Skip to content
Post Views: 384
ஆகாயம் ஆதாரம் 2
காலம் நிதானமாக தனது எட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தது. 1990களில் இந்தியாவும் கூட தனது முன்னேற்றப் பாதையில் எட்டு வைக்கத் தொடங்கியிருந்த காலம். மக்களின் மனங்களில் கூட மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. கடன் வாங்கியும், குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்தும் கூட நிறைய பெற்றவர்கள் தங்களது குடும்பத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவென்று தங்கள் பிள்ளைகளை எப்படியாவது பொறியியல் படிப்பு படிக்க வைத்து மென்பொருள் துறையில் வேலைக்கு சேர்வதற்கு தங்களால் ஆன எல்லாவற்றையும் செய்தார்கள்.
இன்னும் நிறையபேர் வீட்டை விற்றாவது தங்களது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க முயற்சி செய்தார்கள். பொருளாதார ஏற்றமும், வெளிநாட்டு மோகமுமாக வெவ்வேறு திசைகளில் பயணங்கள் ஆரம்பித்த காலமது.
“என்னோட பையன் அமெரிக்காவில் இருக்கான்”என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளும் பெற்றவர்கள்.அதையே காரணமாக காட்டி ,பெண்ணை பெற்றவர்களிடம் அதிகமாக வரதட்சிணை கேட்ட காலங்கள் அது. பெண்ணை பெற்றவர்களும் “தங்களது பெண்ணாவது அமெரிக்க மண்ணை மிதிக்கட்டும்’ எனும் ஆசையிலும் ,பெண்ணை அங்கே திருமணம் செய்து அனுப்பி வைத்தால் நாமும் கூட அங்கே சென்று இருக்க முடியும் என்ற கணக்கீட்டிலும் தீயாக வேலை செய்து பெண்ணை அமெரிக்க மாப்பிள்ளைக்குத் தான் கொடுப்பேன் என்று அடம் பிடித்தவர்கள் ஏராளம்!
Advertisement
இதோ இங்கே நமது ராதா கிருஷ்ணன் வீட்டில்,நெருங்கிய சொந்தத்தில் ஒரு கல்யாணம். ராதா -கிருஷணன் குடும்பத்துடன் இரு பக்க பெற்றோர்களும், கூடப் பிறந்தவர்களும் கூட கலந்து கொண்டார்கள். நல்ல கும்பல்.நிறைய செலவு செய்து , அதிகமாக கடன் வாங்கி என்று ஆடம்பரம் அங்கே இருக்கும் தூணில் கூட தெரிந்தது.
மூத்த நாத்தனார் ரமணி கூட தனது குடும்பத்துடன் இங்கே இந்த கல்யாண நிகழ்வுக்கு வந்திருந்தாள் .அவளது ஒவ்வொரு அசைவுக்கும் வைரம் மின்னியது. அனேகமாக ரமணியும் அவளது இரண்டு பெண் குழந்தைகளும் அணிந்து கொண்டிருந்தவை எல்லாமே வைரமாகத்தான் இருக்க வேண்டும். அவளது மூத்த பெண் குழந்தை கிருஷ்ணனின் முதல் பெண் ஜானகியை விட இரண்டு மூன்று வயது மூத்தவள்.ரமணியின் இரண்டாவது பெண்ணும் ஜானகியும் ஒரே வயது தான்.
ரமணி தனது குழந்தைகளை ஜானகி,சீதாவுடன் விளையாடவே அனுமதிக்கவில்லை.
Advertisement
சுதா ,உடன்பிறந்தவளாக இருந்தும் கூட அவளிடமும் ரமணி வித்யாசமாக தான் நடந்து கொண்டாள் ராதாவுக்கு தோன்றிய ‘சுருக்’எனும் உணர்வு சுதாவுக்கு தோன்றவில்லை. என்னுடை இடத்தில நான் ராணி என்பது போல இருந்து கொண்டாள் .
