ஆகாயம் 19:
தேர்தல் நெருங்க நெருங்க, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் பல குழப்பங்கள், பல பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் போட்டிகள் அதிகமிருக்க, கண்டிப்பாக இந்த முறை மக்களின் ஓட்டுக்கள் ஒரே கட்சிக்கு விழ வாய்ப்பேயில்லை என்று தெளிவாக தெரிந்து போனது.
கட்சிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு தொகுதிக்கும் சுயேட்சையாய் நின்றவர்களின் எண்ணிக்கை தான், மற்ற கட்சிகளை தலை சுத்த வைத்தது. சுயேட்சையாய் நின்றவர்கள் ஒன்றும் சாதாரன மனிதர்கள் இல்லை, டிராபிக் ராமசாமியைப் போல். சமூகத்திற்காக குரல் கொடுத்தவர்கள் இல்லை. ஆனால் அதே சமூகத்திற்காக வேலை பார்த்தவர்கள். ஒவ்வொரு தொகுதி சுயேட்சை வேட்பாளரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், ஒய்வு பெற்ற ஆணையர்கள் என இருக்க, இது பல கட்சிகளுக்கு ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியது. அப்படி நின்றவர்கள் அனைவரும் ஒரு காலத்தில், அவர்கள் நின்ற தொகுதியிலேயே அரசு வேலையில் இருந்து மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர்களும், மக்களால் பாராட்டப் பட்டவர்களுமாக இருந்தனர். முக்கியமாக நேர்மையான அதிகாரி என பெயர் வாங்கியவர்களாக இருந்தனர்.
ஆதித்ய வர்மாவின் வரவு ஒரு பக்கம் அவர்களை பீதியடையச் செய்ய,
சுயேட்சையாக களம் இறங்கியவர்களைப் பார்த்து பயம் இல்லையென்றாலும், ஓட்டுக்கள் பிரிந்து விடும் என்ற கவலை இருந்தது முக்கிய அரசியல் கட்சிகளுக்கு.
ஆதித்ய வர்மா கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்கள் யாரும் சோடை என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல், அவனுடைய தேர்வு மிகச் சிறந்ததாய் இருந்தது. அப்படியே ஜெயித்து விட்டாலும், ஒரு நேர்மையான நிர்வாகத்தை வழங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக் பட்டியலும் அவனிடம் முன்கூட்டியே தயாராக இருந்தது.
தேர்தலுக்கு முழுமையாக தயாராக இருந்தான் ஆதித்ய வர்மா. குறுகிய காலம் தான் என்றாலும், செய்த அனைத்தையும் முடிந்த அளவுக்கு செவ்வனே செய்திருந்தான். பல முக்கிய திரைப் பிரபலங்களின் ஆதரவும் அவனுக்கு இருந்தது. அவனை முதலில் ஏனோதானோவென்று பார்த்தவர்கள் அவனுடைய ஒவ்வொரு பரிமாணத்தையும், முயற்சியையும் பார்த்து வியந்து நின்றனர்.
தேர்தல் நாள் அருகில் வந்துவிட்டதால், தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. இத்தனை நாட்களில் ஆதித்யாவும் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டான். அவனுடைய பிரச்சாரமே புது விதமாக இருந்தது. அப்போது இருக்கும் ஆளுங்கட்சியை குறை சொல்லி, அதை நான் சரிபடுத்துவேன் என்று சொல்லாமல், எந்த கட்சியின் குறையையும் சொல்லாமல், அவன் பதவிக்கு வந்தால் என்ன செய்வான் என்பதை மட்டுமே பேசினான். அதில் பாதி இளைஞர்கள் கவரப் பட்டனர் எனலாம்.
ஒரு சாமானிய குடிமகனின் மனதில் இருக்கும் ஆதங்கமெல்லாம், அவனுடைய பிரச்சார பொழிப்புரையாக இருக்க, சென்ற இடமெல்லாம் அவனுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. அவனைப் பார்த்துக் கொண்டே, தங்கள் கட்சியின் பிரச்சாரத்தை கோட்டை விட்ட நிறைய அமைச்சர்கள் இருந்தனர்.
