தாத்தாவின் அறையினுள் அமர்ந்திருந்த பைரவிக்கு வெளியில் தேவா பெரியவர்களிடம் வாதாடுவது தெளிவாக கேட்டது. திருமணம் முடிந்து சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்திருக்க அவர்களுக்கு செய்ய வேண்டிய சம்ரதாயங்கள் மொத்தமும் முடிந்திருந்தது.
மதிய உணவை முடித்து இளைஞர்கள் கேரம் போர்டு ஒன்றை எடுத்து வைத்து விளையாட அந்த நேரம் தேவாவிற்கு முக்கியமான அழைப்பு ஒன்று உடனே ஊருக்கு வரும்படி செய்தி தாங்கி வந்தது.
இப்பொழுது தானே திருமணம் நடந்துள்ளது என அவன் தந்தை மறுக்க, வேலை தான் தனக்கு முக்கியமென தேவா பிடிவாதமாய் நின்றான்.
அரை மணி நேரமாக நீளும் அந்த பேச்சை கேட்டுக்கொண்டே கட்டிலில் அமர்ந்திருந்த பைரவி எதிலும் நுழையவில்லை. ஆவது நடக்கட்டும் என்ற முடிவுடன் இருந்தாள்.
“அது எப்படி ப்பா அவன் தான் புரிஞ்சுக்காம மாதிரி பேசுறான், நீங்களும் அவன் பேசுறதுக்கெல்லாம் சரி சரின்னு சொல்றிங்க” ரத்தினம் தந்தையிடம் சண்டைக்கு நின்றார்.
“அவன் பேசுறது என்ன தம்பி தப்பா இருக்கு? சம்ப்ரதாயம் எல்லாம் முடிசாச்சு, இங்கையே நின்னு என்ன பண்ண போறான்? அவரார் பொழப்ப அவரார் பாத்தா தானே துட்டு சம்பாதிக்க முடியும். இல்ல அவசரத்துக்கு உன்கிட்ட வந்து பத்து நூறுன்னு கேட்டா அவனை ஒரு வார்த்தை பேசாம எடுத்து நீட்டிடுவியாடா நீ?” மகனை அர்ஜுனன் அதட்டி கேள்வி கேட்க மொத்தமாய் அமைதியாகிவிட்டார் அவர்.
மாமனாரின் குரல் கேட்கும் பொழுதே கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெடுக்கென திரும்ப, “உன் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா பைரவி?” கேள்வியோடு வாசலில் நின்றான் தேவா.
இல்லை என பைரவி தலையை ஆட்டவும், “சரி வா எடுத்து வை. கிளம்பலாம்” என்றான்.
கண்கள் அவனைத் தாண்டி பெரியவர்களின் அனுமதி தேடி பாய, “என் அப்பாவ அய்யப்பா பாத்துக்குவார், நீ வா நேரமாச்சு” அவசரப்படுத்தியவன் பேச்சை மீறவும் முடியாமல் அன்னையின் அனுமதியும் இல்லாமல் தத்தளித்தாள்.
“என்ன யோசனை? வா” மீண்டும் தேவா அழைக்கவும் அறையை விட்டு வெளியில் வர, மகளை பார்த்த சீதா, அவளுக்கு முன்பாகவே தங்களுடைய இல்லத்திற்கு செல்ல பைரவிக்கு தயக்கம் போனது.
வீட்டிற்குள் வந்ததும் மகளை தனியாக அழைத்து சென்று, “எதுக்கு தயங்குற பைரவி, இனி எல்லாமே உனக்கு தேவா தான். அவன் சொல்ற மாதிரியே செய். நாங்க எல்லாரும் உனக்கு அடுத்த படி தான்”
மகளின் கேள்வியில் அதிர்ந்து அவளை பார்க்க, சிரித்த பைரவி, “நைட் அடிக்கடி வந்து தூக்கத்த கெடுத்து என்ன செக் பண்ற அவசியம் இருக்காதுல. அதுக்கு சொன்னேன்”
அன்னையை நிதானமாக சிரிப்போடு பார்த்தவள் அவரின் கை பற்றி, “ரொம்ப தங்க்ஸ்” அவளின் நன்றியை கூட காதில் வாங்கும் நிலையில் அன்னை இல்லை.
எத்தனை ஆழமாய் அவர் செயல் அவளை பாதித்திருக்கும் என நடுங்கியவர் அந்த இடத்திலே சிலையாக நின்றுவிட்டார்.
