ஆகாயம் 7:
“அடடே..! வாப்பா கனகவேலு..! வாம்மா திவ்யா..?” என்றார் கருணைநாதன்.
கனகவேலும், திவ்யாவும் அவரைப் பார்ப்பதற்காக சென்றிருந்தனர். இதற்கு முன்பும் திவ்யா இரண்டு முறை அங்க சென்றிருக்கிறாள். ஆனால், இந்த முறை ஏதோ அவளுக்கு வித்யாசமாய் பட்டது.
“என்னப்பா கனகவேலு, எலக்சன் வேலையெல்லாம் எப்படி போகுது. கட்சி ஆபீஸ் பக்கம் ஆளையே காணோம்..?” என்றார் கருணைநாதன்.
“கொஞ்சம் வேலையில பிசியா இருந்துட்டேன் தலைவரே. இனி தேர்தல் முடியற வரைக்கும் நகர நேரமிருக்காது. அதான் தேர்தல் நிதி சம்பந்தமா உங்ககிட்ட பேசிட்டு போகலாமேன்னு வந்தேன் தலைவரே..” என்றார் கனகவேல்.
“துவாரகி இல்லையா அங்கிள்..?” என்றாள் திவ்யா.
“துவா உள்ள தான் இருக்காம்மா..” என்று அவர் சொன்னவுடன், துவாரகியைத் தேடி சென்றாள் திவ்யா. இருவரும் நெருங்கிய தோழிகள் என்று சொல்ல முடியாது. ஆனால் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு இருந்தது.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்க,
“உள்ள வாங்க..!” என்றாள் துவாரகி.
“டாக்டர் மேடம் என்ன பண்றிங்க..?” என்றபடி உள்ளே சென்றாள் திவ்யா.
“ஹேய் திவ்யா..! வாட் எ சர்பிரைஸ்… நான் எதிர்பார்க்கவே இல்லை..” என்றாள் துவாரகி, முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்.
“அதான் திவ்யா. எப்பவுமே ஷாக் குடுக்குறது தான் நமக்கு கை வந்த கலையாச்சே..” என்று சிரித்தவள்,
“எப்படி இருக்க துவாரகி..? நேர்ல பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு..?” என்று திவ்யா சொல்ல,
“உண்மை தான் திவ்யா. நீண்ட இடைவெளிக்கு பிறகு நாம பார்க்கிறோம். மேடம் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டிங்க..” என்றாள் துவா.
“என்னது நான் மாறிட்டேனா..? புசுபுசுன்னு இருந்த துவாரகி எங்க போனாங்க..? இப்போ,அப்படியே அப்சரஸ் மாதிரி ஆகிட்டிங்க டாக்டர் நீங்க. உங்க அழகின் ரகசியம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..?” என்றாள் திவ்யா கிண்டலாய்.
“ஒரு ரகசியமும் இல்லை. நான் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் எல்லாம் கிடையாது. என்னோட வேலையை நான் ரொம்ப நேசிக்கிறேன். அதனால கூட இருக்கலாம்” என்றாள் துவாரகி.
“மேடம் இன்னும் வேலையை மட்டும் தான் நேசிக்கிறிங்களா..?” என்றாள் திவ்யா கிண்டலாக.
“நானெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன் திவ்யா..” என்றவள் வாயை மூடி சிரிக்க,
“சிரிக்கும் போது, ரொம்ப அழகா இருக்க துவாரகி. நானே உன்னை சைட் அடிக்கிறேன்..” என்றாள் திவ்யா.
“அதைவிடு திவ்யா..? நெக்ஸ்ட் உன்னோட பிளான் என்ன..? வந்தனா விஷயம் கேள்விப்பட்டு, மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சு. சாரி, அந்த நேரத்துல என்னால வரமுடியலை..” என்றாள் துவாரகி.
“அந்த சமயத்துல நானே இல்லை துவாரகி..! முதல்ல கஷ்ட்டமா இருந்தது. அதுக்குப் பிறகு வாழ்க்கையில நிறைய விஷயங்கள் நடந்து முடிஞ்சிடுச்சு..” என்றாள் திவ்யா, ஆயாசத்துடன்.
“அங்கிள் எப்படி இருக்கார்..?” என்றாள் துவா.
“ரொம்ப நல்லா இருக்கார். கீழ அங்கிள் கூட தான் பேசிட்டு இருக்கார்..” என்றாள் திவ்யா.
நேரம் போவது தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டிருக்க, கனகவேல் அழைத்த பின்னர் தான் கீழே சென்றனர்.
