ஆகாயம் 3:
“என்ன ஆதி, கருணை நாதன் என்ன சொன்னாரு..?” என்றார் சேது ராமன்.
“அவர் என்ன சொல்வார் டாட்..? நான் இப்படி பேசுவேன்னு அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கலை போல, அது அவர் முகத்துல இருந்தே தெரிஞ்சது. ஆதித்யா கூட மோதுறதுக்கு முன்னாடி அவர் யோசிச்சிருக்கணும். என்னைப் பத்தி அவருக்கு சரியா தெரியலை போல இருக்கு..” என்றான் ஆதி.
“அவரை அப்படி மட்டும் சாதாரணமா எடை போட்டுடாத ஆதி. அரசியல் வாழ்க்கைக்காக, அவர் எந்த அளவுக்கு பாடுபட்டிருக்கார்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னோட பயமெல்லாம், உன்னையும் அதுல இழுத்து விட்ருவாங்களோ அப்படிங்கிறது தான்..” என்றார் சேது.
“யார் என்ன சொன்னாலும், நான் என்னோட நிலைபாட்ல உறுதியா இருக்கேன் டாட். நமக்கும் அரசியலுக்கும் சுத்தமா செட் ஆகாது. அவர் என்னோட வழிக்கு வராத வரைக்கும், நான் அவரோட வழிக்கு கண்டிப்பா போக மாட்டேன்..” என்று ஆதித்யா உறுதியாக சொன்னான்.
“இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ ஏன் அரசியல் படங்களை நிறுத்தி வைக்கக் கூடாது..?” என்றார் சேது.
“அது என்னோட கையில இல்லை டாட், இயக்குனர் கையில் தான் இருக்கு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“சம்பத் எங்க ஆளையே காணோம்..?” என்றார் பார்கவி.
“அவனுக்கு வெளிய ஷூட்டிங் போலம்மா. இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவான். இந்த பீல்டுக்கு வந்ததும் போதும், ரெஸ்ட் இல்லாம சுத்துறதும் போதும்..” என்று புலம்பினான் ஆதி.
ஆதியின் நண்பன் தான் சம்பத். அவனும் ஒரு நடிகன் தான். ஆனால் ஆதி அளவிற்கு அல்ல.
“ஏண்டா..? துவாரகி கூட நீ பேசவேயில்லையாமே..?” என்ற பார்கவி அவனை நோட்டம் பார்த்தார்.
“அம்மா..! அவளும் என்னைப் பார்த்து பெருசா பேசலை, நானும் பேசலை. யார்கிட்டயும் வழிய பேசனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை..” என்றான்.
“அப்படியில்லை ஆதி. நிஜமாவே துவாரகி நல்ல பொண்ணுடா. நீ கிளம்புன உடனே அவ எனக்கு கால் பண்ணி பேசுனா..” என்றார் பார்கவி.
‘நம்ம அவளை மறக்கனும்ன்னு நினைச்சாலும், இவங்க விட மாட்டாங்க போலவே. இப்பதான் கொஞ்சம் மறந்திருந்தேன்..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,
“என்ன பேசுனா..?” என்றான் ஆதி, விடாமல்.
“உங்க பையன் வாயைத் திறந்து பேசவே இல்லை ஆன்ட்டி. கை கொடுத்த கொடுமைக்கு கையை ஓடிச்சு விட்டுட்டார் அப்படின்னு சொன்னா..” என்று சொன்ன பார்கவி சிரிக்க,
“நான் சாதாரணமாதான் கையைக் குடுத்தேன். அவ வீக்கா இருந்தா நான் என்ன பண்றது..?” என்றான் ஆதி.
“என்ன ஆதி, அந்த பொண்ணை அவ,இவன்னு பேசிட்டு இருக்க. நீ எப்ப இருந்து இப்படி மாறுன..?” என்று சேது அவன் மீது கோபப்பட,
“சாரி டாட். பட் என்னை விட சின்ன பொண்ணா தான் இருப்பாங்க. அதான் அப்படி வந்திருச்சு..” என்றான் பட்டென்று மரியாதையாய்.
“வயசுல என்ன இருக்கு..? அந்த பொண்ணும் சாதாரணம் இல்லை. ஒரு ஹாஸ்ப்பிட்டல் ஓனர்..” என்றார் சேது.
“தெரியாம சொல்லிட்டேன். ஆளை விடுங்க..” என்றவன், எழுந்து சென்று விட்டான்.
