ஆகாயம் 13:
ஆதியின் அறிவிப்பைக் கேட்டு மற்றவர்கள் அதிர்ந்து போனதைக் காட்டிலும் பார்கவி தான் அதிகமாக அதிர்ந்து போயிருந்தார். அவன் ஏதோ விளையாட்டுக்கு பேசிக் கொண்டிருக்கிறான் என்று அவர் நினைத்திருக்க, அவனிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளை அவரால் நம்ப முடியவில்லை.
“நீ இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை ஆதி. கண்டிப்பா இது தேவையில்லாத வேலை தான்..” என்றார் பார்கவி.
“என்ன பார்கவி இது..? ஆதிக்கு அந்த அளவுக்கு வொர்த் இல்லைன்னு சொல்ல வரியா..? ஆதி எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்..” என்றார் சேது.
“என்னங்க, நீங்களும் இப்படி சொன்னா எப்படி..? ஏற்கனவே துவாரகி அவங்க அப்பா வீட்ல இருக்கா. இந்த நேரத்துல அவரைப் பகைச்சுகிட்டு ஆதி அரசியலுக்கு வந்தா, அவனோட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படாதா..?” என்று பார்கவி கேட்க, பல்லைக் கடித்துக் கொண்டான் ஆதித்யா.
“இப்ப மட்டும் என்ன..? பொண்டாட்டி, பிள்ளைன்னு குடும்பமா நடத்திகிட்டு இருக்கேன். எனக்கு கல்யாணம் ஆன விஷயம் எனக்கே சில சமயம் மறந்து போய்டுது, அந்த அளவுக்குத்தான் இருக்கு குடும்ப வாழ்க்கை..” என்ற ஆதியின் முகத்தில் நக்கல் சிரிப்பு.
“நீ என்ன சொன்னாலும், என்னால சமாதானம் ஆக முடியலை ஆதி. அரசியலுக்குள்ள போய்ட்டா நிம்மதி போய்டும். நிறைய பொய் சொல்லணும், உனக்கு ஒத்துவராத நிறைய வேலையை நீ செய்யணும். அரசியல் ஒன்னும் சாதாரணம் இல்லை, அதுலயும் கட்சி ஆரம்பிச்ச உடனே தேர்தல்ல நின்னு ஜெயிக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்ட்டமான விஷயம்..” என்றார் பார்கவி. ஆதியின் என்னத்தை மாற்றிவிடும் நோக்கத்துடன் அவர் பேசுவது அவனுக்கு நன்றாகப் புரிந்ததது. ஆனால் கருணைநாதனின் உண்மையான குணம் பற்றி பார்கவிக்கு எதுவும் தெரியாதே.
“இதையெல்லாம் நான் யோசிக்காமையா களத்துல இறங்கியிருப்பேன்னு நீங்க நினைக்கிறிங்கம்மா. எல்லாமே தெளிவா யோசிச்சுட்டேன். அரசியலே தெரியாதவனுக்குத் தான் கஷ்ட்டம். ஆனா, எனக்கு எல்லாமே அத்துப்படின்னு உங்களுக்குத் தெரியாதா…? இல்ல அரசியல் சட்டப் புத்தகத்தை கரைச்சு குடிச்ச என்மேல உங்களுக்கு சந்தேகமா..?” என்றான் ஆதித்யா.
“ஆதியின் திறமைமேல் பார்கவிக்கு சந்தேகமா..? அப்படி அவரால் நினைக்க முடியுமா..? அவன் சட்டப் படிப்பு படிக்கும் போதே, அவனுடைய திறமையைப் பற்றி நன்றாக அறிந்தவர் ஆயிற்றே. அவன் பெரிய சட்ட வக்கீலாக வருவான் என்று அவர் நினைத்திருக்க, எதேச்சையாக நடிப்பின் பக்கம் திரும்பிய அவன் கவனம், திரைத் துறைக்குள் அவனை இழுத்து விட்டிருந்தது. அவன் சட்டம் படித்தவன் என்பது அங்கிருந்த பலருக்கும் தெரியாத ஒரு செய்தி.
பொதுவாக ஒரு நடிகனைப் பற்றி பல செய்திகள் சமூக வலைதளத்தில் உலாவிக் கொண்டிருக்கும். அதில் உண்மையான விஷயங்களை விட, பொய்யான விஷயங்கள் தான் அதிகமாக இருக்கும். அப்படி பொய்யான விஷயங்களுக்குள் மறைந்து போன ஒரு விஷயம் தான், அவன் சட்டம் படித்த லாயர் என்பது. அவனை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.
