“போய் வாழைப்பழத்தை குடுடா… வந்துட்டான் எனக்கு ஆர்டர் போட” மகன் தலையில் வலிக்காமல் கொட்டினான்.
அந்த சிறு வாண்டோ தூசு போல் தட்டிவிட்டு, “ப்பா வாங்க நான் காளையனுக்கு பருத்தி கொட்டையும், பேரீச்சம்பழமும் குடுக்கணும், மாடு குளிக்கவே இல்ல இன்னும்” என்றான் மீண்டும் தந்தையின் தினசரி வழக்கத்தை நினைவுபடுத்தி.
“அடேய் அலாரம்… எனக்கு தெரியும்டா” தானாய் எதையும் செய்யும் பழக்கம் கொண்ட தேவாவிற்கு மகன் கட்டளைபோடுவது எப்பொழுதும் பிடிக்காது.
பிடித்தாலும் முறைத்துக்கொண்டு மகனை பார்த்தான். வேதவிர்க்கு தந்தையின் எண்ணம் புரிய தந்தையின் வேட்டியை பிடித்துக்கொண்டான். “வாங்க ப்பா” என.
“வேட்டிய புடிச்சு இழுத்தாலும் உள்ள டிரௌசர் போட்ருக்கான்டா இந்த தேவா” அரக்க சிரிப்பு ஒன்றை தேவா கொடுக்க தந்தையின் வேஷ்டியை விட்டு தந்தையின் கை பிடித்து அவனது உடலை ஏணியை போல் எண்ணி தந்தை கழுத்தோடு கட்டிக்கொண்டான் இறுக்கமாக.
மகனது விளையாட்டில் தந்தையானவன் அவனை பிடித்து கீழே நிறுத்த பார்க்க, மகனோ அவ்விடமே அதிரும் வகையில் வெற்றிக்களிப்பில் சிரித்தான்.
இருவரையும் பார்த்து சிரித்த பைரவி மீதமிருந்த வாழைப்பழங்களை காளையனுக்கு கொடுக்க போக அவளிடம் சமத்தாக வாங்கிக்கொண்டான் காளையன்.
இதை பார்த்த வேதவ் தந்தையிடமிருந்து இறங்கி, “அம்மா நானு” என ஓட, இப்பொழுது அவனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான் தேவா.
“அவன் என் தம்பிடா… என் சொல் பேச்சு கேட்டு என் பொண்டாட்டி குடுத்தா தான் சாப்பாடு வாங்குவான். நீ குடுத்தாலாம் வாங்க மாட்டான்”
“நான் குடுப்பேன்… நான் குடுப்பேன்… ம்மா ம்மா” செல்லம் கொஞ்சி அன்னையை அழைத்தான். தேவா தான் விடவில்லையே.
அவனை கேலி செய்தே கையிலே வைத்துக்கொண்டான்.
குழந்தைகள் அனைவரையும் அப்புறப்படுத்தி ட்யூப் கொண்டு காளைகளை குளிப்பாட்ட, தந்தைக்கு உதவி செய்கிறேன் என்னும் பெயரில் தானும் குளித்து தந்தையையும் குளிப்பாட்டிய பிறகே நிம்மதியானான். ஆடிய ஆட்டத்தில் சிறிது சோர்வு தட்ட, தந்தையில் கைகளிலே தஞ்சமடைந்தான் வேதவ்.
“ப்பா… பசிக்கிது ப்பா” என்றான் தேவா கழுத்தில் முகம் புதைத்து.
“அது பாசம்டி… இது காதல். அளவற்ற காதல்” கிசுகிசுப்பாக கூறியவன் மனைவி இதழ் நோக்கி குனிய முகத்தை திருப்பிய பைரவியின் செயலில் ஈர முத்தம் கன்ன கதுப்புகளுக்கு இடம் பெயர்ந்தது.
“ப்ச்” மனைவியை முறைத்தான் தேவா.
விழி விரித்து அவளும் முறைத்தாள், “எல்லாரும் வெளிய தான் இருக்காங்க… கதவும் திறந்துருக்கு” தலையை ஆட்டி அவளிடமிருந்து உணவை வாங்கி அவளுக்கே ஊட்டினான்.
“ரொம்ப டயர்டா இருக்கியே சக்கரை… நான் மட்டும் போயிட்டு வரவா ஆஸ்ரமதுக்கு?” கதவை அடைத்த பைரவி தேவா அருகில் வந்து அமர்ந்து அவன் இடையோடு அணைத்துக்கொண்டாள்.
