செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 47
இன்று பத்தாம் தேதி. வாக்கு கொடுத்திருந்தானே துளசியிடம்..!
செல்வனிடம் பேசிவிட்டு, மூர்த்தி நேரே சென்றது, மகிழம் பூ மரத்தடியை நோக்கிதான்.
தோட்ட வீட்டை அடைந்தவன் அதையே வெறித்து நின்றான். 24 மணி நேரம் முன் உள்ளே கண்ட காட்சிகள் மறக்க முடியவில்லை. ஆயுசுக்கும் மறக்கத்தான் முடியுமா? அதன் பின் தானே துளசியை பார்ப்பதில்லை என்று தீர்க்கமான முடிவெடுத்தான்.
இருவாய்ச்சி பறவைக்கு இணையாய் தன்னை நினைத்தவளைக் காக்கவில்லை. அவன் வாழ்வின் பொருளாய் போன அவன் துளசியைப் பேச்சு மூச்சில்லாமல் படுக்க வைத்தவனை விட்டு விட்டு அழுது கொண்டே கோழையாய் துளசி முகத்தில் எப்படி விழிப்பான்? கோழையின் முகத்தைத் துளசி பார்க்க விரும்ப மாட்டாளே..
முன்தினம் காலை துளசி எங்கே என்று மூர்த்தி, செல்வனிடம் கேட்க.. செல்வன் பக்கத்து அறையைக் காட்ட… சத்யன் உடைந்து அழ.. மூர்த்தி நேரே வந்தது இங்கு தான். கூறியிருந்தாளே அவன் மனைவி.. மரத்தடிக்குத் தான் வரவேண்டும் என்று. அங்கு தான் சென்று பார்த்தான். பித்துப்பிடித்தவன் போல் நான்கு முறை மகிழம் மரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டான். அவள் அங்கு இல்லை.
“துளசி மா..” கூப்பிடவும் செய்தான்.
“மூர்த்தி சார்” என்ற எதிர்பார்த்த பதில் வரவில்லை.
தோட்ட வீட்டின் பின் கதவைத் திறந்ததும், இரத்த வாடை குடலை பிரட்டியது. மற்றவர்கள் கண்டிப்பாக வாந்தி எடுத்திருப்பார்கள். இவனுக்கு குமட்டக் கூட இல்லை.
அடுக்களை வழியே உள்ளே சென்றிருந்தான்.
அவன் நந்து அங்கு தான் போராடியிருப்பாள் போலும்… சாமான் அங்கும் இங்குமாய் கிடந்தது. யாரால் இந்த போராட்டம்? ஏன் அவளைத் துன்பப்படுத்த வேண்டும்? இன்று காலை வரை உண்மை தெரிந்திருக்கவில்லையே.. மகள் மேல் கை வைத்தவன் கையை இன்னும் எடுக்கவில்லையே என்ற கோபம் மட்டும் தான் உண்மை தெரியும் வரை.
அதே அறையின் சுவரில் ரத்தம். ‘யாரின் மண்டை இங்கு பிளக்கப்பட்டது?’ அவனுக்குத் தெரியவில்லை.
நடுக்கூடம் வந்தவன் காலில் இடிபட்டது, சிதறிக் கிடந்த மரிச்சினி கிழங்கும் அருவட்டியும். லிட்டர் ரத்தம் நடு கூடத்தைக் கறைப் படுத்தியிருந்தது. அங்கு தான் அக்கா நெஞ்சில் கத்தியோடு துடித்திருக்க வேண்டும். எவ்வளவு ரத்தம்?
“அக்கா…” சுவரோடு சாய்ந்து நின்றுவிட்டான்.
மீதமிருந்த படுக்கை அறைக்குச் செல்ல கால் நகரவில்லை. பயம் என்ற ஜந்து எல்லா அணுவையும் கவ்விப் பிடித்து, இதயத்தைப் பின்னிப் பிணைத்து நெறித்தது. வலித்தது.
அகலமாகத் திறந்திருந்த கதவின் வழி உள்ளே செல்ல இடுக்கமாகத் தோன்றியது. ஏன் நடக்க முடியவில்லை? விசாலமான காற்றோட்டம் நிறைந்த அறையில் மூச்சுக் காற்றுக்கு தட்டுப்பாடாய் போனது. நுரையீரல் சுவாசக் காற்றின்றி தவித்தது. ஏன் மூச்சு முட்டுகிறது? துளசி இல்லாத வீடு கூட நரகம் என்றதால் இருக்கலாம்.
