வாகனம் மதுரை நோக்கி பயணப்பட தேவா பக்கமே திரும்பவில்லை பைரவி. மதுரையை தாண்டியதும் ஆள் அரவமில்லாத ஒரு காலியிடத்தில் வாகனத்தை நிறுத்தி அவளை திரும்பி அமர்ந்துவிட்டான் தேவா.
ஐந்து நிமிடம் பத்து நிமிடம், அரை மணி நேரம் கடந்திருக்க, அவன் பார்வை தன்னை துளைப்பதையும் தெரிந்து கவனிக்காதது போல் அமர்ந்திருக்க பசி மயக்கம் பார்வையை மந்தமாக்கியது. தண்ணீரை கூட எப்பொழுது இறுதியாக அருந்தினோம் என நினைவில் இல்லை.
பசியே கோவத்தை தூண்டிவிட தலை திருப்பாது, “என்ன எதிர் பார்த்து நிக்கிறிங்க?” என்றாள் கடுகடுத்து.
“உன்னோட பார்வை”
புசுபுசுவென ஆத்திரம் அதிகரித்தது, அவனை திரும்பி முறைத்தவள், “ரொம்ப நடிக்காதிங்க. பார்வையை எதிர்பார்த்து நின்னவர் தான் பத்து நாள் உயிரோட இருக்கேனா செத்துட்டேனான்னு கூட கேக்காம இருந்திங்களாக்கோம்”
“கோவம் பைரவி”
“அப்போ ஒவ்வொரு தடவை கோவம் வரும்போதும் இப்டி தான் நான் என் அப்பா வீட்டுக்கு வந்துடனும், அம்மா வெளக்கமாத்த எடுத்து விரட்டாத குறையா பேசுவாங்க.
பாரம்னு சொல்லுவாங்க, தங்கச்சிக்காக எனக்கு நீங்க வாழ்க்கை கொடுத்ததை பத்தியும் ஒவ்வொரு முறையும் சொல்லி என்ன குத்தி கிழிக்கட்டும்.
இதே மாதிரி ரெண்டு வாரம் ஒரு மாசம்னு உங்களுக்கு கோவம் போனதும் நீங்க வந்து கூட்டிட்டு போய் மறுபடியும் இரக்கப்பட்டு அன்ப காட்டி நடு தெருவுல லூசு மாதிரி அழுக வைங்க”
கண்ணீர் தத்தளித்து நிற்க துவங்கியது. கலக்கம் நிறைந்தவள் விழிகளை பார்த்தவன் அவள் கையை மென்மையாய் பற்றிட அதை தட்டிவிட்டு, “தொடாதிங்க. ஒரு நாள் கூட என் நியாபகம் வரலல உங்களுக்கு? ஆனா எனக்கு உங்கள பத்தி மட்டும் தான் சிந்தனை. காலைல, மதியம், நைட்-னு எப்போ சாப்பாட பாத்தாலும் அன்னைக்கு நீங்க சொன்னது தான் நியாபகம் வருது. பக்கத்துல நாம இருக்கணுமேன்னு மனசு கெடந்து தவிக்கிது”
“எண்ணம் இல்லாம எப்படிடி சக்கரை?”
“அப்டி சொல்லாதீங்க. இந்த சக்கரைல தான் நான் விழுந்ததே” தொடர்ந்து அவள் அழுத அழுகையில் கன்னங்கள், நாசி எல்லாம் சிவந்து போனது. தொண்டை அடைத்து வார்த்தைகள் கூட கனத்தது.
“எனக்கு ஒரு சந்தேகம்” அவனை போலவே வாகாக திரும்பி அமர்ந்துகொண்டாள் கேள்வி கேட்க ஏதுவாக.
ஏதோ வில்லங்கமாக வர போகிறதென உணர்ந்தவன் அமைதி காக்க, “இத்தனை நாள் என் அண்ணன் உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்குவாங்கனு நம்பிக்கைல என்ன நல்லா பாத்துகுட்டிங்க, இப்போ அது இல்லனதும் என்ன விட..” பேசியவள் வார்த்தை அப்டியே சிறைப்பட்டு போனது தேவாவின் இதழ்களுக்குள்.