“உன்னோட திறமை மேல என்னால எப்படி சந்தேகப்பட முடியும் ஆதி..?” என்றார் பார்கவி.
“அப்போ, என்னைப் பத்தி கவலைப்படாதிங்கம்மா..! ஒரு விஷயத்துக்குள்ள இறங்குறதுக்கு முன்னாடி, அதைப் பத்தின தெளிவான சிந்தனையோட தான் இறங்குறேன்..” என்றான் ஆதி.
அவனின் தெளிவான பேச்சைக் கேட்ட சேது ராமனுக்கு பெருமையாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இதற்குத்தானே அவர் அவனிடம் இருந்து அத்தனை விஷயத்தையும் மறைத்து வைத்திருந்தார். விக்ரமின் இறப்பின் போது, அவன் கனடாவில் ஷூட்டிங்கில் இருக்க, அவன் வருவதற்குள், அவருக்கு சந்தேகத்தைக் கிளப்பிய அனைத்து விஷயங்களையும் அவனறியாமல் மூடி மறைத்திருந்தார். வந்தவனை, வேறு எந்த விதத்திலும் சிந்திக்க விடாமல், தங்களுக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் சேது ராமன். ஆனால், அவரின் அன்றைய மன உளைச்சலுக்கு, இப்போது தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறான் மகன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கவின் அவன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து வந்திருந்தான். அங்கிருந்த பெரிய அறைக்குள் அவர்களை அழைத்து சென்றவன், அவர்களிடம் என்ன பேசினானோ தெரியவில்லை, வெளியே வரும் போது அவர்களின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் பொங்கிக் கொண்டிருந்தது.
“கட்சிக்கு பேரு இன்னும் செலக்ட் பண்ணலை சார்..!” என்றான் கவின்.
“அதெல்லாம் செலக்ட் பண்ணியாச்சு..” என்றவன் கட்சியின் பெயரை சொல்ல, கவினுக்கு அப்படி ஒரு சந்தோசம்.
“ஆனா சார், இன்னும் ஒரு வாரத்துல அடுத்த படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிக்குது..” என்றான் யோசனையுடன்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்லை. எல்லா நாளைக்கும் ஷெட்யூல் கரெக்ட்டா இருக்கணும்..” என்றான் ஆதி, தீவிரமான முகத்துடன்.
“சார், உங்களுக்கு ரெஸ்ட் இருக்காது..” என்றான் கவின்.
“அதை நான் பார்த்துக்கிறேன்..” என்ற ஆதி, கவின் இன்னமும் நகராமல் இருப்பதைப் பார்த்து யோசனையுடன் புருவத்தை நெரித்தான்.
“ஏதாவாது சொல்லனுமா கவின்..?” என்றான்.
“நிறைய பேர் போன் பண்ணிட்டே இருக்காங்க சார். நீங்க உங்க பர்சனல் போனை உடைச்சதால, துவாரகி மேடம் கூப்பிட்டிருந்தாங்க சார்..” என்றான் தயங்கி.
கவின் முன்பு எதையும் காட்ட முடியாமல்,
“என்ன சொன்னாங்க..” என்றான் ஆதி, இயந்திர தன்மையுடன்.
“உங்க கூட பேச அப்பாயின்மென்ட் கேட்டாங்க சார்..” என்று அவன் சொல்லும் போதே, கவினின் குரல் உள்ளே போயிருக்க, எரிச்சலில் ஆதியின் முகமும் அப்படித்தான் இருந்தது.
‘இப்ப அப்பாயின்மென்ட் வாங்கிக்கிட்டு வந்து என் உயிரை வாங்குவா போல..?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,
“நாளைக்கு டைம் பிக்ஸ் பண்ணிடு..” என்றான்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பார்கவிக்கு மனசே ஆறவில்லை.
“புருஷனைப் பார்க்க பொண்டாட்டி அனுமதி வாங்கிட்டு தான் வரணுமா ஆதி. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை..?” என்றார்.
“அங்க அவளையும், அவ அப்பனையும் பார்க்கப் போனப்போ நானும் அப்பாயின்மென்ட் வாங்கிட்டு தான் போனேன்..!” என்றான் அவனும் பதிலுக்கு.
“நீ அரசியலுக்கு போ, என்னவும் பண்ணு ஆதி. ஆனா, துவாரகி கூட உனக்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது.” என்றார்.
