அந்த ஞாயிறு ‘வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ்’ஸின் அறிமுக சுற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகியிருக்க சக்தியின் வட்டத்தில் அனைவரும் அலைபேசி வழி தொடர்புக் கொண்டு தங்கள் சந்தோஷத்தையும் பாராட்டுகளையும் கொடுக்க இரண்டு நாட்கள் நன்றி சொல்வதிலே சென்றது..!!
வீட்டில் திரு ரம்யாவுக்குமே சக்தி அந்த மேடையில் அத்தனை அழகாய் வாசிப்பதையும் இசைகலையில் பெரும் ஜாம்பவான்களான அந்த நடுவர்களிடம் பாராட்டு பெற்றதையும் பார்த்து பெருமிதம் அடைந்தனர். மேலும்,
‘நாம் தடுத்து இருந்தால் இதை எல்லாம் அவள் இழந்து இருப்பாளே.. நல்ல வேளை அந்த தவறு நிகழவில்லை..’
என நல்ல எண்ணம் படைத்த அந்த பெரியவர்களின் உள்ளம் நிம்மதியும் கொண்டது. மேக்னாவின் ஆர்ப்பாட்டங்களுக்கும் அளவே இல்லை.. தன் வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ்களின் தன் அண்ணியின் புகழை பரப்பினாள்.
இவ்வாறு அவளின் சிறு வெற்றியையும் உண்மையாய் கொண்டாடும் உறவுகளும் நட்புகளும் அவளுக்கு கிடைத்ததன் பலனாய் இரு மடங்கு மகிழ்ச்சியை அடைந்தாள்.
அதன் பின் நாட்கள் வேகமாய் ஓட அடுத்தடுத்த சுற்றுகளை எட்டும்போது போட்டியின் கடுமையும் அதிகம் ஆனது. ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியிலும் இது தான் தங்கள் கடைசி என்பதுபோல் ஐவருமே ஒவ்வொரு சுற்றிற்கும் தங்கள் முழு திறமையையும் உழைப்பையும் செலுத்த மற்றவர்களால் ‘டஃப் கம்படீடர்..’ என்றே பார்க்கபட்டனர். மேலும் மக்களிடையேவும் மிகுந்த அன்பினை பெற்றனர்.
இந்நிலையில் அன்று இறுதி சுற்றில் மோத போகும் நான்கு குழுக்களுக்கான போட்டி நடைபெற்றது.
கடும் போட்டியின் முடிவில் முதல் மூன்று இடத்தை வெவ்வேறு அணிகள் வென்று இறுதி சுற்றில் நுழைந்து இருக்க நான்காவதாய் யார் செல்ல போகிறார்கள் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்த போதும் இறுதியாய் எதிரணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இருவருக்கும் புள்ளிகளில் தான் மதிப்பெண் வித்தியாசம் என்று நடுவர் சொன்னாலும் ஆர். ஓ. எல் தாங்கள் இறுதி சுற்று செல்லாதது ஏமாற்றம் தான்..
ஆனால் சடுதியில் வருத்ததை மறைத்துக் கொண்டு வெற்றிப்பெற்ற தங்கள் எதிரணி நண்பர்களை அணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
எதிரணியின் வெற்றி் பாராட்டுகளுக்கு பின் நிகழ்ச்சியின் முக்கிய நடுவர் மைக்கை பெற்றுக் கொண்டு,
“பட்.. ஆர். ஒ. எல் இந்த நான்கு டீம்மிற்கும் கொஞ்சமும் சலைச்சவங்க கிடையாது.. மற்றவர்களுக்கு கடும் போட்டியாளர்களா நின்று இருக்காங்க.. வீ ஷுட் கீவ் தெம் அ க்ரேன்ட் அப்லாஸ்..”
என்று கூறி கைதட்ட அரங்கமெங்கும் எல்லோரிடமும் அது எதிரொலித்தது. கைகட்டி நின்ற சக்தியும் அதில் புன்னகைத்தாலும் கண்ணீரை தடுக்க இயலவில்லை.
