உடல் நடுங்க, நெஞ்சம் படபடக்க கண்களை மூடிக்கொண்டு இருந்தவள் உதடுகள் பயத்தில் தந்தியடித்தன.
“வரவா? இன்னும் கொஞ்சம் வரவா?” என அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் ஒரு ஓரத்தில் நின்று கை கட்டி பார்த்தவன் மௌனமாய் நிற்க, வரவா வரவா என கேள்வி கேட்டவள் இம்மியளவும் அசையவில்லை.
“இப்டியே கேள்வி கேட்டுட்டே இரு, கெனத்துக்குள்ள தூக்கி போட்டு நான் வரவா-னு கேப்பேன்” என்றான் தேவா பொறுமை இல்லாமல். கண்களை திறந்து பார்த்தவள் தான் இன்னமும் அதே இடத்தில் நிற்பதை கவனித்து,
“நான் வீட்டுக்கு போகட்டா?” என்றாள்.
“சரி போ” என்றான் அவனும் சாதாரணமாக.
“உடம்பே நடுங்குது ஆனந்த்” விறைப்பாய் நின்ற இருவரின் உடல் மொழியை பார்த்து பயந்தாள் பெண்ணவள். அவள் கூறியது போலவே தங்கள் நெருங்க முயலும் பைரவியை உஷ்ண பார்வை பார்த்தபடி தான் நின்றனர் காளையனும், புலி வேந்தனும்.
“ஒன்னும் பண்ண மாட்டாங்க பைரவி. நீ என்ன மாடா பிடிக்க போற முட்ட நிக்க?” பேச்சினோடே வந்து அவள் கரம் பற்றி நடையை தொடர்ந்தான்.
தேவாவின் கைகளிலிருந்து விடுபட போராடியவள் கையை அவனும் விடவில்லை. இறுக்கமாக பற்றியே முதலில் புலி வேந்தன் அருகில் தான் அழைத்து வந்தான். பைரவியின் கை பட்டதும் தலையை திருப்பி அவளை பார்க்க, உடன் தேவா இருந்ததால் அமைதியாக நின்றுவிட்டான்.
“அவ்ளோ தான், பசங்கள பாத்து பயப்பிடலாமா?” மெல்ல கூறியவன் அவளது மற்றோரு கையையும் எடுத்து வேந்தன் மேல் வைத்தான். பயத்தில் அலறிய பைரவின் அதரங்கள் இப்பொழுது புன்னகையால் மலர்ந்திருந்தது.
எதையோ பெரிதாக சாதித்த உணர்வு அவனை தொட்டதற்கே. கைகள் கடினமான காகிதத்தை வருடுவது போல் மென்மையாகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தது. ரோமம் உள்ளதா இதற்கு? இல்லை பார்க்க தான் அவ்வாறு தோன்றுகிறதோ என்ற அயம் அதன் மென்மையில்.
முரட்டு கைகளால் மட்டுமே தொடப்பட்ட அந்த வேந்தனுக்கும் பெண் வருடல் புதிதாக பட்டதோ என்னவோ திரும்பி திரும்பி அவளை பார்த்தான். மூக்கோடு கயிறு கட்டப்பட்டிருக்க அவனால் முழுதாய் திரும்ப முடியவில்லை.
பைரவியின் கரங்கள் அதன் கடினமான முதுகு தண்டை தடவி மெல்ல அதன் முகத்தை அடையும் பொழுது வீரனின் வாளைப் போல் கூர்மை தீட்டாமலே தானாய் கூறி வளர்ந்திருந்தது அதன் கொம்பு இருளை கூட்ட, தன்னை பார்க்கும் அவன் கண்களில் ஓர் கனிவு தெரிய, வளையல் சத்தம் சலசலக்க அதன் முகத்தை மேன்மையை வருடினாள்.
‘திமில் பிடித்து ஓட்டமெடுக்க புழுதி பறந்து மண்ணில் புரள்வது விளையாட்டல்ல, நம் கலாச்சாரம். ஏர் பிடித்து நிலம் மிதித்து உழுவது வியாபாரம் இல்ல நம் பாரம்பர்யம். தமிழனே இது ஜல்லிக்கட்டு அதற்கு நீ மல்லுக்கட்டு’ என பெரிய பெரிய பலகைகள் தாங்கி விருதுநகரின் மத்தியில் போராட்டம் நடத்தியது இன்றளவும் நினைவில் உள்ளது அவளுக்கு. இந்த அழகியலையா தடை செய்தார்கள்?