Advertisement
ஆடம்பர திருமணத்தின் காரணம் மணமகன் அமேரிக்க மண்ணில் வேலை செய்பவன்.இப்போது ஹெச் ஒன் பி விசாவிவ் இருப்பவனுக்கு கூடிய சீக்கிரம் குடியுரிமை கிடைத்துவிடும்.காரணம் அவர்கள் அலுவலகத்தில் அவனிக்காக குடியுரிமைக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள். இப்போது அவனை திருமணம் முடிப்பது மூலம் மணமகளும் ‘மாண்புமிகு அமெரிக்க பிரஜை’ ஆகிவிடுவாள் . அதனால் மணமகன் வீட்டில் கேட்ட சீர் வரிசை,நகைகள், இன்ன பிற விஷயங்களை தாராளமாக செய்ய வேண்டிய நிலையில் பெண் வீட்டார்.
எனக்கு இங்கே ஒரு சந்தேகம்,’ இப்போது திருமணம் முடிந்து அமெரிக்க செல்லும் இந்த பெண் என்ன கல்யாண சீர்களையும் ,நகைகளையும் விமானத்தில் கொண்டு செல்லப் போகிறாளா என்ன?எல்லாம் இவளுடைய பிறந்த வீட்டு லோகேர் அல்லது மாமியாரின் லாக்கரில் உறங்கத் தானே போகிறது!பிறகு எதற்கு இவ்வளவும்?
ரமணி மணமகளை விட்டு நகரவே இல்லை .அவ்வப்பொழுது மணமகளின் புது மாமியாரிடம் வேறு பேசிக் கொண்டும் ,மணமகளின் தங்கை மற்றும் நாத்தனாரிடம் சிரித்துக்கொண்டும் ,மொத்தத்தில் மணமேடை விட்டு அவள் கீழே இறங்கவே இல்லை.இவளது டாலடிக்கும் நகைகளின் தரம் தெரிந்தவர்கள் இவளை கீழே போகவும் அனுமதிக்கவில்லை.
Advertisement
கிருஷணனின் மொத்த குடும்பமும், சுதாவின் மொத்த குடும்பமும் பரிசை கொடுக்க மட்டும்தான் மேடையில் ஏறியது! சாப்பிட்டு விட்டி அவர்களும் விரைவாகவே கிளம்பிவிட்டார்கள்.
ரமணியின் கணவர் கீழே அமர்ந்து கொண்டு தங்களது இரண்டு குழந்தைகளையும் கவனமாக பார்த்துக் கொண்டார். என்னே உலகமடா இது!
காலை பதினோரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்டவர்கள் மனம் ரமணியின் நடத்தையில் கொஞ்சம் வருத்தம் கொண்டது உண்மை.அவளை பெற்றவர்களைக் கூட அவள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.மாப்பிள்ளை கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்த பொழுதும்,அவரை ஏதோ காரணம் சொல்லி ரமணி நகர்த்தி கூட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்.
“உங்க அந்தஸ்து என்ன,அவங்க அந்தஸ்து என்ன? கொஞ்சமாவது மாப்பிள்ளை பந்தாவாவது காட்டி தொலைக்கிறது?எல்லாமா நா சொல்லி தர முடியும்? ரொம்ப ஈஷிக்காம நகர்ந்து நில்லுங்க “என்று கடிந்து கொண்டாள் .இதை பின் வரிசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ரமணியின் பெற்றவர்கள் கேட்டுவிட்டதை ரமணி அறியவில்லை.
அப்படியே அவர்கள் கேட்டுவிட்டார்கள் என்று தெரிந்தாலும் அதற்காகவெல்லாம் ரமணி அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.இதோ மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் பெற்றவர்க்ளுக்கு மனது ஒரு நிலையில் இல்லை. ரமணியின் திருமணம் எவ்வளவு கஷ்டத்தில் நடந்தது? இவர்ளை விட மாப்பிள்ளை வீட்டார் நல்ல பெரிய இடம்.அப்போதே அவர்களுக்கு தஞ்சாவூரில் நிலபுலன்கள் இருந்தது.அதோடு தில்லியில் அவர்கள் இருக்கும் இரண்டாயிரம் சதுர அடிகளோடு கூடிய வீடு. மாப்பிள்ளைக்கு நல்ல வருமானம் வேறு.