தொகுப்பாளினி மைக்கை அவர்கள் புறம் நீட்டி,
“Share few words about the journey..”
என்று சொல்ல ஒன்று போல் நால்வருமே யோகியை தான் முன் தள்ளினர்.
என்று கெளதம் சொன்னபோது நெகிழ்ச்சியாய் பார்த்தவன் முன் வந்து மைக்கை வாங்கி பேசினான்.
“தேங்க்ஸ்.. தேங்க் யூ ஸோ மச்.. எங்களை இவ்வளவு தூரம் ஊக்கப் படுத்திய அன்பிற்கு நாங்க எப்பவும் கடமைப்பட்டு இருக்கோம்..
இந்த போட்டியில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் தான் நாங்க இருந்தோம்.. ஆனால் இன்னைக்கு இங்க நிற்கிறதே வீ ஃபீல் ப்ளஸ்ட்.. முடிய போறது இந்த போட்டியில் எங்க பயணம் தானே தவிர.. எங்க மியூசிக் ஜர்னியில் இல்ல.. வீ வில் பௌவ்ன்ஸ் பேக் ஸ்டாங்கர்..”
என்றவன், “என்ன காய்ஸ்..” என தன் நண்பர்களை பார்க்க அவர்களும் கண் கலங்க, “கண்டிப்பா..” என அருகில் வந்து ஒரு ‘குரூப் ஹக்’ கொடுத்தனர்.
அவனின் நேர்மறையான பேச்சில் எல்லோரும் பாராட்டி கைத்தட்ட பின்னர் இறுதி சுற்றின் முன் அறிவிப்போடு நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
எல்லோரும் பேசி வெற்றி பெற்ற குழுக்களை வாழ்த்தி அங்கிருந்து நகர்ந்த பின்னரே ஆரியனிடம் சொல்ல அவள் அலைபேசி எடுக்க,
“என்ன ஆச்சு சக்தி..” என்று ஏற்கெனவே அவனிடம் குறுஞ்செய்தி வந்திருந்தது.
கட்டை விரலை கீழ் நோக்கி காட்டும் எமோஜியை மட்டும் அனுப்ப அது ப்ளு டிக் ஆன உடனே அவனிடம் இருந்து கால் வந்தது.
எடுத்ததும்,
“கங்க்ராஜ்லேஷன்ஸ் செல்லகுட்டி..”
என அவன் உற்சாகமாய் கூவ,
“என்ன ஊத்திக்கிச்சு..?? ஃபைனல் போனால் தான் ஜெயிச்சதா அர்த்தமா..? ஆயிர கணக்கான பேர் ஆசை படும் மேடை.. இருவது டீம்மிற்கு மட்டுமே கிடைச்ச வாயிப்பில் டாப் ஃபைவ்ல இருக்கீங்க.. சும்மாவா..??”
“ஆனாலும்..”
“ஆனா.. ஆவன்னா எல்லாம் போடாத.. நாலு வாட்டி ‘பெஸ்ட் பர்ஃபாமென்ஸ்’ வாங்கி இருக்கீங்க.. நீங்க ஆல்ரெடி வின்னர்ஸ் தான்.. இனி யாருக்கு டைட்டில் என்ற டென்ஷன் எல்லாம் நமக்கு இல்ல.. நாம ஜாலியா செலிப்ரேட் பண்றோம்..”
என்ற அவனின் குதூகலமான பேச்சு அவளுக்கும் சிரிப்பை கொடுத்தது.
“செலிப்ரேட் பண்ண எனக்கு ஸ்பெஷல்லா ஒரு பென்டென்ட் செட் வாங்கி கொடுத்தால் சந்தோஷப் படுவேன்..”
என்று பெருமூச்சோடு பிகுவாய் சொல்ல,
“சமயம் பார்த்து லாக் பண்றடி கேடி..”