கருணைநாதன் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட துவாரகி அவரின் கட்டளைக்கு ஏற்ப, அவர் சொன்ன அனைத்தையும் செய்தாள். கணவனும், மனைவியுமாக எதிரெதிர் துருவங்களில் பிரச்சாரம் செய்து முடித்திருந்தனர்.
பலநாட்களுக்குப் பிறகு அன்று தான் வீட்டில் இருந்தான் ஆதித்ய வர்மா.
“எத்தனை நாள் ஆச்சு ஆதி? நீ இப்படி வீட்ல இருந்து..?” என்று பார்கவி ஆசுவாசப்பட,
“உண்மைதான்ம்மா..! இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்கு. சில சமயம் அரசியலுக்கு வந்திருக்க கூடாதோ அப்படின்ற எண்ணம் கூட வந்துட்டு தான் போகுது..?” என்றான் சோர்வாய். அவனுடைய சோர்வு அவரையும் சேர்த்து வாட்டியது.
“என்னாச்சு ஆதி..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார் சேது ராமன்.
“இன்னும் ரெண்டு நாள்ல எலக்சன். கொஞ்சம் டென்ஷனா இருக்குப்பா..?” என்றான் ஆதி. எல்லா நேரமும் ஒரு மனிதனால் சுறுசுறுப்பாக இயங்க முடியுமா என்ன..?
“உனக்கு மனசுல எதோ ஒரு எண்ணம் இருக்கு ஆதி. அதை எங்ககிட்ட இருந்து மறைக்கிற மாதிரி இருக்கு..?” என்றார் பார்கவி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா.!” என்றவன், அறைக்கு சென்று அப்படியே படுத்துவிட்டான். வேண்டியது கிடைத்தாலும், ஏனோ அதில் திருப்தி வராத உணர்வு சில சமயங்களில் தோன்றும். இப்போது அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.
அவனைப் போலவே அங்கு துவாரகியும் அப்படித்தான் இருந்தாள். அவளுக்கு பழக்கமில்லாத வழக்கங்கள் அவளை ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருந்தது. ஆதியின் அருகாமைக்காக அவள் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. நினைத்தவற்றை தெளிவாக செய்து முடித்த பின்னும், அவளுக்கும் அதே திருப்தி இல்லாத உணர்வு தான். இருவரின் மனமும் ஒரே விஷயத்தை தான் எதிர்பார்த்தது. இடைப்பட்ட நாட்களில் அவனுடன் போனில் பேசக் கூட நேரமில்லாது போனது அவளுக்கு.
துவாரகி, ஆதியைப் பற்றிய நினைவில் இருக்க, அவளுடைய அப்பா கருணை நாதனோ உச்சகட்ட எரிச்சலில் இருந்தார். மொத்தத்தில் தேர்தல் நெருங்க, யாரும் தூங்கவில்லை என்பது தான் உண்மை.
தேர்தல் நாள்:
முதல் ஆளாய் சென்று வாக்களித்த ஆதித்யா, உடனடியாக வீட்டுக்கு வந்துவிட்டான். அவன் கள நிலவரம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அறைக்குள் சென்று கதவை அடைத்தவன் வெளியே வரவேயில்லை.
திவ்யா, டிவியின் முன்பு அமர்ந்தவள் சாப்பிடக் கூட எழுந்திருக்கவில்லை. கனகவேல் மற்றும் பிற அமைச்சர்கள் அனைவரும் கருணைநாதன் வீட்டில் இருக்க, தேர்தல் களைகட்டிக் கொண்டிருந்தது.
துவாராகி தன்னுடைய செல்லில் இருந்த விக்ரம் போட்டோவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஆதி அரசியலுக்கு வரணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டது நீதான் விக்ரம். உன்னோட ஆசை இன்னைக்கு நிறைவேறிடுச்சு. எலக்சன் நடந்துகிட்டு இருக்கு. ஆனா, பார்க்கத்தான் நீ இல்லை. எல்லாம் என்னாலதானே விக்ரம்..?” என்றவளுக்கு அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அழுத்தம் எல்லாம் அழுகையாக வெளியே வந்தது.
தன்னுடைய நண்பனுக்கு தன் கையாலேயே விஷத்தை கொடுத்த பாவத்தை அவள் எங்கு சென்று கழுவப் போகிறாள்.விக்ரம் அதை ஆசையுடன் சாப்பிட்டது தான் இப்போதும் அவள் முன்னால் வந்து சென்றது.
