ஆகாயம் 12:
இரவு முழுவதும் அறையில் நடந்து கொண்டிருந்தவனுக்கு ஒரே யோசனையாக இருந்தது. பரவிய எந்த செய்தியிலும் உண்மை இல்லை என்றாலும், கருணைநாதன் பேசிய பேச்சுக்கள் அவனைத் தூண்டி விட்டிருந்தன. அடுத்து சைன் பண்ணவேண்டிய படங்கள் வரிசையில் இருக்க, இந்த நேரம் பார்த்து அரசியல் தலையீடு தேவையா? என்று அவனுக்குள் தோன்றிய எண்ணம், நேரம் ஆக ஆக வலுவாய் மாறிக் கொண்டிருந்தது. கண்டிப்பாக மறுநாள், பரவிய செய்தி அனைத்தும் வதந்தி என்று சொல்லி முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்தில் தான் இருந்தான் ஆதித்ய வர்மா. அவனுடைய காதுகளுக்கு அந்த செய்தி வரும் வரை. கேள்விப்பட்ட செய்தியை அவனால் நம்ப முடியவில்லை. இத்தனை நாள் எதைத் தேடிக் கொண்டிருந்தானோ, அந்த வினாவிற்கான விடை அன்று அவனுக்குக் கிடைத்திருந்தது, அவனுக்கு வந்த போன் கால் மூலம்.
“ஹலோ..” என்றான் ஆதி.
“பரவாயில்லையே..? இப்பவாவது உனக்கு ரோஷம் வந்திருக்கே..?” என்றது எதிர்முனை குரல்.
“யார் நீ..?” என்றான்.
“நான் யாருங்கிறதா முக்கியம்..? ஹீரோ என்னமோ அரசியல்ல இறங்கப் போறீங்க போல..? எல்லாப் பக்கமும் இதே பேச்சா தான் இருக்கு..” என்றது எதிர்முனை குரல்.
“இப்போ அதுக்கென்ன..? யார் நீ..?” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.
“ஒருவழியா உன் தம்பி சாவுக்கு காரணமானவங்களை எதிர்க்க துணிஞ்சுட்ட போல..?” என்றது எதிர்முனை குரல்.
எதிர்புறம் இருந்தவன் கூறிய வார்த்தைகளில் ஸ்தம்பித்துப் போனான் ஆதித்ய வர்மா. அவன் சொன்ன செய்தியின் அர்த்தம் அவனுக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு தான் பிடிபட்டது.
“நீ என்ன சொல்ற..?” என்றான் கோபமாய்.
“உண்மையை சொன்னேன். உன் தம்பி சாவுக்கு யார் காரணமோ, அவன் பொண்ணையே கல்யாணம் பண்ணியிருக்க..? இப்ப திடீர்ன்னு என்ன நடந்தது..? எங்கிருந்து உனக்கு புத்தி வந்தது..? அந்த ஆளை எதிர்க்க?” என்றது அந்த குரல்.
“வாட் டூ யு மீன்..?” என்று கத்தினான்.
“எல்லாம் புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்காத ஆதி. ஹீரோவா இருந்த தம்பி செத்ததுக்கு அப்பறம், அவன் பிரேமை வச்சு இன்டஸ்ட்ரீல பெரிய ஆளா வந்தவன் தானே நீ..” என்றான் எதிர் முனையில் இருந்தவன்.
“வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாத. முதல்ல நீ யாரு..? எங்க இருக்க..? நீ சொல்றது எல்லாம் உண்மையா..?” என்றான் ஆதித்ய வர்மா படபடப்புடன்.
“உன்னோட அப்பா சேதுராமன் கிட்ட போய் கேளு..” என்றவன் போனை வைத்து விட்டான்.
ஆதித்யாவிற்கு ஒரு நிமிடம் அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. என்னோட தம்பி சாவுக்குக் காரணம் கருணைநாதனா..? இத்தனை நாள் எப்படி எனக்கு தெரியாம போச்சு. அந்த ஆள் மேல சந்தேகம் இருக்குன்னு கூட யாரும் என்கிட்டே சொல்லவேயில்லையே..? என்று மனதிற்குள் எண்ணியவனுக்கு, கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது.
நடுஇரவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து வந்தார் சேதுராமன். அந்த நேரத்தில் ஆதியை அப்படி ஒரு கோபத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை.
