தரையில் மடிந்து சரிந்த காளை அந்த இடமே அதிரும் வகையில் கத்திக்கொண்டிருக்க, தேவா அதன் அருகே அமர்ந்து ஏதோ உடைந்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தான்.
“டேய் குட்டி புலி… ஏன்டா இப்டி கத்துற? என்னாச்சு டா தம்பி உனக்கு?” ரத்தம் உடலில் ஆங்காங்கு வழிந்தோடியதை பார்த்து தனக்கே அடி விழுந்தது போல் துடித்தான் தேவா.
அவனோடு காளையனும் அருகிலிருந்து நண்பனின் குரலுக்கு சரி சமமாக காத்த அவன் கோவத்தை பார்த்த நண்பர்களும், பெரியவருக்கு அவன் அருகில் செல்லவே பயமாக இருந்தது.
தேவானந்த் காளையனை கவனிக்கும் நிலையே இல்லை, இப்பொழுது அவன் கவனம் மொத்தமும் புலி வேந்தனிடம் தான், “கொஞ்சம் பொறுத்துக்கோடா தம்பி. இதோ இப்போ அண்ணன் டாக்டர கூட்டிட்டு வர்றேன்” தன்னுடைய பிள்ளை போல் அதன் முகத்தை தடவி கொடுத்தவன்.
“ராஜா டாக்டர வேகமா வர சொல்லுடா” நண்பன் அதிக குரலெடுத்து கத்த மௌனத்தை தவிர வேறு பதில் இல்லாமல் போனது நண்பர்களிடம். இருவரின் அமைதியை பார்த்தவன் தான் அவசர கதியாக எழுந்து தன்னுடைய சட்டையை அவிழ்த்து ரத்தம் வழிந்தோடும் இடங்களில் அழுத்தி பிடித்தான்.
“துணி எடுத்தா” தேவா கர்ஜிக்க ஆளாளுக்கு தங்கள் சட்டையை எடுத்து ரத்தம் வழிந்த இடத்தில் எல்லாம் அழுத்தி பிடித்தனர்.
“அண்ணே தண்ணி எடுத்துட்டு வா, குணா நீ டீ தூள் வீட்டுல போய் எடுத்துட்டு வா” மாறி மாறி கட்டளையிட்டு அந்த பெரியவரின் தோளில் இருந்த துண்டை எடுத்து வேந்தனின் கண்களுக்கு அருகே இருந்த வெட்டு காயத்தை துணி வைத்து மெல்ல அழுத்தினான்.
வலியை அதிகம் உணர்ந்த அந்த காளையோ அவன் அழுத்தியதில் இன்னும் குரலெடுத்து கத்த அதன் கண்களில் இருந்து வந்த கண்ணீரை பார்த்த தேவாவிற்கும் கண்ணீர் வந்தது.
உடனே அதன் அருகில் அமர்ந்தவன் அதன் உடலை தடவி, “ஒண்ணுமில்லடா… ஒன்னுமில்ல கொஞ்ச நேரம் வலிக்கும் பொறுத்துக்கோ” அவன் வார்த்தைகள் புரிந்த அவன் தம்பி கண்களை மூடி வேதனையை அடக்கிக்கொண்டான்.
ஆனால் காளையனோ கட்டுக்கடங்காமல் கயிற்றை அறுத்துக்கொண்டு செல்பவனை போல் திமிறிக்கொண்டு சத்தமிட, “காளையா அமைதியா இரு இல்லனா வெட்டிபோட்டுடுவேன்”
தேவாவின் சிம்ம கர்ஜனை குரலில் அடங்கி போனவன் அமைதியாக நின்றுவிட, நண்பனின் முன்னாள் வந்து டீ தூளை குணா கொடுக்க, அதே நேரம் அந்த பெரியவரும் குளிர்ந்த நீரை கொடுத்தார் வாளியில்.
வாங்கியவன் துணிகளை அகற்றி வேந்தனின் முகத்தில் சற்று அழுத்தமாய் கையை வைத்து தடவி, “எரியும்டா குட்டி புலி, எனக்காக கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ” என்றவன் தண்ணீரை அதன் மேல் ஊற்ற, அந்த வாயில்லா ஜீவன் அமையாய் இருந்தது தேவாவின் வேண்டுதலின் பெயரில்.
