ஆகாயம் 9:
ஆதியின் கோபம் எல்லைமீறத் துடித்துக் கொண்டிருந்தது. துவாரகி என்ன செய்வதென்று புரியாமல், திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அசையாமல் நிற்பதை பார்த்த கருணைநாதனுக்கு அப்படி வெற்றி களிப்பு முகத்தில்.
சோபாவைப் பிடித்திருந்த துவாரகியின் கைகள் இறுகியிருக்க, தான் நினைத்ததை செய்ய முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு அவள் நிலை புரிந்ததோ என்னவோ..?
“உங்கப்பாவை மாதிரி கட்டாயப்படுத்த நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. ஆனா, கல்யாணம் முடிஞ்ச உடனே, என்னோட வீட்ல வந்து நீ விளக்கேத்தியிருக்கணும். அது முறையும் கூட. என்னதான் வசதி வாய்ப்புன்னு இருந்தாலும், முறைன்னு ஒன்னு இருக்கு. ஆனா உங்கப்பா, விட்டா.. என்னை உங்க வீட்ல விளக்கேத்த சொல்லுவார் போல. இப்பவும் பொறுமையா தான் சொல்றேன். உன்னோட முடிவை சொல்லு..” என்றான் வரவழைத்துக் கொண்ட நிதானத்துடன்.
அவன் அப்படி பேசும் போது, தனக்குள் எதுவோ உடைந்து போவதைப் போல் உணர்ந்தாள் துவாரகி. ஆனால், உடைந்து அழும் நேரம் அதுவல்ல என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தானே, அவள் முன்பே திருமணத்தை நிறுத்த சொன்னாள். ஆனால் எல்லாவற்றையும் மீறி, தன்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கும் விதியை நினைத்து மீண்டும் ஒரு முறை நொந்து கொண்டாள்.
“அமைதியா இருந்தா என்ன அர்த்தம் துவாரகி..?” என்றான் கோபமாய்.
“ஆதி பிளீஸ்..! ஒரு பத்து நாள் எனக்காக இங்க இருங்களேன்..” என்றாள்.
“வாட் யு மீன்..? நீ தெரிஞ்சுதான் பேசுறியா..? இல்ல, கொஞ்சம் பொறுமையா பேசுனதும், என்னை லூசுப் பயன்னு முடிவு பண்ணிட்டியா..?” என்றான் ஆதித்யா கோபமாக.
“அப்படியெல்லாம் இல்லை ஆதி. அப்பா சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்..” என்றாள்.
“மண்ணாங்கட்டி அர்த்தம்..! குடும்பமே என்னை வச்சு விளையாடனும்ன்னு பார்க்குறிங்க..? உனக்கு புத்தி இருக்கும்ன்னு நினைச்சது என்னோட முட்டாள் தனம். இதுக்காக நீ ஒரு நாள் வருத்தப்படுவ..” என்றான் ஆதி.
“என் கண்ணுமுன்னாடியே என் பொண்ணை திட்டுற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க தம்பி..” என்றார் கருணைநாதன்.
“அவ்வளவு பாசம் இருக்குறவர், உங்க பொண்ணாவே வீட்ல வச்சிருக்க வேண்டியது தானே..? எதுக்காக எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இதுவரைக்கும் எத்தனையோ வகையில என்கூட மோதியிருக்க. அதைக் கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா, பெத்த பொண்ணை பகடைக் காயா வச்சு என்னை மடக்கனும்ன்னு நினைக்கிற உன்னோட கீழ்த்தரமான புத்தி அவ்வளவு கேவலமா இருக்கு. இதையெல்லாம் கேட்டுட்டு, அமைதியா இருக்குற உன் பொண்ணை பார்க்கவே எனக்குப் பிடிக்கலை..” என்றவன், துவாரகியிடம் திரும்பி,
“லாஸ்ட் டைம் கேட்குறேன்.. வர முடியுமா? முடியாதா..? ஆதித்யாவோட மனைவியா வரதுன்னா வா. இல்லையா, கருணைநாதனுக்கு மகளா, இங்கயே இரு..” என்றவன் இரண்டு நிமிடம் அவளையே பார்க்க, அவளோ அசையாமல் இருந்தாள்.