“என்னாச்சு ஆதி..? இந்த நேரத்துல..? இன்னும் நீ தூங்கலையா..?” என்றார் சேது.
ஆதி உள்ளே எட்டிப் பார்க்க, பார்கவி நல்ல உறக்கத்தில் இருந்தார். அவன் பார்வையின் காரணத்தை புரிந்து கொண்டவர்,
“பார்கவி மாத்திரை போட்டுட்டு தூங்குறா ஆதி..” என்றார்.
“எனக்கு உங்ககிட்ட பேசணும் டாட்..” என்றான் இறுகிப் போன குரலில்.
வெளியே வந்தவர்,
“இந்த நேரத்துல என்ன ஆதி..? ஏதும் பிரச்சனையா..?” என்றார்.
“விக்ரம் எப்படி செத்தான். அவன் சூசைட் பண்ணிக்கலையா..?” என்றான் எடுத்த எடுப்பில். அவனைப் பார்க்கவே சேதுவிற்கு பயமாய் இருந்தது. ஆதியின் முகம் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கோபமான பாவனையை காட்டிக் கொண்டிருந்தது.
“என்னாச்சு ஆதி..? இத்தனை நாள் இல்லாம இப்ப என்ன திடீர்ன்னு..?” என்றார் சேது.
“அப்பா, என்கிட்டே எதையாவது மறைக்கிறிங்களா..?” என்றான், அவரைப் உடும்புப் பிடியாய் பிடித்து உலுக்கியபடி.
“நான் எதுவும் மறைக்கலை ஆதி..” என்றார் அப்போதும் சேது ராமன்.
“உங்களுக்கு பொய் பேச வரும்ன்னே எனக்கு இன்னைக்கு தான் தெரியுது..? நீங்க சொல்லாட்டி என்ன..? விக்ரம் எப்படி செத்தான்னு நானே கண்டு பிடிப்பேன். போஸ்மார்ட்டம் பண்ண டாக்டரை பிடிச்சா, அது கொலையா? தற்கொலையான்னு தெரிஞ்சுடும்..” என்றான் ஆதி.
“போனவன் போய்ட்டான் ஆதி. மறுபடியும் பிரச்சனையை ஆரம்பிக்கிறதால யாருக்கு என்ன பயன்..? போன என் பையன் திரும்பி வரப்போறதில்லை..” என்றவருக்கு பாரம் கூடிப் போனது போல் இருந்தது.
“அப்பா பிளீஸ்..உண்மையை சொல்லுங்க. விக்ரம் டெத்ல அந்த கருணைநாதனுக்கு பங்கிருக்கா..?” என்றான் மீண்டும்.
அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், சில விஷயங்களை இதற்கு மேலும் மறைத்து வைக்க முடியாது என்றே தோன்றியது அவருக்கு.
“ஆமா..!” என்பதைப் போல் அவரின் தலையாட, அதிர்ந்து விட்டான் ஆதி.
“அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியுமா..?” என்றான்.
“தெரியாது..” என்பதைப் போல் அவர் தலையசைக்க, கோபத்தில் ஆதியின் முகம் அப்படியே சிவந்து போனது.
“என்னப்பா சொல்றிங்க..? இதையேன் நீங்க என்கிட்டே முன்னாடியே சொல்லலை..? எனக்கு தெரியக் கூடாதுன்னு நினைச்சிங்களா..? அப்படியே தெரிஞ்சாலும் என்னால என்னத்த கிழிக்க முடியும்ன்னு நினைச்சிங்களா..?” என்றான் கோபமாய்.
“உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து தான் பேசாம இருந்துட்டேன்..!” என்றார்.
“என்னப்பா சொல்றிங்க..? என்னைத் தொட அவனால முடியுமா..? நான் ஆதித்யாப்பா.. அவ்வளவு சீக்கிரம் அவனால என்னைய ஒன்னும் பண்ண முடியாது..?” என்றான்.
“அவன் கொலை பண்ண நினைச்சதே உன்னைத்தான் ஆதி. ஆனா, உனக்கு பதில் விக்ரம் போய்ட்டான். ஆதித்ய வர்மான்னு நினைச்சு தான் அவங்க விக்ரமை கொலை பண்ணாங்க. அவங்களுக்கு தேவையா இருந்தது நீ தான். விக்ரம் இல்லை. உன் தம்பி உனக்காகத் தான் செத்தான். இதை எப்படி ஆதி உன்கிட்ட நான் சொல்லுவேன்..” என்றவருக்கு, தனி ஒரு ஆளாய் மனதில் தேக்கி வைத்திருந்த கவலைகளை எல்லாம் அன்று மடைதிறந்த வெள்ளமாய் கொட்டித் தீர்த்து விட்டார்.
