ஆகாயம் 4:
“என்னாச்சு சம்பத்? எதுக்கு என்னைப் பார்த்தவுடனே போனை கட் பண்ற..?” என்றான் ஆதித்யா யோசனையாக.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஆதி. பேசி முடிச்சுட்டேன், அதான் போனை கட் பண்ணேன்..” என்றான் சம்பத்.
“போன்ல யாரு..?” என்றான். அவன் வாயிலிருந்து என்ன வருகிறது என்று ஆதி நோட்டம் பார்க்க,
“துவாரகி தான் கால் பண்ணியிருந்தா. வீட்டுக்குப் போய் சேர்ந்த உடனே எனக்கு இன்பார்ம் பண்ண சொன்னேன், அதான்..” என்றான் சம்பத் எதார்த்தமாய்.
“ஹோ.. துவாரகியை உனக்கு முன்னாடியே பழக்கமா சம்பத்..?” என்றான் ஆதி. அவன் எதற்காக அப்படி கேட்கிறான் என்று சம்பத்திற்கு புரியவில்லை.
“எதுக்காக கேட்கிறன்னு புரியலை ஆதி..?” என்றான்.
“இல்ல, துவாரகியை முன்னாடியே தெரியுமான்னு கேட்டேன். என்கிட்டே ஒரு தடவை கூட நீ அவங்களைப் பத்தி பேசுனது இல்லையே.. அதான்.” என்றான் ஆதி.
“தெரியும் ஆதி. சொல்லக் கூடிய சந்தர்ப்பம் வரலை, அவ்வளவு தான்.” என்றான் சம்பத்.
“ஓகே..! சும்மாதான் கேட்டேன்..” என்று தோள்களை குலுக்கி விட்டு சென்ற ஆதித்யா ஏனோ புதிதாய் தெரிந்தான் சம்பத்திற்கு. அவன் அறிந்த ஆதி, எதையும் தோண்டித் துருவி கேட்கமாட்டான். சம்பத்தின் மூளைக்குள் மணியடித்தது. அங்கே பெற்றோரின் அருகே சிரித்துக் கொண்டிருந்த ஆதித்யாவை பார்த்தவனுக்கு, அவனுடைய கம்பீரத்தில் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.
சம்பத்திடம் விஷயத்தை சொல்லிவிட்டு வைத்த துவாரகியின் நிலைமையும் அதே தான். கருணை நாதன் ஒன்றை நினைத்துவிட்டால் அதை கண்டிப்பாக செய்து முடித்து விடுவார் என்பது தான் அவளுக்கு நன்றாக தெரிந்த விஷயம் ஆயிற்றே.
ஆதியை நினைத்த மாத்திரத்தில், கொஞ்சம் ஆச்சர்யமாகவும் இருந்தது துவாரகிக்கு. அவனுடைய வளர்ச்சி ஆச்சர்யம் என்றால், அவனுடைய விவேகம் வெகு ஆச்சர்யம்.
‘அப்பா சொன்ன விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருக்குமா..? இல்லை தெரிஞ்சிருக்காதா..? அப்படி தெரிஞ்சிருந்தா அவன் அதை எப்படி எடுத்துப்பான்..?’ இப்படி பல சிந்தனைகள் துவாரகியின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதே நேரம் அவளுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து போன் வந்தது.
“டாக்டர், இன்னைக்கு அட்மிட் ஆனா அந்த ஜட்ஜ் பொண்ணுக்கு டெலிவரி பெயின் வந்திருச்சு டாக்டர்..” என்றாள் எதிர்முனையில் இருந்த நர்ஸ்.
“மை காட்..! அவங்க நாளைக்கு சி-செக்சன்னுக்கு தானே அட்மிட் ஆனாங்க..! டூயூட்டி டாக்டர்ஸ் இல்லையா..?” என்றாள்.
“பிரச்சனை அது இல்ல டாக்டர். அவங்க இப்போ நார்மல் டெலிவரி ஆகக் கூடாதுன்னு சொல்லி, பிரச்சனை பண்றாங்க..! யார் சொன்னாலும் புரிஞ்சுக்கிற நிலமையில அவங்க இல்லை. அந்த பொண்ணுக்கு இன்னும் ஒன் அவர்ல நார்மல் டெலிவரி ஆகிடும் டாக்டர்..” என்றாள் அந்த நர்ஸ்.