“இனி பேசுறதுக்கு ஒண்ணுமில்லை…குட் பாய்..” என்றவன் திரும்பி செல்ல முற்பட்டான்.
“திருமணம் முடிந்த மறுநாளே, பிரபல நடிகரின் மனைவி அவரை விட்டு பிரிந்தார்..” அப்படின்னு நாளைக்கு எல்லா மீடியாவும் நியூஸ் போடுவாங்க. துவாரகி என்னோட பொண்ணு. அவளைப் பத்தி எந்த அவதூறும் வெளிய வராது. எல்லா தப்பும் உன்மேல தான்னு நாளைக்கு உலகமே பேசும். இப்போதைக்கு, உன்னோட மார்கெட் கொஞ்சம் குறைஞ்சாலும் அது எனக்கு கிடைத்த வெற்றி. இதெல்லாம் தேவையா ஆதி..? பேசாம, மாமனார் சொல்றதை கேட்டு, வீட்டோட இருந்தா, நீ இன்னமும் உச்சத்துக்கு போவ. நானும் ஆட்சியைப் பிடிப்பேன். என்ன பண்றது..? லூசுப் பயலுக எல்லாம், நடிகனான உங்களைத் தான அதிகம் நம்பறாங்க..!” என்றவர், சிரித்துக் கொண்டார்.
“யோவ்..! மகளை வச்சு ஆட்சியைப் பிடிக்க நினைக்குற நீயெல்லாம் மனுஷனே கிடையாது. உன்னை மாதிரியே என் பொண்டாட்டியை வச்சு காரியம் சாதிக்கிற அளவுக்கு நானும் ஈனப் பிறவி கிடையாது. அதுக்கு பேரு வேற. என்ன..? அவளை எனக்கு கல்யாணம் பண்ணி குடுத்துட்ட..? இல்லைன்னா மத்தவனுக்கும் உனக்கும் எந்த வித்யாசமும் இருந்திருக்காது. நீயெல்லாம் முதலமைச்சர்ன்னு வெளிய சொல்லிக்காத, அதை விட அவமானம் வேற எதுவுமே இல்லை.
“ஆதி..!!” என்று துவாரகி கத்தியே விட்டாள்.
“என்கிட்டே கத்தி ஒரு பிரயோஜனமும் இல்லை. இவ்வளவு நேரம் இந்த ஆளு பேசுறதை கேட்டு அமைதியா தான இருந்திங்க டாக்டர் மேடம். இப்ப மட்டும் என்ன கோபம் வருது உங்களுக்கு..?” என்றான் அவளிடம் கடுமையாக.
“மீடியா என்ன எழுதுனாலும் பரவாயில்லை. அதை எப்படி சமாளிக்கனும்ன்னு எனக்குத் தெரியும்…” கருணைநாதனிடம் சொன்னவன்,
“கல்யாணம் முடிஞ்ச மறுநாள் ஒரு பொண்டாட்டி புருஷனை விட்டு போறான்னு சொன்னா, ரெண்டு விஷயம் தான். ஒன்னு உன்னோட மனசுல வேற யாரோ இருக்கணும், இல்லைன்னா, நான் ஆம்பளையே இல்லாம இருக்கணும். எனக்குத் தெரிஞ்சு முதல் விஷயத்தை பத்தி யாரும் பேச மாட்டாங்க. இரண்டாவது விஷயத்தை பேசணும் அப்படின்றது தான் உங்கப்பாவோட யுக்தியே. எனக்கு ரொம்ப நல்ல பேரு வாங்கிக் குடுத்துட்ட. இது சின்ன பிரச்சனை மாதிரி உனக்குத் தெரியும். நாளைக்கு பாரு, இதோட விளைவு எப்படி இருக்குன்னு..” என்று துவாரகியிடம் சொன்னவனுக்கு, கண்கள் லேசாக கலங்கியதோ என்னவோ..? ஆனால், அவனுடைய நிமிர்வு மாறாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
“அப்பா, என்னப்பா கிளம்பிட்டான்..? அவன் போக மாட்டான்னு சொன்னிங்க..?” என்றான் சசிதரன்.