“அப்பா..!!!” என்று அதிர்ந்த ஆதிக்கு, பேச்சே வரவில்லை.
விக்ரம் அவனின் உடன்பிறப்பு, ஆதிக்குப் பிறகு பிறந்தவன். ஒரே முக அமைப்பு இல்லையென்றாலும், ஏறத்தாள எழுபது சதவீதம் ஒரே முக அமைப்பைக் கொண்டவர்கள். ஆதியின் செல்ல தம்பி. உயிருக்கு உயிரானவன். அவர்களுடைய பாசத்தை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. அவனை இழந்த போது, ஆதி கதறிய கதறலை நேரில் பார்த்தவர்கள் இப்பொழுதும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பிணைப்பு கொண்டவன்.
விக்ரமும் அவன் மீது அப்படி ஒரு பாசம் கொண்டவன். அதனால் தானோ என்னவோ, தன்னுடைய உயிரைக் கொடுத்து அண்ணனைக் காப்பாற்றி விட்டு சென்று விட்டான்.
“ஆமா ஆதி..! அவங்க உனக்கு வச்ச பொறியில சிக்கினது என்னவோ விக்ரம் தான். இந்த விஷயம் எனக்கும் லேட்டா தான் தெரிஞ்சது. தெரிஞ்சப்போ, நான் ஒண்ணுமே செய்யமுடியாத சூழ்நிலையில இருந்தேன். நீயும் அப்போ இங்க இல்லை. நீ என்னதான் பெரிய அளவுல ஹீரோவா இருந்தாலும், அவன் பதிவியில இருக்கான். அவனுக்கு தான் பவர் அதிகம். அவங்க வச்ச பொறியில உனக்கு பதில் உன் தம்பி சிக்கினது அவங்களுக்கே அதிர்ச்சி தான். எங்க விஷயம் தெரிஞ்சா, நீ ஏதாவது பண்ணிடுவியோன்னு தான் விக்ரம் இறப்பை தற்கொலைன்னு சொல்லி கேசை குளோஸ் பண்ணினாங்க..!” என்றார்.
“இதையெல்லாம் ஏன்ப்பா நீங்க அப்பவே என்கிட்டே சொல்லலை..?” என்றான் ஆதி கோபமாக.
“அந்த ஆளுக்கு எதிரா எந்த சாட்சியும் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் அவன் அதையும் சரி கட்டியிருப்பான். சாட்சியே இல்லாம போய், சண்டை போட்டு, இருக்குற உன்னை இழக்கவும் நான் தயாரா இல்லை..” என்றவருக்கு கண்கள் கலங்கியிருந்தது.
“இவ்வளவு நடந்த பிறகும் துவாரகியை எதுக்குப்பா இந்த வீட்டு மருமகளா கொண்டு வந்திங்க..?” என்றான் கோபமாய். கேள்விட்ட விஷயத்தின் தாக்கம் அவனுக்கு இன்னமும் கூடிக் கொண்டே தான் போனதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை.
“முதல்ல அந்த ஆள் பொண்ணைத் தர சம்மதம்ன்னு சொன்ன உடனே, உன்னை மாதிரி எனக்கும் கோபம் தான் வந்தது ஆதி. அப்பறம் நிதானமா யோசிச்சு பார்த்த பிறகு தான் ஒரு விஷயம் புரிஞ்சது. உன்னை கொலை பண்ற அளவுக்கு துணிஞ்சு, உன் தம்பியை கொலை பண்ணவனுக்கு.. மறுபடியும் உன்னை கொலை பண்ணனும்ன்ற எண்ணம் எப்படியும் வராமயா இருக்கும்..? அதான் அவன் பொண்ணை நீ கட்டிக்க நான் சம்மதம் சொன்னேன். அப்படி ஒரு எண்ணம் வரும் அந்த ஆளுக்கு வந்தா, முதல்ல அவன் பொண்ணோட நிலைமையை யோசிப்பான்னு நினைச்சேன். எந்த தகப்பனும் அவன் பொண்ணு தாலி இறங்குறதுக்கு காரணமா இருக்க மாட்டான்னு நினைச்சேன். அதான் சரின்னு சொன்னேன்..!” என்றார்.