உள்ளே நுழைந்தவன் காலில் உடைந்து கிடந்த மஞ்சள் வளையல் குத்தி வரவேற்றது.
“கை நீர் பிடிச்சு வீங்கிட்டே போகுது மூர்த்தி சார்.. பெரிய சைஸ் வளையல் வாங்கணும்..” என்றாளே.. கைக்குள் நுழையவில்லை என்று உடைத்துப் போட்டுவிட்டாளோ?
“துளசி மா..” கண் பனித்தது.
எதையும் தொட கூடாதாமே… உள்ளே அனுப்பிய கான்ஸ்டபிள் கூறியிருந்தார். இருந்தும் அந்த உடைந்த வளையலை எடுத்தான். உடைந்து கிடந்த மஞ்சள் வளையல் ஓரத்தில் ஏதோ சிகப்பாய். ரத்தமா? யாரின் ரத்தமாம்? கை நடுங்க.. வளையல் துண்டு மீண்டும் தரையில் விழுந்தது.
“ஒரு மாதிரி பயமா இருக்கு மூர்த்தி சார். என்னை விட்டுட மாட்டீங்களே. முன்ன எப்படியோ.. இனிமேல் தனியா போராட முடியாது மூர்த்தி சார். ரொம்ப பயமா இருக்கு.”
“தனியே போராட விட்டுடேனா துளசி?” கன்னத்தில் ஈரம்..
இதோ இந்த கட்டிலில் கட்டிக்கொண்டு தானே இதை உரைத்தாள். மெத்தையைப் பார்த்தான். உருக்குலைந்து கிடந்தது. நேற்று மதியம் அரங்கேறிய கூடல் நினைவில் வந்தது.
“எனக்கு உன்ன தான் ரொம்ப பிடிக்கும் துளசி மா.. சந்தேகப்படாத! மீறி சந்தேகப்பட்ட.. அப்புறம் இப்படி தான் டார்ச்சர் அனுபவிப்ப.” அவன் மிரட்ட, “போங்க மூர்த்தி சார்..” என்று சிரித்தாளே.
எத்தனை விதமாக ‘மூர்த்தி சார்’ என்றாள். அப்படி கலைந்ததா? இல்லையே.. செல்லும் முன் அவன் தானே போர்வையை மாற்றி விட்டுச் சென்றான்? எப்படி புது போர்வை கலைந்தது?
கன்னத்தின் ஈரம் வழிந்து கழுத்தை நனைத்தது.
கலைந்த மெத்தையைத் தொடப் பிடிக்கவில்லை. அவன் கிளம்பும் முன் சூட்டிய மலர்ச் சரம்.. உதிரிப் பூவாய் மெத்தை முழுவதும். பனித்த கண் மங்க ஆரம்பித்தது. புறங்கையால் துடைத்துக் கொண்டான்.
மெத்தையில் அவன் வேட்டியோடு ஏதோ புது துணி, அதுவும் பிரிக்கப்படாமலே கசங்கிப் போயிருந்தது. எடுத்துப் பார்த்தான். கேரள பெண்கள் உடுத்தும் வேட்டி தாவணி போன்ற புடவை, அழகான தங்க நிற பார்டர். உதட்டைக் கடித்து நின்றான். கூடவே பாட்டில் நிற பச்சை ரவிக்கை.
எத்தனை நேரம் வெறித்தானோ… கண் மங்கி அதுவும் தெரியவில்லை. துணியைக் கட்டிலில் வைத்துவிட்டு நகர..
மீண்டும் காலில் ஏதோ… பெரியதாகத் தங்க ஜிமிக்கி.. அதில் வெண் முத்துகள். எடுத்த கை நடுங்கியது.
‘துளசி..’ என்றான். கண் அளவுக்கு அதிகமாய் கலங்கியது. தொண்டை வரை கரித்தது.
கட்டிலைச் சுற்றி வர..
இரண்டு நீளத்தில், ஒரே போல் இரண்டு கொலுசுகள். முழுவதும் சலங்கை.
“இது உங்க பொண்ணுக்கு” காதில் எதிரொலித்தது.