அடுத்து டீ தூளை அள்ளி இன்னும் ரத்தம் கசியும் இடங்களில் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர் வந்தததும் எழுந்து சற்று தள்ளி நின்றவன் அமைதி நண்பர்களுக்கு பயத்தை உருவாக்கியது.
சட்டையில்லா அவன் மேனியில் தெரிந்த கடினமான இறுகிய புஜங்கள் அவனின் கோவத்தை கூற, அருகில் செல்ல கூட மூவருக்கும் பயம்.
தேவானந்த் சிறு வயதிலிருந்தே விளையாட்டு போட்டிகளில் அதிகம் ஆர்வமுடையவன், அதிலும் மதுரையில் பிறந்து வளர்ந்தவனுக்கு வீர விளையாட்டுகள் என்று பெயரை எடுத்தாலே அவ்வளவு மலர்ச்சி முகத்தில் இருக்கும்.
அதிலும் அவனுடைய தாத்தா தோட்டம், வரப்பு என இருக்க அடிக்கடி அவர் இல்லம் வந்துவிடுவான். அதை தவிர நண்பர்களுடன் மதுரையை சுற்றி பார்க்க செல்பவனுக்கு விழா காலங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டும் சேவல் சண்டையும் அவன் மொத்த கவனத்தையும் ஈர்த்தது.
அதன் பிரதிபலிப்பே கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் தன்னுடைய காளையை களமிறக்கி நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறான். காளையன். தேவாவின் உயிர் என்றே கூறலாம்.
ஐந்து வருடங்கள் முன்பு அவனுடைய தாத்தா வீட்டில் புளியகுளம் வகையை சேர்ந்த ஒரு காளையை கேரளாவிற்கு செல்லவிருந்ததை தடுத்து தானே வாங்கிய செய்தியை கேட்டு மகிழ்ச்சி ஆர்ப்பரிக்க வந்தவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
அந்த நாள் முதல் அந்த காளைக்கு காளையன் என பெயரிட்டு மொத்த பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு விட்டான்.
“இந்த காளைய விட எந்த மனுஷனுக்கு தான் கூறுகெட்டு போச்சோ? ஆம்பள புள்ள மாதிரி நிக்கும்யா” என கூறி அந்த காளையை அவர் வருடும் பொழுதே சிலிர்த்து திமிறிய காளையை சாதாரண காளை போல் வளர்க்க விரும்பவில்லை தேவா.
தாத்தனிடம் மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை வாங்கி குலத்திற்கு அழைத்து சென்றான் அதனோடிருந்த நெருக்கத்தை அதிகரிக்க. அதன் பிறகு கல்லூரி இறுதி காலத்தை கூட அதிகம் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டிற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் அவனே ஊர் ஊராக சென்று சிறந்த ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்பவர்களிடமிருந்து கற்றுக்கொண்டான்.
அதோடு நில்லாமல் தமிழ்நாட்டின் மிக சிறந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களுக்கு சென்று பல தகவல்களை திரட்டி காளையனுக்கு அத்தனை பயிற்சிகள் கொடுத்து அதன் மூன்றாவது வயதில் அலங்காநல்லூர் வாடிவாசலை தாண்டிய காளையின் கம்பீரத்திற்கு முன்பு ஒருவரும் நிற்க கூட பயந்து ஓடினர்.
அந்த நாளிலிருந்து தேவாவின் காளையன் என்றால் ஒரு பயம் மாடு பிடி வீரர்களுக்கு தன்னாலே வந்து ஒட்டிக்கொள்ளும். கடந்த வருடம் ஒரு ஜல்லிக்கட்டின் பொழுது அதிருஷ்டமாக கிடைத்தது தான் காங்கேயம் வகை காளையான புலி வேந்தன்.
தேவாவின் கைகளுக்கு வந்த பொழுது பதினாறு நாள் குட்டி அவன். இரண்டும் தேவாவின் சகோதரர்களாகிவிட, என்ன வேலை இருந்தாலும் இருவரையும் காணாமல் அவன் நாள் அன்று ஓடாது. அதே நேரம் ஊரே அருகே செல்ல பயம் கொள்ளும் அந்த இரண்டு ஜீவன்கள் தேவா முன்னாள் சிறு குழந்தையாகி போவார்கள்.
இரண்டு காளைகளோடு மட்டும் நில்லாமல் மூன்று சண்டை சேவல்களை வளர்த்து அதனையும் சேவல் சண்டைக்கு எடுத்து செல்வான் தேவா.