“விக்ரம் சாவுக்கு அந்த ஆள் தான் காரணம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் அந்த கருணைநாதனுக்குத் தெரியுமா..?” என்றான்.
“இல்லை ஆதி, தெரியாது. நமக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சு தான், அந்த ஆள் இன்னமும் ஆடிகிட்டு இருக்கான்..! பொண்ணு வாழ்க்கையை வச்சு இப்படி ஒரு பிளான் பண்ணுவான்னு நான் நினைக்கவேயில்லை..” என்றார் சேது ராமன்.
“எப்படிப்பா..? இத்தனை நாள் இந்த விஷயத்தை என்கிட்டே இருந்து உங்களால மறைக்க முடிஞ்சது..?” என்றவனுக்கு தன்னை நினைத்தே ஆத்திரமாய் வந்தது.
“வேற வழியில்லை ஆதி. உன்கிட்ட இருந்து மறைக்கலைன்னா.. இந்நேரம் நீ வேற மாதிரி ஆகியிருப்ப ஆதி. அதுமட்டுமில்லாம சாட்சியே இல்லாம நம்மால ஒன்னும் பண்ண முடியாது. எனக்கு அப்போதைக்கு தோணின ஒரு விஷயம், ஒரு பையனை இழந்துட்டோம், இருக்குற பையனை விட்டுடக் கூடாதுன்றது தான்.” என்றார். தகப்பனாய் அவருடைய எண்ணம் சரிதான் என்றாலும், ஆதியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமூகத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், முதலமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் ஒரு அரசியல்வாதியை பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்று கருணைநாதன் தெளிவாக உணர்த்தி இருந்தார்.
“இவ்வளவு பணம், செல்வாக்கு எல்லாமே இருந்து என்ன பிரயோஜனம்..? கூடப் பிறந்தவன் உயிரைக் காப்பாத்த முடியலை பார்த்திங்களா..? எல்லாத்தையும் செஞ்சுட்டு, கொஞ்சம் கூட ஒரு குற்ற உணர்ச்சியே இல்லாம, அவன் பொண்ணையே எனக்கு கட்டி வச்சு, என்னை அவன் வீட்டு மருமகனாக்கியிருக்கான். நானும் கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமா, அவன் வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கேன்..” என்றவனுக்கு, ஆத்திரமும் அதையும் மீறிய கண்ணீரும் அவனை கலங்க வைத்தது.
“ஆதி..! போனது போகட்டும். எப்படியும் போன விக்ரம் திரும்பி வரப்போறதில்லை. ஆனால் துவாரகி நல்ல பொண்ணு. அந்த ஆள் மேல இருக்குற கோபத்தை அந்த பொண்ணுகிட்ட காட்ட வேண்டாம் ஆதி..” என்றார் சேது.
“எப்படிப்பா..? இப்ப தெரிஞ்ச உண்மையை ஜீரணிக்கவே எனக்கு எத்தனை நாள் ஆகும்ன்னு தெரியாது. இதுல எப்படி, போனா போகட்டும்ன்னு விட முடியும். இப்படியே எல்லாரும் விட்டு வச்சதால தான், அவன் இந்த அளவுக்கு வந்து நிக்குறான்..” என்றான் ஆதித்யா.
“இத்தனை நாள் கழிச்சு, உனக்கு எப்படி ஆதி இந்த சந்தேகம் வந்தது..?” என்று சேதுராமன் கேட்க, அப்போது தான் சுதாரித்தான் ஆதி.
‘அப்பா சொன்ன மாதிரி யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சுகிட்டு இருக்குற ஒரு விஷயம் வெளிய ஒருத்தனுக்கு எப்படித் தெரிஞ்சது..? எனக்கு போன் பண்ணவன் யாரு..? அவனுக்கு எப்படி இந்த உண்மை எல்லாம் தெரியும். அப்படியே தெரிஞ்சிருந்தாலும், இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு, இப்ப சொல்ல காரணம் என்ன..?’ என்ற பல கேள்விகள் அவன் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது.
