மார்கழி மாத குளிர்காற்று உடலை உறையவைத்து சில்லிட்டாலும், உறக்கம் வராமல் அமைதியாக அமர்ந்திருக்கும் காளையனை விழி அகலாமல் பார்த்தான் தேவா. இன்னும் மூன்று மணி நேரத்தில் மாட்டை வாடிவாசலுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
அது வரை உறக்கம் வந்தாலும் வராதது போல் வாடை காற்றை நுகர்ந்துகொண்டே மாட்டுக்கு காவலாய் நிற்க வேண்டும். அலங்காநல்லூரில் தெரிந்த ஒருவரின் வீட்டில் தான் இருந்தான் தேவா மற்றும் அவன் நண்பர்கள்.
ஆனாலும் பாதுகாவலன் ஒருவன் நிச்சயம் காளையனுக்கு தேவை. காரணம் சில மாதங்கள் முன்பு புலி வேந்தனுக்கு ஏற்பட்ட நிலை தன்னுடைய காளையனுக்கும் ஏற்பட்டு விட கூடாதென அச்சம்.
வலியை திறந்து சொல்ல முடியாமல் அன்று புலி வேந்தன் அதற்றிய முறையும், ம்மா ம்மா என அவ்விடமே ஓசையின்றி காற்றாடிய நேரமும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சை உலுக்கும்.
“என்னய்யா நீ தூங்கலையா?” சற்று தள்ளியிருந்த நார் கட்டிலில் படுத்திருந்த அவன் ஊர்க்காரன் ஒருவன் தலையை மட்டும் உயர்த்தி கேட்டான்.
“இல்லடா நீ படு விடியால எழுப்பிவிடுறேன்” எனவும்,
“மணி என்ன?” கேட்டான் அவன்.
கைபேசியை எடுத்து பார்த்த தேவா இரண்டரை என்கவும் மீண்டும் அவன் உறக்கத்திற்கு செல்ல நேரத்தை பார்க்க கைபேசியை எடுத்த தேவா அதில் இருந்த மனைவியை பார்த்து சிரிப்போடு ரசிக்க துவங்கினான்.
அன்று காளையனை இறுக்கமாக கட்டியிருந்த பைரவின் படம். அவளோடு காளையனும் அழகாக தெரிய தொடு திரையின் லாக் ஸ்கிரீனாக வைத்துவிட்டான்.
பெற்றோர் அன்று கிளம்பும் முன்பே தேவா காளையை அழைத்து அலங்காநல்லூர் செல்ல வேண்டிய கட்டாயம். ஆதலால் கையேடு அதற்கு ஆரத்தி எடுத்து சிறு பூஜை போல் செய்ய ஏற்பாடுகள் துவங்கியது.
அன்னைக்கு இதெல்லாம் பிடிக்காதென அவரை அதிகம் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அவரோ அவன் அழைப்பதற்கு முன்பே விடயம் கேள்விப்பட்டு பூஜை நடக்கும் முன்பே வந்துவிட்டார்.
அதிசயித்து போனவன் எப்பொழுதும் போல ஆச்சியின் கையில் சூட தட்டை கொடுக்க, “உன் அம்மை முதல் தடவ வந்துருக்கா அவ கைல குடுயா” என்றார் கடற்கரைதாயம்மாள்.
அன்னையிடம் சிறிய சிரிப்போடு நீட்ட, “பைரவிகிட்ட குடு” என்றார் அவர்.
தேவா மகிழ்ச்சியில் அன்னையை பார்க்க கண் சிமிட்டி ஆதரவு தந்தார் அன்னை. ராஜரத்தினம் தான் அதிசயத்தை பார்த்து போல் மனைவியை பார்த்தார் என்ன நடக்கின்றதென தெரியாமல்.
“பைரவி…” அவளை அழைத்து கையில் கொடுக்க பெரியவர்கள் இருக்கும் பொழுது தான் எப்படி என தயங்கினாள் அவள்.
“வாங்கு ம்மா” என்றார் இளங்கோவனும்.
அதற்கு மேல் மறுக்க முடியாமல் வாங்கியவள் இறைவனை வேண்டி காளையனுக்கு சூடம் ஏற்றி நெற்றியில் பொட்டு வைக்க செல்ல காளையனை இறுக்கமாக பிடிக்க பார்த்த ஆட்களை வேண்டாம் என தலை அசைத்தான் தேவா.
புரியாமல் அவனை மற்றவர் பார்க்க அவளோ தயக்கமே இல்லாமல் அதன் அருகில் சென்று நெற்றியில் திலகமிட்டு அதன் முகத்தையும் அவள் ஆதூரமாக வருட வியந்து போயினர் அனைவரும்.
