நாளை மீனாட்சிக்கு முப்பது. கோவிலுக்கு செல்வது பற்றியோ, சாமி கும்பிடுவது பற்றியோ ஒரு விவரமும் தெரியவில்லை. காரணம், இவர்கள் யாரும் மணிமாறன் குடும்பத்தோடு தொடர்பு வைத்து கொள்ள வில்லை. அந்த உறவு வேண்டாம் என்ற முடிவு தான்.
ஒரு மாதமாக அழுதும் துக்கம் துளி குறைய வில்லை. மறந்து விட்டு அடுத்த வேலை என்று எதை பார்க்க முடியும். பெற்றவர்களுக்கு தன் பிள்ளைகளை பார்ப்பது தானே முதல் வேலை. கடந்து செல்ல முடியுமா!… நாப்பது வயது பெண், எமனுக்கு வாரி கொடுத்து விட்டார்கள். எத்தனை தொட்டு, தடவி, உருவி உருவி வளத்தார்கள். இந்த வீட்டின் முதல் வாரிசை கொடுத்த மூத்த மகள், போன இடம் தெரியவில்லை. சடங்கு, கல்யாணம், வளைகாப்பு, பிரசவம், காது குத்து என்று எத்தனை செய்து அழகு பார்த்தார்கள். எல்லாவற்றையும் சொல்லி சொல்லியே மாய்ந்து போனார் பாண்டியம்மாள்.
முத்தையா எந்நேரமும் கண்ணீர் தான். தோட்டம், மில் என்று எதையும் பார்க்க வில்லை. தன்னை பெற்ற தாய், தகப்பன் இறப்பில் கூட கம்பீரமாக நின்று கொல்லி வைத்தவர். தான் பெற்ற மகளின் இறப்பை கண்டு ஒடுங்கி போனார்.
அடுத்து என்ன என்பதே சாலா மனதில் நிலைத்து நின்றது. தன் அக்காவின் இறப்பை தனக்கு பாடமாக எடுத்து கொள்வதா, இல்லை தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதா தெரியவில்லை. மீனாட்சியின் இறப்பு, அவள் பிள்ளைகள், தன் இழப்பு, தன் பிள்ளைகள், அதற்கும் மேல் தன் கணவன்… ஒரு பெருமூச்சு விட்டு எழுந்து கொண்டவள், அக்கா வீட்டிற்க்கு தான் சென்றாள்.
மீனாட்சிக்கு சரியாக செய்து அனுப்ப வேண்டும். பக்கத்து ஊர் என்பதால் விரைவாகவே வந்து விட்டாள். அக்கா வீடு வந்து பார்த்தால் எல்லாம் அலங்கோலமாக கிடந்தது. மீனாட்சி வீட்டை சுற்றி இடம் பெரிதாக, அகலமாக இருக்கும். எப்பவும் நேர்த்தியாக வைத்து இருப்பாள்.
பெண் இல்லா வீடு தனியாக தெரிந்தது. பண்ட பாத்திரங்கள் எல்லாம் வாசல் வரை கிடந்தது, வாசல் கூட்டி விட வில்லை, அழுக்கு துணி சேர்ந்து வீட்டின் கூடம் முழுக்க இறைந்து கிடந்தது, கண்ணாடி துடைக்க வில்லை, மார்பில் தரை தான் அழுக்காக இருந்தது, வீட்டின் ஒரு மூலையில் நாய் படுத்து கிடந்தது, கோழி உள்ளே வந்து அசிங்கம் பண்ணி வைத்து இருந்தது.
நாயை துரத்தி விட்டவள், அடுப்படி சென்று பார்க்க கருகி போன வாசமும், புளிச்ச வாசமும். வேகமாக சென்று பார்க்க, சோறு தான் நீர் பத்தாமல் அடி பிடித்து கிடந்தது, பக்கத்தில் இரண்டு நாள் முன் வைத்த சோறு நீர் விட்டு புளிச்ச வாசம் அடித்தது. சின்னவன் பசி தாங்க மாட்டான்.
வேகமாக படுக்கை அறை வந்து பார்க்க, சின்னவன் தான் குப்புற கவுந்து கிடந்தான்.
