பாலை குடித்த பின் அவனிடம் பேசாமல் படுத்துக் கொண்டவளை பார்த்து அமர்ந்திருந்தவன் மேலும் மேலும் பேசினால் வாக்குவாதம் தான் ஆகும் என அமைதியாய் போய்விட அச்சமயம் சரியாய் யாமினியிடம் இருந்து அழைப்பு வந்தது.
மேக்னா திருமணத்திற்கு வந்து சென்றபின் தினமும் அழைத்து அவளின் நலனை விசாரிப்பதை வழமையாய் கொண்டிருந்தார்.
அப்படியே இன்றும் அழைத்தவர் எப்போது வருவாய் என்று விசாரிக்கவே,
“நான் வருவேனானே தெரியல ம்மா..” என்று நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
சொன்னதோடு யாமினியிடம் பதிலையும் எதிர்பார்க்காமல் வைத்து விட்டு தூங்கியும் விட்டவள் மறுநாள்
அவரே நேரில் வந்து நிற்பார் என கிஞ்சிதமும் எதிர்பார்க்கவில்லை.
அவரை கண்டதும் சக்திக்கு முதலில் தோன்றியது பயமே..!! ஆம்.. பயம் தான்… நேற்று உணர்ச்சி வசப்பட்டு எல்லாவற்றையும் சொல்லி விட்டாள். ஆனால் யாமினிக்கு இந்த விஷயத்தில் எல்லாம் எவ்வளவு கோபம் வரும் என்று அவள் அறிந்ததே..!!
இரண்டு நாட்கள் தாமதமானாலும் சரி வீட்டில் பேசி சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று சிந்தித்து எப்படி சமாதானம் செய்யலாம் என யோசனையில் அவள் இருக்க,
இப்பொழுது எங்கே தனக்காக பேசுகிறேன் என யாமினி சண்டை போட்டு பிரச்சனை பெரிதாகி விடுமோ என்று பதட்டமாக
பேய் முழி முழித்து நின்றாள்.
ஆரியன் சக்தியை அழைத்து செல்ல வேண்டி இன்று விடுப்பு எடுத்து இருக்க இப்போதோ எல்லாமே கேள்விகுறியாய் இருக்கவும் அலுவலகமும் செல்லாமல் வீட்டில் தான் இருந்தான். திருவும் இன்னும் ஃபாக்டரி செல்லவில்லை. நேற்றைய தாக்கமாய் வீடே அசாத்திய அமைதியில் காணப்பட யாமினியின் திடீர் வருகையில் மூவரின் பார்வையும் சக்தியை தான் கேள்வியாய் ஏறிட்டது.
யாமினி தனியாக தான் வந்திருந்தார். அவர் முகத்தில் இருந்தும் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை.
வெவ்வேறு சிந்தனையில் இருந்தாலும் யாமினியை வரவேற்று இயல்பாகவே பேச அவரும் பொதுவாகவே பேச எப்போது என்ன வெடிக்குமோ என நினைத்தபடி சக்தி அவர் கொடுத்த இனிப்பு பழங்களை எல்லாம் வாங்கி வைத்துவிட்டு கிட்சன் செல்ல ஆரியனும் கூடவே வந்தான்.
“நீ அத்தையிடம் எதுவும் சொன்னீயா சக்தி..”
மேலும் கீழும் பாவமாய் தலையசைக்க அவனுக்கும் பதட்டமாக தான் இருந்தது.
“ஏற்கனவே என்ன பண்றதுனு குழப்பமா இருக்கு.. இப்ப இன்னும் என்ன நடக்குமோ புரியல..”
என்றவன்,
“ஆனால்.. அத்தை அம்மாகிட்ட ஹார்ஷா எதுவும் பேசினால் என்னால அமைதியாக இருக்க முடியாது சொல்லிட்டேன்..”
