தேவா வீட்டிற்கு வந்த கையேடு மனைவியை அழைத்து மதுரையில் பெற்றோரையும் சகோதரியையும் அழைத்து விருதுநகர் புறப்பட்டுவிட்டான். தல பொங்கல் என இரண்டு ஜோடிகளுக்கும் விருந்து உபசாரங்கள் ஏகபோகமாக இருந்தது.
ஒரு வார களைப்பு கூட மறைந்து தேவா வீட்டினரோடு ஒன்றிட பல மாதங்கள் அவர்களை விட்டு தள்ளியிருந்த பைரவியும் கூட அவர்களோடு சேர்ந்திட, புது இணைப்பாக பைரவியோடு இஷா ஒன்றியது தான் அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியது.
பயத்தோடு பைரவி தன்னுடைய அத்தையை பார்க்க மெல்ல தலையை அசைத்து மகளுக்கு எதுவும் தெரியாதென கூறினார். அந்த ஒரு அசைவு நிம்மதியை தந்தது.
இஷா சகோதரனுக்காக மாறியிருந்தாள். என அவளது செய்கையே சொல்லிக்காட்டியது பைரவிக்கு. பொங்கல் திருநாள் கரும்பாய் இனிக்க அடுத்த நாள் காலை நான்கு மணிக்கே வீட்டினர் அனைவரையும் அடித்து எழுப்பி அயன்தென்கரை நோக்கி இழுத்து சென்றுவிட்டான்.
பொங்கல் அன்றே மனம் மொத்தமும் வயல், தோட்டம் என சுற்றி திரிய மாட்டுப்பொங்கல் அன்று தன்னுடைய காளைகளை சுத்தமாக பிரிந்து இருக்க முடியவில்லை தேவாவால்.
வந்த கையேடு காளைகளை குளிக்க வைத்து பொங்கல் வைத்து தெய்வமாய் வணங்கி மண் பானையில் வைத்த பொங்கலை உண்ட பிறகே உயிர் வந்தது போல் இருந்தது.
“இப்ப சந்தோசமாடா?” தந்தை ராஜரத்தினம் கேட்க வாழை இலையில் வைத்த பொங்கலை அவர் கையிலும் கொடுத்தான்.
“நான் எப்ப ப்பா பீல் பண்ணிருக்கேன்…?” சிரிப்போடு மகன் கேட்பதும் கூட சரியாக தான் இருந்தது. அவன் வருந்தி அவர் ஒரு நாளும் பார்த்தது இல்லை. எந்நேரமும் தன்னோடு சண்டையிட்டாலும் அதை கூட அடுத்த சில நொடிகளில் மறந்து விடுவான்.
இப்பொழுது மகனையும் அவனை சுற்றியுள்ள சூழலையும் பார்த்தவர் தான் தான் ஏதேதோ கற்பனை செய்து அவன் மனதை புரிந்துகொள்ளாமல் போனோமோ என்ற வருத்தம். மகனிடம் மனம் விட்டு பேசி மன்னிப்பு கேட்கவும் கூட தயக்கம். அமைதியாக சென்றுவிட்டார்.
அன்று தனிமை பரிசளித்த உறவுகள் இன்று உரிமையாய் உரிமை கொண்டாடுகின்றன. அன்று உணவு கடற்கரைதாயம்மாள் கை வண்ணத்தில் மணக்க மணக்க நாட்டுக்கோழி குழம்பு, தக்காளி ரசம் என பரவசப்பட அன்றைய நாள் குதூகலமாக ஓடியது.
இரவு அனைவரும் இளங்கோவன் வீட்டிற்கு சென்று உறங்கலாம் என முடிவெடுக்க தேவா எவரையும் தடுக்கவில்லை. பைரவி தான் கணவனை பார்த்துக்கொண்டே தயங்கி நின்றாள்.
அவளை பார்த்தவன் போ எண்ணுமாய் சைகை செய்ய தயக்கத்தோடு நிற்க, பார்வதி, “என்ன ம்மா?” என்றார்.
“அவன் மாமன் கூட சண்டை போட்டுட்டான் மதினி, வீட்டுக்குள்ள படுக்க வர மாட்டான். அதான் அவளும் வர தயங்குறா” என்றார் கடற்கரைதாயம்மாள்.
பேத்தி கண்களில் தெரிந்த தவிப்பு அந்த பிரச்சனையை பற்றி மேலும் கேள்வி கேட்க விடவில்லை.