தான் விஷத்தை சாப்பிடுகிறோம் என்று தெரியாத அவன் முகத்தில் தான் எவ்வளவு சந்தோசம். கருணைநாதன், ஆதியை பழிவாங்க வேறு எந்த வழியைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், துவாரகிக்கு இப்படி ஒரு பழி நிலைமை வந்திருக்காது. ஆனால், அவர் துவாரகியியைப் பயன்படுத்திக் கொண்டதை இன்றளவு நினைத்தாலும், உணர்வுகள் செத்து, மரத்துப் போய்விடும் உணர்வு தான் அவளுக்கு வரும்.
“விக்ரம் இப்படி என் கையால சாப்பிட்டு தான் செத்தான்ற உண்மை மட்டும் ஆதிக்கு தெரிய வந்தா.. அவனோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்…? என்னை சுத்தமா வெறுத்துடுவான். இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சு தான, நான் இந்த கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேன். இப்படி காலமெல்லாம் குற்ற உணர்வோட இருக்கனும்ன்னு தான் நீ உயிரை விட்டியா விக்ரம்..?” என்று தனக்குள் குமைந்து கொண்டிருந்தாள்.
அன்று புன்னைகையுடன் விடை கொடுத்தவன், மறுநாள் விடியலில் உயிருடன் இல்லை. முதல்நாள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் அவளுடன் பேசிக் கொண்டிருந்தவன், மறுநாள் யாரும் அருகில் இல்லாத தொலைவிற்கு சென்றிருந்தான். அதுவும் எப்படி பட்டத்தோடு..?
‘பிரபல நடிகரின் தம்பி, இளம் வெற்றி நடிகர் தற்கொலை..” என்ற செய்தி தான் அனைத்து மீடியாவும் ஒளிபரப்பியது. காலையில் கேட்ட செய்தியை அவளால் நம்ப முடியவில்லை. பிரம்மை பிடித்தவள் போன்று இருந்தாள் துவாரகி.
கண்ணாடிப் பேழைக்குள் அமைதியாய் இருந்த அவனது உருவத்தைக் கூட அவளால் பார்க்க முடியவில்லை. எந்த பாவமும் அறியாத, எந்த தப்பும் செய்யாத அவனுக்கு நேர்ந்த கதியை நினைத்தால், இப்போதும் கதி கலங்கும் துவாரகிக்கு. அதிலும் ஆதி அன்று அழுத அழுகையை அவளால் இப்பொழுதும் மறக்க முடியாது. அந்த குடும்பமே வாழ்நாள் முழுவதுக்குமான கண்ணீரை அழுது முடித்திருந்தனர். மீடியாக்கள் இஷ்ட்டம் போல் செய்தியை பரப்ப, அதிலும் சில மானங்கெட்ட மீடியாக்கள், கேமராவை ஆதித்ய வர்மாவை நோக்கித் திருப்பியது.
‘தம்பியின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத முன்னணி நடிகர்… மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரா இளம் நடிகர்..’ என்ற ரீதியிலான செய்திகளை வெளியிட்டு, ஆதியை ஒரு பைத்தியக்காரனாகவே மாற்றியிருந்தனர்.
எதற்கும் பயப்படாதவன், அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவனை பற்றி ஒரு நிமிடத்தில் அப்படி ஒரு செய்தியை ஒளிபரப்பின மீடியாக்கள். ஆனால் அப்போது துவாரகிக்கும் உண்மை தெரிந்திருக்கவில்லை. அவளும் கூட சில நாட்கள் தான் என்றாலும், ஆதியைத் தப்பாகத் தான் நினைத்தாள். விக்ரம் அவனைப் பற்றி எவ்வளவு சொல்லியிருந்தாலும், தன் நண்பன் உயிருடன் இல்லையென்ற செய்தி, அவளின் மற்ற எண்ணங்களை முன்னுக்கு வர விடவில்லை.