“என்ன ஆதி..? என்ன யோசனை..?” என்று சேதுராமன் அவனை உலுக்க,
“ஒன்னுமில்லப்பா..! நீங்க போய் தூங்குங்க. இனி அந்த கருணைநாதன் நிம்மதியா தூங்கவே மாட்டான்..!” என்று இறுகிய முகத்துடன் சொன்னவனின் மனதிற்குள் அடுத்து செய்ய வேண்டிய அனைத்தும் நிழற்படமாய் விரிந்தது.
அந்த முழு இரவும் ஆதித்யா கொஞ்சம் கூட தூங்கவேயில்லை. மனம் முழுவதும் ஓயாத அலையடித்துக் கொண்டிருந்தது. இத்தனை நாட்கள் தம்பி தற்கொலை செய்து கொண்டான் என்று அவன் நினைத்திருக்க, அவனோ கொலை செய்யப்பட்டிருக்கிறான் என்ற ஒரு உண்மையே அவனை தூங்கவிடாமல் செய்திருந்தது.
“எனக்காக நீ உயிரைக் குடுத்து, உன்னோட பாசத்தை நீ காட்டிட்ட. பதிலுக்கு நான் என்னோட பாசத்தை காட்ட வேண்டாமா விக்ரம். கூடிய சீக்கிரமே உன்னோட சாவுக்கான உண்மையை வெளிய கொண்டு வருவேன் விக்ரம். ஒரு அண்ணனா.. எனக்கு அன்னைக்குத் தான் நிம்மதியான தூக்கம் வரும்..” என்று சூளுரைத்துக் கொண்டான் ஆதித்ய வர்மா.
மறுநாள் அதிகாலையிலேயே துவாரகி அவனுக்கு போனில் அழைத்திருந்தாள்.
ஏற்கனவே தூங்காமல் கண்கள் சிவந்து, விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதித்யாவிற்கு, அவளுடைய அழைப்பு எரிகிற தீயில் என்னை ஊற்றிய கதைதான்.
அழைப்பு ஒவ்வொரு முறையும் கட்டாகும் போது, அதை வெறித்தானே தவிர, அவளிடம் பேசவில்லை. துவாரகியோ விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தாள்.
“ஹேய்..! அறிவில்லை உனக்கு..? எதுக்கு விடாம இப்படி போன் பண்ணி உசுரை வாங்குற..?” என்று அவன் கத்த,
“என்ன ஆதி..? நான் எங்க உங்க உசுரை வாங்கினேன்..?” என்றாள் துவாரகி எதிர்புறம்.
“அப்பனும் மகளும் இதே வேலையா தான இருக்கீங்க..?” என்று அவன் கோபத்தில் கத்த,
“நான் யார் உயிரையும் வாங்க போன் பண்ணலை. நீங்க கட்சி ஆரம்பிக்கக் கூடாது. அது எங்கப்பாவுக்கு பிடிக்கலை. நான் கண்டிப்பா எலக்சன்ல நிக்கணும்ன்னு சொல்லிட்டார்..” என்றாள் துவாரகி.
“எனக்கு உத்தரவு போட உங்கப்பன் யாருடி..? இல்ல, நீதான் யாரு..? கொஞ்சம் இறங்கி வந்த உடனேயே உனக்கெல்லாம் திமிர் கூடிப் போயடுச்சுடி. கண்டிப்பா கட்சி ஆரம்பிக்கிறேன்டி. அதுமட்டுமில்ல, எலக்சன்ல நிக்கிறேன், ஜெயிக்கிறேன். உங்கப்பன் என்ன புடுங்குறான்னு நான் பார்க்குறேன். போய் சொல்லி வச்சுக்க அந்த ஆள்கிட்ட, இதுவரைக்கும் அந்த ஆள் பார்த்தது கொஞ்சம் அடங்கிப் போயிருந்த ஆதித்யாவை . இனிமேல் தாண்டி இருக்கு அந்த ஆளுக்கு. என்னை என்ன.. உங்க வீட்டு வேலைக்காரன்னு நினைச்சானாம்மா அந்த ஆளு..?” என்று அவன் கத்திய கத்தலில் துவாரகி மிரண்டு போய் விட்டாள். இதுவரை அவனிடம் இருந்து இப்படி ஒரு கோபத்தை அவள் பார்த்ததில்லை.