“பிரபா… டேய் பிரபா, எழுந்திரு…” என்று தோல் தொட்டு எழுப்ப,
சின்னவன் கண்களில் நீர்,
“ஐயோ! சின்னவனே, என்ன சாமி?…” பதறி போய் சாலா கேட்க.
“பசிக்குது சித்திம்மா…”
துடித்து போனாள். பெத்த தாய் இல்லாமல் போனாள் ஏற்படும் கதி இது தானே. ஒரு நிமிடம் அந்த இடத்தில் அஜய் வைத்து நினைத்து பார்த்தவள் உள்ளம் நடுங்கி போனது.
“சாப்பாடு செய்யலையா சின்னவனே?…”
“அப்பா, சீக்கிரம் கிளம்பி போட்டாங்க. அண்ணன் தான் தோட்டம், மாடு எல்லாம் பார்க்கணும். வெளிய வாங்கி வாரேன்னு சொன்னான், இன்னும் காணம்…”
“ பசி தாங்கமா நீயே சோறு வச்சையா பிரபா?…”
“ம்ம்… அப்பா, அண்ணன் யாரும் சாப்பாடு வாங்கி வரல. நானே கொஞ்சம் போன் பார்த்து வச்சேன். ஆனா, கருகி போச்சு…” பாவமாக சொன்னான்.
“இவ்வளவு நேரமும் நீ சாப்பிடமாவா இருக்க?…”
“இல்லை சாப்பிட்டேன்…”
“ சாப்பாடு அடி புடிச்சு இருக்கே, என்னத்த சாப்பிட்ட?…”
“அது… காலையில அப்பா, மாட்டுக்கு சோறு வச்சாங்க. அதுல இருந்து எடுத்து சாப்பிட்டேன் சித்திம்மா…”
நெஞ்சை அறுத்தது சாலாக்கு. செத்தவளை யோசித்து தாங்கள், அவள் விட்டு சென்ற பிள்ளைகளை யோசிக்க வில்லையே… அவர்கள் வீட்டில் மாட்டுக்கு ஒரு நேரம் சோறு கலந்து குடுப்பார்கள். புண்ணாக்கு மாதிரி தான். அதை சரியாக கழுவி கூட செய்ய மாட்டார்கள். வெளியே இருக்கும் விறகு அடுப்பில் சோறு காய்ந்து கிடந்தது.
மீனாட்சி இருக்கும் வரை பிள்ளைகளை ஒரு வேலையும் செய்ய விட மாட்டாள். சாலா சொன்னாள் கூட “ஆம்பிளை பிள்ளைக எச்சி தட்டு தொடலாமா!…” அப்படி பார்ப்பாள் பிள்ளைகளை, இன்று அழுது கரைந்தாலும் ஒரு பயனும் இல்லை.
சாலா அடுப்படியில் இருந்து தொடங்கினாள். வீடு, வாசல், சுத்தி இருக்கும் இடம் எல்லாம் சுத்தம் செய்தவள். ஓட்டில் இருந்த ஒரு கோழியை பிடித்து அறுக்க தொடங்கினாள்.
மீனாட்சி செத்து ஒரு மாதம் தான் ஆனது. கறி புழங்க கூடாது தான். தான் இன்று மட்டும் தானே இருப்பேன். அக்கா பிள்ளைகள் என்ற பாசம் மிகுந்து இருக்கு தான். ஆனால், தனக்கு என்று குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்களே. அவர்களையும் பார்க்க வேண்டும் அல்லவா…
அன்றே எல்லா வேலையையும் முடிப்பவள் போல, இருக்கும் துணிகள் அனைத்தையும் துவைக்க உட்கார்ந்து விட்டாள். சற்று நேரத்திற்கு எல்லாம் உணவு பொட்டலங்கள் உடன் மணிமாறன், அருண் வந்து விட்டார்கள். வீடே மாறி இருக்க, வெளி வந்து பார்த்தாள் விசாலாட்சி.
மாமனுடன் பேச கூடாது. பிள்ளைகளை மட்டும் பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்று தான் சாலா வந்தாள். அடர்ந்த தாடியும், அழுக்கு வேஷ்டி சட்டையும், ஒட்டிய உடலுமாக மணிமாறன் வர, பார்த்ததும் முணுக்கென்று கண்களில் நீர் கட்டி கொண்டது. கருப்பாக இருந்தாலும் வெள்ளை வேஷ்டி, சட்டையில் பளிச்சென்று தான் இருப்பார். அப்படி தான் மீனாட்சி வைத்து இருப்பாள்.
