ஆகாயம் 10:
ஆதித்யா ஷூட்டிங் கிளம்பி சென்று மூன்று நாட்கள் ஆகியிருந்தது. திருமணம் முடிந்ததும் தெரியவில்லை. அதற்கு அடுத்து நடந்த எதுவும் புரியவில்லை. எல்லாருக்கும் புரியாத புதிராய் இருக்க, அவன் எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக இருந்தான்.
கருணைநாதனும், அவனைப் பற்றி நெகட்டிவாக செய்தி பரப்ப நினைத்து நொந்து கொண்டது தான் மிச்சம்.
‘திருமணம் முடிந்த கையேடு ஷூட்டிங் கிளம்பிய பிரபல நடிகர்… வேலையில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு, தொழிலில் அவருக்கு இருக்கும் பக்தியே இதற்கு காரணம்..’ என்று அவனைப் பற்றிய நல்ல விஷயங்கள் மட்டுமே அதிகமாக பரவிக் கொண்டிருந்தது.
இருந்தாலும் சில பத்திரிக்கைகள் அவனின் சொந்த வாழ்க்கையை அலசி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன. அவனின் அனுமதியின்றி அவனின் படுக்கையறையை எட்டிப் பார்ப்பதைப் போல், சில விஷயங்களை அவர்கள் செய்திகளாக வெளியிட்டுக் கொண்டிருக்க, மீடியா உலகில், இதெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்பதைப் போல, அனைத்தையும் கண்டு கொள்ளாமல், ஷூட்டிங்கில் நடிக்கும் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
எல்லா வேலைகளுக்கும் இடையில் அடம்பிடித்து வந்து போகும் துவாரகியின் நினைவு அவனை போட்டு படுத்தி எடுத்தாலும், எக்காரணம் கொண்டும் அதை வெளியே காட்டிவிடக் கூடாது என்பது தான் அவனின் எண்ணம்.
ஆதியின் அந்த மனப் போராட்டம் கவினுக்கு நன்றாக தெரிந்திருந்தது. இத்தனை வருடங்கள் உடனிருப்பவன், அவனுக்குத் தெரியாதா ஆதியைப் பற்றி..?
இந்த மூன்று நாட்களில் துவாரகியாக அவனுக்கு போன் செய்து பேசவில்லை. ஆதியும் அவளிடம் பேச முயற்சி செய்யவில்லை.
அன்று சம்பத் பேசியது ஆதிக்கு ஒரு விதமான சந்தேகத்தை தூண்டி விட்டிருந்தது. சந்தேகப்படுவது அவனின் இயற்கையான குணம் இல்லை. ஆனால் நடக்கும் விஷயங்களைப் பார்த்து சந்தேகப்படாமல் இருந்தால், அவன் சராசரி மனிதாக இருக்க முடியாதே.
மனதிற்குள் தோன்றிய சில விஷயங்களை அவன் தெளிவுபடுத்திக் கொள்ள, கொஞ்சம் கால அவகாசம் அவனுக்குத் தேவைப்பட்டது. அதனால் தான் இவ்வளவு பொறுமையாக இருக்கிறான் ஆதி.
ஆதி ஷூட்டிங் கிளம்பி சென்று விட்டதால், அவனும் இல்லாமல்.. வீட்டிற்கு வந்த மருமகளும் வீட்டில் இல்லாமல், கேட்கும் அனைவருக்கும் பதில் சொல்ல திணறிக் கொண்டிருந்தனர் பார்கவியும்- சேது ராமனும்.
“நீ ஹாஸ்ப்பிட்டல் போகனுமா பார்கவி..?” என்றார் சேதுராமன்.
“நான் இனி அங்க போறதா இல்லைங்க. துவாரகி இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவேயில்லை. அவளை ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா, இப்படி கழுத்தை அருப்பான்னு எனக்குத் தெரியாம போய்டுச்சு..” என்றார் பார்கவி.