“அவங்க வேணாம். பாரு இப்போவே எப்படி தூங்குறானு. வெள்ளன எந்திரிச்சு அசத்தில இருகாங்க”
“இல்லங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் அவங்களுக்கும் தெரியனும். எல்லாமே ஈஸியா கெடைக்கிது, லைப் இவ்ளோ தான் போலனு நினைச்சுட்டு கூடாது”
“சின்ன பசங்கடி. இப்ப சொன்னாலும் புரியாது”
“இது தான் தப்பு. இந்த காலத்து பசங்களுக்கு எல்லாமே நாம சொல்லாமலே புரியுது. கிருஷ்ணாக்கு இப்போவே நல்லா புரியிதுங்க. வேதவ் அப்டியே உங்கள மாதிரி. எல்லாமே தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே காட்டிக்கிறான். எல்லாத்தையும் பழக்கி விடலாம்.
குடுத்து சாப்பிடணும், சாப்பாட காக்க வைக்க கூடாது, ருசியான சாப்பாடு எல்லாருக்கும் தினமும் கிடைக்கிறது இல்லனு எல்லாமே தெரியனும் அவங்களுக்கு”
“என் பசங்கடி அவங்க. சாப்பாடு அவ்ளோ ஈஸியா வர்றது இல்லனு பொறந்ததுல இருந்தே பாத்துட்டு தான் இருக்காங்க. வறுமையை காட்ட கூட்டிட்டு போகலாம். ஆனா ஒரு மணிக்கு மேல தான் போகணும். அது வர கொஞ்சம் டிரஸ் மாத்திட்டு ரெஸ்ட் எடு”
மனைவி நெற்றியில் முத்தமிட்டு கதவருகில் சென்றவன் சென்ற வேகத்திலே மீண்டும் வந்து மனைவியின் தாடையை பற்றி இதழை சிறை செய்தான்.
ஒரு நிமிடம் நீண்ட அந்த முத்தத்தை நிராகரிக்க மனம் வராமல் கண் மூடி இழைந்தவளது சோர்வான உடலுக்கு தெம்பூட்டியது அவன் அணைப்பும், முத்தமும். முத்தம் முற்று பெற்று பிரிய அவள் நெற்றியில் முட்டி, “இனிக்கிறடி நாட்டுச்சக்கரை” வழக்கம் மாறாத பாராட்டையும் வைத்து சென்றுவிட்டான் காதல் கணவன்.
உடை மாற்றி வந்த பைரவிக்கு உறக்கம் வந்தாலும் வீடு முழுதும் ஆட்களை வைத்து தூங்க மனம் வரவில்லை. உறவினர்களோடு கலந்து பொழுது இனிமையாக சென்றது. குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் இரு இரு குழந்தைகள் பிறந்திருக்க, வீடே ஜெகஜோதியாக காட்சியளித்தது.
எங்கும் சிரிப்பு சத்தமும் கேலி பேச்சும் மட்டுமே. வரவேற்பறையில் முற்றத்திலும் ஆங்காங்கு ஒருவர் அமர்ந்து சிலர் படுத்து என பேச்சுக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இல்லாமல் செல்ல, நேரமும் வேகமாக சென்றது.
வீட்டினுள் பரபரப்பாக வந்த தேவா மனைவியிடம், “பைரவி கிளம்பலாம் வா”
மனைவியிடம் கூறி பெரியவர்களை பார்த்து, “ஆஸ்ரமம் வர போயிட்டு வர்றோம்… மதிய சாப்பாடுக்கு அங்க சொல்லிருந்தேன்” என்றான் அனைவருக்கும் பொதுவாக.
“ஏன்டா இங்க தான் ஊரையே கூட்டி சாப்பாடு போட்டுட்டியே இன்னும் என்ன தானம் தர்மம்?” என்றார் அவன் தந்தை.
“இங்க ஊரையே கூட்டி விருந்து வச்சது பாசத்துக்கு. உண்மையான தானமே இனி தன் ப்பா… இருக்குறவங்களுக்கு குடுக்குறத விட இல்லாதவர்களுக்கு குடுத்தா தான் புண்ணியம். வர்றிங்களா நீங்களும்?”
ராஜரத்தினம், “நான் வரல ப்பா. நீங்க போயிட்டு வாங்க” மகனின் முன்னேற்றம், செயலில் இருக்கும் தெளிவு எல்லாம் தந்தையை அனைத்திலும் வாயடைக்க வைத்தது. இப்பொழுதை போல.
வீட்டினர் அனைவரிடமும் கூறி குடும்பத்தோடு தேவா ஆஸ்ரமம் சென்று அவர்கள் கையாலே உணவை பரிமாறி அவர்களோடே தானும் அமர்ந்து உண்டு மன நிறைவோடு இல்லம் வந்தனர்.