தன்னுடைய அறைக்குள் நுழைந்த பைரவி தனக்கு தேவையான உடைகளை எடுத்து வைக்காமல் ஒரு வாரமாக நாயகி தன்னை பார்க்கும் பார்வையும், வெட்டும் பேச்சுக்களையும் யோசித்து கலங்கி நிற்க,
“கனவு எப்ப முடியும்?” திடீரென காதுகளுக்கு அருகில் கேட்ட தேவாவின் குரலில் திடுக்கிட்டு உணர்வு பெற்று திரும்ப,
தன்னை விட்டு சில அடி தூரம் தள்ளி நின்றவனை பார்த்து அதிர்ந்தவள் கண்கள் மொத்த அறையையும் சுற்றி வரும் பொழுது தான் கவனித்தாள், அவள் அறையின் கதவு தாழிடப்பட்டிருந்தது.
அதனை கவனித்தவள் விழிகள் கலகத்தையும் பயத்தையும் அப்பட்டமாய் காட்டியது.
வியர்வை துளிகள் அரும்பியிருந்த அவள் முகத்தை பார்த்து பயந்தவன் அவளை நோக்கி அடி எடுத்து வைத்து, “ஏன்டி இப்டி வேற்குது?”
“வராதீங்க… பக்கத்துல வராதீங்க” கணவனை அணையிட்டு தடுத்தது அவள் வார்த்தைகள்.
ஓங்கி அடிக்கும் அவள் வார்த்தைகளும் அந்த கண்களில் தன்னை பார்த்து தோன்றும் பயமும் ஆணின் மனதில் பதிந்து தெளிவடையும் தருவாயில், பைரவி கதவினை நடுங்கும் கைகளால் திறக்க முயன்று தோற்று நின்றாள்.
“நான் துறந்து விடுறேன் இரு” உதவிக்காக அவளை நெருங்கி மேலேயிருந்த தாழை திறக்க போனவனை நோக்கி திரும்பிய மனைவியின் கண்களில் தெரிந்த பயம் எதனால் வந்ததென புரிந்த தேவா, செய்ய போன வேலையை அப்படியே திரும்ப பெற்றான்.
“வெளிய போகணும்னு நினைச்சு கூட பாக்காத” மனைவிக்கு எச்சரிக்கை விடுத்து கால்களை பின்னுக்கு நகர்த்தி மூடிக்கிடந்த இரண்டு ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டான், காற்றோட்டத்திற்காக.
பிறகு காற்றாடியை உயிர்ப்பித்து அவள் கை பிடித்து இழுக்க, பீதியோடு தேவாவிடமிருந்து கையை உருவ முயன்றவளை வம்படியாக ஜன்னல் அருகே நிற்க வைத்து பிறகே கையை எடுத்தான்.
ஜன்னல் கம்பியை இறுக்கமாக பிடித்து கண்களை மூடியிருந்தவள் இமை தாண்டி சில நீர் துளிகள் வர, அவளையே பார்த்திருந்த தேவாவிற்கு அவளது மனதின் ஓட்டத்தை புரிய முடிந்தது.
“நான் இப்ப இந்த ரூமை விட்டு போகணும்னு நீ நினைச்சா அந்த எண்ணத்த மாத்திக்கோ பைரவி. நான் இங்க தான் இருப்பேன்” ஆணித்தரமாக அவன் கூறவும் மேலும் சுருங்கிய கண்களோடு தலையை ஜன்னல் கம்பியில் சாய்த்து நின்றாள்.
மனைவி முகம் பார்த்து பல நிமிடங்கள் நின்ற தேவா, அவள் முகம் சற்று சுருக்கத்தை குறைத்து கண்ணீரை சிந்துவதை நிறுத்திய பிறகே ஆசுவாசமடைந்து விலகினான்.
மனதினை திடமாக்கி, “எனக்கு டைம் வேணும்” கண்களை திறந்து அவனை பைரவி பார்த்த அந்த ஒற்றை பார்வையில் மின்னல் கீற்று தேவாவின் கண்களில்… வேடனின் அம்பை போல் அல்லவா கூர்மை அந்த விழிகளில். வியந்தான்.
ஆனாலும் நிதானித்து, “எவ்ளோ டைம் வேணும்னாலும் எடுத்துக்கோ” என்றான் அவளுடைய படுக்கையை அளவிட்டு.