ஜாதகப் பொருத்தம் அமோகம் என்று ஜோசியர் சொல்லியதில் அவர்கள் கொஞ்சம் இறங்கி வந்தார்கள். ஆனாலும் பெண்ணை பெற்றவர்களை கொஞ்சம் இறங்கித்தான் நடத்தினார்கள். எல்லாவற்றையும் பொறுத்து கொண்டுதானே அவளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
ரமணியின் மாமனார் இறந்து ஆறு வருஷங்கள் ஆகிறது. அதற்குப் பிறகு அங்கே அந்த வீட்டில் ரமணியின் ஆட்சிதான் திருமணம் நடந்த புதிதுலேயே ” எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அது எனக்கானது மட்டும் இல்லை. அவருக்கானதும் தான் ” என்று விட்டிருந்தாள் ரமணி. அதற்குப் பிறகு அவளது வீட்டு மனிதர்கள் அவளிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நிற்க பழகிக் கொண்டார்கள்.
கொஞ்சம் நிலங்களை விற்றுத்தான் ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.மற்ற இரு உடன்பிறந்தவர்களும் இன்று வரை அது பற்றிக் கேட்டது இல்லை.சுதாவுக்கு சொந்த அத்தை மகனுக்கே திருமணம் முடித்து வைத்ததில்,அண்ணணின் நிலை புரிந்து ,” சுதாவுக்கு உங்களால முடிஞ்சதை செய்யுங்க அண்ணா. என்னோட நகைகள் என்னோட காலத்துக்கு பிறகு ,ராதாவுக்கும்,சுதாவுக்கும் தானே! நமக்குள்ள என்ன? என்றுவிட்டு தமது மகள் ராதைக்கும் கிரிஷ்ணனுடன் திருமணத்தை உறுதி செய்து விட்டார் ராதையின் அம்மா..
ராதை பி யு சி தாண்டி’ படிக்க மாட்டேன்’ என்றுவிட, கிருஷ்ணனும்,சுதாவும் டிகிரி ,முடித்துவீட்டிருந்தனர். ராதையின் அண்ணா ஒரு பொறியாளர். அதுவும் ரயில்வேயில். கிருஷ்ணன் வேறு சி ஏ படித்துக் கொண்டிருந்தார். மூத்த பெண்ணுக்கு கொடுத்த அளவுக்கு சீரும் நகையும் கொடுத்து நல்ல இடம் பார்க்க அப்போது வசதி இல்லை .ராதை சுமார் படிப்பு என்றாலும் வீட்டு வேலைகள் எல்லாம் நன்றாகவே செய்யக் கூடியவள் தான் . சுதா மட்டும் என்ன வேலைக்கு போகப் போகிறாளா என்ன..அடுப்பங்கரைதானே!என்று சம்மதம் சொல்ல ,”இரண்டு கல்யாணமும் ஒரே சமயத்துல வேணாம் அண்ணா. முதலில் ராதைக்கு செஞ்சு அனுப்பிடறோம் .அடுத்த முகூர்த்தம் சுதா எங்க வீட்டு மருமகள் “என்று எல்லாவற்றையும் தங்கை சொன்னவாறே செய்தார் கிருஷ்ணனின் அப்பா.மறுக்க அவருக்கு வாய்ப்பு இல்லை.
கிருஷ்ணனும் பெற்றவர்கள் என்ன செய்தாலும் சரி என்று அமைதியாகவே இருந்து விட்டார்.திருமணம் முடிந்து இவர்கள் இப்போது இருக்கும் வீட்டை ராதாவின் பெயரில் கல்யாண சீராக கொடுத்தார்கள் அவள் வீட்டில்.
திருமணம் முடிந்து ஆறு மாதத்தில் சுதா ரயில்வே,தபால் துறை இரண்டுக்கும் தேர்வுகள் எழுத, “தபால் துறை வேண்டாம் .ரயில்வே நல்ல சம்பளமும் எதிர்காலமும் இருக்கு.அதுலேயே ஜோஇன் பண்ணிக்கோ “என்றுவிட்டார் சுதாவின் கணவர். இருவரது சம்பளமும் சேர அவர்கள் இப்போது நல்ல வளமையாகவே இருக்கிறார்கள்.
சுதாவும் சரி,அவளது கணவரும் சரி இதுவரை யாரிடமும் தரக் குறைவாக நடந்து கொண்டதில்லை.இருவருக்கும் ராதா மீது வருத்தம் உண்டுதான். அதையும் வெளிப்படையாக காட்டிக்கொண்டு பகை பாராட்டியது இல்லை. மொத்தத்தில் அவர்கள் தங்கள் குடும்ப நலனை பார்த்தார்களே தவற தேவை இல்லாத விஷயங்களை கொண்டு கஷ்டப் படுவதில்லை.
