ஆகாயம் 1:
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்த்…எந்த இயற்கை வளத்திற்கும் குறைவில்லாத நாடு. பலவிதமான அருங்காட்சியகங்கள், நியோகிளாசிக்கல் அரண்மனை உட்பட பல பாரம்பரிய தளங்களையும், பிரம்மாண்ட கட்டிடங்களையும் கொண்ட நாடு. தெற்கே இத்தாலின் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது லுகானோ.
சுவிட்சர்லாந்தின் ‘மான்டு கார்லோ’ என்று அழைக்கப்படும் ‘லுகானோ ஏரி’ யின் முன்னால் நின்று அந்த ஏரியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். சுற்றிலும் இருந்த பசுமைகள், அந்த ஏரியின் அழகு, இப்படி எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அவனுக்கு இங்கு வருவது இது முதல் முறையல்ல. கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு வந்திருக்கிறான். அப்போது அழகாய் தெரிந்த அந்த இடம், இப்போது அவனின் கண்களுக்கு அழகாய் தெரியவில்லை. அது தான் விந்தையிலும் விந்தை.
பார்க்கத் தெவிட்டாத அழகை, வெறித்த பார்வையால் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்களில் இருந்தது என்னவென்று அங்கிருந்த யாருக்கும் தெரியாது. பொதுவாக அவன் அதிகம் பேசுபவன் கிடையாது. அதற்காக அநியாய அமைதி என்றும் சொல்ல முடியாது. பேச்சில் நேரத்தை வீணடிக்காது, அதை செயலில் காட்ட வேண்டும் என்று நினைப்பவன்.
அவனுடைய வாழ்க்கை முறை அதீத ஆடம்பரம் வாய்ந்தது. அவன் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அந்த நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டிருந்தான். அவனின் மனமோ, ஏதோ அமைதியை தேடிக் கொண்டிருந்தது. காற்றினை போல், ஓரிடத்தில் நில்லாமல், மனம் அலைபாய.. அதை அமைதிப் படுத்தும் வழி தெரியாமல் தான் இப்படி நின்று கொண்டிருக்கிறான்.
வழிய வரவழைத்துக் கொண்ட இறுக்கம் அவன் முகத்தில் குடிகொண்டிருந்தது. தன்னுடைய பேன்ட் பாக்கெட்டின் இருபுறமும், கைகளை நுழைத்துக் கொண்டு, சற்று நிமிர்ந்து நின்றிருந்த அவன் தோற்றம், அவனுடைய கம்பீரத்தை வெளிப்படையாக காட்டியது. கட்டுக்கோப்பான உடல்வாகு, அவன் விடாமல் செய்யும் உடற்பயிற்சியின் முயற்சியை சொல்லியது. பல பெண்களின் கனவு நாயகன் அவன். உட்ச நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருப்பவன், திரையில் மட்டுமல்லாது, நிஜவாழ்விலும் அவன் ஒரு நட்சத்திரம் தான். யாரும் நெருங்க முடியாத சூரிய நட்சத்திரம். அவன் தான் ஆதித்ய வர்மா. அந்த பேரை வைத்ததாலோ என்னவோ, எந்த நேரமும் முகத்தில் ஒரு கோபம் குடி கொண்டிருக்கும்.
அவன் நடித்துக் கொண்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக, சுவிட்சர்லாந்து வந்திருந்தனர். அங்கு வந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்திருந்தது. இன்று இறுதி கட்ட படப்பிடிப்பையும் முடித்து விட்டனர். நாளை கிளம்பியாக வேண்டும். அனைவரும் படப்பிடிப்பில் பிசியாக இருக்க, தனக்கான காட்சிகளை முடித்து விட்டு, இந்த ஏரியின் பக்கம் ஒதுங்கி விட்டான் ஆதித்ய வர்மா.
“சார்..” என்று அழைத்த, அவனின் உதவியாளன் கவினின் வார்த்தையில் சிறு தயக்கம். அவனின் அழைப்பு கேட்டாலும், கொஞ்சம் கேட்காதவன் போலவே நின்றிருந்தான் ஆதித்ய வர்மா.
“சார்..! எல்லாமே பேக்கப் ஆகுறாங்க சார். நாமளும் கிளம்ப வேண்டியது தான்..” என்றான் கவின்.
