பைரவி தோளை குலுக்கி உன் சாமர்த்தியம் என கை நீட்டிட, “இதுல என்ன பெரியப்பா? நம்ம ஊர், எங்க போனாலும் நம்ம பயலுக மட்டும் தான் இருப்போம். ஒரு பயமும் இல்லை. அதுவுமில்லாம மருந்தெல்லாம் எங்க இருக்குனு அவளுக்கு தான் தெரியும். போன ஒடனே வந்துடுவோம். நீங்க படுங்க” பேசிக்கொண்டே வாகனம் நோக்கி அவன் செல்ல மற்றவர் பேசுவதற்கு இடம் தரவில்லை தேவா.
அவசர அவசரமாக மனைவியை இழுத்து வந்தவன் வாகனம் வீட்டினை தாண்டிய பிறகே நிதானமடைந்தது. அவசர கதியில் வந்த இரு சக்கர வாகனம் தன்னுடைய வேகத்தை குறைத்து ரிஸ்காவின் வேகத்தை ஒத்து ஓட மனைவி கையை பிடித்து தன்னுடைய இடையோடு நெருக்கமாக பிடிக்க வைத்தான் தேவா.
“ஏன் அந்த சோகம்?” அவன் தோளில் நாடி பதித்து முகம் பார்த்தாள் பைரவி.
“பின்ன என் பொண்டாட்டி கூட நான் பேச எத்தனை பொய் சொல்ல வேண்டி இருக்கு!”
“ஏன் பொய் சொல்லணும்… இப்போ இழுத்துட்டு வந்த மாதிரி இழுத்துட்டு வர வேண்டியது தானே? யார் உங்கள கேப்பா?”
“அது கூச்சமா இருக்குமே…!” முகத்தை ஒரு மாதிரி வைத்து சொன்னான்.
“நீங்க வாய் மட்டும் தான் ஆனந்த்” என சொல்லி மனைவி உடன் சிரித்தாள்.
“ஏன் சொல்ல மாட்ட? ஒதுங்க போனா கூட வால புடிச்சிட்டு கூடையே வருவாய்ங்க போல” கலகலவென சிரித்த மனைவியின் சிரிப்போசை நிசப்த்த இரவையும் வண்ணமயமாக்கியது.
“ஆச்சி எதுவும் சொல்லிருப்பாங்க, அதான் எல்லாரும் உங்களுக்கு ஒத்தாசைக்கு வந்துருப்பாங்க”
“ஏன்டி நான் என்ன புதுசா சமைஞ்ச பொண்ணா? இந்த பக்கம் நாலு பேர் இந்த பக்கம் நாலு பேர் பேய் பிடிக்காம பாத்துக்க?”
“ரொம்ப தான்… நான் வர மாட்டேன்னு சொல்லிருந்தா இந்நேரம் அவங்க கூட கதையடிச்சிட்டு தானே இருப்பிங்க?”
வாகனம் தேவாவின் தோட்டத்தினுள் நுழைய இறங்கி அவள் கையை பிடித்தான், “நீ வரலன்னு சொல்லிருந்தாலும் உன்ன பத்தி நினைச்சிட்டே தூங்கிருப்பேன். நீ தான் சிரிச்சு உசுப்பேத்தி விட்டு போனியே” பேசிக்கொண்டே தோட்டத்தினுள்ளே அழைத்து சென்றான்.
இருட்டாக இருந்த அந்த இடம் ஆங்காங்கு நிலவின் வெளிச்சத்தில் மட்டும் பிரகாசிக்க ஓர் இடம் மட்டும் பளிச்சென இருந்தது. பொதுவாக அதிக நேரம் காளைகளை தேவா அங்கு தான் கட்டி வைப்பான். இரவு நேரங்களில் மட்டும் கொட்டகைக்கு சென்று கட்டி வைப்பான்.
“எதுக்கு இங்க? ஏதாவது பூச்சி பட்டை இருக்க போகுது ஆனந்த்” பயத்தோடு அவன் கையை பிடித்து மேலே நடக்காமல் நின்றுவிட்டாள். “சக்கரை, நான் தான் இருக்கேனே வா”
“ம்ம்ம்ஹ்ம்ம்” அவசரமாக தலையை இரு பக்கமும் ஆட்டி அவனையும் அதற்கு மேல் செல்லவிடவில்லை.