“இதை என்கிட்டே சொல்லாதிங்கம்மா..! மிஸ்டர். கருணைநாதன்கிட்ட சொல்லுங்க..!” என்றவன், அதற்கு பிறகு அங்கு நிற்கவில்லை.
கருணைநாதனின் வீட்டில் அனைத்து அமைச்சர்களும் கூடியிருந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும், ஒவ்வொரு பாவனைகள்.
“இப்ப என்ன செய்யுறது தலைவரே..? நம்ம பாப்பா எலக்சன்ல நின்னா, ஆதித்ய வர்மா சப்போர்ட் கிடைக்கும்ன்னு சொன்னிங்க. இப்ப என்னடான்னா அவரே தனி கட்சி ஆரம்பிக்கிறதா அறிக்கை விட்டிருக்காரு. நடக்குறது எதுவுமே சரியா படலை தலைவரே..” என்றனர் ஒவ்வொருவரும்.
கனகவேல் மட்டும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் ஏதாவது சொல்லுவார் என்று கருணைநாதன் பார்த்துக் கொண்டிருக்க, அவரின் அமைதி தான் யோசனையை தந்தது நாதனுக்கு.
“என்ன கனகு..? நீ எதுவும் பேசாம இருக்க..?” என்றார் நாதன்.
“நான் என்ன தலைவரே சொல்றது..? ஆதி தம்பி இப்படி செய்வாருன்னு நானும் நினைக்கவேயில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு சட்டுன்னு எல்லாத்தையும் பண்ணிட்டாரு..” என்றார் கனகவேல்.
“எனக்கென்னவோ, இதை அவனா செஞ்ச மாதிரி தோணலை. யாரோ அவனைத் தூண்டி விட்டு, அவனுக்குப் பின்னாடி இருந்து செயல்படுற மாதிரி தோணுது..” என்றார் கருணைநாதன்.
அவர் அப்படி சொன்னவுடன் கனகவேலிற்கு மனதிற்குள் நறுக்கென்று இருந்தது.
“தூண்டிவிட்டு செய்ய, அவர் என்ன சின்ன பையன்னா தலைவரே..? எலக்சன்ல, துவாரகி தான் உங்களுக்கு பதில்ன்னு தெரிஞ்சும், அவர் கட்சி ஆரம்பிக்கிறாருன்னா என்ன அர்த்தம்..? நமக்குள்ள இருக்குற ஒற்றுமையைப் பிரிக்கப் பார்க்குறாருன்னு அர்த்தம். இந்த நேரத்துல தான், நாம எல்லாருமே ஒற்றுமையா இருக்கணும்..யாராலையும் நம்ம கட்சிக்குள்ள பிளவு வந்திடவே கூடாது..” என்று பேசிய கனகவேல், மேற்கொண்டு கருணைநாதனை யோசிக்கவே விடவில்லை.
“விஷயம் தெரியுமா தலைவரே, அவர் வச்சிருக்கிற கட்சி பேர் என்னன்னு..?” என்று இடையில் ஒருவர் பேச,
“என்னன்னு வச்சிருக்கான்..?” என்றார்.
“மக்களாட்சி மன்ற கட்சி..” அப்படின்னு கட்சி பேர்லயே மக்களாட்சியை கொண்டு வந்துட்டான்.. என்றார் அவர்.
“பேரு வச்சுட்டா மட்டும் போதுமா..? சினிமாவுல பழம் தின்னு கொட்டை போட்ட பல பெரிய நடிகர்களே அரசியலுக்கு வர யோசிக்கிறாங்க. அப்படி வந்தவங்க நிலைமை எல்லாம் நாம சொல்லித்தான் அவருக்குத் தெரியனுமா என்ன..?” என்றார் இன்னொரு அமைச்சர்.
“யோவ்..! புரியாம பேசாதய்யா..? ஆதித்யா வர்மாவும் ஒன்னும் லேசுப்பட்ட ஆள் இல்லை.சினிமாவுக்குள்ள வந்தது கொஞ்ச வருஷம் தான்னாலும், இப்ப வரைக்கும் ஐம்பது படத்துக்கு மேல நடிச்சுட்டான். அதுல இருபது படம் அரசியல் படம் தான். ரெண்டு படத்தைத் தவிர எல்லாமே சூப்பர்,டூப்பர் ஹிட். அதுலயும் அவன் நடிச்ச இருபது அரசியல் படமும் மெகா ஹிட்டு, தெரியுமா..?” என்றார் ஒருவர் புள்ளி விபரத்துடன்.