“அந்த பொண்ணுக்கு அங்க என்ன பிரச்சனையோ..? நமக்கு என்ன தெரியும். எதுவுமே தெரியாம நம்மளா ஒரு முடிவுக்கு வரக்கூடாது பார்கவி..” என்றார் சேது.
“நீங்க சொல்றது எல்லாம் சரிந்தாங்க. ஆனா, என்ன பிரச்சனையா இருந்தாலும் அவ என்ன பண்ணியிருக்கணும்? ஆதி கூட கிளம்பி வந்திருக்கனுமா இல்லையா..? அப்படி மட்டும் அவ கிளம்பி வந்திருந்தா, இப்போ இவ்வளவு பேச்சும் வந்திருக்காது. ஆதி இங்க இல்லாதது எல்லாருக்கும் ரொம்ப வசதியா போய்டுச்சு. தினுசு தினுசா கதையை திரிக்கிறாங்க..” என்றார் பார்கவி.
“அதுக்குத்தான் சொல்றேன், நீ ஹாஸ்பிட்டல் போ பார்கவி. அப்பத்தான் துவா மனசுல என்ன இருக்குன்னு நாம தெரிஞ்சுக்க முடியும்..” என்றார்.
“என்னையும் மீறி அவளை ஏதாவது ஹார்ஷா பேசிடுவேனோன்னு எனக்கு பயமா இருக்குங்க. அதான் யோசனையா இருக்கு..” என்றார்.
“அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை..உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்..” என்று சேதுவின் வார்த்தைகள் பார்கவிக்கு கொஞ்சம் தெம்பாக இருந்தது.
ஒருவாரம் கடந்திருந்த நிலையில், ஆதித்ய வர்மாவைப் பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியிருந்தது. மக்களுக்கு அதை விட வேறு ஒரு சிறப்பான செய்தி கிடைத்து விட்டது போல. அதனால் ஆதி-துவாரகி பற்றிய செய்திகள் குறைந்து விட்டது. இதை கவின் மூலமாக அறிந்து கொண்ட ஆதிக்கு அப்படி ஒரு நிம்மதி. அவன் எதிர்பார்த்ததும் இதைத்தானே. திரையுலகில் அவன் கற்றுக் கொண்ட பாடம் இது தான். எந்த கான்ட்ரோவசியாக இருந்தாலும், அமைதியாக இருந்து விட்டால், ஒரு பத்து நாட்களில் அதுவே காணாமல் போய்விடும்.
“சார், ஷூட் இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சுடும் சார்..” என்றான் கவின்.
“டேரக்டர் சொன்னாரா..?” என்றான் ஆதி.
“ஆமா சார்..! மேக்சிமம் நாளைக்கே முடிஞ்சுடும் சார். டப்பிங் வேலை மட்டும் தான்.” என்றான் கவின்.
“சென்னை போக, பிளைட் டிக்கெட் புக் பண்ணியாச்சா…?” என்றான்.
“பண்ணிட்டேன் சார்..! நாளை மறுநாள் ஈவ்னிங் பிளைட் சார்..” என்றான் கவின்.
“ஓகே..!” என்றவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. ஹோட்டல் அறையில் தங்கியிருந்தவனுக்கு அன்று ஏனோ துவாரகியின் நினைவு அதிகமாக இருக்க, அன்று அவள் தூங்கும் போது எடுத்த போட்டோவை போனில் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இந்த முகத்துல எனக்கு எந்த கபடமும் தெரியலையே துவா. ஆனா, நீ செய்ற ஏதோ ஒன்னு, எங்கையோ இடிக்குது. அது என்னன்னு தான் தெரியலை..’ என்று அவள் போட்டோவுடன் பேசிக் கொண்டிருந்தான். பதில் சொல்ல, அவள் தான் அருகில் இல்லையே.
‘நான் தான் உன்னை நினைச்சுட்டு இருக்கேன். ஆனா, உனக்கு அந்த நினைப்பு இருக்குற மாதிரி கூட தெரியலையே..’ என்று பெருமூச்சு விட்டவனுக்கு அவளிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான் என்று தெரியவில்லை.