தேவா இதழ்களிலோ உடல் குலுங்கும் மெல்லிய சிரிப்பு.
பிறகு தேவா காளையனுக்கு மாலை அணிவிக்க காளையை வாகனத்தில் ஏற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. புலி வேந்தனை சென்று பார்த்து வந்தவன் தாத்தாவிடம் கூறி அதை அவர் வீட்டில் ஒரு வாரம் வைத்திருக்க கூறி மனைவியிடம், “தாத்தா வீட்டுல இரு பைரவி, ஆச்சிகிட்ட சொல்லிட்டேன்” என்றான்.
அவள் சரி என்க நாயகி தடுத்தார், “வீட்டுக்கு வரட்டும் தேவா. பைரவி வேலைக்கு போயே ரொம்ப நாள் அச்சுல?” என்றார்.
குடும்பமே குழம்பியது நாயகியின் அந்த நடவடிக்கையில், “ம்மா ஓவர் நைட்ல இவ்ளோ நல்லவங்களாக கூடாது ம்மா” என்றாள் இஷா குழப்பமாக.
“சும்மா இருடி. தேவா பைரவிய நாங்க கூட்டிட்டு போறோம். நீ நிம்மதியா போய்ட்டு வா” என தைரியமூட்டி அனுப்பி வைக்க அவனும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி மனைவிக்கு சிறு தலை அசைபோடு சென்றான்.
ஒரே நாளில் எல்லாம் சரியானது போல் இருந்தது. நேற்று பொங்கல் சீர் கொடுக்க வந்த கண்ணன் சீதாவிடம் அன்னை பாசமாக நடந்தது கேள்விப்பட்டு மேலும் நிம்மதியடைந்தான்.
வீட்டில் இருந்த பிரச்சனைகள் முடிந்திட வந்த வேலையை நிம்மதியாக கவனிக்க முடிந்தது. அன்று விடிந்ததும் முதலில் அவனுக்கு அழைத்தது அவன் மனைவி தான். காளையனை பற்றி கேட்டு தேவாவிடம் சுருக்கமாக பேசி மறக்காமல் காலை உணவை அருந்த கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.
காலை எழுந்தவுடன் காளையை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு செல்ல முதலில் மாட்டின் உயரம், பற்களின் உயரம், வயது, தேவாவின் விபரங்கள் என பரிசோதிக்கப்பட்டு பிறகு மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
அதில் மாட்டின் கொம்பு, மாட்டிற்கு நோய்கள் எதுவும் உள்ளதா என சோதித்து, மருந்து எதுவும் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்ந்து பிறகே வாடிவாசலுக்கு அனுப்பியிருந்தனர். மாட்டின் எண் நூற்றி அறுபத்தி இரண்டாக பதிவிடப்பட்டிருந்தது.
அய்யனாரின் ஆட்கள் காளையை இவர்களுக்கு இருவது மாடுகள் பிறகு வந்து நிறுத்தியிருக்க ஒருவன் வந்து காளையனை சுற்றி பார்த்தான் இகழ்ச்சியாக சிரிப்போடு, “மாடு ஒடம்புல இருக்குற வீரம் மனசுல இருக்காது போலயே” எனவும் தேவா சத்தமாக சிரித்து காளையன் அருகே சென்றவன்,
“தனியா இருக்கவனா? அன்னைக்கு நடு ராத்திரி உங்க அத்தனை பேர் முன்னாடி மயிலைப்பண்ணை அடிச்சப்போ என்ன நொட்டிகிட்டு இருந்தீங்களாம்?” கோவம் கொப்பளிக்க துவங்கியது தேவாவுக்கு.
உடனே ஒருவன் தேவாவின் சட்டையை பிடிக்க தேவாவும் பதிலுக்கு பிடிக்க அந்த இடமே ஒரே நொடியில் சண்டை மயமானது. அங்கிருந்தவர்களுக்கு சில காவல் துறை அதிகாரிகளும் வந்து சண்டையை தடுத்து நிறுத்தினர்.
அப்பொழுதும் வாய் தகராறு ஓயாமல் இருந்தது, “உன் மாடு இன்னைக்கு மண்ண கவ்விட்டு வரும் அதுக்கு அப்றம் இருக்குடி உனக்கு ஊர்ல” என்றான் ஒருவன் ஏளனமாக.