“எனக்கும் அது தான் சசி. எப்படியும் இவன் நம்ம வழிக்கு வருவான்னு நினைச்சேன். ஆனா, அசரவே மாட்டேங்குறானே..?” என்றார் கருணைநாதன்.
“அப்பா, பாதிக்கப்படுறது துவாரகியும் தான். நம்ம வீட்டு மானமும் தான் போகும். நேத்து அவ்வளவு ஆடம்பரமா கல்யாணத்தை பண்ணிட்டு, இன்னைக்கு இப்படி தனியா நின்னா, அவ மனசு என்ன பாடுபடும். எப்படி இருந்தாலும் அவன் தயவு நமக்குத் தேவை தான். அவனை நிறுத்துங்கப்பா..” என்றான் சசி.
“என்ன சசி பேசுற..? அவனுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கா பாரு. இல்ல, மாமனாருன்னு மரியாதையாவது இருக்கான்னு பாரு.. அவன்கிட்ட நான் வழிய போகனுமா..?” என்றார் கோபமாய்.
“அப்பா, நல்லவனுக்கு ரோஷம் வர்றதுல தப்பில்லை. நமக்கு அதெல்லாம் வரவே கூடாது. அதுலயும் இந்த நேரத்துல வந்துடவே கூடாது..” என்றான் சசி.
“அப்படிங்கிற..?”
“ஆமா..! நாம இன்னைக்கே இந்த விஷயத்தை பத்தி பேசியிருக்கக் கூடாது. ஒருவாரம் போக விட்டிருக்கலாம்..” என்றான்.
“இப்ப என்ன பண்றது..?” என்றார்.
“நான் இதை மேனேஜ் பண்றேன்..” என்றவன், வேகமாய் வெளியே ஓடினான்.
“மாப்பிள்ளை நில்லுங்க..! ஆதி..” என்று அவன் வெளியே ஓட, நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துவாரகி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
சசியின் அழைப்பு காதிலேயே விழாதவாறு, காரை எடுத்துக் கொண்டு வேகமாய் சென்று விட்டான் ஆதித்ய வர்மா.
“அப்பா அவன் போய்ட்டான்..” என்றான் சசி.
“நான் தான் சொன்னேன்ல.. அவனுக்கு திமிர் ரொம்ப அதிகம். எங்க போய்டுவான், நம்ம குடுக்குற மென்டல் டார்ச்சர்ல திரும்பி நம்ம கால்ல தான் வந்து விழுந்தாகனும்.” என்றார் கருணைநாதன்.
“சபாஷ்..! ஆதி சொல்லிட்டு போன மாதிரி, வீட்டுப் பொம்பளைங்களை கூட்டிக் குடுத்து பிழைக்கிறவங்களுக்கும், உங்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. அப்படியென்ன பதவி ஆசை. ஆடி, அடங்குனா ஆறடி குழி தான் மிச்சமாகும். அப்போ கூட, ‘ஐயோ செத்துட்டாரே’ அப்படின்னு தான் எல்லாரும் கவலைப் படனும். ‘அப்பாடா செத்துட்டான்’ அப்படின்னு யாரும் நினைக்கக் கூடாது…” என்று கத்தி தள்ளிவிட்டாள் துவாரகி.
“துவாரகி..! என்ன பேச்சு பேசுற..? இவ்வளவு நேரம் அமைதியா தான இருந்த. அப்பா எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்ன்னு சொன்ன..” என்றான் சசி.
“உண்மைதான்..! அதுல ஒரு காரணம் இருக்கும் தான். ஆனா, அது சுயநலமான ஒரு காரணமாத்தான் இருக்கும். என்னை வச்சு ஆதியை மடக்கனும்ன்னு நீங்க நினைச்சிங்க. ஆனா, அவன்.. பொண்டாட்டியை ஆட்டத்துலையே இழுக்க மாட்டேன்னு சொல்லாம சொல்லிட்டு போய்ட்டான். அவன் மனுஷன்..” என்றாள் துவாரகி.
“அப்போ, அவன் கூப்பிட்டப்பவே அவன் கூட போயிருக்க வேண்டியது தான..?” என்றான் சசி.