உருகிக் காதலித்து அவளை கரம் பிடிக்கவில்லை என்றாலும், அவளைப் பிடித்து தான் மனைவியாக்கிக் கொண்டான். ஆனால் எல்லாமே கனவு போல் ஒரே நாளில் கலைந்து விட்டது.
‘அவ போன் பண்ணலைன்னா என்ன..? நீ பேசு ஆதி..’ என்றது மனம்.
‘எல்லா நேரமும் நானே இறங்கிப் போனா, எனக்கான மதிப்பு எங்க..?’ என்றான், மனதிடம்.
‘பொண்டாட்டிகிட்ட மதிப்பு, மரியாதை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது ஆதி’ என்றது மனம்.
‘மதிப்பு, மரியாதை எதிர்பார்க்க வேண்டாம் சரி. ஆனா, காதலை எதிர்பார்க்கலாம் தானே. அட்லீஸ்ட் கொஞ்சம் கருணை..’ என்று பதில் சொன்னவனின் கைகள் அவனையும் மீறி, அவளுக்கு அழைத்திருக்க, அவளோ போனை எடுக்கவேயில்லை.
அவ்வளவு தான், வெறுத்துப் போய்விட்டான் ஆதித்ய வர்மா. அவனுடைய குணத்திற்கு கொஞ்சமும் பொருந்தாதபடி, அவன் இவ்வளவு பொறுமையாக இருப்பது எந்த சாமி புண்ணியமோ..?
அங்கே துவாரகியின் வீட்டில், அவள் யாரையும் கண்டு கொள்ளாமல் எப்போதும் போல் நடமாடிக் கொண்டிருந்தாள். வழக்கம் போல் ஹாஸ்ப்பிடல்.. அதை விட்டால் வீடு என்று அவளின் நாட்கள் சென்று கொண்டிருந்தது.
அவளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த கருணைநாதனுக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்தது.
“துவாரகி கிட்ட ஏதோ ஒரு வித்யாசம் தெரியற மாதிரி இருக்கே சசி..” என்றார் மகனிடம்.
“என்னப்பா சொல்றிங்க..? எனக்கு எதுவும் அப்படி தெரியலையே..? எப்பவும் போல தான் இருக்கா..” என்றான் சசி.
“உன்னோட விவரம் அவ்வளவு தான் சசி. என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாது..? நமக்கு பின்னாடி எதுவோ பண்ற மாதிரியே இருக்கு..” என்றார்.
“நம்ம துவா அப்படியெல்லாம் பண்ண மாட்டாப்பா. நடந்த விஷயத்துல அவ கொஞ்சம் அப்செட்டா இருக்குற மாதிரி தான் தெரியுது. மத்தபடி அவளுக்கு நம்ம மேல கொஞ்சம் கோபம் இருக்கலாம், அவ்வளவு தான்..” என்றான் சசி.
“இந்த ஆதியைப் பத்தி ஏதாவது தகவல் வந்ததா.. சசி..?” என்றார்.
“இத்தனை நாள் வெளியூர்ல ஷூட்டிங் போயிருந்தான். நாளைக்கு வந்துடுவான் போல தெரியுது.” என்றான்.
“வந்து துவாரகியை கூப்பிட வருவானோ..?” என்றார் சந்தேகமாய்.
“எனக்கு அப்படித் தோணலைப்பா..! அவனைப் பத்தி தான் நமக்கு நல்லாத் தெரியுமே. ஏற்கனவே அவன் கொஞ்சம் திமிர் பிடிச்சவன் தான். இப்போ, இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் நம்மளா தேடிப் போகணும்ன்னு தான் அவன் எதிர்பார்ப்பான்.” என்றான் சசி.
“அது இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு, பாவம் அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை..” என்ற கருணைநாதன்,
“எலக்சன் தேதி கூடிய சீக்கிரம் அறிவிச்சுடுவாங்க. அதுக்குள்ளே, அமைச்சரவையை கூட்டி, முக்கியமா பேச வேண்டியது எல்லாத்தையும் பேசி முடிவெடுத்திடனும்..” என்றார் கருணைநாதன்.