விட்டால் அழுதுவிடுபவனைப் போல் அவனின் குரல் ஒழிக்க, அவனைப் பார்த்து திரும்பிய ஆதித்ய வர்மா,
“கிளம்பலாமா..?” என்றான் ஒற்றை வார்த்தையாய்.
“கிளம்பலாம் சார்..!” என்றவன், வேகமாய் அவன் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய,
“ஷாட் ரொம்ப அருமையா வந்திருக்கு வர்மா. பைனல் பைட் சீக்குவன்ஸ்க்கு ஆடியன்ஸ் கிளாப்ஸ் அள்ளும் பாருங்க..” என்று அந்த இயக்குனர் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் நினைத்தபடி அந்த சீனும், படமும் வந்திருப்பது, அவரின் மகிழ்வான முகத்தில் இருந்தே தெரிந்து கொண்டான். முன்னணி இயக்குனரின் படத்தில் தான் தற்போது நடித்து முடித்திருக்கிறான் ஆதித்ய வர்மா.
அவன் நடிப்பது அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள் தான் என்றாலும், இந்தப் படம் அவனுக்கு கொஞ்சம் ஸ்பெஷல். கதை கேட்ட உடனே பிடித்து, அவன் ஓகே செய்த படம் இது. அவன் நினைத்ததை விடவும், படம் நன்றாக வந்திருப்பதை அவனும் உணர்ந்திருந்தான்.
“எப்படியோ..நீங்க நினைச்சதை ஸ்கீரீன்ல கொண்டு வந்துட்டிங்க. இந்த படம் உங்களோட மார்க்கெட்டையும் வேற எங்கயோ கொண்டு போய் நிறுத்த போகுது சார்..” என்றான் ஆதித்ய வர்மா. அவன் குரலில் தான் எவ்வளவு நம்பிக்கை,எவ்வளவு அழுத்தம்.
“நீங்க சொன்னா அது சரியா இருக்கும் வர்மா. இது என்னால மட்டும் நடக்கலை. இன்னும் சொல்லப் போனா, இந்த படத்துக்கு நீங்க போட்ட கடுமையான உழைப்பு தான் காரணம்..” என்றார் அவர்.
“நான் பட்ட கஷ்ட்டத்தை விட, திரைக்கு பின்னால் இருக்குற நிறைய பேரோட உழைப்பு தான் முக்கியமான காரணம்..” என்றான் ஆதித்ய வர்மா.
“உங்களோட இவ்வளவு வெற்றிக்கும் காரணம் உங்களோட இந்த மனப்பான்மை தான் சார். எதையும் நீங்க தலையில் ஏத்திக்கிறதே இல்லை.” என்று அவர் சொல்ல,
“அதனால தான் கனமில்லாம இருக்கேன்..” என்றான் ஆதித்ய வர்மா சன்னமான சிரிப்புடன். அவனின் அந்த மென்னகைக்கு, பல பெண்கள் ரசிகைகளாக இருந்தனர்.
“அப்போ கிளம்பலாமா..?” என்றான் அவன்.
“கிளம்பலாம் சார்..! உங்களுக்கு நாளைக்கு மார்னிங் பிளைட்ல டிக்கெட் புக் பண்ணியிருக்கு சார்..!” என்றார் அந்த இயக்குனர்.
“ஐ நோ..! பட்,நான் நைட்டே கிளம்புறேன். எனிவே..தேங்க்யு சோ மச்..” என்ற வர்மா, அந்த இயக்குனரை கைகுலுக்க,
“இது எனக்கு கிடைச்ச பாக்கியம் சார்..!” என்றார் அவரும். இருவரும் அவர்களுடைய பெரிய மனிதத் தன்மையில் இருந்து விலகாமல் பேசிக் கொள்ள, அதை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் கவின்.
சற்று முன்பு அவன் முகத்தில் இருந்த இறுக்கம் என்ன..? இப்போது அவன் முகத்தில் இருக்கும் நெகிழ்வு என்ன..? என்பதைத் தான் கவின் யோசித்துக் கொண்டிருந்தான்.
ஆதித்ய வர்மா– முப்பது வயதை நெருங்கியிருந்த ஆண்மகன். வளர்ந்த நடிகனான, இந்த முப்பது வயதிற்குள் வர, அவன் போட்ட உழைப்பு அதீதமானது. சாதித்து விட்டான். இன்னும் சாதிப்பான். இப்படித்தான் அவனுடைய நிலை இப்போது இருக்கிறது.