“ஆதி..! இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு..” என்று அவள் ஏதோ பேச வர,
“வாயை மூடு..! போ..போய் உங்கப்பன் என்ன சொன்னாலும் தலையை ஆட்டு. என்கிட்டே வந்து எதுவும் பேசிகிட்டு இருக்காத. இந்த போன் பண்ற வேலையெல்லாம் இனி வச்சுக்காத…” என்றவன், அந்த போனை தூக்கி எறிந்து உடைத்தே விட்டான்.
ஆதியிடம் அப்பாவியாய் பேசிவிட்டு வைத்த துவாரகியின் முகத்தில், கொஞ்சம் கொஞ்சமாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அமைதியாய் இருந்த அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமாய் மாற ஆரம்பித்தது. இப்போது அவளைப் பார்க்கும் யாரும், அவளை சாது பெண் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள்.
‘இது ஆரம்பம் தான் ஆதி..’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் துவாரகி.
விடிந்தது முதல், அவனின் பதிலுக்காக அவனின் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்க, அங்கிருந்த மீடியாக்காரர்கள் வீட்டிற்கு சென்றார்களா என்று கூட தெரியவில்லை. அவன் வீட்டு வாசலிலேயே தவம் கிடந்தனர்.
ஒரு முடிவு எடுத்தவனாய், கிளம்பி வெளியே வந்த ஆதிக்கு எந்த தயக்கமும் இல்லை. அவனின் முகத்தில் இருந்தே, அவன் எடுத்திருக்கும் முடிவைத் தெரிந்து கொண்டான் கவின். அவனின் அனைத்து அசைவுகளும் கவினுக்கு அத்துபடி ஆயிற்றே.
அவன் கிளம்பி கீழே வர,
“சீக்கிரம் சொல்லிட்டு வா ஆதி. இதை நேத்தே சொல்லியிருக்கலாம். தேவையில்லாம எதுக்கு இதெல்லாம். வீட்டு முன்னாடி ஆட்கள் குறையவேயில்லை..” என்றார் பார்கவி.
அவரிடம் எதுவும் சொல்லாமல், சேதுராமனை பார்த்தான் ஆதித்ய வர்மா. அவனுடைய அர்த்தம் பொதிந்த பார்வையை புரிந்து கொண்டார் சேது. அவனைத் தடுக்கும் நிலையெல்லாம் அவன் கடந்திருந்தான்.
ஆதி வெளியே வந்தது தான் மாயம்.. அனைத்து செய்தியாளர்களும் அவனை தேனிற்கு மொய்க்கும் ஈக்களாய் சூழந்து கொண்டனர்.
ஆதியின் ஒரு புறம் கவின் நிற்க, மற்றொரு புறம், அவன் ரசிகர் மன்றத்தின் தலைவர் நின்றிருந்தார்.
“என்ன சார் முடிவு பண்ணியிருக்கிங்க..? நேத்து அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட நீங்க, உடனே உங்க முடிவை அறிவிக்காதது ஏன் சார்..? உங்களுக்கு மற்ற அரசியல் கட்சிகள் கிட்ட இருந்து பிரஷர் எதுவும் வந்ததா சார்..?” என்று ஒரு செய்தியாளர் கேட்க,
“இன்னைக்கு அறிவிக்கத்தான், நேத்து அறிவிக்கலை..” என்றான் சாதரணமாக.
“அப்போ, நீங்க கட்சி ஆரம்பிக்கப் போறது உண்மை தானா சார்..?” என்றார் ஒரு பெண்.
“நீங்க சொல்லுங்க..? ஆரம்பிக்கலாமா, வேண்டாமா..?” என்றான் பார்வையை உயர்த்தியபடி. அவனின் செய்தியாளர்கள் சந்திப்பை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த கருணைநாதனுக்கு ஏனோ அவன் தன்னைப் பார்த்து கேட்டதைப் போன்ற பிரம்மை.
“என்ன சார் இப்படி கேட்குறிங்க..? நீங்க அரசியலுக்கு வரணும்ன்னு ஆசைப்படுற உங்க ரசிகைகளில் நானும் ஒருத்தி..” என்றாள் அந்த பெண்.
“அப்பறம் என்ன..?உங்க ஆசை தான் எனக்கு முக்கியம். கண்டிப்பா கட்சி ஆரம்பிக்கப்படும். கட்சியின் பெயரை சீக்கிரமே அறிவிக்கிறேன். அதுமட்டுமில்லாம, வரப் போற தேர்தல்ல, கண்டிப்பா எங்க கட்சி போட்டியிடும். கட்சி சார்பா, நானும் போட்டியிடுவேன்..” என்றான் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாக.