“வாட் நான்சென்ஸ்..! நான் உடனே வரேன்..” என்றவளுக்கு அந்த நிமிடம் மனதில் வேறு எண்ணங்கள் இல்லை. அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு இருந்தாள் துவாரகி. அவளுக்கு முன்பு பார்கவி அங்கிருக்க,
“நீங்க எப்ப வந்திங்க டாக்டர்..” என்றபடி சென்றாள் துவாரகி.
‘இங்க வந்தா டாக்டர், வெளிய போனா ஆன்ட்டியா..?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஆதித்யா, அங்கே ரிஷப்ஷனில் தலையை கீழே குனிந்து போனைப் பார்த்துக் கொண்டிருப்பவன் போல் இருந்தான்.
“ஜட்ஜ் சார் நேரா எனக்கும் போன் பண்ணிட்டார் துவாராகி..!” என்று அவர் சொல்ல, அந்த பெண்ணின் கணவனின் அருகில் சென்றாள் துவாரகி.
“உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை..? எதுக்காக அவங்களுக்கு டெலிவரி பண்ண கூடாதுன்னு சொல்றிங்க..? எல்லாரும் நார்மல் டெலிவரி ஆகணும்ன்னு தான் நினைப்பாங்க. நீங்க மட்டும் ஏன் சார் இப்படி பிரச்சனை பண்றிங்க..?” என்றாள் கோபமாக.
“சாரி டாக்டர்..! நார்மல் டெலிவரி எனக்கும் ஓகே தான். ஆனா, இன்னைக்கு நவமி. இன்னைக்கு குழந்தை பிறந்தா நல்லதில்லை. அதனால நாளைக்கு காலையில பார்த்துக்கலாம்..” என்றான் அந்த பெண்ணின் கணவன்.
“லூசாய்யா நீ..? நாளைக்கு பார்க்க இதென்ன புதுப்படமா..? உள்ள உன்னோட மனைவி வலியில துடிக்கிறது தெரியலை..? உங்க இஷ்ட்டத்துக்கு நேரம் பார்த்து வைக்க, உன் வீட்டு கல்யாணம் இல்லை. நேரத்தைப் பிடிச்சுட்டு தொங்கிட்டே இரு. அங்க உன்னோட மனைவி வலியில துடிக்கட்டும். நாங்க இப்படியே பேசாம இருக்கோம்.. இது உனக்கு ஓகேவா..?” என்றாள் கோபமாக.
“ஐயோ டாக்டர்..! என் மனைவி வலி எல்லாம் தாங்க மாட்டா. அவளுக்கு ஏதாவது ஊசியை போட்டு வலியை நிறுத்தியிருங்க..” என்றான்.
அவன் பேசுவதைப் பார்த்த பார்கவிக்கு அப்படி ஒரு கோபம். இப்படி பட்ட இரண்டறிவு கொண்ட ஜீவராசிகள் எல்லாம் இன்னும் நாட்டில் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். இவர்கள் பேச்சு வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘இவன் கிட்ட எதுக்கு இவ்வளவு பொறுமையா பேசணும்..?’ என்ற எண்ணம் தான் அவனுக்கு.
“அங்கிள்.. இவர் தான் லூசு மாதிரி பேசிட்டு இருக்காருன்னா, நீங்களும் அமைதியா இருக்கீங்க..?” என்று அந்த பெண்ணின் தந்தையின் பக்கம் திரும்ப,
“இன்னைக்கு குழந்தை பிறந்தா, அது என் பெண்ணோட உயிருக்கே ஆபத்துன்னு சொல்லியிருக்காங்கம்மா…” என்றார் அவர் பாவமாய்.
அவரை மேலும் கீழும் பார்த்த துவாரகிக்கு அப்படி ஒரு எரிச்சல். பார்கவி எதுவுமே பேசவில்லை. இப்போது வருகிற பாதிப் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள், அவர்களும் என்ன தான் செய்ய முடியும்.