“நான்.. நான் எதுக்கும் ரெடி ஆகல” வார்த்தையை விழுங்கினாள், “நீங்க எதிர் பாக்குற எதுக்கும் நான் இப்ப தயாரா இல்ல”
சுகமாக கட்டிலில் விழுந்தவன் இரண்டு தலையணையை எடுத்து தலைக்கு அணைவாக கொடுத்து படுத்தான் சிரிப்போடு, “பெரிய ஜோசியக்காரி தான் நீ” என்றவன் பார்வை மொத்தமும் அவள் மேல் தான்.
தேவாவை பார்த்தவள் எழுந்து சென்று கதவை திறக்க, வெளியே சென்றுவிடுவாள் என அவன் எதிர்பார்த்திருக்க, அவன் மனைவியோ மீண்டும் உள்ளே வந்து கட்டிலின் விளிம்பில் நின்றாள் அவனிடம் பேசும் எண்ணத்தோடு.
“ஏன் ஆனந்த் என்ன கல்யாணம் பண்ணீங்க?” மீண்டும் கண்கள் கலங்கி விட்டது பெண்ணுக்கு.
தன்னுடைய பெயரை மனைவியின் நா உச்சரித்த சுகத்தை கூட அவள் கண்ணீரினால் அவனால் அனுபவிக்க முடியாமல் போனது.
“உங்க அம்மாக்கும் தங்கச்சிக்கு என்ன சுத்தமா புடிக்கல, உங்க குணத்துக்கு எவளோ நல்ல பொண்ணு கெடச்சிருப்பாங்க தெரியுமா? அவங்க சொல்றத கேட்டு இந்த கல்யாணத்த தடுத்துருக்கலாம்ல?”
“ஏன்டி நீ என்ன கல்யாணம் பண்ணிட்டியா, இல்ல என் அம்மா தங்கச்சிய கல்யாணம் பண்ணியா?” எழுந்து அமர்ந்தான் படுக்கையிலிருந்து,
“என் அம்மாக்கு இந்த சீமை ராஜா பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும் திருப்தியா இருக்காது. என் தங்கச்சி ஒரு லூசு. இவங்களுக்காக நான் உன்ன வேணாம்னு சொல்லனுமா?” காரமாக வந்தது தேவா கேள்வி.
“உங்கள கல்யாணம் பண்ணா உங்கள மட்டும் இல்லயே, உங்க குடும்பமும் தானே?”
“அப்போ உன் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க போற என் தங்கச்சிக்கு அந்த நெனப்பு இருந்ததா?” – தேவா
“அதான் வந்தியே” அவன் கிண்டலில் அவள் அவனை முறைக்க புன்னகைத்தான், “ஆமா தெரியும்” என்று.
“தெரிஞ்சும் ஏன் என்ன உங்க வாழ்க்கைல வர வச்சீங்க? என்னால என் பேரு உங்களுக்கும் வரும் ஆனந்த்” – பைரவி
“ஆமா இவ பெரிய செலிபிரிட்டிய, இவ எங்க போனாலும் எல்லாரும் இவள பத்தியே பேசுவாங்க. இந்த ரெண்டு தெருவை தாண்டுனா உன்ன யாருக்கு தெரியும், இதுல என் ஊர் வர வந்து இவளை சொல்லி என்ன பேசுவாங்கலாம்” முறைத்தான் மனைவியை.
“இதான்…” விசும்பினாள் பெரிதாக,
“இதான் எனக்கு பயமா இருக்கு. என் கல்யாணம் பத்தி கேக்க மாட்டிக்கிறீங்க? எதுக்காக என் மேல அத்தனை நம்பிக்கை வச்சிருந்த என் குடும்பத்தை ஏமாத்திட்டு கல்யாணத்துக்கு வரலன்னு கேக்க மாட்டிக்கிறீங்க… என் கவலைல என்னோட அண்ணன் வாழ்க்கையை நான் எதுக்கு கெடுத்தேன்னு ஏன் நீங்க கேக்க மாட்டிக்கிறீங்க?