ஆனால், உண்மை தெரிந்த அந்த நிமிடம் இப்போது நினைத்தாலும் அவளுக்கு கைகால் நடுங்கியது. யாரும் இல்லையென்று நினைத்து கருணைநாதன் போனில் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்களைக் கேட்ட பிறகு தான், நண்பன் தன் வீட்டு சோற்றை உண்டு, தன் கையால் தான் இறந்திருக்கிறான் என்று. அந்த வேதனையும், குற்ற உணர்ச்சியும் இப்போது வரை அவளைத் துரத்திக் கொண்டிருக்கிறது.
நினைவுகள் ஒரு பக்கம் சுழன்று கொண்டிருக்க, கண்கள் விக்ரமின் நினைப்பில் கண்ணீரை சுரந்து கொண்டிருந்தது.
அன்றைய தேர்தல் நடந்து முடிய, தேர்தலில் பிரச்சனைகள் செய்ய வேண்டும் என்று கருணைநாதன் போட்டுக் குடுத்த பிளான் எல்லாம் சொதப்பியிருந்தது.
“எலக்சன் நல்ல படியா முடிஞ்சது. ஆனா, வெற்றி யாருக்குன்னு தான் தெரியலை..?” என்று திவ்யா புலம்பியபடி இருந்தாள்.
“விடும்மா திவ்யா.. கண்டிப்பா நம்ம தான் ஜெயிப்போம். இதுல என்ன சந்தேகம் உனக்கு..? அவன் யாரு..? நேத்து வந்த பொடிப்பய, உடனே வாப்பான்னு சொல்லி, பதவியைத் தூக்கிக் குடுத்துடுவாங்களா..? அப்படியே அவன் ஜெயிச்சாலும் ஆட்சியை கலைச்சுட மாட்டோம்..?” என்று நம்பிக்கையாய் பேசினார் கனகவேல்.
“ஆட்சியை கலைக்கிறது அவ்வளவு ஈசியாப்பா..?” என்றாள் திவ்யா.
“எல்லாமே நம்ம கையில தான் இருக்கு திவ்யா..? ஆட்சியை கலைக்கிறதும்,இடைத்தேர்தல் அறிவிக்கிறதும், அதுல புகுந்து விளையாடுறதும் நமக்கு என்ன புதுசா..? எல்லாம் நமக்கு சாதகமா நடந்தா பார்ப்போம். இல்லையா இருக்கவே இருக்கு கைவசம் அத்தனை ஐடியா..?” என்றார்.
“நான் கூட உங்களை என்னவோன்னு நினைச்சேன். ஆனா, நீங்க புகுந்து விளையாடுறிங்கப்பா..!” என்று திவ்யா பெருமையாய் சொல்ல, கனகவேலுக்கு பெருமை பிடிபடவில்லை.
“ரெண்டு பேரும் இந்த ஜென்மத்துக்கு திருந்தப் போறதில்லை..” என்ற ராதிகா தலையிலடித்துக் கொண்டாள்.
தேர்தல் நல்ல முறையில் நடந்து முடிந்த பிறகு தான் ஆதிக்கு நிம்மதியாக இருந்தது.
“சார், நம்ம இடையில நிறுத்துன படத்துக்கான ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிடலாம்ன்னு ப்ரொடியூசர் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணாங்க சார்..” என்றான் கவின்.
“ஒரு ரெண்டு நாள் ஆகட்டும் கவின். கொஞ்சம் டயர்டா இருக்கு..அப்பறம் ஷூட்டிங்கை விடாம முடிச்சு குடுத்துடலாம். அப்பறம் எலக்சன் ரிசல்ட்டுக்கு முன்னாடி ஷூட்டிங் முடியனும்ன்னு சொல்லிடு..” என்றான் ஆதி.
“சார், எலக்சனுக்கு ஆன மொத்த செலவோட டீட்டைல்ஸ் எல்லாம் இதுல இருக்கு..” என்றான் கவின். அதை வாங்கிப் பார்த்த ஆதித்ய வர்மாவுக்கு தலை சுத்தியது. அவன் சம்பாத்தியத்தில் பாதி கரைந்திருந்தது.
“இதெல்லாம் இருக்கட்டும் கவின்..!நான் சொன்ன விஷயம் என்னாச்சு..?” என்றான் ஆதி.
“அமௌண்ட் ரெடியா இருக்கு சார்..!” என்றான் கவின்.