தேவா வந்த ஆத்திரத்தில் அவன் சட்டையை பற்றி அவன் காதில் கேட்குமாறு, “மருந்தை குடுத்து மாட்ட கூட்டிட்டு வந்த தைரியமா?” எனவும் அவன் முகமோ வெளிறியது.
அந்த முகமாற்றத்தில் சந்தேகம் உறுதியாக வெற்றி புன்னகை தேவாவின் இதழ்களில், “கவலைப்படாத இத நான் வெளிய சொல்ல மாட்டேன்” அவன் சட்டையை உதறி தள்ளிவிட்டான்.
ஆத்திரமாக சூளுரைத்த நண்பன் சட்டையை பிடித்து இழுத்த வெற்றி, “யோவ் வேணாம் யா” உண்மை தெரிந்து தடுத்தான்.
தேவா அவன் வார்த்தையை சிறிதும் செவிசாய்க்கவில்லை, “சொன்னதை செய்வேன், அப்டி செஞ்சா இனிமேல் இந்த மாடு என்னோடது.. அதுக்கு ஒத்துப்பீங்களா?” அவர்களுக்கோ மாட்டின் மீது அவ்வளவு நம்பிக்கை.
உள்ளிருந்த ஆள் ஒருவனை பிடித்து மாட்டின் மருத்துவ பரிசோதனையில் தாங்கள் செய்த தவறை மறைக்க இரண்டு லட்சத்தை செலவிட்டு இருக்க அதன் மேல் அதீத நம்பிக்கை. துணிச்சலோடு நின்றனர்.
ஆனால் மாட்டை பற்றிய உரிமை அவர்களுக்கு இல்லையே அய்யனாரிடம் தான் கேட்க வேண்டும் என்ற தயக்கம். அதை சூடு கிளப்பிவிட என்றே, “யோசனை பலமா இருக்கே, பயமோ?”
“மாட்டை நம்பி நூறு பந்தயம் கூட வைக்க நான் ரெடி, கைய கிழிச்சது மறந்து போச்சாடா?” என்ற கேள்வியோடு அங்கு வந்து நின்றார் அய்யனார் தானே. தேவா பதில் பேசவில்லை.
“நீ என் மாட்ட புடிச்சா என் மாடு உனக்கு, அதே என் மாட்ட புடிக்கலைனா உன் மாடு எனக்கு” அய்யனாரின் ஒப்பந்தத்தில் திருப்த்தி அடையாத தேவாவின் ஆட்கள் குரலை உயர்த்த தேவா நிறுத்தினான் அவர்களை.
“ஒத்துக்குறேன்” எனவும் அய்யனார் மீசையை முறுக்கி புன்னகையோடு செல்ல அவரை பின் தொடர்ந்தனர் அவரின் ஆட்கள் அனைவரும்.
குணா, “கேனை மாதிரி பேசுற? போதை குடுத்து மாட்ட வாடிவாசல்ல இறக்குறதே தப்பு, இதுல நீ அத புடிக்கிறேன்னு சொல்ற? குடலை குத்தி கிழிச்சிடும்டா அறிவில்லாதவனே”
“யோவ், இங்கன ஒன்னும் பூனைய புடிச்சு வெளையாடல, ஜல்லிக்கட்டு மாடு புலிக்கும் சிங்கத்துக்கும் சமம். களத்துல இறங்குனா உசுரே நாமளோடது இல்ல, இதுல மாட்ட வேற குடுக்குறேனு சொல்லிட்டு நிக்கிற… இதுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு அத வளத்த?” மற்றொவர் கேட்க எந்த பதிலும் இல்லாமல் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்தவன் கைபேசி சிணுங்கியது.
எடுத்து பார்த்தான், பைரவி தான்.
அழைப்பை ஏற்று காதில் வைத்தான், “குணா அண்ணா சொன்னாங்க” எனவும் கோவம் வந்தது அவனுக்கு.
“ம்ம்ம்” என்றான் மேலும் பேச விருப்பமில்லாமல், இவளும் என்னை நம்பவில்லையா என்ற வருத்தம் அது.
“இனிமேல் மூணு ஜல்லிக்கட்டு மாடா நமக்கு?” மனைவி குரலில் தெரிந்த சந்தோசம், குதூகலம் தேவாவை புன்னகைக்க வைத்தது.
“சக்கரை…” ஆசையாக அழைத்தவன் இதழ்கள் புன்னகைக்க தலை வெட்க சிரிப்பில் கவிழ்ந்தது.
நெற்றியை தேய்த்தவன் பெரும் நிம்மதியோடு, “மாடுகளை நான் கூட்டிட்டு வரப்போ நீ தான்டி அவனுகளுக்கு ஆரத்தி எடுக்கணும்” முழு மனதோடு கூறினான்.