“என்னய்யா சொல்ற..? அதுக்குள்ளே அவ்வளவு படம் நடிச்சுட்டானா..? அதேப்படியா முடியும்” என்றார் இன்னொருவர்.
“ஏன் முடியாது..? நம்ம கேப்டன் விஜயகாந்த் நடிக்கலையா.. பத்து வருஷத்துல நூறு படம். அதே மாதிரி தான்…” என்றவர்,
“அவரு நடிகனா மட்டும் இருந்திருந்தா கூட நமக்கு கவலை இல்லை. இப்போ தலைவர் வீட்டு மாப்பிள்ளை வேற. அந்த செல்வாக்கும் கூட சேர்ந்துடுச்சு. தலைவர் தோத்துப் போனா கூட, மருமகன் இருக்கான் பார்த்துக்க. நம்ம நிலைமையை கொஞ்சம் யோசிங்கப்பா..” என்று சொல்ல, அங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொன்று பேச, சலசலப்பு தான் கூடியது.
“இதெல்லாம் என்ன பிரமாதம்… அவன் சட்டம் படிச்சிருக்கானாம். இங்க இருக்குற பாதிப் பேர் அந்த சட்டப் புத்தகத்தை கண்ணுல கூட பார்த்ததில்லை..” என்று சொல்ல, கருணைநாதனுக்குமே மனதின் ஓரத்தில் பயம் துளிர்விட ஆரம்பித்தது.
‘தேவையில்லாத வேலை செய்துவிட்டோமோ..?’ என்று முதன் முறையாக மனதிற்குள் நினைத்துக் கொண்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சசிதரனுக்கும் எதுவும் உவப்பாய் இல்லை.
“யார் என்ன பண்ணாலும், நம்ம கட்சியை அசைக்க முடியாது. கண்டிப்பா நாம தான் ஜெயிக்கிறோம்.. நிம்மதியா வீட்டுக்கு போங்கய்யா. நாளைக்கு கட்சி ஆபீஸ்ல ஒரு மீட்டிங்க போடுவோம்..” என்று அனைவரையும் அனுப்பி வைத்தார் கருணைநாதன்.
“என்னப்பா நடக்குது..? அவன் ஏதோ நம்மளை பயமுறுத்த அப்படி சொல்றான்னு பார்த்தா, கட்சி பேரு வச்சு அதையும் தொடங்கிட்டான் போல..” என்ற சசிதரனுக்கு மனம் ஆறவில்லை.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கிளம்பி வந்தாள் துவாரகி.
அவர்களை அவள் சட்டை செய்யாமல் கடக்க முயல,
“இன்னக்கு ஹாஸ்பிட்டல் போக மாட்டியே துவாரகி. எங்க கிளம்பிட்ட..?” என்றான் சசி.
“ஆதித்யாவை பார்க்க..” என்றாள்.
“ஏன்..? ஏற்கனவே அவன் எங்களைப் படுத்துற பாடு பத்தாதா..? நீ போய் இன்னும் ரெண்டு பிட்டை சேர்த்துப் போடவா..?” என்றான் நக்கலாய்.
“எதையும் நான் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு நீங்களாவே பண்ணிக்கிறிங்க..” என்றவள், அவனின் பேச்சை காது கொடுத்து கேட்கக் கூட நிற்கவில்லை.
“இப்பவும் துவாரகியை தான் எலக்சன்ல நிறுத்தனும்ன்னு நினைக்கிறிங்களாப்பா..?” என்றான் சசி.
“கண்டிப்பா சசி. நாம இப்பத்தான் துவாவை நிறுத்தியாகனும். புருஷனுக்கு எதிரா அவன் பொண்டாட்டி. எப்படியிருக்கு..? எப்படியும் அவன் தோற்க போறது உறுதி. என்னவும் செஞ்சுட்டு போறான். ஆனா, அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் நமக்குத் தெரிஞ்சாகனும். அந்த ஒவ்வொரு அடியையும் நமக்கு சாதகமா எப்படி பயன்படுத்திக்க முடியும்ன்னு தான் பார்க்கணும்..” என்றார கருணைநாதன்.
“இதெல்லாம் நடக்குற விஷயமாப்பா..?” என்றான் சசி.
“கண்டிப்பா நடக்கும். அப்பறம், நம்ம அமைச்சர் எல்லார் மேலயும் ஒரு கண்ணு இருக்கட்டும். ஏன்னா, இங்க இருக்கவங்களை வளைச்சுப் போடணும்ன்னு பார்ப்பான். அதுக்கு நம்ம இடம் கொடுத்திடக் கூடாது..” என்றார்.
