ராம் வெட்ஸ் சீதா -8(2)
வீட்டில் இருந்து கிளம்பிய வெற்றியின் மனது முழுவதும் அவனின் ரதி குட்டியை எப்போ பார்ப்போம், அவளுக்கு ஏதும் ஆகிட கூடாது, அவளால ஒரு சின்ன காயம் வலி கூட தாங்கிக்க முடியாதே, “என்றவனின் நினைவு அவனின் நிச்சியதார்தம் அன்று தனியறையில் ராதா கூறியது பற்றி யோசித்தது..
அவனும் அவன் ரதி குட்டியை பார்க்க ஒரு மணி நேரம் ஆகும், அதுக்குள்ள நாமளும் ராதாவின் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போயிட்டு பார்த்துட்டு வந்துடலாம்.
இதோ வெற்றி வண்டி சக்கரம் சுத்துதுல அதுல தான் ரீல் சுத்துது.
வாங்க பிளாஷ்பேக் கிட்ட போகலாம்..
“ஆமா நீ ஏன் உன் முகத்துல மை பூசிக்கிட்டு ஸ்கூலுக்கு போகற, வெளியே பேசிக்கிட்டாங்க நீ கருவாச்சி போல இருப்ப ன்னு, எதுவா இருந்தாலும் இப்போவே உண்மையை சொல்லிட்டா எந்த பிரச்சனையும் வராது “, என்றவனின் சொல்லை கேட்டவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் போல பொலவென அருவி போல் கொட்டியது.
தன்னவள் கண்ணீர் விடுகிறாள், என்றதும் அவனுக்கு மனது பாரமாக தான் இருந்தது.
இருந்தாலும் உண்மையை வாங்க வேண்டியது அவனின் கடமை அல்லவா!
“சொல்லு ரதி குட்டி, என்ன பிரச்சனை உனக்கு “என்று அவளின் கன்னத்தை தனது இரு கைகளால் பிடித்து கேட்ட அவனவளோ “அத்தான் என்னைய ஒருத்தன்,”என்று விசும்பலோடு தேம்பியவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதறி அழுதாள் ராதா.
“ப்ச், அழாத சொல்லு ரதி குட்டி, “என்றவனிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்ததை கூற ஆரம்பித்தாள் பெண்ணவள்.
ராதா ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு முழுஆண்டு தேர்வு விடுமுறையில், அவளின் தோழி சீதாவோடு தான் எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருப்பாள்.
சீதாவை விட ரோஜா இதழை போல் சிவந்த நிறம் கொண்டவள் ராதா.
பள்ளி விடுமுறையில் ஒரு நாள் சீதாவும் ராதாவும் மதியம் வேளையில் ஊர் சுற்ற சென்றனர்.
அதே ஊரில் வசிக்கும் திருநாவுக்கரசு. அவரின் மனைவி கோமளம். இந்த தம்பதியருக்கு இளவரசி என்ற மகனும், இளவரசன் என்ற மகனும் உள்ளன.
அதில் திருநாவுக்கரசு எப்போதும் நேர்மையை கடைபிடிப்பவர். அவரின் மகள் இளவரசியும் “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை “என்பது போல் தந்தையின் சொல்லில் மந்திரமாக இருப்பாள்…
ஆனால் இளவரசனோ “தாயிற் சிறந்தது கோவிலுமில்லை ” என்பது போல் அவன் தாய் கோமளத்தையே கடவுளாக பார்ப்பவன்.
ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் திருநாவுக்கரசு தனது மனைவி கோமளத்திடம் சரியா பேசுவது கிடையாது, ஏன்னெனில் அவரின் மனைவி செய்யும் தொழிலோ அடுத்தவர்களின் குடும்பத்தின் பாவத்தை விலை கொடுத்து வாங்கும் தொழிலாயிற்றே.
அது திருநாவுக்கரசுக்கு பிடிக்காமல் போகவே மனைவியிடம் எவ்வளவு சொல்லி பார்த்தார், கணவனின் சொல்லை செவியில் வாங்காமல் இருந்த கோமளாவுக்கு செய்யும் தொழிலே தெய்வமாக தெரிந்தது.
ஊரில் உள்ள ஒதுக்குப்புறத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு சிறிய தாள் வீட்டை கட்டி, அங்கு கஞ்சா, போதை, கள்ளச்சாராயம் விற்று பிழைப்பை நடத்தி வருகிறார்.
திருநாவுக்கரசு விவசாயநிலத்தில் வியர்வை சிந்தி உழைத்து, அதில் வரும் வருமானத்தில் மகளுக்கு ஒரு பகுதியை தனியாக சேமித்து வைத்திருப்பார்.
ஆனால் கோமளமோ ஊரின் பாவகணக்கை அதிகப்படுத்தி கொண்டும், மகன் இளவரசனுக்கும் அவர் செய்யும் தொழிலை கற்று கொடுத்தார்.
