“அவனை விடு, இப்ப என்ன தான் பண்றது, அந்த வியாபாரிக்கு தகவல் போச்சுன்னா அடுத்து இனி சரக்கே அனுப்ப முடியாது. வேற லாரி ஏற்பாடு பண்ண சொன்னேன்ல?” – தேவா
“அந்த லாரி டிரைவர் லோடு வண்டிய விட்டு இறங்க கூடாது, பேசுன மொத்த காசும் வரணும்னு சண்டித்தனமா நிக்கிறான்” – குணா
நெற்றியை நீவிவிட்ட தேவா சில நொடிகள் யோசனைக்கு பிறகு, “சரி இரு நான் அந்த ஏரியால யாரையாவது புடிச்சு அனுப்புறேன். வேற வண்டி ரெடியா இருக்கா?”
“இருக்கு மாப்பிள்ளை” – குணா
“நான் பேசுறேன்” ஆந்திராவிற்கு செல்ல வேண்டிய லோட் ஒன்று பெர்மிட் காரணமாக பிரச்சனையாக இருக்க எவரிடம் சென்று உதவி கேட்கலாம் என்ற யோசனையில் நின்ற தேவாவிற்கு சந்தோஷ் தான் வடிக்கல்லாக தெரிந்தான்.
யோசிக்காமல் அவனை அழைத்து விஷயத்தை கூற, உடனே மேலே வந்த சந்தோஷ் தனக்கு தெரிந்த ஆட்களை லாரி நின்ற இடத்திற்கு அனுப்பி காத்திருக்க சில நிமிடங்களில் பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது.
“இதுக்கெல்லாம் ஏன்டா இப்டி பேசிட்டு, அதான் பிரச்சனை முடிஞ்சதுல ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல?” சகோதரியை மனதில் வைத்து சந்தோஷ் கேட்டான்.
“இது பிரச்சனை இல்லடா மச்சான், ஒரு நிலம் வாங்குறதுல கொஞ்சம் சிக்கல் இருக்கு அது விசயமா தான் ஒடனே போகணும். எல்லாம் ரெடியா?” மணியை பார்த்து கேட்டான்.
“ம்ம்ம் உனக்காக தான் எல்லாரும் வெயிட் பண்றங்க” எனவும் இருவரும் இறங்கி கீழே வர மொத்த குடும்பமும் பைரவியின் வீட்டில் தான் இருந்தனர். தேவாவின் கண்கள் மனைவியை தேட, வரவேற்பறையில் அவள் இல்லை.
“நிவிமா மச்சானுக்கு தண்ணி எடுத்துட்டு வா பாப்போம்”
கிண்டலாக தேவா கேட்கவும், “என் மச்சானுக்கு நான் எடுத்துட்டு வராம உங்க பொண்டாட்டியா எடுத்துட்டு வருவா?” அவளும் கேலியோடு அவனுக்கு கொடுக்க, மனைவியை வீட்டினர் ஏவி விடுவார் என எண்ணிய தேவாவின் கணக்கு தவறாகி போனது.
“அவ டீ போட்டா குடிக்க முடியாது தேவா, நானே எடுத்துட்டு வர்றேன்”
சமயலறைக்குள் சென்ற சீதாவிடம், “அத்தை நானும் உங்க பொண்ண பாக்கணும்ங்கிற ஆசைல கேட்டா புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்களே” வாய் திறந்து தேவா கூறவும் சிரிப்பலை அவ்விடம் எங்கும் பரவி, சமயலறையில் ஒளிந்திருந்த பைரவியையே தலை தாழ்த்தி சிரிக்க வைத்தது.
அவன் எண்ணம் புரிந்து டீ வைத்து எடுத்து வந்த பைரவி, தன் மக்களே ஆனாலும் கூட்டத்தில் அவன் பேச்சை கேட்டு வர தயங்கி நிற்க சீதா வந்து மகளை அனுப்பி வைத்தார்.
