ஆகாயம் 16
தன் கண்முன்னால் இருந்த அனைத்து ரிப்போர்ட்டுகளையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வர்மா. அவன் கேட்டதைப் போல், அவன் ஷூட்டிங் முடித்து வருவதற்கும் , உளவுத் துறை ரிப்போர்ட்டுகள் வருவதற்கும் சரியாக இருந்தது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதிற்குள் என்ன தோன்றியது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
தீவிர சிந்தனையில் இருந்தவனை கலைத்தது கவினின் குரல்.
“சார், நீங்க கேட்ட எல்லா டீட்டைல்சும் பக்காவா இருக்கு சார். எல்லாமே போலீஸ் டிப்பார்மென்ட்ல இருந்து ரிட்டையர்ட் ஆனவங்களை வச்சு தான் கலெக்ட் பண்ணியிருக்கோம். நீங்க சொன்ன மாதிரி எலக்சன் முடியற வரைக்கும் அவங்க டெம்ப்ரவரியா வொர்க் பண்ற மாதிரி பேசி ஓகே பண்ணியாச்சு சார். சிலர் டீடைல்ஸ டாக்குமென்ட்ல குடுத்திருக்காங்க. இன்னும் சிலர் அதை வீடியோ கவரேஜாவே குடுத்திருக்காங்க சார்…” என்றான் கவின்.
“உண்மைதான் ஆதி..! அவங்க ரிப்போர்ட் எல்லாம் நான் மேக்சிமம் ஸ்டடி பண்ணிட்டேன். நீங்களும் ஒரு தடவை பார்த்துடுங்க..” என்றார் வாசுகி. இவர் ரிட்டையர்ட் ஐஏஎஸ்.
“இந்த ரிப்போர்ட் என்ன சொல்லுது ஆன்ட்டி..?” என்றான் ஆதி.
“இந்த ரிப்போர்ட்ல எதுவுமே இப்ப இருக்குற ஆளுங்கட்சிக்கு சாதகமா இல்லை. எல்லாமே நம்ம எதிர்பார்த்த அளவுக்கு தான் இருக்கு. அதே சமயம் எதிர்க்கட்சி தலைவர சக்ரபானிக்கு ஆதரவா நிறைய விஷயம் இருக்கு..” என்றார் வாசுகி.
“ஓகே..” என்றவன்,
“கவின், அடுத்து என்ன செய்யனும்ன்னா..? எல்லா கவர்மென்ட் ஸ்டாப்ஸ், அவங்களோட கோரிக்கை என்ன..? அவங்களுக்கு யார் மேல கோபம் அதிகம் இருக்கு..?அவங்க மத்தியில நிலவுல சூழ்நிலை என்ன..? இப்படி அரசாங்க ஊழியர்களோட ஒட்டு மொத்த மனநிலை முதற்கொண்டு அத்தனை நிலவரமும் எனக்கு வேணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஆனா, எல்லா தகவலும் பக்காவா இருக்கணும். முக்கியமா, அவங்கல்ல எத்தனை பேர் ஆளுங்கட்சிக்கு சப்போர்ட்,எத்தனை பேர் எதிர்கட்சிக்கு சப்போர்ட் அப்படின்ற விஷயம் தெளிவா தெரியனும்..” என்றான் ஆதித்ய வர்மா.
“சார் இதெல்லாம் எப்படி உடனே செய்ய முடியும்..?” என்ற கவின் திகைக்க,
“முட்டாள் மாதிரி பேசாத கவின். சொல்லப் போனா இது தான் ஈசியான விஷயம். எல்லா கவர்மென்ட் ஆபீஸ்ல இருக்குற பியூன் நம்பரை மட்டும் கரெக்ட் பண்ணு. அப்பறம் பியூனையே கரெக்ட் பண்ண சொல்லு. பியூன்தானன்னு நாம நினைப்போம். அந்த ஒட்டு மொத்த டிப்பார்ட்மென்ட் சம்பந்தமான எல்லா விஷயமும் அவங்களுக்குத் தான் தெரிஞ்சிருக்கும். முக்கியமா அங்க வேலை செய்றவங்களைப் பத்தி…” என்றான் ஆதி கோபமாக.