வேதவ் என்ன நடந்தது என்றே தெரியாமல் மகிழ்ச்சியாக முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அன்னையிடமும், பின்னிருக்கையில் இருந்த சகோதரியிடமும் மாறி மாறி தாவி ஆடிக்கொண்டே வந்தான்.
தந்தை முகத்தையே கிளம்பியதிலிருந்து ஏதோ கேட்கும் வேட்கையோடு வந்தாள் கிருஷ்ண ஜீவனி.
மகளை அடிக்கடி பார்த்த தேவா சிரிப்போடு மக்களிடம் கேட்டான், “என்னடா அப்பாகிட்ட கேக்கணும்?” என்று.
“அங்க நாம சாப்பிட்டோம்ல ப்பா சாப்பாடு. அது எப்படி ப்பா இருந்துச்சு?”
“அப்பா நோ லைஸ்… நீங்க தானே சொல்லிருக்கீங்க? என் பக்கத்துல சாப்பிட்டால ஒரு பொண்ணு அவளும் அதே தான் ப்பா சொன்னா. ஆனா அந்த சாப்பாடு சுத்தமா நல்லா இல்ல. ஏன் பொய் சொல்றிங்க எல்லாரும்?”
உணவு நன்றாக இல்லாவிடினும் தனக்காக இலையில் வைத்த உணவை வீணாக்காமல் முழுதாக உண்ண வேண்டும் என்பது தேவா மற்றும் பைரவி சொல்லி கொடுத்து வார்த்தை. உணவு ஒவ்வாமையை தந்தாலும் ஒரு பருக்கை கூட வீணாக்காமல் கிருஷ்ண ஜீவனி உண்டு முடித்தாள்.
மனைவியை பார்த்து சிரித்த தேவா, “ஏன் சாப்பாட நானே அரேஞ் பண்ணலன்னு கேட்டியே… இதுக்காக தான்” என்றவன் மகளிடம் திரும்பி மெல்ல சிரித்தான்.
“உனக்கு எது வேணும்னாலும் அப்பாகிட்ட இல்லனா அம்மாகிட்ட கேக்குறலடா. அதே மாதிரி எல்லாருக்கும் அம்மா அப்பா இருக்க மாட்டாங்க கிருஷ்ணா. அங்க இருக்க பசங்களுக்கு அம்மா அப்பா இல்ல. அங்க குடுக்குற சாப்பாடை தான் சாப்பிடுவாங்க, சாப்பாடு குடுக்குற நேரத்துல தான் சாப்பிடுவாங்க.
எல்லா நேரமும் வயிறார சாப்பிடுவாங்கணும் சொல்ல முடியாது. இருக்குறத குறை சொல்லாம சாப்பிட்டு, சந்தோசமா இருக்க பழகிட்டாங்க. அத தான் இன்னைக்கு நீயும் பாத்த” தந்தை கூறி முடித்ததும் மகளிடம் சில நிமிடங்கள் அமைதி உண்டானது.
பைரவி மகளை அடிக்கடி திரும்பி பார்க்க என்ன நினைத்ததோ அந்த வாந்தி இருக்கையில் எழுந்து நின்று அன்னையின் கழுத்தோடு பின்னிருந்து கட்டி பைரவி கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
அதே போல் தந்தைக்கும் செய்து அப்படியே நிற்க வாகனத்தை ஓரமாக நிறுத்தி மகளை ஒரே கையில் முன்னுக்கு இழுத்து, “என்னாச்சுடா என் குட்டிக்கு?” என்றான் மகளின் கன்னத்தை ஆதூரமாக வருடி.
“அவங்க அம்மா அப்பா எங்க ப்பா?” என்றாள் சோகமாக.
“தெரியலடா அப்பாக்கு” குழந்தையின் மனதில் இந்த வயதிலே எதிர்மறையான கருத்தை புதைக்க விரும்பவில்லை தேவா.
“அவங்க ஊருக்கு போய்ட்டாங்களா?”
“இருக்கலாம் கிருஷ்ணா” என்றாள் அன்னை.
“பாவம்ல ம்மா அவங்க எல்லாரும்?” பைரவி ஆம் எனவும், “நானும் வேதவ்வும் லக்கி தான். இல்ல ப்பா?” என்றாள் சிரிப்போடு.
மகளின் கன்னத்தில் முத்தமிட்டு, “இல்ல டா. அப்பாவும் அம்மாவும் தான் லக்கி என் கிருஷ்ணா மாதிரி எல்லாத்தையும் புரிஞ்சுக்குற பொண்ணு கிடைக்க” தந்தையின் கன்னத்தில் வளர்ந்திருந்த தாடி குத்த குலுங்கி கிங்கிணி மணியாக சிரித்தாள் செல்ல மகள்.
