்தது. அதில் அழியாத காதல் இருந்தது. அந்த காதல் காவியமாய் அவன் கோமல் இருந்தாள். மூடியிருந்த இமையைப் பிளந்து கொண்டு உப்பு நீர் வழிந்து காது மடலை நனைத்தது.
‘வந்திடு கோமல். என்னால அங்க தாக்கு பிடிக்க முடியலையே.. வந்துடு… எல்லாத்தையும் விட்டுட்டு உனக்கு மட்டுமே இருந்துடுறேன்..’ என்றும் போல் இன்றும் மனதார அழைத்தான்.
கோமல் என்ற ஒருத்தி இன்று இல்லவே இல்லை. அதனால் அவன் காதல் யாகம் பலனில்லாமல் போனது. அவன் அழைப்பும் கேட்காமலே போனது.