அதுவும் இவர்களை பிள்ளை, உடன் பிறந்தவன் என வளர்க்கும் தேவா போன்ற மனிதர்கள் இருக்க இதனை கொடுமை படுத்தவா செய்வார்கள்? சிலருக்கு இவைகள் தந்தையாக கூட மாறிவிடும். வாடிவாசல் தாண்டுகையில் சிங்கமாய் சீறிப்பாயும் அதன் சுபாவம் உரிமையாளரான தேவா அருகில் இருப்பதால் இந்த சாந்தமா?
இல்லை தீமை இல்லாத என்னுடைய தொடுகை இதற்கு புரிந்துவிட்டதா என யோசனையோடு அருகில் அருகில் தயக்கமே இல்லாமல் நகர்ந்தாள். பைரவியின் ஒரு கை அதன் தாடியையும், ஒரு கை அதன் கன்னத்தை வருட, கண்களை மூடி மூடி அவள் தொடுகையை ரசித்து மகுடிக்கு அடங்கும் பாம்பை போல் தலை குனிந்துகொண்டு சென்றான்.
முதல் முறையே தன்னிடம் இளக்கமாக நிற்கும் புலி வேந்தனை பைரவி எண்ணிலடங்கா அன்போடு மேலும் மேலும் தயக்கமே இல்லாமல் நெருங்கினாள்.
தன்னையே மறந்து அதனிடம் அவள் நெருங்க, அவள் வயிற்றோடு கையை வைத்து தன் நெஞ்சாங்கூட்டோடு அணைத்து மனைவியை தன் வசம் திருப்பினான் தேவா.
“கொம்பு இன்னும் மழுக்கி விடாம இருக்கு சக்கரை மேல பட்டுடும், பக்கம் போகாத” தேன் குழைத்த குரலில் காதுகளில் கிசுகிசுத்தவனை தள்ளி நிறுத்தும் எண்ணமே வரவில்லை. ஒட்டி உரசி நிற்கவில்லை, அவளுக்கு பாதுகாப்பாக நிற்கிறான்.
“ரெண்டும் ஜல்லிக்கட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா?” அவஸ்தையை அடக்கி குரல் எடுத்து கேட்டாள்.
“இல்ல, இவன் பாக்க தான் பெருசா இருப்பான், ஆனா மூணு வயசு தான் ஆகுது. ஜல்லிக்கட்டுக்கு அஞ்சு வயசு மேல இருக்க காளையை தான் கூட்டிட்டு போகணும்”
பைரவி, “இப்ப இருந்தே புலிக்கும் ட்ரைனிங் குடுப்பிங்களா?”
அவளது புலி அழைப்பில் மெல்ல சிரித்தவன், “ஆமா குடுக்க ஆரமிச்சிட்டோம்” என்றான்.
“நீங்க தான் பழக்குவிங்களா?”
“மாட்ட வளக்குறவங்க என்னைக்கும் பழக்க மாட்டாங்க, நான் பக்கத்துல இருந்து எப்படி ட்ரைனிங் கொடுக்கணும்னு தான் சொல்லுவேன்”
“ஏன்?”
“வாடிவாசல் தாண்டி வர்ற மாடு யாராவது ஒருத்தருக்கு அடங்கணும்ல?” சில நிமிடம் பைரவியின் கைகள் தந்த கதகதப்பில் பவ்யமாக நின்ற புலி வேந்தன் அதற்கும் மேல் அமைதியாக தலை குனிந்து நிற்காமல் அவளிடமிருந்து முகத்தை எடுத்து அங்கிருந்த வக்கப்புல்லை தவிர்த்துவிட்டு சிறிதளவே தவுடை உண்ண துவங்கியது.
“ஆனந்த், நான் தவுட கலந்து வைக்கவா?” கையணைப்பில் அவளை வைத்திருந்த சுகத்தை அனுபித்துக்கொண்டிருந்த தேவாவிற்கு பேரண்டத்தின் பிரகாசத்தை கூடுதலாக்குவதே அவள் மீது தான் வைத்த காதல் மட்டும் என தோன்றியது.
அதிலும் தான் ஆசையை வளர்க்கும் மாடுகளை கவனிக்க அவள் காட்டும் ஆரவாரமும் அவசரமும் அழகாக தெரிந்தது. அவள் கேட்டதை செய்து வைத்தான்.
அவன் சொன்னதும் தானே மீதம் உள்ளதை செய்வதாக கூறி செய்து முடித்தாள்.