“வெளிய, நாங்க தான் காசுக்காக சி-செக்சன் பன்றோம்ன்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, உங்களை மாதிரி ஆட்கள் இப்படி நேரத்தை குறிச்சுகிட்டு வந்து நிக்கிறது எங்க தெரியுது..? நீங்க சொன்ன மாதிரியே நாங்க நாளைக்கே டெலிவரி பார்க்கிறோம். ஆனா, அதுக்குள்ளே உங்க பொண்ணுக்கும், வயித்துல இருக்க பேபிக்கும் எது நடந்தாலும் நீங்க தான் பொறுப்புன்னு சைன் பண்ணிடுங்க..” என்றாள் துவாரகி அசால்ட்டாய். பார்கவி சிரித்து கொண்டார். வழக்கம் போல் அவள் பேசும் டயலாக்.
“என்னமா நீயே இப்படி சொன்னா எப்படி..? நிறைய எக்ஸ்பீரியன்ஸ் டாக்டர்ஸ் இங்க தான் இருக்காங்க. அதான் இங்க அட்மிட் பண்ணோம்..” என்று அவர் சொல்ல,
“இயற்கைக்கு முன்னாடி எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் நிற்க முடியாது சார்..” என்றார் பார்கவி.
“நீங்க சைன் பண்ணா, நாங்க கிளம்புவோம். எங்களுக்கும் நேரம் ஆகுது..” என்று போனால் போகுது என்று துவாரகி பேச, அனைவரும் பயந்து விழித்தனர்.
“பொண்ணோட அம்மா இருந்திருந்தா, இந்த அளவுக்கு விட்டிருக்க மாட்டாங்க. பிரசவ வலி என்னன்னு அவங்களுக்குத் தான தெரியும். ஆண்கள் உங்களுக்கு என்ன தெரியும்..?” என்றார் பார்கவி.
“உங்களுக்கு எது சரின்னு படுதோ அதையே செய்ங்க டாக்டர்..” என்றான் அந்த பெண்ணின் கணவன்.
“உங்களுக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லையே..?” என்றாள் மீண்டும்.
“கண்டிப்பா இல்லை டாக்டர். முதல்ல என்னோட குழந்தை வெளி உலகத்துக்கு வரட்டும். அதுக்கு பிறகு நடக்கிறத நான் பார்த்துக்கிறேன்..” என்று அவன் சொல்ல,
“குட்..! இப்பவாவது படிச்சவங்க மாதிரி நடந்துகிட்டிங்களே..” என்றாள்.
பார்கவியும், அவளும் உள்ளே சென்ற இருபது நிமிடத்தில் அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதை பூக்குவியலாக கொண்டு வந்து அந்த குழந்தையின் தகப்பனிடம் கொடுத்தாள் துவாரகி.
“பாருங்க பேபி எவ்வளவு க்யூட்ன்னு. எல்லாமே நல்லதாவே நடக்கும்ன்னு நம்புங்க..” என்றவளைப் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.
“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்..” என்று அவன் சொல்ல,
“நேரம் காலம் பார்க்கலாம். எல்லாத்துக்குமே பார்க்க கூடாது. உங்க நம்பிக்கையை தப்பு சொல்லலை. தப்பான நம்பிக்கையை வளர்த்துக்காதிங்கன்னு சொல்றேன்..! மத்தபடி, உங்க வாரிசை பத்திரமா உங்களுக்குக் கொடுத்தது இவங்க தான்.” என்று பார்கவியை காட்டியவள்,
“ரொம்ப கைராசியான டாக்டர். அம்மாவும் பிள்ளையும் நல்லா இருப்பாங்க..” என்றாள் சிரிப்புடன்.
“இவளுக்கு இப்படியெல்லாம் பேச வருமா..? ஆனா, பார்த்தப்போ ரொம்ப அமைதி மாதிரி தெரிஞ்சாலே..?” என்று ஆதி நினைத்துக் கொண்டிருக்க,
“கிளம்பலையா துவாரகி…?” என்றார் பார்கவி.
“கொஞ்சம் டயர்டா இருக்கு ஆன்ட்டி. இன்னைக்கு இங்கயே தங்கிட வேண்டியது தான். வீட்ல இன்பார்ம் பண்ணிட்டு தான் வந்தேன். நீங்க எப்படி வந்திங்க..? நான் வேணும்ன்னா உங்களை டிராப் பண்ண சொல்லவா..?” என்றாள் துவா.
