பெசன்ட் நகர் பீச் சென்று மீரா காரை நிறுத்தியதும், அர்ஜுன், “இங்கயே உட்கார்ந்து பேசலாம் மீரா…” என்று தன் சீட்டை நன்றாகப் பின்னுக்குத் தள்ளி சாய்ந்து அமர்ந்தவன், மீராவையும் அப்படியே செய்யச் சொல்ல… அவளும் அவன் சொன்னபடியே செய்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் படி பக்கவாட்டில் திரும்பி அமர்ந்து சீட்டில் வசதியாகச் சாய்ந்து கொண்டனர். அர்ஜுன் அப்போது தான் மீராவை நன்றாகப் பார்த்தான். கருப்பு கலர் ஜீன்ஸ்ம் அடர் நீல நிறத்தில் ஷார்ட் டாப்பும் அணிந்து, ஷாம்பூ போட்டு ஆலசி இருந்த கூந்தலில் ஒரு கிளிப் மட்டும் போட்டு முடியை விரித்து விட்டு, காதில் பெரிய வளையம் போட்டு, முகத்தில் லேசாக ஒப்பனை செய்து இருந்தாள்.
அர்ஜுன் மீரவையே பார்த்துக் கொண்டிருக்க…. மீரா என்ன என்று புருவத்தை உயர்த்த, “அழகா இருக்கடி.” அர்ஜுன் கண்ணடிக்க…. மீரா செல்லமாக அவனை முறைத்தாள்.
அர்ஜுன் தான் வாங்கி வந்திருந்த கேக்கை எடுத்து மீராவிற்கு ஊட்டி விட்டான். மீராவும் அர்ஜுனுக்குக் கொடுக்க… இருவரும் சேர்ந்து கேக் சாப்பிட்டனர். பின் அர்ஜுன் மீராவின் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டவன். அதில் அவள் அணிந்து இருந்த கை கடிகாரத்தைப் பார்த்து, “புதுசா நல்லா இருக்கு.” என்று சொல்ல…. மீரா பதிலுக்குப் புன்னகைத்தாள். “என்ன மீரா இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க.” என்ற அர்ஜுன் நேற்று இரவில் இருந்து தன் வீட்டில் நடந்த கதையைச் சொல்ல… மீரா கேட்டு கொண்டிருந்தாள்.
“சாரி மீரா…. நீ குடுத்த கிப்ட் நேத்து கடையிலேயே வச்சிட்டேன். இப்ப வரும் போது கடைக்குள்ள போய் எடுக்கப் போனா வெளிய வர முடியாது. அதனால தான் எடுக்கலை. நைட் போகும் போது எடுத்திட்டு போறேன்.” என்றான்.
“சரி கிளம்பலாமா வீட்டுக்கு போகணும்.” மீரா சொல்ல…. அர்ஜுன் அதுக்குள்ளையா என்றவன், நேரம் பார்க்க மணி 7.30.
“என்ன கிப்ட் வேணும்னு கேட்டியே. இப்ப ஒன்னும் அதைப் பற்றிக் கேட்கல.” அர்ஜுன் கண்களில் காதலோடு மீராவை பார்க்க…..
“ஆமா… குடுத்த கிப்ட்டையே பார்க்கல. முதல்ல அதைப் போய்ப் பாருங்க. அப்புறம் வேற கிப்ட் வாங்கலாம்.” மீரா சொல்ல…. அர்ஜுன் அதிர்ந்தவன், “ஏன் மீரா என் தலையில இப்படிக் குண்டை தூக்கி போடுற? நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா…” என்றான்.
“சரி சொல்லுங்க என்ன வேண்டும்?” அர்ஜுன் மீராவின் கையில் இதழ் ஒற்ற…. மீரா அர்ஜுனை பார்த்தவள், “சீக்கிரம் சொல்லுங்க” என்றாள்.
“உனக்குப் புரியலையா மீரா…” என்ற அர்ஜுன் மீராவின் முகத்தின் அருகே தன் முகத்தைக் கொண்டு வந்தான். மீராவிற்கு உண்மையிலேயே புரியவில்லை. அவள் எதுக்கு இப்படிக் கிட்ட வரான் என்று நினைக்கும் போதே, அர்ஜுனின் பார்வை அவள் இதழ்களில் பதிய… மீராவிற்குப் புரிய ஆரம்பித்தது. அவள் அர்ஜுனை பார்த்து முறைக்க, “ஒன்னே ஒன்னு மீரா…. ப்ளீஸ்…” அர்ஜுன் கெஞ்ச…. மீரா அவனைத் தள்ளிவிட்டவள், தன் சீட்டை சரி செய்து கொண்டு காரை கிளப்பினாள்.
“ராட்சஸி ஒரே ஒரு முத்தம் தந்தா என்னவாம், போடி… உனக்கு நான் நம்ம பர்ஸ்ட் நைட்ல கூட முத்தம் தர மாட்டேன்.” அர்ஜுன் புலம்ப… மீராவிற்குச் சிரிப்பு வந்தது. அர்ஜுன் மீராவை பார்க்காமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர…. மீரா அர்ஜுனின் வண்டி நின்ற இடத்தில் சென்று காரை நிறுத்தினாள். அர்ஜுன் காரில் இருந்து இறங்க முயல… மீரா அர்ஜுனின் கையைப் பிடித்துத் தடுத்தவள், தன் பர்ஸில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்து அவன் இடது கை மோதிர விரலில் மாட்டி விட்டாள்.
அர்ஜுன் தன் கையைத் தூக்கி பார்த்தான். அது ஒரு சின்ன வளையம் தான். ஆனால் அதைச் சுற்றி சிறு சிறு இதய வடிவத்தில் டிசைன் செய்யப் பட்டிருந்தது. அர்ஜுனுக்கு மிகவும் பிடித்திருந்தது. “ரொம்ப அழகா இருக்கு மீரா.” மீரா அர்ஜுனை பார்த்து புன்னகைத்தவள், அவன் சட்டையைப் பிடித்து அருகே இழுத்து, அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதிக்க…. அர்ஜுனும் பதிலுக்கு மீராவின் கன்னத்தில் இதழ் பதித்தான்.
“கோபமா….” மீரா கேட்க…. இல்லை என்று தலை ஆட்டியவன் “உனக்கு ஒரு தடவை லிப்ஸ்ல முத்தம் கொடுத்ததா… அப்புறம் நிறுத்த முடியுமான்னு எனக்கே தெரியலை. எனக்கு ஒன்னு எல்லாம் பத்தாது, நிறைய வேண்டும்.” என்று தன் கை இரண்டையும் விரித்துச் சொன்னவன், “அதனால நான் கல்யாணத்துக்கு அப்புறமே வாங்கிக்கிறேன்.” என்றான். மீரா அவன் சொன்னதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தாள்.
“இப்ப தான் நீ நார்மலா இருக்க, இவ்வளவு நேரம் அமைதியா இருந்த.” அர்ஜுன் காரின் கதவை திறந்து கொண்டு வெளியே இறங்கியவன், “நீ கிளம்பு மீரா, நாம நாளைக்குக் காலேஜ்ல பார்க்கலாம்.” என்றான். மீராவும் “bye அர்ஜுன்.” என்று தன் காரை கிளப்பிக் கொண்டு சென்றாள்.
அர்ஜுன் தங்கள் கடைக்கு வந்து… நேராக அலுவல் அறைக்குச் சென்று… மீரா குடுத்த கிப்ட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தவன், அதைத் திறத்து பார்க்க… உள்ளே முதலில் ஒரு பெரிய சாக்லேட் இருந்தது. அடுத்து ஒரு அழகான வாழ்த்து அட்டையும், அதற்கும் அடுத்து அடர் நீல வர்ணத்தில் ஒரு ஷர்ட்டும், ஒரு கை கடிகாரமும் இருந்தது. அர்ஜுன் அந்த வாட்சை எடுத்துக் கையில் வைத்து பார்க்கும் போது தான், மீராவும் இன்று அதே போல் வாட்ச் அணிந்து இருந்தது நினைவுக்கு வந்தது. அதோடு மீரா இன்று அணிந்து இருந்ததும் அடர் நீல வண்ண உடை தான்.
அர்ஜுன் தன் தலையை அழுந்த கோதியவன், இன்று இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிய வேண்டும் என்று ஆசையாக வாங்கி இருக்கிறாள். நேத்தே பார்த்திருந்தா ஒழுங்கா இன்னைக்கு அவளைப் பார்க்கும் போது போட்டுட்டு போய் இருக்கலாம். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வாட்ச் வேற… எவ்வளவு ஆசையா எதிர்பார்திருப்பா…. அது தான் அமைதியா இருந்திருக்கா. வாய்யத் திறந்து எதாவது கேட்டிருந்தாலோ அல்லது சண்டை போட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அமைதியா இருந்திட்டாளே என்று நினைத்த அர்ஜுன், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.