“வெயிட் பண்றேன்” என்றாள் மனதார.
அதன் பிறகு தேவா எப்பொழுதும் சிரித்த முகத்தோடு தான் இருந்தான். ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு காளையனை வாடிவாசல் அழைத்து செல்ல கூற கூட்டத்தை பார்த்து இப்பொழுதே திமிர ஆரம்பித்தான் அவன்.
அவன் உடலை வருடிக்கொண்டே, “ஒன்னுமில்லடா” என ஆசுவாசப்படுத்தியே வாசல் வரை அழைத்து சென்றான்.
“எப்பா மாட்ட அவுத்து வுடு, மாட்டுக்காரன் எங்க?” ஒலிபெருக்கியில் குரல் ஒன்று வர, தேவா வாசலை தாண்டி வந்து கயிற்றை பிடித்து நின்றான்.
“அயன்தென்கரை தேவானந்த் மாடு, காளையன் ப்பா… மாட்ட புடிச்சுக்க… மாட்ட புடிச்சுக்க, சோழவந்தான் சிறந்த மாடு, ரெண்டு வருசமா இந்த மாடு யாருக்கும் பிடிபட்டதில்ல, ஒரு ஆள் பிடி” காலையனின் பெயரை கேட்டதும் மாட்டினை பற்றி தெரிந்த பலர் பரணி மேல் ஏறி நின்றுவிட்டனர்.
ஒரு சிலரே தரையில் நின்று காத்திருக்க மாடோ இன்னும் வாடிவாசலை தாண்டவில்லை.
“சோழவந்தான் பிரசிடெண்ட் வழங்கும் இரண்டாயிரம் ரூபாய், எஸ்.எம்.வி வழங்கும் ஒரு சைக்கிள், ராஜ்மஹல் வழங்கும் ஒரு பட்டுப்புடவை, மதுரை எம்.எல்.எ வழங்கும் ஒரு தங்க காசு, சுந்தரம் பாத்திரக்கடை வழங்கும் ஒரு குடம்” பரிசு பொருட்கள் அடுக்கிக்கொண்டே போக மாடு பிடி வீரர்களுக்கு ஏக சந்தோசம்.
“எப்பா மாட்ட விடு ப்பா…”
“ஜெய்ச்சிட்டு வாடா காளையா” முதுகில் தடவிக்கொடுத்து கயிற்றை விட்டு அதன் முகுதில் தேவா ஒரு அடி போட கம்பீரமாக மெதுவான நடையோடு தன்னை சுற்றியும் பார்வையை அளந்து வந்த காளையனின் வீரத்தில் திண்டாடி போனது கூட்டம்.
“எப்பா பரணில இருந்து கீழ இறங்கி மாட்ட புடிங்க”
“பரிசு பொருளை ஏத்துறாங்க, ஒன்றிய செயலாளர் ஐயாயிரம், டாக்டர் விக்டர் மூவாயிரம்” காளையனை முதலில் நெருங்கிய ஒருவன் அதன் திமிர தொட திமிர திமிலை ஒரே அசைவில் உதறி தள்ளி அவனை சாய்த்து அவனை முட்ட போக அந்த இளைஞனோ கீழே படுத்துகொண்டான்.
“எப்பா சூப்பர் மாடு ப்பா, டேய் வால புடிக்காத, எப்பா வால புடிக்காத சொன்னேன், கொம்ப புடி” என்றது ஒலிபெருகியிலிருந்து வந்த குரல்.
அதோடு நில்லாமல் மேலும் இருவர் காளையினை பிடிக்க வர சுற்றி சுற்றி மின்னல் வேகத்தில் அருகில் இருந்தவர் அனைவரையும் தூரம் தள்ளி பின்னால் வந்து நின்ற இருவரையும் பின்னிரு கால்கள் இரண்டையும் வைத்து மிதித்தெரிந்தது.
“நெருப்பாக மாடு ப்பா, ஆத்தாடி ஆத்தே தீயா ஆடுது ப்பா…” கொம்பை கொண்டு மண்ணை வெட்டி வீச அதனை நெருங்க ஒருவரும் முன்வரவில்லை.
அனைவரும் பரணி மேல் ஏறி நின்றிட இரண்டு வா என்ற சவாலோடு அசையாமல் சுற்றி இருந்த மாடு பிடி வீரர்களுக்கு அது சவால் விட்ட விதம் தேவாவை பெருமைப்படுத்தியது.