“ஆதி, இன்னைக்கு ரொம்ப இலகுவா பேசுற மாதிரி இருக்குல்ல பார்கவி. இப்பல்லாம் அவன் முன்ன மாதிரி இலகுவா இருக்குறதே இல்லை..” என்ற சேதுராமனின் மனதிற்குள் கவலைகள் அரித்துக் கொண்டே இருந்தது.
“இவனோட முரட்டு குணத்துக்கு, எந்த பிரச்சனையிலும் சிக்காம இருக்கனும்ங்க. புகழ் சேரும் போதே, நிம்மதி குறைய ஆரம்பிச்சுடுது..” என்று பார்கவி புலம்ப,
“விடு பார்த்துக்கலாம்..” என்றார் சேது.
சிஎம் கருணை நாதன் வீடு:
“என்னப்பா, அவனெல்லாம் ஒரு ஆளுன்னு உங்களையே வந்து மிரட்டிட்டு போயிருக்கான். நீங்களும் அவனுக்கு பயந்து எல்லாத்துக்கும் சரின்னு சொல்லியிருக்கிங்க..” என்று அவரின் மகன் சசிதரன் கத்திக் கொண்டிருந்தான்.
“என்னங்க இப்படி சொல்லிட்டிங்க..? அவரு எவ்வளவு பெரிய ஆக்டர். ஆனா, கொஞ்சம் கூட பந்தாவே இல்லை..” என்று பூமிகா சொல்ல,
“உன்னை யாரு இங்கல்லாம் வர சொன்னது. உனக்கு தேவையில்லாத விஷயத்துல எல்லாம் கருத்து சொல்ல வந்துடாத..” என்று அவளிடமும் கத்தினான் சசிதரன்.
“அப்படியில்லை சசி..! அவன் பேசினது மிரட்டலாவே இருந்தாலும், யோசிச்சு பார்த்தா, அவன் சொல்றதும் உண்மை தான். நாம பேசாம இருந்திருந்தா, படத்துல வசனம் பேசுனதோட நின்னுருப்பான். நாமளே வம்பை வழிய தேடிட்டு போன மாதிரி தான் இருக்கு..” என்றார் கருணை நாதன்.
“புரியாம பேசாதிங்கப்பா..! அவன் பேசியிருந்த ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுது. ஒவ்வொருத்தனும் அதுக்கு ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். அதனால தான நிறுத்தி வச்சோம். இது அவனுக்கு சாதகமான்னு எனக்குத் தெரியாது. ஆனா, கண்டிப்பா நமக்குப் பாதகம் தான்..” என்றான் சசிதரன்.
“அதுக்கு இப்ப ஒன்னும் செய்ய முடியாது சசி. இந்த நேரத்துல அவனைப் பகைச்சா, முதலுக்கே மோசம் வந்துடும். அவனோட மறைமுக சப்போர்ட் நமக்குத் தேவை. கொஞ்சம் விட்டுப் புடிப்போம். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..” என்று கருணை நாதன் சொல்ல,
“சார்.. ஜோசியர் வந்திருக்கார்..!” என்றார் முருகேசன்.
“வர சொல்லு முருகேசா..” என்றார்.
“இப்ப எதுக்குப்பா ஜோசியர வர சொல்லியிருக்கிங்க..?” என்றான் சசி புரியாமல்.
“காரணமாத்தான் சசி..!” என்றவர், மேற்கொண்டு அவனிடம் எதுவும் சொல்லவில்லை.
வந்தவரை அமர சொன்னவர்,
“நான் சொன்ன விஷயத்தை கணிச்சுப் பார்த்திங்களா ஜோசியரே..?” என்றார் கருணை நாதன். வந்திருந்தவர் சாதாரண ஜோசியர் இல்லை. அவர் சொல்லி இதுவரை எதுவும் நடக்காமல் இருந்ததில்லை. சென்ற முறை கூட, கருணாநாதன் தான் முதலமைச்சர் ஆவார் என்று அடித்துச் சொன்னவர். இப்போதும் அதே காரணத்திற்காகத் தான் அவரை வரவழைத்திருந்தார் கருணை நாதன்.
