Skip to content
Post Views: 56
ஆகாயமே என் ஆதாரமே 6
தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆளில்லை.கணவரோ இப்போதெல்லாம் அதிகமாக வீட்டில் இருப்பது இல்லை.வெளியூர்களுக்கு அவரது பிரயாணம் அதிகரித்து விட்டது.ராதாவுக்கு மெனோபாஸ் சமயம் வேறு. சீதா இப்போது மூன்றாம் வருஷம் படித்துக் கொண்டிருக்க பெரியவளோ எம்எஸ்சி நியூட்ரிஷன் முடித்துவிட்டாள் . ஏற்கனவே அவள் இளங்கலை படிக்கும் பொழுது தங்க மெடல் வாங்கியவள்தான்.அதை இன்று வரை அவள் வீட்டில் சொல்லவும் இல்லை. வேறு யாருக்கும் சொல்லியதும் இல்லை.அவளுக்கும் அவளது நெருங்கிய தோழிகளுக்குமான ரகசியம் அது.இதோ இப்போதும் குறைந்தது மூன்று பேப்பர்களில் தங்கம் வரும்.அதெல்லம் அவளுக்கு பெரியதாக தெரியவில்லை.
உண்மையில் அவளது தங்கை அதிக மதிபெண்கள் எடுத்திருந்த சமயத்தில் தான் இவளுக்கும் தங்கம் கிடைத்திருந்தது, வீட்டில் இதை பெரியதாக எடுத்துக்கொள்ள போவதில்லை என்று இவளே முடிவு செய்து சொல்லாமல் இருந்து விட்டாள் . இப்போதும் அவர்களுக்கு சொல்ல என்று இவளிடம் எதுவும் இல்லை.
சூட்கேசில் அவளது மெடல்களை எடுத்து வந்தவள் அதை அப்படியே தனது அறைக்கு எடுத்துக்கொண்டு சென்று வைத்துக் கொண்டாள் . அவளை புரிந்துகொள்ள வீட்டில் யாரும் முன்வரவில்லை என்பதுதான் அங்கே வருத்தம் கொள்ளவேண்டிய விஷயம்.
Advertisement
ஆரம்பத்திலிருந்தே ஜானகியிடம் இருக்கும் நல்ல விஷயங்களை கண்டுபிடித்து ஊக்குவிக்கவும் ,அவளை அணைத்துக் கொள்ளவும் பெற்றவள் அதிகமாக முன்வரவில்லை.சீதா பிறந்த பிறகு ராதாவின் நேரம் சிறியவளுக்கு தான் என்று ஆனது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு கிருஷ்ணனால் முடியவில்லை.அவரது பணத்திற்க்கான ஓட்டம்தான் இன்றுவரை குடும்பத்தை வயிறு வாடாமல் வைத்திருக்கிறது.
வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை.இருந்திருந்தால் ஒருவேளை அவர்களிடமாவது ஒட்டிக் கொண்டிருப்பாளாக இருக்கும். அதையும் ராதா வரவேற்கவில்லை. மொத்தத்தில் தனது உளக்கிடங்கை சொல்ல வீட்டில் யாரும் இல்லை. சீதா மீதும் ஒருவித கோவம் படர்ந்து இருந்தது.
இதெல்லாம் போதாது என்று ராதாவை பொறுத்தவரை தனது மகள் ஜானகிக்கு பெரியதாக படிப்பும் வரவில்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண்களே சாட்சி. அவள் படித்திருக்கும் படிப்புக்கு வேலை கிடைப்பது கஷ்டம்.அப்படியே கிடைத்தாலும் பெரியதாக சம்பளம் வராது. அழகும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. சீக்கிரம் திருமணம் செய்து அனுப்பி விட்டால் நல்லது.
