ஆகாயம் 18:
அதிகாலையிலேயே தன் வீட்டின் முன்பு வந்து நின்ற காரை தன்னுடைய அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் கருணைநாதன். ஆதிதான் துவாரகியை அழைத்து வந்திருந்தான். அவர் நினைத்தது ஒன்று. இப்போது நடந்து கொண்டிருப்பது ஒன்று.
ஆதி வீட்டிற்குள் வராமல் அப்படியே நிற்க,
“உள்ள வாங்க ஆதி..” என்றாள் துவாரகி.
“பரவாயில்லை துவா, நீ போ. நான் கிளம்புறேன்..” என்றான் ஆதித்யா.
அதற்குள் அருணா வெளியே வந்துவிட்டார்.
“என்ன மாப்பிள்ளை நீங்க..? வாசல் வரைக்கும் வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போறீங்க..?” என்று கேட்கவும், ஆதிக்கு தர்ம சங்கடமாய் இருந்தது.
“வாங்க…!” என்று மீண்டும் அவர் வற்புறுத்தி அழைக்கவும், மனமின்றி உள்ளே சென்றான். அதுவும் துவாரகிக்காக, அவள் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பிற்காக.
“நான் காபி எடுத்துட்டு வரேன் மாப்பிள்ளை..” என்று அருணா சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி. நான் மார்னிங் காபியெல்லாம் குடிக்கிறது இல்லை..” என்றான் ஆதி.
“ஆமாம்மா..! அவரு பெரிய ஹீரோ, பாடியை மெயின்ட்டெயின் பண்ணுவாங்க. காபியெல்லாம் குடிப்பாங்களா..?” என்ற நக்கல் பேச்சுடன் வந்தான் சசி.
“என்ன பேச்சு தினுசா இருக்கு..?” என்றான் ஆதி கோபமாக.
“நீ செய்றது மட்டும் தினுசா இல்லையா..? கட்டுன பொண்டாட்டியை திருட்டுத்தனமா கூட்டிட்டு போய் குடும்பம் நடத்தறவன் தான நீ..?” என்றான் சசிதரன். முதல்நாள் இரவு ஆதி அவனுக்கு போன் செய்து, அவ்வளவு உரிமையாக பேசியதில் இருந்து, சசிக்கு இருப்புக் கொள்ளவில்லை.
“என் பொண்டாட்டியை நான் எப்படியும் கூட்டிட்டு போய் குடும்பம் நடத்துவேன்..? அதுல உனக்கென்ன பிரச்சனை..?” என்றான் ஆதி, பல்லைக் கடித்துக் கொண்டு.
“அண்ணா..! பார்த்து பேசு..” என்றாள் துவாரகியும்.
“நீ வாயை மூடு துவாரகி. அப்பா அவ்வளவு சொல்லியும் நீ அவன் கூட போயிருக்கன்னா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..?” என்றான் சசி.
“நான் அவ்வளவு சொல்லியும், நீங்க வீம்பா கட்டி வச்ச மாப்பிள்ளை தான. கூப்பிட்டா போய்த்தான் ஆகணும்..” என்றாள் அவளும் துடுக்காக.
“என்ன? அவன் பக்கத்துல இருக்கான்ற திமிரா..?” என்று சசி அவளை கோபமாய் பார்க்க,
“ஏன்..? நான் போன பின்னாடி தான் அவளை எதுவும் செஞ்சு பாரேன்… அவ்வளவு தைரியமானவன் நீ ஏதாவது பண்ணித்தான் பாரேன்..?” என்றான் ஆதி கிண்டலாக.
“நாங்களே ஆக மாட்டோம். எங்க வீட்டு பொண்ணு மட்டும் ஆவாளா உனக்கு..?” என்று சசி கேட்க,
“நான் ஒன்னும் அவளை லவ் பண்ணி, யாருக்கும் தெரியாம ரகசிய கல்யாணம் பண்ணிக்கலையே. உங்கப்பா வழிய வந்து பொண்ணு தரேன்னு சொல்லித்தான் இந்த கல்யாணம் நடந்ததா ஞாபகம். ஏன், அப்ப தெரியாதா உங்களுக்கு நான் ஆகாதவன்னு…?” என்று ஆதி கேட்ட கேள்வியில் சசிதரன் வாயை மூடிக் கொண்டான்.