அது அல்லாமல் பாசத்திலும் வீரத்திலும் சளைக்காத கோம்பை வகை நாய், வேங்கையன் என பெயர். வீரம் விஸ்வாசம் என தன்னுடைய எஜமானருக்கு ஆபத்து ஒன்று நிகழ்ந்தால் உயிரையே விடும் ராஜபாளையம் வகையறா ஒன்றையும் வளர்க்கிறான். அதன் பெயர் பைரவன்.
“யாரு தேவா இப்டி காட்டுமிராண்டி மாதிரி வெட்டுனது?” காயத்தை பார்த்த மருத்துவருக்கே ஆத்திரம் அதிகம் வந்தது.
“தெரியல டாக்டர்” என்றான் அமைதியான குரலில்.
“மனுஷ தன்மையோட இருக்கறவன் இந்த மாதிரி வேலைய பாக்கவே மாட்டான். இன்னும் கொஞ்சம் ஆழம் போயிருந்தாலும் ரத்தம் வெளியேறிய மாடு இறந்துருக்க கூட வாய்ப்பிருக்கு தேவா”
எதுவும் பேசாமல் அமைதியாக மருந்தின் வீரியத்தில் கண் அசரும் காளையை பார்த்தான் தேவா. குழந்தையாய் தெரிந்தது அந்த காளை அவன் கண்களுக்கு. இதன் மேல் அரிவாள் வீசும் அளவிற்கு என்ன வஞ்சகம்? மனம் கோவத்தில் கொதித்தது.
“நாளைக்கு காலைல வந்து பாக்குறேன், மழை வர்ற மாதிரி இருக்கு, மருந்து நின்னா தான் காயம் ஆறும்” தகவல் கூறி அவர் கிளம்பிவிட்டார்.
சில நொடிகள் நின்ற தேவா வாசலை நோக்கி நடக்க, “நீ இருடா நான் பக்கத்துல ஆளுங்க யாரவது இருந்தா கூட்டிட்டு வர்றேன்” குணா தடுத்தும் தேவா நிற்கவில்லை.
எங்கு சென்று இவரை அழைக்க இயலும்? அனைவரும் தான் ஊர் தலைவரின் தோட்டத்தில் உள்ளனரே. வாயிலை நெருங்கிய சமயம் இளநீருடன் கிடந்த அரிவாளை எடுத்ததை பார்த்ததும் நண்பர்கள் பீதியாகினர்.
“தேவா என்னடா பண்ண போற?” என ராஜா பதற அந்த பெரியவரும் பயத்தில் அவனை தொடர்ந்தார். அவனோ கதவின் அருகே கிடந்த புதிய ப்லக்ஸ் என்றும் பாராமல் அரிவாள் கொண்டு அந்த மூலைகளில் கீறிவிட்டான்.
“அது திருவிழாக்கு அடிச்ச பேனர் தேவா நாளைக்கு வைக்கணும் டா” என நண்பன் தடுக்க எதையும் காதில் வாங்கவில்லை அவன்.
“போர்ட்ல இருக்க பிளக்ஸ கிழி அப்டியே மில் வாசல்ல இருக்க ப்ளக்ஸையும் கிழிச்சு எடுத்தா” தன்னை கேள்வி கேட்ட நண்பன் கையில் வேலையை கொடுத்தான்.
அவனும் தேவாவை வித்யாசாகமாக பார்த்து தனக்கு கொடுத்த வேலையை செய்ய உதவுமாறு குணாவை அழைத்தான்.
அவரும் எடுக்க ஓட, கிழித்த பிளக்ஸை எடுத்து வேந்தன் இருக்கும் திசைக்கு செல்லும் வழியில் இருந்த டாட்டா ஏஸ்ஸில் லோட் ஏற்ற வைத்திருந்த கயிற்றை எடுத்து ஓடியவன் நெற்றியில் ஒரு சொட்டு மழை நீர் சிதறியது. கம்பிற்காக காத்திராமல் தென்னை மரத்தினில் கயிற்றை கொண்டு நாலாபக்கமும் கட்டினான்.
அடுத்த சில நிமிடங்களில் நண்பர்கள் வர வேலை மின்னல் வேகத்தில் நடந்தது. வேந்தனை சுற்றி மூன்று பக்கமும் பேன்னர்களை முழுதாய் மாட்டும் முன்னரே மழை வெளுத்து வாங்க துவங்கியது, வேலை முடியும் முன்னரே நால்வரும் நனைந்திருந்தனர் தேவாவிற்கு எதுவும் பொருட்டாகவில்லை.