டீ காப்போடு வந்து நின்ற மனைவியை பார்த்த தேவா, ஒப்பனை களைத்து மிகவும் எளிமையாக வந்து நின்ற மனைவியை சிரிப்போடு நோக்கி தேநீரை வாங்கினான்.
“டேய் ரொம்ப சிரிக்காத, பல் கொட்டிட போகுது” அருகில் அமர்த்த அவன் சகோதரி உறும, வேண்டும் என்றே இன்னும் சிரித்தான் மனைவியை பார்த்து.
“சொல்ல போனா இன்னைக்கு உங்க வீட்டுல தான் பசங்க இருக்கனும் மதினி. ஆனா பாருங்க இவன் பிடிவாதம்…” கொக்கி போட்டு பேசிய அன்னையை முறைத்து சபையில் பேச வேண்டும் என்றே வாயை திறந்தான் தேவா.
“இது அவசரத்துல நடந்த கல்யாணம். எங்க வாழ்க்கையை நாங்க எப்ப ஆரம்பிக்கனும்னு நினைக்கிறோமோ அப்போ நாங்களே பாத்துக்குவோம். சாஸ்திரம் சம்ப்ரதாயம் அது இதுனு எந்த வேலையும் வேணாம். இத பத்தி இனிமே யாரும் எங்ககிட்ட பேசவும் கூடாது” அன்னையை பார்த்து அழுத்தி தேவா கூறியதில் நாயகிக்கு மூக்கெல்லாம் சிவந்தது.
“பேசல ப்பா, எதுவும் பேசல. நீ எப்பவும் உன் இஷ்டப்படியே இரு. பெத்தவங்க நாங்க நினைக்கிறது நீ செஞ்சிட்டா தானே தப்பு” பொய்யாக அழுகையை துவங்கிய மனைவியை முறைத்தே அடக்கினார் ராஜரத்தினம்.
“ஏதாவது பிரச்சனை பண்ணனும்னே பேசுறவங்கள என்ன பண்றது? பைரவி கெளம்பலாமா?” பொதுவாக பேசி மனைவியை பார்க்க அவள் தயார் என்னும் விதமாக தலை அசைத்தாள்.
“கல்யாணம் ஆனவங்கள அப்டியே விட முடியாதுல ராசா, அதான் நாங்களும் உங்க கூடயே வர்றோம். வீட்டுல முறைப்படி பைரவி கால் எடுத்து வச்சா தான் நிம்மதியா இருக்கும்” அர்ஜுனன் சொல்ல அதுவே சரியாக பட்டு, மகனோடு சேர்ந்து பார்வதி, அர்ஜுனனும் சென்றனர்.
செல்லும் பொழுது நாயகி கையில் பைரவிக்காக சேர்த்து வைத்திருந்த எழுபத்தி ஐஞ்சு பவுன் நகையை கொடுத்து மகளுக்கு தேவையான வெள்ளி பொருட்களையும் கொடுத்தனுப்பினார் பைரவி பெற்றோர்.
வெறுப்போடு தான் வாங்கி வைத்தார் நாயகி அதையும் ஆனாலும், “சந்தோசம் மதினி” என்றுவிட்டார்.
ஒரு மணி நேரத்தில் அவர்கள் குடும்பம் மதுரையில் இருக்க பைரவியை ஆராத்தி எடுத்து வரவேற்று மாமியாரை மட்டும் கவனிக்க துவங்கினார்.
மனைவியை வரவேற்பறையில் விட்ட தேவா தன்னுடைய அறைக்கு சென்று உடையை மாற்றி கீழே வரும் பொழுது பார்வதிக்கு ஒரு பக்கம் அன்னை மறு பக்கம் அமர்ந்திருக்க தந்தை அர்ஜுனனோடு அமர்ந்திருப்பதை பார்த்து மனைவியை தேடினான்.
அவளை எங்கு விட்டு சென்றானோ அதே இடத்தில் கையை பிசைந்து சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள்.
“பைரவி” கணவனின் திடீர் குரலில் திடுக்கிட்டு எழுந்த பைரவி அவனை பார்க்க, “இங்க வா” அழைத்தான்.