“நானும் சொல்லனும்ன்னு நினைச்சேன். துவாரகியை முதல்வர் வேட்பாளரா நிறுத்தினா, கட்சிக்குள்ள சலசலப்பு வராதாப்பா..? எனக்குத் தெரிஞ்சு கனகவேல் பிரச்சனை பண்ணுவார்ன்னு தோணுது..” என்றான் சசி.
“அப்படி கனகவேல் பிரச்சனை பண்ணினா, அவனை எங்க எப்படி லாக் பண்ணனும்ன்னு எனக்கு நல்லா தெரியும். நீ கவலையை விடு. இந்த தேர்தல்லயும் நம்ம தான் ஜெயிக்கிறோம். நம்ப கட்சியை அசைக்க முடியாத ஒரு இடத்துக்கு கொண்டு போறோம்..” என்றார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, துவாரகி வந்து விட,
“இப்பதான் வரியாடா..!” என்றார் கருணைநாதன்.
“ஆமாம்ப்பா..”என்றாள் அமைதியாக.
“என்னாச்சு துவா..? அப்பா மேல எதுவும் கோபமா..? ஏன் என்னவோ போல இருக்க..?” என்றார் தெரியாதவரைப் போல்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. எல்லாம் தெரிஞ்ச நீங்களே, எதுவும் தெரியாததைப் போல நடிக்கிறதைப் பார்த்தாத்தான் எனக்கு கஷ்ட்டமா இருக்கு..” என்றவள், நிற்காமல் அவள் அறைக்கு சென்று விட்டாள்.
“என்னப்பா துவா இப்படி பேசிட்டு போறா..?” என்றான் சசி.
“விடு சசி..! என்னதான் இருந்தாலும், கல்யாணம் ஆன பொண்ணு. அவளுக்கும் மனசுல எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். என் பொண்ணு இங்க அவனை நினைச்சு தவிச்சுகிட்டு இருக்கா, அவன் என்னடான்னா அங்க ஜாலியா ஷூட்டிங்ல இருக்கான். அவனுக்கு இருக்கு..” என்று கறுவிக் கொண்டார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அருணாவிற்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. செய்கிற தப்பையெல்லாம் செய்துவிட்டு, எதிரில் இருப்பவர்களின் தப்பை மட்டுமே பார்க்கும் மனிதர்கள் நிறைந்த உலகம் தானே இது. அவரின் முகத்தில் இருந்த வேதனையை பூமிகாவால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவளும் சசிதரனிடம் பேசிப் பார்த்து விட்டாள். ஆனால், அவன் எதையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை என்பது தான் உண்மை.
அறைக்குள் சென்ற துவாரகிக்கு அழுகையாக வந்தது. அதற்கு காரணம் இன்று ஹாஸ்பிட்டலில் பார்கவி நடந்து கொண்ட முறைதான்.
எப்போதும் அவளிடம் சிரித்த முகமாய் இருக்கும் பார்கவி அன்று அவளிடம் பேசவேயில்லை. ஒரு சீனியர் டாக்டர் என்ற முறையில் அவரிடம் இருக்கும் அந்த இலகுத் தன்மை அன்று ஏனோ முற்றிலும் தொலைந்து விட்டதைப் போல் உணர்ந்தாள் துவாரகி.
அவரிடம் பேச ஆசையாக சென்றவளுக்கு, கிடைத்தது என்னவோ அவரின் இறுகிப் போன முக உணர்வு மட்டுமே.