“நான் கிளம்புறேன் துவா..” என்றவன் கிளம்பப் போக, அவள் தான் பரிதவிப்புடன் பார்த்து நின்றாள். அவளின் பார்வையைப் பார்த்த ஆதிக்குத் தான் திகைப்பாய் இருந்தது. நடிப்பில் மட்டுமே இப்படியான பார்வைகளைப் பார்த்துப் பழகியவனுக்கு, முதன்முறையாக அவள் விழிகள் காட்டிய பரிதவிப்பில், இவன் பரிதவித்து நின்றான்.
‘கவலைப்படாத..’ என்ற ரீதியில் அவன் இமைகளை அழுந்த மூடித் திறக்க, அப்போதுதான் அவளுக்கு ஆசுவாசமாய் இருந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அருணாவுக்கு, மனதின் ஒரு மூலையில் நம்பிக்கை பிறந்தது. இனி மகளின் வாழ்வு சீராகிவிடுமென்று.
அவன் அங்கு இருக்கும் வரை கருணைநாதன் வெளியே வரவேயில்லை. ஆனால், நடந்த சம்பாஷனைகள் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆதி கிளம்பிய அடுத்த நிமிடம் வெளியே வந்தார் கருணைநாதன்.
“துவாரகி..!” என்ற அவரின் குரல், அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.
“அப்பா..” என்றபடி அவள் அமைதியாக வந்து நின்றாள்.
“என்ன நடக்குது இங்க..? உனக்கு பெத்த அப்பனை விட, அவன் முக்கியமா போயிட்டானா..? என்ன சொல்லியிருக்கேன் உன்கிட்ட..?” என்றார் கருணைநாதன் கோபமாக.
“ம்க்கும்..! இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. இந்நேரம் வரைக்கும் அவன் இருக்குற வரைக்கும் வெளியவே வராம இருந்துட்டு, அவன் அந்த பக்கமா போனதுக்கு அப்பறம் இந்த பக்கமா வந்து கத்த வேண்டியது..?’ என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டவள், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“எனக்கு எதிரா எதுவும் பண்ண முயற்சி பண்றியா துவாரகி..? வரவர உன்போக்கு எதுவுமே சரியில்லை..?” என்றார்.
“என்னப்பா நீங்க..? என் பொண்டாட்டி தான வாடின்னு அவன் கூப்பிடுறான். என் பொண்ணு நீ போகக் கூடாதுன்னு நீங்க சொல்றிங்க. இதுக்குத் தான் நான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேன். ஒரு பக்கம் அவன் மிரட்டுறான், இன்னொரு பக்கம் நீங்க மிரட்டுறிங்க..?” என்று பழியைத் தூக்கி அப்படியே ஆதியின் மேல் போட்டாள் துவாரகி.
“என்னம்மா சொல்ற..? அவன் உன்னை மிரட்டுனானா…?” என்றார் கருணைநாதன் கோபமாக,.
“அட ஆமாம்ப்பா..! நான் ஹாஸ்பிட்டல்ல தான் இருந்தேன். ஆதி தான் போன் பண்ணி, என்னை உடனே வர சொன்னார். அப்படி வரலைன்னா, உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு சொன்னார்..” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.
“எனக்கு என்ன பிரச்சனை குடுப்பானாம்..? என்னை எதிர்த்து அரசியல்ல நின்னுட்டா, அவன் பெரிய இவனா..?” என்றார் கருணைநாதன்.
“அதை சொல்லலைப்பா..?” என்று நிறுத்தியவள், அவரை நோட்டம் பார்த்தாள்.
“வேற என்ன சொல்லி மிரட்டுனான்..?” என்றார் கருணைநாதன்.
“அவர் தம்பி இறப்புல அவருக்கு சந்தேகமாம். அதுல முக்கியமான தடயம் கிடைச்சிருக்காம்..” என்றாள் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக.
“எ..என்னம்மா சொல்ற..? அ..அது என்ன தடயம்ன்னு சொன்னானா..?” என்றார் பதட்டத்தை மறைத்துக் கொண்டு.
“அதை சொல்லலைப்பா..! ஆனா, அதுல உங்களை மாட்டி விட்டுருவேன்னு மிரட்டுனான்ப்பா..!” என்றாள் துவாரகி, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“என்னம்மா சொல்ற..? அப்படியா சொன்னான்..? அதுக்கு நீ என்ன சொன்ன..?” என்றார்.
“நான் எதுவும் சொல்லைப்பா. ஆனா, உங்களை அவன் வேணும்ன்னே மாட்டிவிடனும்ன்னு முயற்சி பண்ணா என்ன பண்றதுன்னு தான் போனேன்..” என்றாள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“அப்படியா சொன்னான், அவனை நான் கவனிச்சுக்கிறேன் துவாரகி. நீ இதையெல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்க வேண்டாம்…” என்றார்.
