கதிரவன் கண்மலரும் காலை பொழுதினில் தன் பணிகாக பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தார் யாமினி.
கருநீல நிற புடவையில் மிகவும் மிடுக்கான தோற்றத்தில் இருந்த அவர் தான் ‘சோல்’ தொலைகாட்சியின் பிரபல நிகழ்ச்சியான ‘வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ்..’ஸின் இயக்குநர்.!!
பல வருடங்களாய் சோல் தொலைகாட்சியில் இருந்து பல ரியாலிட்டி ஷோக்களை வழி நடத்தியவர் என்பதால் சின்னதிரை வட்டாரத்தில் ’யாமினி மேம்’ என்றால் மிகவும் பிரசித்தம்..!!!
திரைக்கு பின்னால் இருந்து பலர் திரையில் மின்ன உதவியவர் என்பதால் அவர்கள் வட்டத்தில் அவருக்கும் அவர் வார்த்தைகளுக்கும் தனி மரியாதை இருக்கும்..!! ஆனால் வீட்டிலோ அதற்கு நேரெதிராய் யாமினி வேண்டாம் என்பதை போட்டி போட்டு செய்யவே இரு ஜீவன்கள் இருகின்றனர். ஒன்று அவர் கணவர் விஷாகன்.. மற்றொன்று அவரின் ஒரே மகள் சக்தி..!!
தனக்கு தேவையான பொருட்களை கைப்பையில் வைத்தபடி மணியை பார்த்தவர் நேரம் ஆகுவதை உணர்ந்து,
“சக்தி.. சக்தி…” என்று அழைக்க எங்கிருந்தோ,
“ம்ம்ம்..”
என்று சத்தம் மட்டும் வந்தது.
‘இந்த பொண்ணு இருக்காளே..’ என்று தன் மகளை எண்ணி ஆயாசமாய் மூச்சு விட்டவர்,
“நான் கிளம்பிட்டேன்.. சாப்பாடு அங்க பார்த்துபேன்.. குக் வந்ததும் உனக்கு மட்டும் சமைக்க சொல்லு.. பிடிக்கலைனா உனக்கு வேண்டியதை நீயே செஞ்சுக்கோ…” என்று சத்தமாய் சொல்ல
அதற்கும்,
“ம்ம்.. ம்ம்..” மட்டும் தான்.
“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்னு நினைச்சுட்டே இருக்கேன்.. நேரமே இருக்க மாட்டேங்குது.. நாளைக்கு எனக்கு மறக்காம நியாபகப்படுத்து சக்தி..”
“ம்ம்ம்..”
“நான் நைட் வர லேட் ஆகலாம்… நீ எனக்காக காத்திட்டு இருக்காத…!! அப்புறம் நான் இல்லைன்னு அந்த பொடியன்கள வீட்டில் விட்டேன்னு தெரிஞ்சுது அவ்வளவு தான்.. எனக்கு என் வீட்டோட அமைதி முக்கியம்..”
என்றதற்கு அவளிடம் பதில் இல்லை.
“சென்னையோட மோஸ்ட் ரெபியூடட் யூனிவெர்சிட்டில லெக்ச்சரரா இருக்கவ அந்த ஸ்கூல் பசங்களுக்கு டியூசன் எடுக்கனும்னு என்ன அவசியம்.. அதுவும் ஃப்ரீயா..!! அவ அப்பா மாதிரியே தேவையில்லாத வேலையை எல்லாம் செய்யிரதே வேலையா வைச்சுட்டு இருக்கா…”
என்று முணுமுணுத்தவர்,
“ஒரு மனுஷி நின்னு பேசிட்டு இருக்கேனே.. முன்னால வந்து வாயை திறந்து பேசுறீயா.. அப்படி என்ன பண்ணிட்டு இருக்க..”
என்ற அதட்டலோடு அவளை தேடி வர அங்கே சக்தி எனபடும் சக்திஸ்ரீயோ தரையில் விரித்த மேட்டில் பத்மாசன நிலையில் கால்களை மடக்கி அமர்ந்திருந்தாள்.
கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருப்பவளை கண்டதும் அவரின் வேகம் குறைய அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல்,
“பை சக்தி..” என்று கூறி கிளம்பிவிட அவர் காலடி ஓசை மறையவும் ஒற்றை கண்ணை மட்டும் திறந்தவள்
அவர் சென்று விட்டார் என உறுதியானதும்,
“ஹப்பாடி..” நிம்மதியாய் பெருமூச்சு விட்டாள். எதிலிருந்தோ தப்பித்த உணர்வு..!!!