என சிரித்தாலும்,
“சரி வாங்கி தரேன்.. எங்க என் மச்சான் கெளதம்.. பக்கத்தில் இருந்தால் ஃபோனை கொடு..”
என்று சொல்லி அதன் பின் அவர்களோடும் பேசிவிட்டு வைத்தான்.
நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் கிளம்ப தயாராக,
முன்னே வந்து நின்ற யாமினி,
“சக்திஸ்ரீ.. இங்க வா..”
என சத்தமாய் அழைக்கவே என்னவோ என எல்லார் கவனமும் அவர்களிடம் திரும்பியது.
திடீரென அவர் அழைக்கவும் திடுக்கிட்டு அவள் விழிக்க காரணம் ஓரளவு யூகித்து இருந்த நண்பர்கள்,
“போ ஸ்ரீ..” என்று குறுநகையோடு முன்னால் நகர்த்திவிட தயக்கமாகவே யாமினி அருகில் சென்றாள்.
அவளை கிட்டே இழுத்து முழுங்கையோடு அணைவாய் பிடித்தவர்,
“ஸோ.. உங்க எல்லாருக்கும் சக்திஸ்ரீயை ஒரு திறமையான மியூஷிஷியனா..!! ஒரு நல்ல ஃப்ரெண்ட்டா.. தெரிந்து இருக்கும் இல்லையா..??? அவளுக்கு இன்னோர் அடையாளமும் இருக்கு..”
என்று சொல்லி நிறுத்த,
“ஆமா மேம்.. ஷீ இஸ் அ க்யூட் ஏஞ்சல் டூ…”
என்று அவரின் அசிஸ்டென் சொன்னாள் என்றால்,
“அவ ஒரு பேபியோட அம்மாவும் ஆக போகிறாள்.. ஷீ இஸ் எக்ஸ்பெக்டிங்.. அதானே..”
என க்ரியேடிவ் டீம் ஹெட் கூறினார். ஐந்தாம் மாத தொடக்கத்தில் இருப்பதால் வயிறு கொஞ்சமே மேடிட்டு இருந்தது. பென்சிலாய் இருந்தவள் உடலும் சதை பிடித்து பூசின தோற்றத்தில் அழகாய் மிளிர்ந்தாள்.
இரு பதில்களுக்கும் சிரிப்பை கொடுத்துவிட்டு,
“என்னோட ஒரே மகள்.. “
என்று கூற ஒரு நொடி எல்லோருமே திகைத்து பார்த்து இருந்தனர். அங்கே யாமினிக்கு நெருக்கமான சிலருக்கே இந்த உண்மை தெரியாது. அவர்கள் பார்வையில் சின்ன சங்கோஜம் எழுந்தாலும் யாமினி சொல்வது உண்மை என்னும் விதமாய் புன்னகைத்தாள்.
முதல் கட்ட அதிர்ச்சி நீங்கி ஆச்சரியமாய் ஆளாளுக்கு கேள்விகளை அடுக்க,
“என் பர்ஷனல் லைஃப் பத்தி நான் எப்பவும் பேச மாட்டேன்.. அதனால் உங்க யாருக்கும் சக்தியை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸில் அவள் தேர்வான பிறகும் சொல்லாத காரணம் யாமினியோட மகளாய் மட்டுமே அவள் அறிமுகம் ஆக கூடாது.. அவ அம்மா நான்னு சொல்லணும்னு ஆசை பட்டேன்.. அந்த நாள் இன்னைக்கு வந்திடுச்சு..”
என்றவர் அவள் முகம் நோக்கி,
“உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு சக்தி.. என்னோட ஆசையை நிறைவேற்றிவிட்ட..”
என்று சொல்ல அப்படியே அவர் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். அவரின் வார்த்தைகளில் உடல் சிலிர்த்தது.
“என் பொண்ணு நான் ‘ஐடல்’லா நினைக்கிற என்னோட ஷோவில் இத்தனை தூரம் வந்ததை நான் கொண்டாடலேனா எப்படி..??? என் வீட்டில் பார்ட்டி அரேன்ஜ் பண்ண போறேன்.. எப்போ..?? என்னானு டீடெயில்ஸ் எல்லாருக்கும் சீக்கிரமே சொல்றேன்..”
என்று கூறவே பார்ட்டி என்றதும் எல்லோரும் விசிலடித்து ஆர்பாட்டமாய் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தனர்.
வீட்டிற்கு வந்த பின் போட்டி முடிவை விசாரிக்க விஷாகன் அழைத்து இருக்க அவரிடம் இன்று நடந்தவையை மகிழ்ச்சியோடு பகிர்ந்துக் கொண்டாள்.
“நீங்களும் வந்து இருக்கலாம்.. இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன்..”
அடிக்கடி அவள் சொல்வது தான். இன்றும் அவ்வாறு சொல்லவே,
“சரி ஒன்னு பண்ணலாம்..
நாளைக்கு நான் வந்து உன்னை அழைச்சுட்டு போறேன்.. நாளைக்கு முழுக்க நீ என் கூட தான் இருக்க போற.. ஓகே வா.. யாமினியிடம் சொல்லிவிட்டு ரெடியா இரு..”
என்று விஷாகன் சொல்ல சக்தியும் ஆர்வமாய் ஒத்துக் கொண்டாள். ஆனால் அதனை காலையில் யாமினியிடம் சொன்னபோது அவர் சம்மதிக்கவே இல்லை.
“இந்த மாதிரி நேரத்தில் வெளியே எங்கேயும் சுத்தறது சேஃப் கிடையாது..
உங்க அப்பா கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னா அவரை இங்க வர சொல்லு..”
டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவை உண்டுக் கொண்டிருந்த சக்தியின் பின்னே நின்று யாமினி சொல்ல அவளோ திரும்பியும் பாராது வாயில் இட்லியை மென்றுக் கொண்டே,
“நீங்க தான் வீட்டுக்கு வர கூடாது சொல்லிட்டீங்களாம்.. அப்புறம் எப்படி அவர் வருவார்..”
என்றாள் அசட்டையாக..
அவள் சொன்னதை கேட்டு கோபம் வர பெற்றவராய் சட்டென்று அவள் முன்னால் வந்து அமர்ந்தவர்,
“நான் அவரை வர வேண்டாம்னு சொன்னேனா..?? அப்படினு அவர் சொன்னாரா..?? எங்க கூப்பிடு நான் கேட்கிறேன்..”
என்று சண்டைக்கு வர,
“வராதேன்னு நேரா சொல்லலையாம்.. ஆனால் அந்த மீனிங்ல வேற ஏதோ சொன்னீங்களாம்..”
என்றாள் அப்போதும் அயராது..
“நான் சொல்ற எல்லாத்தையும் அப்படியே கேட்டு நடக்கிறவர் தான் பாரு.. வயசுக்கு தகுந்தா மாதிரி உங்க அப்பா எப்போ தான் நடந்துபார் சக்தி..”
யாமினி கடுப்பாய் சொல்ல சாப்பிட்டு முடித்து தட்டையோடு எழுந்தவள்,
“நீங்க வேணா கூடவே இருந்து ட்ரைன் பண்ணுங்களேன்..”
என்று சொல்ல அவர் பதிலுக்கு பார்த்த பார்வையில் கம்மென்று கை கழுவ போயிவிட்டாள்.
அவள் மீண்டும் வரும் வரையிலுமே ஏதோ சிந்தனை அந்த நிலையில் இருந்து மாறாமல் நிற்க அதற்குள் விஷாகனிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது.
“அப்பா வந்துட்டார் நினைக்கிறேன்.. நான் போயிட்டு ஈவ்னிங் வந்துடுவேன்.. கோவிச்சுக்காதீங்க ம்மா.. பாய்..”