“தலைவர்களோட ஜாதகத்தை கணிச்சுப் பார்த்ததில், எதிர்க்கட்சி இந்த தடவை ஆட்சியைப் பிடிக்க மாட்டாங்க…” என்று அவர் சொல்ல, கருணை நாதனுக்கு மனதிற்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவரின் மகிழ்ச்சியைப் பார்த்த ஜோசியர் சிரித்துக் கொண்டார்.
“அதே சமயம்..” என்று அவர் இழுக்க,
“சொல்லுங்க, ஏன் தயங்குறிங்க..?” என்றார்.
“அதே சமயம் இந்த முறை உங்களுக்கும் அந்த வாய்ப்பில்லை..” என்றார் அவர்.
“என்ன சொல்றிங்க..?” என்றவரின் முகத்தில் அதிர்ச்சியின் சாயல் அப்படியே தெரிந்தது.
“நான் சொல்லலை, அமைப்பு சொல்லுது. இந்த முறை ஒரு நடிகனுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் தான் வாய்ப்பு அதிகமா இருக்கு. அதிகா இருக்குன்னு சொல்றதை விட, அவங்க தான் ஆட்சியில் இருப்பாங்க..” என்றார் அவர் உறுதியாக. சசிதரனுக்கு மனதிற்குள் இருந்த ஆசையெல்லாம் அடியோடு நொறுங்கி விட்டதைப் போல் இருந்தது.
“என்னோட வார்த்தையில நம்பிக்கை இல்லைன்னா, நீங்க வேற ஒரு நல்ல ஜோசியரை வச்சுகூட கணிச்சு பார்த்துக்கங்க..” என்றவர், கிளம்பிவிட்டார்.
“என்னப்பா..? இவர் இப்படி சொல்லிட்டு போறார்..?” என்றான் சசி.
“எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை சசி. இந்த முறை வாய்ப்பை விட்டுட்டா, அடுத்து வரவன், நாம் செஞ்ச எல்லா குளறுபடியையும் நோண்டுவான். எல்லா விஷயமும் வெளிய வந்தா, அது அரசியல் வாழ்க்கைக்கே ஆப்பு வச்சிடும்..” என்ற கருணை நாதன் யோசனையில் ஆழ்ந்தான்.
“அந்த நடிகன் யாருன்னு கேட்காம விட்டுட்டோமே..” என்று சசி புலம்ப, கருணை நாதனுக்கு மனதிற்குள் மணியடித்தது
“என்னைய கொஞ்ச நேரம் தனியா விடு சசி. நாளைக்கு செயற்குழு கூட்டம் இருக்கு. அதுல பேசி ஒரு முடிவு எடுத்துக்கலாம்..” என்றார் அவர்.
“சரிப்பா..!” என்றவனுக்கு மனதிற்குள் எரிச்சல் மண்டிப் போய் இருந்தது. அவனுக்கும் எதிர்காலத்தில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது.
“என்னண்ணா..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று துவாரகி அக்கறையாக கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை துவா. கட்சி டென்ஷன் தான், வேற என்ன..? ஆமா, நீ இன்னைக்கு ஹாஸ்ப்பிட்டல் போகலையா..?” என்றான்.
“கொஞ்சம் லேட்டா போகணும் அண்ணா..” என்றவள், அவனிடம் எதையோ சொல்ல வாயைத் திறக்கப் போக, பின் வேண்டாம் என்று சொல்லி அதை அப்படியே விட்டுவிட்டாள்.
அதே நேரம் அவளின் போன் ரிங்காக, அதைப் பார்த்தவள்,
“சொல்லுங்க சம்பத்…!” என்று பேசியபடி சென்றாள். அவள் அப்படி பேசிக் கொண்டு உள்ளே செல்வதைப் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான் சசி. பொதுவாக, அவள் இப்படி தனியாக சென்று பேச மாட்டாள். சில நாட்களாக அவளிடம் சில மாற்றங்கள் தெரிவதைப் போல் உணர்ந்தான் சசிதரன்.
அதற்கடுத்து வந்த நாட்களில், ஆதித்ய வர்மாவின் படம் மீண்டும் ரிலீசாகி, படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. எங்கு திரும்பினாலும், அவன் திரைப்படத்தின் வசனங்களும், பாடல்களும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த படம் அவனுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைய, நிற்கவும் நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தான் ஆதித்யா.
அதற்கடுத்து அவனுக்கு வரிசையாக படங்கள் புக்காகிக் கொண்டிருக்க, அவனே சில படங்களை நிறுத்தி வைக்கும் அளவிற்கு இருந்தது. அவனுடைய கால்ஷீட்டிற்காக, பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் காத்துக் கிடந்தனர்.
