அன்று மீராவின் பிறந்தநாள் அவளுக்கு நினைவு தெரிந்து அவள் மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பிறந்தநாள் இதுதான். விடியற்காலை பன்னிரண்டு மணிக்கே அர்ஜுன், ஆரு, ஆதி போன்னில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்க….வருணும் அழைத்து வாழ்த்தி இருந்தான். காலையில் வழக்கம் போல் மீராவின் அப்பா வாழ்த்தியவர், இந்த வருஷம் பர்த்டேக்குக் கார் வாங்கலாமா என்று கேட்க…. மீரா அவரைப் பார்த்து முறைத்தாள். “இப்படித் தான் மூன்னு வருஷமா காரா வாங்கி இருக்கீங்க.” அவள் சொல்ல… ராம்நாத் மீராவை ஆச்சர்யமாகப் பார்த்தார். மீரா இதுவரை அவளுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டதே இல்லை. அவராகத் தான் வாங்கிக் கொடுப்பார். இந்த முறை மகள் தன்னிடம் எதோ எதிர்பார்கிறாளோ என்று நினைத்தவர், “மீரா உனக்கு எதாவது வாங்கனுமா…. நான் பணம் தரேன், நீயே வாங்கிக்கோ.” என்றார். “இல்லை பணம் வேண்டாம். ஏற்கனவே நிறைய என்னோட அக்கௌண்ட்ல இருக்கு. இன்னைக்கு என்னோட ஃபரண்ட்ஸ் வீட்டுக்கு கூப்பிடட்டுமா…” மீரா தயங்கிக் கொண்டே கேட்டாள். மீனாக்ஷி ஊரில் இல்லை. அதனால் தான் தைரியமாகக் கேட்டாள். ராம்நாத், “ஓ எஸ்… தாராளமா கூப்பிடு, இதுக்கு என்னைக் கேட்கணுமா…” என்றவர், சமையல் செய்யும் அம்மாவை அழைத்து, “இன்னைக்கு மீரா ப்ரண்ட்ஸ் வீட்டுக்கு வராங்க… அதனால நல்ல விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.” என்றார். “மதிய லஞ்ச்கு வராங்களா மீரா?” “இல்லைப்பா காலேஜ் இருக்கு. அதனால நைட் டின்னெர்கு தான்.” மீரா அவள் அப்பாவையும், அர்ஜுனையும் சந்திக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள். அதனால் “நீங்களும் இன்னைக்கு நைட் எங்களோட டின்னெர் சாப்பிடுங்க ப்ளீஸ்ப்பா….” என்றாள். “நீ உன் ப்ரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு, நான் வர்ற வரை டின்னெர் சாப்பிடாம வெயிட் பண்ண வேண்டாம். ஆனால் உன் ப்ரண்ட்ஸ் போறதுக்குள்ள கண்டிப்பா வர முயற்சி பண்றேன்.” என்றார் ராம்நாத். அவர் சொன்னதைக் கேட்டு மீராவின் முகம் மலர்ந்தது. மீரா இதுவரை ராம்நாத்திடம் இது போல் கேட்டது இல்லை. அதற்காகவே இன்று சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்றார். மீரா சமையல் செய்யும் அம்மாவிடம் எனென்ன செய்ய எண்டும் என்று சொல்லிவிட்டு நேராக அர்ஜுன் வீட்டிற்குச் சென்றாள். வித்யா அவளைச் சந்தோஷமாக வரவேற்றார். கணேசனும், வித்யாவும் அவளுக்குப் பிங் கலரில் சுடிதார் எடுத்து வைத்திருந்தனர். அதைக் கொடுத்து அவளை வாழ்த்தினர். ஆதியும், ஆருவும் வாழ்த்து சொல்ல… மீரா அவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவர்களிடம் பேசிக்கொடிருந்தாலும் பார்வை அர்ஜுனின் மேல் தான் இருந்தது. அவன் மாடிப்படி அருகே சுவற்றில் சாய்ந்து