ஒரு நாள் ராதாவும் சீதாவும் புளியங்காய் அடித்து வீட்டுக்கு புளி எடுத்துக்கொண்டு வரும் வழியில் கண்டார்கள் கோமளத்தின் திருட்டு பிழைப்பை.
மறைவான இடத்தில் நின்று வேடிக்கை பார்த்த இருவரும் இளவரசனின் விழியில் சிக்க, அவர்களோடு ஒரே ஓட்டமாக ஓடி ஊரின் உள்ளே நுழைந்த பிறகு தான் யோசித்தார்கள்…
உடனே ராதா வீட்டுக்கு சென்று அவள் தாய் சிவகாமியிடம் நடந்ததை சொல்ல சிவகாமியோ அதிர்ச்சி அடைத்தார்.
அந்த நேரத்தில் ஊரின் பஞ்சாயத்து தலைவரின் வீட்டின் முன்னால் நின்று ஒப்பாரி வைத்தார் ஒரு வயதான பெண் ராஜி.
வாசலில் சத்தம் கேட்க வீட்டில் உள்ளேயிருந்து வந்தார் ஒரு ஐம்பது வயது பெரியவரான பஞ்சாயத்து தலைவர் துரைசிங்கம்.
வந்தவரை பார்த்து கைகளை கும்பிட்டு அவரை நேராய் பார்த்து வாயை திறக்க தொடங்கினார் அந்த வயது முதித்த பெண்மணி.
“ஐயா என் பொண்ணு இலக்கியாவ காலையிலிருந்து காணோம்ங்க ஐயா, காலையில ஒரு பத்து மணி வாக்குல காட்டு வேலைக்கு போறேன் ன்னு சொல்லிட்டு போனவ, எப்போதும் போல மதியம் மூணு மணிக்குள்ள வூட்டுக்கு வந்துடுவா, ஆனா இன்னக்கி மணி ஐஞ்சு ஆயிடுச்சு, இன்னும் காணோம்ங்க ஐயா, அவ கூட வேலைக்கு போனவங்க எல்லா பொண்ணுங்களும் வந்துட்டாங்க, ஆனா என் மவளை மட்டும் காணோம்ங்க “என்ற ராஜி கண்ணீர் மல்க கூறி கொண்டு இருக்கும் போதே ராதாவை அழைத்து கொண்டு அந்த வீட்டில் வாசலுக்கு வந்தார் சிவகாமி ..
அந்த வயது முதித்த பெண்மணி கூறியதை கேட்டவுடன் பதினான்கு வயதே நிரம்பிய ராதாவுக்கு அச்சம் தொற்றி கொண்டது.
அந்த பெண்மணியின் சொல்லை கேட்ட பெரியவரோ ” ரத்தினம் “என்று கத்த அந்த இடமே அதிர்வை உண்டாக்கியது.
தோட்டத்தில் தங்களின் வளர்ப்பு நாயை கொஞ்சி கொண்டிருந்த ரத்தினம் ஓடோடி வந்து துரைசிங்கத்தின் முன்னால் நின்றான், கூடவே அவனின் பக்கத்தில் ஓடிவந்து கொண்டிருந்தது அவனின் வளர்ப்பு நாய்.
“சொல்லுங்க ஐயா “என்று மரியாதை நிமித்தமாக கைகளை கட்டி பணிவாய் கேட்க, அவரோ “ரத்தினம் அந்த பொண்ணு இலக்கியாவை கண்டுபிடிச்சி எந்த சேதாரமும் இல்லாம என் முன்னாடி கொண்டுவந்து நிக்கணும், அப்புறம் அந்த காட்டுல யாரு இருந்தாலும் ஈவு இரக்கம் பாக்காம கட்டி ஊரு முன்னால இழுத்துட்டு வா ” என்றவர் மேலும் அவனிடம் “சொன்னதை செய்து முடிக்கற வரைக்கும் என் முன்னாடி வரக்கூடாது நீ “என்று கட்டளையிட்டு தோளில் இருந்த துண்டை எடுத்து உதறி மீசையை முறுக்கி கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
அவர் சென்ற பிறகு தனியாக ராஜியின் கையை பிடித்து இழுத்து கொண்டு வந்தார் சிவகாமி.
“ஏன் ராஜி உனக்கு கூருன்னு ஒன்னு இருக்கா இல்லையா, வயசு பொண்ணை இன்னாத்துக்கு நீ காட்டு வேலைக்கு அனுப்புறவ, உனக்கு என்ன சோறு தின்ன அவ்ளோ கஷ்டமா என்ன, உன் வயல்ல உழைச்சலே ஆயிரம் கணக்குல வரும்., அது போதாது உனக்கு “என்றார் சிவகாமி.