சுடு சோறும், கோழி குழம்பு என்று சாலா எடுத்து வைக்க, வேக வேகமாக சாப்பிட தொடங்கினார்கள். மூன்று ஆண் பிள்ளைகளும் எந்த வேலையும் பழகாமல், மீனாட்சியை கொண்டே வாழ்ந்தவர்கள். அவள் இல்லையென்றதும் தனியாக நிக்க தெரியவில்லை.
மறுநாள் தான் இருக்கும் சொந்தம் எல்லாம் வந்தது. சாலா வற்புறுத்தி வர மாட்டேன் என்ற பாண்டியம்மாவை வர வைத்தது. இன்று ஒரு நாள் வீடு முழுக்க ஆள் இருக்கும். அடுத்து கல் எறியும் காக்கா கூட்டம் தான்.
பாண்டியக்மாக்கு பேரன்களின் நிலை கண்டதும் முணுக்கென்று கண்ணீர் வந்தது. ஆனால், பெத்த பாசம் அண்ட விடவில்லை. அவர் தான் மகளுக்கு படையல் போட சமையல் செய்தார். அம்மா கை வசம் தான் மீனாட்சிக்கு பிடிக்கும். ஒரு பக்கம் அழுது கொண்டே தான் சமையல் செய்தார். எத்தனை நாட்கள் ஆசையாக மகளுக்கு செய்து இருப்பார். இன்று அவள் அருவத்திற்க்கு படையல் போடுகிறார்கள்.
அன்றும் சாலா அங்கு தான் இருந்தாள். என்னவோ மனது ஒரு மாதிரி இருக்க, மீனாட்சி கிடந்த அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள், வெளியே கிடந்த கயிற்று கட்டிலில் மணிமாறன் படுத்து இருந்தார்.
சாலாக்கு ஒரு யோசனை, முப்பதில் ஆத்மாக்கள் அவர்களுக்கு போட்ட படையலை உண்ண வருமாம். மீனா வருவாளா? என்னோடு பேசுவாளா? … அந்த அறையிலே முடங்கி கிடக்க, டம் என்று கேட்டை தட்டும் சத்தம் பதறி போனாள் சாலா.
ஏதேனும் கோபத்தில் மீனாட்சி இருந்தால், இப்படி தான் கேட்டை ஓங்கி அடிப்பாள். அந்த நினைவு சாலாக்கு வந்த உடன் வேகமாக வெளியே ஓடி வந்தாள்.
மணிமாறன் எழுந்து அமர்ந்தவர், சாலாவை பார்த்து, “மீனாட்சி” என்று சொல்ல, அவளுக்கும் அந்த நினைவு தான். வேகமாக சென்று கேட்டை திறந்து விட்டவர்,
“பார்த்தியா சாலா, மீனாக்கு அவ மாமனை விட்டு இருக்க முடியால, எங்களுக்குள்ள எவ்வளவு சண்டை வந்துருக்கு, ஒரு நாளும் கோவிச்சு அம்மா வீடு போக மாட்டா. தினமும் சண்டை போட்டாலும் ஒட்டியே தான் இருப்பா… நானும் கொஞ்சம் கோபத்தை குறைச்சு இருக்கணும். எம் பொண்டாட்டி என்னை விட்டு எங்க போக போறான்னு ஒரு ஆணவம். இன்னைக்கு ஒத்தையில கெடடான்னு விட்டுட்டு போய்டா…” கண்களை துடைத்துக் கொண்டார்.
“வீடு, தோட்டம், மலை எங்க போனாலும் அவ தான் நிக்கிற. ஆம்பிளை பிள்ளைக, அவங்க பொழப்பு பார்த்து போயிடுவாங்க. மீனா இல்லாம நான் தனியா எப்படி இருப்பேன் சாலா. என்னை யோசிக்கலையே அந்த படுபாவி. கனவுல கூட கண்ணுல தட்டு படல” சின்ன பெண் என்று பாராமல் சாலாவிடம் அழுதார்.