நின்று மீராவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். மீரா தலைக்குக் குளித்துக் கரும் பச்சையில், மரூன் கலர் பூக்கள் போட்ட சுடிதார் அணிந்து இருந்தாள். அவளுடைய நிறத்திற்கு அந்த உடை ரொம்ப எடுப்பாக இருந்தது. வித்யா எல்லோரையும் சாப்பிட அழைக்க… எல்லோரும் சென்று காலை டிபன் சாப்பிட்டனர். “ஆன்டி, இன்னைக்கு எங்க வீட்ல என்னோட ப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் டின்னெர் குடுக்கிறேன். இவங்க மூன்னு போரையும் அனுப்றீங்களா… ப்ளீஸ்…” மீரா வித்யாவிடம் கேட்க…. “எதுக்கு ப்ளீஸ் எல்லாம் சொல்ற மீரா, அவங்க வருவாங்க.” என்றார் அவர். மீரா மலர்ந்த முகத்துடன் தேங்க்ஸ் என்றாள். “ஆருவும், அர்ஜுனும் முன்னாடி போகட்டும். நான் கொஞ்சம் லேட்டா போறேன்.” என்றான் ஆதி. சாப்பிட்டதும் மீரா கல்லூரிக்கு கிளம்ப… அர்ஜுன் “என்னோட வண்டி பஞ்சர். இரு நானும் உன்னோட வரேன்.” என்று சொல்லி அவளுடன் காரில் கிளம்பினான். “மீரா, இன்னைக்கு உன்னால முதல் கிளாஸ் கட் பண்ண முடியுமா?” அர்ஜுன் கேட்க, மீரா முடியும் என்றாள். “சரி அப்ப கோவிலுக்குப் போகலாம்.” என்றான். இருவரும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர். அர்ஜுன் கோவில் அர்ச்சகரிடம் அர்ச்சனை தட்டோடு சேர்த்து, அதில் ஒரு கவரையும் வைத்துக் கொடுத்தான். அர்ச்சனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனை தட்டை கொண்டு வந்து கொடுக்க… அதை வாங்கிக் கொண்டு இருவரும் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்தனர். அர்ஜுன் அர்ச்சனை தட்டில் இருந்து கவரை எடுத்துப் பிரித்தான். மீரா என்னவென்று ஆர்வமமாகப் பார்க்க… அதில் ஒரு மெல்லிய செயின் அதோடு இதய வடிவத்தின் உள்ளே ஒரு பெரிய வெள்ளை நிற கல் வைத்த டாலர் கோர்க்கப்பட்டு இருந்தது. “எனக்கா அர்ஜுன்.” மீரா ஆர்வத்தோடு கேட்க… மொத்தமே ஒரு சவரன் தான். இதைப் போய் எதோ வைர நெக்லஸ் மாதிரி பார்கிறத பாரு என்று நினைத்தவன், புன்னகையுடன் “ஆமாம் உனக்குத் தான்.” என்றான். அர்ஜுன் அதன் கொக்கியை கழட்டிவிட்டு, கண் மூடி எதோ வேண்டியவன், மீராவின் கழுத்தில் அவனே போட்டுவிட்டான். மீராவிற்கு அந்த நிமிடம் அர்ஜுன் அவள் கழுத்தில் தாலி கட்டுவது போல் தான் இருந்தது. அவள் உடம்பெல்லாம் சிலிர்த்து, எதோ பரவச நிலைக்குச் சென்றாள். அப்போது கோவில் மணி அடிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். காலேஜ்க்குப் போகலாம் என்று இருவரும் கிளம்பி காரில் வந்து ஏறினர். மீரா அர்ஜுனை கார் ஓட்ட சொல்லிவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தவள், காரில் இருந்த கண்ணாடியை திருப்பி வைத்து அந்தச் செயின்னை அழகு பார்த்துக் கொண்டே வந்தாள். அர்ஜுனுக்கு அதைப் பார்த்து சிரிப்பாக வந்தது. அவனுக்குத் தெரியும் மீராவை