சேதுராமன்-பார்கவிக்கு ஒரே மகன். அவனுடைய ஒரே தம்பி, சில வருடங்களுக்கு முன்பு இறந்து போயிருந்தான். இப்போது இவன் மட்டுமே அவர்களுக்கு.
படப்பிடிப்பை முடித்து விட்டு, சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஆதித்ய வர்மா.
சென்னையில்…
முதலமைச்சர் கருணைநாதனின் வீடு. முதலமைச்சர் கனவை அவர் எட்டிப் பிடித்து ஐந்து ஆண்டுகளைத் நெருங்கியிருந்தது. அடுத்த தேர்தலிலும் அவர்தான் முதலைச்சர் என்று அவர் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் கோஷம் இட்டுக் கொண்டிருந்தனர். கருணைநாதனின் எண்ணமும் அதுதான். எப்படியும் அடுத்த முறையும் முதலமைச்சர் நான் தான் என்று அவரும் கொஞ்சம் இறுமாப்புடன் இருந்தார்.
கருணைநாதனுக்கு ஒருமகன், ஒரு மகள். மகன் சசீதரன்,மருமகள் பூமிகா. மனைவி அருணா, ஒரு சிறந்த குடும்ப தலைவி. மகனுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணத்தை நடத்தி முடித்திருந்தார். சசிதரன் தந்தைக்கு உதவியாக அரசியலிலும், அவரின் இன்ன பிற தொழில்களையும் கவனித்துக் கொள்கிறான்.
மகள் துவாரகி. பொதுமருத்துவம் பயின்று, மகப்பேறு மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றிருக்கிறாள். மகள் வெளி மருத்துவமனையில் வேலை பார்ப்பது, அவரின் கவுரவத்திற்கு பங்கம் என்பதால், அவளுக்காக சிட்டியில் ஒரு பெரிய மருத்துவமனையையே கட்டிக் கொடுத்திருந்தார்.
துவாரகி- பிறந்தது முதல் செல்வத்திலேயே வளர்ந்தவள். கொட்டிக் கிடக்கும் பேரழகு, அதை நினைத்து அவள் அலட்டிக் கொண்டதேயில்லை. எந்த பந்தாவும் இல்லாமல், அதே சமயம் யாருடனும் அதிகம் ஒட்டாமல் இருக்கும் ஒரு தனிப்பிறவி அவள். அவள் இருக்கும் இடத்திற்கே ஆன, திமிர்த்தனம் அவளிடம் கொஞ்சம் இருக்கும். ஆனால், அதிகம் அதை அவள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. கருணைநாதனை பொறுத்தவரை, அவருக்கு துவாரகி ஒரு அதிர்ஷ்ட்டகரமான பெண். அவள் தொட்டது எல்லாம் துலங்கும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
காலையிலேயே வேகவேகமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் துவாரகி. அவளின் அவசரத்தைப் பார்த்த அருணா,
“என்ன அவசரம் துவாரகி..? எதுக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டு இருக்க..?” என்றார்.
“இன்னை ஒரு சிசேரியன் இருக்கும்மா. கொஞ்சம் கிரிட்டிகல். இந்த நிலைமையிலும் அவங்களுக்கு நல்ல நேரம் பார்த்து தான் குழந்தையை வெளிய எடுக்கணுமாம். இன்னும் எந்த காலத்துல இருக்காங்கன்னு தெரியலை..” என்றாள் நக்கலாக.
“அது அவங்க நம்பிக்கை துவாரகி. அதை நாம என்ன செய்ய முடியும்..?” என்றார் அருணா.
“அப்படியில்லம்மா..!கடவுளோட பிறப்பு நம்மல்லாம். ஒரு உயிரைப் படைக்கும் போதே, அதோட இறப்பு வரைக்கும் எல்லாத்தையும் கடவுள் முடிவு பண்ணியிருப்பார். அதை நாம, மாத்த முயற்சி செய்றதைப் பார்க்கும் போது தான் சிரிப்பா இருக்கு..” என்றாள்.
“அதெல்லாம் நமக்கு எதுக்கு..? நீயா ஆபரேஷன் பண்ண போற..?” என்றார்.