“இல்லை துவா..! ஆதி தான் கூட வந்தான். அதிசயமா இன்னைக்கு கூட்டிட்டு வந்துட்டான்..!” என்றார் அவர்.
அவனும் இங்கு தான் இருக்கிறான் என்று கேட்ட துவாரகிக்கு ஆச்சர்யம். சுற்றும் முற்றும் பார்க்க, தலையை நிமிர்த்தியவன், போட்டிருந்த மாஸ்க்கை கீழே இறக்க,
‘இங்க தான் இருக்கானா..?’ என்று நினைத்தவள்,
“சாரி ஆன்ட்டி..! செலிபரேஷன் முடிஞ்சு நீங்களே டயர்டா இருப்பிங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஆகிடுச்சு..” என்றாள்.
“நம்ம பீல்ட்ல இதெல்லாம் பார்த்தா ஆகுமா..?சில விஐபி கேஸ் அட்மிட் ஆகும் போது இதெல்லாம் சகஜம் துவா. எனக்கு அவர் கால் பண்ணும் போதே தெரியும் இப்படி ஏதாவது நடக்கும்ன்னு, அதான் வந்தேன். நீயும் டயர்டா தான் இருப்ப..டேக் ரெஸ்ட்.” என்றார் பார்கவி.
“ஓகே ஆன்ட்டி..! குட்நைட்..” என்றாள்.
அப்போதும் ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள் துவாராகி. அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் என்னவோ அவளிடம் சொல்லியது. ஆனால், இதயத்தை படித்தவளுக்கு, அவனின் இதயத்தை படிக்க முடியவில்லை. அவள் சாதரணமாக நிற்க, அவனுக்குதான் உள்ளுக்குள் படபடப்பாய் இருந்தது.
“அம்மா போகலாமா..?” என்றான்.
“கிளம்பலாம் ஆதி..” என்று அவர் சொன்னவுடன், மீண்டும் அவன் மாஸ்க்கை மாட்டிக் கொண்டான். அவன் ஆதியாக மட்டுமே அன்னையுடன் வந்திருந்தான். ஆதித்ய வர்மாவாக வரவில்லை என்பது அவனுடைய கேஷூவலான உடையில் இருந்தே தெரிந்தது. அந்த எதார்த்தம் கூட அவனுக்கு இயல்பாய் பொருந்தியிருந்தது.
இப்போது அவன் செல்லும் வரை அவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, கருணைநாதனின் வார்த்தைகள் நியாபகத்திற்கு வர, நினைவிற்கு மீண்டாள்.
“இதை எப்படி மறந்தேன்..? ஆன்ட்டிகிட்ட கேட்டுப் பார்த்திருக்கலாமோ..?” என்று யோசிக்க,
“இன்னும் விஷயம் அவங்க வரைக்கும் போகலை. போயிருந்தா, அதை ஏதாவது ஒரு இடத்துல முகத்துல காட்டியிருப்பாங்க. அவங்க இயல்பா இருந்த மாதிரி தானே இருந்தது..” என்று தனக்குத் தானே பதிலும் சொல்லிக் கொண்டாள் துவாரகி.
காரில் சென்று கொண்டிருந்த ஆதியின் மனம் முழுவதும் அவள் மட்டுமே.
“எப்படிம்மா இப்படியெல்லாம்..?” என்றான் திடீரென்று.
“என்ன ஆதி..? எதை கேட்கிற..?” என்றார் அவர் புரியாமல்.
“டாக்டர் துவாரகி, என்னை ரொம்ப ஆச்சர்யப்பட வைக்கிறாங்க. அவங்கப்பாவுக்கும், இவங்களுக்கும் சம்பந்தமே இல்லை..” என்றான்.
“நம்ம நாட்ல, கொஞ்சம் பெரிய பதவில இருந்துட்டா, அவங்க ஆகாயத்துல இருந்து குதிச்சு வந்த மாதிரி நினைச்சுக்கிறாங்க. ஆனா, துவாரகி அப்படி நினைக்கலை போல இருக்கு..” என்றார் பார்கவி.
“ஒரு சாதாரண கவுன்சிலர் வீட்டு பசங்களே அந்த ஆட்டம் போடறாங்க. ஆனா, ஒரு முதலமைச்சரோட பொண்ணு, இவ்வளவு சிம்பிளா..? அன்பிலீவபில்..” என்றான் ஆதி.