“எப்படி இருக்கீங்க அங்கிள்..?” என்றாள் துவாரகி.
“ரொம்ப நல்லா இருக்கேன்ம்மா..” என்றவர்,
“துவாரகிக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம்ன்னு சொன்னிங்க..? ஆனா, மாப்பிள்ளை யாருன்னு சொல்லலையே தலைவரே..?” என்றார் கனகவேல்.
“எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவர் தான், ஆதித்ய வர்மா தான் மாப்பிள்ளை..” என்று கருணைநாதன் சொன்னவுடன், கனகவேல்,திவ்யா இருவருக்குமே அப்படி ஒரு அதிர்ச்சி.
“என்ன தலைவரே சொல்றிங்க..? நடிகர் ஆதித்ய வர்மாவா..?” என்றார் கனகவேல் நம்பிக்கை இல்லாமல்.
“அட ஆமாப்பா..! அவர் தான் மாப்பிள்ளை..” என்றார்.
“என்னால நம்பவே முடியலை தலைவரே..? ஆனா, அவங்க நம்ம ஜாதியில்லையே..?” என்றார் கனகவேல்.
“அதான் நானும் சொல்றேன். ஜாதில பார்த்தா, நம்மை விட நல்ல ஜாதி தான். அதான் சரின்னு முடிவு பண்ணிட்டேன்..” என்றார்.
“காதல் கல்யாணமா தலைவரே..?” என்றார் கனகவேல் யோசனையுடன்.
“இது என்னோட ஏற்பாட்டுல நடக்குற கல்யாணம் கனகவேல். காதல் கல்யாணம் எல்லாம் நமக்கு ஒத்து வராது..” என்றார் கருணைநாதன்.
“இருந்தாலும், நாளைக்கு சாதி சனம் என்ன சொல்லும் தலைவரே..?” என்றார் கனகவேல்.
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது கனகு. ஏன்னா..? நம்ம ஆட்சிக்கு வரணும்ன்னு சொன்னா, அவனோட தயவு நமக்கு இப்போ ரொம்ப முக்கியம். நல்ல மாப்பிள்ளையும் ஆச்சு, நமக்கு சாதகமும் ஆச்சு..” என்றார்.
“உங்க பிரியம் தலைவரே..” என்று கனகவேல் சொல்வதில் இருந்தே தெரிந்தது, அவரின் அதிருப்தி.
ஆதித்ய வர்மா தான் மாப்பிள்ளை என்று கேள்விப்பட்ட திவ்யாவிற்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் தான் இருந்தது. துவாரகிக்கு கிடைக்கப் போகும் வாழ்க்கையை எண்ணி அவளால் முழுமையாக சந்தோஷப்பட முடியவில்லை.
‘துவா கல்யாண விஷயம் நல்லது தான திவ்யா. நீ ஏன் இவ்வளவு பீல் பண்ற..?’ என்று உள்மனம் கேட்க,
‘நல்ல விஷயம் தான்.. ஆனா, ஆதித்ய வர்மா எவ்வளவு பெரிய நடிகன், அவனுக்கு மனைவின்னா..?’ என்று அவளே பதில் தெரியாமல் பாதியில் நிறுத்தினாள் திவ்யா.
கிளம்பிப் போகும் வழியெல்லாம் அவளுக்கு இதே யோசனை தான்.
“என்னம்மா திவ்யா..? ஏன் அமைதியா வர..?” என்றார் கனகவேல்.
“இதெப்படிப்பா நடந்தது..?நீங்கதான் ஜாதி அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க. உங்க தலைவரைப் பார்த்திங்க தானே.. அடிச்சு தூள் கிளப்பிகிட்டு இருக்கார்..” என்றாள் திவ்யா.
“அது தான் எனக்கும் புரியலை திவ்யா. எப்பவுமே, அவருக்கு ஜாதி தான் பெருசு. ஆனா, இப்போ ஏன் இப்படி நடந்துக்கிறார்னு தெரியலை..” என்றார் கனகவேல்.
“உங்களுக்கு இன்னுமா புரியலை. இங்க ஜாதி கூட பணம் பார்த்து தான் வருது. பணம் எல்லாத்தையுமே மாத்தும்ப்பா. இதுல ஜாதி மட்டும் விதி விலக்கா என்ன..? அவரோட லாபத்துக்காக, ஜாதி பேரை சொல்லி உங்களைப் பகடைக்காயா பயன்படுத்திகிட்டார், அப்படின்றது மட்டும் தான் உண்மை. மத்தவங்களுக்கு வந்தா ரத்தம், தனக்கு வந்தா தக்காளிச் சட்னி மாதிரி தான்..” என்றாள் திவ்யா, ஒரு எகத்தாள புன்னகையுடன்.