“ஓகே..! நாளைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்…” என்றவனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.
எல்லா பிரச்சனைகளும் மனதில் ஒரு ஓரத்திற்கு சென்று விட, துவாரகியின் நினைப்பு அவனை பாடாய் படுத்த ஆரம்பித்தது.
“என்ன பண்ணிட்டு இருப்பா..?” என்று யோசித்தவன் அவளுக்கு அழைக்க, அவனின் அழைப்பை அவள் எடுக்கவேயில்லை.
“என்னாச்சு..? எதுவும் பிரச்சனையா இருக்குமா..?” என்றவன் மீண்டும் அழைத்தான். அவள் எடுக்கவில்லை. அவனுக்கு குழப்பமாய் இருக்க..ஒரு பக்கம் யோசனையாகவும் இருந்தது.
கருணைநாதன் வீட்டிற்கு அழைக்க, அருணா தான் எடுத்தார்.
“ஹலோ..”
“நான் ஆதித்யா பேசுறேன் ஆன்ட்டி. துவாரகி எங்க..?” என்றான்.
“நல்லாயிருக்கிங்களா தம்பி. துவாரகி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கிளம்பி வெளிய போனா தம்பி..” என்றார்.
“இந்த நேரத்துலையா..?” என்றான்.
“துவாவுக்கு பீச்சுக்குப் போகணும்னா, இந்த நேரத்துக்குத் தான் போவா. இது வழக்கமா நடக்குறது தான். அதான் நானும் ஒன்னும் சொல்லலை..” என்றார்.
“ஓகே..! நான் பார்த்துக்கிறேன்..” என்று போனை வைத்தவன்,
‘இந்த நேரத்துல போயிருக்கா..அதுவும் தனியா..?’ என்று யோசித்தவன், வேகமாய் கிளம்பினான். தலையோடு மூடிய டீ-சேர்ட்டை போட்டவன், ஒரு தொப்பியையும் போட்டுக் கொண்டான்.
கடற்கரையில், கடல் அலைகள் இரைச்சலுடன் கரையைத் தொட்டுத் தொட்டு விளையாடிக் கொண்டிருக்க, அந்த இரவின் ஏகாந்த அமைதியில் கடலை வெறித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த துவாரகியின் மனதில், அலையைப் போன்ற இரைச்சல் தான் மனதிலும். மனம் எதை எதிர்பார்க்கிறது என்று அவளுக்கேத் தெரியவில்லை.
அவள் வந்த கார் சற்று தூரத்தில் நின்றிருக்க, அவளுக்கு பாதுகாப்பாய் நின்ற டிரைவர், தன்னருகில் வந்து நின்ற காரைப் பார்த்து ‘யார்’ என்று பார்க்க, அதிலிருந்து இறங்கிய ஆதித்ய வர்மாவைப் பார்த்து முதலில் அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
அருகில் வந்தவன், முகத்தை நன்றாகக் காட்டி,
“துவாரகி எங்க..?” என்றான்.
“சா..சார்.. நீங்களா..? மேடம் அங்க இருக்காங்க சார்..” என்று சொல்லவும்,
“நீங்க கிளம்புங்க. நான் கூட்டிட்டு வரேன்..!” என்றான் ஆதி.
“சார்..ஐயாவுக்குத் தெரிஞ்சா, என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார்..” என்று அந்த டிரைவர் யோசிக்க,
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நான் பேசிக்கிறேன், நீங்க கிளம்புங்க..” என்றான் ஆதி.
அவனின் பேச்சைக் கேட்டு அந்த டிரைவரும் கிளம்பி விட, இது எதுவுமே கருத்தில் படாமல் நின்றிருந்தாள் துவாரகி. அவளை யோசனையுடன் பார்த்து விட்டு, அவளின் அருகில் சென்றான் ஆதி.
அவன் வந்ததைக் கூட அவள் உணரவில்லை. அவளின் அருகில் நின்றவன், அவளின் தோளில் கைபோட்டு, அவள் அருகே ஒட்டி நிற்க, தோளில் விழுந்த கரத்தில் பயந்து, நினைவிற்கு வந்து திரும்பிப் பார்த்தாள் துவாரகி.