“எப்பா பசங்களா கீழ இறங்கி வாங்க, இந்த மாட்டுக்கு சிறப்பு பரிசு ஆயிரம் கூட்டிருக்காங்க, மாட்ட பிடிக்கிறவனுக்கு இன்னைக்கு பண மழை தான்” அவரோ உற்சாக படுத்த முயற்சிக்க எவருக்கும் காளையனை நெருங்கும் தைரியம் இல்லை.
“வாங்க ப்பா, புடிங்க மாட்ட… ஆஹா சூப்பர் சூப்பர், மாடு சூறாவளி டேய். ஒருத்தனையும் நெருங்க கூட விடல”
சிங்கம் போல் கம்பீரமாக நடந்தவன் சவாலில் வென்றது போல் தலையை குனிந்து கொம்பை காட்டி அழைக்க இறங்கினார் யாரும் இல்லை,
“தொட்டு பாரு, தொட்டு பாரு… தகிரியம் இருந்தா நெருங்கி பாருன்னு சவால் விட்டு நிக்கிது ப்பா மாடு. அருமையான மாடு… அழகுடா… அழகு. ஆம்பள சிங்கம் கொம்பு வச்ச சிங்கத்தை புடிச்சு பாருடா… நெருக்கி வந்து பிடி”
“அடேயப்பா… மறுபடியும் பரிசு பொருள் கூடுது இந்த மாட்டுக்கு… அட்வகேட் சிங்கமுத்து வழங்கும் இரண்டாயிரம் ரூபாய், வி.எல் பாத்திரக்கடை வழங்கும் ஒரு அண்டா”
தைரியம் பெற்ற சிலர் இறங்கி வந்து மாட்டை நெருங்க ஒருவரை கொம்பினால் வளைத்து மண்ணில் சாய்த்து அவனை ஒரு மிதி மித்து சுற்றி இருந்தவருக்கு எல்லாம் எச்சரிக்கை கொடுத்தது.
“மொத்த வீரர்களுக்கும் ஆட்டம் காம்பித்த மாட்டை வெற்றி பெற்றதாக அறிவிக்கிறோம். அயன்தென்கரை தேவா மாடுனா சும்மாவா… மாடு வெற்றி பெற்றது, எப்பா மாட்ட புடிச்சு நகத்திவிடுங்க ப்பா, காளையா வழி விடு ப்பா அடுத்த மாடு வரட்டும்”
ராஜாவை போல் நிமிர்ந்து வந்த காளையனை இறுக்கமாக கட்டி, “சிங்கம்டா நீ… உன் வேலை முடிஞ்சது இனி என் வேலை பாக்கி இருக்கு”
நண்பனை பரிசை பெற்றுக்கொள்ள கூறிவிட்டு உடையை மாற்றி அய்யனாரின் காளைக்காக காத்திருந்தான்.
சரியாக காளையும் வந்த நேரம் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைவரும் திணறி போயினர், “மாடு சிறுத்த மாதிரி என்னா வேகம்… ஆம்பளைங்க வந்து புடிங்க ப்பா”, கூட்டத்தினுள்ளே நுழைந்த தேவா சரியாக அதன் திமிலை பிடிக்க இரண்டு சுற்று மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது.
தேவாவை உதறி தள்ளி அவனை முட்ட பார்க்க, அவனோ அதன் கொம்பினை பிடித்தே நொடியில் எழுந்து அதன் திமிலோடு பிடித்துக்கொண்டான்.
மருந்தின் வீரியத்தில் அதன் வேகமோ அசுரத்தனமாக இருந்தது “அப்டி தான் ப்பா, பிடி பிடி விட்றாத” கைகளில் இருந்த காயம் வலிக்க துவங்க, விடவில்லை அவன்.
காளை பல முறை அவனோடு சேர்ந்து சுற்றி சுற்றி தள்ளிவிட பார்க்க தேவாவின் பிடியின் முன்னாள் அந்த காளை தோற்று தன்னுடைய வேகத்தை குறைத்து சமாதானமடைந்தது.
“மாடி பிடிபட்டது… வீரருக்கு வெள்ளி காசு பரிசு வந்து வாங்கிக்கோ ப்பா”
தேவாவே மாட்டை வெளியே அழைத்து செல்ல அவனை தீயாக முறைத்த அய்யனார் முன்பு மீசையை முறுக்கி பளிச்சென வெற்றி களிப்பில் தேவா சிரிக்க, அய்யனாரோ வெறியில் வாகனத்தினுள் ஏறி பறந்துவிட்டார்.