இத்தனை நாட்கள் வராமல் இருந்தவர், வந்த உடனேயே அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால், அவர் அப்படி நடந்து கொள்வார் என்று நினைக்கவில்லை. என்னதான் துவாரகி அந்த ஹாஸ்பிட்டல் ஓனர் என்றாலும், பார்கவியிடம் எப்போதும் அப்படி நடந்து கொள்ள மாட்டாள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவரையே வற்புறுத்தி தான், அங்கு வேலைக்கு அழைத்து வந்திருந்தனர். அதனால் எப்போதும் அவருக்கு உரிய மரியாதை அங்கு தனித்துவம் தான்.
டாக்டராக அவளிடம் பேசிய பார்கவி, மாமியாராக பேசாதது தான் அவளுடைய வேதனைக்கு காரணம். ஏனோ அவரைப் பார்த்தவளுக்கு, நீண்ட நாட்கள் கழித்து ஆதித்ய வர்மாவையே பார்த்தது போல் இருந்தது.
‘அன்னைக்கு அவன் போன் பண்ணும் போதும் பேசலை. நீயாவும் கூப்பிட்டு பேசலை. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற..?’ என்ற மனதிற்கு பதில் சொல்ல, அவளிடம் வார்த்தைகள் இல்லை.
கனகவேல் வீடு…
“என்னப்பா நடக்குது இங்க..? துவாரகி இன்னும் கருணைநாதன் அங்கிள் வீட்டுல தான் இருக்கா போல..” என்று திவ்யா கேட்க,
“அது தான் எனக்கும் புரியலை திவ்யா. என்ன காரணமா இருக்கும்..? கல்யாணம் முடிஞ்ச கையோட பொண்ணை புருஷன் கூட அனுப்பி வைக்காம, எதுக்காக வீட்டோட வச்சிருக்கணும்..?” என்றார்.
“அதான், ஒவ்வொரு மீடியாவும் ஒவ்வொரு கதை சொல்லுதே. ஆனா, எது உண்மைன்னு தான் தெரியலை..” என்றாள்.
“எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு திவ்யா. தலைவரு விஷயம் இல்லாம எதையுமே செய்ய மாட்டாரு. வரப் போற தேர்தல்ல, அவருக்கு பதிலா, முதல்வர் வேட்பாளரா துவாரகி பொண்ணை நிறுத்தப் போறதா, கட்சிக்குள்ள பேசிக்கிறாங்க. இன்னைக்கு அமைச்சர்கள் எல்லாத்தையும் சந்திக்க ஏற்பாடு பண்ணியிருக்கார். எப்படியும் விஷயம் இன்னைக்கு உறுதியாகிடும்..” என்றார்.
“துவாரகி, சிஎம் கேண்டிடேட்டா..?” என்ற திவ்யாவிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி.
“எதுக்குமா இப்படி அதிர்ச்சியாகுற..?” என்றார்.
“அப்பா, உங்களுக்கு விஷயம் புரியுதா இல்லையா. துவாரகி இந்த எலக்சன்ல நிக்கவே கூடாது. அப்படி மட்டும் நின்னுட்டா, கண்டிப்பா அவ ஜெயிச்சுடுவா..” என்றாள் திவ்யா.
“எதை வச்சு திவ்யா அப்படி சொல்ற..?”
“ஆதித்ய வர்மாவைப் பத்தித் தான் உங்களுக்கு தெரியுமே..! பொண்டாட்டியை ஜெயிக்க வைக்க அவன் என்ன வேணும்ன்னாலும் செய்வான்..” என்றாள்.
“நம்ம கட்சி ஜெயிச்சா நமக்கு நல்லது தான திவ்யா…” என்றார்.
“இப்படியே கட்சியை மட்டும் வளர்த்துகிட்டு இருந்தா போதுமாப்பா. அடுத்த எலக்சன்ல பார்த்துக்கலாம்ன்னு பொறுமையா இருக்கக் கூடாது. இன்னைக்கு அமைச்சரவையை கூட்டுறதே, கருத்து கேட்கவாத்தான் இருக்கும். இதுல பாதிப்பேர் மறுப்பு சொல்லணும். நீங்களும் உங்களோட மறுப்பை சொல்லணும்..” என்றாள்.
“அவசரப்படக் கூடாது திவ்யா..” என்றார்.