“க்கும் அட போங்கக்கா, நான் வயல்ல உழைச்சி யாருக்கு சேர போவுது, எல்லாம் என் மவ இலக்கியாக்குதேன் , அவ கண்ணாலத்துக்கு நகை நட்டு செய்யத்தேன் துட்டு சேர்த்து வச்சிட்டு வரேன் நானு, அவளும் என்ன சோறு கொடுத்தாலும் கண்ணு மூடிக்கிட்டு திண்ணுறவ, நான் அவளை காட்டு வேலைக்கு போயி காசு கொண்டா ன்னு என்னக்கி சொன்னேன், அவளேத்தேன் பக்கத்து வூட்டு சரோஜா மவ தேனு கூட வேலைக்கு போறேன்னு சொன்னவ, சரி புள்ள வூட்டுல சும்மா தானே இருக்குன்னு போகட்டுமேனு விட்டுட்டேன், “என்றார் ராஜி.
“நீ இப்படி பொறுப்பில்லாம இருக்காத ராஜி வயசு பொண்ணை வேலைக்கு அனுப்ப கூடாதுனு உனக்கு தெரியாதா, அந்த சரோஜா அவ மவ கிட்ட எப்போப்பார்த்தாலும் பணம் வேணும்ன்னு தொல்லை கொடுத்துட்டே இருக்கவே தான் அந்த புள்ள தேனு கூலிக்கு போகுது, “என்றவர் மேலும் ” இப்போ நான் சொல்ல போற விஷயத்தை கேட்டு கத்தி ஒப்பாரி வைக்காத “என்றதும் சிவகாமியை ஒரு மார்க்கமாக பார்த்த ராஜி,
“சரி சொல்லுங்கக்கா “எனவும் சிவகாமியோ சுற்றும் முற்றும் பார்த்தும் விட்டு அவரின் செவியில் “உன் மவ இலக்கியாவ அந்த சாராயக்காரி மவன் இளவரசன் கடத்தி வச்சிருக்கான்,”என்று கூறியதும் தான் தாமதம்,
“அய்யோ அய்யோ மோசம் போய்ட்டேனே, அந்த சாராயக்காரி ரொம்ப ரவுடி பொம்பளையாச்சே, அவ பெத்த பையன் மட்டும் சும்மாவா இருப்பான்,ங்கே ங்கே என் மவள என்ன பண்ணாங்களோ, நான் எங்கே போவேன், பார்த்து பார்த்து பொத்தி பொத்தி வளர்த்த புள்ள, அவ அப்பன்காரன் வந்தா என்ன பதில் சொல்லுவேன் நானு, “என்று தலையிலும் மாரிலும் அடித்து கத்தி கொண்டிருந்தார் ராஜி.
“ஏன்மா உனக்கு அறிவு ன்னு ஒன்னு இருக்கா இல்லையா, உன்னைய யாரு இந்த அத்தை கிட்ட சொல்லச்சொன்னது, நம்ம நேரா துரை ஐயா கிட்ட தானே சொல்ல வந்தோம், இப்போ பாரு எப்படி கத்திட்டு இருக்காங்கன்னு “என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராதா அவளின் தாயை திட்டவும் அவள் தாயோ மகளின் வார்த்தையை கேட்டு விழி பிதுங்கி நின்று கொண்டு ” அடிப்பாவி பெத்தவளையே அறிவு இருக்கான்னு கேட்கறாளே, புள்ள சொன்ன மாதிரி நம்ம ஐயா கிட்டயே சொல்லிருக்கணும், இவ கிட்ட சொன்னது தப்பா போச்சு, ஆத்தி ஊரு ஜனம் முழுக்க நம்மளை தான் பாக்குதே “என்று மனதில் புலம்பி கொண்டு நின்று இருந்தார் ராதாவின் தாய் சிவகாமி..
இங்கே காட்டு வேலைக்கு சென்று விட்டு தலையில் விறகை தூக்கி கொண்டு அந்த ஊரின் ஜனங்கள் ஒரு சிலர் சென்று கொண்டிருக்க அந்த வழியாகவே வந்த ரத்தினத்தை பார்த்து “என்ன ரத்தின தம்பி கோவத்துல போவுது, பக்கத்துல வேற நாயி வருது, ஏதோ பிரச்சனை போல “என்று ஒவ்வொருகொருவர் பேசிக்கொண்டு தங்களது பாதையை பார்த்து நடக்கலானார்கள்.
“ஏலேய் இளவரசா அந்த ரத்தினம் வரான் டே, சீக்கிரம் அந்த புள்ள இலக்கியாவை தூக்குங்க டே “என்று கூறியவனின் வாயை பதம் பார்த்தது, ஒரு செங்கல்.
செங்கல் வந்த திசையை பார்க்க அங்கே ருத்ரமூர்த்தியாக விழிகள் ரத்தசிவப்போடு கோவத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தான் ரத்தினம்…