“என்ன பேச்சு பைரவி இது?” நாயகிக்கு மகளின் மேல் பிடித்தமில்லாதது தெரிந்து பேச்சு பெரிதாகிட கூடாதென பேசும் பொழுதே அழுகை தான் வந்தது சீதாவிற்கு.
“ம்மா என்ன பத்தி அப்றம் பேசிக்கலாம். இப்ப என் அண்ணன் கல்யாணம் நடக்க கூடாது”
தேவா, “நடக்க கூடாதுன்னு சொல்ல நீ யாருடி, என் தங்கச்சி ஆசைப்பட்டா கண்டிப்பா நடக்கும்”
பைரவி, “உங்க தங்கச்சி மட்டும் ஆசைப்பட்ட போதுமா, என் அண்ணனுக்கும் பிடிக்கணும் உங்க தங்கச்சிய”
தேவா வேகமாக சந்தோஷிடம் சென்றான், “ஏன்டா பிடிக்காம தான் சரின்னு சொன்னியா?”
“எதுக்கு இப்போ அண்ணன்கிட்ட சண்டைக்கு நிக்கிறிங்க. அவன் எனக்காக விட்டு குடுத்தான்” பைரவி கணவனிடம் சண்டைக்கு நின்றாள்.
“ஓ காரியம் முடிஞ்சதும் பேச்சு மீறிடுவிங்க?”
“அப்டி இல்ல, ரெண்டு பேருக்கும் புடிச்ச தானே கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கும்?”
“அத தான் கேக்குறேன், என் தங்கச்சிய நம்ம கல்யாணம் பேசுனப்போ பிடிச்சது. இப்போ பிடிக்கலையா? எனக்கு காரணம் வேணும்” என்றான் அவளை போலவே அழுத்தத்தோடு.
“காரணம் தானே, என் அண்ணனும் நிலாவும் லவ் பன்றாங்க” பைரவி போட்டுடைத்த உண்மையில் அவ்விடமே அமைதியாகி அனைவரும் நிலாவை தான் பார்த்தனர்.
பார்வை மொத்தமும் தன் மேல் படிந்திட விழுக்கென கண்ணீர் ஒன்று விழுந்து பைரவியின் கூற்று சரியென நிரூபித்தது.
“இது போதுமா இந்த பேச்சு இதோட நிக்க?” பைரவி கேட்கவும் இஷா பெருங்குரலெடுத்து அன்னையின் தோள் சாய்ந்து அழ வீட்டினர் எவருக்கு சாய்வாக நிற்கவென தெரியவில்லை.
“இத முன்னாடியே சொல்லிருக்கலாமே சந்தோஷ், நாலு மாசமா என் தங்கச்சி ஆசைய வளர்த்து வச்சிருக்கா… இப்போ அந்த கண்ணீருக்கு என்ன பதில் சொல்லுவ?” என்றான் தேவா கோவமாக மச்சானிடம்.
“இனிமேல் என்ன தேவா சொல்லுவாங்க, சிரிச்சு பேசி உன் தங்கச்சிய அண்ணனங்காரன் மயக்கிட்டான். அப்போ தானே நாம அவனை உன் தங்கச்சிக்கு கல்யாணாம் பண்ணி வைக்க பேசுறப்போ அவன் தங்கச்சிய இங்க தள்ளிவிட முடியும்?”
இத்தனை நாள் மனதிலிருந்த கோவத்தை வீட்டினர் முன்பே இறக்கி வைத்தார் நாயகி.
“நாயகி, இப்ப என்ன ஆச்சுன்னு வார்த்தையை விடுற?”
ராஜரத்தினம் கூட தான் இருந்த நிலையில் அதிகம் பேச முடியவில்லை. தங்கை மகன், மகளை நன்றாக பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக இருக்க ஏமாற்றம் குடிகொண்டது.
“நீங்க சும்மா இருங்க, சின்ன பொண்ணு மனசுல அசைய வளர்த்து வச்சு அழுதுட்டு நிக்கிறா. இதோ தேவா கூட கல்யாணம் ஆன விக்னேஷ் இன்னும் பத்து மாசத்துல கைல குழந்தையோட நிப்பான். என் பையன் காலம் எல்லாம் அவனை வேடிக்கை பாத்துட்டே நிக்க வேண்டியது தான்”
“இப்போ என் ரெண்டு பசங்களுமே இவங்களால நிம்மதி இல்லாம நிக்கிறாங்க” நாயகி ஆற்றாமையில் கூறினார்.