“எதுக்கு..?ஒரு நாள்லயே நீங்க இந்த ஆட்டம் ஆடுறிங்க. நான் ஆதி பின்னால போய், அவருக்கு ஆசை மனைவியா குடும்பம் நடத்திட்டா, உங்க ஆட்டம் இன்னும் அதிகமாயிடாது. அப்படி நடக்க நான் விடவே மாட்டேன். மீடியாவுல ஏதாவது செய்தி தப்பா வந்தது, அப்பறம் ஆட்டத்துல வச்சு விளையாட நான் இருக்க மாட்டேன். பெண்களை வச்சு ஆட்டம் ஆடி, யாரும் ஜெயிச்சதா வரலாறு இல்லை..” என்றவள் அந்த இடத்தில் அடுத்த நிமிடம் இல்லை.
“என்னப்பா..? இப்படி பேசிட்டு போறா..?” என்றான் சசிதரன்.
“என் பொண்ணு என்னமா பேசுறா..? உனக்கு பதிலா அவளுக்கு அரசியல்ல இடம் குடுத்திருந்தா, வாய்ப்பு பிரகாசமா இருந்திருக்கும்..” என்றார் கருணைநாதன்.
“அப்பா, நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க..?” என்றான் சசி.
“டேய்..! என்னைய என்ன உன்னை மாதிரி சின்னப் பையன்னு நினைச்சியா..? காரண காரியமில்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்னு உனக்குத் தெரியாது..” என்றார்.
“என்ன தான் செய்யப் போறீங்க..?” என்றான் சசி.
“அன்னைக்கு ஜோசியர் என்ன சொன்னார்..?” என்றார் கருணைநாதன்.
“ஒரு நடிகனும், அவனை சார்ந்தவங்களும் தான் அடுத்த எலக்சன்ல ஜெயிப்பாங்கன்னு சொன்னார்..” என்றான் சசி. ஆனாலும் அவனுக்குப் புரியவில்லை.
“இப்போதைக்கு ஆதித்ய வர்மா அரசியலுக்கு வரணும்ன்னு தான் முக்கால்வாசி மக்கள் கோஷம் போடுறாங்க. அவன் இப்போ நமக்கு உறவு..” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்,
“கண்டிப்பா நமக்கு அவன் ஆதரவு தர மாட்டான்..” என்றான் சசி.
“நமக்கு அவன் ஆதரவு தர வேண்டாம். நம்மளை அவனுக்குப் பிடிக்காது. ஆனா, துவாரகிக்கு அவன் ஆதரவு தந்து தான ஆகணும். ஏன்னா, துவாரகி அவனுக்கு மனைவி. அதுலயும் ரொம்ப பிடிச்ச மனைவி வேற..?” என்றார் தீவிரமான முகத்துடன்.
“என்னப்பா சொல்றிங்க..?” என்ற சசி அதிர்ந்து விட்டான்.
“வரப்போற எலக்சன்ல முதல்வர் வேட்பாளர் நம்ம துவாரகி தான். பிடிச்சாலும், பிடிக்காவிட்டாலும் அவன் துவாவை ஆதரிச்சு தான் ஆகணும்…” என்றார்.
“என்னப்பா சொல்றிங்க..? அதெப்படி முடியும்..? துவாரகி சட்டமன்ற உறுப்பினர் பதவில கூட இல்லை. ஒரு சிஎம் கேண்டிடேட், அடிப்படை உறுப்பினர் பதவில கூட இல்லைன்னா எப்படி..?” என்றான் புரியாமல்.
“சட்டமன்ற உறுப்பினரா இல்லன்னாலும், முதலமைச்சராகி ஆறு மாசத்துக்குள்ள, உறுப்பினரா தேர்ந்தெடுத்தா போதும் தான்..! கண்டிப்பா அடுத்த எலக்சன்ல துவராகியை தான் நிறுத்த போறேன்…” என்றார் உறுதியாக.
“இதெல்லாம் சரியா வருமா..?” என்றான் சசி.
“இதுனால நமக்கு ரெண்டு விஷயம் நடக்கும். ஒன்னு, துவாரகி ஜெயிக்க அவனே சப்போர்ட் பண்ணுவான். ரெண்டாவது, அவன் தேர்தல்ல நிக்கணும்ன்னு யோசிக்கக் கூட மாட்டான். எதிர்க்கட்சிக்கு ஆதரவு தருவானோன்னு நாமளும் பயந்துகிட்டே இருக்கத் தேவையில்லை..” என்றார் கருணைநாதன்.
