ஆகாயம் 17:
விக்ரமின் நினைவில் மூழ்கியிருந்த துவாரகியை நினைவிற்கு இழுத்து வந்தது ஆதியின் போன். போனின் திரையில் அவனுடைய நம்பரைப் பார்த்த துவாரகிக்கு முதலில் நம்ப முடியவில்லை. ஒருமுறை அடித்து நின்று மறுமுறை அடிக்கவும் தான், அவளால் நம்ப முடிந்தது. எதிர்பார்த்த நேரத்தில் வராத அவனுடைய போன், எதிர்பாராத நேரத்தில் வந்திருந்தது.
“சொல்லுங்க..” என்றாள் எடுத்த எடுப்பில்.
“எங்க இருக்கீங்க டாக்டர்..?” என்றான் ஆதி.
“டாக்டர் எங்க இருப்பாங்க..? ஹாஸ்பிட்டல் தான்..” என்றாள் கடுப்பாக.
“என்ன பேச்செல்லாம் கடுப்பா வருது..?” என்றான்.
“அப்பறம் எடுப்பாவா வரும்..? என்ன விஷயம்..?” என்றாள்.
“இனி அம்மா உன்னோட ஹாஸ்பிட்டலுக்கு வரமாட்டாங்க. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்..” என்றாள்.
“அதை நீங்க சொல்லக் கூடாது..” என்றாள் கோபமாய்.
“நான் சொல்லாம, வேற யார் சொல்லுவாங்க. அவங்களுக்கு ரெஸ்ட் தேவை. அவங்களை வேலைக்கு அனுப்பி தான் ஆகணும்ன்னு எந்த கட்டாயமும் இல்லை. அவங்களா விருப்பட்டு வந்தாங்க. இப்போ அவங்களே முடியலைன்னு சொல்றாங்க..” என்றான் ஆதி.
“நீங்க சொல்ல வச்சிருப்பிங்க..? உங்களைப் பத்தி எனக்குத் தெரியாது..?” என்றாள் எரிச்சலுடன்.
“என்னைப் பத்தி என்னடி தெரியும் உனக்கு..? நானும் பார்த்துட்டே இருக்கேன், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்க?” என்றான்.
“நான், வாய்க்கு வந்ததை பேசுறேனா..?எல்லாம் என் நேரம்..? எதையும் நீங்களா முடிவு பண்ண முடியாது. அவங்களே நேர்ல வந்து சொல்லிட்டு, சைன் பண்ணிட்டு போனாதான், அவங்களை ரிலீவ் பண்ண முடியும். அதான் நடைமுறையும் கூட..” என்றவள் அதற்கு மேல் பேசாமல் வைத்துவிட்டாள்.
போனை வைத்தவனுக்கு எரிச்சலாக இருந்தது.
‘இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கடுப்பா போனை வைக்கிறா..? அப்பனுக்கு இருக்குற திமிர் அப்படியே இருக்கு..’ என்று எரிச்சலுடன் தனக்குத் தானே பேசிக் கொண்டான்.
“யார்கிட்ட இவ்வளவு கோபமா பேசிட்டு வைக்கிற துவாரகி..?” என்றபடி வந்தான் சம்பத்.
“வேற யாரு..? எல்லாம் என்னோட அருமை புருஷன் தான்..” என்றாள் கடுப்புடன்.
“இப்போ ஆதிக்கு என்ன..? நீ இவ்வளவு கடுப்பாகுற அளவுக்கு என்ன பிரச்சனை..?” என்றான்.
“பின்ன என்ன..? பார்கவி ஆன்ட்டி இனி ஹாஸ்பிட்டல் வர மாட்டாங்களாம். அதை இவரு போன் பண்ணி சொல்றாரு. எரிச்சல் வருமா வராதா..?” என்றாள்.
“நியாயமா பார்த்தா, அவன் சொல்றது தான் சரி துவாரகி..” என்றான் சம்பத்.
“நீங்களுமா சம்பத்..?” என்றாள்.