“சரிப்பா..!” என்றான் சசி.
“என்ன அத்தை நடக்குது இங்க.? அங்க ஆதித்ய வர்மா கட்சி ஆரம்பிக்கிறார். இவங்க துவாவை எலக்சன்ல நிறுத்துறாங்க. இதனால அவங்க ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சனை வந்துடாதா..?” என்றாள் பூமிகா.
“அப்படி வரணும்ன்னு தான செய்றதே..? இவங்க என் பொண்ணை வாழ விடுற மாதிரி தெரியலை… ஊர் மெச்ச கல்யாணம் பண்ணி வச்சு ஆடம்பரத்தை காட்டினா போதும்ன்னு நினைச்சுட்டாங்க போல. அந்த பொண்ணு சந்தோஷமா வாழணும்ன்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லை.” என்ற அருணாவிற்கு தான், மனம் முழுவது கவலைகளும், வேதனைகளும் மண்டிக் கிடந்தது.
“இந்த துவாரகியாவது இதையெல்லாம் புரிஞ்சுக்கலாமே அத்தை..” என்றாள் பூமிகா.
“இந்த வீட்ல நம்ம நினைக்கிற எதுவும் நடக்காது பூமிகா. எல்லாமே அவங்க நினைக்கிறது தான் நடக்கும், நடத்திக்குவாங்க..” என்ற அருணா, விரக்தியுடன் உள்ளே செல்ல, பூமிகாவிற்கு யோசனையாக இருந்தது.
‘நானும் இந்த வீட்ல அத்தை மாதிரி தான் இருக்கனுமா..? எனக்கு அப்படியென்ன அவசியம் வந்தது…? நான் மட்டும் என்ன சாதாரண குடும்பத்து பொண்ணா..?’ என்று நினைத்துக் கொண்டவளுக்கு, அங்கே தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம், தீவிரமானது.
துவாரகி சந்திக்க சென்றது ஆதித்ய வர்மாவைத் தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுடைய வீட்டிற்கு செல்கிறாள். சொல்லப்போனால் திருமணம் முடிந்ததிலிருந்து இன்று தான் முதன் முறையாக அந்த வீட்டிற்கு செல்கிறாள்.
அவள் கட்டியிருந்த கத்தரி நீல வண்ண லினன் காட்டன், அவளின் நிறத்தை இன்னமும் கொஞ்சம் தூக்கிக் காட்ட, சிரத்தையே இல்லாமல் பின்னப்பட்டிருந்த அவள் கூந்தலில் இருந்து, அடங்கவே மாட்டேன் என்று அடம்பிடித்த சில முடிக்கற்றைகள் முகத்திற்கு முன்னால் வந்து விழுந்து சிலும்பிக் கொண்டிருக்க, அதை கவனமே இல்லாமல், காதோரத்தில் ஒதுக்கியபடி சென்ற சென்ற அவளின் எதார்த்தமான அழகில் மயங்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
ஆதியின் வீட்டிற்குள் செல்வது அவளுக்கு அப்படி ஒன்றும் எளிதாக இருக்கவில்லை. இதற்கு முன்பு எப்படியோ, இப்பொழுது அவன் வீட்டின் முன்பு ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அவர்களை அடக்க, சில போலீசாரும் அங்கிருக்க, தன் வீட்டில் பார்த்துப் பழகிய அதே காட்சி தான் என்றாலும், துவாரகிக்கு ஏதோ தொலைவில் அவன் சென்று விட்டதைப் போல் இருந்தது.
‘இதுக்கே இப்படி யோசிச்சா எப்படி துவா..? இந்த போலீசும், கூட்டமும் உனக்கென்ன புதுசா..? பிறந்ததுல இருந்து பார்த்து பழகின கூட்டம் தானே..’ என்று அவளின் மனம் அவளுக்கு தைரியம் சொல்ல, அவளைப் பார்த்தவர்கள் கேள்வியின்றி அவளை உள்ளே விட்டிருந்தனர்.
அவள் கார் வந்து நின்றவுடன், உள்ளே இருக்கும் பார்கவிக்கு தகவல் செல்ல, அவர் வேகமாக ஆரத்தித் தட்டுடன் வெளியே வந்தார். துவாரகியுடன் இதுவரை அவர் பேசவில்லை. ஆனால் வீட்டிற்கு வந்திருக்கும் அவளிடம் பேசாமல் இருக்க முடியுமா..? அதுவும் ஆசைப் பட்டு கொண்டு வந்த மருமகள் வேறு. இன்றுதான் புகுந்த வீட்டிற்கு வருகிறாள்.