“ஒருவேளை துவாரகி ஜெயிச்சு, நம்ம சொல்றதை கேட்காம போயிட்டா..?” என்றான் சசி.
“துவா அப்படி செய்ய மாட்டா. அப்படியே செஞ்சாலும் அப்போ என்ன பண்ணனும்ன்னு எனக்கு நல்லா தெரியும். எல்லா பிளானும் பக்காவா இருக்கு..” என்றார் கருணைநாதன்.
“என்னப்பா? உங்களுக்கு அப்பறம் நான் பதவியில இருப்பேன்னு பார்த்தா, நீங்க துவாரகியை அந்த இடத்துல வச்சுப் பார்க்க ஆசைப்படுறிங்க..?” என்று குறைபட்டுக் கொண்டான் சசி.
“இப்போ நம்ம கட்சி இருக்குற நிலைமைக்கு, நாம ஜெயிக்கிறது ரொம்ப கஷ்ட்டம். நான் சொன்ன யுக்தி படி போனா தான், ஆட்சியை பிடிக்க முடியும். இதுல நீயா, நானான்னு பார்க்க நேரமில்லை. முதல்ல துவா ஜெயிக்கட்டும். அதுக்கப்பறம் அவகிட்ட இருந்து பதவியை மட்டும் நம்ம வாங்கிட்டு, அவளை புருஷனோட அனுப்பி வைப்போம்..” என்றார் கருணைநாதன்.
“என்னப்பா சொல்றிங்க..? அதுவரைக்கும் துவாரகி இங்க நம்ம வீட்ல இருக்குறதா..? இதனால ஆதித்யாவுக்கு கோபம் கூடுமே தவிர குறையாது..” என்றான் சசி.
“எனக்கும் தெரியுது. ஆனா, துவாவை அங்க அனுப்பிட்டா, நம்ம இஷ்ட்டத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது. துவா நம்ம கைல இருக்குற வரைக்கும் தான், நம்ம நினைச்சதை நடத்திக்க முடியும்..” என்றார்.
“கோபமா இருக்குற ஆதி, எப்படி துவாவுக்கு ஆதரவு தருவான்..?” என்றான் சசி.
“அங்க தான் நீ தப்பா யோசிக்கிற. இயல்பாவே அவன் நல்லவன். கோபத்துல கூட பொண்டாட்டியை இடையில இழுக்காம தான் பேசிட்டு போனான். அதே மாதிரி துவா கூட பேசாம இருந்தாலும், அவளுக்கு எதிரா அவனால ஒன்னும் செய்ய முடியாது. இந்த நல்லவங்களோட மைனசே இது தான்..” என்றார் கருணைநாதன்.
“சரியா வருமாப்பா..”
“கண்டிப்பா சரியா வரும். இத்தனை நாள் நமக்கு குடைச்சல் குடுத்தவன், நம்ம வீட்டு மாப்பிள்ளையா ஆகலையா..? அதே மாதிரி தான் இதுவும்..” என்ற கருணைநாதனின் கண்களில் அரசியல் ஆட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருணாவுக்கு, தலையே சுத்திவிடும் போல் இருந்தது. அவர் நினைத்தது போல், மகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அவளுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. சுயலாபத்திற்காக நடந்த திருமணம் தான் இது..” என்று நினைத்தவருக்கு, கண்ணீர் விடுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
ஆதித்ய வர்மாவின் வீடு:
மகனையும், மருமகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சேதுராமன்,பார்கவிக்கு மகன் தனியே வந்ததை பார்க்கவும் மனதிற்குள் நெருடலாக இருந்தது.
“துவாரகி எங்கப்பா..?” என்றார் பார்கவி.
“அவங்க அப்பா வீட்ல தான் இருக்காங்க டாக்டர் மேடம்..” என்றான் ஆதித்யா.
“அவளை விட்டுட்டு நீ மட்டும் எதுக்கு ஆதி வந்த. துவாவையும் கூப்பிட்டுட்டு வந்திருக்க வேண்டியது தானே…கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவ அங்க இருந்தா, நல்லாவா இருக்கும்..?” என்றார் பார்கவி.