ஒரே நொடி உரசிய இதழ்களின் ஈரம் இருவரின் மனதிலும் தணலை கிளறியிருக்க மெய் மறந்து அவன் விழி அருகே சுவாசம் செய்யும் அவள் மூச்சு காற்றின் மேலும் கூட காதல் கொண்டான். தேனை உறிஞ்சும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் போதை ஏறியது தேவாவிற்கு.
சிரிப்போடு இரு இன்ச் இடைவெளி விட்டு அவள் முகம் பார்த்தவன் சிவந்து முத்தம் கேட்டு காத்திருக்கும் அவள் கண்ண குழிக்கு சத்தமின்றி முத்தம் பதித்து மௌன யுத்தம் செய்திருந்தான்.
“தேவா உயிரோட இருக்க வர அவன் சக்கரையை விட மாட்டான்-னு இத விட அழுத்தமா கூட என்னால உனக்கு புரிய வைக்க முடியும்” முகம் சர்வசாதாரணமாக இருந்தாலும் விழிகள் குறும்பில் கூத்தாடியது ஆடவனுக்கு.
“உன்ன ரொம்ப பேச விட்டுட்டேன்… மனசுல இருக்க எல்லாத்தையும் கொட்டியாச்சுனா நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ சக்கரை… யாருக்காகவும் உன்ன நெருங்கியும் வரல, யாருக்காகவும் உன்ன விட்டு விலகியும் போக மாட்டேன். விட்டுட்டு போனது தப்பு தான். நான் கூப்ட்டு வர மாட்டேன்னு நீ சொன்னதும் வீம்புல போடி-னு போய்ட்டேன்” என்றான் குற்றத்தை ஒத்துக்கொண்டு.
“எங்க கூப்பிடுங்க? ஒரு தடவ பேருக்கு வர்றியான்னு கேட்டீங்க. அவ்ளோ தான். வரல சனியன் போச்சுன்னு தானே ஓடுனீங்க?”
அவள் இடையோடு கைகள் கோர்த்து இறுக்கமாக பற்றினான், “ஏண்டி இப்டி எல்லாம் பேசுற? அப்டி நினைச்சிருந்தா இன்னைக்கு இங்க வந்து நின்னுருப்பேனா?” என்றான் பாவமாக.
“எதாவது வேலையா வந்துருப்பீங்க, நான் கால் பண்ணவும் என் அம்மா மாதிரியே எங்கையும் ஓடிடுவாளோ மானம் போய்டுமோனு பயந்து ஓடி வந்திங்க”
அதிகம் பேசும் அந்த தாடையினை பற்றி அருகில் தன்னோடு இழுத்தான் சிவந்த விழிகளோடு, “அறைஞ்சிடுவேன் பைரவி வாய மூடிடு”
அவள் முகத்தை சற்று பின்னால் தள்ளிவிட்டவன் தன்னுடைய சட்டை பட்டன் மூன்றை வேகமாக அவிழ்க்க அவனது ஆத்திரத்தில் பேச்சற்று அமர்ந்திருந்தாள் பைரவி.
பாதி அவிழ்த்திருந்த அந்த உடையை நன்றாக திறந்து அவளுக்கு முதுகு காட்டி அமர, அப்பொழுது தான் அவனது இடது முதுகை கவனித்தாள்.
பெரிய கட்டு ஒன்றை போட்டிருந்தான்.
அது வரை வீம்பாக இருந்த பைரவியால் இதற்கும் மேல் சோகத்தையோ கோவத்தையோ கடைபிடிக்க இயலவில்லை. தத்தளித்த மனம் அவன் காயத்தின் அளவை பார்த்து கூப்பாடுபோட்டது, முன்பு கோவத்தில் வழிந்த கண்ணீர் எல்லாம் இப்பொழுது வேதனை மிகுதியில் வெளியேறியது.