புலி வேதன் மட்டுமே கண்ணில் தெரிந்தான், சற்று தொலைவில் தொப்பலாக நனையும் காளையன் கூட பார்வையிலிருந்து மறைந்து போனான்.
“தேவா மழை அதிகமாகிட்டே இருக்கு வா வீட்டுக்கு போகலாம்” – ராஜா
“ஆமா தம்பி நான் கவனிச்சுக்குறேன், நீங்க ஓய்வெடுங்க” என பெரியவரும் அவனை அப்புறப்படுத்தும் முயற்சியில் இருக்க, அவனோ, “ஏன் வேங்கையனையும் பைரவனையும் அவுத்து விடல?” அவன் குரலில் இருந்த பேதம் அந்த பெரியவரை நடுங்க செய்தது.
“நாய அவுத்து விட தானுங்க தம்பி போனேன் ஆனா அதுக்குள்ள நீங்க தான் அய்யா என்ன வர சொன்னாருன்னு சொல்லி அனுப்புனீங்க தம்பி அதான் பாக்க போன்னேன்” என்றார் நடுக்கத்துடன்.
தேவாவின் கண்கள் கூர்மையானது, “நான் உங்கள கூப்பிட்டேனா?” அவரை நெருங்கி வந்து மீண்டும் கேள்வி எழுப்பினான் தேவா.
“ஆமாங்க தம்பி உங்க கூடயே ஒரு பொடியன் இருந்தான்ல அவன் தான் நீங்க சொன்னதா சொன்னான்” – ராமசாமி (பெரியவர்)
உடனே தன் கைபேசியை எடுத்து அந்த சிறுவன், விஜய்யின் தந்தைக்கு அழைத்தான்.
“சொல்லு தேவா” ஓங்கிய குரலில் அவர் கேட்க தேவாவின் காதுகளுக்கு பாட்டின் ஒலி தான் அதிகம் கேட்டது.
“உன் பையன கூட்டிட்டு என் தோட்டத்துக்கு ஒடனே நீ வரணும்” மறு வார்த்தை பேசாமல் ஆணையிட்டு வைத்தான்.
அடுத்த பத்தாவது நிமிடம் மொத்தமும் ஈரமான ஆடையோடு டீ.வி.எஸ் பிப்டியில் வந்து மகனோடு நின்றார் அவர்.
“ண்ணா தூங்கிட்டு இருந்தேன் ஏன் வர சொன்ன?”
“நான் உன்ன ஏதாவது வேலை சொன்னேனா?” – தேவா
“நீ சொல்லல ண்ணே, நீ சொன்னதா மயில் அண்ணே தான் சொல்லி அனுப்பிச்சு”
அவ்வளவு தான் அந்த ஒரு துப்பிற்காக காத்திருந்தவன் போல் பதில் வந்த அடுத்த நொடி வேட்டியை எடுத்து மடித்து கட்டி சீரிய வேகத்தோடு சரிந்து கிடந்த வாகனத்தை எடுத்து உயிர்பித்தவனை எவராலும் நிறுத்த முடியவில்லை.
“தேவா அவசரப்படாத பஞ்சாயத்தை கூட்டலாம்”
தடுக்க முயன்ற குணாவை பார்த்து முறைத்தவன், “கூட்டி என்ன மசுர புடுங்கவா?” என கேட்க, “அதுக்குன்னு நீ போய் அந்த ஆள்கிட்ட பேச போறியா?”
திமிராக பார்த்த அவன் விழிகள், “அவன்கிட்ட பேச போறேன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?” என அவன் வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
வேகமாக செல்லும் அவனை தடுத்து நிறுத்த மீண்டும் தங்கள் வாகனத்தில் சென்றனர் குணாவும் ராஜாவும். மயிலப்பன் என்பவன் அந்த ஊர் தலைவர் அய்யனாரிடம் வேலை பார்ப்பவன்.
அவருக்கு மிக பெரிய விசுவாசியும் கூட, எந்த வேலையும் பின்னால் வரும் பிரச்சனைகளை எல்லாம் ஒரு நொடி கூட யோசிக்காமல் துணிந்து செய்பவன். அய்யனாரும் ஜல்லிக்கட்டு காளையை பல வருடங்களாக வளர்ப்பவர் தான்.