இத்தனை நாள் அடக்கி வைத்திருப்பார் போல, உயிரோடு இருக்கும் போது என்னவென்று ஒரு நாளும் கேட்டதில்லை. இன்று தவிப்பது போல, தேடுவது போல மீனா இருக்கும் போதே அவளை அரவணைத்து இருந்தால், இந்த நிலைமை வந்து இருக்காதே…
இந்த ஆண்களுக்கு எல்லாம் என்ன ஒரு நம்பிக்கை!… அடித்தாலும், துரத்தினாலும், மதிக்காமல் போனாலும் மனைவி மட்டும் கணவனை விட்டு கொடுக்காமல், அவனோடு அனுசரித்து வாழ வேண்டும்.
மறுநாள் கிளம்பி விட்டாள் சாலா. அவள் பையில் ஊதா வண்ண பட்டு சேலையை திணித்து கொண்டு இருந்தாள். அந்த சேலையை தொட்டு பார்க்கும் போது சொட்டு கண்ணீர் வந்தது. அஞ்சு பிறந்த போது மீனா எடுத்து குடுத்தது.
“என்ன கலர் மீனா இது… இப்போ எல்லாம் டபுள் கலர் சேலை தான் ஃபேமஸ். எனக்கு ஒன்னும் வேணாம். போ…” முறுக்கி கொண்டாள் சாலா.
“எனக்கு பார்த்ததும் பிடிச்சதுடி. உன் கலருக்கு எடுப்பா இருக்கும். உனக்கு வேணாம்னா என் வீட்டில் இருக்கட்டும். உனக்கு தோணும் போது வந்து எடுத்துக்க…” தங்கைக்கு ஆசையாக எடுத்த சேலை பிடிக்க வில்லை என்ற போதும் உனக்கு தான் என்று விட்டாள் மீனாட்சி.
எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள், புளி கூட்டு, தக்காளி தொக்கு, பூண்டு தொக்கு, பருப்பு பொடி என்று நீண்ட நாள் வரும் பொருட்களை தயார் செய்து டப்பாவில் அடைத்தார். கண்ணகி என்னவோ கூடத்தில் கத்தி கொண்டு இருந்தார். சாலா கண்டு கொள்ள வில்லை. அக்கா இருந்தால் கிடைக்கும் உரிமை வேறு, அவள் இல்லை, அவள் பிள்ளைகளிடம் மட்டுமே உரிமை.
கண்ணகி, அவர் வழி சொந்தம் நாலு பேரை கூட்டி கொண்டு வந்தார்.
“மணி, அக்கா சொல்றத கேளு. கெட்டது நடந்த வீட்டுல உடனே ஒரு நல்லது நடக்கணும். எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கு சட்டு புட்டுன்னு பேசி முடிப்போம். பிள்ளைக சாப்பாட்டு அலைய விடலாமா…” கண்ணகி நயமாக பேச, கொதித்து போனாள் சாலா. என்ன ஒரு தின்னக்கம்.
“ நானும் அதை தான்கா யோசிச்சேன். வீட்டுக்கு ஒரு பொண்ணு வேணும் தான்…” மணிமாறன் சொல்ல, உடைந்து போனாள் சாலா.
பொண்டாட்டி செத்தா ஆம்பளைக அடுத்த நாளே புது மாப்பிள்ளை தான்…
“நமக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கு. நாப்பது வயசு , நம்ம மீனா வயசு. புருசன் இல்லை, பிள்ளையும் இல்லை. நல்ல பிள்ளை வீட்டு வேலை பம்பரமா செய்வா…” கண்ணகி சொல்லி கொண்டு இருக்கும் போது, மணிமாறன்.
“ பொண்ணு யாருக்கு பார்த்த?…”
“ஏன் உனக்கு தான்டா தம்பி…”
“எனக்கா!… நான் என்ன கல்யாணம் ஆகாத வயசு பையனா… கட்டுனவள தூக்கி கொடுத்து ஒரு மாசம் ஆகல, வேற கல்யாணமா… மனசாட்சி இருக்க உனக்கு?”