“பிகரை கரெக்ட் பண்ற வயசுல பியூனை கரெக்ட் பண்ண சொல்றாரே..?” என்று நினைத்த கவின், மனதிற்குள் நொந்து கொண்டான்.
“ஆதி இதெல்லாம் சரியா வருமா..? ஏன் கேட்குறேன்னா.. உனக்கு ஏற்கனவே வெளிய நல்ல பேர் இருக்கு. நீ தொகுதி தொகுதியா போய் பிரச்சாரம் பண்ணினாலே, தேர்தல்ல ஜெயிக்க வாய்ப்பிருக்கு. அப்படியிருக்கும் போது, எதுக்கு இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கலெக்ட் பண்ணி, அதை வச்சு ஸ்டெப் எடுக்கணும்..?” என்றார் வாசுகி.
“நீங்க சொல்றது ஒரு விதத்துல சரிதான் ஆன்ட்டி. ஆனா, ஒரு விஷயத்தை அரசியல்ல கவனமா கவனிக்கணும் ஆன்ட்டி. ஒருத்தன் எவ்வளவு நேர்மையா இருந்தாலும், எவ்வளவு திறமையானவனா இருந்தாலும், ஏன்? எவ்வளவு ஆளுமையோட இருந்தாலும் கூட தேர்தல்ல ஜெயிக்கிறதுங்கிறது சாதாரண விஷயம் இல்லை. ஏன் அது முடியவும் முடியாது.
என்னதான் நான் பிரச்சாரம் பண்ண போனாலும், என்னைப் பார்க்கத் தான் கூட்டம் கூடுமே தவிர, என்னை தேர்தல்ல ஜெயிக்க வைக்க கூடுற கூட்டமா இருக்காது. நமக்கு நேரம் தான் வேஸ்ட். ஏன்னா, இப்ப அரசியல் பத்தி மக்கள்கிட்ட ஒரு தனிக் கணக்கு இருக்கு ஆன்ட்டி.
யார் ரோடு போட்டாங்க, யார் ஹாஸ்பிட்டல் கட்டுனாங்க..? யார் ஸ்கூல் கட்டுனாங்க..? இதெல்லாம் இப்ப இருக்குற காலகட்டத்துக்கு முக்கியமே கிடையாது. உண்மை எல்லாம் எப்பவோ மௌனமாகிடுச்சு. பொய்கள் மட்டும் தான் ஆட்டம் போடுது.
எங்கயோ என்னவோ பண்ணிட்டு போங்க..? ஆனா, அதனால எனக்கு என்ன லாபம்..? அப்படின்ற கேள்வி மட்டும் தான், நம்மூர் அரசியலோட அடிநாதமே.
70 சதவீத மக்களோட எண்ணம் என்னன்னு நினைக்கிறிங்க..? தனிப்பட்ட முறையில் தனக்கான பலன் என்னன்னு தான் பார்க்குறாங்க. சுயநலத்துக்காக காசை வாங்கிட்டு ஓட்டுப் போடுற மக்கள் தான் இங்க அதிகம் ஆன்ட்டி..” என்றான் ஆதி.
“யாரை நாற்காலியில உட்கார வச்சா, நாட்டுக்கு நல்லதுன்னு நினைச்சு யோசிச்சு ஓட்டுப் போடுறவங்களும் இருக்காங்க ஆதித்யா..” என்றார் வாசுகி.
“நானும் இல்லைன்னு சொல்லலையே..? மதி விட்ட வழிக்கு ஓட்டுப் போடுறவங்களும் இருக்காங்க, விதி விட்ட வலிக்கும் ஓட்டுப் போடுறவங்க இருக்காங்க. ரெண்டு வழிக்கும் வித்யாசம் இருக்கு ஆன்ட்டி.
அவங்க பணம் குடுக்குறாங்க, இவங்க ஒட்டு போடுறாங்க. அதோட அவங்க வேலை முடிஞ்சு போய்டுச்சு. அவங்க குடுத்த காசுக்கு சிறப்பா வேலை செஞ்சாச்சுன்ற மனநிலை தான் இங்க முக்கால்வாசிப் பேருக்கு. அதுக்குப் பிறகு நாற்காலியில இருக்குறவங்களை கேள்வி கேட்குற உரிமை இவங்களுக்கு எப்படி வரும்…?” என்றான் ஆதி.