பயத்தோடு அவன் முதுகினில் கையை வைக்க போனவள் செயல் உணர்ந்து, “கை எடுடி…” வேகமாக வந்த அவன் வார்த்தைகளை விட அதி விரைவாக சட்டையை அணிந்தவன் அவளை பார்த்து உஷ்ணமாக,
“இதுனால தான் வரல, போதுமா? இன்னைக்கு தான் ஹாஸ்பிடல்ல இருந்து நேரா இங்க வர்றேன். ஒடனே என்ன என்னமோ பேசுறா. இந்த திடீர் பாசம் எல்லாம் இங்க வேணாம் சொல்லிட்டேன்”
“உங்ககிட்ட சண்டை போடுற நிலமைல நான் இல்ல, என்ன இது கட்டு? ஆழமா தெரியுது… எப்படி ஆச்சு? டாக்டர் கிட்ட போனீங்களா இல்ல உளூர்ல இருக்க செடிய எடுத்து வச்சிட்டு டிரீட்மென்ட்-னு சொல்றிங்களா? சரி வாங்க இப்ப டாக்டர் பாத்துட்டு போகலாம்”
படபடத்தவள் அவனை கேள்விகளால் துளைத்து பதில் கொடுக்க நேரமே கொடுக்காமல் பேசியவளை சட்டையே செய்யாமல் வாகனத்தை உயிர்ப்பித்து கிராமத்தை நோக்கி செலுத்தினான்.
“ஆனந்த் ஹாஸ்பிடல்…”
“வாய மூடிட்டு வாடி பல்ல ஒடைச்சிடுவேன், பேசுறதெல்லாம் பேசிட்டு அக்கறை காட்டுறாளாம். ஏன்டி நீ பேசுறது உனக்கே கூசலையா? நீ ஓடிப்போவ-னு ஒரு நாள் யோசிச்சிருப்பேனா? இல்ல அந்த பயத்துல தான் உன்ன நெருங்கிருப்பேனா?” கோவம் கொப்பளிக்க மொழிந்தவன் கைகளில் வாகனம் மின்னல் வேகத்தில் பாய்ந்தது.
பயத்தில் அவனையும் சாலையையும் மாறி மாறி பார்த்த பைரவி, “மெதுவா போங்களேன் ஏதோ தெரியாம கோவத்துல சொல்லிட்டேன்”
“நீ பேசுனா கோவத்துல தெரியாம சொல்லிருப்ப, நான் பல மாசம் பிளான் பண்ணி ஸ்கிரிப்ட் எழுதி வச்சு பேசிருப்பேன். அதான?”
அவனது வேகத்தை கட்டுப்படுத்த தெரியாமல் தவித்தவள் பிடிமானத்தையும் துறந்து அவனை நெருங்கி வர, இருவருக்கும் இடையில் இருந்த அந்த கியர் வைக்கும் இடைவெளி கூட பெண்ணுக்கு பயம் தந்தது. அதை தாண்டி அவன் கைகளை பற்றி தலையை அதில் சாய்ந்துகொண்டாள்.
“ஏ நகருடி. மனுஷன் என்ன நிலமைல இருக்கானு யோசிக்காம கண்ட வார்த்தையை விடுவா. பைத்தியம், லூசு, அறிவில்லாதவ. நல்லா வீங்குற அளவு வாய அடிச்சு ஒடைக்கணும் அதுக்கு அப்றமாவது தோணுனத எல்லாம் பேசாம யோசிச்சு பேசுவா” சகட்டுமேனிக்கு மனைவியை திட்டிக்கொண்டே வந்தவன் எந்த நிலையிலும் அவளை தன்னை விட்டு விலகி மட்டும் நிறுத்தவில்லை.
“தெரியாம பேசிட்டேனு சொல்லிட்டேன்ல? ஆனாலும் உங்க அம்மா பேசுனப்பையும் நீங்க எதுவும் கேக்கல, என் அம்மா என்ன அத்தனை பேர் முன்னால அடிச்சபையும் அவங்கள தடுக்கவும் நீங்க வரல”
“உனக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை” வார்த்தைகளுக்கு மாறாக பைரவியை மெல்ல மெல்ல தன் நெஞ்சோடு வைத்துக்கொண்டான்.
ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தில் தன்னுடைய உயிருக்கு ஒரு நொடியில் ஆபத்து விளைந்திடுமோ என்ற பயத்தை விட மனைவியோடு இனிமையான வாழ்க்கையை வாழாமலே போயிருந்தால் என்ற எண்ணமே கசந்தது.
அன்று காளைகளை குளத்திற்கு அழைத்து சென்றவன் அவற்றுக்கு நீச்சல் பயிற்சி முடித்து வயக்காட்டில் பயிற்சி கொடுக்க காத்திருந்த பொழுது எங்கிருந்து தான் வந்ததோ சீறி பாய்ந்த அய்யனாரின் காளை.