“சார், அடுத்து ரெண்டு வருஷத்துக்கு உங்க கால்ஷீட் இல்லைன்னு தெளிவா சொல்லிட்டேன் சார்..” என்ற கவினுக்கு ஆயாசமாய் வந்தது. அவனும் எத்தனை பேரைத் தான் சமாளிப்பான்.
“இப்படியே படம் நடிச்சுட்டே இருந்தா போதுமா..? கல்யாணம் காட்சி எதுவும் பண்ண வேண்டாமா..?” என்றார் பார்கவி கோபமாக.
“எனக்குத் தான் ஒவ்வொரு படத்துலயும் கல்யாணம் ஆகுதே.. இல்லையா கவின்..” என்றவன் சிரிக்க,
“சிரிக்காத ஆதி. நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு, நீ என்ன வேணும்ன்னாலும் செய். நாங்க எதுவும் கேட்க மாட்டோம்..” என்றார் பார்கவி.
“நான் ரெடி தான்மா. ஆனா, பொண்ணு கிடைக்கணும் பாருங்க..” என்றான் கிண்டலாய்.
“என்ன சொல்ற ஆதி..? உனக்கு பொண்ணு கிடைக்காதா..?” என்று அவர் வம்பிழுக்க,
“உண்மை தான்ம்மா. நடிகனுக்கு பொண்ணு குடுக்க யார் தயாரா இருக்காங்க. அப்படியே தயாரா இருந்தாலும், அவங்க நோக்கமெல்லாம் வேற மாதிரி தான் இருக்கு..” என்றான் ஆதி. அவன் எதை வைத்து அப்படி சொல்கிறான் என்று அவர்களுக்கும் தெரிந்து தான் இருந்தது.
அவர்கள் அமைதியாகவும், தன்னைத் தானே நொந்து கொண்டவன்..
“அதெல்லாம் விடுங்க..! உங்க வெட்டிங் ஆன்வசரி வருது. அதுக்கு யாரையெல்லாம் இன்வைட் பண்ணியிருக்கிங்க..?” என்றான்.
“ரொம்ப பெரிசா எதையும் பண்ண வேண்டாம் ஆதி. வீட்லயே சிம்ப்ளா முடிச்சுக்கலாம். நாங்க அதிகம் யாரையும் இன்வைட் பண்ணலை..” என்றார் பார்கவி.
“ஓகே டன்..! அப்போ நான் அன்னைக்கு என்னை பிரி பண்ணிக்கிறேன்..” என்றவன்,
“கவின், ஷெட்யுல் பார்த்து, அன்னைக்கு என்ன ஷூட்டிங் இருந்தாலும் கேன்சல் பண்ணிடு..” என்றான்.
“ஓகே சார்..!” என்றான் அவன்.
“ஆதி, இப்பல்லாம் நீ பழைய மாதிரி மாறிட்டே வர. ஒருவேளை எங்களுக்காக நடிக்கிறியா..?” என்று சேது கேட்டவுடன், ஆதியின் முகம் அப்படியே கல்லானது. பல்லைக் கடித்து, உணர்வுகளை கட்டுப் படுத்தியவன்,
“உங்ககிட்ட நான் எதுக்குப்பா நடிக்க போறேன். நான் பழைய மாதிரி இருந்தா, அம்மா சந்தோஷமா இருக்காங்க. எனக்கு அது தான் முக்கியம்..” என்று சொன்னவன்,
“குட் நைட்..!” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
“என்னங்க நீங்க..? அவன்கிட்ட ஏன் இப்படி கேட்டிங்க? பாருங்க அவன் முகமே சரியில்லை..” என்று பார்கவி வருத்தப்பட்டார்.
“உனக்குப் புரியலையா பார்கவி, அவன் நடிக்கிறான்.. பெத்தவங்க நம்மகிட்டேயே நடிக்கிறான். அவன் ஒரு நல்ல நடிகன்னு இதுல இருந்தே உனக்குத் தெரியலையா..?” என்ற சேதுவிற்கு மனதிற்குள் ஆயிரம் வேதனைகள் இருந்தது.
“எனக்கு அதைப் பத்தியெல்லாம் தெரியாது. ஆனா, அவன் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்..” என்றார் பார்கவி.