“இந்த விஷயம் கட்சியில பெரிய பிளவை ஏற்படுத்தினாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை..” என்றாள்.
“அப்படி நடக்க வாய்ப்பே இல்லை திவ்யா. ஏன்னா, இப்போ அந்த ஆதித்ய வர்மாவோட உதவி கண்டிப்பா நம்ப கட்சிக்குத் தேவை. அதனால தான் தலைவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கார். அது நமக்கும் நல்லது தான். மறுபடியும் ஆட்சியைப் மட்டும் பிடிச்சுட்டா போதும், அப்பறம் எந்த கட்சியாலும் எங்களை அசைக்கவே முடியாது. அப்படி ஒரு சூழ்நிலையில தான், நம்மளோட ஆட்டத்தை ஆரம்பிக்கணும்..” என்றார் கனகவேல்.
ஆனால் அவர் சொன்ன எதுவுமே அவள் காதில் விழவில்லை. அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது எல்லாம் துவாரகி கல்யாண விஷயம் தான்.
அவள் வயதின் திருமண ஆசைகளை கனகவேலிற்காக மனதிற்குள் மறைத்துக் கொண்டாலும், சில சமயம் அவளுக்கும் திருமண எண்ணங்கள் தோன்றதான் செய்கின்றன.
‘லட்சியத்திற்கு திருமணம் ஒரு தடை..’ என்று அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது. ஏனோ ஒரு வகையில் விஜயை அவளால் மறக்க முடியாததும் ஒரு காரணம். பழி வாங்கத்தான் என்றாலும், அவளையறியாமல் மனதில் பதிந்திருந்தான் விஜய். மொத்தத்தில் திவ்யா என்பவள், இப்போது வரையிலும் தனி மனுஷியாகத் தான் இருந்தாள்.
பத்து நாட்கள் ஷூட்டிங் என்று சென்றவனுக்கு மூன்று நாட்களுக்கு மேல் துவாரகியுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. அவனும் எல்லா வகையிலும் முயற்சி செய்து விட்டான். ஆனால் முடியவில்லை.
“என்னடா இது..? எனக்கு ஏன் இப்படி தோணனும்..? எதிர்காலத்துல மனைவியா வரப் போறதுனால இப்படியெல்லாம் தோணுதா..?” என்று தனக்குத் தானாகவே கேட்டுக் கொண்டானே தவிர, அவளுடன் பேச மட்டும் முயற்சி செய்யவில்லை.
ஆதி போன் செய்து பேசுவான் என்று துவராகியும் காத்துக் கிடந்த மாதிரி தெரியவில்லை. மனதில் இருந்த எதிர்பார்ப்பை, மனதிற்குள்ளேயே வைத்துப் பூட்டிக் கொண்டான் ஆதி. இப்படியான உணர்வுகள் அவனுக்கு புதிது. பெண்களை அறியாதவன், அவர்களுடன் பழகாதவன் கிடையாது. அவனுடைய எல்லா படங்களிலும், அனைத்து முன்னணி கதாநாயகிகளுடனும் நடித்து விட்டான். அவர்களிடம் தோன்றாத ஒரு புதுமையான உணர்வு தான் துவாரகியிடத்தில் அவனுக்கு.
போனை எடுக்க, மறுபடியும் வைக்க என்று கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தான் ஆதித்யா. சரியாக அதே நேரத்தில் அவனுக்கு அழைப்பு வர, யோசனையுடன் எடுத்தான்.
“எஸ்..” என்றான்.
“சார், நாங்க தினசெய்தி நாளிதல்ல இருந்து பேசுறோம். உங்களுக்கும், சி.எம் பொண்ணு மிஸ். துவாரகிக்கும் திருமணமாமே..? நிஜமா சார்..” என்று எதிரில் இருந்தவர் கேட்க,
“உங்களுக்குத் தகவல் சொன்னது யாரு..? உங்களுக்கு இப்படி நியூஸ் எல்லாம் எப்படி உடனே கிடைக்குது..?” என்றான் கோபமாய்.