“சரிப்பா..!” என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றவளுக்கு, சிரிப்பையும் மீறி, அழுகை தான் வந்தது. இப்படி மனதிற்குள் ஒன்றை வைத்து, வெளியே ஒன்றை காட்டி வஞ்சம் தீர்க்கும் அளவிற்கு தன்னுடைய நிலைமை ஆகிவிட்டதே என்று. அதே சமயம் விக்ரமின் முகம் கண் முன்னால் வர, அப்பாவின் பக்கம் இளகிய மனம் மீண்டும் இறுக்கம் அடைந்தது.
“அவனோட தம்பி தற்கொலை பண்ணிகிட்டான்னு தானப்பா சொன்னாங்க. அதுல என்ன சந்தேகம் வந்திருக்கும்..?” என்றான் சசி.
ஏற்கனவே படபடப்பில் இருந்த கருணைநாதனுக்கு மகனின் கேள்வி, மேலும் எரிச்சலைக் கூட்டியிருக்க வேண்டும்.
“இப்ப இது ரொம்ப முக்கியமா சசி..? எலக்சன் வேலை எவ்வளவு இருக்கு..? அதைப் போய் பாரு..” என்று அவர் எறிந்து விழ, அவரின் திடீர் கோபத்தில் திகைத்து நின்றான் சசிதரன்.
தேர்தல் வேலைகள் கலைகட்டத் தொடங்கியிருந்தன.தேர்தல் தேதியை அறிவிக்க இன்னும் சில தினங்களே இருந்தன. ஆனால், அதற்கு முன்பாகவே பிரச்சராங்களும் தீயாய் இருக்க, பெட்டிகள் மாற வேண்டிய இடத்தில் மாறிக் கொண்டிருந்தது.ஜாதி அரசியல் தான் ஜெயிக்கும் என்ற நிலையில் தான் இருந்தது அரசியல் சூழ்நிலை.
தேர்தல் முடியும் வரை தற்போது நடித்துக் கொண்டிருந்த படத்தின் ஷூட்டிங்கை தள்ளிப் போட்டிருந்தான் ஆதித்ய வர்மா. அவன் இது வரைக்கும் கற்ற மொத்த வித்தையையும் இந்த தேர்தலில் காட்ட வேண்டும் என்ற வெறி அவனுக்குள்.
அவனுடைய பிசியான நேரத்தை எரிச்சலாக்க வேண்டுமென்றே வந்திருந்தனர், கனகவேலுவும், திவ்யாவும்.
“சார் உங்களைப் பார்க்க, தொழில்துறை அமைச்சர் கனகவேலும் அவர் பொண்ணும் வந்திருக்காங்க..” என்றான் கவின்.
“என்ன விஷயம்..?” என்றான்.
“உங்ககிட்ட தான் சொல்ல முடியும்ன்னு சொல்லிட்டாங்க சார்..” என்றான் கவின்.
“வர சொல்லு கவின்..!” என்றவன், அப்போது அவனைக் காண வந்திருந்த சம்பத்தைப் பார்த்து கண் அசைத்தான்.
“கொஞ்ச நேரம் உள்ள இரு சம்பத். இப்ப வரப்போறது புயலா, பூகம்பமான்னு தெரியலை..” என்றான் ஆதி.
“ரெண்டும் சேர்ந்து தான் வருதுங்க…! அந்த கட்சியிலையே ரொம்ப டேஞ்சரஸ் பெர்சன்ஸ் யாருன்னு கேட்டா, இவங்க தான்…” என்றான் சம்பத்.
“இந்த ஆளைப் பத்தி நம்ம உளவுத் துறை ஒரு அறிக்கை குடுத்திருக்கே..” என்ற ஆதி, அதை அப்போதே தேடி எடுத்தான். சம்பத் உள்ளிருந்த அறைக்குள் செல்ல, அந்த அறிக்கைப் பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வர்மா.
“வணக்கம் தம்பி..” என்றபடி வந்த கனகவேலுவை முதல் பார்வையிலேயே ஆதிக்குப் பிடிக்கவில்லை. அவர் அருகில் இருந்த திவ்யாவை அவனின் திருமணத்தின் போதே கவனித்திருந்தான். துவாரகியின் பிரண்ட் என்று அவளை அறிமுகம் செய்திருந்தாள் துவா. ஆனால் திவ்யாவின் கண்களில் லேசாக பொறாமை உணர்வு இருந்ததோ என்று அந்த சமயத்தில் அவனுக்கு தோன்றியிருந்தது.