“மக்கள் செய்றது தப்புன்னு சொல்றியா ஆதி. அப்போ அதிகார வர்க்கத்துல இருக்குறவங்க தப்பு பண்றதே இல்லைன்னு சொல்றியா..? இல்லை அவங்க செய்ற எல்லாமே சரின்னு சொல்ல வரியா..?” என்றார் வாசுகி.
“நான் அப்படி சொல்லலை ஆன்ட்டி. இப்போ நாம ஒரு சலூன் கடைக்கு போறோம். முடிவெட்ட சொல்லி தலையைக் குடுக்குறோம்ன்னு வைங்க. நம்ம தலையை ஆட்டாம நேரா உட்கார்ந்தா மட்டும் தான், நம்ம கேட்ட ஹேர்ஸ்டைல்ல சலூன் கடைக்காரன் முடியை ஒழுங்கா வெட்டுவான். அதை விட்டுட்டு, நாம தலையை ஆட்டிட்டு உட்கார்ந்திருந்தா, அவன் எப்படி ஒழுங்கா வெட்டுவான். கத்தி கழுத்துக்கு வந்தாலும் ஆச்சர்யப் படுறதுகில்லை.
அதே மாதிரி தான், எலக்சன் அப்போ மக்கள் அவங்க ஓட்டை ஒழுங்கா போடாம விட்டுட்டு, அப்பறம் நாற்காலியில இருக்குறவங்களை குற்றம் சொல்றதுல என்ன நியாயம் இருக்கு..?” என்றான் ஆதித்ய வர்மா. வாசுகி அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன ஆன்ட்டி அமைதியாகிட்டிங்க..? ஏன் இப்படிப் பார்த்துட்டே இருக்கீங்க..?” என்றான் யோசனையுடன்.
“நீ அரசியலுக்கு புதுசுன்னு நீயே சத்தியம் செஞ்சாலும் நம்ப முடியாது ஆதி. அந்த அளவுக்கு தெளிவா பேசுற..?” என்றார் வாசுகி.
“அப்படியெல்லாம் இல்லை ஆன்ட்டி..” என்று அவன் சொல்ல, கவின் வாயைப் பிளந்து பார்த்து கொண்டிருந்தான்.
“அப்போ, மக்கள்கிட்ட நேரடியா போறது பலன் தராதுன்னு சொல்ல வரீயா ஆதி..?” என்றார் வாசுகி.
“நிச்சயமா அப்படி சொல்லலை. ஆனா, எல்லா நேரமும் பலன் தராதுன்னு தான் சொல்றேன். நாம் என்னதான் ஆளும்கட்சியோட தப்பை சுட்டிக் காட்டுனாலும், கடைசி நேரத்துல நோட்டைப் பார்த்து ஓட்டைக் குத்துற மக்கள் தான் அதிகம்…அதனால” என்று அவன் நிறுத்த,
“அதனால…” என்றனர் வாசுகியும் கவினும்.
“வெயிட் பண்ணி பாருங்க..!” என்று முடித்து விட்டான் ஆதித்யா. உளவுத் துறை அதிகாரிகள் அனைவரும் அவனுக்காக காத்திருக்க, அவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிவிட்டு வந்தான் ஆதி.
“அடுத்து என்ன கவின்..?” என்றான் ஆதி.
“சார், வெளிய சின்னதா ஒரு பிரஸ் மீட். கருணைநாதன் பிரஸ்மீட்ல எதோ சொல்லியிருப்பார் போல, அதனால அடுத்து உங்ககிட்ட வந்திருக்காங்க..” என்றான் கவின்.
“இவங்களுக்கு வேற வேலை இல்லன்னு நினைச்சுடாத கவின். பொய்யை கூட அப்படியே உண்மை மாதிரி நம்ப வைக்குறதுல நம்ம மீடியாவை மிஞ்ச வேற எதுவுமே இல்லை. நம்ம இந்த எலக்சன்ல ஜெயிச்சுட்டோம்ன்னு சொன்னா, அதுல பாதி பங்கு இவங்களோடது தான்..” என்றான் ஆதி சிரிப்புடன்.
அவனுடைய கிண்டல் புரிந்த கவினும் சிரித்துக் கொண்டான்.