“கல்யாணம் முடிஞ்ச உடனே பொண்ணுங்க புருஷன் கூட உடனே வந்துடனுமா என்ன..? அவளுக்கும் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கும். மேரேஜ் வேகமா நடந்திருச்சு. அவளுக்கும் கொஞ்சம் டைம் குடுக்கணும் தான..” என்றான் சுவரைப் பார்த்துக் கொண்டு.
“என்ன பேசுற ஆதி..? கமிட்மெண்ட்ஸ்க்கும் இங்க வரதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..? நம்ம சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றது..?” என்றார் பார்கவி.
“எதையாவது சொல்லுங்க..! நானா கேட்டேன் கல்யாணம். நீங்க பார்த்து முடிவு பண்ணது தானே..” என்று சட்டென்று கோபப்பட்டு பேசிவிட்டான் ஆதி.
“என்ன ஆதி..? இப்படி பேசுற..? அங்க ஏதும் பிரச்சனையா..?” என்றார் சேது.
“வழக்கம் போல், மிஸ்டர். சிஎம் தான்..” என்றான்.
“நீ துவாரகியை கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே..?” என்றார் பார்கவி.
‘என்னவென்று அவன் சொல்லுவான்..? அவன் கூப்பிட்டு அவள் வராத கதையை சொல்லுவானா.? இல்லை, அவ்வளவு பேச்சிற்கும் அவள் மவுனமாய் நின்றதை சொல்வானா..? அப்படி சொன்னால், துவாரகியைப் பற்றிய அவர்களின் எண்ணம் மாறிப் போகுமே..?’ என்று மனதிற்குள் நினைத்தவன்,
“கொஞ்ச நாளைக்கு நான்தான் அவளை அங்க இருக்க சொல்லிட்டு வந்திருக்கேன். எனக்கு வெளியூர் ஷூட்டிங் இருக்கு. கால்ஷீட்டை கேன்சல் பண்ண முடியாது. என் ஒருத்தனால எல்லாரோட வேலையும் பாதிக்கப்படுறதை நான் விரும்பலை…” என்றான் இயந்திர கதியில்.
“பெரிய பிரச்சனை இல்லைல ஆதி..? நான் வேணும்ன்னா துவாகிட்ட பேசவா..?” என்றார் பார்கவி.
“நீங்க பீல் பண்ற அளவுக்கு பிரச்சனை இல்லம்மா..! தினமும் ஹாஸ்பிட்டல்ல பார்த்துக்க தான் போறீங்க..? அப்பறம் ஏன் இவ்வளவு பீல் பண்றிங்க..? ப்ரீயா விடுங்க…” என்றவன், அவனுடைய அறைக்கு சென்று விட்டான்.
“என்னங்க ஆதி இப்படி சொல்லிட்டு போறான்..?” என்று பார்கவி மனசு தாங்காமல் சேதுவிடம் முறையிட,
“அவன் முகத்தை வச்சே உனக்குப் புரியலையா பார்கவி. அங்க என்னமோ நடந்திருக்கு..! அதை நம்மகிட்ட சொல்லாம மறைக்கிறான். அதே நேரத்துல துவாரகியைப் பத்தி நாம தப்பா நினைச்சிடக் கூடாதுன்னு நினைக்கிறான்.” என்றார சேதுராமன் சரியாக.
“இப்ப என்ன பண்றது..?” என்றார் பார்கவி.
“இதெல்லாம் நம்ம எதிர்பார்த்தது தான..? என்ன உடனே நடக்கும்ன்னு நினைக்கலை. விடு, ஆதி எல்லாத்தையும் பார்த்துப்பான்.” என்ற சேதுவிடம்,
“இருந்தாலும், துவா இன்னைக்கு வந்துடுவான்னு நான் ரொம்ப ஆசையா இருந்தேங்க..” என்றார் பார்கவி.
“கூடிய சீக்கிரம் வந்திடுவா..!” என்றார் சேதுவும் நம்பிக்கையாக.