Advertisement
அம்மா தன் மீது வைத்திருக்கும் அபிப்ராயம், தான் மேலே படிக்க அப்பாவின் சப்போர்ட் இருந்ததால் மட்டுமே இன்றுவரை தனது வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. அவளுக்குள் ஒரு பெருமூச்சு எழுந்தது. அப்பா தனது விஷயத்திலாவது பேசினாரே என்று ஆஸ்வாசம் தான்.
Advertisement
ராதா திரும்பவும் ஜானகிக்கு வரன் பார்க்க தொடங்கிவிட்டாள் . ராதை நினைத்தபடிக்கே ஜானகிக்கு பெரிய அளவில் வேலை கிடைக்கவில்லை. சாதாரணமாக ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருஷங்கள் ஆகிவிட்டது.வெளியூரில் வேலைக்கு செல்வதற்கு ராதை அனுமதி அளிக்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் கிடைத்த வேலைக்கு சென்றாள் ஜானகி.அதற்குள் சீதா கல்லூரி முடித்து, கேம்பஸில் தேர்வாகிவிட்டாள் . பயிற்சி ஒருவருஷம் மைசூருவில். சந்தோஷமாகவே சீதாவை அனுப்பி வைத்தாள் ராதா. ஆரம்பமே ஐந்து இலக்க சம்பளம். தங்கள் வாழ்க்கை தரம் இன்னமும் உயரப் போகிறது என்று அவளுக்குள் சந்தோஷம் .
சீதாவுக்கு பெற்றவர்களை விட்டு இவ்வளவு தூரம் வருவதே பிடிக்கவில்லை.ஆனாலும் அம்மாவுக்காக வந்தாள் .இதைவிட குறைந்த சம்பளத்தில் சென்னையில் வேலை கிடைத்ததுதான்.ஆனால் ,ராதாவின் கனவுகளை சிதைக்க சீதாவுக்கு விருப்பம் இல்லை.சுற்றி இருக்கும் உறவினரெல்லாம் பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு சென்றுவிட்ட நிலையில் இவர்கள் மட்டும் இந்த மத்திய தரத்தில் உழல அவசியம் இல்லையே!
ஒருவருஷ பயிற்சி காலத்தை முடித்துவிட்டு சென்னை வந்து விடவேண்டும் என்று நினைத்தவளுக்கு முதல் போஸ்டிங் பெங்களூருவில் என்றார்கள். 2000 தொடங்கி , இன்றுவரை மென்பொருள் கம்பெனிகள் அதிகமாக இருப்பது பெங்களூரு மற்றும் ஹைதெராபாத் நகரங்களில் தாம். அடுத்த இடம்தான் நமது சென்னைக்கு.ஏனோ இங்கே இன்னமும் இந்தத்துறை முன்னேறவேண்டிய தொலைவு அதிகமாக இருக்கிறது.
Advertisement
வேறு வழியே இல்லாமல் பெங்களூரு சென்று வேலையில் சேர்ந்துவிட்டாள் சீதா. முதலில் வேலை செய்யும் பெண்களுக்கான விடுதியில் தங்கி இருந்தவளுக்கு உணவு சரிப்படவில்லை. வயிறு உபாதையில் அவஸ்தை படும் மகளுக்காக அடிக்கடி ராதா வந்து சென்றாள் .
மூன்று மாதங்களில் தனியாக ஒற்றை படுக்கை அறையுடன் கூடிய வீட்டை பார்த்துக் கொண்டு வந்துவிட்டாள் சீதா. அவளை தனியாக விட முடியாமல் ராதாவும் அவளுடன் வந்து தங்கிவிட ,சென்னையில் கிருஷ்னனும்,ஜானகியும் ஜாகை. தற்காலிகமாக ஜானகிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நிறுத்தி வைக்கப் பட்டிருக்க ,மேலே எம்பில் படிக்க சேர்ந்துவிட்டாள்.