“நான் அவசரப்படலை..! ஆனா, ஆதித்ய வர்மா இந்த நேரத்துல ரொம்ப தெளிவா யோசிப்பான். அவன் யோசிக்கிறதுக்கு முன்னாடியே, கருணைநாதனுக்கும், அவனுக்கும் இடையில இருக்குற பிரச்சனையை பெரிசாக்கணும். பொண்டாட்டியாவே இருந்தாலும், அவளுக்கு அவனோட ஆதரவு கிடைக்க கூடாது. அந்த அளவுக்கு அவனுக்கு வெறுப்பை உண்டாக்கணும். சொல்லப் போனா, துவாரகி எலக்சன்ல நிக்குற விஷயத்தை அவன் விரும்பவே கூடாது..” என்றாள்.
“அவன் எந்த கட்சிக்கும் ஆதரவு தரலைன்னா..?” என்றார் கனகவேல்.
“சிம்பிள்ப்பா..! இந்த எலக்ஷன்ல கூட்டணியே இல்லாம நம்ம கட்சி ஜெயிக்கிறது கஷ்ட்டம். உங்க கட்சிக்கு இருக்குற ஒரே நம்பிக்கை ஆதி தான். அவனையும் ஆப் பண்ணிட்டா, உங்க தலைவர் கருணைநாதன் கூட்டணிக்கு ஆள் தேடுவார். அப்போ பார்த்து நீங்க பிரச்சனை பண்ணும். அப்போ, நீங்க டிமான்ட் பண்ற விஷயத்தை அவர் செஞ்சு தான் ஆகணும்..” என்றாள்.
“ஏற்கனவே நான் நல்ல பதிவில தான இருக்கேன். இதுக்கு மேல என்ன டிமான்ட் பண்றது..? முதலமைச்சர் பதிவிக்கு உடனே போய்ட முடியாது” என்றார்.
“சிம்பிள் துணை முதல்வர் போஸ்ட்டிங் கேளுங்க. வரப் போற ஐந்து வருஷத்துக்கு துணை முதல்வரா இருங்க. அடுத்த எலக்சன்ல முதல்வர் ஆகுறது எப்படின்னு அப்பறம் யோசிக்கலாம்..” என்றாள்.
“இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு…” என்றார்.
“வொர்க் அவுட் ஆகும்ப்பா..! அதுக்கு முதல்ல, தோத்துப் போய்டுவோம் அப்படின்ற என்னத்தை கருணைநாதன் மனசுல ஆழமா விதைக்கணும். என்ன செய்றதுன்னு புரியாத ஒரு சூழ்நிலையில, நீங்களும் பிரச்சனை பண்ணினா, அவருக்கு தோல்வி பயம் இன்னமும் அதிகம் வரும். ஏன்னா, ஜாதி ரீதியான ஓட்டுல, உங்க தொகுதியில அதிக ஒட்டு வித்யாசத்துல ஜெயிச்சவரு நீங்க தான். உங்களை அவர் பகைச்சுகிட்டா, என்ன நடக்கும்ன்னு அவருக்கே நல்லா தெரியும். இது தான் சரியான சந்தர்ப்பம். (Alprazolam) முதல்ல, துணை முதலமைச்சர், அடுத்து முதலமைச்சர்..எப்படிப்பா..?” என்றாள்.
“சரியா சொன்னம்மா..! இத்தனை நாள் இந்த விஷயம் எனக்குத் தெரியாம போய்டுச்சே..நான் வேற மாதிரி யோசிச்சுகிட்டு இருந்துட்டேன்” என்று அவர் வருத்தப்பட,
“விளங்கிடும்..! இப்படியே அப்பாவும், பொண்ணும் யார் கூட வம்பு வளர்க்குறதுன்னு பிளான் பண்ணிட்டே இருங்க. கடைசி வரைக்கும் திருந்துற எண்ணமே இல்லையா உங்களுக்கு..?” என்றார் ராதிகா.