இரவு உணவை வேகமாகக் கொறித்தவன், “நான் போய்த் தூங்க போறேன் அலுப்பா இருக்கு.” என்று சொல்லிவிட்டு அறைக்கு வந்து வேகமாக மீராவை செல்லில் அழைத்தான்.
“சாரி மீரா… ரொம்பச் சாரி. இப்ப தான் உன்னோட கிப்ட் பார்த்தேன். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கி இருக்க… நான் போட்டிட்டு வருவேன்னு ரொம்ப எதிர் பார்த்திருப்ப இல்ல… உன்னை ஏமாத்திட்டேன் தானே, ஏன் மீரா சொல்லலை?”
அவள் சொன்னதைக் கேட்ட அர்ஜுனுக்கு மனது வலிக்க…. தன் கண்களை இறுக மூடி திறந்தவன், நானே என் மீராவை இன்றைக்கு ஏமாத்திட்டனே என்று மிகுந்த வருத்தபட்டான்.
மீரா சொன்னதைக் கேட்டு மிகவும் வருந்திய அர்ஜுன், “என்னையும் உங்க அம்மா, அப்பா லிஸ்ட்ல சேர்திட்டியா…” என்றான்.
அர்ஜுன் சொன்னதைக் கேட்டு மீரா புரியாமல், “என்ன சொல்றீங்க அர்ஜுன்?” என்றதும், “மீரா நீ உங்க அம்மா, அப்பாகிட்ட உன்னோட விருப்பு வெருப்பு சொல்ல முடியாம போன மாதிரியே என்கிட்டயும் இருக்கலாம்னு முடிவு பண்ணிடியா. என்கிட்டே சொல்லறதுக்கு என்ன மீரா?”
“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கலர்ல டிரஸ் வாங்கி இருக்க… அதை நான் போட்டிட்டு வராததைப் பார்த்தும் அமைதியா இருக்க. என்கிட்டே ப்ரீயா பேச என்ன மீரா தயக்கம்?”
“என்கிட்டே உரிமையா சண்டை போட்டிருக்கலாம். இல்லைனா எதாவது சொல்லி இருக்கலாம். அதைவிட்டுட்டு எதோ பெரிய தியாகி மாதிரி பேசுற.”
“சரி போனது போகட்டும், இனிமே என்கிட்டே எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பேன்னு சொல்லு… இப்படி மனசுக்குள்ளையே வச்சு வருத்தப்படக் கூடாது சரியா…” அர்ஜுன் கேட்க…. மீரா சரி என்றாள்.
மறுநாள் கல்லூரிக்குச் சீக்கிரம் வந்த மீரா…. அர்ஜுனை பார்த்ததும் தன் கண்களை ஆச்சர்யத்தில் பெரிதாக விரித்தாள். ஏன் என்றால்? அர்ஜுன் மீரா வாங்கிக் கொடுத்த உடையை அணிந்து கொண்டு வந்திருந்தான். அர்ஜுன் மீராவை அழைத்துக் கொண்டு யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று அவனது வலது கையைத் தூக்கி அதில் அணிந்து இருந்த கடிகாரத்தைக் காட்டியவன், “மோதிரம் எங்க?” என்று கேட்க….
மீரா புரியாமல் பார்க்க… “எல்லாமே ஒரே மாதிரி வாங்கி இருக்க… உனக்கு மோதிரம் மட்டும் வாங்காமலா இருப்ப.” என்றதும், மீரா சிரித்துக் கொண்டே தன் பர்சில் இருந்து அர்ஜுன் மோதிரம் போலவே வாங்கி இருந்த இன்னொரு மோதிரத்தை எடுத்து கொடுக்க… அர்ஜுன் அதை வாங்கி மீராவின் இடது கை மோதிற விரலில் போட்டுவிட்டான். இருவரின் கைகளையும் அருகருகே வைத்து, இருவர் விரலிலும் ஒரே மாதிரி இருந்த மோதிரத்தை பார்த்து ரசித்தனர்.
ஹே… என்று அர்ஜுன் துள்ளியதை பார்த்து பயந்த மீரா, “அர்ஜுன், வலிசிடுச்சா… தெரியாம கிள்ளிட்டேன். சாரி…” என்று சொல்லி கொண்டே… அவள் கிள்ளிய இடத்தைத் தடவி விட… அர்ஜுன் இவ தெரிஞ்சு செய்றாளா இல்லை தெரியாம செய்றாளான்னே புரிய மாட்டேங்குது என்று நினைத்தவன், தங்களைச் சுற்றி பார்க்க… அங்கே யாரும் இல்லை.