“உண்மைதான்..! ஏகனவே இவ்வளவு பெரிய ஹீரோவோட அம்மா, எதுக்காக சொந்தமா ஹாஸ்பிட்டல் வைக்காம, வேற ஹாஸ்பிட்டல்ல டாக்டரா இருக்காங்கன்னு வெளிய ஒரு பேச்சு அடிபடுது. இப்போ நீ அந்த வீட்டு மருமகள் வேற. இனியும் அவங்க இங்க இருந்தா, அது நல்லா இருக்காது. ஆதியோட அரசியல் வருகையில் சில விஷயங்களை செஞ்சு தான் ஆகணும். அதுல இதுவும் ஒன்னு. உங்கப்பாவுக்கு எதிரா அவன் வைக்கிற ஒவ்வொரு அடியும் சரியா இருக்கணும். அந்த நேரத்துல இந்த உறவு முறைகள் கொஞ்சம் சங்கடத்தை கொடுக்கும். அதனால தான், ஆதி இந்த முடிவை எடுத்திருக்கணும்..” என்றான் சம்பத்.
“அப்படிப் பார்த்தா, நான் கூட அவருக்கு மனைவி தான். என்னையும் தான, அவர் கூட்டிட்டு போகணும்..?” என்றாள் துவாரகி. அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
“நீ வரேன்னு சொல்லி, அவன் மாட்டேன்னு சொல்லையே..?” என்ற சம்பத்தின் கேள்வி, அவள் பொட்டில் அறைய, அமைதியாக இருந்து விட்டாள் துவாரகி.
“உன்னை சொல்லிக் காட்டணும்ன்னு நான் இதை சொல்லலை துவா..” என்றான்.
“புரியுது சம்பத்..” என்றாள் துவாரகி.
“சரி சொல்லு.. நான் என்ன பண்ணனும்..எதுக்காக உடனே வர சொன்ன..?” என்றான்.
“ஆதி எடுத்து வைக்கிற ஒவ்வொரு மூவ்வும் சரியா தான் இருக்கு. ஆனா, அது மட்டும் அரசியலுக்கு பத்தாதே..?” என்றாள்.
“அவன் வேற எதுவுமே பண்ணலைன்னு உன்கிட்ட சொன்னானா..? ஆதிக்கு எதை எப்படி செய்யனும்ன்னு நல்லா தெரியும்..” என்றான்.
“அப்படி இல்லை..! அப்பா இப்போ புதுசா எலக்சனுக்கு ஒரு ஐ-பேக் டீமை கூட வச்சிருக்கார். அரசியல்ல அவங்க வகுத்துக் குடுக்குற வியூகப் படி தான் இவங்க ஒவ்வொன்னும் செய்வாங்க. அதுக்காக அந்த டீம்க்கு ஒரு பெரிய தொகை கைமாறியிருக்கு..” என்றாள்.
“இதுல நாம என்ன செய்ய முடியும்..?” என்றான் சம்பத்.
“ஐ-பேக் டீமை வச்சு எல்லாத்தையும் வாங்க எங்கப்பா பிளான் போட்டிருக்கார். நாம அந்த ஐ-பேக் டீமையே விலைக்கு வாங்கணும்..” என்றாள் தீவிரமாக.
“என்ன விளையாடுறியா..துவாரகி..? அதுக்கு எவ்வளவு பணம் செலவாகும்..?” என்றான் சம்பத்.
“எவ்வளவு வந்தாலும் பரவாயில்லை. அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. அந்த ஐ-பேக் டீமை நம்ம கைக்குள்ள கொண்டு வரணும். அவங்க எல்லா வியூகமும் என்னோட அப்பாவுக்கு வகுத்துத் தரனும். ஆனா, அது எல்லாமே அவரோட வெற்றிக்கா இருக்கக் கூடாது…” என்றாள் துவாரகி.
“அவனவன், அங்க விழுந்து விழுந்து பிளான் போட்டா, நீ பிளான் போடுற மூளையையே நம்ம வசம் கொண்டு வரணும்னு சொல்ற…? கிரேட் பிளான் தான். விஷயம் ஆதித்ய வர்மா காதுக்கு போய்ட்டா..?” என்றான் சம்பத்.
“ஆதிக்கு, விஷயம் எக்காரணம் கொண்டும் தெரியக் கூடாது. இதுல என்னோட தலையீடு இருக்குன்னு ஆதிக்குத் தெரிஞ்சா, அவர் வேற மாதிரி ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சுடுவார்..” என்றாள்.