“இல்லம்மா..! வழக்கம் போல சீனியர் டாக்டர்ஸ் பண்ண போறாங்க. எப்பவும் போல, ஜூனியர் நான் பக்கத்துல இருக்க போறேன்..” என்றாள் , அவள் வேலைகளை பார்த்துக் கொண்டே.
“நீயும் காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணியிருந்தா, இன்னேரம் எனக்கும் பேரம் பேத்தி வந்திருக்கும். நீ டாக்டருக்கு படிச்சாலும் படிச்ச, வருஷமும் வயசும் போனது தான் மிச்சம்.. எனக்கெல்லாம் பதினேழு வயசுல கல்யாணம் ஆகி, அடுத்த வருஷமே உங்க அண்ணன் பிறந்துட்டான். உன்னோட வயசுல எனக்கு பத்து வயசுல பையன் இருந்தான்..” என்று அவர் தன்னுடைய வழக்கமான பல்லவியை பாட,
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. அதான் அண்ணன் இருக்கான்ல. அவனைப் பெத்து தரச் சொல்லுங்க..” என்றாள் துவாரகி.
“பூமிகாவுக்கு நான் சொல்றது காதுலையே விழ மாட்டேங்குது. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் குழந்தை பெத்துக்குவோம்ன்னு என்கிட்டையே சொல்றா..?” என்றார் அருணா.
“அம்மா, அவங்க பிரைவேசில நீங்க தலையிடாதிங்க. அவங்களுக்குன்னு ஒரு பர்சனல் ஸ்பேஸ் இருக்கும். அவங்களுக்கு எப்பத் தோணுதோ அப்ப பெத்துக்கட்டும்..” என்றாள்.
“இதெல்லாம் நாம முடிவு பண்ணக் கூடாது துவாரகி. குழந்தைங்கிறது வரம். அதை கடவுள் குடுக்கும் போதே, வேண்டாம்ன்னு சொல்லாம வாங்கிக்கணும். நம்ம இஷ்ட்டத்துக்கு நினைக்கிறப்ப வாங்க, அது கடையில விக்கிற பொருளா என்ன..?” என்று அவர் மனக்குமுறலை கொட்ட,
“ம்மா..ப்ளீஸ்..! காலையிலையே என்னைப் போட்டு படுத்தாதிங்க. உங்களுக்கு வீட்ல பேச ஆள் இல்லைன்னா, அதுக்கு நான் தான் கிடைச்சேனா..? தினமும் சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க.. இப்போ எனக்கு டைம் ஆச்சு. மீதிய ஈவ்னிங் வந்து கேட்குறேன், சரியா..?” என்று அவரை அணைத்து, அருணாவின் கன்னத்தில் ஒரு முத்தத்தையும் வைத்தவள்,
“பை மா..!” என்ற வார்த்தையில் விடை பெற்று சென்று விட்டாள் துவாரகி.
அந்த வீட்டில் மிகவும் தனிமையான ஒரு உணர்வை உணர்ந்தவர் என்றால் அது அருணா தான். அவர் அதிகம் படிக்காதவர். அந்த குடும்பம் மட்டுமே அவர் உலகம் என்று இருக்க, அந்த வீட்டில் அவருக்கு பேசக் கூட ஆள் இருப்பதில்லை. அனைவரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்க, அவருடைய மனக் குமுறல் அனைத்தும் துவாரகியிடம் மட்டும் தான். அவளும் பொறுமையாக கேட்பாள். ஆனால், ஒரே விஷயத்தை தினமும் கேட்கும் அவளுக்கும் சில சமயம் சலிப்புத் தட்டி விடும்.
எவ்வளவு முயன்றும் கொஞ்சம் லேட்டாகத் தான் சென்றாள் துவாரகி. வேகமாய் தனது அறைக்கு சென்று பையை வைத்தவள், அங்கிருந்த அவள் உதவியாளர் பெண்ணிடம்,
“எல்லாம் ரெடியா, சீனியர்ஸ் வந்துட்டாங்களா..?” என்றாள் .
“எல்லாரும் ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள போய்ட்டாங்க டாக்டர். பார்கவி மேம் தான் கொஞ்சம் கோபமா இருக்க மாதிரி தெரிஞ்சது.” என்று அவள் சொல்ல,
“இட்ஸ் ஓகே. ஐ வில் மேனேஜ்..” என்றபடி அவசரமாக பச்சை நிற கவுனிற்குள் புகுந்து கொண்டு, தியேட்டரை நோக்கி ஓடினாள். அவசரமாக அவள் உள்ளே நுழைந்து கையில் கிளவுஸ் மாட்டுவதைப் பார்த்த பார்கவி, அவளை முறைக்க..