திருமண வீட்டிலிருந்து வந்ததிலிருந்து ராதையால் இயல்பாக நடந்துகொள்ளவே முடியவில்லை.அடுக்களையில் பாத்திரங்களை வேகமாக ,கோவமாக ‘நங்” என்று வைத்தாள் .வேலைகள் செய்யும் பொழுது ஏதோ ஒரு முணுமுணுப்பு. வீட்டுக்கு வந்தவுடனேயே சுதாவும் அவள் கணவரும் வேலைக்கு கிளம்பி சென்று விட, கிருஷ்னன் முதலில் விடுப்பு எடுத்து கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்தவர் மனைவியின் காளி அவதாரத்தில் வேஷ்டியை மாற்றிக்கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டார். ” விட்டால் போதும்.”என்ற மனா நிலை. (ஒரு வேளை நின்று சமாளித்திருக்க வேண்டுமோ…)
போதாத குறைக்கு வீட்டுக்குள் சென்ற வேகத்தில் அண்ணனும் அண்ணியும் கிளம்பி அலுவலகம் சென்றதும் ,தனது கணவனும் கிளம்பி சென்றதும் அவளுக்குள் எரிச்சலில் தாராளமாக எண்ணையை வார்த்தது. உள்ளுக்குள் புழுக்கம். ஏற்கனவே ,’தான் மற்றவர்களை போல டிகிரி வாங்கவில்லை. வேலைக்கு போகவில்லை ‘ என்றெல்லாம் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ராதைக்கு மனம் சோர்ந்து போனது.
சுற்றி இருப்பவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.கிருஷ்ணன் பெரும்பாலும் ராதை சொல்வதை மீறி நடந்து கொள்வது இல்லை. திடீரென்று ஒருநாள் கணவரிடம் வந்த ராதை,”நா இங்க பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல வேலைக்கு போகலாம்னு ஒரு யோசனை.நீங்க என்ன சொல்றீங்க?” என்றாள் .
சமீப களங்களில் மனைவியின் பொறுமை அளவை பார்த்துக்கொண்டிருப்பவருக்கு ‘இது உனக்கு சரி வராது.வேணாம்’என்று சொல்ல மனதுக்குள் ஆசைதான். ஆனால் ,’சரி,உன்னோட இஷ்டம் போல செய்யு ‘ என்று முடித்துக் கொண்டார். பள்ளி வேலைதான் என்பதால் மாலை மூணரை மணிக்கு பள்ளி விட்டால் அடுத்த கால் மணி நேரத்தில் ராதா வீட்டில் இருப்பாள்.நான்காம் வகுப்பு வரைக்கும் எடுக்கிறாள்.
யாரிடமும் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள கெஞ்சவேண்டி இருக்கவில்லை என்பதே அவளுக்கு சந்தோஷத்தையும்,நிம்மதியையும் தந்தது. முன்பாவது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வந்து மூன்று நாட்கள் தங்கிவிட்டு செல்லும் மாமா மாமியிடம் “நா வேலைக்கு போறேன்.இங்கே வந்தா உங்களுக்கு பார்த்து செய்ய எனக்கு நேரமில்லை.அது உங்களுக்கு தோது படாது “என்றுவிட்டாள் அவர்களும் ஒன்றும் சொல்லவில்லை. கிருஷ்ணன் மட்டும் மாதம் ஒருமுறை சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் ஜானகி,சீதா இருவரில் யாராவது ஒருவரை அழைத்து சென்று காண்பிப்பதை வழக்கம் ஆக்கிக் கொண்டார்.
மனைவியிடம் விவாதம் செய்து அவருக்கு எதுவும் ஆகாது என்று தெரியும்.இந்த மௌனம் எங்கே கொண்டு நிறுத்தும் என்று கதையின் ஓட்டத்தில் நிச்சயம் புரியும்.