“நீ எந்த ஸ்டெப்பும் எடுக்கலைன்னாலும், ஆதி வின் பண்ணிடுவான்னு தான் எனக்குத் தோணுது..” என்றான் சம்பத்.
“அப்படியே இருந்தாலும், நான் சும்மா இருக்கக் கூடாதுல்ல..” என்றாள்.
“நீ அவனுக்கு ஆப்போசிட்டா தேர்தல்ல நிக்கிறது, ஆதிக்கு ஈகோவைத் தூண்டி விடாதா துவாரகி..?” என்றான் சம்பத்.
“விக்ரம் சொன்னதை வைச்சுப் பார்த்தா, கண்டிப்பா ஆதி அப்படிப்பட்ட கேரக்டர் இல்லை. அதுமட்டுமில்லாம, இத்தனை நாள்ல வராத ஒரு ஈகோ பிராப்ளம் இப்ப வந்துடுமா என்ன..? இதுக்கு முன்னாடி நான் புரிஞ்சுக்காம இருந்திருக்கலாம். ஆனா, இப்பவும் அப்படியே இருக்க மாட்டேன் சம்பத். அப்படியே ஈகோ பிராப்ளம் வந்தாலும், அதை எப்படி சரி செய்யனும்ன்னு எனக்குத் தெரியும்..” என்றாள் துவாரகி.
“விக்ரம் இறப்புக்கு உங்கப்பா தான் காரணம்ன்னு ஆதிக்குத் தெரிஞ்சிருக்குமோ..?” என்றான் சம்பத்.
அவனின் கேள்விக்கு பதில் எதுவும் பேசாத துவாரகி சிரித்துக் கொண்டாள்.
“விக்ரம் ரொம்ப நல்லவன் சம்பத். அவனுக்கு அவன் அண்ணன்னா அப்படி ஒரு பாசம். அதான், இவனுக்காக அவன் போய் சேர்ந்துட்டான். இந்த விஷயம் எனக்கும் தெரியாமையே போயிருந்தா என்ன நடந்திருக்கும்..? இப்போ வரைக்கும் நான் என் அப்பாவை நல்லவர்ன்னு கொண்டாடிட்டு இருந்திருப்பேன். விக்ரம் மட்டுமில்லை, இன்னும் அவரை எதிர்த்த பலபேரை அவர் என்ன கதிக்கு ஆளாக்கியிருக்கார்ன்னு, அவரோட மகளா இல்லாம, வெளி ஆளா இருந்து பார்க்கும் போது தான் பல உண்மை தெரிய வருது.அவர் என்ன செஞ்சாலும் எனக்கு அப்பா. அந்த ஒரு உறவை நான் நேரடியா உடைக்க விரும்பலை. எனக்கு நல்ல அப்பாவாத்தான் அவர் இருந்திருக்கார்..” என்றவளுக்கு கண்கள் கலங்கியதோ என்னவோ.
“விடு துவாரகி. தேவையில்லாத எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காத..?” என்ற சம்பத் அவளிடம் விடை பெற்று சென்று விட்டான்.
ஆதியின் வீட்டில்…
“துவாரகிக்கு போன் பண்ணி எதுக்காக அப்படி சொன்ன ஆதி..?” என்று அவனை பிடித்துக் கொண்டார் பார்கவி.
“அம்மா புரிஞ்சுக்கோங்க..! இனி நீங்க அங்க போறது அவ்வளவு நல்லாயிருக்காது. பல பிரச்சனைகளுக்குத் தான் வழிவகுக்கும்..” என்றான். ஆதி.
“இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். அரசியலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்ன்னு. யாரு கேட்டிங்க..? இப்பப் பாரு, சுதந்திரமா ஒன்னு கூட செய்ய முடியலை..”என்றார் பார்கவி.
“உங்களோட விருப்பத்துக்கு மாறா, எதுவுமே நடக்காதும்மா. ஆனா, இந்த ஒரு விஷயத்துல மட்டும் என்னோட பேச்சைக் கேளுங்க..” என்றான் ஆதித்ய வர்மா.