“அப்புறம் எவ்வளவு பெரிய வீட்டுல மூணு ஆம்பிளைக மட்டும் இருக்க போறீங்களா?… சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?…”
“எனக்கு தான் மகன் இருக்கானே. அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சா, வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்துட போகுது…”
“உனக்கு என்ன வயசாகி போச்சு மருமக கைய எதிர்பார்த்து நிக்க, உனக்கு ஒரு துணை வேணும் தம்பி…”
“அதான் மீனா இருக்காளே. உயிரோடு இல்லைன்னாலும் என் கூட தான் இருக்கா… அப்பப்ப நீ வந்து பாருக்கா…”
“எனக்கும் குடும்பம், பிள்ளைன்னு தனி பொழப்பு இருக்கு சாமி. இங்க வந்து இருக்க முடியுமா…”
“இதை தான் மீனாவும் சொன்னா, நான் தான் புரியாத மக்கா இருந்துருக்கேன். அதுக்கு காலத்துக்கும் அனுபவிப்பேன்…” என்றவன், அங்கு வந்திருந்த சொந்தங்களை பார்த்து,
“ இருவது வருசமா என் கூட ஒருத்தி நாயா பாடு பட்டா. அவ வாழணும்ன்னு தான் இந்த வீடு கட்டுனது. அவ தலை ஒரு நாளும் இங்க சாயல . அவ உழைப்புல யாரோ ஒருத்திக்கு இடம் இல்லை. இது மீனாட்சி வீடு, அவளுக்கு அப்புறம் அவ மருமகளுக்கு… அவ இடத்தை வேற யாரும் உரிமை கொண்டாட முடியாது. என்னைக்கும் மணிமாறன் பொண்டாட்டி மீனாட்சி தான். இது நான் சாகுற வரைக்கும் மாறாது…” என்று தெளிவாக சொல்லிவிட, வந்தவர்கள் வந்த வழி சென்று விட்டார்கள்.
சாலா அருகில் வந்த மணிமாறன். “ஆத்தா, உங்க அக்கா பாசகாரி. நான் இல்லாம இருக்க மாட்டா, என்னை கூட கூட்டிட்டு தான் போவ. இதுக ரெண்டையும் நீ தான் பார்த்துக்கணும்…”
“மாமா…” அழுகை பொங்கியது.
மாமன் முரடன் என்று தான் சாலா அறிவாள். சட்டென்று கை நீட்டும் பழக்கமும் உள்ளவன். நாலு பேர் பார்க்க அந்தஸ்தாக பிழைக்க தெரியாதவன்.
சாலா, எப்போதும் நினைப்பாள். எப்படி தான் மீனா இவர் கூட குடும்பம் நடத்துகிறாளோ என்று. ஏனெனில் பிரகாஷ் ரொம்ப அமைதி, கை நீட்ட மாட்டான், பொறுப்பானவன்.
அந்த பெருமை சாலாக்கு எப்போதும் உண்டு. வெளியில் காட்டி கொள்ள மாட்டாளே தவிர மனதில் அவ்வளவு பெருமை.
என் கணவன் படித்தவன், பண்பானவன், மனைவி, பிள்ளைகளை நேசிப்பவன். எந்த இடத்திலும் தங்களை பெருமையாக உணர செய்பவன்.
அவர்கள் வட்டத்தில் சாலாவின் கணவனுக்கு என்று ஒரு பெரிய மரியாதை உண்டு. அவன் சொல்லுக்கு கட்டுபடுவார்கள். பிரகாஷ் பேச்சும் அப்படித்தான் இருக்கும்.
மீனாட்சி மாடு, தோட்டம், வேலை என்று இழு பட, விசாலாட்சி சென்னை வாழ்க்கையின் சௌகரியத்தை அனுபவித்தாள். சொந்த வீடு, ஏ.சி, கார், பிள்ளைகளுக்கு தரமான படிப்பு என்று நிறைவான வாழ்க்கை தான். என் கணவன் என்று அவ்வளவு பூரிப்பு இருக்கும். இன்று நிஜ முகம் கோரமாக இருந்தது.
பிரகாஷிடம் வருகிறேன் என்று சொல்லாமலே பஸ் ஏறி விட்டாள். அவனிடம் சொல்லவும் தோன்ற வில்லை. பிள்ளைகள் நினைப்பு தான் மனம் முழுக்க…
முன்பு என்றால் கணவனுக்கு என்று தனியாக பொருட்களை வாங்கி அடுக்கி கொண்டு தான் ஊர் செல்லுவாள். இன்று எல்லாம் தலை கீழ், கணவனுக்கு பிடிக்கும் என்று பார்த்து பார்த்து வாங்குவாள். இன்று அவள் துணி பை மட்டும் கொண்டு இறங்கி விட்டாள்.