“வணக்கம்..! வாங்க..! உட்காருங்க..!” என்றான் ஆதி.
“தம்பி முழுநேர அரசியவாதியாவே மாறிட்டிங்க போல..?” என்றார் கனகவேல் எடுத்த எடுப்பில்.
“என்ன பண்றது..? நாய் வேஷம் போட்டா குலைச்சுத் தான ஆகணும்..?” என்றான் ஆதியும்.
“நான் யாருன்னு நானே சொல்லித் தெரிய வேண்டியதில்லை தம்பி..” என்று கனகவேல் நிறுத்த,
“அதான்..ஊரே சொல்லுதே..?” என்றான் ஆதி, இடக்காக.
“தம்பி தமாசா பேசுறாரு..” என்றார் அவர்.
“அவன் கிண்டலா பேசுறான்..!” என்று திவ்யா அவரின் காதில் முனுமுனுத்தாள்.
“தெரியுதுமா..? என்ன பண்றது..?” என்றவர்,
“எங்க கட்சியிலேயே, அதிக ஒட்டு வித்தியாசத்துல ஜெயிச்சவன் நான்தான்..! ஈரோடு முழுசும் என்னோட கண்ட்ரோல் தான்..” என்றார்.
“சரி..! அதுக்கு நான் என்ன பண்ணனும்..?” என்றான் ஆதி, புரியாமல்.
“என்ன தம்பி..? நீங்க கட்சி ஆரம்பிச்சு கொஞ்ச நாள் தான் ஆகுது. அரசியலுக்கு ரொம்ப புதுசு வேற. நீங்க சரின்னு சொன்னா, நான் உங்க பக்கம் வந்திடுறேன். தலைவர் பதவிக்கு நீங்க போட்டியிடுங்க. கட்சிப் பொதுச்செயலாளரா என்னை ஆக்கிடுங்க..!” என்றார் கனகவேல் அசாதாரணமாய்.
“அதாவது இடத்தை உங்க பேர்ல எழுதிட்டு, வீட்டை நான் கட்டுற மாதிரி அப்படித்தான..?” என்றான் ஆதி, அவரை கூர்மையாய் பார்த்துக் கொண்டே.
“தம்பி..! நீங்க யாரை வேணும்ன்னாலும் பகைச்சுக்கலாம். ஆனா, என்னையப் பகைச்சுகிட்டு உங்களால ஒண்ணுமே பண்ண முடியாது. எதிர்க்கட்சி தலைவர் சக்ரபானியே என்னைக் கண்டா பயப்படுவார்..” என்றார் கனகவேல்.
“சிலர் சாக்கடையை பார்த்தா கல் எரிஞ்சு விளையாடுவாங்க. சிலர் சாக்கடைன்னு ஒதுங்கிப் போவாங்க. ஆனா நான் சாக்கடையை மூடிட்டு தான் போவேன். எனக்குப் பின்னால வர்றவன் யாரும் விழுந்துட கூடாது பாருங்க..” என்றான் ஆதி, கிண்டலாய்.
“என்ன தம்பி..? வார்த்தையெல்லாம் ஒரு மாதிரி இருக்கு..?” என்ற கனகவேல் கோபமாய் எழுந்திருக்க,
“அய்யோ, நான் உங்களை சொல்லலை. உதாரணத்துக்குத் தான் சொன்னேன்..!” என்றான் ஆதி.
“பார்த்தா அப்படி தெரியலையே..?” என்றாள் திவ்யா வாயைத் திறந்து.
“இவங்க யாருன்னு நீங்க சொல்லவே இல்லையே..?” என்றான் ஆதி.
“வாம்மா திவ்யா..! இவனெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சு பேச வந்தோம் பாரு. இதுக்குத்தான் நான் படிச்சு படிச்சு சொன்னேன். நீ எங்க விட்ட..?” என்றவர் கோபமாய் அங்கிருந்து வெளியேறினார்.
“இதுக்காக நீங்க ஒரு நாள் வருத்தப்படுவிங்க மிஸ்டர். ஆதித்ய வர்மா..” என்றாள் திவ்யா.
“மூணு வருஷத்துக்கு முன்னாடி, மிஸ்டர்.கனகவேலோட தங்கச்சி பையன் விமல் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போயிருக்கான். ஆனா, அது ஆக்சிடென்ட் இல்லை, கொலைன்னு நான் சொல்றேன். நீங்க என்ன சொல்றிங்க மிஸ்..?” என்றான் ஆதி, அடக்கப்பட்ட சிரிப்புடன்.