“நான் தான்..!” என்ற ஆதியின் குரல் அவளுக்கு அவ்வளவு உயிர்ப்பை ஊட்டியது.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக் நிற்க, அவளின் கலங்கிய கண்களைப் பார்த்து,
“என்னாச்சு ரகி..? எதுவும் பிரச்சனையா..? இந்த நேரத்துல இங்க என்ன பண்ற..?” என்றான் ஆதி அவளை தன் கையணைப்பில் வைத்துக் கொண்டே.
“சும்மா தான் ஆதி. மனசு கொஞ்சம் பாரமா இருந்த மாதிரி இருந்தது. அதான் அமைதியான இடத்தைத் தேடி வந்தேன்..” என்றாள்.
“அந்த அளவுக்கு மனசுல என்ன பாரம்..?” என்றான்.
அவனிடம் எப்படி சொல்லுவாள் உண்மையை. நடந்த விஷயத்தைக் கேட்டு அவன் என்ன முடிவெடுப்பான்..? என்ற குழப்பம் தான் அவளுக்கு.
“அதான் எலக்சன் நல்ல முறையில முடிஞ்சுடுச்சே..? இன்னும் என்ன பிரச்சனை உனக்கு..?” என்றான்.
“எனக்கு விக்ரம் ஞாபகம் வந்துடுச்சு..” என்றாள் மொட்டையாக.
தம்பியின் பெயரைக் கேட்ட ஆதித்ய வர்மாவுக்கு, கருணைநாதனின் முகமும் சேர்ந்தே ஞாபகத்திற்கு வர, அவ்வளவு நேரம் அவன் மனதில் இருந்த அமைதியும் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டது.
“விடு துவா..? நடந்த எதையும் மாத்த முடியாது. நடக்கப் போறதை மாத்த முடியும். விக்ரம் உனக்கு பிரண்டுனா, அவன் எனக்கு உயிரான தம்பி. எனக்கு மட்டும் வருத்தம் இருக்காதா என்ன..? சொல்லப் போனா, என்னோட கவலைகளை எல்லாம், உன்னோட முகத்தை பார்த்து பார்த்து தான் மறக்கக் கத்துகிட்டேன்..” என்று அவன் ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து சொல்ல, அந்த நிமிடம் கணவனின் நம்பிக்கையில், அவனின் அன்பில் உருகித் தான் போனாள் துவாரகி.
கண்ணே, மணியே என்ற கொஞ்சல் இல்லை. துரத்தி துரத்தி காதல் சொல்லவில்லை. மனைவியாய் அவளை ஆளவில்லை. திருமணம் முடிந்த நாள் முதற்கொண்டு, இன்று வரை அவனுடைய எந்த ஒரு ஆசையையும் அவள் பூர்த்தி செய்யவில்லை. ஏன், அவனுக்கு அருகில் கூட இருக்கவில்லை. ஆனால், அவன் கவலையாய் இருக்கும் நேரமெல்லாம், தன் முகத்தைப் பார்த்து ஆறுதல் அடைகிறான் என்றால், தன் மீதான அவன் நேசம் குறித்து அப்போது தான் முழுமையாக உணர்ந்தாள் துவாரகி. இயற்கையாகவே மனைவியைத் தேடும் ஆண் மனம் தான் என்றாலும், ஆதி அந்த வகையில் சேர்ந்தவன் இல்லையே. அவர்களுக்கு இடையிலான உறவும் அவ்வளவு சுமூகமாய் இருந்ததில்லையே.
“உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா ஆதி..?” என்றாள் முதன் முறையாக.
“உனக்கே பதில் தெரிஞ்ச இந்த கேள்விக்கு..? நான் எப்படி பதில் சொல்ல முடியும். நானே பதிலா மாறினாதான் உண்டு..” என்றான்.
அந்த அமைதியான இடத்தில், அவனின் குரல் ஆழ்ந்து ஒலிக்க, அந்த குரலில் ஏற்ற இறக்கத்தில், அந்த குரல் உணர்த்திய பாவனையில் அவன் நேசம் முழுவதும் வெளிப்பட்டு நின்றது.
“இந்த கேள்விக்கான அவசியம் இப்ப ஏன் வந்தது துவாரகி..?” என்றான்.