“இவ ஒருத்தி..?” என்றவர், ராதிகாவை கண்டு கொள்ளாமல் செல்ல,
“வரவர நீங்க பேசுறது ஒன்னும் சரியில்ல மாம்..” என்றாள்.
“ஏன்டி சொல்ல மாட்ட..! இத்தனை நாள், துளசி-விஜய் வாழ்க்கையில குழப்பத்தை உண்டு பண்ணிட்டு இருந்த. அங்க அவங்ககிட்ட வாங்கினது பத்தாதுன்னு இப்போ இங்க வந்தும் உன்னோட வேலையை ஆரம்பிச்சுட்டு இருக்க..” என்றார் ராதிகா.
“மாம், அவங்களைப் பத்தி பேசாதிங்க. நானே மறக்கனும்ன்னு நினைக்கிற விஷயத்தை நியாபகப் படுத்தாதிங்க. யாரும் இங்க யோக்கியம் கிடையாது. அதனால எங்களை மட்டும் கெட்டவங்களா காட்டுறதை விட்டுட்டு, போய் வேலையை பாருங்க..” என்றவள் கடுப்புடன் சென்று விட்டாள்.
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த பேஷண்ட்டை பரிசோதித்துக் கொண்டிருந்தாள் துவாரகி. அடுத்து கொடுக்க வேண்டிய மருந்துகளை அவள் எழுதிக் கொண்டிருக்க,
“டாக்டர்..!” என்றபடி வந்து நின்றாள் அந்த நர்ஸ்.
“எஸ்..”
“உங்களைப் பார்க்க, ஆதி சார் வந்திருக்கார்..” என்றாள்.
அவள் சொன்ன செய்தியை அவளால் நம்ப முடியவில்லை. ஆதி வந்திருக்கிறானா..? ஆனால், அவன் ஊரில் இல்லை என்று கேள்விப் பட்டேனே..? என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டவள்,
“எங்க இருக்காங்க..?” என்றாள்.
“கெஸ்ட் விசிட்டர்ஸ் ரூம்ல இருக்காங்க டாக்டர்..” என்றாள்.
“ஓகே..! பார்த்துக்கோங்க..!” என்று அங்கிருந்து வெளியே வந்தவளுக்கு, எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிலும் கால்கள் பின்னிக் கொண்டது. அவனை எப்படி பார்ப்பது..? ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது..?” என்ற யோசனை வேறு மனதிற்குள்.
இருந்தாலும் ஆதி தேடி வந்ததை அவளால் நம்பவே முடியவில்லை. அவள் செய்ததற்கு எல்லாம் சேர்த்து வைத்து, அவள் இருக்கும் பக்கம் கூட வரமாட்டான் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால், அவள் நினைத்ததற்கு மாறாய் அவன் வந்திருப்பது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், ஒரு புறம் தயக்கமாகவும் இருந்தது. எவ்வளவு மெதுவாக நடந்தாலும், அவன் இருக்குமிடத்திற்கு சீக்கிரம் வந்துவிட்டதைப் போல் இருந்தது அவளுக்கு.
அவள் கதவைத் திறந்து உள்ளே வர, அங்கிருந்த மெகசீனை புரட்டிக் கொண்டிருந்த ஆதி, கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தான். உள்ளே வந்தவளின் விழிகளும், நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் இருக்க, பத்து, பதினைந்து நாட்கள் கழித்து பார்க்கும் போது, உள்ளுக்குள் தோன்றிய அனைத்து உணர்வுகளையும் கட்டுப் படுத்திக் கொண்டான் ஆதி.
எழுந்து சென்று அவளை அணைத்துக் கொள்ள தோன்றிய எண்ணங்களை அவன் வெகுவாய் வெறுத்தான். மனைவியின் முகம் முழுவதும் முத்தமிடத் தோன்றிய வேகத்தை அப்படியே மனதிற்குள் புதைத்தான்.