அவளுக்கு அதிகம் பயமாக இருந்தது, அனைவர் முன்னிலையிலும் இப்படியா சத்தமாக அழைப்பது என்று. பேதியை பேச்சில் இழுக்க பார்த்த பார்வதிக்கு தோல்வி கிடைக்க பேரன் அவளை அழைத்ததும் மருமகளிடம் பேச்சை வேண்டும் என்றே இழுத்தார்.
ராஜரத்தினம் மருமகளை பார்த்து சிரிப்போடு தந்தையிடம் பேச இரு பக்கமும் பார்த்து அவனிடம் சென்றாள். ‘என்ன இது?’ என சங்கடத்தோடு கணவனை பைரவி பார்க்க மாடி படி ஏறி பின் தொடர சொன்னான்.
படிக்கட்டின் கம்ம்பியை பிடித்து பயத்துடன் அவள் நிற்க, “ஏன்டி உனக்கு எதுவும் காக்க வெடிப்பு இருக்கா? எப்ப பாரு கம்பியை புடிச்சு இந்த முழி முழிக்கிற?” ஆச்சிரியமாக கேட்டான் தேவா.
“இல்ல இங்க இருந்தே பேசலாமே” பைரவி தயங்கினாள்.
அவளை முறைத்தவன், “நீயா வந்தா நல்லது இல்லையா தூக்கிட்டு போய்டுவேன்” அவனது மிரட்டலில் அடுத்த நொடி பைரவியின் கால்கள் படிகளில் ஏறியது.
“எப்படி எல்லாம் உன்ன மிரட்ட வேண்டி இருக்கு…” மனைவியோடு மேலே வந்த தேவா மேல் தளத்தை சுற்றி காட்டி தன்னுடைய அறைக்கு அழைத்து செல்ல, கதவை திறந்து வைத்தே வந்தான்.
“நம்ம ரூம்” அவனது அறிமுகத்தில் ஒரு நொடி தடுமாறி பின் தன்னையே மீட்டெடுத்து வந்து அறையை நோட்டமிட்டாள்.
“நீட்டா தான் இருக்கும். இன்னைக்கு காலைல ஊருக்கு வர முன்னாடி ஒரு மணி நேரம் இந்த ரூமை ஒதுங்க வச்சேன்” விழி விரித்து அவனை பார்த்து, “ஒரு மணி நேரமா?” என்றாள்.
“ஆமா, நிக்க நடக்க கூட இடம் இருக்காது, மொத்தமும் குப்பை தான். அம்மா அதெல்லாம் பாக்க முடியாம தான் உன் ரூமை நான் கிளீன் பண்ணவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. மாசத்துல ஒரு நாள் சும்மா கொஞ்சம் மட்டும் சுத்தம் பண்ணுவேன்”
சரி என்னும் விதமாய் கூறி அங்கேயே தயங்கி நிற்க படுக்கையில் அவளை அமர வைத்து அவன் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் தேவா.
“ஆனந்த்…” அவளை பேச விடாமல் கையை காட்டினான், “நான் பேசணும் பைரவி” என்றான்.
அவளும் அமைதியாக இருக்க, “ஏன்டி உனக்கு என் மேல இத்தனை பயம்?”
வேதனையோடு அவளை பார்த்தான், “நான் பக்கத்துல வந்தாலே உன் கண்ணுல தெரியிற அந்த பயம் என்ன கொல்லுதுடி”
“அப்டி இல்ல ஆனந்த்…” – பைரவி
“அப்டி தான். கல்யாணம் பன்னிட்டேனு உன்ன நெருங்கிடுவேன்னு பயமா? அதான் எல்லார் முன்னாடியும் சொன்னேனே அந்த பேச்சுக்கே இடம் இல்லனு”
பலமாக தலையை ஆட்டினாள், “அப்றம் ஏன் நான் எங்க கூப்பிட்டாலும் இவ்ளோ யோசனை, இவ்ளோ பயம். நான் ஒன்னும் அடுத்த மனுஷன் இல்லையே, சரி என்ன முழுசா ஒரு மாசம் கூட தெரியாது. ஆனா ஒரு பார்வை உன்ன தப்பா பாத்துருப்பேனா?”
