“அடிப்பாவி, காலேஜ்ல வச்சு பண்ற வேலையா இது.” கோபமாகக் கேட்பது போல் அவன் மிரட்ட…. மீரா அவன் நிஜமாவே கோபமாக இருக்கிறான் என்று நினைத்து வேகமாகக் கையை எடுத்தாள்.
பெருமூச்சு விட்ட அர்ஜுன், “தனியா இருக்கும் போது தள்ளி வைக்கிற… காலேஜ்ல வச்சு கிள்ளி வைக்கிற… பதிலுக்கு என்னால கிள்ள கூட முடியாது. உன்னை என்னடி பண்றது?” அவன் ரைமிங்காகப் புலம்ப…. மீரா அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து வெட்கப்பட்டவள், “ச்சை லூசு தான் நான்னு.” என்று சொல்லி தலையில் அடித்தாள்.
“பார்த்து மெதுவா அடி, தலையில இருக்கிற மண்ணெல்லாம் கொட்டிட போகுது.” அர்ஜுன் சொல்ல… மீரா அவனை முறைத்தவள், “ஜோக்கா… சிரிப்பே வரலை.” என்று வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கி கொண்டே சொன்னாள். “அது தான் பார்த்தாலே தெரியுதே.” அர்ஜுன் சொல்ல… மீராவால் அதற்கு மேல் அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தாள். இருவரும் சந்தோஷமான மன நிலையுடன் வகுப்பிற்குச் சென்றனர்.
அர்ஜுனும், மீராவும் ஒருவருக்கொருவர் கொஞ்சி, கெஞ்சி, சண்டை, சமாதானம் என்று நாட்களைச் சந்தோஷத்துடன் கழித்தனர். அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தீபாவளியும் வந்தது.
தீபாவளிக்கு கடையை மீரா, வித்யா ஆரு மூன்று பேரும் சேர்ந்து அலங்கரித்தனர். தீபாவளி அன்று மீராவை தங்கள் வீட்டில் தான் முழு நேரமும் இருக்க வேண்டும் என்று கணேசனும், வித்யாவும் சொல்லிவிட… மீரா காலையில் எழுந்து குளித்துத் தங்கள் வீட்டுப் பூஜையில் கடனே என்று கலந்து கொண்டு, அர்ஜுன் வீட்டிற்குக் காலை பத்து மணிக்கே வந்து விட்டாள்.
மீரா அரக்குக் கலரில் காக்ரா சோலி உடை அணிந்து, காது, கழுத்தில் வைர கற்கள் பதித்த நகைகள் அணிந்து மிகவும் அழகாக வந்திருந்தாள். அர்ஜுனின் பார்வை மீராவின் மீதே இருந்தது. அவன் கஷ்டப்பட்டு வித்யாவிடம் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்று பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.
மீரா அவளே செய்த ரசமலாய்க் கொண்டு வந்திருந்தாள். அது அர்ஜுனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் என்பது கூடுதல் விஷயம்.
“மீரா, நீ கொண்டு வந்த ஸ்வீட்ட… நீயே எல்லோருக்கும் கொடு.” வித்யா சொல்லிவிட்டு உள்ளே செல்ல… மீரா கிண்ணத்தில் வைத்துக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்க…. அர்ஜுன் மட்டும் அவள் வருவதைப் பார்க்காது போல் வேறு பக்கம் செல்ல… மீரா அவன் பின்னே சென்றாள்.
அர்ஜுன் சென்று மாடி படி அருகே நிற்க… மீரா சென்று ஸ்வீட்டை அவனிடம் கொடுத்தாள். ஸ்வீட்டை வாங்கிக் கொண்டே, “இதை நான் என் ரூம்ல வச்சிருப்பேன். நீயே வந்து ஊட்டி விட்டாதான் சாப்பிடுவேன்.” அர்ஜுன் சொல்ல…
“இது உங்க வீடு மறந்து போச்சா… என்னால முடியாது போடா.” மீரா சொல்லிவிட்டு திரும்ப… அர்ஜுன், “வரவர நீ என்னை அடிக்கடி போடான்னு சொல்ற…” என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல… மீரா மறுபடியும் “சரிதான் போடா…” என்றாள். அர்ஜுன், இருடி தனியா மாட்டாமலா போவ… அப்ப இருக்கு உனக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
மீரா சமையல் அறைக்குச் சென்ற போது வித்யா தனியாக நின்று சமைத்துக் கொண்டிருந்தார். “நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா…” என்று கேட்டு மீரா அவர் அருகே செல்ல… “எப்பவும் கூடமாட வேலை பார்க்க ஒரு பொண்ணு இருப்பா… இன்னைக்குத் தீபாவளின்னு அவளும் வரலை. பாவம் அவங்களும் பண்டிகை கொண்டானும் இல்லையா…” வித்யா சொல்ல… மீரா ஆமாம் என்று தலை ஆட்டியவள், அவருக்கு வெங்காயம் நறுக்கி கொடுத்தாள்.