சராசரிக்கும் சற்று அதிக உயரமும், மிக ஒல்லியான உடல்வாகும் எப்பொழுதும் இதழோர புன்னகையை தாங்கிய முகமும் என முதல் பார்வையிலே மனதில் பதியும் தோற்றத்தில் இருந்தாள் சக்திஸ்ரீ. அவளை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமெனில் பழகியவர்களுக்கு ‘வாயாடி..’ மற்றவர்களுக்கு ‘அப்பாவி’ !!
‘சிக்கி இருந்தால் டியூஷன் எடுக்கறதை பத்தி அரைநாள் லீவ் எடுத்து கூட அட்வெய்ஸ் கொடுப்பாங்க.. ம்ச்.. எனக்கு கம்பெனி அந்த பிள்ளைங்க கொடுக்கிறாங்க.. ஸ்டெடிஸ்ல அவங்களுக்கு வேண்டிய கைடன்ஸ் நான் கொடுக்கிறேன்.. இதில் இவங்களுக்கு என்ன பிரச்சனையாம்..!! அமைதியா இருக்க இது வீடா இல்ல லைப்ரெரியா…!! காலேஜ் படிச்சவரை நிம்மதியா ஹாஸ்டலில் இருந்தேன்.. ம்ஹூம்..”
என சோம்பலாய் கால்களை நீட்டி அப்படியே தரையில் படுத்துவிட்டாள்.
கல்லூரி முடிந்து மாலையில் வீட்டில் தனியே இருக்க பிடிக்காமல் பக்கத்து அபார்ட்மெண்ட் ஆண்ட்டி கேட்டபோது அவர் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தர ஒத்துக் கொண்டாள். அவர்களை கொண்டு மேல் மாடி, கீழ் மாடி என பத்து பிள்ளைகள் போல் சேர்ந்துவிட அவர்கள் சேட்டைகள் தொல்லையாக இல்லாமல் அவளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதால் அவளும் மறுக்கவில்லை. ஒரு மணி நேரம் தான் என்பதால் அது அவளுக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை.
ஆனால் யாமினி அதனை ஒரு பிரச்சனையாய் சொல்வதை நினைத்து எரிச்சலாய் வர அதனை மேலும் ஏற்றிவிடுவது போல் அருகில் இருந்த அலைபேசி அவனுக்கான பிரத்யோக பாடலோடு இசைத்தது.
‘அதானே.. எங்கடா இன்னும் காணுமேனு நினைச்சேன்..’ என்று எண்ணியவளாய் அலைபேசியை கையில் எடுத்தவள் ‘ஆரியன்..’ என திரையில் மின்னும் பெயர் மறையும்வரை அசையாமல் பார்த்தாலே தவிர அதனை ஏற்பதற்கு கிஞ்சிதமும் முயலவில்லை.
அது முழுவதும் அடித்து ஓய்ந்ததும் வாட்ஸப்பில்,
“ஸாரிடா.. ஒரு அர்ஜெண்ட் வொர்க்.. அதனால் தான்…”
“புரிஞ்சிக்கவே மாட்டியாடி..”
“தொட்டதுக்கு எல்லாம் கோவிச்சுட்டு மனுஷனை படுத்தாத சக்தி..”
“காலை அட்டென் பண்ணு..”
என வரிசையாய் அனுப்பியிருந்தான். அவளின் உள்ளம் கவர் கள்வன்..!! நம் கதையின் நாயகன்..!!
‘ஷப்பா.. இவனால ஸாரிங்கற வார்த்தையே வெறுத்துடும் போல..” என பல்லை கடித்தவள்,
“கோச்சுக்க எல்லாம் இல்ல.. இப்ப நான் ரொம்ப பிஸி.. பேச முடியாது.. அப்புறம் பேசலாம்..”
என வேகமாய் தட்டிவிட்டு
‘போடா.. ஒரு இரண்டு நிமிஷம் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன வேலை..!! இன்னைக்கு கன்செர்ட் போறேன்னு சொல்லி இருந்தேன்.. சத்தியமா அது உனக்கு நியாபகம் இருக்காதுனு தெரியும்.. அவ்வளவு அலட்சியம்..!!” என உதட்டை சுளித்து தன்னுள்ளே முறுக்கி கொண்டாள். நேற்று முழுவதும் அவனிடம் பேச முயற்சி செய்தும் முடியாமல் போன காண்டு அவளுக்கு!!