“அத்தை அப்டி எல்லாம் இல்ல, நான் எல்லாத்தையும் மறந்துட்டு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். பைரவி ஏதோ தெரியாம பேசுறா” என்றான் சந்தோஷ் உடனே.
“அதெல்லாம் முடியாது, நீ நிலாவை தான் கல்யாணம் பண்ணிக்கணும்” நடுக்கூத்தில் நின்று சகோதரனை மிரட்டும் பைரவி அங்கிருந்த அனைவருக்குமே புதிது.
“சும்மா நிறுத்துடி. இனிமேலும் உன் அண்ணன் தான் வேணும்னு நிக்கிற அளவு நாங்க மானம்கெட்டு போய்டல”
தேவா பேசியதில் மீண்டும் குடும்பத்திற்குள் பாகுபாடு வந்துவிடுமோ என்ற பயம் அர்ஜுனனுக்கு, “தேவா என்னப்பா இது? பொறுமையா பேசிக்கலாம். பைரவி சின்ன பொண்ணு” என்றார்.
“நான் சின்ன பொண்ணு இல்ல தாத்தா, நான் சொன்னது சொன்னது தான். இந்த கல்யாணம் நடந்தா அவங்க மூணு பேருக்கும் தான் மன கஷ்டம். என் அண்ணனுக்கு இஷா கூட தான் கல்யாணம் இல்லையா அவன் கல்யா…”
அனைவரையும் ஒற்றை ஆளாக எதிர்த்து நின்று பேசும் மகள் கன்னம் பழுக்கும் அளவு சீதா அறை விட்டிருக்க இன்னமும் இறுகி தான் இருந்தாள் அவள்.
“எல்லாமே உன்னால தான்டி” உக்கிரமாக சிவந்த கண்களை காட்டி நின்ற சீதா கோவம் காட்டும் இடம் மகள் மேல் தான்.
மொத்த வீட்டினரும் அதிர்ந்து நிற்க, “சீதா, இது என்ன கல்யாணம் ஆன பிள்ளை மேல கை நீட்டுற? அவளுக்கு தெரிஞ்சதை அவ சொல்றா” மகளுக்கு துணையாக மனைவியை அதட்டினார் கண்ணன்,
“ஆமா ய்யா, மாப்பிள்ளை சொல்றது தான் சரி. ஏதோ தங்கச்சி வாழ்க்கையை நினைச்சு அவனும், அண்ணன் வாழ்க்கையை நினைச்சு பாப்பாவும் பேசிட்டாங்க.
இதுக்காக குடும்பத்துக்குள்ள தேவையில்லாத பிரச்சனை வேணாம். யாரும் வார்த்தையை விடாதீங்க ப்பா” பொதுவாக வேண்டுதல் வைத்தார் அர்ஜுனனும்.
“அய்யப்பா… இனி பேச எதுவுமில்லை. நிலாவும் என் தங்கச்சி தான். தாராளமா கல்யாணம் பண்ணட்டும். ஆனா என் கோவம் எல்லாம் இவன் மேல தான்” என்றான் இன்னமும் இறங்கி வராத குரலில்.
“அப்போ உன் தங்கச்சிக்கு என்னடா பதில் சொல்ல போற?” நாயகி மகனிடம் வந்தார்.
“மனச மாத்த சொல்லுங்க, இல்ல அவன் கால்ல போய் விழுந்து என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கோன்னு நான் பிச்சை கேட்கணுமா?”
“தேவா ஏன் இப்டி எல்லாம் பேசுற?” விக்னேஷ் தேவாவிடம் பணிவாக கேட்டான்.
“இவங்க சொல்றது அப்டி தானேடா இருக்கு. அதான் அவன் தங்கச்சி சிலுப்பிகிட்டு நிக்கிறால” அப்பொழுதும் கோவத்தை காட்டும் இடம் அவள் முகம் தான் என்பது போல் இருந்தது.