“சாரி..” என்கிற பாவனையில் முகத்தை சுருக்கினாள் அவரிடம். அவர் அப்போது எதுவும் பேசும் மனநிலையில் இருக்கவில்லை.
கொஞ்சம் கிரிட்டிகல் என்பதால், அனைவரின் முகத்திலும் அதீத கவனம் இருந்தது. ஆனால், அதையும் பார்கவி லாவகமாக கையாண்டார். வயிற்றில் இருந்து அவர் குழந்தையை எடுத்த நிமிடம் தான், அனைவருக்கும் மூச்சே வந்தது. குழந்தையை எடுத்து, அதன் நஞ்சுக் கொடியை அகற்றியவர், அங்கிருந்த துவாரகியிடம் கொடுக்க, அதை வாங்கிய அவளுக்கு, மனதிற்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஓவ்வொரு சிசுவும் பிறக்கும் போது, அதை அவள் கையில் வாங்கும் போது, அவளை அறியாமல் ஒரு இதம் தோன்றி மறையும் மனதிற்குள்.
அந்த பெண் குழந்தையை ஒரு நிமிடம் பார்த்தவள், அதை அந்த பெண்ணிடம் காண்பித்தாள்.
“உங்களுக்கு என்ன குழந்தை பிறந்திருக்குன்னு பாருங்க..” என்றாள்.
மரண பயத்தில் இருந்த அந்த பெண்ணிற்கு, அப்போது தான் கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்திருந்தது. அனஸ்தீசியாவின் உதவியில் இருந்த அந்த பெண்ணிற்கு, குழந்தையின் முகத்தைக் கண்டதும், வேறு எந்த வலியும் கண் முன் தெரியவில்லை.
“என்ன குழந்தைன்னு பாருங்க..” என்றாள்.
“பொ..பொண்ணு..” என்றாள் அந்த பெண்.
“உங்க குழந்தையை பார்த்துட்டிங்களா..! இனி ஒன்னும் பிரச்சனை இல்லை. உங்க பிரஷர் குறையக் கூடாது. நீங்க தெம்பா இருக்கணும். அப்போதான் உங்களுக்கு ஸ்டிச்சஸ் போடுவாங்க..” என்று சொன்னவள், குழந்தையை அங்கிருந்த நர்சிடம் கொடுக்க, பிறகு அந்த பெண்ணிற்கு ஸ்டிச்சஸ் போட்டு, அவளை ஐசியுவில் அப்சர்வேஷனுக்கு மாற்றிய பிறகே, அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
“ரொம்ப நேர்த்தியா ஹேண்டில் பண்ணிங்க டாக்டர்..” என்றாள் துவாரகி, பார்கவியிடம்.
“சிம் பொண்ணுன்னா, நீ எந்த நேரத்துக்கு வேணும்ன்னாலும் ஹாஸ்ப்பிட்டல் வரலாமா..? ஒரு டாக்ட்டருக்கு டைமிங் ரொம்ப முக்கியம். இந்த ஹாஸ்ப்பிட்டல் உங்களுதா இருந்தா… எல்லாமே உங்க இஷட்டப்படி செய்யலாம்ன்னு அர்த்தம் கிடையாது. இது தான் லாஸ்ட் வார்னிங்..” என்று பார்கவி கத்த,
“சார் டாக்டர்..! இனி இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்..” என்றாள்.
“உங்களைச் சொல்லி குத்தமில்லை. காசு இருக்குன்னு படிச்சு முடிச்ச உடனே உங்களுக்கு ஹாஸ்ப்பிட்டல் கட்டிக் கொடுத்துடுறாங்க. நிறைய பேருக்கு மருத்துவம் படிக்கிறதே கனவா போய்ட்டு இருக்கு. எல்லாமே ஈசியா கிடைக்கிறதால அதோட அருமை உங்களுக்குத் தெரியறதில்லை..” என்று பார்கவி ஆரம்பிக்க,
“டாக்டர்..! ரெண்டு அடி வேணும்ன்னாலும் அடிச்சுக்கோங்க. இப்படி பேசியே கொல்லாதிங்க. என்னால முடியலை.. நான் பாவம்..” என்று அவள் சொன்ன விதத்தில் பார்கவிக்கும் சிரிப்பு வந்தது.