“அப்படியே நில்லு துவா..ஆரத்தி எடுத்திடுறேன்..” என்று பார்கவி இயல்பாக பேச, இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த துவாரகிக்கு, அவளையுமறியாமல் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
இதை கவனித்துக் கொண்டிருந்த சேதுராமனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், ஒரு பக்கம் கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது. துவாரகியின் வருகையில் கருணைநாதனின் திட்டம் எதுவும் இருந்து விடக் கூடாதே என்ற பதட்டம் தான் அதற்கு காரணம்.
அவளுக்கு ஆரத்தி சுற்றியவர்,
“உள்ள வாம்மா..” என்றார்.
‘ஆதியையும் கூப்பிட்டு ஜோடியாவே சுத்தியிருக்கலாம்..’ என்று மனதிற்குள் நினைத்தவள், எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
“எப்படி இருக்கீங்க அங்கிள்..?” என்றாள் இயல்பாக.
“இப்போ வரைக்கும் நல்லா இருக்கேன்ம்மா..” என்றார் அவரும்.
“இனிமேல் எதுவும் பிரச்சனை வரும்ன்னு நினைக்கிறிங்களா அங்கிள். இல்லை பிரச்சனையே நான் தான்னு நினைக்கிறிங்களா..?” என்றாள்.
அவர் பதில் சொல்ல கொஞ்சம் தடுமாற,
“கவலைப் படாதிங்க. நீங்க பதட்டப்படுற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கலை..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,
“இப்பத்தான் வரணும்ன்னு தோணுச்சா துவாரகி..?” என்றபடி வந்தார் பார்கவி.
“சாரி டாக்டர்..! நான் மிஸ்டர். ஆதித்ய வர்மாவை மீட் பண்ண அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கேன். இப்போதான் டைம் குடுத்திருக்காங்க..” என்று அவள் பார்மலாக பேசவும், குழம்பிப் போனார் பார்கவி.
“என்ன துவா..? ஏதோ புதுசா பார்க்குறவங்ககிட்ட பேசுற மாதிரி பேசுற..?” என்றார் பார்கவி.
“நீங்கதான் அப்படி நடந்துகிட்டிங்க ஆன்ட்டி. நான் எப்பவும் போல தான் இருந்தேன்..” என்று அவர் இத்தனை நாள் பேசாமல் இருந்ததை அவள் சுட்டிக் காட்டி பேச,
பார்கவிக்கு ஒரு மாதிரியாகிப் போனது. அவரும் எதையும் வேண்டும்ன்று செய்யவில்லை. அதற்குள் அவளுக்கு காபி வர, எந்த தயக்கமும் இல்லாமல் எடுத்துக் கொண்டாள்.
“மேடம், சார் உங்களை வர சொன்னார்..! மீட்டிங் புளோர் கீழ, அண்டர் கிரவுண்ட்ல இருக்கு..” என்றவன், அவளுக்கு வழியையும் காட்ட, அங்கே சென்றவளுக்கு அந்த இடத்தைப் பார்த்ததும் அப்படி ஒரு ஆச்சர்யம்.
‘என்னடா இது..? இதுக்குப் பேருதான் அண்டர்கிரவுண்ட் ஆப்ரேஷனா..?’ என்று மனதிற்குள் நினைத்தவளுக்கு, அந்த இடத்தை அப்படி ஒரு அழகில் எதிர்பார்க்கவில்லை.
அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தவனைப் போல் இல்லை. ஏதோ வேண்டா வெறுப்பாக இருப்பதைப் போன்று தான் இருந்தான் ஆதித்ய வர்மா.
அவனின் முன்னால் சென்றவள், அமைதியாக நிற்க,
“உட்காருங்க டாக்டர் மேடம்..!” என்றான் நக்கலான குரலில்.
அவனின் முன்னால் திமிராக அமர்ந்தவள், அவனைப் பார்த்த பார்வையில் அப்படி ஒரு திமிர் இருந்தது.
‘இவகிட்ட ஏதோ ஒரு மாற்றம் தெரியுதே..? கண்ணுலையும், முகத்துலயும் திமிர் தெரியுதே..?’ என்று நினைத்தவன், அதை பார்வையிலும் காட்டி விட,
அவள் மீண்டும் வேண்டுமென்றே கால்மேல் கால்போட்டு அமர்ந்தாள். அவள் இதையெல்லாம் எதை நினைத்து செய்தாள் என்று தெரியாது. ஆனால், பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு ஒருபக்கம் சிரிப்பாக வந்தது.