கல்லூரி நாட்களில் இருந்து இருவரும் காதலிக்கின்றனர். அவர்கள் காதலிக்க தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை அவர்கள் போட்ட சண்டைகளை எண்ணி பார்க்கவே முழுநாள் கூட போதாது. இரு வேறு துருவங்கள் காதலால் இணைந்தாலும் கருத்து வேறுபாடுகளுக்கும் அதனால் விளையும் சண்டைகளுக்கும் பஞ்சமே இருக்காது..!
நாளொரு சண்டையும் பொழுதொரு சமாதானமாய் வருடங்கள் ஓடியிருக்க இப்பொழுதெல்லாம் அதில் ஒருவித எரிச்சலும் கோபமும் அவளை சூழ்ந்தது. முன்பு கோபம் இருந்தாலும் அவன் சமாதானமாய் பேசும்போது பாகாய் உருகும் மனம் இப்பொழுதெல்லாம் மேலும் கோபம் தான் கொண்டது. அவனின் சமாதானங்கள் அப்போதைக்கு பிரச்சனையை தட்டிகழிப்பது போல் இருக்கிறதே தவிர தீர்வாய் இருப்பதே இல்லை என்பதால் இருவருக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இதோ இன்றும் கூட..!!
அலைபேசியை அங்கேயே வைத்துவிட்டு சுவாதீனமாய் எழுந்து வெளியே வந்தாள். இன்று அவள் கல்லூரி போக போவதில்லை என்பதால் அவளுக்கு எந்த அவசரமும் இல்லை.
யாமினி இரைத்து வைத்திருந்த பொருட்களை அதது இடத்தில் வைத்தபடி,
”ஏதோ பேசனும் பேசனும்னு ஒரு வாரமா சொல்றாங்களே தவிர நின்னு பேச நேரம் இல்லை.. என்ன வாழ்க்கைடா இது… ..”
என்ற முணுமுணுப்போடு ஹாலை கடக்கையில் சுவரில் மாட்டியிருக்கும் தங்கள் குடும்ப படம் கண்ணில் பட அதில் சிரித்த முகமாய் இருக்கும் தந்தையை நோக்கி,
“நீங்க ஒரு கேரக்டர் இருக்கிறதே இந்த ஃபோட்டோ பார்க்கும்போது தான் நியாபகம் வருது.. அடிக்கடி வந்து நானும் இருக்கேன்னு ரெஜிஸ்டர் பண்ணுங்க ப்பா.. இல்லனா நானும் அம்மாவும் உங்களை ஒரேடியா மறந்துட்டாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல..”
என அவருக்கும் ஒரு கமெண்ட் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.
அவள் பேச்சு எல்லாம் அவர்கள் இல்லாத போது தான்.. விஷாகனோ யாமினியோ நேரில் பேசும்போது அவள் பதில் எல்லாம் ஓரிரு வார்த்தைகளிலே முடிந்துவிடும்..!!
இயற்கையிலே பயந்த சுபாவமும் எதற்கும் முன்னிலையில் நிற்க தயங்கும் இயல்புடையவள் சக்தி. ஆனால் பல காரணங்களால் அவளுக்கே அவளின் அந்த இயல்பு பிடிக்காமல் போக அதனை மாற்றிக்கொள்ளவே விரும்பி கற்பிக்கும் பணியை தேர்ந்தெடுத்து அதன் வழி சிறு வெற்றியும் கண்டாள். இருப்பினும் பெற்றோர்களிடம் மட்டும் மனதில் உள்ளதை அப்படியே பேச துணிவு இன்றும் பெறவில்லை.
அவளின் தந்தை விஷாகன் ஒரு நரம்பியல் நிபுணர்.. பேச்சுகென்று இல்லாமல் உண்மையிலே மருத்துவத்தை சேவையாய் எடுத்து செய்யும் நல்ல மனிதர். ஒரே மாதிரியான சுழற்சியில் ஓடுவதைவிட தினம் தினம் புது கோணத்தில் வாழ்க்கையை பார்த்து இரசிக்க பிடிக்கும்.. வரைபடத்தில் கண்டறிய முடியாத குக்கிராமங்களில் தொடங்கி மேலை நாடுகள்வரை பல இடங்களில் பணி புரிந்தவர்… இத்தனை வருட அனுபவத்தில் பல ஊர்களையும் பலதரப்பட்ட மனிதர்களையும் பார்த்து பழகியவர்..