“நான் துவாரகி ஹாஸ்பிட்டலுக்கு போகனுன்னு ஆசைப்பட்டது விக்ரம் தான். அவன் சொன்ன வார்த்தைக்கு தான் போனேன். எனக்கும் அங்க போனா, என்னவோ விக்ரமே என்கூட இருக்குற மாதிரி இருக்கு. நீயும் எப்பப் பாரு ஷூட்டிங் போயிடுற. போதாததுக்கு இப்போ அரசியல் வேற…? நான் என்னதான் பண்றது ஆதி..?” என்றவருக்கு விக்ரமின் நினைப்பு வந்திருக்க வேண்டும். அவரின் கண்கள் கலங்கித் தெரிந்தது.
“என்னம்மா சொல்றிங்க..? விக்ரம் அப்படி சொன்னானா..? நீங்க என்கிட்டே வேற மாதிரி தான சொன்னிங்க..? விக்ரம் பிரண்ட் ஹாஸ்பிட்டல். அவன் ப்ரண்டுக்காகத் தான் அவனும் போறான், நானும் போறேன். அப்படின்னு தான சொன்னிங்க..?” என்றான் ஆதி அதிர்ச்சியாய்.
“ஆமா, சொன்னேன். துவாரகி நம்ம விக்ரம் பிரண்டு தான..? அதைத் தான் சொன்னேன். நீ இருந்த பிசியில இதையெல்லாம் கவனிக்கவா உனக்கு நேரமிருந்திருக்கும் ஆதி..?” என்றார் பார்கவி.
“விக்ரம் பிரண்டு துவாரகி இவளா..?” என்றான் அதிர்ச்சி மாறாமல்.
“என்ன ஆதி..? காந்தி செத்துட்டாரான்னு கேட்கிற மாதிரி கேட்கிற..? விக்ரம் இருந்தப்பவே துவாரகி ரெண்டு, மூணு தடவை நம்ம வீட்டுக்கு வந்திருக்கா. ஆனா, நீதான் அப்போ இல்லை..” என்றார் பார்கவி.
“இதையேன் நீங்க என்கிட்டே முன்னாடியே சொல்லலை..?” என்றான் ஆதி.
“உனக்கு விஷயம் தெரியாதுன்னே, எனக்கு இப்பத்தான தெரியும். துவாரகி சொல்லியிருப்பான்னு நினைச்சேன். அவளும் சொல்லலையா..?” என்றார் பார்கவி.
ஆதிக்கு என்னவோ எங்கோ இடிப்பதைப் போல் இருந்தது. விக்ரம் இருக்கும் போது, ஆதியிடம் சொல்லியிருக்கிறான். ஆனால், அவன் தான் சரியாக கவனிக்காமல் இருந்திருக்கிறான்.
‘துவாரகி ஏன் இதை ஒரு தடவை கூட என்கிட்டே சொல்லலை. அவளும் எனக்குத் தெரியும்ன்னு நினைச்சு இருந்தாளா..? இல்லை, சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சு இருந்தாளா..?’ என்றவனுக்கு மனதில் பல குழப்பங்கள்.
‘கல்யாணத்துக்கு முன்னாடியே அதை நிறுத்த சொல்லி வந்ததுக்கு ஒரு வேலை விக்ரம் தான் காரணமா இருந்திருப்பானோ..? ஒருவேளை விக்ரமும், துவாரகியும் லவ் பண்ணியிருப்பாங்களோ..? அதனால தான் துவாரகி கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னாளா..? அப்போ விக்ரம் எப்படி இறந்தான்னு அவளுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்குமா..? அவங்க அப்பா தான் காரணமுன்னு தெரிஞ்சிருக்குமா..? அப்படியே தெரிஞ்சிருந்தாலும், இத்தனை நாள் அவ அமைதியா இருக்கக் காரணம் என்ன..?’ என்ற பல கேள்விகள் அவனுக்குள். ஆனால் ஒன்றுக்குக் கூட பதில் தான் தெரியவில்லை.
ஏற்கனவே வந்தது முதல், ஓய்வில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது புதிதாய் தெரிந்த விஷயமும் சேர்ந்து கொள்ள, தலைவலி அதிகம் தான் ஆனது.
யோசனையுடன் அறைக்கு சென்றவனுக்கு, என்ன தோன்றியதோ தெரியவில்லை. அத்தனை நாட்கள் பூட்டிக் கிடந்த விக்ரமின் அறைக்குள் சென்றான்.