அவசரமாய் தன் கைப்பையை மாட்டிக் கொண்டு அவரிடம் விடைபெற்று செல்ல,
“ஹே.. பார்த்து.. டேக் கேர்..” என்று கூறியவர் அவள் வெளியேறியதும் பால்கனியிற்கு வந்து கீழே பார்த்தார்.
இங்கிருந்து விஷாகனின் கார் தெரிய வெளியே தான் சக்தியை எதிர்பார்த்து நின்றிருந்தார். வாசல் வரை வந்தும் உள்ளே வராமல் நிற்பது மனதில் பெரும் நெருடலாய் இருக்க அவரையே வெறித்து நின்றார் யாமினி.
கடைசியாய் மேக்னா திருமணத்தில் பார்த்தது தான். அதன் பின் எந்த வகையிலும் யாமினியை தொடர்பு கொள்ளவே இல்லை.
அவர் பொய் சொன்னது முதலில் ஆத்திரமாய் இருந்தாலும் நாளாக நிதானமாய் யோசித்தார்.
இரயில் தண்டவாளம் போல சேராமலும் பிரியாமலும் அவரவர் வழியில் செல்லும் இந்த நிலையை மாற்றவே எதாவது செய்யணும் என்றே தன்னை சீண்டி பார்த்து உள்ளார். ஆனால் எதுவுமே அவருக்கு சாதகமாய் மாறவில்லை. அந்த இயலாமை தான் கோபமாய் மாறி தன்னோடு அனைத்திலும் சண்டைக்கு நின்றது என்று புரிந்தது. ஆனால் தான் என்ன முடிவு எடுப்பது என்று தான் தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டு இயல்பாய் மீண்டும் விஷாகனோடு வாழ முடியுமா என்று குழப்பம் மனதை அழுத்தியது.
அவர்கள் கார் கிளம்பியதும் உள்ளே வந்தவர் அதே சிந்தனையோடே அமர்ந்து விட்டார். வேறு எந்த வேளையிலும் கவனம் செல்லவில்லை.
அடுத்த ஒரு மணி நேரத்தில் காலிங் பெல் ஒலிக்கவே நேரம் பார்த்துவிட்டு அதுக்குள்ள வந்து விட்டாளோ என கதவை திறக்க அங்கே நின்றதோ ஆரியன் தான்..
“ஹாய் அத்தை..” என அவன் சிரிப்போடு கையசைக்க தான் அப்படியே நிற்கின்றோம் என அப்போது தான் உணர்ந்தவராய்,
“வாங்க ஆரியன்.. வாங்க..”
என்று நகர்ந்து வழிவிட்டு வரவேற்க உள்ளே வந்தவனின் பார்வை சக்தியை தான் ஆர்வமாய் தேடியது.
“நீங்க வரேன்னு சொல்லலயோ.. சக்தி அவங்க அப்பாவோட வெளியே போறேன்னு இப்ப தான் கிளம்பினாள்..”
என்று யாமினி சொல்லவே,
“ஹோ அப்படியா.. சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சு வரேன்னு சொல்லல..”
என்றான் ஆரியன். இன்று வெள்ளிக்கிழமையாக இருக்க அப்படியே வார இறுதி நாட்களோடு சேர்த்து இருக்கலாம் என நினைத்து வந்திருந்தான்.
“அதனால என்ன.. இப்பவே ஃபோன் பண்ணி சொல்றேன்..”
என்று அவர் அலைபேசியை எடுக்க,
“இல்ல அத்தை.. வேண்டாம்.. அவளே இன்னைக்கு தான் முதல் முறையா மாமாவோட வெளியே கிளம்பி இருக்காள்.. நான் வந்து இருக்கேன்னு தெரிஞ்சால் உடனே வந்து விடுவாள்.. கொஞ்ச நேரம் போகட்டும் சொல்லிக்கலாம்..”
என அவன் மறுத்துவிட யாமினியும் வைத்து விட்டார்.