அதேசமயம் சென்னையின் புகழ் பெற்ற மருத்துவமனையில் ஜானகிக்கு வேலை கிடைத்துவிட ,சம்பளமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டது.மூத்த மகளிடம் எப்போதுமே தனி பிரியமும்,இரக்கமும் கொண்ட கிருஷ்ணன் ஜானகியிடமிருந்து அவளிடமிருந்து சம்பள பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.அவளின் பெயரில் ஒரு தனி வங்கிக்கணக்கில் அந்த பணம் சேர்ந்து கொண்டிருந்தது. அவள் தனக்கு பிடித்த டிசைன்களில் சில நகைகளை வாங்கி கொண்டாள்.
ராதாவுக்கு மனமோ மூத்த பெண்ணுக்கு திருமணத்தையாவது முடித்திருக்கலாம் என்று அடித்துக்கொண்டது. சீதாவிடம் புலம்பினாள். அம்மாவை தேற்றவென்று சீதா அம்மாவுக்கு பெங்களூரை சுற்றிக் காட்டினாள். பண்டிகைகளுக்கு மட்டும் அவர்கள் இருவரும் சென்னை வந்துவிடுவார்கள்.
ராதாவுக்கு மனமோ மூத்த பெண்ணுக்கு திருமணத்தையாவது முடித்திருக்கலாம் என்று அடித்துக்கொண்டது. சீதாவிடம் புலம்பினாள். அம்மாவை தேற்றவென்று சீதா அம்மாவுக்கு பெங்களூரை சுற்றிக் காட்டினாள். பண்டிகைகளுக்கு மட்டும் அவர்கள் இருவரும் சென்னை வந்துவிடுவார்கள்.
ஜானகியின் காரணமாக கிருஷ்ணன் எங்கயும் வெளியூர் செல்வது இல்லை. இருவருக்கும் இடையில் இருந்த கண்ணுக்கு தெரியாத மதில்சுவர் உயரம் குறையத் தொடங்கியது.
ஜானகி தினமும் சமைத்து விட்டு தனக்கும் அப்பாவுக்குமான உணவை டப்பாவில் அடைத்து இருவருமாக எடுத்துச்செல்லவார்கள். இருவரும் இப்போது ஒன்றாக கோவிலுக்கு செல்வது,ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் செல்வது எண்டெல்லாம் பழகியிருந்தார்கள். சென்னையில் படிக்கும் பொழுது ஜானகி தோழிகள் யாரையும் வீட்டுக்கு வரச்சொல்லியோ,இவள் மற்றவர்கள் வீட்டுக்கு சென்றோ பழக்கம் இல்லை.
அதற்கு மிக முக்கிய காரணம் ராதாவை பொறுத்தவரை,தனது மகள் ஜானகிக்கு படிப்பு சரியாக வராது. அதனால் முதல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகள் தோழிகளாக இருக்க முடியாது. சுமாராக படிக்கும் பெண்களுடன் பழகினால் நல்ல பழக்கங்கள் வராது. அதனால் தோழியர் கூடாது. இப்படி ஒரு அபிப்ராயம் வைத்திருக்கும் அம்மா இருக்கும் இடத்திற்கு ஜானகி எப்படி தோழிகளை அழைத்து வர முடியும்?(இப்போது உங்களுக்கு புரிகிறதா..பெண் ஏன் தலைதெறிக்க ஹாஸ்டலுக்கு சென்றாள் என்று)
முக்கிய விஷயம் இந்த கட்டுப்பாடுகள் எதுவும் சீதாவுக்கு கிடையவே கிடையாது. அதே சமயம் சீதாவை பார்த்து பாடத்தில் சந்தேகம் கேட்கவென்று சுமாராக படிக்கும் தோழிகள் வந்தால் ராதாவுக்கு அவ்வளவு பெருமையாக இருக்கும்.என் மகள் எவ்வளவு நன்றாக படித்தால் இப்படி சந்தேகம் கேட்கவென்று,பாடம் சொல்லத்தர கேட்டு என்று தோழிகள் வீட்டுக்கு தேடி வருவார்கள்?/இதை வார்த்தைகளால் வேறு சிறுபிள்ளைதனமாக சொல்லிக் கொண்டிருப்பாள் ராதா. ஆனால் ,பாவம் சீதா.தனது அம்மா யோசிப்பது போலவெல்லாம் அவள் யோசித்தும் கிடையாது.’தான்’என்றும் கர்வம் கிடையாது. இப்போது வரை அப்படிதான் இருக்கிறது அந்த பெண். ஜானகி தனது அம்மாவை புரிந்துகொண்ட அளவில் இன்னமும் சீதா புரிந்து கொள்ளவில்லை.