“என்ன ய்யா தேவா இது? இந்த குடும்பம் ஒண்ணா சேர்ந்துடுச்சுனு சந்தோசமா கொஞ்ச நாள் இருந்தோம். மறுபடியும் செதறி போகவாயா இத்தனை நாள் உசுர கைல புடிச்சு வந்தேன்?”
கண்ணீர் மல்க பேரனிடம் பார்வதி கேள்வி கேட்க அவரின் கையை பிடித்து, “இப்ப என்ன ஆச்சுன்னு இந்த கண்ணீர்? யார் சொன்னா இப்போ நாங்க பிரிஞ்சு அப்டியே போறோம்-னு?”
அவர் கண்ணீரை துடைத்தான் கனிவாக, “ரெண்டு பேர் பண்ண தப்பால யாரும் வேணாம்னு நான் சொல்ல மாட்டேன். அப்பா கூட இங்க தானே இருக்கேனு சொன்னாரு?” பார்வதி ஆமாம் என்றார் கண்ணீரோடு.
“அவ்ளோ தான். இஷா நார்மல் ஆகட்டும் நாங்க வர்றோம்” என்றான் தேவா.
“யய்யா உங்களுக்காக ஆசையா சமைச்சு வச்சிருக்கேன் அதையாவது இந்த கெழவிக்காக சாப்பிட்டு கெளம்பலாம்ல?”
பார்வதி கேட்கவும், காயத்திரி, சீதா என அனைவரும் அதையே வற்புறுத்த அரை மனதாய் சரி என்றான்.
உணவை எடுத்துவைத்து காயத்திரி அனைவருக்கும் பரிமாற தேவா முதலில் அமர்ந்தான் வேகமாக கிளம்பும் எண்ணத்தோடு.
அவனுக்கு பிடித்த நண்டு சூப்பை ஊற்றி நாட்டுக்கோழி குழம்பை வைத்து இறால் தொக்கை வைத்த காயத்திரி,
“தேவாக்கு இவ்ளோ கோவம் கூட வருமா?” என்றார் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில்.
தலை திருப்பி பார்த்தவன் அவர் சிரிப்போடு இருப்பது பார்த்து தான் நிம்மதியானான், “பெரிம்மா என் மேல கோவம் இல்லையே” என்றான் சங்கடமாக.
அவன் கன்னம் தடவியவாறு, “இல்லப்பா, ஆனா எங்களுக்கு இந்த விசியம் எல்லாம் இன்னைக்கு தான் தெரியும். ஒரு அண்ணனா நீ பேசியிருக்க தேவா. இஷா சரியானதும் அடுத்து பேசிக்கலாம்.. இப்போ விசயத்தை ஆற போடு” என்றார் அவரும் அமைதியாக.
நிம்மதி பிறக்க இரண்டு வாய் உணவை உண்டவன் பைரவியை தேட அவள் அங்கில்லை. தலையை பின்னால் சாய்த்து வரவேற்பறையில் தேட நிலா பைரவியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
சரி உண்ண வருவாள் என தேவா தன்னுடைய வயிற்றை நிறைக்க முற்பட தனக்கு எதிரில் கண்ணீர் மல்க நிற்கும் சகோதரியை பார்த்து தொண்டைக்குழியில் குத்தியது அந்த பஞ்சு பருக்கை கூட. அதிலிருந்து அவனை விடுவிக்க சரியாக கைபேசி சிணுங்கியது.
வெற்றி தான் அழைத்திருந்தது. குளத்தில் மாட்டியிருந்த சி.சி.டி.வி கேமராவில் இருந்த இரண்டு நாள் பதிவு தொலைந்திருந்தது.
அதை பற்றிய தகவல்களை தேட தான் காலையிலிருந்து முயற்சி செய்துகொண்டிருக்க பயன் என்னவோ பூஜ்யம் தான். பேசிவிட்டு வருவதாக கூறியவன் எழுந்து அர்ஜுனன் அறைக்கு சென்றான்.
“தேவா கிளிப் மிஸ் ஆன மாதிரி தெரியல, கேமரா வயற யாரோ அறுத்துட்ட மாதிரி இருக்குன்றாய்ங்க” என்றான்.
“ஆமாடா.. சரி இங்கன வந்து அத பேசிக்கலாம், போன காரியம் என்னாச்சு?”
