நம்ம மாதேஷ் கடைக்கு போய்ட்டு வந்து இந்த மூணு குடும்பமும் சமைச்சு சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இவங்களைப் பத்தி பார்த்துட்டு வந்துடலாம் வாங்க.
ரங்கநாதன்-ஜானகி,
ஜெயராம்-ராஜேஸ்வரி ,
ராஜேந்திரன்-ஜோதிலக்ஷ்மி,
இந்த மூன்று தம்பதிகளுக்கு பிறந்தது தான் அந்த ஏழு சனியன்கள் சாரி சாரி ஸ்வரங்கள்.
ரங்கநாதன்,ஜெயராம்,ராஜேந்திரன் மூவரும் ஒரே ஊரில் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த பால்ய சிநேகிதர்கள், பின் ஒன்றாக சென்னை வந்து ஊரிலிருந்த சொற்ப நிலங்களை விற்று விட்டு வந்த பணத்தைக் கொண்டு சிறிதான துணிக்கடை ஒன்றை துவங்கிய மூவரும் இன்று அவர்களின் அயராத உழைப்பின் மூலம் சென்னையிலே பெயர் சொல்லும் ஜவுளிக்கடைகளில் ஒன்றாக தங்களின் கடையை உயர்த்தியவர்கள், இரண்டு கிளைகளையும் தொடங்கி நிர்வாகித்து வருகின்றனர்.
அவர்களின் நட்பை புரிந்து கொண்டு நடப்பதைப் போல் அவர்களுக்கு மனைவிமார்களும் அமைந்துவிட, இத்தனை வருடங்கள் கழித்தும் அவர்கள் நட்பில் சிறு கீறல் கூட விழவில்லை.
இவர்களைப் போல் இவர்கள் பிள்ளைகளும் நட்புடன் இருக்க வேண்டும் என மூன்று பெற்றோரும் ஆசைப்பட, அதுவும் நடந்தது ஆனால் அவர்கள் எதிர்பார்க்காததும் சேர்த்து நடந்தது.
ரங்கநாதன் தம்பதியருக்கு முதலில் ரகுராமும் அவனிற்கு பின் மூன்றரை வருடங்கள் கழித்து மாதேஷும் பிறந்தனர்.
ஜெயராம் தம்பதியருக்கு முதலில் சர்வாவும் அதற்குப் பின் நான்கு வருட இடைவேளையில் தான்வியும் பிறந்தனர்.
ராஜேந்திரன் தம்பதியருக்கு முதலில் ஓவியாவும் அவளைத் தொடர்ந்து அதே நான்கு வருட இடைவேளையில் இரட்டையரான இலக்கியாவும் நவ்யாவும் பிறந்தனர்.
இவர்கள் ஏழு பேரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் பெற்றோர்கள் நினைத்திருக்க, அவர்களோ அதற்கு மாறாய் வீட்டில் முதலாய் பிறந்த மூவரும் ஒரு குழுவாகவும் அடுத்து பிறந்த நால்வரும் இன்னொரு குழுவாகவும் பிரிந்து சிறுவயதிலிருந்தே சண்டைகோழியாக மாறி முட்டிக் கொண்டே வளர்ந்தனர்.
பெரியவர்கள் மூவரும் சற்று பொறுப்பாய் இருப்பதால் பெற்றோர்களின் நன்மதிப்பைப் பெற்று சிறியவர்களின் வயிற்றெரிச்சலையும் சேர்த்து வளர்த்துக் கொண்டே சென்றனர்.
சிறுவயதிலிருந்தே இவர்கள் பயப்படும் ஒரே ஆள் ரகு மட்டுமே. அவன் மேல் கொலைவெறியில் இருந்தாலும் அவன் முன் எதிர்த்துப் பேசாமல் அமைதியாகச் சென்றுவிடும் இந்த வானரக் கூட்டம்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்களோடு இவர்களின் சண்டையும் வளர்ந்து கொண்டே போக, இப்போது சிறியவர்கள் அனைவரும் கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க, பெரியவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு கட்டுமானக் கம்பெனியைத் திறம்பட நடத்தி வருகின்றனர்.