அந்த புடவையும், அவள் பந்தாவாக அமர்ந்திருந்த விதமும், அவளை திமிரழகியாகத் தான் காட்டியது.
“என்ன விஷயம்..?” என்றான் எடுத்த எடுப்பில். அவளைக் கண்டு தடுமாறும் மனதை தள்ளி வைத்தபடி.
“சார் கட்சி எல்லாம் ஆரம்பிச்சுட்டிங்க போல. ஒருவார்த்தை சொல்லலை..” என்றாள்.
“எதுக்கு சொல்லணும்..?” என்றான் பல்லைக் கடித்தபடி.
“என்ன இருந்தாலும் நீங்க எனக்கு புருஷன் ஆச்சே..?” என்றாள் சிரிக்காமல்.
‘என்னாச்சு இவளுக்கு..? எப்பவும் இப்படியெல்லாம் பேச மாட்டாளே..? நாலு வார்த்தை பேசவே இவளுக்கு நாக்கு தள்ளுமே..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஆதி.
“இத்தனை நாள் பேசாம இருந்தவ, இன்னைக்கு என்ன இப்படி பேசறாளேன்னு பார்க்குறிங்களா..?” என்றாள் மிதப்பாய்.
அவன், அவளையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க,
“பேச வேண்டிய அவசியம் வந்திருக்கு. அதானால தான்..” என்றாள்.
“அப்படி என்ன அவசியம் வந்தது…?” என்றான் கோபமாக.
“எதுக்கு இவ்வளவு கோபப்படுறிங்க ஆதி..? நான் உங்க மனைவின்றது நியாபகத்துல இருக்கட்டும்..” என்றாள்.
“இனி அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை..” என்றான்.
“அப்படி நீங்க பட்டுன்னு சொல்லி, சட்டுன்னு விலகிட முடியாது ஹீரோ சார். சட்டம் தெரிஞ்ச உங்களுக்கு நான் சொல்லி ஏதும் தெரிய வேண்டியதில்லை..” என்றாள் நக்கலாக.
“ஏய்..!!!” என்றவனின் முகம் கோபத்தில் சிவக்க,
“ஏய் இல்லை, துவாரகி..” என்றாள்.
“இப்ப என்னதான் வேணும் உனக்கு…?” என்றான்.
“இப்பவும் சொல்றேன்… நீங்க எலக்சன்ல நிற்க போறது எனக்குப் பிடிக்கலை..” என்றாள்.
“உங்கப்பன் சொல்லி அனுப்பிச்சானா..?” என்றான் கோபமாய்.
“கொஞ்சமாவது மரியாதை குடுத்து பேசுங்க ஆதி..” என்றாள் அவளும் கோபமாய்.
“அந்த ஆளுக்கென்னடி மரியாதை வேண்டி கிடக்கு..?”
“எப்படியும் நீங்க ஜெயிக்க போறதில்லை. அரசியலுக்கு வரணும்ன்னா, பணமும், மூளையும் இருந்தா பத்தாது. கொஞ்சம் பிராடுத் தனம் செய்யவும் தெரிஞ்சிருக்கணும். உங்களுக்கெல்லாம் அது வருமான்னே தெரியலையே..? அதுமட்டுமில்லாம, எங்கப்பாவோட மோதுறதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும்..? உங்ககிட்ட அது இருக்கா என்ன..?” என்று அவள் நக்கலாக கேட்க, கோபத்தில் முகம் இறுக, அவளின் கழுத்தைப் பிடித்திருந்தான் ஆதி.
“என்னடி தகுதி வேணும்..? உங்கப்பனுக்கு முதல்ல என்னடி தகுதி இருக்கு..? கொள்ளையடிச்ச சொத்தை, கொள்ளைப் புறத்தில் சேர்த்து வச்சிருக்க உங்கப்பனை விட, எந்த விதத்திலும் என்னோட தகுதி குறைஞ்சு போயிடலை..” என்றவன், அவள் கழுத்தை நெறிக்க, கஷ்ட்டப்பட்டு அவன் கைகளை தட்டி விட்டாள் துவாரகி.
‘எப்பா சாமி..! என்னா பிடி..’ என்று மனதிற்குள் நினைத்தவள், இரும.. தண்ணீர் பாட்டிலை நீட்டினான் ஆதி.