எப்பொழுது எந்த ஊரில் வேலை செய்கிறார் என்பது இவர்களுக்கே தெரியாது.. அவரின் வாழ்க்கை முறையே வித்தியாசமானது தான். ஆனால் இதன் நடுவே தன் குடும்பத்திற்கான முக்கியதுவம் குறைந்து காணாமலே போனதை அவர் உணரவே இல்லை. அதனை உணர்த்த வேண்டிய யாமினியும் அதற்கு பெரிதாய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவரவர் காண பாதையில் பயணத்தை தொடர அங்கே குடும்பம் என்ற அமைப்பில் விரிசலடைந்தது தான் பரிதாபம்..!!
எட்டு மணியை கடந்ததும் வீட்டுவேலை செய்யும் பெண்மணி வந்துவிட்டார்.
“இன்னா பாப்பா.. நீ காலேசு கிளம்பி இருப்பியேன்னு வேக வேகமா ஓடியாந்தேன்… ஆனா நீ தூங்கி முழிச்சு அப்படியே நிக்கிற.. அம்மா எங்க காணும்.. கிளம்பிட்டாங்களா…?”
என நுழையும் போதே பார்வதி கேள்வியோடு வர,
“நான் இன்னைக்கு காலேஜ் போகல அதான்.. அம்மா.. அப்போவே போயாச்சு..”
என்று பதில் சொல்ல,
“காலேசு போகலையா.. அப்போ இன்னைக்கும் கச்சேரிக்கு போறீயா பாப்பா..” என ஆர்வமாய் அவர் கேட்கவும் அவள் அதரங்கள் புன்னகையில் விரிந்தது.
அவர் சொல்லும் கச்சேரி அவள் பங்குபெறும் லைவ் மியூசிக் ஷோ தான்..!!
ஆம்..! சென்னையில் புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் வேதியல் பிரிவில் சக்தி விரிவுரையாளர் என்பதை தாண்டி மறுபக்கம் ’ஆர்.ஓ.எல் பேண்ட்’ என அறியப்படும் ’ரிதம் ஆஃப் லைஃப்’ என்கிற மியூசிக் பேண்ட்-டில் சக்தி ஃபளாவ்டிஸ்ட் மற்றும் கீபோர்ட் ப்ளேயர்.
அவர்கள் பல நேரங்களில் தங்கள் யூடியூப் சேனல்காக தான் ’கவர் சாங்ஸ்’ ’ஃப்யூஷன்..’ ‘ஆல்பம் சாங்ஸ்’ செய்வார்கள் என்றாலும் சில நேரங்களில் சிறு சிறு ’லைவ் கன்செர்ட்’ போவதும் உண்டு.
இன்று அப்படி ஒரு லைவ் கான்செர்ட்காக தான் கல்லூரியில் விடுப்பு எடுத்திருந்தாள்.
புல்லாங்குழல் வாசிக்க சிறுவயதிலே பயின்றவள் கல்லூரி படிக்கும்போது இசை மேல் கொண்ட காதலால் கீபோர்ட்டும் கற்றுக் கொண்டாள். இரண்டுமே நொடியில் அவள் மனநிலையை இதமாய் மாற்ற கூடிய வல்லமை கொண்டவை என்பது அவளே உணராத உண்மை..!! அதை முதலில் உணர்ந்து அவளுக்கும் உணர்த்தியது ஆரியன் தான்.
ஆசையிருந்தும் தன் தயக்கத்தால் பின் வாங்குபவளை பிடித்து தள்ளாத குறையாய் பல கலைநிகழ்ச்சிகளில் கல்லூரி நாட்களிலே பங்கேற்க வைப்பான். அப்படி அறிமுகமானது தான் ஆர்.ஓ.எல் பேண்ட்..!!
அந்த நாட்கள் நெஞ்சத்தில் எழுந்தபோது அவன் மீது கொண்ட கோபம் கொஞ்சம் குறைய மனமும் இளகுவானது..!
அந்த புன்னகை மாறாமல்,
“எப்படி க்கா.. கரெக்ட்டா பாயிண்டை பிடிக்கிறீங்க..”
என சிரிப்பும் வியப்புமாய் அவள் கேட்க அதில் பார்வதியும் பெருமையாய் புன்னகைத்து,
“இதில் என்ன பாப்பா இருக்கு.. நீ சாமானியத்துல லீவ் எடுக்க மாட்டீயே… அப்படி இருந்தால் கண்டிப்பா காரணம் உன் பாட்டு கச்சேரியா தான் இருக்கும்..”