அறைக்குள் சென்ற ஆதி, அங்கு குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்தான். மனம் அமைதியடைய மறுத்தது. வேகமாக தன்னுடைய போனை எடுத்தவன், சம்பத்திற்கு அழைக்க, அவன் போன் பிசியென வந்தது.
“அப்படி யார்கிட்ட பேசிட்டே இருக்கான் இவன்..?” என்ற எரிச்சலில் போனைத் தூக்கி கட்டிலில் போட்டான் ஆதி. ஏனோ அந்த நேரம் துவாரகியின் நினைவு வர, அன்று அவள் வீட்டில் எடுத்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால், மனம் எதோ ஒரு நிமிடத்தில் சாந்தம் அடைந்திருந்தது.
“அப்படி என்ன இருக்கு உன்கிட்ட..? உன்னைப் பார்த்த உடனே எந்த கவலையா இருந்தாலும், அது மறைஞ்சு போயிடுதே..? இத்தனை நாள் எங்க இருந்த நீ..? நான் தான் உன்னை கவனிக்காம விட்டுட்டேனோ..?” என்று புகைப்படத்தைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான் ஆதி. புகைப்படத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்த ஆதிக்கு, அவளை நேரில் பார்த்து பேசும் சந்தர்ப்பமும் வாய்த்தது.
பார்கவி-சேதுராமன் திருமண தினத்தன்று, அவர்களின் வீட்டிற்கே வந்திருந்தாள் துவாரகி. அவளுடன் சேர்ந்து, இன்னும் சில டாக்டர்களும் வந்திருக்க, அவளை அங்கே எதிர்பார்க்காத ஆதித்ய வர்மா, கொஞ்சம் திகைத்து தான் போனான்.
வெள்ளை நிற ஜார்ஜெட் புடவையில், அங்கங்கே ஸ்டோன்கள் இருக்க, அதற்கேற்றார் போல், காதில் ஒரு பெரிய கம்மல் மட்டும் அணிந்திருந்தாள். கழுத்தில் எதுவும் அணியவில்லை. ஆனால் அதுவே அவளை பேரழகியாய் காட்ட, அப்படியே ஸ்டன்னாகி நின்று விட்டான் ஆதி. அவளை வெகு சாதரணமாக பார்த்து பழகியவனுக்கு, இப்போது அவள் மீது இருந்த கண்களை எடுக்க முடியவில்லை. சங்ககால இலக்கியத்தில் வர்ணித்த அத்தனை வர்ணனைகளும் அவன் நினைவிற்கு வந்தது.
“என்ன ஆதி..? ஏன் அப்படியே நின்னுட்ட..?” என்றார் பார்கவி.
“அம்மா, இவங்களையெல்லாம் இன்வைட் பண்ணியிருக்கிங்கன்னு நீங்க சொல்லவே இல்லையே..?” என்றான்.
“எல்லாருமே டாக்டர்ஸ் ஆதி. தவிர்க்க முடியலை. உன்னை எதுவும் தொந்தரவு பண்ண மாட்டாங்க..” என்றார் பார்கவி.
“நான் அப்படி நினைச்சு எதுவும் கேட்கலைம்மா..! இருந்தாலும் சிஎம் டாட்டர் எல்லாம் வந்திருக்காங்க. அவங்களுக்குரிய பாதுகாப்பை நாம குடுத்து தான ஆகணும்.. அதான் கேட்டேன்..” என்றான் யோசனையாக.
“துவாரகிக்கு அந்த பகட்டெல்லாம் பிடிக்காது ஆதி. அந்த பொண்ணு ரொம்ப சிம்பிள். அதைதான் அவ விரும்புவா. இந்த காலத்துலயும் இப்படி ஒரு பொண்ணு. தன்னை யாருன்னு அவ அதிகம் வெளிக்காட்டிகிட்டதே இல்லை..” என்றார் பார்கவி.
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்றான் சிரிப்புடன்.
“என்ன ஆதி.. கிண்டலா..? பாதி நாள் அவகூடத்தானே இருக்கேன். எனக்குத் தெரியாதா..?” என்றார் பார்கவி.
“அதான் படிச்சு முடிச்சு, டாக்டர் ஆகிட்டாங்க. அவங்க அப்பா உடனே ஒரு ஹாஸ்பிட்டலும் கட்டிக் குடுத்துட்டார். சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க வேண்டியது தானே..” என்று போட்டு வாங்கினான் ஆதி.