ஏன் என்ன எந்த கேள்வியும் கேக்க மாட்டிக்கிறீங்க? இப்ப என் மனசு கஷ்டப்பட கூடாது, தாத்தா வார்த்தைக்காக என்ன நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நாள பின்ன என்ன பத்தி தெரிஞ்சு நீங்களும் என்ன வெறுத்துடுவீங்க” – பைரவி
“அதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்? எனக்கு உன்னோட பாஸ்ட் பத்தி எந்த கவலையும் இல்ல பைரவி. இத்தனை நாள் நீ எப்படி இருந்தியோ எனக்கு தெரியல, இனிமேல் எனக்கு என்னோட மனைவி பைரவி மட்டும் தான் வேணும்” – தேவா
“என்னோட பாஸ்ட் நம்ம வாழ்க்கையை நிச்சயம் பாதிக்கும் ஆனந்த், நான்… நா… வேர்… வேர்ஜின் இல்ல”
உடலில் வலுவில்லாமல் கட்டிலில் அமர்ந்த பைரவியின் கன்னங்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது, “உங்களுக்கு என்ன ஏத்துக்க முடியலைன்னா பரவால்ல, நான் இங்கையே இருந்துக்குறேன். எனக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்க” தொண்டை அடைத்தது பெண்ணுக்கு அவ்வார்த்தைகளை மொழியும் நேரம்.
வார்த்தைகளுக்கு நேர் மாறாக பிரதிபலிக்கும் அந்த சிறிய முகத்தின் உணர்வுகளை ஆராய்ந்த அவள் கணவன், “நேத்து நைட் தூங்குனது சக்கர, ரொம்ப டயர்டா இருக்கேன். உங்க திங்ஸ் எடுத்து வச்சிட்டு எழுப்பு” சுகமாக படுத்தவன் கண்களை மூடி உறங்க தயாரானான்.
தான் பேசியதை காதில் கேட்டானா? இல்லை என் வார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவித்து உறங்குகிறானா? இல்லை தான் கன்னி பெண் இல்லை என்பது இவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா என்ற எண்ணமே அவள் மனதை இன்னும் அழுத்தியது.
என்ன மாதிரியான எண்ணங்கள் அவன் மனதில் இப்பொழுது உள்ளதென்று குழப்பத்தோடு பல நிமிடங்கள் இருந்தவள், அவன் வேலை அவசரம் புரிந்து அவசரமாக கண்ணீரை துடைத்து உடைகளை பையில் அடுக்கினாள்.
உறங்குகிறேன் என மனைவியிடம் கூறிய தேவாவிற்கு கண்களை பொய்யாக மூடி கிடக்கவே சிரமாக இருந்தது. அவள் எந்நாள் எவ்வுடை அணிவாள், எந்நேரம் எங்கு இருக்க ஆசை கொள்வாள், இவ்வுடவை பிடித்து உண்பாள், எதை ரசிப்பாள்,
எதற்கு கோவம் கொள்வாள், எண்ணிறம் பிரியமானதென அவளை பற்றி அணுவும் அறிந்துகொள்ள துடிக்கும் ஒருதலை காதலை வளர்பவனிடம் வந்து என்னை தவிக்க விட்டு சென்றிடு என பொய் கூறும் அந்த மங்கையிடம் தன்னுடைய ஆசைகளை கூறினால் ஏற்றுக்கொள்வாளா? என்பதை மட்டும் துளி கூட அறிய முடியாமல் தத்தளித்தான் அவள் கணவன்.
அலமாரியின் சத்தம் கேட்டு கண்களை தேவா திறக்க, துரிதமாக துணிகளை அடுக்கும் வேலையில் இருந்தாள் அவன் மனைவி.
சில நொடிகளுக்கு முன்பு விவாகரத்து கேட்ட அதே மனைவி தான் இப்பொழுது அவனுக்கு நேரமாவதை உணர்ந்து வேகமாக செயல்படுகிறாளா என்ற வினா.
மீண்டும் கண்களை மூடி கொண்ட தேவாவிற்கு எப்பொழுது உறக்கம் தழுவியதென தெரியவில்லை. கைபேசியின் சத்தம் கேட்டு எழுந்தவன், மனைவி அவ்வறையில் இல்லை என பார்த்து சிணுங்கிய கைபேசியை எடுத்தான், “சொல்லு பங்கு” அந்த பக்கம் குணா தான்.
“சரக்கு லாரிக்கு பெர்மிட் இல்லனு சொன்னாய்ங்கல்ல, அது மொத்தமும் அந்த அய்யனார் வேலை தான் மாப்பிள்ளை. இங்கன நல்லவன் மாதிரி நாடகம் ஆடிட்டு இப்போ ஒன்னுமே தெரியாதவன் மாதிரி அந்த லாரி டிரைவர் கரைச்சல் கொடுத்துட்டு இருக்கானாம், கூட போன நம்ம ஆள் அவன் அய்யனார்க்கிட்ட பேசுறத ஒட்டு கேட்ருக்கான்”