“இதுக்கெல்லாம் பழகிக்கணும் பைரவி. இனிமேல் நம்ம வாழ்க்கை இங்க தான்னு ஆகிடுச்சுல?” கணவன் கூறுவது சரியாக இருந்தாலும் இருட்டாக இருந்த அவ்விடத்தில் பயமே இல்லாமல் நடக்க தயக்கம்.
பின்னோக்கி சென்றவளை ஒரே நொடியில் கைகளில் ஏந்தியிருந்தான் தேவா, “என் சக்கரை எதுக்கும் பயப்பிட கூடாது. பாம்பா இருந்தா என்ன… மனுசனா இருந்தா என்ன?” நேர் கேள்வியாக அவள் கண்கள் பார்த்தான்.
“மனுஷனுக்கு பயம் இல்லை, பாம்புக்கு நிறையாவே இருக்கு”
“அடேங்கப்பா நம்பிட்டேன்”
“நிஜமா”
“போடி போ…”
அழுத்தமாக கன்னம் கிள்ளி, “நம்பாட்டி போங்க. இந்த ஒரு வாரம், நான் தான் இஷா வண்டி எடுத்து ஆபீஸ் போய்ட்டு வந்தேன் தெரியுமா? அங்க நாலு பேர் ப்ரன்ட்ஸ் கூட பிடிச்சிருக்கேன்”
“ம்ம்ம் எத்தனை பொண்ணுங்க?”
“ரெண்டு பொண்ணுங்க, ரெண்டு பசங்க”
தேவா, “பார்றா…”
பைரவி, “என்ன அதிசய பாவம்? நான் மைசூர்ல வேலை பாத்தப்போ எங்க கூட்டத்துல அஞ்சு பசங்க, நாங்க ரெண்டு பொண்ணுங்க தான். எல்லா பசங்களுக்கும் கெட்டவங்க இல்ல”
“இது எந்த முனிவர் போதிச்சது?”
“யாரும் போதிக்கல, என்னோட ஆனந்த் எனக்கு புரிய வச்சது”
“ஹாஹாஹா… உன் வார்த்தை கூட சக்கரையா இனிக்கிது சக்கரை” பேசிக்கொண்டே இருவரும் வெளிச்சமான இடத்திற்கு வந்திருக்க அங்கு பெரிய மர பலகையில் இரு பக்கமும் கயிறு கொண்டு மேல மரத்தில் கட்டியிருந்தது.
“இது எப்போ செஞ்சீங்க?” ஆசையாக கேட்டவள் தானால் அதில் ஏறி அமர்ந்தாள்.
“இன்னைக்கு சாயந்தரம் தான். நிவி கேட்டா” சிரிப்போடு ஆடி பார்த்தவள், “அவளுக்கு ஊஞ்சல் எப்பவும் ரொம்ப பிடிக்கும், அவளுக்காக தான் வீட்டுலையே ஒரு ஊஞ்சல் ரெடி பண்ணாங்க”
ஊஞ்சலை நிறுத்தி தானும் அவள் அருகில் அமர்ந்துக்கொண்டான். முகத்தில் குளிர் காற்று மோத, சுத்தமான தூய காற்று நுரையீரலை நிரப்பி உடலை புத்துணர்ச்சியாக்கியது. அதே இதமான நிலையோடு கணவன் பக்கம் திரும்ப அவளை உணர்வுகளற்று பார்த்தான்.
“என்னாச்சு?” என்றாள் அவன் முகத்தில் கை பதித்து.
எப்பொழுதும் திணற வைக்கும் அவன் பார்வை இன்று ஏதோ யோசனையில் தன்னை பார்த்தது, “உனக்கு என்னடி பிடிக்கும்?”
“என்ன பிடிக்கும்னா?” புரியாமல் கேட்டாள்.