என்று தன் டென்ஷனில் முன்கூட்டியே எச்சரிக்கையாய் ஆரியன் கூற,
அவளும் அதனை நினைத்து தான் கவலை படுகிறாள். ஆனாலும் ஆரியன் அதை சொல்லும் போது கடுப்பாக,
“அவங்க என்னை பார்க்க வரேன்னு முன்ன இருந்தே சொல்லிட்டு தான் இருந்தாங்க.. அப்படி கூட யதார்த்தமா வந்திருக்கலாம் இல்லையா..?
ஏன் அம்மாவை ஏதோ சண்டைகாரங்க மாதிரியே சொல்ற நீ..”
என்று அவள் முறைக்கவும் கம்மென்று வெளியேறி விட்டான்.
“சம்மந்தி வரலைங்களா..”
என திரு கேட்கவும் சட்டென்று என்ன செய்யவது புரியவில்லை. அவர் எங்கே என்று அவருக்கும் தெரியாதே..?! அன்றைக்கு பிறகு பார்க்கவோ பேசவோ இல்லை.
“மாமா ஒரு மெடிக்கல் கேம்ப்காக கொச்சி போயிருக்கார் ப்பா ..”
என்று ஆரியன் தான் உதவிக்கு வந்தான்.
அதனையே தானும் வழிமொழிந்து பின் மேக்னாவை விசாரிக்க சிறிது நேரத்தில் அவள் டீ மற்றும் சிற்றுண்டி எடுத்து வந்தாள். உபசரிப்பு எல்லாம் முடிந்து,
“நான் சுத்தி வளைச்சு எதுவும் பேச விரும்பல.. நேத்து சக்தியை எப்போ ஊருக்கு வருவேன்னு கேட்டேன்.. அவ நீங்க கலந்துக்க வேண்டாம்னு சொன்னதா சொன்னாள்.. கேட்டத்தில் இருந்து எனக்கு மனசே சரியில்லை.. அதான் உங்க கிட்ட நேரில் பேச உடனே கிளம்பி வந்துட்டேன்..”
யாமினி நேரடியாய் சொல்லி பதில்காக பார்த்திருக்க சக்தியோ அவர்களே பேசட்டும் என மௌனமாய் ஆரியன் அருகேயே நின்றுவிட்டாள்.
“அவ சாதாரணமா இருந்திருந்தால் நானும் சந்தோஷமா அனுப்பி வைச்சு இருப்பேன் சம்மந்தி… சுவர் இருந்தால் தான் சித்திரமே.. இந்த நிலைமையில்
இந்த போட்டி எல்லாம் எனக்கு சரியா படலை.. நல்ல படியா பிள்ளையை பெத்ததும் அவ ஆசை படி என்னவேனா செய்யட்டும்..”
என்று உறுதியாய் ரம்யா மறுக்க யாமினி சக்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“உங்க பயம் எனக்கு புரியுது அண்ணி.. ஆனால் நீங்க நினைக்கிற அளவு அங்க எந்த ரிஸ்க்கும் இல்ல..
அதைவிட சக்தி இந்த மாதிரி தன்னையும் தன்னோட திறமையையும் முன்னிலை படுத்திக்க எப்பவுமே முயற்சி பண்ண மாட்டாள்.. முதல் முறையா அவள் முன் வைச்ச விஷயம் ஆரம்பிக்கும் முன்னாடியே பின் வாங்கிறதில் அவ தன்னம்பிக்கை உடையும் இல்லையா..?
அடுத்த முறைன்னு நாம நினைக்கலாம்.. ஆனால் கமிட்மெண்ட்ஸ் அடுத்து அடுத்துன்னு மாறிட்டே தான் இருக்கும்.. அப்புறம் பார்த்துகலாம்னு விட்டால் அந்த ‘அப்புறம்’ வருவது அபூர்வம் தான்..”
மிக பொறுமையாய் யாமினி சொல்ல இங்கே சக்தி வாய் அடைத்து நின்றாள்.
‘அன்று புதைக்குழி என திட்டியவரா இவர்..’
தடாலடியாய் எதுவும் செய்யாமல் தன்மையாய் தனக்காக அவர் பேசுவதை கேட்டு உள்ளம் நெகிழ்ந்தது.