“அப்பா கூசுது” தந்தையின் முகத்தை தள்ளி வைத்து பெண் குழந்தை சிரிக்க, வேதவ் உற்சாகமாய் அன்னையிடமிருந்து சகோதரியை தள்ளிவிட்டு, “அப்பா எனக்கு எனக்கு” என தன்னுடைய கன்னத்தை தந்தையின் கன்னத்தோடு ஒட்டி இளைத்து வேண்டினான்.
தந்தையானவனும் மகன் சொல்படியே நடக்க மகனின் சிரிப்பு சத்தமும் அதை பார்த்த மகளின் சிரிப்பு சத்தமும் அழகாக வாகனத்தை நிறைத்தது.
நிறைவான மனதோடு அன்றைய நாள் கடக்க, புதிய வீட்டில் அனைவருக்கும் முதல் நாள் இரவு.
நாயகி மகன், பேத்தி, பேரன், மருமகள் என அனைவரையும் நிற்க வைத்து சூடம் தடவி பொருத்தி அவர்களுக்கான அறைக்குள் சென்றுவிட்டார். மற்றவர்கள் அனைவரும் அடுத்த நாள் வேலை இருக்க அவரவர் இல்லம் நோக்கி சென்றுவிட்டனர் கணவன் ராஜரத்தினதோடு.
குழந்தைகள் இருவரையும் அவர்களுக்கென பைரவி பார்த்து வடிமைத்திருந்த குழந்தைகள் அறையில் படுக்க வைத்து தங்களது அறையில் நுழைந்தாள் பைரவி.
தோட்டத்தின் அருகே இருந்த காரணத்தினால் ஜன்னலோரம் அமைத்திருந்த கொசு வளையத்தையும் தாண்டி உள் நுழைந்திருந்த கொசுக்களை அடிக்கும் வேளையில் தேவா இருக்க, பைரவி வந்ததை பார்த்தவன்,
“எப்படி சக்கரை அந்த குட்டி வீட்டுல கொசு வளையும் இல்லாம இத்தனை வருஷம் சமாளிச்சோம்… ஒரு வேலை இப்போ ஆடம்பரம் கூடிடுச்சோ?” சந்தேகமாய் கேட்ட கணவனை பின்னிருந்து அனைத்து அவன் முதுகில் சாய்ந்து கண் மூடி கிறங்கினாள்.
“எந்த வித்தியாசமும் இல்ல. அப்போவும் முழிச்சிருந்து எங்களுக்காக அடிக்கடி கொசு அடிச்சிட்டு இருப்பிங்க. இப்பவும் அதே தான்” என்றாள் அவனுள் இன்னும் புதைந்து. மனைவி பக்கம் திரும்பிய தேவா அவளை தனக்கு முன்னாள் நிறுத்தி நெஞ்சோடு அணைத்தான்.
“பசங்க தூங்கிட்டாங்களா?”
“ம்ம் ஏதோ ஒரு ஆர்வத்துல தனியா படுத்துக்குறேனு சொல்லிட்டாங்க. நாளைக்கு பாருங்க கனவுல சாமி கண்ணா குத்துச்சு வயித்த குத்துச்சுனு கதை அடிக்கும் ரெண்டும்”
மனைவி சிரிக்க, “இப்ப தான் சக்கரை எனக்கு சந்தோசமா இருக்கு. மனசுல ஒரு ஓரத்துல அரிச்சிட்டே இருந்தது சரியாகிடுச்சு. என் பொண்டாட்டி ஆசைப்பட்ட ஒரு வீடு. நான் ஆசைப்பட்ட ஒரு குடும்பம். நல்லா இருக்குல்ல?” கண்ணை திறவாமல் ஆமாம் என்றாள்.
“ஹ்ம்ம் ஆனா இன்னும் ஒண்ணே ஒன்னு தான் பாக்கி” பெரு மூச்சு விட்டான்.
“என்னவாம்?”
“என் பொண்டாட்டி என்ன கல்யாணம் பண்ணிக்கிற அன்னைக்கு நான் ஸ்டேஜ்ல நிக்க, அவ தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான்-னு ஆடிட்டே வரணும்னு ஆசை பட்டேன்”
மனைவியை தன்னிடமிருந்து விலக்கி, “உனக்காக எவ்ளோ பெரிய வீடு கட்டிருக்கேன், எனக்காக ஒரே ஒரு டான்ஸ் ஆடு சக்கரை” கெஞ்சினான் அவள் நாடி பிடித்து.