அவன் வெளியே வர, பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
“சார், நீங்க எலக்சன்ல நிக்கிறேன்னு சொல்லிட்டு, உங்க பட ஷூட்டிங் கிளம்பி போய்ட்டதா சொல்றாங்க. அப்போ அரசியல் உங்களுக்கு வெறும் கண் துடைப்பா சார்..?” என்றார் ஒரு பெண்.
“கண்ணைத் துடைக்க கைகுட்டை இருக்கு..? அதுக்கு எதுக்கு அரசியல்..?” என்றான் நக்கலாக.
“இப்படி சொன்னா எப்படி சார்..?” என்றார்.
“வேற எப்படி சொல்லனும்ன்னு எதிர்பார்க்குறிங்க..? வேற வேலை வெட்டி இல்லையா எனக்கு. கட்சி ஆரம்பிச்சு விளையாட, நான் என்ன சின்ன புள்ளையா..?” என்றான் ஆதி.
“சார், முதலமைச்சர் கருணை நாதன் உங்களைப் பத்தி சொன்ன கருத்துக்கு நீங்க என்ன சொல்ல போறீங்க சார்..?” என்றார் இன்னொருவர்.
“அவர் என்ன சொன்னாருன்னே எனக்குத் தெரியாதே..?” என்றான் ஆதி, கூர்மையான பார்வையுடன்.
“நடிகர்கள் அரசியலுக்கு வருவது பேஷனாகிட்டு இருக்கு. இது அவங்க நடிக்கிற படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் இல்லை. சும்மா, வந்துட்டு போறதுக்கு..?நாட்ல எவ்வளவோ நெருக்கடியான நிலையெல்லாம் வந்திருக்கு. அப்போ எங்க போனாங்க இந்த நடிகர்கள் எல்லாம்..? என்ன உதவி பண்ணாங்க இந்த நடிகர்கள் எல்லாம்..?” அப்படின்னு கேட்டிருக்கார் சார்..” என்றார்.
“இதுக்கு நான் பதில் சொல்லனுமா..?” என்று ஆதி நிறுத்த, அனைவரும் அமைதியாகினர். இருந்த சலப்புகள் எல்லாம் ஒருநிமிடம் அமைதியாக,
“ஒரு நடிகனா, நான் எந்த உதவியும் செய்யலை சரி. ஒரு முதலமைச்சரா அவர் என்ன செய்தார்..?” என்றான் ஆதி, வார்த்தைகள் தெளிவாக.
“என்ன சார், அவசரகால நடவடிக்கை எல்லாமே எடுத்தாரே. பாதிக்கப்பட்ட பகுதிக்கு எவ்வளவு உதவி செய்தார்..?” என்றார் ஒரு பத்திரிக்கையாளர்.
“இதையேன் இவ்வளவு பெரிய விஷயம் சொல்ற மாதிரி சொல்றிங்க. அது அவரோட கடமை. அதுக்காகத்தான நாற்காலில உட்கார வச்சாங்க மக்கள்..” என்று நிறுத்தியவன்,
“நான் ஒன்னு கேட்குறேன்..? முதலைமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ அவங்க அப்பன் வீட்டு காசை எடுத்தா மக்களுக்கு உதவி பண்ணாங்க. இல்லை அவங்க சொத்தை வித்து உதவி பண்ணினாங்களா..? அட அதை விடுங்க, அவங்க கொள்ளையடிச்ச காசை எடுத்தா உதவி பண்ணாங்க..? இல்லையே.. எல்லாமே மக்கள் பணம். எல்லாமே மக்களோட வரிப்பணம். அதுவும் பத்தலையா.. மத்திய அரசுகிட்ட வாங்குனா நிதிப் பணம். அதுவும் இல்லையா, ஒவ்வொரு குடிமகன் தலையிலையும் இவ்வளவு கடன் இருக்குன்னு சொல்லியிருக்காங்களே, எதனால? எல்லாம் இவங்க வாங்கி வச்ச கடன்.