பொறுத்தவரை… அவன் கொடுத்த அந்தச் செயின் விலை மத்திப்பில்லாத பொக்கிஷம் என்று. அர்ஜுன் காரை கல்லூரிக்குச் செல்லும் வழியில் ரோடு ஓரமாக நிறுத்தியவன், திரும்பி அமர்ந்து மீராவிடம் இன்னும் எவ்வளவு நேரம் அந்தச் செயின்னையே பார்ப்பே என்றான். செயின்னில் இருந்த டாலர் மீராவின் தொண்டை குழியியில் இருந்து சிறிது இறங்கி இருந்தது. அர்ஜுன் மீராவை அருகில் இழுத்து, அந்த டாலர் இருந்த இடத்தில் முத்தம் வைக்க… மீராவிற்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவனிடம் இருந்து மெதுவாக விலகியவள், “தேங்க்ஸ் அர்ஜுன், ரொம்ப நல்லா இருக்கு.” என்றாள். அர்ஜுன் சிரித்துக் கொண்டே காரை எடுத்தான். கல்லூரியில் சூர்யாவை பார்த்த மீரா, அவனையும் அன்று மாலை அவள் வீட்டுக்கு அழைத்தாள். “உங்க அக்கா இன்னும் இருக்காங்களா சூர்யா?” “ஆமாம் இருக்கா… டெலிவரி வரை இனிமே இங்க தான் இருப்பா.” “அப்படினா.. அவங்களையும் ப்ரீத்தியையும் உங்களோட அழைச்சிட்டு வாங்க.” மீரா சொல்ல…. சூர்யா சரி என்றான். மீரா அவள் தோழிகளில் கீர்த்தனாவை மட்டும்தான் வீட்டிற்கு அழைத்தாள். மற்றவர்களுக்கு அன்று மதியமே கல்லூரியிலேயே ட்ரீட் கொடுத்துவிட்டாள். மாலை கல்லூரி முடிந்ததும், மீரா உடனே வீட்டுக்கு கிளம்பி சென்று எல்லாம் தயரா என்று பார்த்தாள். அவள் வீட்டுக்குச் சென்ற போது விருந்து தயாராகிக் கொண்டு இருந்தது. “நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா.” மீரா கேட்க… சமையல் செய்பவர், “நாங்களே இத்தனை பேர் இருக்கோம். அதெல்லாம் நாங்க பார்த்கிறோம்.” என்று சொல்ல… “வெளிய தோட்டத்தில் உட்கார்ந்து சாப்பிடுற மாதிரி அரேஞ் பண்ணிடுங்க.” என்று சொல்லிவிட்டு மீரா தன் அறைக்குச் சென்றாள். மீனாக்ஷி தன் உறவினர் வீட்டு திருமணதிற்குச் சென்று இருக்கிறாள். வர மூன்று நாட்கள் ஆகும். மீரா குளித்து அர்ஜுனின் பெற்றோர் வாங்கித் தந்த சுடிதாரை அணிந்து கொண்டாள். கண்ணாடி முன் நின்று தலை வாரும் போது, அர்ஜுன் இன்று போட்டு விட்ட செயின் கண்ணில் பட… அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இன்று கோவிலில் வைத்து அவன் செயின் போட்டது மனதிற்கு இதமாக இருந்தது. செயின் போடறதுக்கு முன்னாடி என்னவோ வேண்டினாங்களே… என்னவா இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தயார் ஆனாள். அர்ஜுன் தங்கள் காரில் ஆருவை அழைத்துக் கொண்டு முதலில் சூர்யா வீட்டிற்குச் சென்றான். சூர்யா ஆருவை எதிர் பார்க்கவில்லை. அவன் ஆருவை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி இருந்தது. என்னமா வளந்துட்டா என்று நினைத்துக் கொண்டே அவளைத் தன் பெற்றோருக்கும், அக்காவிற்கும் அறிமுகம் செய்ய… ஆரு அவர்களோடு இயல்பாகப் பழகினாள். சூர்யாவின் அம்மா காபி குடிங்க என்று சொல்ல… அர்ஜுன் வேண்டாம் என்றான். “அம்மா… அவன் இன்னைக்கு