“காலையில நீங்க இங்க வந்ததும்.. இதே மரத்தடியில உங்களுக்கு சர்ப்ரைஸ் தருவேன்..”
“வா வந்து சர்ப்ரைஸ் தா துளசி” தேம்பினான்.
கீழே கிடந்த கொலுசை, கண்ணீர் சொட்டக் குனிந்து எடுக்கப் போனவன்.. மேசை கீழிருந்து எடுத்ததோ அவன் துளசிக்கு அணிவித்திருந்த தாலி.
துளசிக்கு பிடிக்காத இரும்பு மேசை நுனியிலிருந்து ஆரம்பித்திருந்த ரத்தம் கீழே கிடந்த தாலியை நனைத்திருந்தது. சர்வமும் ஒடுங்கி, சுவரோடு சுவராய் அமர்ந்தவன் முதலும் கடைசியுமாக கதறினான்.
மனைவியின் ரத்தம் படிந்த தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொண்டே, அடக்க முடியாமல் வாய் விட்டு அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பிக் கதறினான். கதறல் முழுவதுமே ‘துளசி’ என்ற ஒற்றை சொல்லை மட்டுமே கொண்டிருந்தது. இம்முறை இவன் விதவிதமாக உச்சரித்தான் அவள் பெயரை. அவளைப் போலவே கடைசியில் காற்று மட்டும் தான் வந்தது.
இதை எல்லாம் பார்த்தவன், துளசியின் நிலை தெரிந்தபின் எப்படி அவளைப் பார்ப்பான். மூர்த்தி தான் இருவாட்சி என்றாள்.. எப்படி அவள் முகத்தில் முழிப்பான்? யாருக்கும் அவன் விளக்க முடியாது. அவன் உணர்வு அவர்கள் இருவருக்கும் மட்டுமே புரியும்.
அவன் கதறல் வானுக்கும் பொறுக்க முடியவில்லை போலும். அவன் சத்திற்குப் போட்டிப் போட்டு இடி முழங்கி, தோற்றுப் போனது. சொட்டு சொட்டாய் ஆரம்பிக்காமல் கனம் தீரக் கொட்டிய மழை.. நிலத்தை நனைத்து, சேறாய் ஒழுக ஆரம்பித்தது. நல்லதோர் மழை நாளில் ஆரம்பித்த காதல் வாழ்க்கை… முடிந்துவிட்டது என்று எண்ணியதோ என்னவோ.. அதுவும் அவனோடே அழுது தீர்த்தது.
இன்று மழை இல்லை. கண்ணில் கண்ணீரும் இல்லை. அந்த அழகிய குடில் துளசி இல்லாமல் கொடூரமாகத் தோன்றவும்.. அதைச் சுற்றிக் கொண்டு மகிழம் மரத்தடிக்குப் போனான்.
அங்கு தானே இருப்பதாய் கூறினாள். ஆனால் அவள் இல்லை. இன்று இரண்டு மலர்களின் வாசம் மட்டுமே இடத்தை நிறைத்திருந்தது.
“துளசி மா.. பிறந்த நாளுக்கு வந்துட்டேன். வா துளசி” கரகரத்த குரலோடே.. வர மாட்டாள் என்று தெரிந்தே அழைத்தான். அவள் வரவில்லை.
அழுகை முட்டிக் கொண்டு வர.. “துளசி..” இயலாமையோடு ஆத்திரம் தாங்காமல் கத்தினான். அருகிலிருந்திருந்தால் காது ஜவ்வு கிழிந்திருக்கும்.. அதற்கும் வரவில்லை.
“துளசி மா… வா டி” அவள் ஆசைப்படியே கெஞ்சிக் கூப்பிட்டான். இன்று அதைக் கேட்க அவளில்லை. பேராசிரியர் பதவி எல்லாம் நினைவில் இல்லை. மரியாதையாவது ஏதாவது.. அவள் விருப்பம் மட்டும் தான்! அவள் ஆசைப்படியே அழைத்தாலும் வர மாட்டாளாமா?