அறைக்குள் சென்ற ஆதித்யாவிற்கு, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த கோபமும், உணர்வுகளும் வெளியே வர, அந்த நிமிடங்களை கடக்க அவன் வெகுவாய் சிரமப்பட்டான். அவனுடைய கோபத்தை எல்லாம், சுவற்றில் கையால் குத்தி குத்தித் தீர்த்துக் கொண்டான். அப்படியும் அது அடங்கியபாடில்லை.
அறையில் கிடந்த பொருட்கள் அவனுக்கு முதல் நாள் திருமணம் முடிந்ததை அவனுக்கு நினைவூட்ட, அதிக அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், அவன் கண்களின் ஓரம் கண்ணீர் வடிந்தது.
அவன் தம்பியின் இறப்பிற்கு பிறகு இப்பொழுது தான் அழுகிறான். குளியலறையில் ஷவரின் அடியில் நின்றவனுக்கு, தண்ணீரோடு சேர்த்து, அவன் கண்ணீரும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் கொண்டிருந்தது. தன்னை மறந்து நின்றிருந்தவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான். போனை எடுத்து கவினுக்கு அழைத்தான்.
“சொல்லுங்க சார்..!” என்றான் கவின். அவனுடைய குரலில் தெரிந்த ஆச்சர்யத்தை ஆதியால் உணர முடிந்தது.
“நாளைக்கு கேன்சல் பண்ண சொன்ன ஷூட்டிங்கை கேன்சல் பண்ண வேண்டாம். ஓகே சொல்லிடு கவின்..” என்றான் ஆதி.
“சார், நாளைக்கே எப்படி..? அவங்க ஹீரோயின் சீன்ஸ் மட்டும் எடுத்துக்கிறதா சொல்லிட்டாங்க சார்..” என்றான் கவின்.
“இட்ஸ் ஓகே..! என்னால ஷூட்டிங் தடைபட வேண்டாம். நாளைக்கு ஷூட்க்கு ஓகே சொல்லிடு. மார்னிங் வீட்டுக்கு வந்துடு..” என்ற சொல்லிவிட்டு வைத்து விட்டான் ஆதி.
‘நாளைக்கே ஷூட்டிங் போனா, எல்லாரும் என்ன நினைப்பாங்க..?’ என்றது உள்மனம்.
‘அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. அதுக்காக இப்படி வீட்டுக்குள்ளயே இருக்க முடியுமா..?’ என்றான் மனதிடம்.
‘அவங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சு தான, இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன..? இப்பவே இப்படி ஒதுங்கிட்டா எப்படி..?’ என்றது மனம்.
“அவங்களைப் பத்தி தான எனக்குத் தெரியும். துவாரகியைப் பத்தி ஒன்னும் தெரியாதுல்ல. அவளும் இப்படி கழுத்தை அருப்பான்னு நினைக்கலை..’ என்றான்.
‘அப்பறம் ஏன்..? அம்மா,அப்பாகிட்ட அவளை விட்டுக் குடுக்காம பேசிட்டு வந்த..? உண்மையை சொல்லியிருக்க வேண்டியது தான..?’ என்றது மனம்.
‘அவ அப்படி இருக்கான்றதுக்காக, நான் என்னோட குணத்தை மாத்திக்க முடியாது..’ என்று அவன் மனதிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சம்பத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு சம்பத்..?” என்றான் ஆதி.
“என்ன பிரச்சனை ஆதி..? துவா உன்கூட இல்லையாமே..?” என்றான்.
“யார் சொன்னது..?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“துவா தான் சொன்னா..” என்றான் சம்பத்
“துவா என்னோட மனைவி. அவளை நீ, அவ இவன்னு பேசுறதை முதல்ல நிறுத்து சம்பத்..”என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“இப்போ நான் இப்படி பேசுறது தான் உனக்குப் பிரச்சனையா தெரியுது..? விஷயம் வெளிய தெரிஞ்சா என்னாகும்..?” என்றான் சம்பத்.