இதுவரை வேலைக்கு சென்றிராத ராதாவுக்கு ஆரம்பம் மிகவும் கடினமாகவே இருந்தது. காலையில் அலாரம் வைத்து நாலரைக்கு எழுந்து நான்கு பேருக்கும் காலை டிபன் செய்து , மதியம் சாப்பிடவென்று சாப்பாடு செய்து என்று போனால், ஞாயிற்றுக் கிழமை இன்னமும் வேலை பளு கூடியது. வரும் வாரத்திற்கு தேவையான பொடிவகைகள், மாவு வகைகள் அரைத்து, ஒரு வாரத்தின் துணிகளை துவைத்து ( நான்கு பேருடையது ) , தேவைப்படும் காய்கறிகளை வாங்கி என்று நேரம் போதவில்லை.இடுப்பு கழன்றது.
அதே சமயம் கிருஷ்ணன் அவரது வேலை பளுவும் கூடிப் போனது.வெளியூர் பிரயாணங்கள் அதிகமானது. வீட்டில் அவர் தங்குவது அபூர்வம் என்று ஆகிப் போனதில் யாருடைய உதவியும் இல்லாமல் சமாளிப்பது பெரிய விஷயம் ஆனது. வீடு பெருக்கி,துணி துவைத்து ,பாத்திரம் கழுவ ஆள் வைத்தாள் . இவளது சம்பளமே முன்னூறு ரூபாய் தான். உதவிக்கு வந்த பெண்மணியின் மாத சம்பளம் இருநூறு ரூபாய்.
ராதையின் அம்மா அவளை திட்டியே விட்டார்,”என்னடி இது பைத்தியக்கார தனம் . முன்னூறு ரூவா சம்பளத்துல இதென்ன மேல் வேலைக்கு ஆள் வச்சிருக்க.நம்ம சுதா ஆயிரம் ரூவா சம்பளம் வாங்குறா.வேலைக்கு ஆள் வைக்கல.அவளே எல்லாத்தையும் செஞ்சிட்டு வேலைக்கும் போறா. ஒன்னு சமாளிச்சு பழகு.இல்ல ,வேலைக்கு போகாத. நீ சம்பாரிக்குற காசுல மருமகனுக்கு ஒரு சப்போர்ட்டும் இல்ல.” என்று.
ராதைக்கு கோவமும் அழுகையும் பொத்துக்கொண்டு வந்தது. அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்த சுதாவுக்கு தன் அத்தை பேசுவது காதில் விழ , ராதையை நினைத்து பாவமாக இருந்தது.அவளுக்கு சமாளிக்க தெரியவில்லை.அதோடு மாமியார் மாமனாரை அனுசரித்து போகவும் மனது இல்லை. என்ன செய்ய முடியும்? என்று பெருமூச்சு விட்டு ,மதியத்திற்கு அடையும் அவியலும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்த பிரொமோஷனுக்காக படிக்க வேறு உட்கார்ந்தாக வேண்டும்.வரும் சனிக் கிழமை அன்று பரீட்சை. கீழே தரையில் அமர்ந்து கொண்டு சுதாவின் கணவர் அவியலுக்காக தேங்காய் துருவிக் கொண்டிருந்தார்.அவரை சுற்றி நறுக்குவதற்கு காய்கறிகள் காத்துக் கொண்டிருந்தது.
சுதா சமாளிக்கும் சாமர்த்தியம் இதுதான். அடுக்களையில் இருவரும் பேசிக்கொண்டு,சிரித்துக்கொண்டு இயல்பான காதலுடன் வேலைகளை செய்வார்கள். ஆரம்பத்தில் சுதாவை மாமியாராக கண்டித்தார் அவளது அத்தை. பிறகு ,அவரே புரிந்து கொண்டுவிட்டார்,”இருவருக்கும் சந்தோஷமாக இருக்கவும்,ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவும்,சிரிக்கவும்,கிடைக்கும் நேரம் இது தான்” என்று..
அதோடு, அவர்கள் பெற்ற மகன் சந்தோஷமாக இருக்கிறான்.அதுதானே அவர்களுக்கு வேண்டும். சுதாவும் நல்ல மருமகள்தான். பொறுமையும்,நிதானமும் அதிகம். அவள் வந்தபிறகு அவர்கள் குடும்பத்தில் நிறைய மாற்றங்கள்,ஏற்றங்கள்!
அவர்களுக்கான அந்த நேரத்தில் குழந்தைகளை வீட்டுப் பெரியவர்கள் பார்த்துக் கொள்ள மற்றவர்களுக்கு ‘நோ என்ட்ரி’
error: Content is protected !!