செய்ற உதவியை இப்படி பண்ணிட்டு, காரணமே இல்லாம ஒரு நடிகனை மட்டும் நீங்க என்ன புடுங்குனிங்கன்னு கேட்க வந்துடுறிங்க..? இது நாங்க உழைக்கிற பணம். அதை என்ன பண்ணனும்ன்னு முடிவெடுக்குற மொத்த அதிகாரம் எனக்குத் தான். எனக்கா ஓட்டுப் போட்டாங்க மக்கள், யாருக்கு ஓட்டுப் போட்டாங்களோ அவங்களை போய் இந்த கேள்வியெல்லாம் கேட்கணும். அதை விட்டுட்டு, ஒரு பிரச்சனைன்னு வந்துட்டா போதும், அந்த நடிகர் என்ன பண்ணார்.. இந்த நடிகர் என்ன பண்ணாருன்னு சொல்லிட்டு வந்துட வேண்டியது…” என்றான் ஆதி கோபமாய்.
“மக்கள் இல்லைன்னா, நீங்க இன்னைக்கு இந்த இடத்துல சார்..” என்றார் ஒரு பத்திரிக்கையாளர் கோபமாக.
“நானும் அதை இல்லைன்னு சொல்லலையே. நான் என்ன உதவி செய்யனும்ன்னு நீங்க முடிவு எடுக்காதிங்கன்னு தான் சொல்றேன். சரி நான் ஒன்னு கேட்குறேன், நாற்பது கோடி சம்பளம் வாங்குற நான், நாலு கோடி உதவி செய்யனும்ன்னு சொல்றிங்க சரி. அப்போ நாற்பதாயிரம் சம்பளம் வாங்குற நீங்க என்ன உதவி செய்றிங்க..? அட்லீஸ்ட் ஒரு நாலாயிரம் நீங்க உதவி செய்யலாமே..? அஞ்சு கோடி சம்பளம் வாங்குறவங்க, அஞ்சு லட்சம் உதவி செய்யலாமே..? உதவி கோடிகளில் தான் செய்யனும்ன்னு இல்லை. உங்களால தெருக்கோடியில இருக்குற ஒருத்தருக்கு உதவி செய்ய முடியும்ன்னா, அதுவும் உதவி தான். நீங்க செய்றிங்களா..?” என்றான் ஆதி.
அவன் அப்படி கேட்பான் என்று எதிர்பார்க்காத அந்த பத்திரிக்கையாளர் மிரண்டு போய் முழித்துக் கொண்டிருக்க,
“இங்க இருக்குற பிரச்சனையே இது தான். அடுத்தவன் என்ன செய்றான்னு தான் பார்க்குறிங்களே தவிர, அதை சொல்ற நீங்க முதல்ல என்ன செஞ்சுருக்கிங்கன்னு பாருங்க. எல்லா பிரச்சனையும் தானாகவே ஒரு முடிவுக்கு வந்துடும்..” என்றான் ஆதி.
“சூப்பர் சார்..!” என்று ஒரு பெண் பத்திரிக்கையாளர் சொல்ல, அப்போது தான் ஆதியின் முகம் கொஞ்சம் இலகுவாக மாறியது.
“நீங்க இப்படி பேசுறதால, உங்க மாமனார் குடும்பத்தை பகைச்சுகிற மாதிரி ஆகிடாதா சார்..? அது மட்டுமில்லாம, உங்களுக்கு ஆப்போசிட்டா இருக்குறது உங்க மனைவியும் தானே..?” என்றார் ஒருவர்.
“உறவையும், அரசியலையும் ஒன்னாக் கலக்கக் கூடாதுன்னு என் மனைவி எனக்கு தெளிவா சொல்லியிருக்கா. என் மாமனாரும் அதைத் தான் விரும்புவார். இல்லையா மாமா..?” என்ற ஆதியின் பேட்டி டிவியில் ஓடிக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருந்த துவாரகிக்கு, அப்படியே சென்று அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. அன்று பார்த்ததற்கு பிறகு பதினைந்து நாட்கள் கழித்து, இப்போது தான் பார்க்கிறாள் துவாரகி. இன்னமும் நேரில் கூட பார்க்கவில்லை. அவன் வந்ததும் தனக்கு அழைப்பான் என்று அவள் காத்திருக்க, அவன் அவளுக்கு ஒரு போன் கூட செய்யவில்லை என்பது தான் உண்மை. ஏனோ, அதுவே அவள் மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது.