திண்டில் அமர்ந்து கண் மூட… மீண்டும் வீட்டில் கண்ட காட்சிகள் கண் முன் களியாட்டம் போட்டது. கொன்று விட வேண்டும். அவன் குருவிக் கூட்டை கலைத்த அத்தனை தலைகளையும் கொய்தே ஆகவேண்டும். ‘மீண்டும் வருவதாகச் சவால் விட்டாளாமே.. யார் வீட்டுப் பிள்ளைகளை யார் கொண்டு போவது? உயிரோடு விட்டால் தானே வருவாள். என் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் அல்ல.. யார் வீட்டுப் பிள்ளையையும் பார்க்க அவள் கூட்டம் இருக்கக் கூடாது.’ மனம் முடிவெடுத்தது.
இத்தனை பெரிய பாதிப்பு நம் வீட்டில் நடந்தால் மட்டும் தான் நாம் விழிப்போமா? ஏன் தவறை சகித்து போகிறோம்? புண்ணியம் செய்த நம்மை அது தீண்டாதென்றா? அடுத்த வீட்டு கதறலுக்கு நம் வீட்டில் கதவும் ஜன்னலும் கூட அடைபட்டுப் போகிறதே? ஏன்?
‘ஏன் உணர்வில்லாத ஜென்மம் ஆகிப் போனேன்?’ மனம் கசந்து போனது.
‘அன்றே கௌரவோடு.. அந்த கௌஷியின் கூட்டத்தை வேரோடு பிடுங்கி இருந்தால், இன்று என்னைப் போல் பல தகப்பன்கள் கண்ணீர் சிந்தியிருக்க மாட்டார்கள். பழி என்று எடுத்தாலும் சரி.. அது எதுவாக இருந்தாலும் சரி..’ முடிவில் மாற்றமில்லை.
‘படித்தவன் காட்டு மிராண்டி போல் பழி வாங்க போவதா?’
“அது பேரு பழி வாங்குறது இல்ல மூர்த்தி சார். தப்ப தட்டி கேக்கறது” துளசி கூறினாளே..
“தப்ப தட்டி கேளு மூர்த்தி” அக்கா கூறினாரே!
மூர்த்தி அவன் மனதோடும் மூளையோடும் போராடிக்கொண்டிருந்தான். மனம் ஜெயித்துக் கொண்டிருந்தது.
“மூர்த்தி..” சத்யன், அருகில் வந்து அமர்ந்தான்.
நேற்று காலையே அடிபட்டவனைப் பற்றி விசாரிக்கச் சென்ற சத்யன், மீண்டும் இன்று காலை தான் மருத்துவமனை சென்றான்.
நேரே சென்று துளசியைப் பார்த்தான். பானுவையும் மணியையும் பார்த்தான். மருத்துவரிடம் பேசி நிலவரம் தெரிந்துகொண்டான். கடைசியாக, மூர்த்தியைத் தேட.. செல்வனுக்குத் தெரியவில்லை மூர்த்தி எங்குச் சென்றிருப்பான் என்று. தேடிப் பிடித்து இதோ வந்துவிட்டான் நண்பனை காண.
கசங்கிய சட்டையோடு… சவரன் செய்யாத முகத்தோடும் மூர்த்தியை எதிர்பார்க்க.. மூர்த்தியோ, என்றும் போல் இன்றும் அதே மிடுக்கோடு, கைகள் மார்புக்கு குறுக்காய் கட்டியிருக்க, கண்மூடி அமர்ந்திருந்தான். அதே கம்பீரம் குறையாத முகம். முழங்கை வரை மடித்துவிட்ட வெண் சட்டை. கசங்கலில்லாத வெள்ளை வேட்டி.
“மூர்த்தி..”
திரும்பி பார்த்தான். எந்த உணர்வும் இல்லாத ஒரு பார்வை.
“டாக்டர பார்த்தேன் டா. செல்வன் அங்கேயே தான் இருக்கான். நீ துளசிய பாக்கலியா?”
“டேய் மச்சான்..” துக்கம் தொண்டையை அடைக்க.. அவன் பேச இவன் அமர்ந்தே இருந்தான்.
“அழுது தொலையேன் டா.. இப்படி மரம் மாதிரி உக்காந்து இருக்க? போய் ஒரு தரம் பாரேன் டா..” சத்யன் உலுக்கினான். கத்தினான். அழாத குறையாக கெஞ்சினான்.