எப்பொழுது தேவானந்த் தானாக காளையை வளர்த்து பெயர் வாங்க துவங்கினானோ அந்த நாளிலிருந்து அய்யனார் மறைமுகமாக அவனோடு வன்மதத்தை வளர்க்க துவங்கினார்.
அதிலும் காளையை வாடிவாசலில் விட்ட முதல் முறையே வெற்றி பெற்று மாலையும் கழுத்துமாக காளையோடு மொத்த ஊரையும் பெருமையாக அவன் சுற்றி வர, அய்யனாரின் காளை அந்த முறை தோல்வியை சந்தித்தது.
“என்ன அய்யனாரே உங்க காளை எந்த பரிசு அடிச்சுச்சு?”
தகவல் தெரியாமல் தேவா அன்று கேட்ட ஒரு கேள்வி அவன் மேல் மொத்த வன்மத்தையும் இறக்கியது. அதன் பிறகான நேரங்கள் பல மயிலப்பன் காளையனை வம்பிற்கு இழுப்பான்.
குளத்து கரையில், கோவில்களில் அல்லது அய்யனாரின் தோட்டத்தை தாண்டி செல்லும் பொழுது என அத்தனை நேரமும் தன்னை சீண்டுகையில் அமைதியாக நடப்பவனால் இன்று தன்னுடைய உடன் பிறந்த தம்பியாக இருக்கும் அந்த வாயில்லா ஜீவனுக்கு துயரம் நேர்ந்ததை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஊரினுள் இருந்த அந்த பெரிய வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் தன்னுடைய ஆத்திரத்தை கட்டுப்படுத்த முயன்று தோற்று போனான் தேவா.
பெரிய வீட்டின் வாயிலை தொட்ட பொழுதே உள்ளே தன்னுடைய கூட்டாளிகளோடு மகிழ்ச்சியாக சிரித்து பேசிக்கொண்டிருந்த மயிலப்பனை பார்த்து வண்டியை நிறுத்தாமல் வேகத்தை குறைந்தவன் உதட்டில் சிரிப்போடும் கண்களில் க்ரோதம் மின்ன, “என்ன மயிலப்பா எதையோ சாதிச்சாப்ல ரொம்ப சந்தோசமா இருக்க?”
கேள்வியை வைத்து மேலும் தேவா வீட்டை நோக்கி வாகனத்தை ஓட்ட அவன் பின்னே மயிலப்பனும் வீட்டினுள் அமைந்த சிறிய தோட்டத்தில் நடந்து வாயிலை அடைந்திருந்தான்.
இரவு உணவை முடித்து வாசலில் கயிற்று கட்டிலில் உறக்கத்தை தழுவியிருந்த அய்யனார் வண்டி சத்தத்தை கேட்டு விழிக்க, வெறும் வெள்ளை பனியன், வெள்ளை வேஷ்டியோடு நிற்பவனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை, அதுவும் சாமத்தை நெருங்கிய பொழுது.
புல்லட்டின் விளக்கை அணைக்காமல் சரியாக அய்யனாரின் கண்களை கூச செய்து அடிக்குனாரு ஹாண்ட்பாரை திருப்பி வைத்தான்.
“என்ன தேவா ஏதாவது கச்சேரிக்கு தேவனா மயிலுகிட்ட சொல்ல வேண்டியது தானே? வயசானவன் கண்ண அசைந்தேன் இப்ப தான்” குளிரை தாங்க முடியாமல் போர்வையை எடுத்து போர்த்தினார் எழுந்து நின்று.
ஆக்ரோஷமாக குரலை உயர்த்தி சண்டைக்கு வந்த மயிலப்பன் கழுத்திலிருந்த துண்டை பிடித்து அவன் கழுத்தோடு ஒரு சுற்று சுற்றி தேவா நெறிக்க அய்யனாரின் ஆட்கள் மொத்தமும் அவ்விடத்தில் வந்து தேவாவை பிரிக்க முயன்று தோற்று போயினர்.
“ஏலேய் முனியாண்டி போன் போட்றா போலீஸ்க்கு” அய்யனார் குரல் கொடுக்க உடனே அந்த வேலையை அவன் செய்தான்.
“வீரமானவனா வாடிவாசல் தாண்டி என் தம்பி வர்றப்ப அவனை அடக்கிருகனும், அத விட்டு எச்ச மாதிரி அருவா வீசுற?” துண்டை இன்னும் கழுத்தையொய்டி நெருக்கி பிடிக்க மயிலப்பன் துடித்தான் மூச்சு காற்று விட முடியாமல்.