“துவா மாதிரி நிறைய பேர் இருக்காங்க ஆதி. அவங்க ப்ரோபஷனை மட்டும் ஆம்பிஷனா வச்சுகிட்டு, அவங்க வீட்ல இருந்து ஒதுங்கியிருப்பாங்க. துவா எதுல இருந்தும் ஒதுங்குறது இல்லை. கொஞ்சம் விலகியிருக்கா அவ்வளவு தான்.” என்றார் பார்கவி.
அந்த அமைதியான இரவு நேரத்தில், காரில் மிதமான சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்த இளையராஜாவின் பாடல்கள், அவன் மனதிற்கு இதம் அளித்துக் கொண்டிருக்க, இதழோரம் தோன்றிய ஒரு சிறு முறுவல், அவன் மனநிலையை கூறுவதாய் இருந்தது.
“என்னங்க சொல்றிங்க..? நம்ம துவாவுக்கு, ஆதித்யா வர்மா மாப்பிள்ளையா..? நிஜமாவா சொல்றிங்க..?” என்று அருணா நம்பமாட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார். சசிதரனுக்கு எரிச்சல் முகம் முழுவதும் மண்டிக் கிடந்தது.
“அப்பா.. நீங்க என்ன சொன்னாலும் எனக்கு இதுல விருப்பம் இல்லை. நம்ம துவாரகி எங்க..? அந்த ஆதித்ய வர்மா எங்க..? அவனுக்கு, என் தங்கச்சி கேட்குதா..? எனக்கு மனசே ஆறலை..” என்றான் சசிதரன்.
“அவனும் ஒன்னும் லேசுப்பட்டவன் இல்லை சசி. அவனோட செல்வாக்கு என்னன்னு உனக்கே நல்லா தெரியும். இப்போ நமக்கு இருக்குற ஒரே வழி இது தான்..” என்றார் கருணை நாதன்.
“அதுக்காக…” என்று சசிதரன் இழுக்க,
“அவன் தொழில் மட்டும் தான் நடிப்பே தவிர, அவன் நம்ம எல்லாரையும் விட நல்லவன் தான் சசி. துவாரகிக்கு நல்ல வாழ்க்கை கிடைச்ச மாதிரியும் இருக்கும். நம்ம காரியம் முடிஞ்ச மாதிரியும் இருக்கும்..” என்றார் அவர்.
“நீங்க தப்புக் கணக்கு போடுறிங்க..? அவனை மருமகனாக்கினா.. நம்ம காரியம் முடியாது, நமக்குத் தான் காரியம் முடியும்..” என்றான் சசி.
“என்ன சொல்ல வர சசி..?”
“அப்பா, அவனைப் பத்தி உங்களுக்கே நல்லா தெரியும். அவன் எப்ப எப்படி இருப்பான்னு யாருக்குமே தெரியலைப்பா. சில சமயம் ரொம்ப நல்லவனா காட்டிக்கிறான். சில சமயம் சைக்கோ மாதிரி இருக்கான். இது சரியா வராது..” என்றான்.
“சரியா வர வைக்கணும் சசி. இல்லைன்னா, நாம தெருவுக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை. நீ இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்.” என்றார்.
“நீங்க போய் பேசப்போறிங்களா..?” என்றான் சசிதரன்.
“நம்ம நினைச்சது நடக்கணும்ன்னா, நாம தான் போயாகனும்..” என்று அவர் சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இந்த ஒரு விஷயத்துலயாவது நான் சொல்றதை கேளுங்க. அவங்ககிட்ட போன்ல பேசுவோம். அவங்களுக்கு சரின்னா, அவங்களே நேர்ல வரட்டும். மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க வர்றது தான் முறையும் கூட..” என்றான்.
“இன்னிக்குதாண்டா சசி, நீ சரியா பேசியிருக்க. அப்பறம் என்னங்க அவங்களுக்கு உடனே போன் பண்ணுங்க. நல்ல விஷயத்தை எதுக்கு தள்ளிப் போடணும்..?” என்றார் அருணா.