நிறுத்தினான் அவளை பார்த்துக்கொண்டே, பிறகு ஏதோ நினைவு வந்தவனாக, “ஓ நான் மத்த பொண்ணுங்ககிட்ட பேசுறத வச்சு இவன் ஒரு பொம்பள பொறுக்கினு முடிவு பண்ணிட்டியா?”
கணவன் கண்களில் தெரிந்த கோவத்தில் வேகமாக பதில் வந்தது, “அப்டிலாம் இல்ல ஆனந்த். நீங்க அப்டி இல்லனு எனக்கு தெரியும்”
“வேற எந்த காரணம் சொல்லுவ?” – தேவா
“காரணம் இல்ல, நான் தான் அப்பயே சொன்னேன்ல எனக்கு டைம் வேணும்” – பைரவி
“அது நமக்கான வாழ்க்கையை ஆரமிக்கிறது, இப்டி பக்கத்துல வந்தா, ஒரே ரூம்ல இருந்தா-னு எல்லா நேரமும் கண்ணுல பயத்தோடேயே என்ன பாக்குறது எவ்ளோ வேதனைனு உனக்கு புரியாது பைரவி”
வேதனை நிறைத்திருந்தது அவன் குரல், “கடைசி வர எனக்கு மனைவியா இருக்க கூட வேணாம் ஆனா அந்த பயம், தயக்கத்தை மட்டும் தூக்கி வச்சிட்டு நம்பிக்கையோட என் கைய புடிச்சிட்டே இரு. போதும்டி… என் கடைசி காலம் வர” கண்ணீர் பெருகியது மனைவிக்கு கணவனின் சொல்லில் அடக்க முடியாத வருத்தத்தில்.
“சாரி ஆனந்த், நான் என்ன மாத்திக்க பாக்குறேன்”
“இவ்ளோ கஷ்டப்பட்டு அழுதுட்டே எனக்காக நீ மாற வேணாம் பைரவி” அமைதியாக கூறினான்.
கண்களை துடைத்து, “நிஜமா உங்களுக்காக சொல்லல. எனக்காகவும் தான் சொல்றேன். எல்லாமே அவசர அவசரமா நடந்ததால என்னால சட்டுனு உங்களோட நெருக்கத்தை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல” அவன் முகம் பார்த்து கெஞ்சியது அவள் விழிகள்.
“சரி… சரி அப்போ உனக்கு எப்போ என் கூட இருக்க பயம் வராதுன்னு தோணுதோ அப்போ சொல்லு நான் வர்றேன், அது வர தாத்தா வீட்டுலையே இருக்கேன்” இறங்கி வந்தான் மனைவியின் மனம் படித்து.
மூச்சு வாங்கியது பைரவிக்கு, இப்பொழுது தான் மெல்ல இல்ல அவனோடு இருக்க மனம் பழகி வர, அதற்குள் தன்னை தனியாக விட்டு செல்கிறேன் என்கிறானே என்ற அச்சம்.
“ம்ம்ம்?” – தேவா
வேணாம் என தலை அசைத்தாள், “ஏன்” என்றான் அவனும் உள்ளடக்கிய சிரிப்போடு.
“நீ… நீங்க கூடையே இருந்தா… இருந்தா தானே உங்க மேல பயம் போகும்?”
திக்கி திணறி அவள் கேட்ட கேள்வியில் மீசைக்கடியில் சிரிப்பை மறைத்து, “sure? அப்போ நான் இன்னைக்கு வீட்டுக்கே வரலாம்ல?” – தேவா
“ம்ம்ம்” தலையை ஆட்டினாள் பெண்.
“உனக்கு பிரச்சனை இல்லையே?” – தேவா
“இல்ல” – பைரவி
“இந்த ரூம்ல ஒரே ஒரு பெட் தான் இருக்கு, உனக்கு பிரச்சனை இல்லையே” தயங்கிய பாவை பிறகு அவன் முகம் பார்த்து சம்மதமாய் தலை அசைக்க, அவளின் அப்பழுக்கற்ற அந்த பார்வையில் கட்டுண்டு போனான் தேவா.