“சார், எங்களுக்கு வந்த தகவல், உண்மையா இல்லையா சார். அதை மட்டும் சொல்லுங்க..” என்று எதிர் முனையில் இருந்தவன் கேட்க,
“சொல்லமுடியாது போனை வைடா..” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு போனை வைத்தவனுக்கு, அப்போது தான் விஷயம் புத்தியில் உரைத்தது.
‘இது என்னோட பர்சனல் நம்பர் ஆச்சே. நான் இதை யாருக்கும் குடுக்கலையே..? பிறகு எப்படி மீடியாக்காரங்க கைக்கு போய்ருக்கும்..’ என்று யோசித்தவன்,
‘கவின்’ என்று கத்தினான்.
“சார்..!” என்று அடித்துப் பிடித்து ஓடிவந்தான் கவின்.
“என்னோட பர்சனல் நம்பரை யாருக்காவது கொடுத்தியா..?” என்றான்.
“இல்லை சார்..! நான் யாருக்கும் குடுக்கலை..” என்றான் கவின்.
“தினசெய்தி பேப்பருக்கு எப்படி என்னோட நம்பர் தெரியும்..?” என்றான்.
“கண்டிப்பா தெரிஞ்சிருக்க வாய்ப்பேயில்லை சார்..!” என்றான் கவின்.
“என்ன நடக்குது..? எதுவும் புரியலையே..? ஆனா, என்னமோ நடக்குது..” என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
துவாரகியிடம் பேச வேண்டும் என்று நினைத்த எண்ணம் எல்லாம் தொலைதூரம் ஓடிப் போயிருந்தது.
பத்து நாட்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, உடனடியாக சென்னை திரும்பினான் ஆதித்ய வர்மா.
வந்தவனுக்கு கேள்விப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் ஷாக் தான். அவன் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
“என்ன நடக்குதுப்பா..?” என்றான் சேதுராமனிடம்.
“நீதான் ஓகே சொல்லிட்ட தானே ஆதி, அதான். நல்ல விஷயத்தை எதுக்குத் தள்ளிப் போடணும். கருணைநாதனும் தேர்தலுக்கு முன்னாடியே இந்த கல்யாணத்தை நடத்தி முடிக்கணும்ன்னு பிரியப்படுறார். எங்களுக்கும் அது தான் சரின்னு பட்டது, அதான்..” என்றார் சேது ராமன்.
“தேர்தலுக்கு முன்னாடியே கல்யாணத்தை நடத்துறது நம்ம வசதிக்காகவா, இல்லை அவரோட வசதிக்காகவா..?” என்றான் இடக்காய்.
“இப்பதான் அவருக்கு தோதுப்படுமாம் ஆதி. அப்பறம் எலக்சன் வேலையில பிசியாகிடுவாராம். அவர் சொல்றதும் ஒரு விதத்துல சரின்னு தான் தோணுது. அவரும் எத்தனை விஷயத்தை தான் பார்ப்பார்..” என்றார் பார்கவி.
“நீங்க ரெண்டு பெரும் இவ்வளவு அப்பாவியா இருக்கக் கூடாதும்மா. அந்த ஆள், எதையும் சும்மா செய்ற ஆள் கிடையாது. கூடிய சீக்கிரம் நீங்க புரிஞ்சிப்பிங்க..!” என்றவனுக்கு, அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
சேதுராமனும், பார்கவியும் இந்த திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பது, அவர்களின் பேச்சில் இருந்தே புரிந்தது. அது மட்டுமின்றி, விஷயம் எல்லா பக்கமும் பரவியிருந்தது. அனைத்து மீடியாவிலும், இவர்களுடைய திருமண செய்தி தான் தலைப்பு செய்தியே. முதல்வர் வீட்டுக் கல்யாணம் என்றால் சொல்லவா வேண்டும். அதிலும் மாப்பிள்ளை மக்கள் கொண்டாடும் ஒரு நாயகன். அவனுடைய திருமண செய்தியையும் அப்படித்தான் கொண்டாடினர் மக்கள். அவனுடைய ரசிகைகளுக்கு, அதிலும் முரட்டு சிங்கிள் ரசிகைகளுக்கு ஆதியின் திருமண செய்தி கொஞ்சம் கஷ்ட்டமாகத் தான் இருந்தது. மொத்தத்தில் இருவீடும், நாடும் திருவிழா கோலம் தான்.