நொடியில் தேவாவை நெருங்கியிருக்க அதன் பின்னோடு வேகமாக ஓடி வந்த அய்யனாரின் ஆட்களின் உரத்த குரலில் திரும்பிய பொழுது இடது முதுகோரம் அதன் கூரிய கொம்பு உரசி, அதுவே ஆழமான காயத்தை கொடுத்தது.
இதுவே சுதாரிக்காமல் போயிருந்தால் இந்நேரம் அவன் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும்.
அந்த காளையோ அதோடு நிறுத்தாமல் மேலும் தேவாவை நெருங்கி வர பார்க்க அவனுக்கு அரனாய் அய்யனாரின் காளையை பக்கவாட்டிலிருந்து முட்டி தள்ளி நிறுத்தினான் காளையன்.
தன்னை தடுத்த காளையனை வெறி கொண்டு தாக்க வந்த அய்யனாரின் காளையை அசராமல் திமில் திமிர வேல்விழிகள் கூர் ஈட்டியாய் மாற்றி சண்டைக்கு நிற்க அவ்விடத்தில் இரண்டு காளைகளுக்கு நடுவில் சில நிமிடம் அங்கு சிறு யுத்தமே நிகழ்ந்தது.
“காளையா நிறுத்து” தேவா சத்தமிட்டு அழைத்தும் பயன் இல்லை, அய்யனாரின் ஆட்கள் அவர்கள் காளையை பிடிக்க முயன்றும் இரண்டு காளைகளின் சண்டை தீவிரமடைந்ததே தவிர குறைந்தபாடில்லை.
“யண்ணே தண்ணி எடுத்தார சொல்லு… டேய் கயித்த இங்கன குடு” தன்னுடைய காளையனை பிடிக்க தேவா முயற்சிக்க அய்யனாரின் ஆட்கள் துரிதமாக தண்ணீரை பிடித்து வர அவற்றின் மேல் தண்ணீர் பாய்ந்ததும் தான் கொம்பினை வளைத்து நெற்றி முட்டி சண்டையிடுவதை நிறுத்தினர்.
“ஏடெய் என்ன சண்டை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது, கரைச்சல் குடுத்தீங்கன்னு வையி, காட்டுல தடையாமே தெரியாம பொதைச்சிடுவேன்” எகிறிக்கொண்டு செல்லும் வெற்றியை தடுத்தார் இல்லை.
“எப்பா டேய், என்னமோ நாங்க மாட்ட வேணும்காட்டி அவுத்து வுட்ட மாதிரி பேசுறாய்ங்க, எங்க கை மீறி ஏதோ கோவத்துல வந்துடுச்சு. தேவா, பஞ்சாயத்து ஆயிரம் இருந்தாலும் உசுர பொலி போடுற கணக்கா நாங்க இல்ல. மன்னிச்சுக்கோ ய்யா” என்றார் மாட்டை பயிற்றுவிக்கும் ஒருவர்.
காளையனையும் அய்யனாரின் மாட்டையும் பார்த்துக்கொண்டிருந்த தேவாவின் சட்டையை அவிழ்த்து பார்க்க ரத்தம் இன்னும் நிற்கவுமில்லை காயமும் ஆழமாக பட்டிருந்தது.
பாசத்தை மட்டுமே காட்டியவன் உயிரை காவல் தெய்வம் போல் காத்து கொடுத்த அந்த காளையனை நினைக்க நினைக்க தேவாவிற்கு நெஞ்சு இறுமாப்பில் விம்மியது.
“பாருயா இன்னும் கொஞ்சம் தள்ளி குத்திருந்தா உசுருக்கே ஆபத்து தான், குரல் கொலைஞ்சு ரெண்டு வார்த்தை பேசுனா நாங்க நம்பிடுவோமா? அத்தனை பேர் இருக்கப்போ நேரா இவன பாத்து என்னாத்துக்கு மாடு வரணும்? இத நாங்க எப்படி பாக்கணுமோ அப்டி பாத்துக்குறோம்… நீ வா பங்கு வண்டில ஏறு” என குணா கோவமாக பேசி தேவாவை அவ்விடத்தை விட்டு அகற்றினர்.