“இதுல உனக்குத்தான் ரொம்ப சந்தோசம் போல அருணா. எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசி..” என்று கருணைநாதன் முறைப்புடன் சொல்ல,
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..! நிறைய வேலை இருக்கு. நான் அதைப் போய் கவனிக்கிறேன்..” என்றபடி அவர் உள்ளே சென்று விட்டார்.
“அம்மா மாதிரியே தான் துவாரகியும், நம்ம தகுதி என்னன்னு தெரியாம, நமக்கு கீழ இருக்கவங்க கிட்டயும் சரிசமமா பேசிகிட்டு..” என்று உள்ளே சென்ற அருணாவை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் சசி.
“அதை விடு சசி. ஆனா, இந்த விஷயம் வெளிய தெரிய கூடாது. முக்கியமா மீடியாக்கு தெரியவே கூடாது. அப்படி மட்டும் தெரிஞ்சது, இதைப் பேசியே கெடுத்துடுவாங்க..” என்றார் அவர்.
“நீங்க சொல்றதும் சரிதான்ப்பா. அப்பறம் ஆதித்யா வர்மா பிறந்ததுல இருந்து நடந்த கதையெல்லாம் பேச ஆரம்பிச்சுடுவாங்க…” என்ற சசிதரன், அதற்கடுத்த வேலைகளைப் பார்ப்பதற்கு ஆயத்தமானான். காலையில் வந்த துவாரகியை ஆச்சர்யமாய் பார்த்தவன்,
“ஏன் இப்ப வர துவா..?” என்றான்.
“நைட் ஒரு டெலிவரி கேஸ் அண்ணா. முடிச்சுட்டு அங்கேயே தங்கிட்டேன்..” என்றாள்.
“உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா துவா. அங்க தான் அத்தனை டாக்டர்ஸ் வேலைக்கு இருக்காங்கல்ல. அப்பறம் நீ எதுக்கு எதுன்னாலும் முன்னாடி ஓடுற..?” என்றான்.
“அவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. எனக்கு இல்லை. அதான் போறேன்…” என்றாள் பட்டென்று.
“இருந்தாலும் நீ இப்படி இருக்குறது எனக்குப் பிடிக்கலை..” என்றான்.
“எனக்கும் சும்மா இருக்க பிடிக்கலை. நான் இதுக்காகவா அவ்வளவு கஷ்ட்டப்பட்டு படிச்சேன்? உனக்கெல்லாம் அதெங்க தெரிய போகுது..?” என்றவள், அவனை முறைத்து விட்டு சென்று விட்டாள்.
“பாருங்கப்பா.. எப்படி பேசிட்டு போறான்னு..? இவ நல்லதுக்காகத் தான சொல்றேன்..” என்றான் சசி.
“விடு சசி..! ரொம்ப ஆசைப்பட்டு படிச்ச படிப்பு. அதுல ஒண்ணுமே செய்யக் கூடாதுன்னு சொன்னா எப்படி? அதுக்காகவா ஹாஸ்ப்பிட்டல் கட்டிக் குடுத்தோம்..? அவளை அவ போக்குல விட்டுரு. இதுவரைக்கும் நம்ம பேச்சை அவ மீறினதே இல்லையே..” என்றார் கருணை நாதன்.
தனக்கு வந்த போனை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார் சேது ராமன். இப்படி ஒரு எண்ணம் அங்கு யாருக்கும் இல்லை. ஆனால், திடீரென்று இப்படி கேட்க என்ன அவசியம் வந்தது..? இது தான் அவருடைய எண்ணம்.
“யாருங்க போன்ல..?” என்றார் பார்கவி.
“சிஎம் வீட்ல இருந்து போன்..” என்றார்.
“துவாரகி பண்ணாலா..?” என்றார் பார்கவி எதார்த்தமாய்.
“இல்லை அவங்க அப்பா..”
“அவரா..? என்ன சொல்றிங்க..? அவர் எதுக்காக..?” என்றவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“நம்ம ஆதிக்கு அவர் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்க அவருக்கு சம்மதமாம். நமக்கும் சம்மதம்ன்னா, அவர் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வர சொல்றார்..” என்றார் சேது.
“என்னங்க சொல்றிங்க? துவாரகியவா..நம்ம ஆதிக்கு..” என்றவருக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை. அவருக்கு துவாரகியை எந்த அளவிற்கு பிடிக்கும் என்று சேதுவிற்கும் தெரியுமே.