மென்று விழுங்கினான் மூர்த்தி. ‘துளசி மா..’ துடித்தான். ஆனால் அசையவில்லை. அவன் அங்கிருக்க.. மனம் மட்டும் அங்கு இல்லை. மனைவியின் பஞ்சு மடியை தேடி அலைந்தது.
அவளைப் படுக்க வைத்தவன் தலையை எடுக்காமல் அவள் முகத்தில் எப்படி விழிப்பான்? ஏகப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இடையே பெரிய வயிறோடு படுத்திருப்பவளை எப்படிப் பார்ப்பான்? இடது பக்கமாகச் சரித்துப் படுக்க வைத்தார்களா? தெரியவில்லை. முதுகு வலி வந்தால் அவளுக்குத் தெரியுமா? இனி அதைப் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாமோ? பல்லைக் கடித்து மென்று விழுங்கினான்.
கண்ணை மூட துளசி சிரித்தாள். போதும்.. அவனால் வேறு விதமாகத் துளசியைப் பார்க்கவே முடியாது.
இதோ… இந்த மூர்த்தியின் அவதாரம் சத்யனுக்குப் புதிது. புரியவில்லை தோழனின் உணர்வுகள்.
கதறி அழ வேண்டாமா? தோள் தேட வேண்டாமா? உடைந்து போயிருக்க வேண்டாமா? இல்லை கோபமாவது பட வேண்டாமா? இது என்ன நிலை? உணர்ச்சியற்ற முகமும் இல்லை. என்ன தான் நினைக்கிறான்? புரியவில்லை.
சொற்கள் விவரித்தற்கரிய உணர்ச்சிகள் அவை. உள்ளுக்குள் உடைந்து, நண்பன் செத்துக் கொண்டிருப்பதை சத்யன் அறியாமலில்லை.
மூர்த்தியின் அவஸ்தை, படுத்துக் கிடப்பவளுக்கும் தெரியும் தானே.. கண் விழித்தால் தான் என்ன?
இயலாமையோடு பார்த்திருந்தான் சத்யன். கோபம் கோபமாய் வரக் கத்தியும் விட்டான்.
“டேய்.. உன்ன தான் டா… ஒரு தரம் அவ முகத்த பாரேன் டா… அழுது தொலையேன் டா. இப்படி இருந்தா.. நெஞ்சு வெடிச்சு அவளுக்கு முன்ன நீ செத்திடுவ டா”
அசையவே இல்லை. அமைதியாக சத்தியனைப் பார்த்தான். “கண்டுபிடிச்சியா?” என்றான்.
“ப்ரேம் வந்திருக்கான் சில தகவலோட. சந்திராசூர், சந்திராவோட பேர். ஆந்திரால சுத்தறதா தகவல். அவன் அங்க இருந்து காணாம போகறதுக்குள்ள நான் கிளம்பணும். நீ இப்படி இருந்தா என் வேலைய நான் பாக்க முடியாது.”
மூர்த்தி அசைந்தானில்லை.
“இப்போ எழுந்திரு மூர்த்தி.. மூச்சு நிற்கிறதுக்குள்ள ஒரு தரம் பாரேன் டா! முதல்ல துளசிக்கு ஒரு நல்ல புருஷனா இரு.. போ”
‘எப்படி? அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டா? போகும் உயிரைப் பிடித்து வைக்கும் உக்தி தெரியாதே..’ அதனால் சத்யன் பேச்சு அவன் காதில் விழவில்லை.
“ரெண்டு இன்ஃபார்மர்ஸ்ல ஒருதன் நீயா மாறதுக்கான ஏற்பாடு பண்றேன். நீ என் கூடவே இரு. அந்த நாய் கூட்டத்தை உன் கைக்கு விட்டு தரேன்.”
இதை தான்! இதை மட்டும் தான் மூர்த்தி கேட்க விரும்பியது!
‘காத்திரு துளசி… முடிச்சுட்டு நீ எங்க இருக்கியோ அங்க வந்து பாக்குறேன்!’ நீண்ட மூச்சை இழுத்துவிட பார்த்தான். என்ன முயன்றும் மூச்சு உள்ளே மாட்டியே நின்றது.
ஐம்பொன் காப்பை மேல் ஏற்றி, வேட்டியை மடித்துக் கட்டி கிளம்பிவிட்டான், துளசியின் மூர்த்தி!