“என்ன தேவா இங்க வந்து லந்த கூட்டிற்றுக்கியா?” – அய்யனார்
“கச்சேரிய உன் தலைல நீ போட்டப்பவே சந்தேகம் வந்துச்சு ஆனா இந்த மாதிரி கீழ்தரமா இருப்பன்னு நான் நினைக்கல அய்யனாரே”
“சும்மா இற்ரா, நானு அப்பள இருந்து பாக்றேன் வந்ததுல இருந்து சம்மந்தமே அதிகமா பேசிட்டே போற?”- அய்யனார்
“சும்மா ரூட்டை குடுக்காத அய்யனாரே உன்ன பத்தி எனக்கு தெரியும், ஆள் இல்லாத நேரத்துல உள்ள புகுந்து உன் வீரத்தை காட்டிட்டா பெரிய மயிறுன்னு என்னமோ?”
“எளந்தாரி பயலேன்னு சும்மா பேச விட்டா ரொம்ப தான் துள்ளுற நீ? டேய் தூக்குங்கடா”
தன்னுடைய ஆட்களுக்கு ஆணையிடும் நேரத்திலே வாகனத்தை விட்டு இறங்கிய தேவா இடையில் சொருகியிருந்த அந்த சிறிய அரிவாளை எடுத்து மயிலப்பனின் கழுத்தில் ரத்தம் கசியும் அளவு சற்று அழுத்தம் கொடுத்து வைக்க அவனை நெருங்க விரும்பவில்லை அய்யனாரின் ஆட்கள்.
“எளந்தாரி பயன்னு எண்ணம் இருக்கத்தால தான் உன் முகத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறேன், உன்ன மாதிரி படம் காட்டிட்டு பின்னாடி நின்னு கத்திய சொருகுற ஆள் இல்ல”
அய்யனாரிடம் பேசியவன் மயிலப்பனிடம் திரும்பி துண்டை கழுத்தோடு பிடித்து இழுத்து வாசலில் தள்ளியவன் அவன் அணிந்திருந்த வேட்டியை ஒரே இழுப்பில் உருவி போட்டான்.
“வீரத்தையெல்லாம் கட்டிபோட்ருக்க மாட்டுகிட்ட மட்டும் தான் காட்டுவியா? எங்க இப்ப என்கிட்டே காட்டு பாக்கலாம்”
கன்னத்தோடு ஓங்கி ஒரு அடி கொடுத்தான் தேவா.ஆணாய் முதல்முறை பலத்த அடிவாங்கியது மயிலப்பனின் கர்வம்.
தெருவில் ஒரு ஆள் நடமாட்டம் கூட இல்லை ஆனால் உடலில் துணியே இல்லாமல் நிற்பது போல் கூசியது அவனுக்கு. அதிலும் தன்னை விட ஐந்து வயது சிரியவனிடம் அடி வாங்கியது செருப்பால் அடித்தது போல் அவமானமாய் இருந்தது.
“எந்நேரமும் சிரிச்சிட்டே சுத்துறானே தலைல மொளகாய அரைச்சு தேய்க்கலாம்ன்னு நெனப்பு இருக்கோ? மவனே என் வேந்தனுக்கு சின்ன அடியோட நின்னதால இதோட விடுறேன்.
இதுவே அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தது வையி ஒரு செகண்ட் கூட யோசிக்க மாட்டேன். பகலு, ராத்திரி, பொண்டாட்டி பாக்குறா, புள்ள பாக்குறான்னு எல்லாம் கண்டுக்கவே மாட்டேன் ஒட்டு துணி இல்லாமல் அம்மணமா ஊருக்குள்ள நடக்க வப்பேன்”
மயிலப்பன் கண்களில் மொத்தமும் வன்மம் புகுந்தது. இதுவரை அய்யனாருக்காக தான் செய்வதாக மனம் கூறியது ஆனால் இந்த நொடி தேவா மயிலப்பனின் எதிரியானான்.
அப்பொழுது தான் வந்த குணாவும் ராஜாவும் நண்பனை தடுக்க மனமில்லாமல் நின்றுவிட்டனர்.