இப்படி ஒரு எதிர்பார்ப்பினை துவாரகி எதிர்பார்க்கவில்லை. நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் போது தான், ஆதித்ய வர்மா என்ற மனிதனின் பிம்பம் புரிந்தது. அவன், ரசிகர்களின் அன்பில் திளைத்துக் கொண்டிருந்தாள் அவள். ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. ஏதோ திக்குத் தெரியாத காட்டில் இருப்பதைப் போன்ற பிரம்மை அவளுக்கு. ஹாஸ்ப்பிட்டல் போனாலும், அவளால் புத்தியை ஒருநிலைப் படுத்த முடியவில்லை.
அதீத சந்தோஷமோ, கஷ்ட்டமோ அதை பகிர்ந்து கொள்ள ஒரு தோழமை வேண்டும். அப்படி பகிர்ந்து கொண்டால் மட்டுமே, சில சந்தோஷ தருணங்கள் முழுமையானதாக மாறும். கஷ்ட்ட தருணங்கள், கொஞ்சம் ஆறுதலாய் அமையும். அவளுக்கு அப்படி யாரும் இல்லை என்பது தான் கொடுமை. இருந்த ஒன்றிரண்டு பேரும் அவளுக்கு அருகில் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் சம்பத்திற்கு அழைத்தாள்.
“இனி எனக்கு போன் பண்ணாத துவாரகி..!” என்றான் எடுத்த எடுப்பில் அவனும்.
“என்னாச்சு சம்பத்..?” என்றாள் ஒன்றும் புரியாமல்.
“இப்ப வரைக்கும் ஒன்னும் ஆகலை. ஆனா, கச்சேரியே இனிமேல் தான் இருக்கு. அப்படி ஒரு சூழ்நிலையை கண்டிப்பா உன்னால தாங்கவே முடியாது. அன்னைக்கு நான் சொன்னதை நீ நினைப்ப..” என்றான் சம்பத்.
“இந்த விஷயத்துல இதுக்கு மேல என்னால ஒன்னும் பண்ண முடியாது சம்பத். ஆதி தான் எனக்கு புருஷனா வரணும்கிறது விதி. அதை யாராலும் மாத்தமுடியாது..” என்றாள் அவள்.
“விதிமேல பழியைப் போட்டு தப்பிச்சிடலாம்ன்னு பார்க்காத. எல்லாமே சதி..” என்றான் சம்பத் வெறுப்பாய்.
“சம்பத்..” என்று அதிர்ந்தாள்.
“இன்னைக்கு ஊரே கொண்டாடுது. ஆனா, கூடிய சீக்கிரம் நீ திண்டாடுவ துவாரகி..” என்று எச்சரிக்கையாகவே அதைக் கூறினான் சம்பத். அதற்கு மேல் அவன் பேசவும் விரும்பவில்லை.
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளிடம் பதில் உண்டு. ஆனால், அவளால் பேச முடியாது. எப்படி நடப்பதற்கு அவள் காரணமில்லையோ. அதே போல், நடந்து முடிந்ததுக்கும் அவள் காரணமில்லை.
கல்யாண கனவில், அனைவரும் பூரித்து தான் போயிருப்பார். முகம் கூடுதலாய் ஜொலிக்கும் என்று சொல்வர். ஆனால், துவராகிக்கோ நாளுக்கு நாள், முகம் பொலிவை இழந்து கொண்டு தான் இருந்தது.
அவர்கள் வீட்டின் அலுவல் அறையில் கருணைநாதனும், சசிதரனும் தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர்.
“நீங்க ரொம்ப அவசரப்படுறிங்கப்பா..!” என்றான் சசி.
“இல்லை சசி..! எலக்சனுக்கு முன்னாடி இவன் நமக்கு மாப்பிள்ளையாகனும். அப்பறம் துவாரகிதான் நமக்கு சாட்டை. அவளை வச்சே நம்ம எல்லா காரியத்தையும் சாதிக்கணும்..” என்றார் கருணை நாதன்.
“அதுக்கு பேரு வேறப்பா..” என்ற துவாரகியின் குரல் கேட்க,
“இங்க எதுக்காக வந்த துவா..?” என்றான் சசி.
“என்னை வச்சு காரியம் சாதிக்கிறதுக்கு பேரு நிஜமாவே வேறதான்..” என்றாள் துவாரகி.
“நாங்க தப்பா எதுவும் செய்யலை துவாரகி. இப்படி பேசி எங்களை கஷ்ட்டப்படுத்தாத..?” என்றா சசி.
“அது எனக்குத் தெரியாது. ஆனா, என்னால நீங்க சாதிக்க நினைக்கிற எந்த விஷயமும் நடக்காது.” என்றாள் உறுதியான குரலுடன்.
அனைவரும் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது.