மீரா அர்ஜுனின் குடும்பத்தில் இயல்பாகப் பொருந்தினாள். ஆருவிற்கு நல்ல தோழியாக, வித்யாவின் கண்களுக்கு நல்ல பெண்ணாக, கணேசனுக்கும், ஆதிக்கும் திறமை வாய்ந்தவளாக. அர்ஜுனுக்கு உயிராக என்று அவர்கள் எல்லோரோடும் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டாள்.
அடுத்த வாரத்தில் கல்லூரியும் திறந்து விட… எல்லோரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தினர். இப்படியே நாட்கள் செல்ல… அர்ஜுனின் பிறந்த நாளும் வந்தது. மீரா அர்ஜுனிடம் கடந்த ஒரு வாரமாக, “உங்களுக்கு என்ன கிப்ட் வேண்டும்?….” என்று கேட்டு அலுத்துவிட்டாள்.
அர்ஜுன் இன்னும் என்ன வேண்டும் என்று சொல்லவில்லை. மீரா கேட்கும் போது எல்லாம் பிறந்த நாள் அன்று சொல்கிறேன் என்று மழுப்பி விட்டான். மீராவும் எத்தனையோ முறை “அர்ஜுன், பிறந்தநாள் அன்னைக்குச் சொன்னா, நான் போய் வாங்க லேட் ஆகிடும். நீங்க இப்பவே சொல்லுங்க, நான் முன்னாடியே வாங்கி வச்சிடுறேன்.” என்று கேட்டு பார்த்தாள். ஆனால் அதற்கு அர்ஜுன், “அதை அப்புறம் பார்திக்கலாம். அது உடனே உன்னால குடுக்க முடியும் கவலைப்படாதே…” என்று சொல்லி அவள் வாயை அடைத்து விட….மீராவிற்கும் காத்திருப்பதைத் தவிர வேற வழி இல்லாமல் போய்விட்டது.
பிறந்த நாளுக்கு முன் தினம் அர்ஜுனை வர சொல்லி மீரா போன் செய்திருந்தாள். அர்ஜுன் தங்கள் கடையில் தீபாவளி விற்பனை நடப்பதால் அதில் பிஸியாக இருந்தவன், மீரா பார்க்க வேண்டும் என்றதும், தன் அப்பாவிடம் சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு மீராவை பார்க்க அவர்கள் கடையின் அருகே இருக்கும் காபி ஷாப் வந்திருந்தான்.
அங்கே மீரா, “அட்வான்ஸ் பர்த்டே விஷஸ்.” என்று சொல்லி அவன் கையில் ஒரு கிப்ட் பாக்ஸ் கொடுக்க….
“ஏய்… நானே கேட்கிறேன்னு சொன்னேன் இல்லை. அப்புறம் எதுக்கு இது?” என்றான்.
“ஆமாம்…. இப்படியே தான் ஒரு வாரமா சொல்றீங்க. ஆனா கேட்குற வழிய காணோம். எனக்கு உங்க பர்த்டேக்குக் கிப்ட் குடுக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல… அதனால எனக்குத் தெரிஞ்சத நான் வாங்கினேன். நீங்க கேட்கிறதும் தரேன்.”
“ஓ…. டபுள் கிப்ட்டா… அப்ப ஓகே. என்ன கிப்ட் வேணும்னு நாளைக்குச் சொல்றேன்.” என்றான்.
“அர்ஜுன் நாளைக்குச் சண்டே இல்ல…. எங்கையாவது வெளியே போகலாமா?” மீரா ஆசையாகக் கேட்க…
“சாரி மீரா…. எப்பவும் பர்த்டே அன்னைக்குக் காலையில எல்லோரும் சேர்ந்து கோவிலுக்குப் போயிட்டு, மதியம் ஹோட்டல் சாப்டிட்டு அப்புறம் அப்படியே எங்கையாவது வெளிய போயிட்டுச் சாயங்காலம் தான் வருவோம். இது எங்க வீட்ல எல்லார் பிறந்த நாளைக்கும் நாங்க ஃபாலோ பண்றது. இப்ப திடிர்ன்னு மாத்த முடியாது இல்ல… ஆனா நாளைக்கு நாம கண்டிப்பா மீட் பண்ணலாம். எங்கன்னு உனக்கு நான் போன் பண்றேன்.” என்றான் அர்ஜுன்.
அர்ஜுன் சொன்னதைக் கேட்டு மீராவிற்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அதை அவனிடம் காமித்துக் கொள்ளாமல், “சரி அர்ஜுன், நீங்க போன் பண்ணுங்க.” என்றவள் கிளம்பி செல்ல…. அர்ஜுனுக்கு நேரம் ஆகிறது கடைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே மனதில் இருந்ததால்… அவன் மீராவை சரியாகக் கவனிக்காமல் கிளம்பி சென்றான்.
அர்ஜுன் கடைக்குச் சென்றதும், தங்கள் அலுவலக அறையில் அவனுக்கென்று இருக்கும் கப்போர்ட்டில், மீரா கொடுத்த கிப்ட் பாக்ஸ்சை வைத்து விட்டு தன் வேலையைப் பார்க்க சென்றவன், இரவில் வீட்டிற்குச் செல்லும் போது அந்தக் கிப்ட்டை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டுச் சென்றான். மீரா அர்ஜுனே கிப்ட் பாக்ஸ்சை பிரித்துப் பார்த்த்துவிட்டு போன் செய்வான் என்று காத்திருக்க… அர்ஜுனிடம் இருந்து போனே வரவில்லை.
இங்கே அர்ஜுனின் வீட்டில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அன்று இரவு ஒரு பெரிய விருந்தே வித்யா தயார் செய்திருக்க… எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டே உணவை அருந்தியவர்கள், வெளியே தோட்டத்தில் அமர்ந்து ஆதியின் திருமணத்தை எப்படிச் செய்வது, அதில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பேச…. நேரம் போனதே தெரியவில்லை.
சரியாகப் பன்னிரண்டு மணி ஆனதும், ஆரு ஒரு பெரிய கேக்கை கொண்டு வந்து டேபிளில் வைக்க… அர்ஜுன் அதை வெட்டி எல்லோருக்கும் ஊட்டிவிட்டான். அர்ஜுனுக்கு அப்போது மீராவின் நியாபகம் வந்தது. கேக் வெட்டி முடித்ததும் கணேசனும், வித்யாவும் படுக்கச் சென்றுவிட… அர்ஜுன் ஆதி, ஆருவோடு ஒரு மணி வரை அரட்டை அடித்துவிட்டுப் படுக்கச் சென்றான்.
தன் அறைக்கு வந்த அர்ஜுன் தன் செல்லை தேடி எடுத்து பார்க்க…. அதில் மீராவிடம் இருந்து மூன்று முறை அழைப்புகள் வந்திருந்தது. சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அழைத்திருந்தாள். அர்ஜுன் தலையிலேயே அடித்துக் கொண்டான். இப்படியா செல்லை மறந்து ரூம்லயே வைப்பேன் என்று நொந்தவன், அப்போது தான் மீராவிடம் இருந்து மெசேஜ் வந்திருப்பதைக் கவனித்தான்.
அதைத் திறந்து பார்க்க…. மீரா அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பி இருந்தாள். போன் எடுக்கலைன்னு மெசேஜ் அனுப்பி இருக்கா…. ரொம்பப் பீல் பண்ணி இருப்பா…. இப்ப போன் பண்ணுவோமா என்று யோசித்தவன், வேண்டாம் ரொம்ப நேரம் ஆகிடுச்சு தூங்கி இருப்பா, காலையில பேசலாம் என்று நினைத்து அவனும் படுத்தான்.
மறுநாள் அர்ஜுன் எழுந்திருக்கும் போதே மணி எட்டு வேகமாக எழுந்து குளித்து விட்டு வந்தவன், வித்யா பிறந்த நாளுக்கு என்று அவனுக்காக வாங்கி வைத்திருக்கும் புது உடையை எடுத்து அணிந்து கொண்டு கீழே வந்தான். கீழே வந்தவனுக்கு எல்லோரும் மீண்டும் வாழ்த்து சொல்லி பரிசை கொடுக்க… அப்போது தான் மீரா குடுத்த கிப்ட்டை கடையிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வந்தது.
ச்சை… என்று தன்னையே நொந்தவன், மீரா நேத்து போன் பண்ணும் போதும் எடுக்கலை, அவ குடுத்த கிப்ட்டையும் எடுத்திட்டு வரலை. மீராவுக்குத் தெரிஞ்சா திட்டபோறா என்று நினைத்தவன், வேகமாக டிபன் சாப்பிட்டுவிட்டு மாடிக்கு தனது அறைக்குச் சென்று மீராவை அழைத்தான்.
இரண்டு முறை அழைத்தும் மீரா எடுக்கவில்லை என்றதும், ஒருவேளை கோபமா இருக்காளோ என்று நினைத்தவன், மீண்டும் அழைக்க… அப்போதும் மீரா எடுக்கவில்லை… என்ன செய்வது என்று தெரியாமல் அர்ஜுன் குழம்பி கொண்டிருந்த போது… மீராவே போன் செய்தாள்.