“இன்னைக்கு மட்டன் பிரியாணியும், சிக்கென் வருவலும்.” என்றவர், “கொஞ்ச சாதமும் பண்ணிடலாம். தயிர் விட்டு சாப்பிட…” வித்யா சொல்ல… “ஆன்டி… நான் தயிர் சாதம் பண்ணட்டுமா?” மீரா கேட்க… வித்யாவும் சரி என்று சொல்ல… மீரா குக்கரில் சாதம் வைத்து, பிறகு அதை ஆற வைத்து தயிர் ஊற்றி கிளறி தாளித்து வைத்தவள். அப்பளம் வடகம் இருக்கா என்று கேட்டு அதையும் வறுத்து வைத்தாள்.
வித்யா பிரியாணிக்கு தயார் செய்து கொண்டே மீராவை பார்த்துக் கொண்டிருந்தார். எதுக்கு இவ அப்பளம், வடகம் எல்லாம் பண்றா என்று யோசித்துக் கொண்டே சமையல் செய்தார்.
மீரா அவள் வேலை முடிந்ததும், “ஆன்டி, நான் போய் டிவி பார்கிறேன்.” என்று சொல்லிவிட்டு செல்ல… வித்யாவிற்கு அவளது செயல் முகத்தில் புன்னகையை வர வைத்தது. இப்படி ஒரு அருமையான பெண்ணைப் பெத்திட்டு அவங்க அப்பா, அம்மாவால எப்படிப் பிரிய முடிஞ்சிது என்று யோசித்தார்.
ஹாலில் அமர்ந்து எல்லோரோடும் டிவி பார்த்த மீராவை அர்ஜுன் விழிகளால் பருகிக் கொண்டிருந்தான். வித்யா சமையல் முடித்ததும் எல்லோரையும் சாப்பிட அழைக்க…. ஆருவும், மீராவும் அவருக்கு எல்லாவற்றையும் டேபிளில் அடுக்க உதவினர். வித்யா பரிமாற வர… “அம்மா, நீங்களும் உட்காருங்க… நாமே பரிமாரிப்போம்.” ஆதி சொல்ல… வித்யாவும் சரி என்று அமர்ந்தார்.
எல்லோரும் அவரவரே பரிமாறிக்கொள்ள… மீரா தயிர் சாதமும், அப்பளம், வடகம், ஊறுகாய் வைத்துக் கொண்டு சாப்பிட… அதைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்தனர். கணேசன் “என்ன மீரா? நேரா தயிர் சாதத்துக்குப் போய்ட்ட…” என்று கேட்க… மீரா “நாங்க சைவம் அங்கிள்” என்றாள்.
“தப்பு என் மேல தான். நான் கேட்டு இருக்கணும். நீயாவது சொல்லி இருக்கலாம் இல்ல மீரா…” வித்யா வருத்தப்பட…
“ஏற்கனவே வேலை செய்றவங்க வரலை… இதுல நீங்க எனக்கு வேற தனிச் சமையல் செய்யணும்னா கஷ்டம் தான, அதுதான் சொல்லலை. இதுல என்ன ஆன்டி இருக்கு? உங்களோட சேர்ந்து சாப்பிடுறேன்ல அதுவே போதும்.” என்றாள்.
“உனக்கு நாங்க அசைவம் சாப்பிடருது கஷ்டமா இருக்கா மீரா…. நீ வேணா ஹால்ல உட்கார்ந்து சாப்பிடுறியா?” கணேசன் கேட்க… “அங்கிள், டெய்லி நான் தனியா தான சாப்பிடுறேன். இன்னைக்கு உங்களோட சேர்ந்து சாப்பிடலாம்னு நினைச்சா… தனியா சாப்பிட சொல்றீங்களே…” என்றாள் மீரா.
அதைக் கேட்ட எல்லோருக்கும் உருகி விட்டது. “இல்லையில்லை நீ இங்கயே சாப்பிடு…. நான் உனக்கு அடுத்த வாரம் சைவ சாப்பாடு செஞ்சு விருந்தே வைக்கிறேன்.” என்ற வித்யா, “இரு முந்திரி பக்கோடா இருக்கு எடுத்திட்டு வரேன்.” என்று உள்ளே சென்றார்.