“விடும்மா ஒரு நாள் தானே, வா உனக்கு இன்னைக்கு வேலை அதிகம். செத்த குறுக்க சாயி” பேதிக்கு சமாதான வார்த்தைகள் கொடுத்த பார்வதி தங்களுக்கென கொடுத்திருந்த அறைக்கு சென்றுவிட்டார்.
கயிற்று கட்டிலை விரித்துவிட்டு காற்றாடியை எடுக்க வந்த தேவா அங்கேயே நின்ற மனைவியை பார்க்க சிரிப்போடு அவளிடம் வந்தான்.
“சக்கரை, சூடு தண்ணி கொஞ்சம் கொண்டு வர்றியா?” தலையை ஆட்டி உடனே எடுத்து வருவதாக சென்றவள் தண்ணீரை கொண்டு வர தண்ணீர் டம்ளரோடு அவள் கையை பற்றினான்.
“நாம நம்ம வீட்டுக்கு போகலாமா?” ஏக்கம் சுமந்த விழிகள் உன்னிப்பாய் காதலை மட்டுமே தாங்கி நின்றது.
சுற்றம் பார்த்து அலறிய ஹார்மோன்களை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவள் கையிலிருந்த பிடியை தளர்த்தவே இல்லை.
இருவருக்கும் இடையிலிருந்த இடைவெளியை குறைத்து அவள் கன்னம் பற்றியவன் ஆசையோடு குனிய, நடு கூடத்தில் நிற்கிறோம் என்பதையும் மறந்து பெண்ணும் கண்களை மூடினாள்.
வற்றாத சிரிப்பு மலர அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து நெற்றியிலும் நேச முத்தம் வைத்தான். உடலில் நடுக்கம் பெற கைகள் தானாலே அவன் கையை பிடித்தது பற்றுக்கோளாக.
உடல் தளர்ந்து ஆசையில் கிறங்கி நிற்பவள் நெற்றி முட்டி அவளது எண்ண சந்தங்களை படித்து இதமாய் பிரிந்தான். பைரவிக்கு தாளமுடியாத திருப்த்தி.
அவன் கைவளைவினுள் கட்டுண்டு, அவன் மூச்சினை சுவாசித்து அவனோடு ஒன்று நிற்கும் தருணமே பரிசுத்தமாய் ஒளிரியது.
விலகி நின்று, “போய்ட்டு வா சக்கரை” அனுப்பி வைத்தான்.
இன்பமான மனநிலை இதை விட வேறென்ன இருக்க போகிறது, தான் நேசிக்கும் தன் மனைவிக்கு கசப்பான காய சுவடுகள் பல இதயத்தினுள்ளே இருந்தாலும் அவள் மனதினுள் தான் பிரதான இடத்தை பிடித்திருக்க ஆனந்த கூத்தாடினான்.
ஒரு வித மோன நிலையில் கட்டிலில் படுத்திருக்க சில நிமிடங்களில் அவனை சுற்றி வீட்டின் இளைய பட்டாளமே சூழ்ந்திருந்தது. எல்லாம் பார்வதியின் செயல் தான்.
பேத்தியின் தவிப்பும், பேரனின் வீம்பும் அறிந்து தேவாவிற்கு பேச்சு துணைக்காக வீட்டு ஆண்களை அனுப்பி வைத்திருந்தார்.
“ஆமாடா நீ தனியா படுக்குறத பாத்தோம் அதான் வந்துட்டோம்?” என்றான் சந்தோஷ்.
“டேய் டேய் இங்க என்ன பேய் இருக்கா இல்ல பிசாசு இருக்கா? இப்டி குடும்பமே வந்து படுக்குறீங்க. உள்ள போய் படுங்கடா” கெஞ்சினான் தேவானந்த்.
“தம்பி மெத்தைல படுத்து, சொகுசாவே வாழ்ந்து அலுத்து போச்சு ப்பா. ரொம்ப நாள் பெறவு இப்டி சிமெண்ட் தரைல பாய் விரிச்சு படுக்குறது தனி நிம்மதி பாரு” வசதியாக தலைக்கு தலையணை கூட இல்லாமல் நிம்மதியாக படுத்தார்.