“அப்பா, என்னப்பா இவன் எந்த பக்கம் போனாலும், நாம பேசுனதை நமக்கு எதிராவே திருப்புறான்..?” என்றான் சசிதரன். அவர்கள் கட்சி ஆபீசில் இருந்தனர்.
“சின்ன பையனா இருந்தாலும், தெளிவாத்தான்யா பேசுறான். நம்ம என்ன நம்ம வீட்டுக் காசை எடுத்தா, மக்களுக்கு செலவு பண்றோம்..?” என்று அங்கிருந்த கருணைநாதனின் ஆதரவு அமைச்சர், ஆதியை பாராட்டிக் கொண்டிருக்க, அதைக் கேட்ட கருணைநாதனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“போதும்ய்யா..! விட்டா அவன் செய்றது எல்லாமே சரின்னு சொல்லுவிங்க போல. அவன் ஆப்பு அடிக்கிறது எனக்கு மட்டுமில்லை, நம்ம எல்லாருக்கும் தான்..” என்றார் கருணைநாதன்.
“எங்களுக்கும் புரியுது தலைவரே. நீங்கதான் அவன் சப்போர்ட் வேணும்ன்னு அவனுக்கு பொண்ணைக் கட்டிக் குடுத்திங்க. ஆனா, அவன் பொண்ணும் எனக்குத்தான், கட்சியும் எனக்குத்தான் அப்படின்னு பேசிட்டு இருக்கான். எல்லாமே நீங்க குடுத்த இடம் தலைவரே. இப்பக் கூட நாலு தட்டு தட்டலாம்ன்னு பார்த்தா, அவன் உங்களுக்கு மாப்பிள்ளை. நமக்கு நல்லதுன்னு நினைச்சு ஒன்னு செய்யப் போக, அதுவும் அவனுக்குத்தான சாதகமா அமைஞ்சிருக்கு..” என்றார் ஒரு அமைச்சர்.
“யோவ்.. போனதை எல்லாம் விடுங்க. இனி நடக்கப் போறதை மட்டும் பேசுங்க. அவன் என்ன பேசுனாலும், நாம செய்றதை சரியா செஞ்சுகிட்டே இருக்கணும். அவன் என்ன செய்றான்னு வேடிக்கை மட்டும் பார்த்தா போதாது. அப்பறம் நம்ம நிலைமை வேடிக்கைப் பார்க்குற அளவுக்கு வந்துடும்..” என்ற கருணைநாதன், அவருடைய தேர்தல் வியூகத்தை சொல்ல ஆரம்பித்தார்.
அவர் அங்கே சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், இங்கே துவாரகியும் அந்த யோசனையில் தான் இருந்தாள். ஹாஸ்பிட்டல் அவளைப் பார்க்க வருவதாய் சொன்ன சம்பத், இன்னும் வரவில்லை.
“விக்ரம் வாங்க..” என்று அங்கிருந்த நர்ஸ் அழைத்துக் கொண்டிருக்க, அந்த பேரில் பட்டென்று நிமிர்ந்தாள் துவாரகி. அவன் உண்மையில் இல்லையென்று தெரிந்தாலும், ஏனோ அந்த பேரைக் கேட்கும் போதெல்லாம், அவளுக்குள் அவளையும் மீறிய ஒரு அதிர்வலை உண்டாவதை அவளால் தடுக்க முடியவில்லை.
தன்னுடிய மொபைலை எடுத்து, அதில் விக்ரமும், அவளும் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு, நினைவு அதை எடுத்துக் கொண்ட தினத்திற்கே சென்றது.
அது துவாரகியின் பிறந்த நாளின் போது எடுத்த புகைப்படம்.
“என்ன துவா..? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..? இன்னைக்கும் ஹாஸ்ப்பிட்டல் தானா..?” என்ற விக்ரம் அப்போது தான் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்திருந்தான்.
“நமக்கெல்லாம் கொண்டாட தனி நேரம் காலமெல்லாம் கிடைக்காது. அதுலயும் பார்கவி ஆன்ட்டி, இன்னைக்கு லீவ் எடுக்கவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க. முக்கியமான கேஸ் இருக்கு..” என்றாள் துவாரகி.
“இங்க நீ ஓனரா, இல்லை எங்க மம்மி ஓனரான்னே தெரியலை..” என்ற விக்ரமின் முத்தில் சிரிப்பு.