“ஹப்பாடா..! ஒரு வழியா சிரிச்சுட்டிங்க..” என்றவளுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. பார்கவி கிளம்புவதைப் பார்த்த துவாரகி,
“என்ன டாக்டர் கிளம்பிட்டிங்க..?” என்றாள் ஆச்சர்யமாய்.
“இன்னைக்கு ஆதி வரான்மா, அதான். அவன் வரும் போது மட்டும் நான் வீட்ல இல்லைன்னா அவ்வளவு தான். சோ இன்னைக்கு நான் லீவ். இது ஏற்கனவே கமிட் பண்ண கேஸ் அப்படின்றதால வந்தேன்..” என்று சொல்லிக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தார்.
“பார்த்திங்களா..? உங்க பையன் வரார்னு சொன்ன உடனேயே எங்களயெல்லாம் கண்ணுக்குத் தெரியலை. நடக்கட்டும், நடக்கட்டும்..” என்று அவள் கிண்டல் செய்ய,
“அவனைப் பார்த்து பத்து நாள் ஆச்சு துவாராகி. எங்களுக்கு யார் இருக்கா, அவன் மட்டும் தானே..?” என்று அவர் சொல்ல,
“என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டிங்க..! உங்க பையனுக்கு தான் ஒட்டு மொத்த தமிழ்நாடும் சப்போர்ட்டா இருக்கே. தி பேமஸ் ஹீரோ ஆதித்ய வர்மாவோட அம்மா மாதிரி சும்மா கெத்தா பேசுங்க ஆன்ட்டி. அதை விட்டுட்டு சினிமால வர மதர் மாதிரி உருகிட்டு இருக்கீங்க..?” என்றாள்.
“வாலு..! இன்னைக்கு உனக்கு வொர்க் கொஞ்சம் ஹெவி தான். மீ எஸ்கேப். அங்கிளும் இங்க தான் இருக்கார். அதான் கிளம்பிட்டேன்..!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வந்தார் சேது.
“போகலாமா பார்கவி..” என்று அவர் கேட்க,
“அவங்க ரெடியா இருக்காங்க அங்கிள். நீங்க தாராளமா கூட்டிட்டுப் போகலாம். போய், உங்க பையனுக்கு தாலாட்டு பாடுங்க..” என்று கிண்டலாக சொன்னாள்.
“இவளுக்கு வாய் கூடிப் போய்டுச்சு நீங்க வாங்க..!” என்ற பார்கவி,
“கிளம்பறேன் துவாரகி..” என்று சொல்லி விட்டு கிளம்பிட்டார். சேதுவும் பார்கவியும் இணைந்து செல்வதைப் பார்த்த துவாரகிக்கு கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. அப்படி ஒரு அந்நியோன்யம் அவர்களிடத்தில். ஒரு சந்தோஷப் பெருமூச்சுடன் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாள் துவாரகி.
“ரொம்ப அழகான பொண்ணுல்ல..” என்றார் சேது, காரில் என்று கொண்டிருக்கும் போது.
“யாரை சொல்றிங்க..?” என்றார் பார்கவி.
“அதான், துவாரகியைத் தான் சொன்னேன். ஒரு சிஎம் பொண்ணுன்ற பந்தா எதுவுமே இல்லை. அந்த பொண்ணு முகத்தைப் பார்த்தாலே, மனசுக்குள்ள அப்படி ஒரு அமைதி வந்திடும், அப்படி ஒரு தெய்வீகக் கலை இருக்கு முகத்தில்..” என்று சேது சொல்லிக் கொண்டு வர,
“ஆமாங்க..! ரொம்ப திறமையான பொண்ணும் கூட…” என்றார் யோசனையுடன்.
அவர்கள் வீட்டிற்கு வரும் முன்பே, ஆதித்ய வர்மா வீட்டிற்கு வந்திருந்தான். வந்தவன், அவர்களைக் காணாமல் கோபத்தில் இருந்தான்.
“ஆதி வந்துட்டான் போல..” என்று அவனின் காரைப் பார்த்தே கண்டு கொண்டவர்கள், வேகமாக உள்ளே செல்ல, அவர்களை முறைத்துக் கொண்டே ஹாலில் அமர்ந்திருந்தான் ஆதித்ய வர்மா.