“பெரிப்பா, எப்ப மழை வரும்னு சொல்ல முடியாது. உள்ள போங்களேன்”
“இருக்கட்டும் மாப்பிள்ளை. தண்ணி வந்தா அப்போ எந்திரிச்சு உள்ள போக்கலாம்” என்றார் தேவாவின் பெரிய மாமா சத்யம்.
“அதில்ல மாமா, கொசுகடி ஜாஸ்தியா இருக்கும், உள்ள போங்களேன் நல்லா பேன் காத்துல தூங்கலாம். இல்லனா இந்த ஹாலுக்கு வாங்களேன்”
“பேன் என்ன மாப்பிள்ளை பேன், எ.சி கூட இந்த இயற்கையான காத்துக்கு முன்னாடி நிக்காது” இது பைரவியின் தந்தை கண்ணன்.
“இல்ல மாமா…” தேவாவை தடுத்து,
“என்னடா உனக்கு? பிரச்சனை எங்களை விரட்டி விடவே குறியா நிக்கிற?” சந்தேகமாய் விக்னேஷ் கண்களை சுருக்கி கேட்க அடுத்தது அர்ஜுனனும் கையில் ஒரு போர்வையை எடுத்து வந்துவிட்டார்.
“நானே கட்டிலை கேக்கணும்னு நினைச்சேன் தேவா… கீழ படுத்துட்டு எந்திரிக்க முடியாது” என்றவரை கன்னத்தில் கை வைத்து பார்க்க தன்னையே நினைத்து சிரிப்பு தான் வந்தது.
‘யோவ் அய்யப்பா நானாயா உன்ன இங்க வந்து படுனு சொன்னேன்?’ மனதிலே புலம்பினான்.
அர்ஜுனன், “என்னப்பா நீ படுக்க வரலையா?”
“இந்தா வர்றேன்” உற்சாகமே இல்லாமல் வந்தவன் குரல் உறக்கம் வருவது சாத்தியமே இல்லை என தான் கூறியது.
“தேவா, நீ எல்லாம் எங்க கூட சின்ன வயசுல இருந்தே இருந்திருந்தா நல்லா இருக்கும்டா. ஆனுவல் லீவுல எல்லாம் எல்லாரும் ஒரே ஹால்ல படுத்து, காலைல ஒரே தட்டுல பத்து இருவது இட்லி வச்சு ஒரே சந்தோசமா போகும்டா” விக்னேஷ் பேசவும் சந்தோஷ் கூட அந்த கால நினைவுகளுக்கு சென்றுவிட்டான்.
“ஆமா டா விக்கி, ரொம்ப சந்தோசமா இருந்தோம்ல”
தேவாவின் மனம், ‘உங்களுக்கென்னடா… வீட்டுக்குலையே ஆள வச்சிட்டு இப்ப வரைக்கும் சந்தோசமா தானே இருக்கீங்க. நான் தான் கைய புடிக்க கூட ஆறு மாசம் காத்து கெடக்குறேன்’ போர்வை தலைக்கு துண்டாக மாறியது.
அந்த நேரம் பார்த்து சரியாக தயக்கமும், வெட்கமுமாய் சிரிப்போடு வந்த மனைவியை பார்த்தவன் தலையில் அடித்துக்கொண்டான்.
தேவா, ‘அவளே மலை இறங்குனாலும் இவிங்க விட மாட்டாய்ங்க’ அதே போல் வீட்டை விட்டு வெளியில் வந்த பைரவி தரையில் படுத்து கிடந்த வீட்டினரை பார்த்ததும் அப்படியே அதிர்ந்து நின்றுவிட, அடுத்து அங்கு தலையில் முக்காடிட்டு சோகமாக தன்னை பார்த்த கணவனை ஏறிட்டதும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது மனைவிக்கு.
‘சிரிடி. நீ ஒருத்தி தான் கிண்டல் பண்ணல, இப்ப நீயும் உன் பங்குக்கு சிரிச்சுக்கோ’ சோகமே உருவாய் அமர்ந்திருந்தான்.
“சரி மச்சான் நீ படுத்து தூங்கு, நான் பின் வாசல் பக்கம் போய்ட்டு வர்றேன்” மனைவிக்கு மறைமுக செய்தி கொடுத்து தேவா எழ, உடனே தானும் எழுந்து கொண்டான் விக்னேஷ்.
“பாத்ரூம் தானே போற, நானும் வர்றேன்”
தேவா, “பாத்ரூம் வீட்டுக்குள்ள இருக்கு விக்கி”
விக்னேஷ், “அப்போ நீ எதுக்கு போற?”