“சிரிக்காதடா பக்கி..!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கிளம்பிக் கொண்டிருந்தான் விக்ரம்.
“எங்க கிளம்புற விக்ரம்..?” என்றாள்.
“நான் நாளையில் இருந்து ஒன் வீக் லீவ். ஷூட்டிங் இருக்கு, புதுப்படம்..” என்றான்.
“நீ பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை..! எதுக்கு ரெண்டு பக்கமும் அல்லாடுற. ஒன்னு இதை விட்ரு. இல்லையா நடிப்பா விட்ரு..” என்றாள் கோபமாக.
“அது மட்டும் முடியாதே..?” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க,
“டாக்டர், வெளிய ஒரே கலவரமா இருக்கு. ஹாஸ்பிட்டல் மெயின்கேட்டை பூட்ட சொல்லியாச்சு. இன்னைக்கு பந்த் வேற..” என்று அங்கு வேலை செய்யும் நபர் சொல்லிவிட்டு செல்ல, திகைத்தாள் துவாரகி.
“இவன் என்ன லூசா..? இது சி.எம் பொண்ணு ஹாஸ்பிட்டல். இங்க யாராவது நுழைய முடியுமா..? அவங்க வீராப்பு எல்லாம் அப்பாவி ஜனங்கள் மேல தான் காட்டுவாங்க..” என்றான் விக்ரம்.
“கலவரம் நடக்குறதுக்கு எங்கப்பா எப்படி பொறுப்பாவார் விக்ரம். நீயும் ரெண்டு நாளா பார்த்துகிட்டு தான இருக்க..? எல்லா பக்கமும் தான் கலவரம். என்னமோ இங்க மட்டும் நடக்குற மாதிரி சொல்ற..?” என்று சண்டைக்கு வந்தாள் துவாரகி.
“எல்லா பக்கமும் நடக்குதுன்னு எனக்குத் தெரியும். அது ஏன் நடக்குதுன்னு தான் உனக்குத் தெரியலை. விவசாயிகள் போராட்டத்தை உங்கப்பா கண்டுக்கலை. அதான், கலவரத்தை தூண்டி அவங்களை விரட்டியடிக்க பார்க்கிறார்..” என்றான் விக்ரம்.
“விவாசாயிகள் எதுக்குப் போராடுறாங்க..? அதுக்கு காரணம் என்ன..? எல்லாம் உங்க அண்ணன் ஆதித்யாவால வந்தது தான்..” என்றாள் துவாரகி.
“இதென்ன புதுக்கதையா இருக்கு..?” என்றான் விக்ரம்.
“உங்கண்ணன் மட்டும் அந்த ‘சருகு’ படத்துல நடிக்காம இருந்திருந்தா, இப்போ இவ்வளவு பிரச்சனையில்லை. எல்லாம் படம் ரிலீசான அன்னைக்கு இருந்து ஆரம்பிச்ச கதை தான்.. இவ்வளவுக்கும் காரணம்..” என்றாள் துவாரகி.
“தூங்கிகிட்டு இருந்த பலபேரை எங்கண்ணன் தட்டி எழுப்பியிருக்கான். அதுக்கு நீ சந்தோசம் தான் படனும்..” என்று விக்ரம் நக்கலாகக் கூற,
“நல்லா தட்டி எழுப்பினார் உங்க அண்ணன். நடிப்பு தொழிலை அவர் சரியா பண்றார். ஆனா அதை உண்மைன்னு நினைச்சு எத்தனை மக்கள் போராட்டத்துல குதிக்கிறாங்க பாரு..” என்றாள் துவாரகி.
“அவன் பொய்யான ஒரு கதையில நடிக்கலை. ஏற்கனவே அந்த கதையை மையமா வச்சு ஒரு ஆவணப் படம் வந்திருக்கு. இல்லாத ஒன்னை அவன் சொல்லையே. ஆனா, சின்னப் பிரச்சனையை உங்கப்பா அவருக்கு சாதகமா மாத்தத் தான் இப்படி பண்ணிட்டு இருக்கார்..” என்றான் விக்ரம்.
“அதனால எங்கப்பாவுக்கு என்ன லாபம்..?” என்றாள் துவாரகி கோபமாக.