“என்னால நம்ப முடியலை” என்றார் சேது.
“என் பையனுக்கு என்ன குறைச்சல்..?அவங்களுக்கு எந்த விதத்துலையும் நாம குறைஞ்சவங்க இல்லை..” என்றார் பார்கவி.
“இது சரியா வரும்ன்னு எனக்குத் தோணலை. அதுமட்டுமில்லாம, இத்தனை நாள் ஆதியை எதிரியா நினைச்சவர், இப்ப திடீர்ன்னு இறங்கி வர காரணம் என்ன..?” என்றார் சேது.
“நமக்கு அதெல்லாம் தேவையில்லைங்க. துவாரகியை மட்டும் பாருங்க. ரொம்ப அருமையான பொண்ணு. நம்ம ஆதிக்கும் பொருத்தமா இருப்பா..” என்றார் பார்கவி.
“எனக்கு ஏதோ இதுல வேற விஷயம் இருக்க மாதிரி தோணுது பார்கவி..” என்றார் அவர்.
“ரொம்ப யோசிக்காதிங்க..! ஆதியை கேட்போம், அவனுக்கு ஓகேன்னா, நமக்கும் பிரச்சனை இல்லை தானே..” என்றார்.
“என்ன பிரச்சனை இல்லை..?” என்றபடி வந்தான் ஆதி.
“என்ன ஆதி..? இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட..” என்றார் பார்கவி.
“இன்னைக்கு மார்னிங் ஷூட்மா. புல்லா என்னோட சீன், அதான்.” என்றான்.
“மிஸ்டர். கருணைநாதன் போன் பண்ணியிருந்தார் ஆதி..” என்றார் சேது.
“என்னவாம்..?” என்றவனின் முகம் கோபத்தை தானாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டது.
“அவருக்கு உன்னை மருமகனா ஏத்துக்க சம்மதமாம். துவாரகியை உனக்கு தர விருப்பப்படுறாங்க..” என்றார்.
அவர் அப்படி சொன்னவுடன் சட்டென்று மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க, அவனொன்றும் மூளை இல்லாதவன் இல்லையே. புருவத்தை சுருக்கியவனது முகம் யோசனையில் இருந்தது.
“காரியம் இல்லாம கருணைநாதன் எதையும் செய்யமாட்டாரே..” என்றான் யோசித்துக் கொண்டே.
“அதைவிடு ஆதி..! உனக்கு துவாரகியை பிடிச்சிருக்கா..? அதை மட்டும் சொல்லு. அவங்க அப்பா எப்படி இருந்தா நமக்கென்ன..? நீ அவரையா கல்யாணம் பண்ண போற..?” என்றார் பார்கவி.
“உடனே எப்படிம்மா சொல்ல முடியும். துவாரகிக்கு இதுல விருப்பமா..?” என்றான்.
“விருப்பம் இல்லாமையா, போன் போட்டு சொல்லுவாங்க. அதுவும் பொண்ணு பார்க்க வேற வர சொல்லியிருக்காங்க..” என்றார் பார்கவி.
“அவசரப் படாதிங்கம்மா..! நான் தெளிவா பேசிட்டு சொல்றேன். அதுவரைக்கும் இந்த விஷயத்தை பத்தி யார்கிட்டயும் பேசாதிங்க. முக்கியமா துவாரகி கிட்ட..” என்றவன், கிளம்பிவிட்டான்.
அன்றைய ஷூட்டிங் முழுவதிலும் அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி நடித்துக் கொண்டிருந்தான்.
“சார், உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க சார்..!” என்றான் கவின் வேகமாக வந்து.
“ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கும் போது, நான் யாரையும் பார்க்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா கவின்..?” என்றான் ஆதி கோபமாய்.
“சார்..! இவங்க..” என்று தயங்கிவன், ஆதியின் அருகில் சென்று காதிற்கு மிக அருகில் சொன்னான்.
“இசிட்..!” என்றான் ஆதி அதிர்ச்சியுடன். அவன் வார்த்தையில் இருந்த அதிர்ச்சி, அவன் முகத்தில் இல்லை. முகத்தில் சட்டென்று ஒரு மென்னகை ஒட்டிக் கொண்டது.