அவன் உயிருடன் இருக்கும் போது பயன்படுத்திய அறை இப்போதும் அப்படியே இருந்தது. அவன் படித்த மெடிக்கல் சம்பந்தமான புத்தகங்கள் அறைமுழுவதும் இருக்க, அவன் அந்த துறையில் எவ்வளவு ஆர்வம் கொண்டவன் என்பதை அந்த புத்தகங்கள் பறை சாற்றின. அவனுடைய ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்த ஆதிக்கு கிடைத்தது அந்த போட்டோ ஆல்பம். அவன் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் இருந்து அனைத்தும் அதில் இருக்க, அதில் துவாரகியை தேடி சலித்து விட்டான் ஆதி. ஒன்றில் கூட அவள் இல்லை. அவனுடைய டிராவில் இருந்த பெண்டிரைவை எடுத்து வந்து தன்னுடைய லேப்டாப்பில் போட்டவனுக்கு, அவன் தேடியது எல்லாமே கிடைத்தது.
துவாரகியும், விக்ரமும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், அவர்கள் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், என அனைத்தும் அதில் இருக்க, விக்ரமுடன் சந்தோஷமாய் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருந்த துவாரகியை, நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பதை போன்று இருந்தாள். அப்படி துடிப்பும், அழகுமாக இருந்த துவாரகிக்கும், இப்போது இருக்கும் துவாரகிக்கும் அத்தனை வித்யாசங்கள். அந்த அனைத்து சந்தோஷங்களையும் அவள் முகம் இப்போது தொலைத்திருந்தது.
பார்கவி, சம்பத் என அவன் சம்பந்தப்பட்ட அனைவருடனும் அவள் போட்டோ எடுத்திருந்தாள், ஆதியைத் தவிர. அதையெல்லாம் பார்த்த ஆதி, சிரித்துக் கொண்டான் மனதிற்குள்.
‘என் வீட்ல இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு.ஆனா நான், கூகுள்ள போட்டு உன்னைப் பார்க்குற அளவுக்கு இருந்திருக்கேன்..’ என்று நினைத்தவனுக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
‘விக்ரம் துவாரகியை விரும்பியிருப்பானோ..? அதனால தான் என்கிட்டே சொல்லலையோ..?’ என்று அப்படியும் நினைத்துக் கொண்டான் ஆதி.
ஒரு மனிதன் எவ்வளவு மனோதிடம் உள்ளவனாக இருந்தாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனதிற்கு நெருக்கமானவர்களை அவன் மனம் தேடும். ஆதித்யாவின் மனமும் இப்போது அப்படித்தான் தேடியது துவாரகியை. என்னதான் வெறுப்புத் திரையை முகத்தில் போட்டுக் கொண்டாலும், மனதிற்குள் இருக்கும் ஆழ்மன உணர்வுகளுக்கு அவனால் எந்த திரையையும் போட முடியவில்லை.
திடீரென்று இப்படி தோன்ற காரணம் என்ன..? என்று அவனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை துவாரகி தம்பியை விரும்பியிருப்பாளோ என்ற பதபதைப்புக் கூட காரணமாக இருக்கலாம்.
தன்னுடைய அறைக்கு வந்து வெகு நேரமாகியும் அவனுடைய தவிப்பு அடங்க மறுத்தது. பல பிரச்சனைகள் அவன் தலைக்குள் உருண்டு கொண்டிருக்க, எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி, துவாரகியின் அருகாமைக்கு அவன் மனம் ஏங்கியது தான் உண்மை. அதை ஏற்றுக் கொள்ள அவன் ஈகோ தடுத்தாலும், மனம் விடவில்லை.
ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த துவாரகி, போனில் ஆதித்யாவின் அழைப்பைப் பார்த்து திகைத்தாள்.
‘என்ன இந்த நேரத்துல கால் பண்றான். எப்பவும் பண்ண மாட்டானே..?’ என்று நினைத்தபடி எடுக்க,
“ஹலோ..” என்றாள் அமைதியாக.