“இது உங்க மாமனார் கூட நீங்க மோதுற மாதிரி ஆகிடாதா சார். அதுமட்டுமில்லாம, உங்க மனைவி தான் அவங்க அப்பாவுக்கு பதிலா, முதல்வர் வேட்பாளாரா நாமினேட் ஆகப் போறாங்க. இது உங்க சொந்த வாழ்க்கையை பாதிக்காதா..?” என்றனர்.
“கண்டிப்பா பாதிக்காது. நான் என் மாமனாரோட கட்சியில தான் சேரலாம்ன்னு இருந்தேன். ஆனா, அவருக்கு அதில் விருப்பமில்லை. இந்த யோசனயை எனக்கு சொன்னதே அவர்தான். ஏன்னா, அவர் அவ்வளவு நல்லவர்..” என்றான் ஆதி.
“என்னப்பா? இவன் அப்படியே பிளேட்டை மாத்துறான்..? என்ன பிளான்ல இப்படி பேசிட்டு இருக்கான்..?” என்ற சசிதரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“உங்க மனைவியும் நீங்களும் எதிரெதிரா நிக்க போறிங்களா..?” என்றனர்.
“காலம் எங்களை அப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. அதுக்காக நாங்க ரெண்டு பேரும் கவலைப்பட மாட்டோம். ரெண்டு பேர்ல யார் ஜெயிச்சாலும், அது ஒருத்தரோட வெற்றி தான்..” என்றான் ஆதி.
‘கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லும் போதே, முக்கால்வாசி அரசியல் வாதி ஆகிட்டானே..? சரளமா அள்ளி விடுறான்..’ என்று டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த சம்பத் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“அரசியலுக்கு வரணும்ன்னு முடிவு எடுத்திருக்கிங்க. இனி படங்கள்ல நடிப்பிங்களா..? மாட்டிங்களா..?” என்றனர்.
“கண்டிப்பா நடிப்பேன்..! அது தொழில். அரசியலுக்கு வர்றது சேவை..” என்றான் ஆதி.
“வார்ரே வா..!” என்று மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டான் கவின்.
இதையெல்லாம் அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் துவாரகி. அவள் முகத்தில் சந்தோஷமும், கண்களில் கண்ணீரும் இருந்தது. ஏனோ அன்று அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி அவள் மனதிற்குள்.
ஆனால், பார்கவி தான் இதையெல்லாம் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஒன்று நினைத்திருக்க.. ஆதி நடந்து கொண்டது வேற மாதிரி இருந்தது.
“என்னப்பா இவன்..? இஷ்ட்டத்துக்கு பேசிட்டு இருக்கான்..?” என்ற சசிதரன் இங்கே குதித்துக் கொண்டிருந்தான். அவன் பேசியதை கேட்டபடி கீழே வந்தாள் துவாரகி.
“துவாரகி..! என்ன இதெல்லாம்..? எல்லாம் உனக்குத் தெரிஞ்சு தான் நடக்குதா..?” என்றார் கருணை நாதன்.
“எனக்கு எதுவும் தெரியாது..?” என்றவள், ஹாஸ்பிட்டல் கிளம்பி விட்டாள்.
“என்னம்மா திவ்யா இப்படி ஆகிப் போச்சு..?” என்றார் கனகவேல் கவலையாக.
“அதான்ப்பா எனக்கும் புரியலை..! கண்டிப்பா ஆதித்யா கட்சி ஆரம்பிக்க மாட்டான்னு நினைச்சேன்..!” என்றாள் திவ்யா யோசனையாக.
“நம்ம ஒன்னு நினைக்க, இப்ப வேற மாதிரி நடக்குதே..?” என்ற கனகவேலுக்கும் கவலையாக இருந்தது.
கருணைநாதனுக்கும், ஆதித்யாவிற்கும் இடையே இருந்த பகை தெரியாமல், தங்களுக்கு லாபம் என்று திவ்யா ஒன்றை செய்யப் போக, அதுவே அவர்களுக்கு வினையாக வந்து அமர்ந்தது.
ஆதி ஆடப் போகும் ஆட்டத்தில் யாரெல்லாம் வெட்டுப் பட போகிறார்களோ..?