“வா ஆதி..! என்ன சீக்கிரமே வந்துட்ட..” என்ற பார்கவி அவனின் அருகில் சென்று அமர,
“என்னம்மா நீங்க..? நான் என்ன சொன்னாலும் கேட்க கூடாதுன்ற முடிவுல இருக்கீங்க போல.. உங்களுக்கு சர்வீஸ் பண்ணியே ஆகணும்ன்னா, நான் தனியா ஹாஸ்பிட்டல் கட்டித் தரேன். நீங்க எதுக்கு இன்னொரு ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்குப் போகணும்..?” என்றான் எடுத்த எடுப்பில்.
“நான் வேலைக்குப் போகலை ஆதி. இதை சர்வீஸா பண்றேன்…” என்றார் பார்கவி.
“உங்களுக்கு அப்படி சர்வீஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா..? எத்தனையோ கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ஸ் இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு, இந்த ஹாஸ்பிட்டல்ல தான் சர்வீஸ் பண்ணுவிங்களா..?” என்றான் எரிச்சலுடன்.
“எனக்கும் ஆசை தான், வெளிய போய் சர்வீஸ் பண்ணனும்ன்னு. ஆனா, வெளிய எங்க போக முடியுது..?” என்று அவர் அலுப்புடன் சொல்ல,
“ஏன் போக முடியாது..?”
“அதுக்கு நான் உனக்கு அம்மாவா இருந்திருக்க கூடாது. வெளிய போனாலே என்னால நிம்மதியா இருக்க முடியலை. எங்க போனாலும் பத்து பேர் சுத்தி வந்திடுறாங்க. இதுல நான் ஹாஸ்பிட்டல்ல சர்வீஸ் பண்ணா அவ்வளவு தான்..” என்று அங்கலாய்த்துக் கொண்டவர்,
“இங்க எனக்கு அது மாதிரி எந்த பிரச்சனையும் இல்லை. நிறைய ஜூனியர்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு நான் கத்துக் குடுக்குறேன் அப்படிங்கிற ஆத்மா திருப்தியே எனக்குப் போதும்..” என்றார்.
“நான் என்ன சொன்னாலும், நீங்க கேட்க போறதில்லை. அதுலயும் அந்த ஆளு ஹாஸ்ப்பிட்டலுக்கு நீங்க போறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. எனக்கு இப்போ உங்க கையாள சூடா ஒரு கப் காபி வேணும், கிடைக்குமா,கிடைக்காதா..?” என்றான் கோபமாய்.
“ஒரு நிமிஷத்துல கொண்டு வரேன்..” என்ற பார்கவி கிட்சனிற்குள் நுழைய,
“ஏன் ஆதி கோபமா இருக்க..?” என்றார் சேது.
“எல்லாமே அந்த படம் ரிலீஸ் பத்தி தான் டாட். ப்ரொடியூசர் பாவம் டாட். அவருக்கு ஏகப்பட்ட லாஸ். எல்லாத்துக்கும் காரணம் யாருன்னு நினைக்கிறிங்க.. எல்லாம் அந்த கருணைநாதன் தான். அந்த ஆளுக்கு சிஎம்மா இருக்கோம்கிற திமிர். வேற என்ன..? இந்த ஆதித்ய வர்மாயாருன்னு இன்னும் அந்த ஆளுக்கு சரியா தெரியலை. சீக்கிரம் தெரிய வைக்கிறேன்..” என்றான் முகத்தில் உறுதியுடன்.
“நமக்கு எதுக்கு இந்த வம்பு ஆதி. நாம ஏதாவது செய்ய போய், அவங்க தொடர்ந்து இடைஞ்சல் குடுக்க ஆரம்பிச்சுடுவாங்க..நம்ம நிம்மதி தான் கெடும்..” என்றார் சேது.
“அப்படி நினைச்சு அமைதியா இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் தோணுது டாட். இதை இப்படியே விட்டா, அந்த ஆளு என்னை பைசா காசுக்கு மதிக்க மாட்டாரு. பெரிய ஆப்பா வைக்கிறேன்..” என்று அவன் சபதம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, வந்தான் கவின்.
“என்னாச்சு கவின்..?” என்றான் ஆதித்ய வர்மா.