அதோடு நிறுத்த தேவாவிற்கு மனம் வரவில்லை, ‘ம்மா ம்மா’ என அன்னையை அழைப்பது போல் புலி வேந்தன் தவித்தது நினைவு வர, நடு தெரு என்று கூட பார்க்காமல் கையிலிருந்த தங்க காப்பை முறுக்கியவன் மொத்த கோபத்தையும் மயிலப்பனின் முகத்தில் குத்தி குத்தியே குறைத்தான்.
தேவாவின் ஆக்ரோஷத்தை பார்த்த மற்ற நபர்கள் அவனை பிரிக்க படாத பாடு பட்டனர்.
“யோவ் விடுயா விடுயா”
“போலீஸ் வருது தேவா இதோட விட்டுடு”
“அடிக்காத டா” ஆளுக்கு ஒன்று கூறியும் அவன் கேட்கும் தருவாயில் இல்லை.
மயிலப்பனின் முகம் எல்லாம் வீங்கி ஆங்காங்கு ரத்தம் வழிந்தது, “ஆஆ…” அவன் அலறுவதை கேட்டும் மனம் ஆறவில்லை தேவாவிற்கு.
முகத்தோடு நிற்காமல் வெட்டுக்காயத்தை கொடுத்த அவன் கையை பிடித்து அதிலும் சரமாரியாக குத்த நிச்சயம் எலும்பு முறிவு உண்டாகியிருக்கும் என மயிலப்பன் துடித்த துடிப்பிலே தெரிந்திருக்கும். வியர்வை துளிகள் நெற்றியிலிருந்து வழிந்தோட, திருப்த்தியானவன் தானே எழுந்து அங்கிருந்த கல்லில் அமர, அந்த நேரம் அய்யனாரின் மொத்த குடும்பமும் வாயிலில் வந்து நின்றிருந்தது.
“ரொம்ப தான் துள்ளிட்டு இருக்க… மனுசனா இல்ல மிருகமாடா நீயி? இந்த அடி அடிச்சிருக்க?”
“உன்ன சும்மா விட மாட்டேன்டா… ஒரு மாடு உயிரோட தான இருக்கு, செத்தா போச்சு? ஒருத்தனோட உசுரையே எடுத்துடுவ போல”
“டேய் இன்னைக்கு அவனா நாமளானு பாக்கணும்டா… எடுங்கடா அந்த அருவாளை” என ஒரு குரல் கத்தியது.
“இவ்ளோ நேரம் சும்மா தான நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த இப்ப மட்டும் எங்கன இருந்துயா உனக்கு வீரம் மொளச்சதாம்? யோவ் மயிலு யாருக்காக இவ்ளோவும் பண்ணியோ அந்த ஆளே வேடிக்கை தான் பாக்குறான்” அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்த குணா நண்பனிடம் நடந்துவர, உடன் ராஜாவும் வந்தான்.
“யோவ் ரெண்டு வெட்டு காயத்துக்கே அவன் மூஞ்சி மொகரைய கிழிச்சு போட்ருக்கான், உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தது கூண்டோட வைகுண்டத்துக்கு அனுப்பிருப்பான்”
ஹார்ன் சத்தம் தெருவெங்கும் ஒலிக்க அந்த தெருவினில் நுழைந்தது காவல்துறையின் வாகனம் ஒன்று.
அதை பார்த்ததும் வாயிலியில் நின்ற ஊர் தலைவரை பார்த்த தேவா, “பழக்க வழக்கம் பாத்து இத்தனை நாள் அமைதியா இருந்தேன். அதுக்கு காரணம் உன் வயசும், ஊர் தலைவருன்னு உனக்கு குடுத்த பதவி, ஆனா அதெல்லாம் என் காளைக மேல நீ கை வச்ச அந்த நொடி போச்சு. இனிமேல் வேற மாறி ஆயிரும் உன்கிட்ட ஓராண்ட இழுக்குறது மட்டும் தே என் வேலையாவே இருக்க போகுது”
“ஓ துறை பெரிய லார்டு மாதிரி பேசிட்டா ஜில்லாக்கு கலெக்டர் நீங்கன்னு முடிவாகிடுமா?”
தேவாவின் பனியனை பிடித்து இன்ஸ்பெக்டர் இழுக்க அசையாது அமர்த்திருந்தவன் அய்யனாரிடம், “என்ன மாமே வர்ட்டா?” மந்தகாச புன்னகையோடு தானாக சென்று காவல்துறையினரின் வாகனத்தில் அமர்ந்து கொண்டான்.