“எனக்கு இப்பவே உன்னை பார்க்கணும் ரகி..” என்ற ஆதித்யாவின் ஆழ்ந்த குரலைத்தான் அவள் முதலில் கேட்டது. முதன் முறையாக அவன் ஆழ்மனதில் இருந்து வரும் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் உருவாக்கிய தாக்கத்தை, வேறு எந்த விஷயமும் உருவாக்கிட முடியாது. ஆதியின் வார்த்தைகளைக் கேட்ட துவாரகியின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக கீழிறங்க…
“லைன்ல இருக்கியா ரகி..?” என்று அவன் மீண்டும் கேட்க,
“ம்ம்ம்..” என்றாள் கஷ்ட்டப்பட்டு.
“எங்க இருக்க..?”
“ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பிகிட்டு இருக்கேன்..” என்றாள்.
“நான் வரேன்..” என்றான்.
“இல்லை வேண்டாம். நானே வரேன்..” என்றவள் போனை வைத்துவிட்டாள்.
வீட்டிற்கு போன் செய்தவள்,
“அம்மா, நான் இன்னைக்கு ஹாஸ்பிட்டல்லயே இருந்துக்கிறேன்..” என்றாள்.
“என்னவாம்..?” என்றார் கருணைநாதன்.
அருணா விஷயத்தை சொல்ல, கருணைநாதன் மகனை அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்தார்.
உடனே சசிதரன் தன்னுடைய செல்லில் யாருக்கோ அழைக்க,
“ஆமா சார்..! மேடம் இங்க தான் இருக்காங்க. இன்னைக்கு நைட் ரெண்டு டெலிவரி கேஸ் இருக்கு..” என்றாள் அவள். அவள் போனை வைக்க,
“தேங்க்ஸ்..” என்றாள் துவாரகி அந்த நர்ஸைப் பார்த்து.
“என்ன டாக்டர்..? நீங்க எனக்குப் போய் நன்றியெல்லாம் சொல்றிங்க..?” என்று அந்த நர்ஸ் சங்கடப்பட, அங்கிருந்து வேகமாய் கிளம்பினாள் துவாரகி.
‘என்னாச்சு ஆதிக்கு..? எப்பவும் இப்படி பேச மாட்டானே..?’ என்ற பதைபதைப்பு ஒருபுறம் மனசுக்குள் இருந்தாலும்… இன்று, தானே அங்கு செல்வதாகத் தான் இருந்தாள். அவனை நேரில் சென்று காணும் வரை இருந்த பதைபதைப்பு அவனைக் கண்டவுடன் நொடியில் இல்லாமல் போனது.
இத்தனை நாள் பார்த்த தெளிவான ஆதித்யா அவன் இல்லை. அவனைப் பார்க்கும் போதே ஒரு சுறுசுறுப்பு வந்து ஒட்டிக் கொள்ளும். இன்று ஏனோ அவன் மிகவும் சோர்வாய் இருந்தான்.
அந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்காத பார்கவி,
“என்னம்மா துவா இந்த நேரத்தில்..? எதுவும் பிரச்சனையா..?” என்றார்.
“இதுக்கு முன்னாடி நான் இந்த நேரத்துல வந்ததே இல்லையா ஆன்ட்டி. இன்னைக்கு மட்டும் புதுசா கேட்குறிங்க..?” என்றாள் துவா.
“இல்ல துவா, ஆதி போன் பண்ணி நான் வரமாட்டேன்னு சொன்னது உனக்கு கோபமோ என்னமோன்னு நினைச்சுக் கேட்டேன்..” என்றார்.
“நான் என் புருஷனைப் பார்க்க வந்தேன் ஆன்ட்டி. இது என் வீடு தான..? இங்க நான் எப்ப வேணும்ன்னாலும் வருவேன்..” என்றாள்.
“நான் அதுக்கெல்லாம் ஒன்னும் சொல்லலை துவாரகி. அவன் கோபமா பேசினாலும், நீ எதுவும் மனசுல வச்சுக்காதம்மா.?” என்றார்.
“டேய் ஆதி..? உன்னை இன்னுமா இந்த உலகம் நம்புது..? போன் பண்ணாதே நீதான்னு தெரியாம, உங்கம்மா இங்க ஓவர் அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்களே..?” என்று மனதிற்குள் நினைத்தவள்,
“ஆதி என்ன பேசினாலும், நான் வாயே திறக்க மாட்டேன். ஓகேவா..” என்றாள்.
“சாப்பிட்டியா துவா..?” என்றார்.