தேவா, “நான்… நான் புலி வேந்தனை பாக்க போறேன்டா”
அர்ஜுனன், “தம்பி அத சாய்ந்தரமே உன் தாத்தா தோட்டத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாரே நீ கவனிக்கல?”
திருதிருவென முழித்த கணவன் தன்னை பாவமாக பார்க்க, அவனையும் அவன் சமாளிப்பையும் கேட்ட பைரவி மௌனமாய் உடல் குலுங்கி வாயை பொத்தி சிரித்தாள்.
“எங்க கவனிக்க விடுறிங்க..” புலம்பிக்கொண்டே சந்தோஷ் விக்னேஷ் இருவருக்கும் இடையில் வந்து குப்புற படுத்தவன் போதையை மொத்தமாய் போர்த்திக்கொண்டான் ஏமாற்றத்தில்.
வீட்டினுள் திரும்ப செல்லவிருந்த பைரவிக்கு சற்று முன்னர் தன்னை பார்த்து ஆசையாக கேட்ட கணவன் முகம் நினைவிற்கு வர தன்னுளேயும் பொங்கியிருந்த காதல் அவளை மீண்டும் அவனை நோக்கி திருப்பியது.
வரவழைத்த தைரியத்தோடு வாசலை தாண்டி இறங்கியவள், “தாத்தா உங்களுக்கு ஏதாவது வேணுமா?”
மனைவி குரல் கேட்கவும் சிறுக தலையை போர்வையிலிருந்து வெளியிட்டவன், அவள் தன்னை பார்க்கவில்லை என தெரிந்து மீண்டும் போர்வைக்குள் போனான்.
“அதெல்லாம் சவ்கரியமா தான் ம்மா இருக்கு. நீ போய் படு” என்றார் அர்ஜுனன்.
“சரி தாத்தா” என்றவள் வார்த்தையோடு கொலுசொலியும் கேட்க மனைவி சென்றுவிட்டாள் என நொந்தவன் தலையை ஆட்டி ஏமாற்றத்தை விழுங்க, போர்வை தலையிலிருந்து விலகியது.
“ஒழுங்கா படுத்துடு அடிச்சு மண்டைய ஒடைச்சிடுவேன்” சந்தோஷ் அல்லது விக்னேஷ் என நினைத்து மீண்டும் போர்வையை மூடிக்கொண்டான்.
“மாத்திரை போட்டீங்களா?” மனைவி குரல் கேட்கவும் ஒரு அயர்வு, என்ன பேசி என்ன பயன்? தனியாக சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்கப்போவதில்லை என்ற சலிப்பு.
“போட்டாச்சு போட்டாச்சு” அவன் தலையில் வலிக்காமல் குட்டு ஒன்று வைத்தாள் மனைவி.
முறைப்போடு குகையிலிருந்து வந்தவன், “போட்டுட்டேன்டி” என்றான் அவளை பார்த்து.
“ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டிங்களா?” கேட்டாள் மீண்டும்.
‘லூசா நீ?’ என்னும் ரீதியில் பார்த்தவன், “அதெல்லாம் எதுக்கு?” எரிச்சல் மண்டி கிடந்தது அவன் குரலில்.
அவளோ மெதுவாக அவன் கையில் கிள்ளி பல் கடித்து கண் சிமிட்டினாள், “ட்ரெஸ்ஸிங் பண்ணனும் மறந்து போச்சா?” அழுத்தி அழுத்தி அவள் கேட்கவும் முதலில் விழித்தவன் பிறகு அந்த அழுத்தத்திற்கான பொருள் உணர்ந்துகொண்டு துள்ளி எழுந்தான்.
“மறந்துட்டேன் பாரேன்” எவர் பேசவும் வாய்ப்பு கொடுக்காமல், மனைவி கையை பிடித்து, “வா போட்டு விடு” என வீட்டினுள் இழுத்தான்.
“நம்ம வீட்டுல தான் இருக்கே” அவனை விட அப்பாவியாய் நடித்தாள் பைரவி.
“அப்போ வீட்டுக்கு போய் போட்டு வரலாமா?” சில்மிஷமாய் அவன் கேட்க,
“எதுக்கு தேவா இந்த நேரத்துல புள்ளைய இழுத்துட்டு? நீ போய் எடுத்துட்டு வா” தேவாவின் பெரியப்பா குரல் வந்தது.