இதோ இப்போது அம்மா இங்கே இல்லை என்றதும் ஜானகி தனது பழைய தோழியர் வட்டத்துடன் உறவை புதுப்பித்துக் கொண்டாள் . அவர்கள் வீட்டுக்கு இவள் செல்வதும்,இவள் வீட்டுக்கு அவர்கள் வருவதும் வழக்கம் ஆனது. கிருஷ்ணன் அவர்களுடன் அமர்ந்து அரட்டை கூட அடிப்பார். சிரிக்க பேசுவார். ஜானகி வியந்தது உண்டு..நம் அப்பாவுக்கு இப்படி விட் அடித்து,சிரித்து பேச தெரியுமா என்று.ராதா இருக்கும் பொழுதுகளில் அவர் சிரித்து பார்த்தது இல்லை. ஒருவித இறுக்கம் பரவியிருக்கும்.ராதா வீட்டுக்கு வரும் சமயங்களில் தோழிகள் யாரையும் ஜானகி வீட்டுக்கு வர சொன்னதில்லை. வீடே அமைதியாக இருக்கும்.
ஜானகி நடுவில் இரண்டுமுறை வேலை பயிற்சிக்கு என்று பெங்களூரு சென்று வந்தாள் .ஆனால் ,ஏனோ அவளும் அம்மாவிடம் சொல்லவில்லை. அப்பாவிடமும் சொல்ல வேண்டாம் என்றுவிட்டாள் .அவரும் ஏன் என்றெல்லாம் கேட்கவில்லை. இப்போது நல்ல சம்பளமே அவளுக்கு வருகிறது. வங்கிக்கணக்கில் கொஞ்சம் பணமும் சேர்ந்துவிட்டது.
2005 களில் என்று நினைக்கிறேன் .நான் முதன்முதலில் எனது ரிலையன்ஸ் அலைபேசியை வாங்கினேன். வேலைக்கு செல்லுவதற்கு தோது என்று அம்மா வாங்கி கொடுத்தது. ஏன் இப்போது ஞாபகம் வந்தது என்றால் இப்போது ஜானகி அலைபேசி வாங்கி இருக்கிறாள். 2002ம் ஆண்டு வரை கிருஷ்ணன் பேஜர் தான் வைத்திருந்தார்.அதற்குப் பிறகு அலுவலக சம்மந்தமாக அவர்களே அலைபேசி கொடுத்தார்கள். ஒரு நிமிஷம் பேசினாலே இவ்வளவு ரூபாய் என்று இருந்தது. வீட்டில் யாரும் அலுவலக அலைபேசி எண்ணுக்கு அழைக்கவே மாட்டார்கள். அது ஒரு கருப்பு வெள்ளை பட்டன் மாடல் அலைபேசி.இதோ இப்போது ஜானகி வாங்கி இருப்பது battan மாடலில் பட்டர்பிளை மாடல் அலைபேசிதான். காலையில் மருத்துவமனையின் பேருந்து வந்து அழைத்து செல்லும்.அதில் அமர்ந்து காதுகளில் ஹெட்செட் போட்டுகொண்டு எப்எம்மில் பாடல்களை கேட்டுக்கொண்டே செல்வாள். உங்களுக்கெல்லாம் நினைவில் வருகிறதா..அப்போது நானும் கேட்டு இருக்கிறேன். சூரியன் எபெம் , ரேடியோ மிர்ச்சி இரண்டையும் மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டே அலுவலகம் சென்ற சுகமான நாட்கள்.