“சூப்பர். உனக்கு பிரைட் ரைஸ் புடிக்கும் தானே, இங்க ஒரு கடைல ரொம்ப நல்லா இருக்கும். நைட் அத வாங்கி அனுப்புறேன். சாப்பிட்டு படு. நான் வேகமா வந்துடுவேன்னு நினைக்கிறன்”
அவளை விட்டு எழுந்தவன் ஒரு ஸ்டடி டேபிள் ஒன்றில் இருந்த பெரிய புத்தக குப்பையினுள் கிடந்த பல கோப்புகளில் ஒன்றை தேடிக்கொண்டே, “உன் திங்ஸ் எல்லாம் இங்க வந்து வச்சுக்கோ, கபோர்டுல லெப்ட் சைடு உனக்கு தர்றேன்”
கணவன் பேச்சை கேட்டுக்கொண்டே எழுந்த பைரவி, அலமாரியின் அளவை பார்க்க எண்ணி அறைக்கு அருகிலே இருந்த அலமாரியை நெருங்கியவள் அதை சரியாக திறக்கும் பொழுது அவளை பார்த்துவிட்ட தேவா, “வேணா தொறக்காத…”
தேவாவின் வார்த்தையை மனைவி கேட்கும் முன்பே அவள் திறந்திருக்க, அவனது மொத்த உடையும் அவள் காலுக்கடியில் விழுந்து கிடந்தது.
அவள் காலுக்கடியில் விழுந்தது அவனுடைய உடைகள் மட்டுமல்ல, பல ஹெட்போன்ஸ், சார்ஜ்ர், இரண்டு மொபைல், எண்ணெய் டப்பா, பவுடர் டப்பா, சீப்பு, ஷேவிங் கிரீம், லேப்டாப் சார்ஜ்ர், பல மாத மற்றும் வர இதழ்கள், காலண்டர், விசிட்டிங் கார்ட்ஸ், இரு சக்கர வாகனத்திற்கு பயன்படுத்தும் இரும்பு பொருட்கள் என மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் என்னென்ன பயன்படுத்துவனோ அத்தனையும் பாதி பயன்படுத்திய நிலையில் அவன் அலமாரியில் அடைபட்டு கிடந்தது. ஒரு துணி கூட சரியாக மடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இல்லை, அத்தனையும் கசங்கி, துவைத்ததற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.
பைரவியை முந்திக்கொண்டு கீழே கொட்டிக்கிடந்த அத்தனை பொருட்களையும் அள்ளி அலமாரியில் அமுக்கி அமுக்கி திணித்து கதவை தேவா மூட, கீழே கதவின் விளிம்பில் ஒரு பெட்சீட் எட்டி பார்த்து நின்றது.
மேலே அலமாரியின் கையை பிடித்திருந்த தேவாவால் கீழே இருந்த அந்த துணியை திணிக்க முடியாமல் போக, “சக்கர, அந்த பெட்ஷீட்டை கொஞ்சம் உள்ள தள்ளி விடேன்” என்றான் மூச்சடைக்க.
“ஆஹ்? ம்ம்ம்” அவன் செய்வதையே தள்ளி நின்று விசித்திரமாக பார்த்த பைரவி அவன் கூறியதை செய்ய, எளிதாக கதவை அடைத்து சாவி கொண்டு பூட்டி வைத்தான்.
“பாத்தியா அதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆச்சு, நான் போய்ட்டு வர்றேன்” என்றவன் வெளியே சென்று மீண்டும் கதவிலிருந்து எட்டி பார்த்தான்,
“என்ன ஆனாலும் சரி, அந்த கபோர்டுட மட்டும் தொட்டுடாத” என்ற எச்சரிக்கையோடு வெளியே செல்ல என்ன முயன்றும் பைரவையால் சிரிப்பை வெளி காட்டாமல் இருக்க முடியவில்லை.