“நானும் சொல்லிப் பார்த்துட்டேன் ஆதி. ஆனா, அவ யாரையோ லவ் பண்ற மாதிரி எனக்குத் தோணுது. உறுதியா தெரியலை..” என்றார்.
“லவ் பண்றாளா..?” என்று நினைத்தவுடன், அவன் மனதில் அத்தனை நேரம் இருந்த ஒரு இனிமை அப்படியே காணாமல் போனது.
“ஓகேம்மா..! நீங்க அவங்களை கவனிங்க..” என்றவன், அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
“என்ன ஆன்ட்டி..! தி கிரேட் ஆக்டர் ஆதித்ய வர்மா, எங்ககிட்டயெல்லாம் பேச மாட்டாரோ..?” என்றாள் துவாரகி.
“அப்படியெல்லாம் இல்லை துவா. பொதுவாவே அவன் கொஞ்சம் மூடி டைப்..” என்றார் பார்கவி.
“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க ஆன்ட்டி. அங்க பாருங்க உங்க பையனை..” என்று அவள் காட்ட, அங்கே ஆதி அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.
“கொஞ்சம் பழகுற வரைக்கும் கஷ்ட்டம் துவா. பழகிட்டா அவனைப் மாதிரி பேச முடியாது..” என்றார் பார்கவி.
“நம்பிட்டோம் ஆன்ட்டி..” என்றவள் அதற்கு பிறகு ஆதி இருந்த திசைப் பக்கம் கூட திரும்பவில்லை. அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, பரிசைக் கொடுத்து விட்டு, கிளம்பும் வரையிலும் ஆதி அவள் அருகில் வரவில்லை. அது துவாரகிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அனைவரிடத்திலும் சாதாரணமாக பேசுபவன், தன்னை மட்டும் ஒதுக்குவதைப் போல் இருந்தது. அவளுக்குக் காரணமும் தெரியவில்லை. அவள் சாப்பிடாமல் கிளம்புவதை பார்த்து அருகில் வந்தான் ஆதித்யா.
“என்னாச்சு மிஸ். துவாரகி. ஏன் சாப்பிடாம கிளம்புறிங்க. கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்..!” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு போய் கையேடு சாப்பிட வைக்க முயன்றான். அவன் தன்னிடம் பேசவில்லை என்று அவள் நினைத்திருக்க, அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ஆதித்யா.
“இட்ஸ் ஓகே..! நானே எடுத்துக்கறேன்..” என்றவள், அவளுக்குத் தேவையானதை அவளே எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். பபே முறையில் தான் உணவுகள் வைக்கப்பட்டிருந்தது. அவள், அவனைப் பார்க்காமல் பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,
“தேங்க்ஸ் பார் யுவர் விசிட்..” என்று அவன் சிரித்த முகமாய் சொல்ல,
“ம்ம்..” என்றவள், அவனிடம் எதுவும் பேசாமல் செல்ல, மீண்டும் அவளிடம் அடி வாங்கினான் ஆதித்யா.
“பேசக் கூட விருப்பம் இல்லாத பொண்ணுகிட்ட வந்து திரும்ப திரும்ப பேசி ஏண்டா அசிங்கப்படுற..?” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், பிறகு அவளை கவனிக்கவில்லை. பார்கவி,சேதுராமனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிய துவாரகி, ஆதியைத் தேட, அவன் அவள் கண்ணில் படவேயில்லை.
அவள் கிளம்பும் நேரத்திற்கு வந்தான் சம்பத்.
“ஹேய் துவாரகி..? நீ எப்போ வந்த..?” என்றான் அவளைப் பார்த்தவுடன். சம்பத் வந்ததைப் பார்த்துவிட்டு, அவனிடம் வந்த ஆதி, அவன் துவாரகியிடம் சகஜமாக பேசுவதைப் பார்த்துவிட்டு அப்படியே நின்று விட்டான்.
“ஹாஸ்பிட்டல் சார்பா, டாக்டர்ஸ் எல்லாரும் வந்தோம் சம்பத். நீங்க வரதா சொல்லவேயில்லையே..?” என்றாள் துவாரகி.
“கடைசி வரைக்கும் வருவேனான்னு உறுதியா தெரியலை. ஷூட்டிங் முடிச்சு நேரா இங்க தான் வரேன். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணேன்.. சேர்ந்தே போகலாம்..” என்றான்.