அவன் சொன்னது மனதிற்குள் பக்கென்று இருந்தாலும், அதையே வெளியே காட்டாமல், அவனை முறைத்தபடி சென்றாள் திவ்யா.
அவர்கள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்த சம்பத்,
“சபாஷ் ஆதி..! வேற லெவல். நிஜமாவே உன்கிட்ட இருந்து இப்படி ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கவேயில்லை…” என்றான் சம்பத்.
“நானே எதிர்பார்க்கலை சம்பத். நான் அரசியலுக்கு வரணும்ன்னு விக்ரம் ரொம்ப ஆசைப்பட்டான். அவன் இருக்கும் போது தான் அவன் ஆசையை நிறைவேத்த முடியலை. அவன் இல்லாதப்ப தான் அதை நிறை வேத்தனும்ன்னு தோணுது. அவனோட ஆத்மா கண்டிப்பா சந்தோஷப்படும்..” என்றான் ஆதி.
“அப்போ, நல்லவங்க அரசியலுக்கு வரணும்ன்னா, அவங்களுக்கு சில வலிகள் இருக்கணும், இல்லையா சில கடமைகளாவது இருக்கணும்ன் அப்படின்னு சொல்ற..?” என்றான் சம்பத்.
“இதுக்கு நான் என்ன பதில் சொல்றது..?” என்ற ஆதி, புரியாமல் நிற்க,
“இப்போ வந்துட்டு போன மிஸ்டர். கனகவேல் பெரிய தந்திரமான அரசியல்வாதி. எல்லாரும் அரசியலுக்கு வர என்னென்னமோ பண்ணுவாங்க. ஆனா இவரு, அதையெல்லாம் தாண்டின லெவல். கருணைநாதனை விட இவருதான் ரொம்ப டேஞ்சரஸ். பேசாம நீ இவரை கட்சிப் பொதுச் செயலாளாரா ஆக்கியிருக்கலாம்..” என்றான் சம்பத்.
“உனக்கு விஷயம் புரியலை சம்பத். அந்த ஆள்கிட்ட சொன்ன மாதிரி, கட்சிப் பொதுச்செயலாளர் பதிவின்றது சொந்த இடம் மாதிரி. தலைவர் அதுல இருக்குற வீடு மாதிரி. இடத்துக்கு சொந்தக்காரன் எப்ப வேணும்ன்னாலும் வீட்டை இடிப்பான், அப்படியில்லையா காலி பண்ண சொல்லுவான். இவன் ஏற்கனவே அரசியல்ல புலி. இதுல இந்த ஆளை உள்ள விட்டா, நம்ம தான் வெளிய போகணும். இந்த ஐடியா இல்லாமையா இங்க வந்திருப்பான் இந்த ஆளு..” என்றான் ஆதி.
“என்ன ஆதி, வரவர அவங்களுக்கு மேல நீதான் பக்கா அரசியல்வாதி ஆகிட்டு வர்றியோன்னு தோணுது. நான் ஏன் அப்படி சொல்றேன்னா.. நீ புதுசு. அந்த ஆளுக்கு கொஞ்சம் சப்போர்ட் இருக்கு. அதான் சொன்னேன்..” என்றான் சம்பத்.
“ஒவ்வொரு முறையும் ஏனோ தானோன்னு படிச்சு, எக்ஸாம் எழுதி, பாசாகாம, மறுபடியும் அதையே படிக்கிறவன் எப்பவும் வேலைக்கே போக மாட்டான். அதே நேரத்துல வேலைக்கு போயே ஆகணும்ன்னு மனசுல வைராக்கியம் இருக்குறவன், படிக்கிற ஒரே தடவையும் கவனமா படிப்பான், உருப்படியா படிப்பான், பாசாகி வேலைக்கும் போய்டுவான். நான் இதுல ரெண்டாவது ரகம். எனக்கு எப்பவுமே ஒரே சாய்ஸ் தான். அதை சரியா பண்ணாலே எல்லாம் சரியா நடக்கும்..” என்றான் ஆதி.
“நீ ஜெயிக்க வாழ்த்துக்கள் ஆதி..!” என்று அவனை கட்டிக் கொண்ட சம்பத், ஆதியின் தோளிற்கு பின்னால் சிரித்துக் கொண்டான்.
“உன் புருஷன் கண்டிப்பா ஜெயிச்சுடுவான், எழுதி வச்சுக்கோ..” என்று துவாரகிக்கு ஒரு மெசேஜையும் தட்டி விட்டான் சம்பத்.
துவாரகி, சம்பத்திற்கு குடுத்த அனைத்து வேலைகளையும் சரியாக செய்து முடித்துவிட்டான்.