போகப்போக இவங்களைப் பத்தி இன்னும் நிறையா தெரிஞ்சுக்கலாம் , இப்போ இந்த சிறுசுங்க கூட்டம் ஏதோ சதித் திட்டம் போடுது அது என்னானு போய் பார்ப்போம் வாங்க…
ஓவியாவின் வீட்டு மொட்டை மாடியில் மாதேஷ்,இலக்கியா,தான்வி,நவ்யா நால்வரும் கூடியிருந்தனர்.
“அவங்களை ஏதாச்சும் பண்ணியே ஆகணும் நம்ம இமேஜை ரொம்பவே டேமேஜ் பண்றாங்க” என்று தான்வி கோவமாகச் சொல்ல,
“ஆமாடி .. ஏதோ நம்மளை விட ஒரு நாலு வருஷம் முன்னாடி இந்த உலகத்தை பார்த்துட்டாங்க அதுக்காக எல்லாமே அவங்களுக்கு மட்டும் தான் தெரிஞ்ச மாதிரி ஓவரா ஆடுறாங்க” என ஓவியாவை நினைத்து கடுப்பில் கூற,
மாதேஷோ ” ஆமா நட்டு .. இது கூட பரவாயில்லை வீட்டுல கடைசியா பிறந்தவங்கள சமபளமே இல்லாத வேலைக்காரங்களா யூஸ் பண்றாங்க.. இதுல எங்கப்பா வேற எப்பப்பாரு அவனோட கம்பேர் பண்ணி பண்ணியே என் உயிரை எடுக்குறாரு .. அவன் என்ன பெரிய இவனா??” என அவன் பொறும,
அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்த இலக்கியா, “இங்க மட்டும் வீராவேசமா பேசு ஆனா உங்க அண்ணனா பார்த்தா பேன்ட்லயே மூச்சா போய்ருற மாதிரி பயந்து நடுங்கு.. நீயெல்லாம் பையன்னு வேற சொல்லிக்காத எருமை..” என அவனைக் கிண்டல் செய்ய,
மாதேஷ் கோபத்தோடு அவள் மண்டையில் கொட்டியவன், “ஹேய் தின்னிப்பண்டாரம் என்னையை கடுப்பேத்துன மாடியில இருந்து உன்னை தள்ளி விட்ருவேன் பார்த்துக்கோ” என மிரட்ட,
அதில் அவளுக்கும் கோவம் வர, இருவரும் அடித்துப் பிடித்து உருள ஆரம்பிக்க அவர்களைப் பிரிப்பதற்க்குள் தான்விக்கும் நவ்யாவிற்கும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
“எருமைங்களா அவங்களை வச்சு செய்ய ப்ளான் போட வந்தா இங்க நமக்குள்ள சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க அறிவிருக்கா உங்களுக்கு??” என தான்வி இருவரிடமும் பொரிய,
முகத்தை தொங்கபோட்ட இருவரும் மெதுவாக ,”சாரி” என ஒருசேரக் கூறினர்.
பின் நால்வரும் தீவிரமாக ஒவ்வொரு மூலையில் அமர்ந்து அவர்களின் உடன்பிறப்புகளை கவிழ்க்க திட்டத்தை யோசிக்கத் தொடங்கினர்.
அவர்கள் யோசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஓர் இனிமையான இன்னிசை என்று சொன்னால் மற்ற மூவரும் என்னை கொன்று விடுவர், குறட்டைச் சத்தம் அவர்களின் காதை நிறைத்தது.
சப்தம் எங்கிருந்து வருகிறது என அவர்கள் பார்க்க, அங்கு மாதேஷ் நிம்மதியாக கைகளை தலைக்குக் கொடுத்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.