அங்கிருந்த டேரக்டரிடம் சொன்னவன், நேராக கேரவனுக்கு சென்றான்.
அவன் அங்கு அவளைத் தேட, பர்தா அணிந்திருந்த அந்த பெண் தான் கண்ணில் பட்டாள்.
“என்ன விஷயம்..? எதுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து நேர்ல வந்திருக்கிங்க..? மீடியாக்காரங்க பார்த்தா, இன்னைக்கு தலைப்பு செய்தியே நம்மதான்..” என்றான்.
“தெரியும். அதான் இப்படி வந்தேன். கார் கூட பிரண்ட் கார் தான்..” என்றாள் துவாரகி.
“அவ்வளவு அவசரமா பார்க்க வேண்டியா அவசியம் என்ன..?” என்றான் புரியாமல்.
“இந்த கல்யாணப் பேச்சுக்கு பின்னாடி கண்டிப்பா எங்கப்பாவுக்கு ஏதாவது ஒரு உள்நோக்கம் இருக்கும். அதை என்னால நிறுத்த முடியாது. நீங்களே நிறுத்திடுங்க. ஏன்னா, பின்னாடி விஷயம் தெரிஞ்சு நீங்க கவலைப் பட கூடாது பாருங்க..”என்றாள்.
“உங்களுக்கு பிடிக்கலைன்னு நேரா சொல்ல வேண்டியது தானே. அதுக்கு எதுக்கு சுத்தி வளைக்கனும்…?” என்றான்.
“அதுவும் உண்மை தான். தொழில் முறை நோக்கத்துல பண்ற திருமணத்துல எனக்கு விருப்பம் இல்லை. லாபம் பார்த்து, என்னோட வாழ்க்கையை நான் அடகு வைக்க முடியாது.” என்றாள்.
“நான் இன்னும் உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லை. உங்க வீட்டுக்கு வரோம்ன்னு சொல்லவே இல்லை. அதுக்கு முன்னாடி நீங்களே இப்படி அவசரப்பட்டு வந்து பேசினா எப்படி…?” என்றான் மனதிற்குள் தோன்றிய சிரிப்பை மறைத்தபடி.
“சம்பத் தான் சொன்னார், உங்ககிட்ட சொன்னா நீங்க கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவிங்கன்னு..” என்றாள். அதில் அவன் முகம் இறுக,
“உங்க குடும்பமே உங்க இஷ்ட்டதுக்கு தான் முடிவு எடுப்பிங்களா..? பெரிய டாக்டர் வேற இதுல. நீங்க ஒன்னும் சின்ன பிள்ளை கிடையாது, கட்டாயப்படுத்தி எதையும் செய்ய. எனக்கும் அதுல விருப்பமும் கிடையாது..” என்றான் கோபமாக.
“உங்களுக்கு விஷயம் சரியா புரியலைன்னு நினைக்கிறேன். புரிஞ்சதுக்கு அப்பறம் தெரிய வரும், நீங்க சின்ன பிள்ளையா..? இல்லை, நான் சின்ன பிள்ளையான்னு” என்றவள், அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
“இப்ப எதுக்கு இங்க வந்தா..? எதுக்கு இப்படி பேசிட்டு போறா..?” என்று அவனுக்குத்தான் மண்டை காய்ந்தது.
சரியாக அதே நேரம் சம்பத்திடம் இருந்து போனும் வந்தது.
“சொல்லுடா..” என்றான் ஆதி.
“ஆதி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத. துவாரகிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. அவளுக்கு வேற ஒரு லவ் இருக்கு. நீதான் அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்..” என்றான் சம்பத்.
“நான் என்ன பண்ணனும்..?” என்றான் கோபமான முகத்துடன்.
“இந்த பேச்சை ஆரம்பத்துலையே நீ நிறுத்திடு, ப்ளீஸ்..” என்றான் சம்பத்.
“சரி அந்த லவ்வர் யாரு..?” என்றான்.
“அதை நேரம் வரும் போது நானே சொல்றேன் ஆதி, ப்ளீஸ்டா..” என்றான் சம்பத்.
“ம்ம்ம்..” என்று போனை வைத்த ஆதிக்கு, எல்லாரும் தன்னை வைத்து விளையாடுவதைப் போல் உணர்ந்தான்.