மீரா அழைப்பதை பார்த்ததும் தான் அர்ஜுனுக்கு நிம்மதி ஆனது. சந்தோஷமாகப் போன்னை எடுத்து ஹலோ என்றான். மீரா அர்ஜுன் குரல் கேட்டதும், “Many more happy returns of the day அர்ஜுன்.” என்று வாழ்த்த,
“எங்க மீரா இருந்த? போன்னை எடுக்க ஏன் இவ்வளவு நேரம்?”
“கோவில்ல இருக்கேன் அர்ஜுன். அது தான் செல்லை சைலென்ட்ல போட்டிருந்தேன்.” என்றதும், தனக்காகத் தான் கோவிலுக்குச் சென்றிருக்கிறாள். ஆனால் தான் அவள் போன் செய்த போது கூட எடுக்கவில்லை என்பதை நினைக்கும் போது அர்ஜுனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.
“நாங்க இப்ப வெளிய கிளம்பறோம் மீரா, நான் சீக்கிரம் வர ட்ரை பண்றேன். தப்பா எடுதுக்காதடா இன்னைக்கு உன் கூடப் புல்லா இருக்க முடியலை.” அர்ஜுன் உண்மையிலேயே வருந்தி சொல்ல…
“இதுல என்ன இருக்கு அர்ஜுன் நான் தப்பா நினைக்க? நீங்க உங்க குடும்பத்துக்கும் முக்கியதுவம் தரனும் இல்லையா…. நான் எங்க போகப் போறேன், நீங்க போயிட்டு வாங்க நான் வெயிட் பண்றேன்.” என்று போன்னை வைத்தாள்.
அர்ஜுன் கீழே இறங்கி வர… அங்கே எல்லோரும் கோவிலுக்குச் செல்ல தயாராகி நின்றனர். அர்ஜுன் மெதுவாக வித்யாவிடம் “அம்மா, கோவிலுக்குப் போயிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்டிட்டு மட்டும் வந்திடலாமே, சினிமாக்கு இன்னொரு நாள் போகலாம்.”
“இப்ப தீபாவளி டைம், கடைல கூட்டம் இருக்கும் இல்ல…” மதியமாவது மீராவுடன் இருக்கலாம் என்று நினைத்து சொல்ல…. யோசித்த வித்யா, “சரி அப்பாவும், ஆதியும் கோவிலுக்கும் அப்படியே ஹோட்டலுக்கு வந்து சாப்டிட்டு கடைக்குப் போகட்டும். நீ நான் ஆரு மூன்னு பேறு மட்டும் சினிமாவு க்கு போகலாம்.” என்றார். அர்ஜுனுக்கு வேறு வழி இல்லாததால், அவர் சொன்னதுக்குச் சரி என்று தலை ஆட்டினான்.
அர்ஜுனின் நினைவு மீராவை சுற்றியே இருந்தது. அவனுக்குப் படம் பார்க்க விருப்பமே இல்லை. வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தான். படம் முடிய 5.30 ஆகிவிட்டது. அர்ஜுன் அவனது அம்மாவையும், ஆருவையும் வெளியே செல்ல சொல்லிவிட்டு காரை எடுக்கச் சென்றவன், வேகமாக மீராவிற்கு அழைத்து, “மீரா… உங்க வீட்டு பக்கத்தில இருக்கிற பார்க்குக்கு 6.30 மணிக்கு வந்து கார்லயே வெயிட் பண்ணு. நானும் வந்திடுறேன்.” என்று சொல்லி போன்னை வைத்தான்.
வீட்டில் வந்து வித்யாவையும், ஆருவையும் இறக்கி விட்டவன், வேகமாக முகம் கழுவி, தலை வாரி வெளியே கிளம்ப… “அதுக்குள்ள எங்கடா கிளம்பிட்ட?” வித்யா கேட்க… “எனக்கும் ப்ரண்ட்ஸ் இருக்காங்க, நான் அவங்களையும் பார்க்கணும்.” என்ற அர்ஜுன் வேகமாகக் கிளம்பி சென்றான்.
அர்ஜுன் பார்க்கிற்கு வந்து தன் பைக்கை நிறுத்தி விட்டு மீராவின் காரில் சென்று ஏறியதும், அர்ஜுனை ஆர்வமாகப் பார்த்த மீராவின் முகம் வாடியது. ஆனால் அதைக் கவனிக்காமல் அர்ஜுன், “காரை எடு மீரா…” என்றான்.
மீராவும் காரை கிளப்பினாள். “பெசன்ட் நகர் பீச் போ…” என்றவன், சீட்டில் சாய்ந்து அமர்ந்து நன்றாக மூச்சை இழுத்து விட்டவன், “ஹப்பா இன்னைக்கு உன்னைப் பார்க்க முடியாம போய்டுமோன்னு பயந்திட்டேன்.” என்று சொல்லி புன்னகைக்க… மீராவும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.