புலி வேந்தன் அருகே எளிதாக சென்றவள் காலையனை நெருங்க கூட மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க, அவனின் முரட்டு குணத்தை அறிந்த தேவாவும் அவளை வற்புறுத்தவில்லை.
புலிவேந்தன் முகத்தை தடவிக்கொண்டே அவனுக்கு உணவை வைக்க, காளையனுக்கோ எவ்வளவு தூரம் தள்ளி நின்று வைக்க வேண்டுமோ அத்தனை தொலைவில் நின்று வைத்து மெல்ல மெல்ல அதன் அருகே தள்ளி வைத்து ஓடி வந்துவிட்டாள்.
திவ்யமாக நகர்ந்தது அந்த பொழுது, வெப்பத்தை அரும்பி நுகரும் துளிர் பனியின் கடமையை அவள் இமைகள் அவன் உடலுக்கு செய்தன.
தான் சற்று தள்ளி நின்றாலும் பார்வையை படரவிட்டு தன்னை பார்க்கும் பொழுது தென்னை மர காற்றினால் ஆடும் அவள் கார்குழலை வருடி கழுத்தோடு அடங்கும் அவள் கைகளை சிறை செய்து அவள் கைகளின் வேலையை தன் கைகள் செய்ய துடித்தது.
இயல்பென்ற நிலை இதுநாள் வரை நீ வாழ்ந்ததல்ல, இவளோடு இருக்கும் இந்த நாழிகை இன்னலற்ற அமைதியை மனமார வர செய்து இன்பமாய் மனமாளும் மென்மழையாகிய மென் மதியே, என்ன வசியம் தன் செய்தாயோ இந்த இதயத்திற்கு!
அவளை ரசிப்பதை மட்டுமே சங்கமமைத்து கடமையாற்றுகிறான். அவளை அழைத்து மாடுகளுக்கு பயிற்சி கொடுப்பது, அவற்றை சாந்தப்படுத்துவது எப்படி என அனைத்தையும் பார்த்தவளை பிறகு தோட்டத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அழைத்து சென்று காட்டினான்.
வாழை மரங்கள் இருந்தால் நிச்சயம் பாம்பு இருக்கும் என்ற பயத்தில் தென்னைகளுக்கு இடையில் ஊடுபயிராக வளர்ந்திருந்த சில இடத்திற்கு வர மாட்டேன் என நின்றாள், அதிலும் இழுத்து சென்று அதனை தாண்டி இருந்த கனகாம்பரம் செடிகளை காட்டவும் அதனை கையேடு அதனை பறிக்க துவங்கிவிட்டாள் மாலை தலையில் சூடிக்கொள்ள.
தென்னை பதினைந்து ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்திருந்தாலும் தென்னைக்கு மட்டுமே அவ்விடம் இல்லாமல் பப்பாளி, வாழை, மிளகு, வெற்றிலை என கிடைத்த இடம் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி எந்நேரமும் தண்ணீர் மாலை வரை தண்ணீர் அந்த உயிர்களுக்கு கிடைக்கும் வகையில் சொட்டுநீர் பாசனம் அமைத்திருந்தான்.
கிணற்றோடு ஒட்டியிருந்த மோட்டார் அறைக்கு அருகில் இருந்த சிறிய காலியிடத்தை மொத்தமாய் குடிசை வடிவில் மாற்றி எந்நேரமும் மூடி வைத்து அதனுள் காளான் வளர்ப்பை தானே பார்த்துக்கொள்கிறான்.
“இதுல என்ன பெருசா லாபம் வந்துட போகுது பத்தாயிரம் வருமா?” என தான் கேள்வி கேட்டது எவ்வளவு பெரிய தவறென அவன் பதிலில் ஆச்சிரியப்பட்டு போனாள்.
“பத்தாயிரம் வந்தாலும் லாபம் லாபம் தானே, இதுல இந்த சின்ன இடத்துல மட்டும் எனக்கு அம்பதாயிரம் லாபம் வரும், இங்க வா” மோட்டார் அறைக்கு அழைத்து சென்றான். அவ்விடமே ஏதேதோ அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் கவர்களாக கிடந்தன.
“ஆட்டு புழுக்கை, வேப்பங்குச்சி, உலர்ந்த மாட்டு சாணம். இதெல்லாம் தான் பேக் பண்ணி வச்சிருக்கேன். இது எல்லாம் வேஸ்ட்டா குப்பைல போடுறது. நான் எல்லாத்தையும் வேஸ்ட் பண்ண மாட்டேன்.