“தோணுச்சு ஆதி. அதான் கேட்டேன்..” என்றாள்.
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா..? ஏன்னா, இந்த கல்யாணத்தை ஆரம்பத்திலிருந்து வேண்டாம்ன்னு சொன்னது நீதான்..” என்றான் ஆதி.
“உங்களை யாருக்காவது பிடிக்காம இருக்குமா..?” என்றாள்.
“நான் உனக்குப் பிடிச்சிருக்கான்னு தான் கேட்டேன்..” என்றான்.
‘உங்களை மட்டும் தான் பிடிக்கும்..’ என்ற பதிலை மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்,
“ஏன், எனக்கும் பிடிச்சாத்தான் பொண்டாட்டியா அக்சப்ட் பண்ணிப்பிங்களா என்ன..?” என்றாள்.
“நான் அதுக்காக கேட்கலை துவாரகி. வரப்போற எலக்சன் ரிசல்ட் எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியாது. எந்த முடிவும் நம்ம வாழ்க்கையை பாதிக்காத முடிவா இருக்கணும். அதைதான் சொல்றேன்..” என்றான்.
அவனுடைய கவலை என்னவென்று அவளுக்கு ஓரளவிற்குப் புரிந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டாள் துவாரகி.
‘உண்மை தெரிஞ்சு நீங்க என்ன ஆட்டம் ஆட காத்திருக்கிங்கன்னு தான் நான் பயந்துகிட்டு இருக்கேன் ஆதி. அது தெரியாம, நீங்க என்னை நினைச்சு பயந்துகிட்டு இருக்கீங்க..?’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு துவா..? அமைதியாகிட்ட..?” என்றான்.
“நம்மகிட்ட எல்லாமே இருக்கு, நிம்மதியைத் தவிர… எவ்வளவு பணம் இருந்தாலும் நிம்மதியை மட்டும் விலை குடுத்து வாங்க முடியாதுங்கிறது எவ்வளவு உண்மை.. அதை நினைச்சேன்..” என்றாள்.
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை. நீ இப்படியே என்கூட வந்துடு ரகி..” என்றான் ஆதி.
“என்னால அது மட்டும் முடியாது ஆதி..” என்றாள் துவாரகி.
அவளை அணைத்திருந்த கைகளை எடுத்தவன், அவளை விட்டு இரண்டடி தள்ளி நின்றான்.
“என்னாச்சு..?” என்றாள் தவிப்பாய்.
“இது நீயா ஏற்படுத்திகிட்ட இடைவெளி.. நீதான் குறைக்கனுமே தவிர, நான் இல்லை…” என்றவன்,
“போகலாம், நான் டிராப் பண்ணிட்டு போறேன்..” என்றவன் காருக்கு திரும்பி நடந்தான்.
‘நான் குறைக்க முயற்சி செய்யணுமா ஆதி..? நான் விலகி நிற்கிறேனா..? விதி என்னை நிறுத்தி வெச்சிருக்கு. உண்மை தெரிஞ்சு நீங்க ஆடப் போற ருத்ர தாண்டவத்தை பார்க்க முடியுமான்னு நினைச்சு செத்துக்கிட்டு இருக்கேன்..’ என்று நினைத்தவள், அமைதியாக அவனின் பின்னால் சென்றாள்.
காரில் நிலவிய அமைதி, இருவரின் மனமும் நிம்மதியின்றி தவிப்பதை அப்பட்டமாய் சொல்ல,
“துவா.. இப்பவும் கேட்கிறேன். என்கூட வந்துடேன்..!” என்றான் மீண்டும்.
அவள் எதுவும் பேசாமல் இருக்க, வந்த கோபத்தை கட்டுப் படுத்தியவன், அந்த கோபத்தை எல்லாம் காரின் வேகத்தில் காட்டினான்.
அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டவன்,
“இன்னொரு தடவை நானா கூப்பிடவே மாட்டேன். ஒரு அளவுக்கு மேல என்னாலையும் இறங்கிப் போக முடியாது துவாரகி..” என்றவன் விருட்டென்று காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அவன் சென்ற பாதையில் கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தாள் துவாரகி.
அடுத்து வெடிக்கப் போகும் பூகம்பத்தைப் பற்றி அறியாமல்.