“உனக்கு என்ன பிடிக்கும்னு உன் அண்ணாகிட்டையோ, உன் அப்பா அம்மாகிட்டயோ கேட்டா யோசிக்கிறாங்க. எதையும் வாய் திறந்து உன்னோட அசைய சொன்னது இல்லனு சொல்றாங்க”
“எனக்கு அப்டிலாம் எந்த ஆசையும் இருந்ததில்லை ஆனந்த்” என்றாள் உண்மையாக.
“அது எப்படி ஒருத்தருக்கு ஒரு ஆசை கூட இல்லாம இருக்க முடியும்?” தேவா கேட்கவும் ஒரு நொடி யோசித்தவள், பிறகு முகம் பிரகாசிக்க அவன் முகம் பார்த்தாள். அவள் முகமே ஏதோ குழந்தை தன்னுடைய ஆசையை கூறுவது போல் பரபரப்பாக மாறியது.
கண்கள் மின்ன தன்னை பார்த்தவள் தோளோடு கைகள் போட்டு நெஞ்சோடு அணைத்தவன் முகத்தை பார்த்தவள் சாய்ந்தவாறே, “ரொம்ப பெரிய ஆசை ஒன்னு இருக்கு. கேக்குறீங்களா?” கேட்டாள்.
அதை விட வேறு என்ன வேலை அவனுக்கு? நெற்றி முட்டி, “சொல்லு சக்கரை” என்றான் இதமாக அவள் தலையை நெஞ்சோடு சேர்த்தணைத்து.
“பெரிய வீடும் இல்லாம சின்ன வீடும் இல்லாம ஒரு வீடு. முற்றம் வச்சு, இருக்கனும். மழை தூறுற நேரம் எல்லாம் அங்கையே படுத்துட்டே இடி, மின்னல ரசிச்சு, அதே மேகம் இல்லாத நேரம் நட்சத்திரம் கண் சிமிட்டுறத பாக்கணும்.
டெய்லி திருட்டுத்தனமா நம்ம வீட்டை எட்டி பாக்குற நிலவ பொய்யா முறைக்கணும். அதே முற்றத்துல சில நேரம் தண்ணி தேக்கி வச்சு மினி ஸ்விம்மிங் பூல் மாதிரி நம்ம கொழந்தைகளோட நீங்களும் நானும் விளையாடனும்” இறுதியாக சொன்னதில் பைரவி முகம் சிவந்திட மை பட்டத்து போல் கன்னத்தை துடைத்துக்கொண்டாள்.
பிறகு தலை நிமிர்ந்து, “அப்றம் ஒரு மாஸ்டர் பெட்ரூம், அதுல ஹாங்கர் வச்ச கபோர்டு, அப்டியே குட்டி வாக்கின் ஃக்ளோஸட். அப்றம் நார்மல் சைஸ்ல ரெண்டு ரூம். ஒரு ரூம் நம்ம அம்மா அப்பா வந்தா இருக்க, இன்னொரு ரூம் நம்ம குழந்தைகளுக்கு.
ஒரே ப்லோர் மட்டும் தான் இருக்கனும். கூரை எல்லாம் கான்க்ரீட் மாதிரி இருந்தாலும் வெளிய இருந்து பாக்குறப்போ கேரளா வீடு மாதிரி ஓடு வச்சு கிரீம் கலர் பெயிண்ட் அடிச்சி வெளிய இப்போ நம்ம வீட்டுல இருக்க மாதிரி வாசலுக்கு ரெண்டு பக்கமும் திண்ணை வச்சு,
வீடு சுத்தி ஒரு பழ மரம். அப்றம் மூணு பூ செடி. அப்றம் வேற ஒரு பழ மரம். அப்றம் மூணு பூ செடி. இப்டி சுத்தி அழகா செடி தான். நிலை கதவுல மாவிலை தோரணம், அதுக்கு மேலையே மனி பிளான்ட் வைக்கணும்.