ரம்யா பதில் சொல்லவில்லை. ஆனால் யோசிக்கிறார் என அவர் முகமே சொல்லியது.
“அந்த ஷோ ஒரு மூணு மாசம் தான் நடக்கும்.. மொத்தமும் ஒரு 25 – 26 நாள் தான் ஷுட் இருக்கும்.. இவ்வளவு தூரம் வந்துட்டு அவளால முடிந்ததை பண்ணட்டும்.. வேற எங்கேயும் அவள் போக போறது இல்லையே.. என்கிட்டே தானே அனுப்பி வைக்க போறீங்க.. என் பொண்ணை நான் பத்திரமா பார்த்துக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா..”
என்று சிறு நகைப்போடு கேட்க,
“இல்ல சம்மந்தி.. அப்படி எல்லாம் நினைப்பேனா..” என உடனே மறுத்தார்.
“பின்ன ஏன் யோசிக்கிறீங்க.. முதல் பிரசவம் அம்மா வீட்டில் தானே நடக்கும்.. அந்த முறையில் கூட நீங்க என் கூட அனுப்பி வைங்க.. பிரசவம் ஆகும் வரை என்கூட இருக்கட்டும்.. அவளை முழு கவனத்தோடு பார்த்துகிறது என் பொறுப்பு..”
யாமினியின் உறுதியான வார்த்தைகள் குழப்பதில் தத்தளித்த ஆரியனையும் தெளிய வைத்தது.
அவன் திருவையே உதவிக்காக பார்க்க அவரும்,
“ரம்யா.. இன்னும் என்னமா..?”
என்று கேட்க அதில் அவரின் சம்மதமும் இருப்பதை புரிந்துக் கொண்டு பெருமூச்சோடு,
“சரிங்க சம்மந்தி.. நீங்க இவ்வளவு தூரம் சொல்லும் போது.. நான் மறுத்தால் அது அழகில்லை.. உங்க கூடவே அழைச்சுட்டு போங்க..”
என்று முழு மனதாய் சொல்ல யாமினி நிறைவாய் புன்னகைத்தார்.
சக்திக்கு கனவா நினைவா என்பது போல் திகைத்து நின்றாள். காலை வரையிலும் என்ன செய்வது என தெரியாமல் தலைவெடிக்க கவலைபட்ட பிரச்சனையை இப்போது ஒன்றும் இல்லாமல் யாமினி செய்துவிட அத்தனை பூரிப்பு அவளிடம்..!!
மானாய் துள்ளி ஓடாத குறையாய் சக்தி மகிழ்ச்சியாய் கிளம்ப ஆயத்தமானாள். இன்னும் பக்கிங் எதுவும் செய்யவில்லையே..!!
மனைவியின் மகிழ்ச்சியை ஆசையாய் பார்த்து இருந்தாலும்,
“ம்ஹும்.. நேத்தில் இருந்து இப்ப தான் என் பொண்டாட்டி முகத்தில் சிரிப்பே தெரியுது..”
என வம்பிழுக்க கையில் எடுத்த துணிகளை வைத்து விட்டு திரும்பி அவனை பார்த்தவள்,
“ஆனா.. நீ ஒன்னுமே சொல்லலையே ஆர்யா.. உனக்கு எந்த வருத்தமும் இல்லைல..”
என்று கேட்க அவள் அருகில் வந்து தோள்களில் பற்றி,
“ச்சே.. இல்லை டா.. நியாயமா உனக்காக நான் தான் இதை செஞ்சு இருக்கணும்.. ஆனா எனக்கும் ஏகப்பட்ட கன்ஃபியூஷன்ஸ்..” என்றவன்,
“இப்ப சந்தோசம் மட்டும் தான்..” என்று புன்னகைத்தான்.
“சரி.. அம்மாவை சண்ட போடுவாங்கன்னு என்ற மாதிரி சொன்ன… இப்ப பார்த்தே இல்ல..”
என்று கேட்டு மிதப்பாய் பார்த்து வைக்க சிரிப்போடு காதை பற்றிக் கொண்டு,
“அப்படி சொல்லி இருக்க கூடாது.. தப்பு தான் தெய்வமே..”