வீட்டிற்கு சென்ற கனகவேல், ஆதி தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவே நினைத்து விட்டார். கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருக்க,
“இப்ப எதுக்குப்பா இப்படி நடந்துகிட்டே இருக்கீங்க..?” என்றாள் திவ்யா.
“இதுக்குத்தான் திவ்யா.. நான் மாட்டேன்னு சொன்னேன். இப்ப என்ன ஆச்சுன்னு பாரு..? நேத்து வந்த பொடிப் பய, என்கிட்டையே என்ன திமிரா பேசுறான் பாரு..?” என்றார் கனகவேல்.
“அவன் இப்படி பேசுவான்னு நானும் நினைக்கலைப்பா..! அவனுக்கு கொஞ்சம் திமிர்ன்னு கேள்விபட்டேன். ஆனா, இவ்வளவு திமிரா இருப்பான்னு இன்னைக்குத் தான் பார்த்தேன்..” என்றாள்.
“இப்ப என்னம்மா பண்றது..?”
“இனி பண்றதுக்கு ஒண்ணுமில்லை..! ஏற்கனவே கருணைநாதன்கிட்ட டிமான்ட் பண்ண மாதிரி உங்களுக்கு துணைமுதல்வர் போஸ்டிங் வேணும்ன்னா, அந்த அளவுக்கு நீங்க அதிக அளவு ஒட்டு வாங்கி ஜெயிக்கணும். அதுக்கு என்ன வழியோ அதைப் பார்ப்போம். ஜெயிச்சுட்டு போய், அந்த ஆதித்யா மூஞ்சியில கரியைப் பூசுவோம்..” என்றாள்.
“ஆமாம்மா..! அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்..!” என்றார் கனகவேல்.
அதே நேரம் துவாரகி சொன்ன விஷயத்தை அசை போட்டுக் கொண்டிருந்தார் கருணைநாதன். விகரமின் இறப்பைப் பற்றித்தான்.
அன்று…
ஆதித்ய வர்மாவின் புதிய படத்தின் சச்சரவால், கருணைநாதனுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து போயிருந்தது. மத்தியில் இருந்து ஆட்சியை கவிழ்க்கும் நோக்கமெல்லாம் இருக்க, அதையெல்லாம் எப்படியோ சரிகட்டி வைத்திருந்தார். உடனே அவனை ஏதாவது செய்தால், பழி முழுவதும் அவர்பக்கம் திரும்பி விடும் என்று பிரச்சனைகள் தீரும் வரை கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார். அவர் மனதில் இருந்த ஒட்டுமொத்த வெறுப்பையும் காட்டும் நாளும் வந்தது.
அன்று காலையிலேயே, துவாரகி கிட்சனுக்குள் நின்று எதையோ சமைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன துவா பண்ணிட்டிருக்க..? அதுவும் காலையிலையே..?” என்றார் அருணா.
“அல்வா கிண்டிகிட்டு இருக்கேன் ம்மா…” என்றாள் துவா.
“அதையேன் நீ செய்ற..? கேட்டிருந்தா நானே செஞ்சு குடுத்திருப்பேனே..?” என்றார் அருணா.
“அம்மா, இது ஒரு ஸ்பெஷல் பெர்சனுக்கு. என் கையால கிண்டிக் குடுத்தாத்தான் அது சிறப்பா இருக்கும்..” என்றாள்.
“உன் கையால கிண்டிக் குடுத்தா அது சிறப்பா இருக்காது, கொடுமையா இருக்கும்..” என்றார் அருணா.
“என்னம்மா கிண்டலா..? என்னோட அல்வா டேஸ்ட்க்கு முன்னாடி மத்தது எல்லாம் ஜூஜுபி..!” என்றவள், சந்தோஷமாய் அல்வாவைக் கிண்டிக் கொண்டிருந்தாள்.
“யாருக்குடா இது..?” என்றார் அருணா.
“மை பேவரைட் ஹீரோ ஆதித்ய வர்மாவுக்கு தான்..” என்றாள் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்.
“அந்த அப்பாவின் ஜீவன் அந்த பய தானா..? ஆமா, எப்படி குடுப்பா..?” என்றார் அருணா.
“அதான், ஒரு பாவப்பட்ட பய, என் நண்பனா இருக்கானே விக்ரம்… அவன்கிட்ட தான் குடுத்து விடுவேன்..” என்றாள் துவாரகி சந்தோஷமாய்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கருணைநாதனுக்கு மனதிற்குள் ஒரு விபரீதம் தோன்ற, அதை உடனடியாக செயல்படுத்தத் துவங்கினார்.