“சிம்பிள்..! அவரை நோக்கி எந்த அம்பும் வராது. எல்லாமே மக்கள் பக்கம் மட்டுமே திரும்பும். அவ்வளவு தான். இதுல ஜாதிக் கலவரம் வேற. எல்லா கலவரத்துக்கும் ஆரம்பமே சின்ன அரசியல் புள்ளி தான். புரியாதவன் தான் கலவரத்துல சண்டை போட்டவனைப் பத்தி பேசுவான். ஆனா, கலவரத்தை தூண்டுனவன் அமைதியா அதை வேடிக்கைப் பார்ப்பான். இன்னைக்கு உங்கப்பா அந்த இடத்துல தான் இருக்கார்..” என்றான்.
“அவர் பதவில இருக்குறதால, அவர் செய்றது வெளிய தெரியுது. உங்கண்ணன் கூடத்தான், வசனம் பேசிட்டு வீட்ல இருக்கார். அவரும் இங்கயா இருக்கார். இல்லைதானே..? அப்படிப் பார்த்தா எல்லாமே சரிதான்..” என்றாள்.
“உனக்கெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது. நீ நினைக்கிற அளவுக்கு அவர் யோக்கியன் கிடையாது. அது உனக்குத் தான் தெரியலை. அப்படி தெரிஞ்சாலும் நீ அதை ஏத்துக்க மறுக்குற, அவ்வளவு தான்..” என்றான் விக்ரம்.
“நோ, பிரச்னைக்கு ஆரம்ப புள்ளி உங்கண்ணன் தான்.. இதை நீதான் ஏத்துக்க மறுக்குற..?” என்றாள் துவாரகி.
“அப்போ, பாவாடை நாடா கழண்டது தப்பில்லை, பார்த்தது தான் தப்புன்னு சொல்ற..?” என்றான் விக்ரம்.
“அசிங்கமா பேசாத விக்ரம்..” என்றாள் துவாரகி.
“நான் பழமொழியை தான் சொன்னேன்..!” என்றான்.
“பேசுறது ஈசி. ஒரு பொறுப்பில் இருந்து பார்த்தாத்தான் தெரியும், அது எவ்வளவு கஷ்ட்டம் இருக்குன்னு. .” என்றாள்.
“உண்மைதான்..! நானும் ஈசியா பேசலை. உண்மையை தான் பேசுறேன். ஆதியும் அதைதான் பேசுனான்..” என்றான் விக்ரம்.
“உங்க அண்ணன் ஆதிக்கு அரசியல் பத்தி என்ன தெரியும். அரசியலுக்குள்ள வந்து பார்த்தாத்தான் தெரியும், சும்மா நாலு சீன்ல நடிச்ச்சிட்டா பெரிய ஆள் கிடையாது. ஒரு படத்துல சிஎம்மா நடிச்சிட்டா, அவன் நிஜ சிஎம் ஆக முடியுமா..?” என்றாள் துவாரகி.
“கண்டிப்பா, அவன்கிட்ட அந்த கெப்பாசிட்டி இருக்கு. அதை அரசியலுக்கு வந்து தான் நிருபிக்கனும்ன்னு இல்லை. அப்படியே வந்தாலும் எங்கண்ணன் உங்கப்பாவை வச்சு செய்வான். அவனை நடிகனா தான் உனக்குத் தெரியும். ஆனா, அவன் எப்படி என்னன்னு கூடப் பிறந்த எனக்குத் தான் தெரியும்..” என்றான் விக்ரம்.
“சொன்னாங்க சொன்னாங்க. உங்க அண்ணனை சொல்லும் போது உனக்கு வர்ற அதே கோபம், எங்கப்பாவை சொல்லும் போது எனக்கு வரக்கூடாதா..?” என்று சிலுப்பிக் கொண்டாள் துவாரகி.
“வரலாம் தாயே..! தப்பேயில்லை..” என்ற விக்ரம் அதோடு அமைதியாவிட்டான்.
அது தான் அவர்களுக்குள் நடந்த கடைசி சண்டை. அது தான் கடைசி சண்டை என்று தெரியாமலேயே சண்டை போட்டு சமாதானமும் ஆகியிருந்தனர் துவாரகியும், விக்ரமும்.