“இப்பவே டைம் ஆச்சு சம்பத். நீங்க ஆன்ட்டியை பார்த்துட்டு வாங்க. நான் கிளம்புறேன்..” என்றவள், அதற்கு மேல் தாமதிக்காமல் கிளம்பிவிட்டாள்.
அவள் கிளம்பவும் அவன் அருகில் வந்தான் ஆதி.
“வாங்க சார்..! நீங்க வர நேரமா இது…?” என்றான்.
“சாரி ஆதி..! சூட் முடிய கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எப்படியோ வந்துட்டேன்ல..” என்றவன்,
“துவாரகியை நான் இங்க எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல..” என்றான்.
“ம்ம் நானும் தான்..” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டான் ஆதித்யா. சம்பத்தை அனுப்பி விட்டு , அவள் கார் கேட்டை விட்டு வெளியேறும் வரை அவன் பார்த்துக் கொண்டு நிற்க, அவன் நிற்பதை சைட் மிரர் வழியாக பார்த்துக் கொண்டே சென்றாள் துவாரகி.
வீட்டிற்கு வந்த துவாரகியை வாசலிலேயே வரவேற்றார் கருணை நாதன்.
“நீங்க இன்னும் தூங்கலையாப்பா..” என்றபடி அவள் வர,
“அந்த ஆதித்ய வர்மா வீட்டுக்கா போயிட்டு வர துவாரகி..?” என்றார் எடுத்தவுடன்.
“ஆமாப்பா..! பார்கவி ஆன்ட்டிக்கு இன்னைக்கு வெட்டிங் ஆன்வர்சரி. அதான் ஹாஸ்பிட்டல் சார்பா போயிட்டு வந்தோம்..” என்றாள்.
“அம்மா சொன்னா துவாரகி..” என்றவர் அவளிடம் எப்படி பேசுவது என்று யோசித்துக் கொண்டிருக்க,
“என்கிட்டே ஏதாவது சொல்லனுமாப்பா..” என்றாள், அவரின் முகத்தைப் பார்த்து.
தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர்,
“அந்த ஆதித்ய வர்மா பத்தி நீ என்ன நினைக்கிற துவாரகி..” என்றார் கருணை நாதன்.
“அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்குப்பா..! அவர் ஒரு பெஸ்ட் ஆக்ட்டர்… தமிழ்நாட்டோட கனவு கண்ணன்..” என்றாள் சன்னமான சிரிப்புடன்.
“அதை கேட்கலைம்மா, உன்னோட அபிப்ராயம் என்ன..?” என்றார்.
“எதுக்காக கேட்குறிங்கப்பா..?” என்றாள் கேள்வியாய்.
“எனக்கு மருமகனாகிற அத்தனை தகுதியும் அவருக்கு இருக்குறதா எனக்குத் தோணுது. உனக்கு என்ன தோணுதுமா..” என்றார்.
“இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு தோணுதுப்பா..” என்றாள் பட்டென்று.
அவள் சொன்னதை கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்து போனார் அவர். மகளின் புத்திக் கூர்மையை எண்ணி அவர் வியந்து கொண்டிருக்கும் நேரமல்ல அது.
“உனக்கு ஆதித்ய வர்மாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா துவாரகி..” என்றார்.
“வேண்டாம்ன்னு சொன்னா விட்டுருவிங்களா..?” என்றாள் கூர்மையான பார்வையுடன்.
“இதுக்கு என்ன அர்த்தம் துவாரகி..?” என்றார்.
“எனக்கு விருப்பமில்லைன்னு அர்த்தம்..” என்றாள் பட்டென்று.
“இந்த அப்பாவுக்காக இதை கூட பண்ண மாட்டியா துவாரகி. நான் சொல்லி புரிஞ்சிக்கிற நிலைமையில் நீ இல்லைன்னு தெரியும். ஆனா, நீ அவனை கல்யாணம் பண்ணியே ஆக வேண்டிய சூழ்நிலை.. நீ இதை செஞ்சு தான் ஆகணும்..” என்றார்.
“எனக்கு பொய் சொல்ல வராதுப்பா..! பொய் சொல்லவும் மாட்டேன். எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை.. என்னோட மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் நீங்க இப்படி கேட்கிறதை தான் என்னால ஏத்துக்கவே முடியலை..” என்றாள் கோபமாக.