“என்னடா ஆளாளுக்கு இப்படியே சொல்லிட்டு இருக்கீங்க. நான் என்ன கள்ளக் காதலா பண்ணிட்டு இருக்கேன், வெளிய தெரிஞ்சா அசிங்கம்ன்னு நினைக்க. துவா நான் தாலி கட்டுன பொண்டாட்டி. எனக்கு ஷூட்டிங் பிரச்சனை. அதான் கிளம்பி வந்திருக்கேன். வேற எந்த பிரச்சனையும் கிடையாது. உன் இஷ்ட்டத்துக்கு கற்பனை பண்ணிட்டு இருக்காத..” என்றான் ஆதி.
“கீழ தான் விழுந்தேன், ஆனா மீசையில மண் ஓட்டலை அப்படின்னு சொல்ற..? வேற வழி, நானும் நம்புறேன். நம்பித்தான ஆகணும்..” என்றான் சம்பத்.
“என்ன சம்பத்..? கிண்டலா..?”
“கிண்டல் எல்லாம் இல்லை ஆதி. இதுக்கு தான் நான் முன்னாடியே படிச்சு படிச்சு சொன்னேன். நீ கேட்கலை. ஒரு நண்பனா என்னோட ஆதங்கம் இது” என்றான்.
“இது உன்னோட ஆதங்கம் மாதிரி தெரியலை. நீ எனக்கு நண்பனான்னே எனக்கு சந்தேகமா இருக்கு..” என்றான் ஆதி.
“அப்படி ஒரு சூழ்நிலையில் தான் நீ இருக்க ஆதி. இனி யாரைப் பார்த்தாலும் உனக்கு சந்தேகமா தான் இருக்கும். எனிவே, பார்த்துக்கோ. சொல்ல வேண்டியது என்னோட கடமை..” என்றவன் போனை வைத்து விட்டான்.
கோபத்தில் போனை தூக்கி எறியப் போனவன்,
“ஷிட்..! இவளே எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லுவா போல..” என்று எரிச்சலுடன் சொன்னவன், வேகமாய் துவாரகிக்கு அழைத்தான்.
“ஹலோ..” என்று துவாவின் குரல் பொறுமையாய் ஒலிக்க,
“என்ன நினைச்சுட்டு இருக்க மனசுல. அங்க வச்சு ஒண்ணுமே பேசாம வந்ததால, என்னை என்ன ஒண்ணுக்கும் ஆகாதவன்னு நினைச்சியா..? நீயே ஊரெல்லாம் போன் போட்டு, பிரச்சனை இருக்குன்னு சொல்லுவா போல..” என்று கத்த,
அவன் திட்டுவதை நிதானமாய் கேட்டுக் கொண்டிருந்த துவாரகி, பதில் ஏதும் பேசாமல் போனை வைத்து விட்டாள்.
‘இவளுக்கு என்கிட்டே பேசணும்ன்னா தான் கசக்கும்..’ என்று நொந்து கொண்டவன், கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.
அங்கே துவாரகியும் அதே நிலைமையில் தான் இருந்தாள். ஒருநாள் அவளுடைய அறையில் தங்கியிருந்த அவனுடைய பிம்பம் இப்பொழுதும் அவள் அருகில் இருப்பதைப் போன்றே இருந்தது அவளுக்கு. அவன் தூங்கிய இடத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே அவன் இல்லையென்று புத்திக்கு தெரிந்தது. ஆனால், மனதிற்கு தெரியவில்லை.
கருணை நாதனுக்கு மேல் நான் என்கிற ரீதியில் அங்கே கனகவேல் பிளான் போட்டுக் கொண்டிருக்க, திவ்யா அந்த பிளானிற்கு வடிவம் கொடுக்க தயாராக இருந்தாள்.
இந்த ஆடுபுலி ஆட்டத்தில் இருவருக்கும் நடுவில் கனகவேல் நெருஞ்சி முள்ளாய் இருப்பதை இருவரும் உணரும் காலம் வருமோ..?
அரசியல் சதுரங்கத்தில், ஏற்கனவே பவருடன் இருக்கும் ராணியை, பதிவிக்கு அமர்த்தும் கருணை நாதனின் எண்ணம் நிறைவேறுமா..?
இவர்களின் சூழ்ச்சியை முறியடித்து, மனைவியை தன் வசம் கொண்டு வருவானா ஆதித்ய வர்மா..?
இதில் கண்ணுக்குத் தெரியாத, சிப்பாய்கள் எப்போது வெளியே தெரிவர்..?