“அந்த பிரடியூசர் சூசைட் அட்டென் பண்ணியிருக்கார் சார். கடைசி நேரத்துல காப்பாத்திட்டாங்க..! இப்போ அவர் ஓகே..” என்றான் கவின்.
“ஒ மை காட்..! சூசைட்டா..” என்ற சேதுராமன் அதிர்ந்து போனார்.
“பாருங்க டாட்.. அந்த ஆளுனால இன்னும் எத்தனை பேர் சாகப் போறாங்களோ தெரியலை..” என்று சொன்ன ஆதி,
“நாளைக்கு அவரை மீட் பண்ண ஏற்பாடு பண்ணு கவின்..” என்றான்.
“ஓகே சார்..!” என்ற கவின் அங்கிருந்து நகர, காபியுடன் வந்தார் பார்கவி.
அவரின் கையால் போட்ட, அந்த சூடான காபி, ஆதித்ய வர்மாவின் மனதை கொஞ்சம் சாந்தப்படுத்தியிருந்தது.
“தேங்க்ஸ்ம்மா..! நான் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்..” என்று அவன் சொல்ல,
“ஒரேதா சாப்பிட்டு போ ஆதி. நான் கொஞ்ச நேரத்துல ரெடி பண்ணிடுவேன்..” என்ற பார்கவி, கிட்சனிற்குள் நுழைய, அவருடைய செல்போன் அடித்தது.
“அம்மா உங்களுக்கு கால்..” என்று ஆதி சொல்ல,
“யார்ன்னு கேளு ஆதி..” என்றார் உள்ளிருந்து.
“ஹலோ..!” என்றான் ஆதி. அவனுடைய குரலில் எதிர்புறம் இருந்த துவாரகி ஜெர்க் ஆனாள்.
“ஹலோ..” என்றான் பொறுமை இழந்து.
“ஹலோ..! டாக்டர் இருக்கங்களா..?” என்றார் துவாரகி.
“நீங்க..” என்றான். அந்த குரலில் அவன் கவரப் பட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
“நான் டாக்டர் துவாரகி..” என்றாள்.
‘கேள்விப்பட்ட மாதிரி இருக்கே’ என்று யோசித்தவன்,
“என்ன விஷயம் சொல்லுங்க…” என்றான்.
“அதை அவங்ககிட்ட தான் சொல்ல முடியும். அவங்க இல்லையா..?” என்றாள் பொறுமையாக.
“அவங்க இருக்காங்களா இல்லையான்னு அவங்களைக் கேட்டாத்தான் தெரியும்..” என்றான் ஆதியும்.
“இவன் என்ன லூசா..? போனை அவங்க கிட்ட குடுத்தாத்தான அதையும் கேட்க முடியும்..?” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள்,
“சார்க்கு ரோம்ப அறிவாளின்னு மனசுல நினைப்பு போல. எல்லாரும் வியந்து பார்க்குற பெரிய ஹீரோ மண்டைக்குள்ள எல்லாமே ஜீரோவா தான் இருக்கும் போல..” என்று அவளும் விடாமல் நக்கலாக பேசினாள்.
“ஏய்.. நீ யார்கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுமா..?” என்றான் கோபமாக.
“தெரியுமே.. தி கிரேட் பேமஸ் ஹீரோ, ஆதித்ய வர்மாகிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..” என்று அவள் பேசிய தோணியில், ஆதிக்கு யோசனையாக இருந்தது.
“யார் ஆதி போன்ல..?” என்றார் பார்கவி.
“யாரோ, துவாரகியாம். உங்ககிட்ட பேசணுமாம்..” என்று அவன் கடுப்புடன் போனைக் கொடுக்க,
“கருணைநாதன் பொண்ணு தான் ஆதி..” என்றார் சேது.
“அந்த ஆளு பொண்ணா. அப்பனுக்கு இருக்குற அதே திமிரும் வாயும் இவளுக்கும் இருக்கும் போலவே..” என்ற ஆதியின் ஆழ்மனது, அந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரியின் முகத்தைத் தேடியது.
‘கூகுள் பண்ணிப் பார்த்தா, தெரிஞ்சிடப் போகுது..’ என்று அவனின் உள்மனம் யோசனை சொல்ல, வேகமான போனில் தட்டினான். விரிந்த அவள் புகைப் படத்தைப் பார்த்து, அவனின் கண்களும் விரிந்தது.