என்க,
“ஆங்.. அப்படி வாங்க..” என்றாள் கெத்தாக..
நிகழ்ச்சியின் போதே ஆரியன் வருவதாய் கூறிவிட சக்தியும் யாமினியும் மட்டுமாய் மாலையில் கிளம்பினர்.
ஓட்டுநர் காரை இயக்க பின் இருக்கையில் அன்னையோடு அமர்ந்திருந்த சக்தி வாசலில் நின்று விடைக் கொடுத்த கணவனிடம் கண்ணை விட்டு மறையும் வரை கையசைத்தாள். கல்யாணத்திற்கு பின் முதல் பிரிவு.. இப்பவே அவனை ‘மிஸ்’ செய்ய தொடங்கி விட்டது மனம்..!!
“ஆறு நாள் கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள போயிடும்..”
அவளின் அகத்தை படித்தவராய் யாமினி சொல்ல மெல்லிய புன்னகையை பதிலாய் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் ம்மா அண்ட் சாரி டூ..”
“சாரி எதுக்கு..”
“அது உங்களை பார்த்ததும் பிரச்சனை ஆகிடும்னு தான் பயந்தேன்..”
சக்தி உண்மையை தயக்கமாய் ஒத்துக் கொள்ள அவள் என்ன நினைத்து இருப்பாள் என்று புரிய வாய்விட்டு நகைத்தவர்,
“எப்படி நீங்க சக்தியை தடுப்பீங்கன்னு சண்டை போடுவேன்னு நினைச்சியா..”
என கேட்க சங்கடமாய் தலையசைத்தாள்.
சிரித்து ஓய்ந்ததும் சின்ன புன்னகையோடு,
“என்னை நீ எப்படி இமாஜின் பண்ணி இருக்க தெரியல..ஆனால் எல்லா இடத்திலும் எல்லா விஷயத்திலும் போர்க்கொடி தூக்கி தான் நம்ம கருத்தை எடுத்து வைக்கணும்ணு நினைக்கிறது அறிவிலித்தனம்..
உங்க வீட்டில் எல்லார் மேலையும் எனக்கு நிறைய மரியாதை இருக்கு..
உன்னை அடக்கி வைக்க விதண்டாவாதம் பண்றவங்களா இருந்தால் நீ நினைச்சது என்ன.. அதுக்கு மேலையே நடந்து இருக்கும்..
ஆனா இவங்க சொல்றது உன்மேல உள்ள அக்கறையில் டா.. அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்தால் போதும்..
எங்க நம்ம பேசுறது கேட்காதோ அங்க மட்டும் தான் நம் குரல் உயரனும்..”
என்று சொல்லிய யாமினியை கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துக் கொள்ள தொடங்கினாள் சக்தி..
யாமினி கொடுத்த வாக்கை தவறாமல் சக்தியை கண்ணும் கருத்தும் ஆக தான் பார்த்துக் கொண்டார்.
முதலில் அவர்கள் குழு பயிலும் ஸ்டூடியோ தொலைவில் இருப்பதால் இவர்கள் வீட்டின் அருகிலே ஒரு ஸ்டூடியோ ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.
தன் வேலை நேரத்தை குறைத்துக் கொண்டு சக்தியுடன் அதிகம் இருந்தார். அவளின் மசக்கை கஷ்டங்களை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என பார்த்து பார்த்து செய்தார்.
பார்வதியை முழு நேரமும் இங்கே வேலைக்கு வைத்தார் என தன்னால் இயன்றவரை எல்லாமே செய்ய கொஞ்சமேனும் பாசம் காட்ட மாட்டாரா என முன்பு ஏங்கி இருந்த சக்திக்கு இப்போது அன்னையின் பாசத்தில் அவர் மேல் பேரன்பு கூட புதியத்தோர் கீதமாய் அவர்களின் உறவு இசைந்தது.