வயலுக்கு போட்டு மிச்சம் இருக்குறத எடுத்து ஆன்லைன்ல வித்துடுவேன். மும்பைல, புனேல இருந்தெல்லாம் இதுக்கு மவுசு அதிகம். குறைஞ்சது இருபதாயிரம் லாபம் வரும்”
சிறிய மடு கிடைத்தால் கூட அதை மலையாய் மாற்றி அதில் ஒரு லாபம் ஈட்டும் இவனது சாமர்த்தியம் பைரவியை வியக்க வைத்தது, அதோடு வீடும் வந்து சேர்ந்தனர்.
இதோடு நில்லாமல் மில், வயல், நாட்டு பசு மாடுகள் என தேவாவுக்கு பணத்திற்கு பஞ்சமில்லாமல் கைகள் கனத்தது. இத்தனை நேர்த்தியாய் கையில் எடுத்த தொழிலை பார்பவனின் உழைப்பின் மீதா தன்னுடைய தாய் மாமனுக்கு சந்தேம்?
இவனோடு வந்து ஒரு நாள் இவ்விடத்தையும் இங்கிருக்கும் வேலைகளை பொறுப்பாய் கணவன் கையாள்வதையும் கவனித்திருந்தால் அவனது ஆளுமையும் அசாத்திய திறமையும் தெரிந்திருக்குமே!
தேவா சொல்ல சொல்ல அவனையே கண் இமைக்காமல் கலவையான உணர்வுகளோடு பார்த்தவள் பார்வையை சிறை செய்தவன் அவள் முன் சொடக்கிட்டு, “என்ன பார்வை?” கேட்டான் சிரிப்போடு.
“ஆச்சிரியப்பட வைக்கிற திறமை உங்ககிட்ட இருக்கே ஆனந்த். அதுக்கான ஒரு சின்ன பாராட்டு கூட உங்க அப்பா அம்மாகிட்ட இருந்து கிடைக்கலன்னு வருத்தம் இல்லையா?”
சிரமப்படாமல் சிரித்தவன் குனிந்து அவள் நாடியை பற்றி கண்களை ஊடுருவும் பார்வை பார்த்தான், “இப்ப என்ன பாத்து இந்த கண்ணு காட்டுது பாரேன் ஒரு பூரிப்பு. அந்த ஒரு திருப்த்தியான பார்வை போதும். யாரையும் எதிர் பாக்க மாட்டான் இந்த தேவா” நெஞ்சை நிமிர்த்தி அவன் சொன்னதில் வார்த்தைகள் வரவில்லை பைரவிக்கு.
எல்லோரையும் விட தன்னுடைய எதிர்வினை தான் இவனுக்கு முக்கியமா? இவன் வாழ்க்கையில் அத்தனை முக்கியமானவளாய் என்று நான் மாறினேன்? எந்த விதமான பாசம் இவனது?
எண்ணிலடங்கா பெண்கள் இவன் பின்னால் சுற்ற எவரிடமும் இல்லாத உணர்வை என்னிடம் கண்டேன் என்கிறான். என்ன பெரிதாக அவனிடம் அன்பை காட்டிவிட்டோமென இந்த அழகிய காதல்? கருமேகம் சூழ மழைக்கு முன்னாள் வீசும் மண்வாசனையின் மனம் இந்த காதல்.
வெறுமையின் சாளரத்தில் பரிசாக கிடைத்த பேரன்பு அவனின் காதல். நீரானது ஆற்றங்கரையை தாண்டி பெருகி ஓடியது போல் உள்ளத்தில் ஆனந்தம் பெருகி மனதை விட்டு பொங்கி ஓடியது.
“ம்ம்ம்?”
“ஆமா” அவள் கையை பற்றி படுக்கைக்கு தன்னருகில் மென்மையாய் இழுத்தான்.
“ஊர் புடிச்சிருக்கா?”
அக்கா அக்கா என உடன் பிறந்தவள் போல் உரிமையாய் அழைத்து பாசமாய் பேசும் இளையவர்களையும், தன் சகோதரி போல் பார்க்கும் அவன் நண்பர்கள், இந்த ஊரில் பிறந்து வளர்த்தவளாய் பார்க்கும் பெரியவர்களையும் பிடிக்காமல் போகுமா?
“ரொம்ப புடிச்சிருக்கு”
பிடித்த அவள் கைகளை தன்னுடைய இரண்டு கைகளோடும் பிணைத்து கொண்டவன் இறுக்கம் வித்யாசமாக இருந்தது தயக்கத்தை காட்டும் அவன் முகம் போல.