அல்வாவைக் கிண்டி அதற்கு உண்டான பாக்சில் அவள் போட்டுக் கொண்டிருக்க, அப்போது வந்த சசி,
“வாவ், அல்வா..” என்றபடி அதை எடுத்து சாப்பிடப் போனான்.
“அண்ணா..! அதைத் தொடாத..!” என்றாள்.
“ஏன் துவா..?” என்றான் சசி.
“பிளீஸ்..! ஒருத்தருக்கு சர்ப்ரைஸ் குடுக்குறதுக்காக அதைப் பண்ணியிருக்கேன். உனக்கு வேணும்ன்னா, இங்க இருக்கு..” என்றாள்.
“ஓகே..!” என்றவன், அங்கிருந்து நகர,
“இதை வேற யாராவது சாப்பிட்டுட்டா என்ன பண்ணுவ துவாரகி..?” என்றார் கருணைநாதன்.
“வாய்ப்பேயில்லைப்பா. கண்டிப்பா நான் யாரையும் தொடக் கூட விடமாட்டேன். இன்னைக்கு மிஸ்டர். ஆதித்ய வர்மாவை மீட் பண்ணப் போறேன். சோ, அவருக்குத் தான் இது..” என்றாள்.
“எங்க ரெண்டு பேருக்கு பகை இருந்தாலும், நீ இப்படி இருக்குறது ஒரு வகைக்கு நல்லது தான் துவா..” என்றார் கருணைநாதன்.
“அது உங்க பிரச்சனைப்பா..அதெல்லாம் எனக்குத் தெரியாது..” என்றவள் அதை பேக் செய்து வைத்துவிட்டு, அவளுடைய அறைக்கு சென்றாள். அவள் சென்ற இடைப்பட்ட நேரத்தில், நடந்த எந்த விஷயமும் அவளுக்குத் தெரியாது.
அன்று ஆதியைக் காணப் போகும் ஆவலுடன் கிளம்பி அவள் ஹாஸ்பிட்டல் சென்றாள்.
“என்ன மேடம் இன்னைக்கு ஓவர் சந்தோஷமா இருக்கீங்க..?” என்றான் விக்ரம்.
“எஸ்..! இன்னைக்கு ஆதியை நேர்ல பார்க்க போறேனே..? நானும் மூணு தடவை மிஸ் பண்ணிட்டேன். பட், இந்த தடவை மிஸ் ஆகாதே. அதான், ஆதிக்குப் பிடிச்ச அல்வா கிண்டிட்டு வந்திருக்கேன். என் கையாலயே செஞ்சேன்..” என்றாள் துவாரகி.
“இதை சாப்பிட்டா எங்கண்ணன் செத்துடுவான்..!” என்றான் விக்ரம்.
“என்ன கிண்டலா..? ஆமா, நீ இப்போ ஓகே தானே. ரெண்டு நாளா உன்னோட முகமே சரியில்லை. என்ன பிரச்சனை..?” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை துவா..” என்றான்.
“டேய்..! என்கிட்டையே ரீல் சுத்தாத. சினிமா இன்டஸ்ட்ரீல பெயிலியர்க்கு பயந்தா, ஒன்னுமே பண்ண முடியாது. லீவ் இட் மேன்..” என்றாள்.
“அப்படியெல்லாம் இல்லை துவா. ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணேன். இந்த படம் எப்படியும் பெரிய லெவலுக்கு ரீச் ஆகும்ன்னு. பட், இப்படி ஊத்திக் கிச்சு..” என்றான்.
அவளுக்கும் தெரியும், அவன் எந்த அளவிற்கு உழைத்தான் என்று. சில சமயம் அதிக உழைப்பை சிந்தும் படங்கள் தோல்வியை தழுவிவிடும். விக்ரமின் புதுப் படமும் அந்த வகை தான்.
“சரி விடு..! உங்கண்ணன் ஆதியை எப்ப பார்க்க போகலாம். வீட்ல தான் இருக்காரா..?” என்றாள்.
அவளின் கையில் இருந்த அல்வாவை வாங்கியவன்,
“வெரிசாரி மேடம்..! அண்ணன் மார்னிங் கிளம்பி ஷூட்டிங் போய்ட்டான். வர எப்படியும் ஒன் வீக் ஆகும்..” என்றான்.