மீரா வீட்ல சாப்பிட காலையில இருந்து விரதம் இருக்கான். அவனுக்கு வேண்டாம், நீங்க ஆருவுக்குக் குடுங்க. ஆரு, நீ எங்க வீட்டுக்கு முதல் தடவை வந்திருக்கக் கண்டிப்பா எதாவது சாப்பிடனும்.” சூர்யா சொல்ல… ஆரூ இவன் இவ்வளவு பேசுவானா… எப்பவும் பார்த்தா அமைதியா இருப்பான் என்று நினைத்தவள், சரி என்று தலையசைக்க… அவளுக்கு மட்டும் காபி வந்தது. சிறிது நேரம் அங்கே பேசிக்கொண்டு இருந்துவிட்டு மீரா வீட்டிற்கு எல்லோரும் சேர்ந்து ஒரே காரில் சென்றனர். அவர்களைப் பார்த்ததும் மீரா ஓடிவந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். கீர்த்தனாவும் ஏற்கனவே வந்திருந்தாள். மீராவிற்கு அர்ஜுன் தன் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்பதை இன்னும் நம்ப முடியாமல் இருந்தாள். எல்லோரையும் அழைத்துச் சென்று ஹாலில் அமர வைத்தாள். மீரா சென்று எல்லோருக்கும் வறுத்த முந்திரியும், பாதாம் அல்வாவும் கொண்டு வந்து கொடுக்க, அர்ஜுன் செம பசியில் இருந்ததால் வேகமாகச் சாப்பிட்டான். “ரொம்பப் பசியா இன்னும் கொஞ்சம் எடுத்திட்டு வரட்டுமா?” மீரா கேட்க… “வேண்டாம், அப்புறம் டின்னர் சாப்பிட முடியாது.” மறுத்த அர்ஜுன், மீராவின் தட்டில் இருந்த அல்வாவை எடுத்து சாப்பிட்டான். மீரா எல்லோருக்கும் அவள் வீட்டை சுற்றி காட்டினாள். அவள் அறை இருந்த இரண்டாம் தளத்திற்கு எல்லோரையும் அழைத்துச் செல்ல… அவளது அறையின் உள்ளே வரவேற்பு அறை, படுக்கை அறை மற்றும் உடை மாற்றும் அறை என்று அந்த அறையே ஒரு வீடு மாதிரி இருந்தது. எல்லோரும் சிறிது நேரம் மீராவின் அறையிலே அமர்ந்து அரட்டை அடித்தனர். “உங்க அம்மா, அப்பா வீட்ல இல்லையா” மது கேட்க… “அம்மா ஊரில் இல்லை. அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாங்க.” என்றாள் மீரா. “உன்னோட சின்ன வயசு ஆல்பம் குடு பார்க்கலாம்.” மது கேட்க… மீரா சென்று ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து கொடுத்தாள். அதில் எல்லாம் அவள் பரத நாட்டியம் ஆடிய படங்கள் தான் இருந்தது. “உன்னோட சின்ன வயசு போடோஸ் ஆல்பம் கொடு.” மது திரும்பக் கேட்க… மீரா சென்று வேறு ஒரு ஆல்பத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அர்ஜுனிடம் சென்று பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆல்பத்தில் இருந்த போட்டோவில் எல்லாம் மீரா மட்டும் தான் இருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த மதுவிற்கு ஒரே குழப்பம். அவள் சூர்யாவை பார்க்க… அவனுக்கும் அதே குழப்பம் தான். என்ன எல்லாப் போட்டோலையும் தனியாவே இருக்கா? இவங்க அம்மா, அப்பாவோட எடுத்த போடோஸ் இல்லையா என்று கேட்க வந்தவன், எதார்த்தமாக ஆருவின் முகத்தைப் பார்க்க… அவள் வேண்டாம் என்று தலை ஆட்ட… அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.