அவனை கையை தட்டிவிட்டு, “நான் ஆட மாட்டேன். வேணும்னா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு அவ கூட சேர்ந்து ஆடுங்க” தேவாவை விட்டு விலகி வந்து படுக்கையை தயார் செய்தாள் பைரவி.
“உன்ன விட்டு போக மாட்டேன்னு தைரியமா சுத்துறியாடி? மவளே இப்போ நினைச்சாலும் பொண்ணுங்க க்யூல நிப்பாங்க” என்றான் போலியான கோவத்தோடு.
“ஆல் தி பெஸ்ட் புருஷரே. கல்யாணத்துக்கு மறக்காம பத்திரிக்கை வச்சிடுங்க” முதுகு காட்டி நிற்கும் மனைவியின் இடையை அசுர வேகத்தில் திரும்பியவன் அவள் தாடையை பற்றி முகத்திற்கு நேராக நெருங்கினான்.
கண்கள் கோவத்திற்கு பதிலாக ஆசையில் சிவப்பேறியிருந்தது, “ஆடுடி எனக்காக” பற்களை கடித்தான்.
அவன் கண்கள் கொடுத்த ஆசையில் உடல் சிவக்க அவன் உடலோடு மேலும் ஒட்டி நின்றாள் தேவாவை போதையேற்றவே, “முடியாது” என அழுத்தமாக மறுத்து.
ஒரு இன்ச் இடைவெளியே விட்டு நிற்கும் மனைவியின் சிவந்த கன்னங்களில் பற்தடயம் பட கடித்த தேவா, “சக்கரை… எனக்காகடி” குரலில் இருந்த கணம் வார்த்தையில் இல்லை.
வலித்தாலும் வலியை அவள் காட்டவில்லை, “லஞ்சம் குடுக்கவா?” கேட்டாள் மாறாக. அவனுக்கு பிடித்த தேர்ந்தெடுக்கமாகவே இருந்தாலும் மம்பட்டியான் ஆசையை தூண்டியது.
“இல்ல இல்ல நீ ஆடு” என்றான் பிடிவாதமாக.
“நான் சொன்னது தான் இல்லனா உங்களுக்கு நஷ்டம்” தேவாவிடமிருந்து பைரவி விலக, மீண்டும் கைகளினுள்ளே இழுத்து வைத்துக்கொண்டான் மனைவியை.
“இல்ல லஞ்சம் கொடு” இறங்கி வந்த கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய கால்களை எம்பி அவன் கழுத்தோடு கைகளை மாலையாக்கி கணவனது இதழ்களை சிறை செய்திருந்தாள் பைரவி.
அளவாக தொடங்கிய அந்த முத்தம் அழகாக ஆழம் நோக்கி பயணிக்க, தேவாவின் கைகள் மெல்லிய அவளது டீ-ஷர்ட்டை தாண்டி அவளது வெற்று இடையில் மெல்ல பயணிக்க மெல்லிய கைகள் கதவை தட்டும் சத்தம் வந்து இனிய பொழுதை கலைத்தது.
பிரிய மனமில்லாமல் பிரிந்த தேவா மனைவியின் உடையை சரி செய்து, “ஏன்டி உன் பக்கத்துல நான் வந்தாலே உன் பிள்ளைகளுக்கு மூக்கு வேர்த்துடுது?” புலம்பிக்கொண்டே கதவை திறக்க தூக்கம் வழிந்தோட கண்களை கசக்கி தன்னுடைய முகம் பார்த்து நின்ற குழந்தைகளை பார்த்து சிரிப்பு பிறந்தது.
“அப்பா பயமா இருக்கு” மகன் தந்தையின் கைகளில் சரண் புக, மகளோ தந்தையின் கால்களை கட்டிக்கொண்டாள்.
இருவரையும் கைகளில் அள்ளி படுக்கைக்கு வர மகனை மனைவியிடம் கொடுத்து மகளை தன் நெஞ்சோடு அணைத்து மறக்காமல் எம்பி மனைவிக்கு நெற்றி முத்தம் கொடுத்து, “குட் நைட் சக்கரை” உறக்கத்தில் ஆழ்ந்தான் சிரிப்போடு.
கணவனை பார்த்துக்கொண்டே இருந்த பைரவி எத்தனை அழகான வாழ்க்கை கிடைக்க காரணமாய் இருந்த இறைவனை இறுதியாக அந்நாளில் வழிபட்டு மகிழ்ச்சியாக துயில்கொண்டாள்.
ஆனந்தத்தில் திக்குமுக்காடடும் அந்த அழகு குடும்பம் ❤️