‘இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை..’ என்றபடி அதை வாங்கி, வாயிக்குள் சரித்துக் கொண்டாள் துவாரகி.
அவன் அவளுக்கு அருகில் நின்றிருக்க, அவனுடைய அருகாமை, முதல்முறையாக அவளை ஏதோ செய்தது.
“தேங்க்ஸ்..” என்று பாட்டிலை நீட்டியவள், கொஞ்சம் தள்ளி நிற்க, அப்போதுதான் மனதின் படபடப்பு கொஞ்சம் குறைந்ததைப் போல் இருந்தது அவளுக்கு.
“இதை சொல்லத்தான் வந்தியா..? அப்படின்னா நல்லா கேட்டுக்கோ, என்னோட தகுதி என்னன்னு நான் நிரூபிச்சு காட்டுறேன்..” என்றான் சவாலாய்.
“அப்படி நீங்க நிரூபிச்சிட்டா, அடுத்த நாள் நான் இந்த வீட்ல இருப்பேன்..” என்றாள்.
“அது என்ன தேவைக்கு…? நான் என்னோட தகுதியை நிரூபிக்க ஜெயிச்சாலும், இனி உன்கூட வாழ்க்கின்ற ஒரு விஷயத்தை யோசிக்கவே மாட்டேன். நீ எப்பவுமே கருணைநாதன் பொண்ணு மட்டும் தான். ஆதித்யா வர்மாவோட மனைவி கிடையாது..” என்று அவன் சொல்லிய விதத்தில் அவளுக்குள் எதுவோ ஒன்று உடைந்து போனதைப் போன்று இருக்க, கலங்கிய கண்களை நிமிடத்தில் மறைத்து விட்டாள்.
“ஒரு வேளை நிரூப்பிக்கலைன்ன்னா…?” என்றாள்.
“அப்போ உனக்கு புருஷனா இருப்பேன்னு சொல்லுவேன்னு எதிர்பார்க்குறியா..? கண்டிப்பா கிடையாது. அப்படி மட்டும் நடந்தா, என்னை கொலைகாரனா ஜெயில்ல தாண்டி பார்ப்ப..” என்றான் ஆதி.
“என்னை எதிர்த்து நிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க..?” என்றாள் துவா.
“உறுதியான முடிவு..!” என்றவன்,
“இனி இப்படியெல்லாம் வந்து என்னை மயக்கலாம்ன்னு நினைக்காத..?” என்றான் பட்டென்று.
“யாரு..? நான் மயக்க பார்க்குறேன்னா..? வெளிய சொல்லிடாதிங்க. சிரிச்சுடுவாங்க..” என்றவளுக்கு மனதிற்குள் சிரிப்பாய் இருந்தது.
‘இவனும் மயங்கிட்டாலும்..! போடா டேய்..’ என்று சொல்லிக் கொண்டாள்.
“இன்னொரு விஷயம்.. இனி இங்க வர்ற வேலையெல்லாம் வச்சுக்காத..?” என்றான்.
“இன்னும் நமக்கு டிவேர்ஸ் கூட ஆகலை. சோ, அதுவரைக்கும் இது எனக்கு புருஷன் வீடு தான். நான் எப்ப வேணும்ன்னாலும் வருவேன். யாரும் என்னை எந்த கேள்வியும் கேட்க முடியாது. மைன்ட் இட்..” என்றவள்,
“சீக்கிரத்துல சந்திப்போம்..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
‘இப்ப எதுக்கு இங்க வந்தா..? எதுக்கு தேவையில்லாம பேசிட்டு போறா..? இவ எப்ப எப்படி இருப்பான்னே தெரிய மாட்டேங்குதே..?’ என்றவனுக்கு அவள் சென்ற பின்பு தான் நிம்மதியான மூச்சே வந்தது.
‘இவ மயக்குறாளோ இல்லையோ, நான் மயங்கிடுவேன் போல..’ என்றவனுக்கு துவாரகி விஷயத்தில் தன்மீதே நம்பிக்கையில்லை.
அடுத்தநாள், ஆதித்ய வர்மாவின்..கட்சியின் பெயரும், கட்சி கொடியும் ரெடியாகியிருந்தது. அதற்கு அதிகாரப் பூர்வமான அனுமதியையும் வாங்கிவிட்டிருந்தான்.
‘மக்களாட்சி மன்ற கட்சி…’ யும், அதன் கட்சிக் கொடியும் இப்போது ஆதித்ய வர்மாவின் கையில்.