அவனைப் பார்த்தவுடன், அவளுக்கு பேச்சு சுத்தமாக வரவில்லை. அவள் அப்படியே நிற்க, அவனின் முழு உருவமும், அவள் கண்ணிற்குள் புதைந்து போனது. திரையில் ரசித்த ஒருவன், கணவனாக மாறிவிட்ட ஒருவன், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதிற்குள்ளும் அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருந்தான். இயல்பான ஆசைகள், அவள் மனதிற்குள் இயல்பாகவே குடியேறியிருக்க, தன்னைச் சுற்றி இருக்கும் வேலியை கடந்து வரத்தான் அவளால் முடியவில்லை.
“வாங்க ஆதி..” என்று வாயைத் திறந்தவளுக்கு காத்து தான் வந்தது. மீண்டும் ஒரு முறை அழைக்க போக, இந்த முறை பார்கவி முந்திக் கொண்டார்.
“வா ஆதி..” என்றபடி அவர் வர, துவாரகி தான் முழித்துக் கொண்டு நின்றாள்.
இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் சரியாக வராது என்று நினைத்தவள்,
“என்ன விஷயமா பார்க்க வந்திங்க..?” என்றாள்.
அவளின் கண்களை ஊடுருவிப் பார்த்தவன்,
“நான் உங்களை பார்க்க வரலை டாக்டர். துவாரகி கருணைநாதன். நான் என்னோட அம்மாவை பார்க்க வந்தேன்..” என்றான் நிமிர்ந்து நின்றபடி.
‘என்னைய பார்க்க வரலைன்னா..நர்ஸ்கிட்ட ஏன் சொல்லி விடணும்..?’ என்று மனதிற்குள் நினைத்தவள் குழம்பிப் போனாள்.
“என்ன விஷயம் ஆதி..?” என்றார் பார்கவி.
“ஒண்ணுமில்லை மாம்..! ஈவ்னிங் கொஞ்சம் அவுட்டிங் போய்ட்டு வரலாம்ன்னு பிளான். அப்பா, நீங்க, நான்..” என்றான்.
“என்ன திடீர்ன்னு..?” என்றார் பார்கவி.
“கூட்டிட்டு சுத்துறதுக்கு எனக்கென்ன பொண்டாட்டியா..? பிள்ளையா…? நீங்க தானம்மா இருக்கீங்க. மனசுக்கு என்னவோ மாதிரி இருக்கு. கொஞ்சம் அவுட்டிங் போயிட்டு வந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு…” என்றான் தோள்களை குலுக்கியபடி.
அவன் சொன்ன தோரணையில் பார்கவிக்கு சிரிப்பு வர, அடக்கிக் கொண்டார்.
“போன் பண்ணியிருந்தா, நானே வந்திருப்பேன் ஆதி. இனி இங்க எல்லாம் வராத.” என்றார்.
“நீங்க சொன்னா சரிதான்மா..! கிளம்பலாமா..?” என்றான்.
“பைவ் மினிட்ஸ் ஆதி..! வந்திடுறேன்..” என்றவர் சென்று விட, இறுகிய முகத்துடன் நின்றிருந்தாள் துவாரகி.
மீண்டும் அமர்ந்து அந்த மெகசீனை அவன் புரட்டிக் கொண்டிருக்க, அங்கே தான் தேவையில்லாமல் நிற்பதை போன்று தோன்றியது அவளுக்கு. இனி நிற்பது சரிவராது என்று எண்ணியவள், அங்கிருந்து செல்ல முற்பட,
“மிஸ். துவாரகி கருணைநாதன்..” என்றான் ஆதி.
“சாரி.. நான் மிஸ்ஸஸ். துவாரகி ஆதித்ய வர்மா..!” என்றவள், அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..!” என்று சொல்லிக் கொண்டவன், நீண்ட நாட்கள் கழித்து மனைவியைப் பார்த்த மகிழ்ச்சியில், அவன் மனம் லேசாவதைப் போல் உணர்ந்தான்.
வெகு சீக்கிரம் மனம் உடையப் போவதை அறியாமல்…!