என்று அசால்ட்டாய் சொல்ல, “அது சரி..” என தலையசைத்து சிரித்தவளை இரசிப்போடு பார்த்தார் பார்வதி.
“சரிக்கா.. நீங்க வேலையை பாருங்க..” என எழுந்து கொண்டவளை,
“பாப்பா.. பாப்பா.. நில்லேன்..” என்று நிறுத்தவும் கேள்வியாய் அவரை ஏறிட்டு,
“நீ அந்த புல்லாங்குழல எடுத்து வாசிக்கிறதை பார்க்கும்போது அந்த கண்ணனே முன்னால் நிற்கிறா மாதிரி அத்தனை அழகா இருக்கும்.. எனக்காக கொஞ்சம் வாசிச்சு காட்டுறீயா..!!” என்று ஆசையாய் கேட்கவும் முறுவலோடு,
“அவ்வளவு தானே.. வாசிச்சுட்டா போச்சு..”
என்று இலகுவாய் சொல்லி உள்ளே சென்று தன் சில்வர் ஃப்லூட்டை எடுத்து வந்தவள் சம்மணமிட்டு சோஃபாவில் அமர்ந்ததும் ‘என்ன வாசிப்பது..’ ஒரு நொடி யோசித்தாள்.
பின் குழலை தன் உதட்டருகே கொண்டு சென்று ‘ராஜா ராணி’ படத்தின் தீம் மியூசிக்கை லயிப்போடு அழகாய் வாசித்து தேனாய் நம் செவிகளை இன்புற செய்தாள்.
இவ்வாறு இங்கே இவள் இசையில் மூழ்கியிருக்க அங்கே இவள் குறுஞ்செய்தியை படித்து கடுப்பில் மூழ்கியிருந்தான் ஆரியன்.
காலையில் ஜிம் வந்ததில் இருந்தே ஃபோனும் கையுமாக தான் அலைகிறான். ஆனால் அவள் தான் எடுப்பதாக இல்லை. அவள் மெசேஜை கண்டு அவனுக்கும் ஈகோ எட்டி பார்க்க,
”இம்சை பண்றடி நீ.. பேசலேனா போ.. எனக்கும் பேச வேண்டாம்..”
என கடுப்போடு ஃபோனை அருகில் போட்டுவிட்டு ஸ்க்வாட் ரேக் பாரை எக்கி பிடித்து அதே வேகத்தோடு ’புல்-அப்ஸ்’ எடுத்தான்.
கோபம் இல்லை என்று சொன்னாலும் அவனுக்கு தெரியாத அவள் வார்த்தைகளின் அர்த்தம்…!
அருகே ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்த ஜெய் அவன் வேகத்தை கண்டு,
“என்ன மச்சான்.. ரொம்ப சந்தோஷமா இருக்க போல..” என்று நமுட்டு சிரிப்போடு கேட்க கண்களில் கனலை தேக்கி முறைத்தவன்,
“எட்டி மிதிச்சேன் வை.. அப்படியே உருண்டு மூஞ்செல்லாம் பேந்துடும்.. மூட்டிட்டு வேலையை பார்..”
வார்த்தையை கடித்து துப்ப,
“ஹிஹி.. விடு மச்சான்.. எதுக்கு இப்ப டென்ஷன் ஆகிற..” என்று வெள்ளை கொடியை பறக்கவிட்டு,
”என்ன தங்கச்சி கூட சண்டையா..?” என்று கேட்க அவன் அமைதியாய் ’புல்அப்ஸ்’ஸை தொடரவும் அது தான் என்று புரிந்தது.
“நான் கேட்கறேன்னு தப்பா நினைக்காத.. காலேஜ் டைம்ல நல்லா தானே இருந்தீங்க.. உங்களை பார்க்கவே அவ்வளவு நிறைவா இருக்கும்.. இப்ப ஏன் இப்படி..?? ஃபோன் பேசும்போதெல்லாம் டென்ஷன் ஆகிடுற..!! இல்லை இப்படி உர்ன்னு உட்கார்ந்து இருக்க..!! என்ன தான்டா பிரச்சனை உங்களுக்கு..”
ஜெய்யும் ஆரியனும் கல்லூரி நண்பர்கள்.. இப்பொழுது ஆரியன் ‘ஃபோல்ஸ்’ என்படும் கார் நிறுவனத்திலும் ஜெய் ஒரு மென்பொருள் நிறுவனத்திலும் என்று வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தாலும் அவர்கள் தினமும் பார்த்துக் கொள்வது இந்த ஜிம்மில் தான்..!