“நாசமா போச்சு… எல்லாம் இவா பண்ற வேலை மாப்பிள்ளை. நினைச்சாலே ஆத்திரமா வருது” ஜன்னல் கம்பியில் ஓங்கி தேவா குத்தினான்.
“தங்கச்சி என்னடா பண்ணுச்சு? சரி… கோவப்படாத. வந்து பேசிக்கலாம். வைக்கிறேன்”
இணைப்பை துண்டித்த தேவா திரும்பி பார்க்க அங்கு சிவந்த விழி, வாடிய முகமாய் பைரவி காட்சியளித்தாள்.
“அதான் பிளான்படியே நிறுத்திட்டல இன்னும் என்ன வேணும்னு வந்து நிக்கிற?” என்றான் கடுகாய் பொரிந்து. அவன் கோவமும் நியாயமாய் பட பொறுமையாய் பேச எண்ணினாள் பைரவி.
“எனக்கு போதும்கிற அளவு ஏற்கனவே கெடைச்சிடுச்சு ஆனந்த். நான் சொல்றத ஆனா நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கணும்”
“புரிஞ்ச வரைக்கும் போதும். நீ பண்ண தப்புக்கு விளக்கம் சொல்ல வர்றதா இருந்தா வந்த வழியே கெளம்பிடு”
“நான் பண்ணது தப்பா ஆனந்த்? இந்த விசியம் கல்யாணத்துக்கு அப்றம் தெரிய வந்தா அத கடந்த காலமா நினைச்சு விடுற ஆளா இஷா? தேவையில்லாம பிரச்சனை தான் வரும், சந்தேகம் வரும் அவங்களுக்குள்ள”
“ஓ என் தங்கச்சி அடங்காபிடாரி, அவசரபுத்திக்காரி-னு சொல்ல வர… அதான?”
“அது உங்க எண்ணம் போல, நான் அவளுக்கு அந்த அளவு மெச்சூரிட்டி இல்லனு சொல்ல வந்தேன்”
“தன்னோட தப்ப மறைக்க அடுத்தவங்களை எந்த அளவுக்கு வேணா அவமானப்படுத்த நீ ரெடி ஆகிட்ட. காலைலயே உன் வார்த்தையை எல்லாம் ஒழுங்கா கவனிச்சிருந்தா இன்னைக்கு நாங்க இங்க அசிங்கப்பட தேவையிருந்திருக்காது”
எதார்த்தமாக காலை பைரவி கேள்வி கேட்டதில் கூட உள் அர்த்தம் உள்ளதோ என யோசிக்க துவங்கியது தேவாவின் சிந்தனைகள். அவமானம் ஒரு பக்கம் இருந்தாலும், சந்தோஷ் மேல் சகோதரி வளர்ந்துள்ள நேசம் அவ்வாறானது.
“உனக்கு நீ பண்ணது தப்புன்னே தெரியலையா பைரவி?” கோவமாக அவள் முகம் பார்த்து கேட்டான்.
சிவந்த அவன் விழிகள் பயம் தந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் பெண்ணுக்கு, “தெரியலைங்க. எத்தனை தடவை, எந்த விதத்துல நீங்க கேட்டாலும் நான் பண்ணது தப்புனு நான் சொல்லவே மாட்டேன். உங்க தங்கச்சிக்கு எது நல்லதோ அத மட்டும் தான் நான் செஞ்சேன்” என்றாள் நிமிர்வாக.
“எப்பா, என்ன பெரிய மனசு. உன் அண்ணனுக்காக செஞ்சேன்னு சொல்லுடி. என்ன மயக்க என் தங்கச்சி பேர சொல்லாத” அவள் பேசுவது அவனை மேலும் வெறியேற்றியது.
“என்னது உங்கள மயக்கவா?” புருவங்கள் சுருக்கி அவனை கேள்வியாய் பார்த்தாள்.