ம்ம்ம்… அப்றம் முற்றம் இருக்கும்ல, அங்க நாலு பக்கமும் ஒவ்வொரு தொட்டி வச்சுக்கலாம். அது பூ செடி வேணாம், நார்மல் செடி ஓகே. மரத்துல ஊஞ்சல், சோபா செட், அது மேல பஞ்சு குஷன். வீட்டுக்கு உள்ள லைட் லாவண்டர் கலர் பெயிண்ட், அதுக்கு காண்ட்றாஸ்ட்டா வீட்டுக்கு கர்ட்டைன்ஸ்”
இடைவிடாது பெரிதாக சொற்பொழிவாற்றியவள் போல் சில பெரிய மூச்சுகளை விட்டு அவ்வளவு தான் முடிந்ததென கணவனை பார்த்தாள். வானத்து விண்மீன்கள் தோற்றிடும் தன் கையிலிருக்கும் நட்சத்திரத்தின் முன்பு.
இந்த லோகத்தின் பிரசித்தி பெற்ற ஒன்றான பேரன்பின் ரூபமாக, அதீத புரிதலின் வடிவமான காதல் அவன் உலகத்தில் அவள் ஒருத்தி மட்டுமே அழகி என்றது.
மனம் கூறிய பிறகு மூலைக்கு பிறகென்ன வேலை? அவள் பிம்பம் பட்டே வியர்த்துக்கொள்பவனுக்கு, உடலோடு காற்றில் தூக்கி செல்லும் இந்த குளிர்ந்த காற்றிலும் வியர்த்தது.
அருகில் இருக்கிறாளே… இலகுவான இரவு உடை, குதிரைவால் போட்டிருந்த நீண்ட ஜடை என எளிமையிலும் அழகு காண்பவள் நெருக்கமாக அமர்த்திருக்கிறாளே… தனித்துவமான மாநிற அழகியவள்.
ஒற்றை புருவ முடிச்சில் நெஞ்சம் கட்டி வைக்கும் வில் வித்தைக்காரி. உறுத்தும் விழிகளை கொண்ட அழகு மீனாள். மெய்யுணர்ந்தவன் மனதில் மோக மழை பொழிய நாடியை பிடித்து மெல்ல உயர்த்தி அன்று தவறவிட்டிருந்த தேடலை அவள் இதழில் துவங்கியிருந்தான்.
எப்பொழுதும் கொடுக்கும் கன்னத்து முத்தம் என எண்ணியிருந்தவள் நினைவில் கோடி பூக்கள் கொட்டி உடலெங்கும் மின்சாரத்தை பாய்ச்சினான் அதரங்களில் வண்டாய் மாறி.
அன்று ஒரு நொடி தீண்டிய அவன் இதழ்களே பெண்ணவளுக்கு பல நாட்கள் கனவில் இம்சிக்க இன்று கிறங்கி அவனுள் தொலைய சித்தமானாள் பைரவி. அவனுக்கோ பயம், தேவையற்றதை நினைத்து மனம் சுணங்கி போனவளோ என.
ஆனால் பைரவி தான் அவன் மனைவியாய் பெயரளவில் மட்டுமில்லாமல் உடலளவிலும் தன்னை தயார்படுத்தியிருக்க, இலகுவாக அவனை ஏற்க தயக்கமின்று கரைந்தாள்.
தூண்டிலிலிருந்து தப்பித்த மீனானது தன்னையே சுதாரிக்க சில வினாடிகள் தத்தளித்து பிறகு துள்ளி ஓடுவது போல் மெல்ல மெல்ல முத்தத்தின் ஆழத்தையும் வேகத்தையும் அதிகரித்தான்.
முழுமதியானவளை தன்னுள் மொத்தமாய் கரைத்துக்கொண்டிருந்தான். காதலாய் துவங்கிய இணைப்பு, காமமாய் மாறி இரவு வானத்தில் பறக்க, செவ்விதழில் அவன் வரைந்த கோலங்கள் மீண்டும் மீண்டும் அளிக்கப்பட்டு, பிறகு அவனே அதை வண்ணமயமாக்கி பூச்சூடினான்.
தேடலானவளின் இதழில் தடாகத்தில் சுரக்கும் நீராய் அவனின் ஆசை மாறியது. நிறுத்த முடியவில்லை. இதுவே வேலை போல் மேலும் மேலும் அவளுள் இருந்த முத்தை தேடி செழித்தான் தேவா.