“இன்னும் இல்லை ஆன்ட்டி. நீங்க தூங்குங்க. பசிச்சா, நானே வந்து சாப்பிட்டுக்கிறேன்..” என்றவள், ஆதியைத் தேடி சென்றாள்.
இவ்வளவு நேரம் இருந்த வேகம், அவன் இருந்த அறைக்குள் செல்ல செல்ல குறைந்து போனது.
“புருஷனைப் பார்க்க வரதுக்கு கூட எத்தனை விஷயத்தை தாண்டி வர வேண்டியது இருக்கு..?” என்று மனதிற்குள் நொந்து கொண்டவள்,
அறைக்குள் நுழைந்தது தான் மாயம். ஆதியை அவள் சரியாக பார்க்கக் கூட இல்லை. அடுத்த நிமிடம் அவனுடைய இறுகிய அணைப்பில் இருந்தாள். அவன் திடீரென்று வந்து இப்படி அணைப்பான் என்று எதிர்பார்க்காத துவாரகி, தடுமாறி விழப் போக, அவளை அவன் விழ விடவில்லை. அவன் அணைப்பின் இறுக்கம் கூடிக் கொண்டு தான் போனதே தவிர, குறையவில்லை. எதிர்பாராத அணைப்பு என்றாலும், அந்த நிமிடம் துவாரகி அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை.
எங்கே கருணைநாதன் மேலிருக்கும் கோபத்தில் தன்னை வெறுத்து விடுவானோ என்று துவாரகி ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டிருக்க, அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதைப் போன்று இருந்தது அவனுடைய அணைப்பு. அந்த அணைப்பிற்குள் துவாரகி விரும்பியே தொலைந்து போனாள். எங்கெங்கோ ஓடிய அதிர்வலைகள் அவனிடம் தான் முற்று பெற்றது.
அவன் ஏதோ ஒரு விஷயத்தில் கலங்கியிருப்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அவளும் கலங்கித் தானே போயிருக்கிறாள் இத்தனை நாளாய். துணையிடம் தேடிய அந்த ஆறுதல் தான் ஆதித்யாவின் ஆசுவாசம்.
“என்னாச்சு ஆதி..?” என்றாள், அவனுடைய அணைப்பு கொஞ்சம் இலகும் போது.
“நான் விக்ரமை ரொம்ப மிஸ் பண்றேன். அவன் பக்கத்துல இருக்கும் போது, அவன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண நேரம் இருந்ததில்லை. இப்போ நான் இருக்கேன், அவன் இல்லை..” என்றான் ஆதி. துவாரகிக்குத் தெரிந்து ஆதி இப்படி மனம் திறந்து அவளிடம் பேசியது இதுவே முதல் முறை.
ஏனோ அவன் விக்ரமைப் பற்றி பேச்சை எடுத்தவுடன், அவளுக்கும் கண்கள் கலங்க, அவளின் கண்ணீரை உணர்ந்தவன், அவளை விலக்கினான்.
“விக்ரமுக்கும் உனக்கும் எப்படி பழக்கம்..? காதல் இல்லைதானே..? நீ வற்புறுத்தி வேணாம்ன்னு சொல்லியும், நான் கல்யாணம் பண்ணி, அவனுக்கு நான் ஏதும் துரோகம் பண்ணிடலை தானே..?” என்றான் மூச்சு விடாமல்.
அவன் ஏன் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறான் என்று அப்போது அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவன் எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்க்க,
“கண்டிப்பா இல்லை..” என்றாள். அந்த வார்த்தையை அவள் வாயிலிருந்து கேட்ட பிறகு தான், அவனுக்கு உயிரே திரும்பி வந்தது.
துவாரகி மனப்பூர்வமாக சம்மதித்து ஆதியைத் திருமணம் செய்திருந்தால், அவனுக்கு இந்த குற்ற உணர்வு இருந்திருக்காது. தம்பியின் காதலியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டோமோ என்ற உணர்வு தான் அவனுக்கு இவ்வளவு நேரமும்.
“நான் சந்தேகப்பட்டு எதுவும் கேட்கலை ரகி..” என்றான், அவளிடம் புரிய வைத்துவிடும் நோக்கத்துடன்.