அவனை உக்கிரமாய் முறைத்த துவாரகி,
“அவ்வளவு உறுதியா சொன்ன.. இன்னைக்கு வீட்ல தான் இருப்பான்னு. நான் கஷட்டப்பட்டு வேற செஞ்சுட்டு வந்தேன். பர்ஸ்ட் டைம் பார்க்குறோம், ஸ்வீட்டோட பார்க்கலாம்ன்னு..!” என்று அவள் முகம் வாடிப் போக,
“சாரி துவா. அவன் வந்த உடனே கண்டிப்பா உன்னை கூட்டிட்டு போறேன். இல்லைன்னா, இங்கயே கூட்டிட்டு வரேன். ஓகே வா..! எனக்கே தெரியாது, இப்படி திடீர்ன்னு கிளம்பிப் போவான்னு..” என்றான்.
“சரிசரி..” என்று அவன் கையில் இருந்த அல்வா டப்பாவை அவள் பிடுங்க,
“இதையேன் பிடுங்குற..? எனக்கும் அல்வான்னா ரொம்ப பிடிக்கும்ன்னு உனக்குத் தெரியும் தான..? அண்ணா வந்த உடனே அவனுக்கு பிரஷா செஞ்சு குடு. இப்போ, இதை நான் சாப்பிட்டுக்கிறேன்..” என்று அவன் தர மறுக்க,
“எப்படியோ தின்னு தொலை..” என்று அவன் கையிலேயே குடுத்து விட்டாள்.
“உனக்கு..?” என்றான்.
“எனக்கு ஸ்வீட்டே பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா..?” என்றாள்.
“ஆமாம்ல..! இந்த இத்துனூண்டு எனக்கே பத்தாது..” என்று அவன் சாப்பிடப் போக,
“நானே ஊட்டி விடவா..?” என்றாள்.
“ஆணியே பிடுங்க வேண்டாம். என் அண்ணன் வந்த உடனே அவனுக்கு ஊட்டி விடு..!” என்றபடி அவன் சாப்பிட ஆரம்பிக்க,
“நானா மாட்டேன்னு சொல்றேன். அதுக்கு உங்க அண்ணன் முதல்ல சரின்னு சொல்லணுமே..?” என்றவளின் நினைவுகள் ஆதியைத் தேடி செல்ல, விக்ரமோ டப்பாவில் இருந்த அல்வாவை நிமிடத்தில் காலி செய்திருந்தான்.
பன்னிரெண்டு மணி நேரம் கழித்து வேலையைக் காட்டும் ஸ்லோ பாய்சன் அதில் கலந்திருப்பது தெரியாமல் சாப்பிட்டு முடித்தவன், அடுத்து அவனுடைய வேலையைப் பார்க்க சென்றான்.
இடையில் துவாரகிக்கு கால் செய்த கருணைநாதன்,
“என்னம்மா..? அல்வாவைக் குடுத்துட்டியா..?” என்றார் பேச்சு வாக்கில்.
“நான் குடுத்து, அவன் சாப்பிட்டே முடிச்சுட்டான்.. இப்ப கேட்குறிங்க..? நான் கொஞ்சம் பிசியா இருக்கேன் ப்பா. அப்பறம் கூப்பிடுறேன்..” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டு ஓபி கேஸ் பார்க்க சென்றுவிட்டாள்.
தன் உடம்பில் கலந்த விஷத்தைப் பற்றிய அறியாத அந்த மருத்துவன், அவன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனை அழைத்துக் கொள்ள, எமன் காத்துக் கொண்டிருந்தான்.
நினைவில் இருந்து பட்டென்று வெளியே வந்தார் கருணைநாதன். அவர் செய்த வினைக்காக பயனைப் பெரும் நேரம் நெருங்கி விட்டதென்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அதே நேரத்தில், எலக்சன் தேதி அறிவிக்கப்படிருந்தது. அனல் பறக்கும் பிரச்சாரங்கள் என ஒவ்வொரு கட்சியும், அந்த கட்சிக்கான வெற்றியைத் தேடி, அவர்களின் பதவியைத் தேடி ஓடிக் கொண்டிருந்தனர்.
எல்லா கட்சியினரும் சின்சியராக வேலை பார்த்துக் கொண்டிருக்க, ஆதித்ய வர்மாமோ ஸ்மார்ட்டாக வேலை பார்த்து பார்த்துக் கொண்டிருந்தான்.
துவாரகி விலைக்கு வாங்கிய ஐபேக் டீம், அவளுடைய ஆலோசனையின் படி, கருணைநாதனை தவறாக வழிநடத்திக் கொண்டிருந்தது.
களத்தில் சந்திக்கும் நேரமும், நாளும் வந்துவிட்டிருந்தது..