“நான் ஒன்னும் தகுதியில்லாத ஒருத்தனை கட்டிக்க சொல்லி உன்னை கட்டாயப்படுத்தலையே..?” என்றார்.
“உங்க தகுதியை தக்க வச்சுக்க, ஆதியை கட்டிக்க சொல்றிங்க.. இப்படி சொன்னா சரியா இருக்குமாப்பா..?” என்றாள்.
“நீ புத்திசாலி பொண்ணுன்னு நினைச்சேன் துவாரகி..” என்றார்.
“இப்பவும் அப்படி இருக்கிறதால தான் பேசிட்டு இருக்கேன்ப்பா. இல்லன்னா, நீங்க சொன்ன உடனே சந்தோஷமா சம்மதம் சொல்லியிருப்பேன்..” என்றாள்.
“நான் அவங்க வீட்ல பேசுறேன். இந்த கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகணும். உனக்கு இதுல விருப்பம் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி. இதுல புத்திசாலித்தனமா ஏதாவது செய்யுனும்ன்னு நினைச்சு செய்யாத. அப்பா, இதை உன்கிட்ட ஒரு வேண்டுதலா கேட்கிறேன். கட்டாயப்படுத்தலை.. ஆனா, நீ கட்டாயம் இதை ஏத்துகிட்டு தான் ஆகணும்..” என்றார்.
“இதென்ன புது டெக்னிக்கா இருக்கு..? கட்டாயப்படுத்தலை, ஆனா கண்டிப்பா செய்யனும். இதுக்கு முதல்ல அந்த ஆதித்ய வர்மா சம்மதிக்கணும். நீங்களா கற்பனை கோட்டை காட்டாதிங்க..” என்றவள் அவள் அறைக்கு சென்று விட்டாள்.
அறையில் இருந்த சோபாவில் வேண்டா வெறுப்பாய் அமர்ந்தவளுக்கு, தலைவலி வருவதைப் போல் இருந்தது.
“ஆதிக்கு என்ன குறைச்சல் துவாரகி..? அவனைக் கல்யாணம் பண்றதுல உனக்கு என்ன பிரச்சனை..?” என்று அவளின் மனசாட்சி கேட்க,
“நடிகனா அவனை எனக்குப் பிடிக்கும். ஆனா, கணவனா..?” என்று அவள் யோசிக்க, அவளுக்கே குழப்பமாக இருந்தது. அவளும் பலவாறு யோசனை செய்துவிட்டாள். இது சரியாக வருமா என்று. ஆனால் முடிவு தான் தெரியவில்லை. போனை எடுத்து சம்பத்திற்கு அழைத்தாள்.
“என்ன துவா..? வீட்டுக்குப் போயாச்சா..?” என்றான் சம்பத்.
“ வந்துட்டேன் சம்பத். நீ எங்க இருக்க..?” என்றாள்.
“இன்னும் இங்க தான் இருக்கேன்..!” என்றான் சம்பத்.
“அப்பா, ஆதித்ய வர்மாவை எனக்கு மாப்பிள்ளையா முடிவு பண்ணியிருக்கார்..” என்றாள் எடுத்த எடுப்பில்.
“என்ன சொல்ற துவாரகி..?” என்று எதிர்புறம் கேட்ட சம்பத் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான்.
“இப்போதான் என்கிட்ட பேசினார். நான் எவ்வளவு எடுத்து சொன்னாலும், அவர் முடிவுல அவர் உறுதியா இருக்கார்..” என்றாள்.
“இதுல ஆதியோட முடிவு என்ன..?” என்றான் சம்பத்.
“இன்னும் ஆதி வீட்ல பேசலை போல. ஆனா, எப்படியும் சம்மதிக்க வச்சிடுவார்..” என்றாள் துவாரகி.
சம்பத் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆதி அவனுக்கு அருகில் வர,
“நான் வீட்டுக்குப் போயிட்டு பேசுறேன் துவா..” என்று போனை வைத்து விட்டான்.
அவனின் ‘துவா’ என்ற பேச்சு மட்டும் ஆதியின் காதில் விழுந்தது.
‘நான் வரவும் எதுக்கு போனை கட் பண்றான். பேசுனது துவாரகியா இருக்குமோ..?’ என்ற ஆதியின் மனதில் சிறு சஞ்சலம்.