அதைக்கண்டு மூவரும் கொலைவெறியில் தண்ணியைப் பிடித்துக் கொண்டு வந்து அவன் மேல் ஊற்றி எழுப்பினர்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்து உலுக்கி எழுந்தவன், ‘ எங்க என் ஹன்சிகா!!!! எங்க ரோஜாப்பூ!!! எங்க நான் வாங்குன மேன் ஆஃப் தி மேட்ச் கப்!!! எங்க ஸ்டேடியம்!!!’ என சம்பந்தமே இல்லாமல் உளறிக்கொண்டே கண்ணைக் கசக்கியவன் அங்கு நின்ற மூவரையும் கண்டு ,”என்னா ஹன்சி குட்டி ஒன்னுக்கு மூணா தெரியுற?? அதுவும் பஞ்சரான டேங்கர் லாரி மாதிரி ஏன் இப்படி அதுக்குள்ள அட்டு பீஸா தெரியுற?” எனக் கேட்க,
அதில் பத்ரகாளியாய் மாறி மூவரும் உக்கிரமாய் அவனை முறைத்து பின் மொத்தத் துவங்கினர்.
“பன்னாடை நாங்க பஞ்சரான லாரியா?? அதை தேஞ்சு போன டயர் மாதிரி மூஞ்சியை வச்சிக்கிட்டு நீ சொல்லக்கூடாது.. உன்னை ஐடியா யோசிக்க சொன்னா கனவா கண்டுகிட்டு இருக்க?? எருமை” என அவர்கள் மூவரும் அவனைப் போட்டு புரட்டி எடுத்து விட்டனர்.
“அட ராட்சஷிங்களா கொஞ்சம் பொறுங்கடி.. காலையில நான் இந்தியாக்கு ஆடுற மாதிரி கனவு வந்துச்சு, ஒரு பால் ஆறு ரன்.. தூக்கி அடிச்சேன் அப்போ பார்த்து ஹன்சிகா ரெட்ரோசோட என்னைப் பார்த்து ஓடி வந்துட்டு இருக்கா கரெக்டா அதே நேரம் எங்கப்பா வந்து எப்பயும் போல சுப்ரபாதம் பாடி என்னைய எழுப்பி விட்டுட்டாரு.. அதான் இப்போ தூங்கி அது சிக்ஸா இல்லை அவுட்டா இந்தியா ஜெய்ச்சுச்சா இல்லையா என்னைத் தேடி ஓடி வந்த ஹன்சிகா நிலமை என்னன்னு போய் லைட்டா தூங்கி கனவுல போய் பார்த்துட்டு வந்தா அதுக்கு ஒரு சின்ன பையனை இப்படியா வெளுப்பிங்க.. உங்களைக் கட்டிக்கப் போறவன் செத்தான்..” என அவன் மூச்சு விடாமல் பேசி முடிக்க,
அப்போது மட்டும் அவர்களுக்கு சக்தியிருந்தால் பார்வையாலே அவனை பஸ்பமாக்கியிருப்பார்கள் மூவரும்.
பின் அவனைத் திட்டிவிட்டு மீண்டும் நால்வரும் யோசிக்கத் தொடங்க, இறுதியாக அவர்கள் உடன்பிறப்புகளை எப்படி வைத்து செய்வது என்று ஒரு திட்டத்தைத் தீட்டி விட்டு அதை இன்று இரவு செயல்படுத்துவதாக முடிவெடுத்துவிட்டு நால்வரும் கீழே கிளம்பினர்.
இவர்கள் போட்ட திட்டத்தில் இவர்களே மாட்டப்போவது தெரியாமல் இவர்கள் கிளம்பிச் செல்ல விதியும் இவர்களைப் பார்த்து சிரித்தவாறு அவர்களைக் கடந்து சென்றது.
-நட்பாகும்..