இவர்கள் எல்லாரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் ஜெய்யிற்கு ஆரியன் – சக்தி பற்றி நன்றாகவே தெரியும்..! அதனாலே கவலையோடு வினவ,
“அது புரிஞ்சால் நான் ஏன் குழம்பி நிக்கிறேன் ஜெய்..”
என்றவன் பாரை பிடித்து மேலும் கீழும் தன் உடலை தூக்கி இறக்கியபடி தொடர்ந்தான்.
“அவ என்ன எதிர்பார்க்கிறா.. அவளுக்கு என்ன வேணும்னு சத்தியமா புரிய மாட்டேங்குது.. எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும்போது எதாவது சொதப்பிடுறேன்.. இப்போ எல்லாம் நான் ப்ரயாரிட்டி கொடுக்கிறது இல்லைனு நினைக்கிறா.. காலேஜ்ல இருந்தா மாதிரியே எப்பவும் இருக்க முடியுமா ஜெய்..
அப்போ ஸ்போர்ட்ஸ் தவிர எனக்கு எந்த கவலையும் இல்ல.. ஆனால் இப்ப அப்படி இல்லையே.. நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு.. இப்போ தான் சொந்தமா வீடு கட்டி இருக்கோம்.. இன்னும் நிறைய நிறைய ஆசை இருக்கு.. அதெல்லாம் இப்போ செய்யாம வேற எப்போ செய்ய முடியும்.. அதை அவளே என்னை புரிஞ்சிக்கலேனா என்ன செய்றது… லைஃப்ல நிம்மதியே இல்ல மச்சான்…”
அதற்கும் மேல் எதுவும் பேச தோணாமல் அமைதியாகி விட்டான். உண்மையில் அவள் கோபமாக இருந்தால் அவனுக்கு எந்த வேலையும் எந்த சிந்தனையும் ஓடாது. அப்படி இருக்க தினமும் ஒரு சண்டையா என அவன் மனம் வெறுமை அடைந்தது.
ஆரியனின் யோசனை படிந்த முகத்தை கண்டு,
“என்ன மச்சான்.. ஏன்டா இந்த லவ்வை பண்ணோம்னு யோசிக்கிறியா..”
என்று ஜெய் கேட்க புல்அப்ஸ் எடுப்பதை நிறுத்திவிட்டு வியர்வை சொட்ட கீழ அமர்ந்த ஆரியன் மறுப்பாய் தலையசைத்து,
“இல்ல.. எப்போ டா கல்யாணம் பண்ணுவோம்னு இருக்கு..” என்றான் தீவிரமாய் .
அவனை வியப்பாய் பார்த்து,
“லவ் பண்றவன் இப்படி புலம்பி தான் பார்த்து இருக்கேன்.. நீ என்ன புதுசா சொல்ற..” என்க,
“படிப்பு முடிஞ்சதும் அவ இங்கிருந்து சென்னை போனபோது கடைசியா அவளை பார்த்தது.. லாங் டிஸ்டென்ஸ் ரிலேஷன்ஷிப் அவ்வளவு ஈஸி இல்ல மச்சான்.. நான் இங்க.. அவ அங்க’னு இல்லாம என் கிட்டவே வந்துட்டா போதும்.. அப்புறம் எதுவா இருந்தாலும் நான் பார்த்துபேன்..”
என்றவனிடம் திருமணத்திற்கான எதிர்பார்ப்பை உணர்ந்த ஜெய்,
“அப்போ கல்யாணத்தை முதல்ல பண்ணு மேன்..”
என்று சிரிக்க அவனுக்கும் புன்னகை அரும்பியது.
“பண்ணனும்.. மேக்னாவுக்கு இப்ப தான் வரன் பார்த்திருக்காங்க.. அது சரியா அமையனும்.. அவ கல்யாணத்தை நல்லபடியா முடிச்சதும் நான் அப்பாட்ட பேச போறேன்.. அப்பா கண்டிப்பா என் விருப்பதுக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்க..”
என்று நம்பிக்கையோடு கூறினான். நாம் ஆயிரம் நினைத்தாலும் நடக்கபோவதை தீர்மானிப்பது காலமும் நேரமும் தானே..!! அதை அவனும் உணரும் பொழுது வெகு தொலைவில் இல்லை.