“நீங்க அப்படி கேட்டிங்கன்னு நானும் நினைக்கலை ஆதி. எனக்கு விக்ரம் பத்தியும் தெரியும், உங்களைப் பத்தியும் தெரியும்..” என்றாள் துவாரகி.
“தேங்க்ஸ் ரகி..” என்றவன், அவளை மீண்டும் அணைத்துக் கொள்ள, அவனின் கைகளுக்குள் வாகாய் பொருந்திக் கொண்டாள் துவாரகி.
‘விக்ரமோட இறப்புக்கு இவளோட அப்பாத்தான் காரணமுன்னு தெரிஞ்சா, துவா என்ன பண்ணுவா..? அதை இவளால தாங்க முடியுமா..?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,
‘எனக்குத் தெரியும் ஆதி. இப்போ தெரிஞ்ச உங்களாலயே தாங்க முடியலை. தெரிஞ்ச நாள்ல இருந்து, ஒவ்வொரு நாளையும் எப்படிக் கடந்தேன்னு எனக்கே தெரியலை ஆதி..’ என்று துவாரகி மனதிற்குள் பேசிக் கொண்டாள்.
எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், தனக்கு ஆறுதல் தேடும் பெண்ணிடம் அவன் அடிமை தான். ஆதியின் நிலையும் அப்படித்தான்.
“ஆதி, நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததுல இருந்து இன்னும் குளிக்க கூட இல்லை..” என்று அவள் சொன்ன பிறகு தான் அவளை விட்டான்.
“சாரி துவா..” என்றவன் அங்கிருந்த பால்கனிக்கு சென்று விட்டான். அங்கிருந்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவன்,
“நீ எப்படி வந்த துவா..? நான் வந்து டிராப் பண்ணிட்டு வரவா..?” என்றான்.
“நாளைக்கு தான் போவேன்..” என்றாள்.
“எப்படி விட்டார் உங்கப்பா..?” என்றான் நக்கலுடன்.
“நான், ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்..” என்றாள்.
“ஹாஸ்பிட்டல்லா..? அன்னைக்கும் பொய் சொல்லிட்டு தான் வந்திருக்க, அப்படித்தான..?” என்றான்.
“உண்மையை சொன்னா விட மாட்டாங்கன்னு தெரியும்ல..” என்றாள்.
“அப்படி பொய் சொல்லிட்டு வரவேண்டிய அவசியம் என்ன வந்தது..? நான் உனக்கு புருஷன் தான..? யாரையோ பார்க்க போற மாதிரி ஏன் பொய் சொல்லிட்டு வரணும்..?” என்று கோபமாய் கத்த ஆரம்பித்தான் ஆதி.
“ஆதி, இப்போதைக்கு நிலைமை சரியில்லை..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, வேகமாய் போனை எடுத்து சசிதரனுக்கு அழைத்தான் ஆதி.
“என்ன விஷயம்..?” என்றான் சசி எடுத்த எடுப்பில்.
“என் பொண்டாட்டி என்கூடத் தான் இருக்கா. நான் தான் அவளை இப்போ கூட்டிட்டு வந்தேன். காலையில வீட்டுக்கு வருவா… இல்லையில்ல, நான் வந்து விட்டுட்டு வருவேன்..!” என்றான் ஆதி தெனாவெட்டாக.
“என்னடா, பொண்டாட்டியை வச்சு, எங்களை மடக்கலாம்ன்னு பார்த்தியா..?” என்றான் சசி.
“அவளை வச்சு உங்க காரியத்தை முடிக்கனும்ன்னா, அதை நான் என்னைக்கோ பண்ணியிருப்பேன்டா.. எனக்கு நேரா மோதித் தான் பழக்கம். விடியற வரைக்கும் ஒரு அவஸ்தையோட இனி அவ இருக்க வேண்டாம் பாரு. அதான் இன்பார்ம் பண்ணேன்..” என்றவன் போனை வைத்து விட்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த துவாரகிக்கு, ஒரு கணவனாய் அவனை அவ்வளவு பிடித்தது அந்த நிமிடம். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். மறுநாளில் இருந்து எலக்சன் வேலைகள் அதிகமாக இருப்பதால், இனி அவனை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கமும் அவளுக்குள் இருந்தது.
அங்கே கனகவேல், திவ்யா இவனை சந்திக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.