ஜானகி பாடல்களை கேட்டுக்கொண்டே ஸ்நேக் கேம் ஆடிக்கொண்டே அலுவலகம் செல்வாள்.அது அவளுக்கான பொழுதுபோக்கு. அலைபேசி எண்ணை தனது பள்ளி மற்றும் கல்லூரி,ஹாஸ்டல் தோழிகளிடம் சந்தோஷமாக பகிர்ந்துகொண்டாள்.முன்புபோல் பேசுவதும் கஷ்டமாக இல்லை. அவர்களும் நிறையபேர் வேலைக்கு சென்றதால் தோழிகளிடம் நட்பை வளர்ப்பது அவ்வளவு கடினமான காரியமாக இல்லை. போதாத குறைக்கு ஈமெயில் வேறு வந்திருக்க , தோழிகள் ஒருவருக்கொருவர் மெயில்கள் அனுப்பிக் கொள்வதும், வீடியோ காலில் பேசிக்கொள்வதும் சகஜம் ஆனது. தனது உலகத்தில் ஜானகி சந்தோஷமாக இருந்தாள் .
ராதாவுக்கு எப்படியாவது இந்த வருஷ இறுதிக்குள் மூத்தவளுக்கு திருமணம் முடித்துவிட வேண்டும் என்று உள்ளூர யோசனை.ஏற்கனவே ஜானகிக்கு இருபத்து ஆறு தொடங்கிவிட்டது. சீதாவுக்கு சென்னைக்கு மாற்றல் ஒன்றும் கிடைக்கக் காணோம். அவளும் அவளது பிராஜெக்ட் மேனேஜர்ரிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். அவர் இதோ அதோ என்று இழுக்கிறார்.
“வேறு வேலையை தேடு சீதா. இங்கே நாம வந்து மூணு வருஷம் ஆச்சு. இன்னமும் இதே பாடா … அப்பாவை விட்டுட்டு உனக்காகத்தான் இங்கே உட்கார்ந்திருக்கேன்” என்று பாடவே தொடங்கிவிட்டாள் ராதா.
உண்மையில் அவளது கணவர் கிருஷ்ணனுக்கும், மகள் ஜானகிக்கு நிம்மதிதான்.இதை தெரிந்து கொண்டால் ராதா எப்படி உணருவாளோ பாவம்!
அடுத்த ஆறுமாதங்களில் சீதாவுக்கு சென்னையில் மாற்றல் கிடைத்தது.சோளிங்கநல்லூரில் இருக்கும் ஒரு ஐடி பார்க்கில் அலுவலகம். பெங்களூரு வீட்டை காலி செய்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள் அம்மாவும் பெண்ணும். ஜானகியும் கிருஷ்ணனும் சுதந்திரம் பறிபோனதாக உணர்ந்தார்கள். சீதா அப்பா ,அக்கா என்று சுற்றியது ஒரு ஆறுதல்.இந்தப்பெண்ணுக்கு அம்மாவுடன் எப்படி ஒத்துப் போகிறது என்று வழக்கம் போல இப்போதும் யோசித்தாள் ஜானகி. உண்மையில் சீதாவுக்கு எல்லோருடனும் எளிதாகவே ஒத்துப் போய்விடும். இல்லாவிட்டாலும் அவள் எதிரில் இருப்பவருக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்துவிடும் குணம். அது ஜானகிக்கு கடினமான ஒன்று. பிடிக்கவில்லை என்றால் மாற்றிகொண்டெல்லாம் பழக்கமாட்டாள்.
error: Content is protected !!