காலை பத்து மணிக்கே வீடு வந்து விட்டாள். பிள்ளைகள் பயிற்சி வகுப்புக்கு சென்று இருப்பார்கள் என்ற நினைப்பில் தான் கதவை திறந்தாள்.
அங்கு இருந்தது பிரகாஷ், அவளை பார்த்ததும் திகைத்து நின்று விட்டான். சாலா கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல, திகைப்பு மாற வில்லை கணவனுக்கு. இது அவன் மனைவி சாலா இல்லையே. தன்னை பார்த்து ஒரு சின்ன சிரிப்பு கூட சிந்தவில்லை. அவள் பின்னோடு தான் சென்றான்.
சாலா அடுப்படி சென்று பார்க்க, நேற்று சாப்பிட்ட அசைவ சாப்பாடு அவளை பார்த்து இளித்தது. நேற்று வெள்ளி கிழமை, இவள் விதியில் வெள்ளி கிழமை அசைவத்துக்கு தடா தான். என்ன நடந்தாலும் இத்தனை வருசத்துல வெள்ளி அன்று அசைவம் எடுத்தது இல்லை. தீபாவளி அன்று கூட சைவம் தான். கட்டுதிட்டமாக கடைப்பிடிப்பாள். பிள்ளைகளும் அப்படியே….
பிரகாஷ் தலையில் அடித்து கொண்டான். இப்படி வந்து குதிப்பாள் என்று கனவு கூட காணவில்லை. கணவனை பார்த்தவள்,
“இதையெல்லாம் துடைச்சு சுத்தம் பண்ணுங்க…” குரல் கட்டளையாக வந்தது.
அதிர்ந்து போனான் பிரகாஷ். இப்படி எல்லாம் எந்த வேலையும் சாலா சொல்ல மாட்டாள். அவனுக்கு முழு ஓய்வு தான் கொடுப்பாள். திகைத்து போய் கணவன் பார்க்க,
“எம் பிள்ளைக எனக்கு தெரியும். என் சொல்லை மீற மாட்டாங்க. இது அவங்க சாப்பிட்டது இல்லை…” என்று சாலா வெளியேற, அதிர்ச்சி குறையாமல் நின்றான் பிரகாஷ்.
மனைவியை புதிதாக பார்த்தான். பிள்ளைகளை சொன்னவள், தன்னை சொல்ல வில்லை. மனம் குறித்து கொண்டது. பயம் தான் நெஞ்சு முழுக்க…
துவைக்க அழுக்கு துணிகளை எடுத்தவள், தங்கள் அறைக்கு சென்றாள். பின்னாடியே ஓடினான் பிரகாஷ். அங்கிருக்கும் துணி கூடையை திறக்க, பிரகாஷ் துணிகளோடு கிடந்தது ஷாலினி துணிகள்.
நெஞ்சில் கை வைத்தான் பிரகாஷ். “அது, துவைக்க ஷாலினி தான் எல்லா துணியையும் ஒன்னா போட்டது…” ஏதோ சமாளித்தான். அவர்கள் மட்டும் பயன்படுத்தும் அவர்கள் பெட்ரூமில் ஷாலினி துணிகளுக்கு என்ன வேலை?…
நெஞ்சு கொதித்தது. வேண்டாம் சாலா, ஒருத்தி எடுத்த அவசர முடிவின் அலங்கோலம் கண் கொண்டு பார்த்தாச்சு. உன் பிள்ளைகளை நினை…” திடப்படுத்தி கொண்டு கடக்க துணிந்தாள்.
அந்த துணிகளை தொட கூட இல்லை. தன் பிள்ளைகள் துணியை மட்டும் துவைத்தவள், அவர்கள் அறை பக்கம் எட்டி கூட பார்க்க வில்லை.
வீட்டின் அழைப்பு மணி அடித்தது. சாலாக்கு தெரியும் வந்திருப்பது ஷாலினி. பிள்ளைகள் வீட்டில் இல்லை, கணவன் மட்டும் தான் வீட்டில் இருக்கிறான். பக்கா பிளான் தான். சட்டமாக சாலா அமர்ந்து கொண்டாள். பிரகாஷ்க்கு தான் இதயம் வெளி வந்து துடித்தது.