அர்ஜுன் மீராவையே பார்த்துக் கொண்டிருக்க… அவன் தட்டில் இருந்து கோழி வறுவலை ஆதி எடுக்க…. பிரியாணியை ஆரு எடுத்து கொண்டாள். அர்ஜுன் இருவரையும் பார்க்க…
“அது தான் உன் ஆளு சைவம்னு தெரிஞ்சிடுச்சு இல்ல…” ஆதி சொல்ல… ஆரு “காதலிக்காக இது கூடப் பண்ண மாட்டீங்களா பிரதர்.” என்றவள், தயிர் சாதத்தை எடுத்து அவன் அருகில் வைத்தாள். அர்ஜுன் சிரித்துக் கொண்டே தயிர் சாதத்தைப் போட்டு சாப்பிட ஆரம்பித்தான். மீரா இவன் ஏன் தயிர் சாதம் சாப்பிடுறான்? என்று நினைத்துக் கொ ண்டே அவனுக்கு அப்பளத்தையும் வடகத்தையும் கொடுத்தாள்.
வித்யா பக்கோடாவை கொண்டு வந்து மீராவிற்குக் கொடுத்தவர். அர்ஜுனை பார்த்து “நீ ஏன்டா தயிர் சாதம் சாப்பிடுற?” என்று கேட்க…. அர்ஜுன்…. நான் எங்க மா சாப்பிட்டேன்? என்னைச் சாப்பிட வச்சிட்டாங்க என்று மனதிற்குள் புலம்ப… ஆரு “அவனுக்குப் பிரியாணி போதுமாம்” என்றாள்.
மதியம் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு… மாலை வித்யா மீராவிற்கு என்று ஸ்பெஷல் டிபன் செய்து இருந்தார். அதை எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டனர். ஆரு “பட்டாசு வெடிப்போம் வா…” என்று அழைக்க… மீராவும் சரி என்று சென்றாள். ஆதியும், அர்ஜுனும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். சிறிது நேரம் அந்தத் தெருவே அதிரும் படி பட்டாசு வெடித்தனர்.
மீரா சந்தோஷமாகக் கொண்டாடும் தீபாவளி இதுதான். அவள் பட்டாசு வைத்து விட்டு வீட்டுக்குள் ஓடி வந்து காதை மூடிக்கொண்டு ஒளிந்து கொள்வாள், பின் பட்டாசு வெடித்ததும் சந்தோஷமாகத் துள்ளி குத்திப்பாள். அதைப் பார்த்து அர்ஜுனுக்குச் சிரிப்பாக வந்தது. எப்படிக் குழந்தை மாதிரி இருக்கா பாரு? என்று நினைத்துக் கொண்டான்.
இரவு எழு மணி ஆனதும் இளையவர்கள் எல்லோரும் சேர்ந்து பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றனர். அங்கே அமர்ந்து பார்த்தால்.. விதவிதமான வான வேடிக்கைகளைப் பார்க்கலாம் என்று அங்கே கிளம்பி சென்றனர். ஆள் நடமாட்டம் குறைவான இடமாகப் பார்த்து பீச் மணலில் சென்று அமர்ந்தனர்.
ஆருவும், மீராவும், வான வேடிக்கை பார்த்துச் சந்தோஷமாகப் பேசி கொண்டிருந்தனர். அப்போது ஆரு… ஆதியிடம் பஜ்ஜி கேட்க… அவன் வாங்க செல்ல… அவனோடு ஆருவும் சேர்ந்து சென்றதால்… அர்ஜுனும், மீராவும் மட்டும் அங்கே இருந்தனர்.
“இது எனக்கு மறக்க முடியாத தீபாவளி மீரா… இன்னைக்குப் முழுக்க நீ என்னோட, நம்ம குடும்பத்தோட சேர்ந்து இருந்தது, எனக்கு ரொம்பச் சந்தோஷம். சீக்கிரம் நீ நம்ம வீட்டுக்கே நிரந்தரமா வந்திடனும். நீ இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவேன்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு.” அர்ஜுன் உருக்கமாகச் சொல்ல….
“நானும் இததான் அர்ஜுன் நினைச்சேன். எனக்கும் வீட்டுக்கு போகவே பிடிக்கலை.” என்றாள் மீரா. அப்போது கூட்டமாகச் சில பையன்கள் வர…. அதில் ஒரு பையன் மட்டும் மீராவை பார்த்து முறைத்துக் கொண்டே சென்றான். மீராவும் அவனை முறைத்தபடி இருக்க… அதைக் கவனித்த அர்ஜுன் .”யாரு…” என்று கேட்க… மீரா “வருண்…” என்றாள். வருண் யாரு அர்ஜுன் யோசிக்க… மீரா “என்னோட தம்பி.” என்றாள்.