விஷாகனும் சக்தியிடம் அலைபேசி தொடர்பில் தான் இருந்தார். மருத்துவராய் அவளுக்கு அறிவுரைகளும் கொடுக்க தவற மாட்டார். ஆனால் வீட்டிற்கு அழைத்தால் மட்டும் ஏதேதோ காரணம் கூறி மறுத்து விடுவார். கடைசியாய் அன்று இவர்கள் இருந்தபோது சென்றதாக தான் இருக்கும் என அவளுக்கு புரிந்தது.
ஆனால் இவர்கள் இருவரையும் என்ன தான் செய்வது என்று தெரியவில்லை.
ஒருநாள்,
“அப்பாவும் நீங்களும் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ம்மா..”
என்று கேட்டு அவர் முக பாவத்தை ஆராய அதில் பெரிதாய் மாற்றமெதும் இல்லை.
“நான் அப்போ சோல் டிவியில் தான் ஒரு ப்ரோக்ராமில் அசிஸ்ட்டா வேலை செஞ்சேன்.. என்னோட பாஸ் கொஞ்சம் நடுத்தர வயசு உள்ளவர்.. கார்டியாக் அரேஸ்ட்.. அவரோட ரிலேஷன் யாரும் நம்ம நாட்டில் இல்லை.. ஸோ நான் தான் கூட இருந்து ஹெல்ப் பண்ணேன்.. அவரை அட்டென்ட் பண்ணின டாக்டர் டீம்ல விஷாகன் இருந்தார்… அப்போ எம். எஸ் பண்ணிட்டு இருந்தார்.. வீ பிகம் ஃப்ரெண்ட்ஸ்.. ஒரு நாள் என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டார்..
எனக்குன்னு யாரும் கிடையாது.. நான் அப்ப இருந்த மைண்ட் செட்டில் மேரெஜ் என்னோட டூ லிஸ்ட்டிலும் கிடையாது… ஆனாலும் விஷாகன் லைஃப் லாங் ஒரு நல்ல துணையா இருப்பார்னு தோணுச்சு.. ஐ அக்செப்டட்.. அவங்க வீட்டில் ஒத்துக்கலை.. ஸோ நாங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்..”
“அப்பா பேமிலி எல்லாம் எங்க இருக்காங்க.. இத்தனை வருஷம் ஆகியுமா கோபம் குறையலை..”
“இல்ல சக்தி.. விஷாகன் எங்க மேரேஜ் முன்னால இருந்தே அவங்க குடும்பத்தோட இல்லை.. அவருது பெரிய டாகடர் பேமிலி.. பெங்களுரில் சொந்தமா ரெண்டு மூணு ஹாஸ்பிட்டல் இருக்கு.. விஷாகனுக்கு மருத்துவத்தை சேவையா செய்யணும் ஆசை.. அவங்க வீட்டில் அதுக்கு எல்லாம் அலோவ் பண்ணல.. இவர் என் போக்கில் விட்டுடுங்கன்னு வந்துவிட்டார்.. கல்யாணமும் அதே போல் தன் இஷ்டப்படி பண்ணவும் முழுசா கை கழுவி விட்டாங்க.. இவரும் மறுபடியும் அங்க போக விரும்பவே இல்ல..”
இது எதுவுமே சக்திக்கு தெரியாது.. இவ்வளவு எல்லாம் நடந்திருக்கா என வியப்பாய் இப்போது தான் கதை கேட்டாள்.
நல்லா தானே இருந்து இருக்கீங்க.. அப்புறம் என்ன தான் பிரச்சனை என்று கேட்க தான் தோன்றியது.
ஆனால் செய்தி வாசிப்பது போல் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொல்பவரிடம் மேற்கொண்டு கேட்க தயக்கமாய் இருக்க விட்டு விட்டாள்.
இப்படியாய் மின்னல் வேகத்தில் நாட்கள் செல்ல எல்லோரும் மிகுந்த ஆவலாய் எதிர்பார்த்த ‘வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ்’ நிகழ்ச்சியின் அறிமுக சுற்றின் படபிடிப்பு நாளும் வந்தது.