“இல்லையா பின்ன? உன் வியாகாணமான பேச்சுல நீ சொல்றதெல்லாம் நம்பி இருந்தவன செருப்புல அடிச்ச மாதிரில புரியவச்சிட” – தேவா
கண்கள் கலங்கி நின்றாள் பைரவி, “பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுறீங்க ஆனந்த். இந்த பிரச்சனை பெருசா மாற வேணாம்னு தான் பேச்சு வந்தப்பயே முடிச்சு வச்சேன். ரெண்டு நாள் இஷா அழுவா, அதுக்கு அப்றம் மறந்துடுவா”
“ஏது உன் அண்ணன் சந்தோசமா இருப்பான், என் தங்கச்சி அழுகணுமா? இல்ல தெரியாம தான் கேக்குறேன் இந்த விசியம் எல்லாம் நம்ம கல்யாணம் முன்னாடியே உனக்கு தெரியும் தானே? அப்போ தடுத்திருக்கலாமே” – தேவா
“இல்லங்க எனக்கு…” – பைரவி
அவளை பேசிவிடவில்லை அவன் வார்த்தைகளை அள்ளி கொட்டினான், “நீ நல்லவளா இருந்தா கண்டிப்பா அப்ப தான்டி தடுத்திருக்கனும். அப்போ தடுத்திருந்தா இந்த இளிச்சவாயன் உனக்கு சிக்கிருக்க மாட்டானே. நல்லா பிளான் போட்டு வளைச்சிட்டீங்க அண்ணனும் தங்கச்சியும்”
“இதுக்கு மேல பேசாதீங்க அப்றம்…” அவன் பேசிய வார்த்தைகள் மனதை சுட்டு கொல்ல மனம் பொறுக்காமல் கோவத்தை காட்டியவள் மீதே மீண்டும் திருப்பினான்,
“மிரட்டு மிரட்டு. உன் இஷ்டத்துக்கெல்லாம் மிரட்டு. உன்னோட பொய்யான கண்ணீரை பாத்தும் என் குற்ற உணர்ச்சிக்காகவும் உன்ன கல்யாணம் பண்ணது எவ்ளோ பெரிய கிறுக்குத்தனம்னு இப்ப தோணுதுடி”
தலையில் அடித்து அவளுக்கு முதுகு காட்டி நின்ற அந்த தேவா அந்நியமாய் போனான். இத்தனை நாள் திகட்ட திகட்ட அன்பை மட்டுமே கொட்டியவன் இன்று விஷத்தை கொட்டுகிறான். மனம் நெருப்பில் சுட்டது போல் வலித்தது பைரவிக்கு.
“குற்ற உணர்ச்சியா ஆனந்த்?” தடுமாறி உடைந்து வந்த அவள் குரலில் இறுக்கமாக கண்களை மூடினான்,
“குற்ற உணர்ச்சில தான் என்ன கல்யாணம் பண்ணிங்களா ஆனந்த்?” கை வரை மடித்துவிட்டிருந்த அவன் சட்டையை பிடித்து தன்னை நோக்கி திரும்பியவள் முயற்சியை தடுக்கும் விதமாக கையை தட்டிவிட்டான் ஆனந்த்.
கண்ணீர் பெருகி வர முகம் காட்டாமல் திரும்பி நிற்பவனை பார்த்து இன்னும் வேதனை அடைந்தது மனம். அவன் அறையை விட்டு வெளியேற சென்ற கால்கள் திரும்பி அவன் முகம் பார்த்தாள் விசும்பலை கட்டுப்படுத்தி.
“நீங்களும் எல்லாரையும் போல பாவப்பட்டு தான் என் கூட இருக்கீங்களா?”
பேச்சில் இறுதியில் வாயை பொத்தி அழுதவள் மெல்லிய அழுகை அவன் காதை அடைய தலையை மட்டும் திரும்பி பார்த்தான். நிற்கவே தெம்பில்லை அந்த மெல்லிய உடலில், கண்ணீரை துடைத்து அவனை ஏறிட்டு,
“ரொம்ப கஷ்டமா இருக்குங்க. ரொம்ப…” என்றவள் குரல் உடைந்தது,
“இப்டி எல்லார் கண்ணுளையும் பரிதாபத்தை பாக்குறதுக்கு அன்னைக்கே நான் செத்துருக்கணும்” முள்ளாய் குத்திய அவள் வார்த்தைகள் அவனை சென்று சேரும் முன்பு அவன் மனைவி அவ்வறையை விட்டு வெளியேறியிருந்தாள்.